புதன், 25 ஏப்ரல், 2018

உன்


முன் வரையற்ற மணல் வெளி
அலை ததும்பித் தளர்ந்து நிற்கிறது வான்.
நெற்றி வழிந்த உப்புநீர்
மேல் சுண்டுகளிலிருந்து வீழ வீழக்
காற்று புதைந்த சுவடுகளின் குழிவிலிருந்து
முளைக்கின்றன நாவற் பழங்கள்.
சிவந்த நீரோட்டத்தினடியில்
உன் நிறத்தில் உருள்கின்றன கூழாங்கற்கள்.
வரியோட்டமாய் நகரும் சதுப்பின் மௌனத்தில்
முண்டி எம்புகின்றன
உயிர் வேர் நரம்புகள்.
எங்கோ உன் ஊற்றுக்கண்ணிலிருந்து வருடி வருடித் தாகம் சுமக்கிறேன்.
காலம் பொழியும் அருவிக்கரையின் குகைகளுக்குள் கமழ்கிறது உன் நெடி.
சின்னஞ்சிறியதாய் மழைக் குமிழ்களுக்குள்ளிருந்து
என் நா அறிகிறது.
உன் சருகுகள் உதிரும் பிரதேசத்திலிருந்து
மலைக்குன்றுகள் பிறந்தன.
திசையற்றிருக்கும்  உன் உடலிற்குள்ளிருந்து உயிர்ப்பித்திருந்தாய்
என் பாசி பிடித்த கரும் பாறைகளை.

திங்கள், 23 ஏப்ரல், 2018

கிறுஸ்துவின் கடைசி சபலம் 1

குளிர் நீலம் மிளிரும் காற்று. மறைந்து விசித்திரமாய் புன்னகைக்கும் நட்சத்திரங்கள். மொட்டவிழ்ந்த வான் வழி ஒளியின் மகரந்தங்கள் துளித்துளியாய் நிலமெங்கும் சிதறிக் கிடந்தது. பாறைத்துண்டங்களின் மெல்லிய முணங்கல். அனல் அலை அலையாய் மிதந்து கிடந்தது அந்த அத்துவான வெளியில். எங்கும் நிசப்தம் சூழ்ந்த மௌனம். அமைதி மென் சுனை நீருருண்டைகளாய் வானிலிருந்து நிலம் நோக்கி நகர்ந்தது. காற்றின் ஈரம்படிந்த எண்ணங்களுடன் பிரார்த்தனையில் அமிழ்ந்திருந்தான் அந்த இளைஞன். கீழே புகை மண்டித் திணறும் சுவாசங்கள். குட்டைப்புதர்களுள், பொந்துகளில் முணங்கும் மிருகங்களைப் போல கிராமம் நித்திரையுடன் போராடித் தளர்ந்திருந்தது.

அமைதியின்றி அடர்ந்து ஓலமிடத் தொடங்கியது காற்று. மனிதர்களும் விலங்குகளும் பிராணிகளும் படர்ந்த மூச்சு  வியர்வையுடன் உவர் நாற்றத்துடன் அங்கு பரவிக் கிடந்தது. புன்னை எண்ணையின் வாசனை பெண்களின் கூந்தலிலிருந்து நாசி துளைத்தது.  புளித்த வாடையுடன் ரொட்டி அடுப்பிலிருந்து சுடச் சுட எடுத்து வைக்கப்பட்டிருந்தது.

நீ எதை நோக்கினாய். உன் கண்கள் இருளை நோக்குகிறதா? சைபரஸின் அடித்தண்டு இருளைத் துளைத்து வேறுபடுவதை, பேரீச்சை ஒரு நீரூற்றாய் உருமாறி காற்றின் அலையடிப்பில் நெகிழ்வதை, அடர்த்தி குறைந்த ஆலிவ் மரங்கள் கருமையினுள் ஓளிர்வதை.

