திங்கள், 30 ஜூலை, 2018

கிறுஸ்துவின் கடைச் சபலம் 4

அவன் ஒரு தச்சனா? வெறும் தச்சனா? ஆமை தன் ஓட்டினுள் பதுங்கிக் கொள்வதைப் போல இங்கு வாழ்கிறான். இவனா நாம் தேடித் திரியும் ஒருவன். ஒரு அந்தரங்கமான நடுக்கத்துடன் படுத்திருந்தான் இளைஞன். தன்னுள் ஒடுங்கிய மெலிந்த தோற்றம், கூச்ச சுபாவம் மிகுந்த உள்முகமாய் இருக்கும் ஒரு பயந்தவனாய் பார்ப்பதற்கு தோன்றியது. குடிகாரனைப் போல போதை ததும்பிய சிவந்த விழிகள். நிலை கொள்ளாத பார்வை. நீள் முகத்தில் தீட்சண்யமாய் ரேகைகள். மெலிந்திருந்தாலும் வலுவான புஜங்கள், அவன் ஒரு தச்சன் என்பதை நினைவுறுத்தியது. மணிக்கட்டுகளிலிருந்து கிளம்பும் பச்சை நரம்புகள் முழங்கை வரை புடைத்திருந்தது. தோள்பட்டை அகன்று சற்று உயரமான பெரிய உடல் வாகு கொண்டவனைப் போல இருந்தான். ஆனால் எதன் பொருட்டோ உருவாகிய அனிச்சை பாவம், ஒரு தீர்க்கமான நோக்கு அவனை அலைக் கழித்துக் கொண்டே இருந்ததை அவனது உடல் மொழி உணர்த்தியது. உறக்கத்தில் கூட ஒடுங்கி குறுகி அவ்வப்பொழுது விதிர்த்து உயரும் அவனது உடல் ஒரு பைத்தியக் களையையும் அதே நேரம் ஒருமித்த ஒரு தேடலும் சதா போராடிக் கொண்டிருப்பதாய் உணர்த்தியது.

அவன் தான். அவனே தான். இனி தப்பிக்க வழியேதுமில்லை.
வீரர்களே, தேவனுக்குத் தெரியும். அவனே அறிபவன். இவனையும் பின் வரும் அனைவரையும் அவன் தன் இமையா விழிகளுடன் நோக்குகின்றான். காலங்களின் மூப்பும் தொய்வும் அணக்கமும் அலைவும் கடந்ததின் இருப்பதின் வருவதின் சூட்சுமம் அறிந்தவன் அவன்.

செந்தாடிக் காரனின் கால்கள் பாலை மணலில் அழுந்தப் பதிந்தன. அவனது கால் விரல்களிடை வெண் மணல் திரவக்குமிழ் போல கொப்பளித்தது. ஆனால் அவனது வீரர்களான குள்ளர்கள் அவனைப் பற்றிக் கொண்டு முன்னேறிச் செல்ல விடாமல் தடுத்தனர்.

அங்கே பழைய அழுக்கு உடைகளில் தச்சனைப் போல அதிகம் பேர் இருக்கின்றனரே! எவ்வாறு நாங்கள் அவனைக் கண்டறிவோம்?

அவன் எங்குள்ளான். பார்க்க எப்படி இருப்பான். ஏதேனும் குறிப்புணர்த்துங்கள். நாங்கள் பதற்றமடைகிறோம். அவனது தோற்றம் வடிவம் ஏதாவது சொல்லுங்கள். உங்களின் குரலுக்காக தயாராக இருக்கிறோம்.

நான் முத்தமிடுவேன். என் மார்பழுந்த இறுக்கி அவனை என் கைகளுக்குள் துடிதுடிக்க அணைத்து முத்தமிடுவேன்.

வெளிச்சம் இன்னும் முழுமையடைந்திருக்கவில்லை. இரவு முடிவே அடையாத தொடர் நிகழ்வாய் சுழலை பாதி உண்ட இரை போலக் கவ்விக் கொண்டிருந்தது. கோட்டான்களின் குழறல் ஒலி. இரவின் நிழல் வடிவங்கள் மறைந்தும் பின் வெளிப்பட்டும் வடிவங்களைச் சிதைத்து, உருவாக்கிக் கொண்டிருந்தது. முற்றிலுமான சப்தமின்மை.

ஆம்! முன்னேறுங்கள். படுக்கை விரிப்புகளுக்கடியில் ஊறும் முட்டைப் பூச்சிகளைப் போல அதிர்வின்றி அவர்கள் நகர்ந்தனர். அறையினுள் இருள் ஒரு வளர்ப்பு மிருகம் போல அவனது எண்ணங்களினுள் மடிந்து கிடந்தது.

தப்பித்து விடக்கூடாது. தங்களுக்குள் கட்டளைகளை அவர்கள் உணர்ந்து கொண்டனர். காலம் ஒரு அணங்காய் உச்சபட்ச கவர்ச்சியுடன் அவனது கழுத்தை இறுக்கியது. கனவினுள் ஆழ்ந்திருந்தான் இளைஞன். கனவினுள் பலியாவதை அவன் விரும்பியிருந்தான். ஆனால் யாரும் கனவிற்குள் சாவதில்லை. அதன் எல்லை வரை சென்று மீளும் சாகசத் தூண்டல் இருக்கலாம். ஆனால் அவன் உள்ளூர தன்னை ஒப்புக் கொடுத்திருந்தான். தன்னைத் துரத்தும் அதன் வேர்களை அறியும் ஆர்வத்தில் மேலும் மேலும் கனவினைத் தன் வாழ்வனுபவமாக மாற்றியிருந்தான். ஒவ்வொரு நொடிப்பொழுதும் தன்னை இம்சித்துக்கொண்டே இருக்கும் இந்த கூர் நுனியில் அமிழ்ந்து உயிர் விட எண்ணினான். அது அவன் வழக்கமாக காணும் கனவு தான். தினம் இந்த சித்திரவதைக்குள் தன்னை அகப்படுத்தி மீள முடியாத எல்லைக்குள் புதையப் புதைய தன்னுள் உருவாகும் நடுக்கத்தை ரசித்தான்.

வீரர்களே! பிரபஞ்சமெங்கும் நிலைத்திருக்கும் கடவுளின் பெயரால். ஆம்! மீட்சியடையும் வழியைக் காட்டும் என் பிதாவே!

சூரிய சந்திரர்களையும் வானையும் மண்ணையும் அனலையும் குளிரையும் அளித்த, எதனிலும் உட்படுத்த முடியா கட்டுகளிலடங்கா செறிவும் நுட்பமும் ஒரு சேரக் கொண்ட பரலோகத்திலிருக்கும் எங்கள் பரம பிதாவின் பெயரால். இவனையும் இவனுக்கு பின் வருபவர்களையும்...

ஒருமித்த குரலாய் அவர்கள் நிலம் அதிரக் கத்தி ஆரவாரமிட்டனர்.

முட்கிரீடம் வைத்திருந்தவன் அகலாது அங்கேயே நின்றிருந்தான். அவனது ஒரு கண் வெண்ணிறச் சதைக் கோளமாய் இருந்தது. முதுகு  சற்றே வளைந்து மேடிட்டு கூன் விழுந்திருந்தது. அவன் கதறி அழுதான். மனிதக் குரல் போலவே இல்லாத ஒரு விளி. உடலெங்கும் தீப்பற்றுகையில் உருவாகும் மரண விளி. என்ன இது? நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். இனியும் இதுதானா நம் விதி. நாம் வேட்டை மிருகங்கள். எத்தனை உயிர்கள். எத்தனை சாவு. இந்த இரவு நாம் கொன்று புதைத்த பிணங்களின் குத்திட்ட விழிகள் போல என் முன் வெறிக்கிறது. வேண்டாம். வேண்டாம். தனக்குள் விம்மித் தளர்ந்து ஓங்கரித்தான்.