நீ இங்கு பார்க்கும் சிதறுண்ட பாழ்குடிகள், இந்த நிலவெளியெங்கும் மூச்சின்றி கிடக்கிறது. இந்த வீடுகள் உருவாக்கிய இரவின் இடைவெளியில் சேறும் சுடுமணலும் அப்பிக் கிடக்கும் வெண்ணிறப்பூச்சு. கூரைகளுக்கு மேலே வெறித்த வான் நோக்கிக் கிடக்கும் மக்கள். உன்னிடம் வந்து இறைஞ்சுகிறது அம்மக்கள் திரளின் நிணச் சொற்கள். சொற்களற்ற மௌனம். மொழியில் பிதற்றும் நம்பிக்கைகளின் காய்ந்த புண். புண் மொய்க்கும் எண்ணக் குமிழிகள். குமிழிகளிலிருந்து பொட்டித்து தெறிக்கும் பழுத்த வாழ்வின் சீழ்.

அமைதி தலை தெறிக்க ஓடியது. தனித்திருந்தது சூன்யம். அவர்களின் கை கால்கள் பிணைந்து முறுக்கியிருந்தது. அனாதைகளாய் கை விடப்பட்டிருந்தனர். இதயங்களின் பெருமூச்சுகள் கணப்புகளில் சிதறித் தெறிக்கும் பாளங்களாய் முறிந்தது. ஓலங்களின் இறைஞ்சல். அழுகைகளின் பிடிவாதக் கார்வை. துடைத்தழிந்து கிடந்தது வாழ்வு. இன்னும் எங்களிடம் என்ன எதிர் பார்க்கிறாய்.

கிராமத்தின் நடுவே  உயரமான கூரையிலிருந்து  அந்தக் கதறல் பீறிட்டுச் சாடியது.

"இஸ்ரவேலின் தெய்வமே! இஸ்ரவேலின் தெய்வமே! பிதாவே!
இன்னும் எத்தனை காலம். ஒரு மன்றாட்டு. செத்த இறைச்சியை பிய்த்துக் குதறும் காட்டு நாய்களின் நரனரப்பும் வன்மமும் புதைந்த மன்றாட்டு.

மொத்த கிராமமும் யாருடைய கனவிலோ விழுந்ததைப் போல கூச்சலிட்டது. வசைகளைப் பொழிந்து காறி உமிழ்ந்தது. இஸ்ரவேலின் நிலமெங்கும் செத்து மீந்த எலும்புத்துண்டங்கள்.

அல்குல் பிளந்த மண். அலறும் பிறப்பு. மூட்டிய பேரமைதிக்குப்பின் அழுகையின் மென் ஓலம்.

"இன்னும் எத்தனை நாட்கள்? எத்தனை காலம்? நாய்களின் ஊளை அனல்கிடங்காய் மூடியது ஒட்டு மொத்த வெளியையும். வலுக்கும் குரல்களின் சப்தங்களின் கலங்கிய பரப்பில் மூர்ச்சையுற்று புரண்டான் அவன்.

கனவின் பிடியிலிருந்த முடிச்சுகள் இன்னும் இன்னும் என இறுக்கியது.

இருள் கோடுகளில் அந்தக்குன்றின் உள்முகம் வெளிப்பட்டது. அது பாறைகளால் ஆனதல்ல. மங்கிச் சுழன்றது, தலைகீழாகிப் பரவியது ஆழ மிதிக்கும் காலடி இரைச்சல். கருமையிலிருந்து கோட்டு வெளிச்சமாய் நகர்ந்து வந்து கொண்டிருந்தது உருவங்களின் இருள் பொதிந்த மூச்சுகள். பெரிய புருவங்களும், கைகால்களும், கரடுமுரடான  தாடி மீசைகளும் வைத்திருந்தனர். நீண்டுக் குறுகிப் பிரிந்து உருமாறி புகை கலைந்ததைப் போல வடிவற்று மறைந்தனர்.