இதுமியாவில் எந்தத் துறவியையும் விட்டு வைக்கவில்லை. பாவப்பட்ட அந்த லாசரசை பெத்தனியில் எந்தப் பிரயோஜனமுமின்றிக் குத்திக் கொன்றோம். ஜோடார்ன் நதிக்கரையில் அந்த பித்து பிடித்த சாமியாரிடம் போய் நின்றோம். அவனுமில்லை. பிணங்களின் துர் நாற்றம் என் உள்ளுறுப்புகளில் புகுந்து நவதுவாரங்கள் வழி வெளியேறுகிறது. சவங்களின் பெருங்குழியில் காலமின்றி நொதித்துக் கொண்டிருக்கிறோம்.

சே! எங்களுக்கு வேறு வழியுமில்லை. உன்னுடன் வருவதைத் தவிர.

எங்குமே இல்லை அவன். அவன் இல்லாதவன். தேடி அவன் கிடைக்கப்போவதுமில்லை. ஜெருசலேமில் அலைந்தோம். பொய்யர்கள், பரத்தை மகன்கள், கொள்ளையர்கள், கொலை செய்பவர்கள், சுய நலமிகள், வம்பர்கள், ஒழுக்கமற்றவர்கள் என்று நாம் கண்டது அனைத்தும் அவனது வெவ்வேறு பிம்பங்களா? ஒரு ஆடிச்சுழியில் அவனை நிற்க வைத்து பிரதியெடுத்த ஓராயிரம் பிம்பங்களில் அவன் தன்னை மறைத்து வைத்திருக்கிறான். கொலைகளின் வழி மரணத்தை நாம் அறைக்கூவலிடுகையில் அவனது வெறுமையின் இளிப்பை நான் காண்கின்றேன். இல்லாத ஒருவனை நாம் தேடுகின்றோம்.

ஒருவன். ஒரே ஒரு மேன்மை மனிதனை. ஒழுக்கத்தில் சிறந்த உண்மையானவனை. தேவனுக்கு கீழ்படியும் மானுடத் தூயனை நாம் தேடினோம். கனாவிலும், பெத்தைசிலும், காப்ரீனிலும், அலைந்தோம். ஒவ்வொரு முறை அவனை நாம் கண்டறியும் பொழுதும் அவன் அழுது கொண்டிருப்பான். நீயே அந்த ஒருவன் எனில் ஏன் மறைந்திருக்காய். ஏன் பயப்படுகிறாய். வா! இல்லையேல் செத்தொழி. வா! இந்த நிலத்தை இந்த மானுடத்தை காப்பாற்று.

ஒருவன். அந்த ஒருவன். எவனுமற்ற ஒருவன். மானுடத்தை உண்மையாய் உணர்ந்த மானுடன். மானுட மீட்சியின் வழியை தன் குருதியினால் உணர்ந்தவன். நாம் அவனைக் கண்டு கொள்வதும் இது முதன்முறை அல்ல.  கழுத்தறுபடும் முன் வெறித்து பார்க்கும் கன்றின் பார்வையைத் தான் நான் அவனில் கண்டேன்.

நம் கொலைக்கருவிகளைக் காணும் போதெல்லாம் அவனது விழிகளை நான் சந்திக்கிறேன். நம்மைக் கண்டதும் அவன் உள்ளூற அதனை எதிர்பார்த்துக் காத்திருப்பதைப் போல உணர்ந்தேன். மரணம் தன்னை விடுவிக்கும் என்றும் அதன் மூலம் தன்னை அவன் நிரூபித்துக் கொள்வதாகவும் நினைக்கிறான். மொத்த பிரபஞ்சத்தின் முன்னும் நெஞ்சு வெடித்து அழுகிறான். அந்த மகத்தானவன் நானில்லை என்று.

ஆம்! இங்கு யாருமே மகத்தானவர்களில்லை. மகத்தானது என்று இவ்வுலகில் என்னதான் உண்டு. நம் கொலைக் கருவிகள் அதைத்தானே நம்மிலிருந்து எதிர்பார்க்கின்றன. அதிலிருந்து சிந்திக் கொண்டிருக்கும் ரத்தத் துளிகள் அறியும் உலகில் மகத்தானது எது என்று.

மதுவின் தித்திப்பில், இளம்பெண்களின் தேக லயிப்பில் அவனைத் தூக்கி எறிவோம். ஆம் மகத்தானது. மயக்கம் தரும் சுயமழிப்பை அவன் அறியட்டும். பரத்தையர்களுடன் பொருந்திக் கிடக்கையில் அவன் பீய்ச்சும் விந்து அறியும் மகத்தானது எது என்று. அப்பொழுது அவனைப் பிடிப்போம். அவனைக் காறி உமிழ்ந்து மகிழ்வோம். ஆம்! மகத்தானது இது என்று.

மன்னித்து விடுங்கள். திரும்பத் திரும்ப நான் இதனையே புலம்புகிறேன். என்னுள் தகிக்கும் ஒன்று பல்லி வால் போல அறுந்து தனியே துடிக்கிறது. அதற்கு உயிரில்லை. அது ஒரு ஏமாற்று. உண்மையில் அப்படி ஒருவனை நாம் அறியும் பொழுது அவனும் அதைப் போலவே இருப்பான் என்று நான் நம்புகிறேன். கடவுளர்களின் எக்காளம் எங்கள் காதுகளில் குடைகிறது. இந்தப் பயணம் முழுதுமான பிணங்கள், அவர்கள் மரணிக்கும் நொடி நேரத்தில் அவர்களின் ஒருவர் கூட சாக விரும்பவில்லை. அவர்கள் பயந்தார்கள். மரணமே கடவுள். ஆம் மகத்தானது அப்படித்தான் இருக்கும்.

செந்தாடிக் காரன் தன் வலுத்த கைகளால் அவன் பிடரியைப் பற்றித் தூக்கினான். அந்தரந்தில் கால்கள் இழுபட மூச்சுத்திணற அல்லாடினான் கூனன்.

ஹா! ஹா! ஹா! தாமஸ்! ஓ! தாமஸ்! சந்தேகப்படுகிறான். தயங்குகிறாயா எனதருமை தாமஸ். நீ எப்பொழுதுமே இப்படித்தான். விழி பிதுங்கிய கூனனின் வாயிலிருந்து எச்சில் வழிந்தது. அவனை விடுவித்தான். தொண்டை நரம்புகள் இழுபட வேகமாக மூச்சிரைத்து மெல்ல சரளைக்கற்கள் உருளும் மண்ணில் கால்கள் அறைபட எழுந்து செந்தாடிக்காரனை ஆதுரத்துடன் நோக்கினான்.

இந்த வேசி மகன் நம்மை வழி நடத்தட்டும். என்ன தாமஸ். மகத்தானதை நீ கண்டறிவாய். உண்மை உன்னிடம் மட்டுமே உறைகிறது இல்லையா?

நிமிர்ந்து தன் முன் நிற்கும் கூட்டத்தினை வெறிக் கண்களுடன் நோக்கினான். நாம் உருவாக்கிக் கொண்டது எதனை? மரணத்திடம் நாம் சொல்வோம். நாங்கள் இம்மண்ணின் மைந்தர்கள். தயங்குபவர்கள் இந்த நொடியே கொல்லப்படுவீர்கள். உங்களுக்கு மானுடத்தின் மீட்சி என்ன என்பதை நான் உரைப்பேன். கடவுளர்கள் உருவாக்கிய இந்த நிலத்தினை மீட்கும் பொருட்டு நாம் தியாகம் செய்வோம். அன்பும் கருணையும் கொண்ட நம் பிதாவின் வாக்கு என்றைக்குமே தப்புவதில்லை. சந்தேகங்கள் தீக்கங்குகள் போல. புகை விட்டுக் கொண்டிருக்கும் அதனை நாம் நம் வயிற்றிற்குள் செருகி அணைப்போம். ஒன்று திரள்வோம்.