இருள் ரசம் மங்கிய கண்ணாடிப்பாளமாய் பிம்பங்களை இழந்தது. உறக்கம் பாம்புச்சட்டை போல உரிய உரிய விழிப்பு குளத்தினுள் துளிர்த்த முதல் அலையடிப்பாய் பின் எண்ணிலடங்கா அலைகளாய் மெல்ல மெல்ல கரையைத் தாண்டி சிதறியது. விழிப்பு தட்டியவுடன், அந்த முகங்களின் இழிபட்ட வரைவு ஒரு கோட்டுச்சித்திரத்தைப் போல அறையின் விரிசலிட்ட ஒளியில் மிதந்து கரைந்தது. வண்ணங்களற்ற அந்த சாம்பல் உருவங்கள் எதைத் தேடியது. ஏன் அத்தனை வன்மத்துடன் அதன் கண்கள் என்னை உற்று நோக்கின. தலையழுந்தும் பாரத்துடன் அவன் வீழ்ந்த கடைசி நொடியத் திரும்பவும் நினைவு படுத்த முயன்று இரு உள்ளங்கைகளாலும் தலையை அழுந்திப்பற்றி சொற்களற்ற மொழியில் தனக்குள்ளேயே பிதற்றினான்.

கவிந்திருக்கும் குவையில் மேகங்கள் சதையும் எலும்புமாய் ஒழுகியது. யாரோ திணறிக்கொண்டிருப்பதைப் போலவும், ஊடுவது போலவும் உணர்ந்தான். செந்தாடிக் காரன் மலைக்குன்றின் உச்சியில் திரும்ப வந்து கொண்டிருந்தான். அவனது மேலாடை திறந்து கிடந்தது. வியர்வை ஒழுக வெற்றுக்கால்களில் வந்து கொண்டிருந்தான். மூச்சைப்போல பின் தொடரும் அவனது வீரர்கள் பின் வந்து கொண்டிருந்தார்கள். பாறைகளின் நிலைத்த நெரிசலின் நடுவே ரகசியங்கள் சிமிட்டின. கீழ்வானத்தில் குவியும் வெளியில் வெள்ளிப்பிழம்பாய் திரண்டது ஒற்றை விண்மீன். நாள் சில்லுகளாய் உடைந்து முடிந்திருந்தது.


திங்கள், 16 ஏப்ரல், 2018

எனும் சொல்

ஒரு நெருக்கமான வாதையுடன்
அருகில்
வந்தமர முயற்சித்தது பறவை
வெட்டுண்ட கால்களுக்கடியில்
புதைமணலாலான பெரு நகரம்
அங்கு மக்கள் மீள மீளக் குடித்துக் கொண்டே இருந்தனர்
நகர் நடுவில் ஒரு சிதைந்த கோவில்
ஆம்
மிக நெருக்கமான என் பறவை
என்னைப் போலவே மையப் போதமற்ற
புளிப்பூறிய மதுக்கடைக்கு வந்தது
திமிறிக் கொண்டிருந்த ஒரு சொல்லால்
அதற்கு பெயரிட்டேன்
அதற்கும் மொழி இருந்தது
நாங்கள் ஒன்றாக குடித்துத் தீர்த்தோம்
கையில் குத்தீட்டியுடன் வந்த வழிப்போக்கச் சொல்
என் பறவை சொல்லை அபகரிததது
நெருக்கமான வாதையின் பாடலை எழுதி
சொற்களில்லாத கோவிலின் கருவறையில் புதைத்தேன்,
உடைந்த பால் பற்களைப் புதைப்பதைப் போல
தெய்வங்கள் இழந்த சொற்களைக் கொண்டு
பறவையின் மொழியறிந்தேன்
ஆம்
என் மொழியிலிருந்து மறைந்து போனது 
பறவை எனும் சொல்