The Last Temptation of Christ-Nikos Kazantzakis



ஞாயிறு, 29 ஜூலை, 2018

கிறிஸ்துவின் கடைசி சபலம் 3

வானம் வெளுத்திருந்தது. ரத்த நாளம் போல வெண் மலைப் பாறைகளுக்கிடையில் பீறிட்டு சாடியது நதி. பெரிதும் சிறிதுமாய் சரளைக்கற்கள் பரந்த கரை. முட்டி அளவு ஆழத்தில் அவர்கள் முழுக்க அம்மணமாய் நின்றிருந்தனர். தேன் கூட்டின் ரீங்கரிப்பு போல மந்திர ஜபம் அத்துவான வெளியில் இறைந்தது. தலைவிரி கோலமாய் பெண்கள் கூச்சலிட்டு அழுதனர். ஆண்களும் பெண்களும் முழுக்க நிர்வாணமாய் அந்த நதியினுள் அமிழ்ந்திருப்பது ஒரு சேரக் கவர்ச்சியும் அச்சமும் தொற்றியது. கரையில் இருந்து பழுத்த மணற்துகள் காற்றின் கீறலில் சீறிட்டு அவர்களின் உடல் எங்கும் படிந்தது. ஒவ்வொரு மந்திர ஒலிக்கும் ஒரு சூழல் நதியினுள் உருவாகிக் கலைந்தது.

பெரிய அங்கியுடன் கனத்து நுரைக்கும் வெண்தாடியும் பின் வழுக்கைத் தலையும் பாலைக்கே உரிய நீண்ட முக ரேகைகளுடன் ஒரூ வயதானவன் அவர்கள் நடுவில் நின்றான். ஒவ்வொருவர் தலையிலும் நதியின் செந்நீரைத் தெளித்து பைத்தியக் களையில் வானை நோக்கி பிதற்றி அழுதான். சூழல் வலுத்துக் கொண்டே இருந்தது. செந்நிற நதி ஒரு குழம்பாய் கொப்புளங்களாய் நொதிக்கத் தொடங்கியது. மணல் காற்று ஒரு கணத்த போர்வையாய் சூழ்ந்து மூடியது.

கலங்கி வடிந்த பின் அடிமண்டிய ஆனால் ஆழம் மிகுந்த சேற்றுக் குழியாய் குழைந்தன எண்ணங்கள். கனவினைத் தொகுக்க முயல சாரமற்ற காட்சிப் பிம்பமாய் நினைவினில் அலையாடியது. கண்களை இறுக்க மூடி தனக்குள்ளேயே முணங்கிக் கொண்டிருந்தான். பாலைக்குள் இருள் தாவர உண்ணியைப் போல கதவிடுக்குவழி அசை போட்டுக் கொண்டிருந்தது.

இரு வெற்றுப் பாளங்களுக்கிடையில்
முளைத்தெழுகிறது ஒரு அனிச்சை சொல்
தலை கீழாய் படம் விரிக்கின்றன நடசத்திரங்கள்
 உள் நுழைகின்றன ஒளி நாக்குகள்
வெளிச்சத்தின் தீ
ஒரு அனிச்சை சொல்
மந்திரமாவது எப்போது
தாழ்ந்து உயர்கிறது
கனவின் நிலம்
இரு வெற்றிடங்களுக்குள்
இடைவிடாது நிரம்புகிறது...
அது...

வெளிச்சம் புண்ணிலிருந்து பிதுங்கி வழியும் பழுத்த கோழையாய் அடர்ந்தது. பின் அதுவே மந்திரம் படிந்த பல் வேறு குரல்களில் அறையெங்கும் வளையம் வளையமாய் நெளியத் தொடங்கியது. கனவு நிலம் நீரில் மிதக்கும் பிம்பம் போலத் தடமழிந்தது.