தாகத்தின் நீர்

தாகத்தின் நீர் அலைகிறது
இண்டு இடுக்குகளில்
பதுங்கிக் கிடக்கின்றன நாக்குகள்
சத்தமின்றி வந்திறங்கும்
ஓராயிரம் சிறகுகள்
வானம் வானம் வானம்
பாதங்களுக்கடியில் சொத சொதக்கிறது
எச்சில் ஊற்று
விழுங்க இயலாத
நீர்மையின் கண்ணிகளில் இழுபடுகிறது
மீன் பற்றிய கனவுகள்
கனவுகளின் நிறங்களில் பாய்கிறது
மழை
நீ எனும் சொல்பட்ட நிலமெங்கும் ஊற்று
உன் நீள் முத்தத்திற்கு பின்னாலும்
நின்று விடாத
அலைச்சலின் வெம்மை
தாகத்தின் கொக்கிகளில்
ஏராளம் தொண்டைகள்
உன் நிழல் பாயும் சிற்றோடையில் கவிகிறது
கரும் மேகம்
நாக்குகளில் பேருரசல்
நீர்மைக்குள் புரள்கின்றன கண்ணாடிச்சில்லுகள்
தனிமையுடன் அமர்ந்திருக்கிறது வலி
தாகத்தின் நீர்
வழியெங்கும் சிதறித் துளிர்க்கிறது
பேரிரைச்சலுடன் வான் விடுகின்றன
ஓராயிரம் சிறகுகள்
பூமி பூமி பூமி
கனவுகளின் நிறத்தில் உறைந்தது வெயில்
தனிமை வற்றிய தாகக் கடல்
மீதம் கிடக்கும்
ஈரம் உலரா சிப்பி வாய்களில்
உன் உலரா முத்தம்.

ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

கன்னியாகுமரி


உள்ளும் புறமுமாய்
நான்
உருவாக்கிக் கொண்டேன்
எனக்கான தொலைதூர மணல் வெளியை
காலங்களுக்கப்பால் கிடக்கும்
திட்டுக்களின் ரேகைகளிலிருந்து
வாழ்நாட்களின்
உலர்ந்த வேர்முடிச்சுகளை
மெல்ல அவிழ்த்து வெளியெடுக்கும் பொழுது
இன்னும் சொட்டியது 
எஞ்சியிருந்தது
தவிப்புடன் அதன் தண்டுகளை உடைக்கிறேன்
உள்ளிருக்கும் கிழங்குகளின் 
சொதசொதப்பை சுரண்டுகிறேன்
சின்னஞ்சிறு சிற்றோடையாய்
என் பாதங்கள் வருடி நின்றிருக்கிறது
எலுமிச்சை நிற ஒளி
தனித்திருக்கும் முட்செடிகளின் வழி
வழிந்தோடுகிறது கானல் நதி
அலைக்க அலைக்க
விடாமல் வலை வீசினேன்
மீன்களின் கண்களுடன்
கொத்துக் கொத்தாய்
பெண்ணுடல்கள் துடிக்கத் துடிக்க,
மூச்சடங்கிய பின்
மெல்ல ஒவ்வொருவராய்ப் புணரத் தொடங்குகிறேன்
நேற்றையக் கனவின்
ஆணுடல்களின் குறிகளை
வெறி தீரக் கடித்துக் குதறியிருப்பேன்
அதற்கு முந்தைய நாட்களின்
எண்ணற்ற உடல்கள்...
பாலினம் தொலைத்த
முடிவில்லா உடலப்பெருக்குடன்
நானும் ஒளிந்து கொண்டிருப்பேன்
என் உடலின் பாலினப்பாகங்களில்
செயற்கைத் துடிப்புகள் கை கூடியிருந்தது
அகலக் கால் விரித்து குப்புறப்படுக்கிறேன்
அலை
அலைகள்
அலைகளின் பாய்ச்சலில்
படித்துறையில்
கால்கள் புதையப் புதைய
அடிமண்டிய சேற்று வண்டலிலிருந்து
வெளிவரத் தொடங்கியது
இதுவரை நான் உதிர்த்துக் கொண்டிருந்த
விந்து ஊற்று
உள்ளும் புறமுமாய்
உருவாக்கிய நெடும் மணல்
பாலாழியாகிறது
கசிந்து பீய்ச்சுகிறது
அமிர்தமும் விடமும்.
நீலகண்டன் உடைந்தழுது மாய்கிறான்
மாயவனை உயிரோடு (இருந்ததா) விழுங்கியது சேஷம்
நான்கு தலைகளும் நான் திசை தெறித்தது
தேவனும் அசுரனும்
தொடர்ச்சியற்று அகழ்ந்தெடுத்தனர்
அடியின் பெரும் பாறை  உடைவிலிருந்து கிளர்ந்தெழுந்து
எட்டுத்திக்கும்
சூழ்ந்தது நீர்
எங்கும் நீர்மை
அந்த உப்பு வெளியின் நடுத் தீவில்
முக்காலத்திற்குமாய் பெய்து அடங்கியது மழை
செழித்த தீவிலிருந்து
வெளியேறும் முன்
என் பிறப்புறுப்புகளை சரிபார்த்துக் கொள்ளும் பொழுது
அவள் வந்தாள்
நீ ஆண் என்றாள்
ஒற்றைக்காலுடன் என்னைப் புணர்ந்து மறைந்தாள்.