தியிட்ட சிதல் புற்றில் இருந்து கிளர்ந்தெளும் கரையான் கூடடத்தை போல நாலா புறமும் சிதறித் தெறித்தது மனித உடல்கள். அவன் முதுகுக்கு பின் குத்திட்டு காத்திருந்தது கட்டுண்ட மிருகத்தின் வெறிப்பார்வை. வெகு தொலைவில் ஒளியை ஊடுருவிக் கொண்டே நகர்ந்து வரும் பல நூறு உருவங்கள். புள்ளிகள் பெர்தாகிக் கொண்டே வட்ட வடிவம் கொண்டது. அதன் நிழல்களின் மொத்தையான கருமை வெளிச்சத்தினுள் இருந்து வெளிவர, சுருண்டு புரளும் வீரியன் குட்டிகள் போல ஒளி மொலுமொலுத்தது. நெருங்க நெருங்க முரணான அங்கங்கள் கொண்ட விகார ரூபங்களாய் அந்த குள்ள மனிதர்கள் வந்து கொண்டிருந்தனர். அடித்து சப்பிய முகங்களும் இழுபடும் நார்த்தாடிகளும் கொண்ட குள்ளர்கள் வசைகளால் சபித்துக் கொண்டே இவனை நோக்கி வெறி பிடித்தார் போல் ஓடி வந்தனர்.

இரும்பாலான கூர் ஊசிகள் கொளுத்தப்பட்ட வார்ப்பட்டை, கத்திகள்,கோடாரிகள், கொக்கிகள், துருவேறியா நீள் ஆணிகளுடன் மரணத்தின் அறைக் கூவலுடன் அவர்கள் நெருங்கினர். கனவிற்குள்ளும், அதிலிருந்து வெளியேறி நினைவிற்குள்ளும் தாவிக் கொண்டே இருக்கும் பிரங்ஜை. தூசுப்படலம் போல திரையினுள் காட்சிகள் மாறி மாறிக் கலைந்தது.

மாட்சிமை பொருந்திய மகுடத்தை அவர்களில் ஒரு மாறுகண் குள்ளன் தன்னிடம் இறுக்கப் பற்றிக் கொண்டிருந்தான். தரையில் சதைக் கோளங்களாய் அமிழ்ந்து கிடக்கும் மூன்று குள்ள உடல்கள். செந்தாடிக்காரனின் கைகளில் பெரிய அகன்ற மனிதத் தலை, கண்கள் பிதுங்க ஊசலாடிக் கொண்டிருந்தது. முடிக்கற்றையை இறுக்கி பிடித்து வைத்திருக்கும் அவனது புடைத்த நரம்புகளில் குருதி சேற்றுக்குழம்பல் போல சிந்தியது. அவந்து இடுப்பில் இருந்த உடைவாளில் படிந்திருந்த நிணத் துணுக்குகளை மெல்ல தனது வார்க் கச்சையால் துடைத்துக் கொண்டே எதையும் நிலையாக பாராது அங்குமிங்கும் நோட்டமிட்டான்.

அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் நம்பவில்லை. நம்பிக்கையற்றவர்கள் கொன்றழிக்கப்பட வேண்டியவர்கள். கடவுளின் ராஜ்ஜியத்தில் நம்பிக்கை கொள்வோம். அவர்கள் உயிரின் பயனில்லாதவர்கள்.நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. வலிமை பொருந்திய செம்பட்டை மயிரடர்ந்த புஜங்களை உயர்த்தி தொண்டை நாளங்கள் புடைக்க தனது படையினரைப் பார்த்து கர்ஜித்தான்.உங்களின் முன்ணே பரந்து விரிந்து கிடக்கும் இந்த வெற்று நிலத்தை பாருங்கள். அவன் இங்குதான் இருக்கிறான்.

தலைவா! எங்களால் எதையுமே காண முடியவில்லை. இருள் மட்டுமே நிரம்பிக் கிடக்கும் இந்த பிரதேசத்தில் அவனை எவ்வாறு கண்டறிவோம்?

நம்பிக்கையில்லாதவனுக்கு எதுவும் தெரிவதில்லை. அவன் விழிகளிருந்தும் குருடனே!