ஒளி

ஆதிக்கலவியில் உருத்திரண்ட வினைப்பயன்
பிறிதொன்றிலாது ஊடுருவிக்கொள்ளும்
உன்மத்தச்சூடு
நிழல்களினுள் தன்னிருப்பை ஸ்திரப்படுத்தியது
நெகிழ நெகிழ வடிவு துலங்குவது
நேர்க்கோடுகளிலிருந்து புள்ளிகளை கருவுற்றது
நீ
நான்
அவள்
ஸ்தூலம்
அரூபம்
சேர்தல்
பிரிதல்
மண்
வான்
காலம்
முடிவிலி
தேவம்
சர்வம்
ஓம்! ஓம்! ஓம்!

கடைசிமுகம்



எத்தனை முகங்கள், உடல்கள். அதில் முலைகளும், அல்குல்களும். என் வாழ்தலின் கணங்கள் இந்த உடல்களால் நாசி நிரப்புகையில், அகம் மூட்டைப்பூச்சியாய் உள்ளுள் நகர்கிறது. அதன் கூர்மையான உறிஞ்சுக்குழாய் எப்பொழுதும் தகித்துக் கொண்டிருக்கிறது. இரை! இரை! என்று. காமம் ஒரு கவிழ்த்துப் போட்ட கரப்பானைப் போல கால்கள் நடுங்க உணர்கொம்புகள் உராயத் துடித்துக் கொண்டே இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத கண்ணிகளில் என் முதுகுச் செதில்கள் கொழுத்தியிட்டிருக்கிறது. அதன் ஒவ்வோர் அழுத்தத்திலும் தன்னுணர்வின்றி என்னுள் ஒரு ஆதி மிருகம் மிக வன்மமாய் பதுங்கிக் கொண்டு நோட்டமிடுகிறது. சிறுதுளி தாமதமுமில்லை, அதை எதிரில் இருக்கும் எந்த உடலும் எளிதில் புரிந்து கொள்ளும். அவர்களின் அகம் அதை உணரும் நொடியில் பார்வையைத் திருப்பிக் கொள்கிறேன். நான் மனிதன் என்று சொல்லிக் கொள்கிறேன். மனிதனாய் இருப்பது என்பது வெறும் பாவனைகளால் வாழ்வதுதானே. குறுக்கு வெட்டாய் என்னை ஆராய்கையிலெல்லாம் இந்த மிருகத்தின் சமிக்ஞ்களை அணுக்கமாய் அறிந்திருக்கிறேன். வெகு நாள் நான் காத்திருக்கப்போவதில்லை, என்பதைப்போல அதன் சிவந்த உள் நாக்கு காட்டி, வீரப்பல் மிளிர இளித்துக் கொண்டிருக்கிறது.
பின் சுயமைதுனத்திற்காக, உடலங்களின் நுண்ணிய பரப்புகளை மீட்டுக் கொள்கிறேன். சிறுவயதில் நான் எப்பொழுது அல்குலை அறிந்தேன். முதல் முறை நான் அதை அறிகையில் அங்கு நான் ஒரு ஆண் குறியை எதிர்பார்த்தேன். அங்கு எதுவுமில்லாதிருந்தது. ஆனால் அது என்னுள் நான் உள் நுழைந்து கொள்ள வேண்டிய, நான் உயிர் வாழ்வதற்கான உறுப்பாய் உருமாறிக் கொண்டேயிருக்கிறது இத்தனை நாட்களாய். எங்கும் நான் தொலைந்து போகும் ஒரு இடம் எனில் அதனுள் மட்டுமே. அது அவ்வளவு சுலபமுமல்ல. நான் என் அம்மையை அங்கு உணர்கிறேன். அந்த மெல்லியத் துளை வழி நான் அவளது உடலுடன் நெருக்கமாய்ப் பிணைந்து ஒட்டியிருக்கிறேன். பிரிக்கவே வழியில்லாதபடி. அங்கு முடிவில்லாத் தூரம் அவளை நான் விரும்புகிறேன்.  வெறுக்கிறேன்.