வெட்ட வெளியில் மர்மமாய் தூவிக் கொண்டிருக்கும் பனிப்படலத்தின் கீழே அவன் கைகளைத் தூண்டிக் காட்டினான். இரையெடுத்த மலைப்பாம்பின் நிசப்தத்துடன் ஒரு நீல ஏரி. உறங்காது உற்றுப்பார்க்கும் ஒட்டக விழியினைப் போல இருளினுள் ஒளிர்ந்தது. சூழ்ந்திருக்கும் வெளி ஜில்லிட்டு சலசலத்தது. பேரிச்சையின் நிழற்தாங்கலில் வெண்மை ததும்பும் சின்னஞ்சிறிய குடில்கள். பளிங்கின் மிருதுவாய்க் குழாங்கற்கள் அந்தக் கரை நிலம் முழுக்க பொதிபொதியாய் கிடந்துருண்டது. கரை மருங்கிலும் சாய்ந்து பரத்தும் வயல் வெளி. காய்ந்த புல் வெளி சூழ்ந்த அந்த பெரும் நிலப்பரப்பை சுட்டிக் காட்டினான். அவன் அங்கு தான் உள்ளான்.

விடியலின் பேரமைதி. மெல்ல மெல்ல சாரைப் பாம்புகளைப் போல விடியல் அக்கிராமத்தினுள் மென் முணுமுணுப்புடன் இருளைச் சுருட்டிக் கொண்டிருந்தது. முழுவதுமாக வெளிச்சம் படராது அங்கும் இங்குமாய் வானின் நீலம் ஊன் மிருகங்களின் மேற் தோல் புள்ளிகள் போல படர்ந்தது. வெளிச்சங்கள் கோடுகளாக ஆவதில்லை. அது புள்ளிகளிலிருந்து பல சுருள்களாய் உருண்டு வியாபிக்கத் தொடங்குகிறது. அதனால் அது தன் நிலையற்ற தன்மையுடன் ஒளிரத் தொடங்கியதும் இருளுக்குள்ளிருந்து உருப்பெறும் நிலம் தனக்கென எந்த எல்லையும் வடிவமும் பெற இயலாது. நாம் காணும் வடிவும் ஒளியன்றி வேறில்லை. ஒளி மட்டுமே வடிவினைத் தருகிறது பின் எடுத்துக் கொள்கிறது. ஒட்டிப் பிறந்த ரெட்டை உயிரினங்கள் போல அது மானுடர்களிடம் போக்கு காட்டுகிறது. ஆனால் ஆதியில் இருளே இருந்திருக்கும். அதற்கு வடிவங்கள் ஒரு பொருட்டல்ல. வடவற்ற ஒன்றை மனிதன் அறிய இயலாது. அதனால் எளிதில் ஏற்றுக் கொள்கிறான். ஒளி உருவாக்குகின்ற வடிவங்கள் அவனை காலத்திற்கு அப்பாற்பட்டு வழி நடத்துவதாக உருவாக்கிக் கொள்வது வெறும் மாய எண்ணமே. ஒளி உருவாக்குவது நாம் காண எண்ணிய வடிவை மட்டுமே ஆதலால் நாம் இருளைப் பூசிக் கொள்ளலாம். இருள் நமக்கு வழிகாட்டும். திசை திருப்பாது. ஒளியினூடாக உருவாக்கும் நிலம் அதன் தனித்தன்மையை இழந்து உருமாறிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

இருளுக்குள்ளிருந்து ஊற்றெடுப்பது போல ஒளி எல்லையை விரித்து பீறிட்டது. உறக்கம் தலைக்கு மேலே ஒரு மென் சுனையாய் ஓடிக் கொண்டிருந்தது. இரவின் கருமை பூசிய மென் படலம் அறையைச் சுற்றி இன்னும் பதுங்கியிருந்தது. மெல்ல கோதம்பு மணிகளின் இறைச்சி நிறம். செந்தாடிக் காரனின் மணிக்கட்டை நரம்புகளின் பச்சைக் குருதி நிறம். நூற்சரடில் தொங்கி அலையும் உலோகக் குண்டாய் கனவிலிருந்து உருவெளி வடிவாய் நிறங்கள் உருகி வழிந்தது.