என் கனவுகளுக்குத் தெரிந்திருக்கிறது. நான் தேடும் முகங்களை. அந்த முகங்களில் என் விந்துவைப் பீய்ச்சி பீய்ச்சி பழிக்கிறேன். நீயல்ல! நீயல்ல என்று. முடிந்தவுடன் தன்னிரக்கம் மேலிட நொய்ந்த குறியையும், விரையையும் அழுத்திப்பற்றிக் கதறுகிறேன். உண்மையில் உங்களுக்கு என்னதான் வேண்டும். எவ்வளவு வடித்தாலும் நிரம்பாப் பிலங்களை நான் அதன் பிறகான கனவுகளில் கண்டு விதிர்த்துக் கொண்டிருந்தேன். சின்ன முக அசைவுகளில், சிணுங்கல்களில், உடல் நெளிவுகளில் நான் முடிவெடுத்துக் கொள்கிறேன். ஆம்! ஆம்! இது காமம். அவளது அழைப்பு இது என்று. என்னுள் எம்பக் காத்திருக்கிறான். இந்த முகம். இல்லை அந்த முகம். முகங்கள் தன்னுள் தான் அமிழ்ந்து முடிவிலியில் பிரதிபலித்து, முகங்கள் மட்டுமேயான விராட உருவமெடுக்கிறது. அங்கு பெண்ணுடல்கள் நொதித்துக் கொண்டே இருக்கும் குழியில் நான் தனித்து விடப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
என்னுள் கேள்விகள் எழுப்புகிறேன். இது என்ன வகையானத் தன்மை என்பதை பிரித்தறியவே முடியவில்லை. இது ஒரு ஈடிபஸ் காம்ப்ளக்சா? உன் சகோதரிகளை நீ எங்கனம் உணர்கிறாய்? அப்படி சகோதரிகள் இருந்திருந்தால் உனது காமம் அவர்களை நோக்காமல் விட்டு விடுமா? உண்மையில் இதனுள் செல்லச் செல்ல குறியை அறுத்து விடலாமா? என்று விடலைத்தனமான எண்ணம் தோன்றாமலில்லை. ஒரு ஆண் பெண்ணுடலைப் புரிந்து கொள்ளுதல் என்பது சாத்தியமில்லாத தூரத்தில் கோடிடப்பட்ட எல்லைக் கோட்டைத் தாண்டிய எதிரொலிகள் மட்டுமே இறைந்து கிடக்கும் அகாலப் பெருவெளியாய், விடாமல் என் கருஞ்சுவர்களில் பட்டுத் தெறித்துக் கொண்டே இருக்கிறது.
தெருவில் நாய்கள் புணர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தவுடன், சே! எத்தனை எளிதான விசயம். காற்று நிரம்பிய பலூனைப் போலவோ, இல்லை கனத்த ஈயக் குண்டைப் போலவோ அகம் மாறி மாறி ஒளிந்தும், வெளிப்பட்டும் போக்கு காட்டுகிறது. அது ஒரு ஊளையாக மாறிடும் போது, அந்த மெல்லியத் துளைகளை இடைவிடாது முட்டி மோதிக் கொண்டே இருக்கிறேன். அவர்களது முகங்கள் என்னை அலைக்கழிக்க அங்கு காத்துக் கொண்டிருக்கிறது. சபலங்களின் ஒவ்வொரு படிகளிலும் நான் தேடும் முகம் ஒன்றேதான் என்பது சில நேரங்களில், குளத்தின் நீரலைகளில், தலைதூக்கி முழுகும் நீர்க்காகத்தைப் போல மின்னி மறைந்து விடுகிறது. பின் நான் முகங்களுக்காக அலையவில்லையோ, எனக்குத் தேவையானது வெறும் உடல்தானோ என்று, ஆபாசப்படங்களுள் கட்டின்றி புணர்ந்து கொண்டே இருக்கிறேன்.
இந்தக் கற்பனையின் துர் கனவுகளில், அவையெல்லாம் என் எண்ணங்களின் கரைந்து கொண்டிருக்கும் பகல் கனவுகள் தான் என்பதை நான் என்று அறியப் போகிறேன். சபலங்கள் திரைப்படிந்த கண்களின் வழி பெண்களை அணுகுகையில், அதே போல ஒரு திரைதான் எதிராளியிடமும் இருக்கும் போல என்று எல்லவற்றையும் எளிதாக்கிக் கொள்ள பிரயத்தனப்படுகிறேன். உண்மையில் இந்த மூடுதிரைக்கு அப்பால் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எத்தனை பெண்களை ஒரு ஆண் தன் பகற்கனவுகளில் வடித்துக் கொண்டேயிருக்கிறான். விடையே இல்லாத புதிர்க்கணக்கு.
எத்தனை முகங்களைக் கண்டாலும் இன்னும் ஒன்று என்று ஆவலுடன் காத்துக்கொண்டிருகிறேன். அது என்னுடையதாக இருக்கும் என்று நம்பிக்கையில். அங்கு நான் முகங்களைக் கண்டறியப் போவதில்லை. ஏன்? என்னால் எதையுமே தேர்ந்தெடுக்க முடியாது. மெல்லியத் துளை வழி நான் கண்டறியப் போகும் ஒரு முகம் என்னை உள்ளீடற்றதாய் மாற்றும் தருணம், நான் எதிர்பாரா அந்தக் கணம். அவள் தன் ராட்சச உகிர்களால் என்னை முழுதும் கிழித்துக் குடிக்கையில், நான் அறிந்திருக்கக் கூடுமா? இல்லை இன்னும் முடிவிலி முகங்கள் எனக்காகக் காத்திருக்கின்றனவா?

இன்னும் அவள்


ஒவ்வொரு அலைச்சுவடிலும்
பாதம் தொட்டு
இறைஞ்சும் உப்பு வியர்வை
பெயரற்ற அதன் ஈர நுனிகளை
கடைவாயில் அதக்குகிறேன்
சுவையின் ஊற்றுக்கண்ணிலிருந்து
உயிர்த்தெழுகிறது
மழை
என் நிழல்கள் மண்டிய வாசலில்
நிர்வாணத் தொடுகையுடன்
வந்தமர்கிறாள்.
நிறமற்ற மழைக் கூச்சல்
மேலடுக்குகளின் பொருக்குகள்
செம்மண் நீரோடையாய்
உருண்டோடுகிறது
உள்ளடுக்குகளின் குழைந்த சதுப்பில்
பல்லாயிரம் ஆண்டுகளாய்
கரைதட்டிக் கிடக்கும் தோணி
இன்னும் மழை
இன்னும் அவள்…