கனவு அல்ல எனவும் கனவுதான் எனவும் தொலவற்றதும் அருகிருப்பதுமாய் ஒரு மாபெரும் கரிய நிழற் தோற்றம் அவனைச் சுற்றி மெல்ல மெல்ல குழுமிக் கொண்டே இருந்தது. அனைத்தையும் தொட்டு விட முயன்று எதுவும் மீளாத மருட்சியில் கண்களைக் கசக்கிக் கொண்டே எழுந்திட உந்தினான். முக்கி முணகி எழ முயல கனவு கண்ணாடிப்பரப்பு போல அவனையே பூதாகரமாய் உருப்பெருக்கிக் காட்டியது. பின் பல்வேறு உருவங்களிலான உடல்களாலான செதில் வெளியாய் சிதறிச் சிதறிக் கலைந்தது.

கனவு! ஆம். வெறும் கனவு. கனவாக மட்டும் இருந்து விட்டுப் போகட்டும். கண்களை மூடிக் கொள்கையில் திரும்பவும் பெரும் பெரும் சங்கிலிகளால் இறுக்க கட்டிய தன்னைச் சுற்றி அசைய முடியாத வண்ணம் சுவர்கள் எழுப்பப்பட்டது போல அந்த கனவு அவனை உட்கொள்ளத் தொடங்கியது.

The Last temptation of Christ-Nikos Kazantzakis.

புதன், 25 ஜூலை, 2018

கிறுஸ்துவின் கடைசி சபலம் 2

நாள் முழுதும் செய்த வேலையின் அயர்ச்சியில் மரத்தூள் படிந்த தேகத்துடன், ஆழ்ந்த சுவாசம் மீறிட படுக்கையில் வீழ்ந்தான். சிலந்தி வலையாய் உருமாறிய கரு நீல வெளியினுள் முடிச்சுகளுக்குள்ளிருந்து அகப்பட்டுத் துடிதுடிக்கிறது விடிவெள்ளியின் ஒளித்துணுக்கு, பாரம் அழுந்தும் அவன் தலைக்குப் பின்னிருந்து வேர் முண்டுகள் முளைப்பது போல கழுத்தினடியில் ஊறியது. ஆழ்ந்த உறக்கத்தில் மெல்லிய மூச்சுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக நீர்த்தும்பிகள் சலசலப்பது போல அந்த அறையினுள் குமுழியது.
மங்கிய வெளிச்சத்தினுள் செந்தாடிக்காரன். வியர்வை ஒட்டிய தேகம். சுருக்கங்கள் படர்ந்த நெற்றி. கங்கு தனக்குள் அமிழாமல் காற்று ஊடுருவ ஊடுருவப் புகை கக்கிக் கனல்வது போல எண்ணங்கள் கொத்திக் கொண்டிருந்தது. நிலையாமை இல்லாத பார்வையுடன் வெறித்துக் கொண்டிருந்தான். பிதற்றல் போகப் போகப் ரணம் உமிழும் சொற்களுடன் கீறிக் கொண்டிருந்தது. எதிலும் மையமற்ற வார்த்தைகளின் சுழல் அலைந்து அலைந்து முட்டிக் கொண்டே இருக்கும் கடல் நுரை போல, அடிபட்ட வன் மிருகம் போல தழலிட்டுக் கொழுந்தது.
“பிதாவே, எத்தனை நாட்கள்? இன்னும் எத்தனை காலம்?
முதுகில் முட்கள் கொண்ட பல்லிகள் தங்கள் பார்வையில் பெரும் சோகத்தைத் தேக்கிக் கொண்டிருக்கும். அதே மிருகம் ஊன் உண்ணும் பொழுது நோக்குகையில் அந்தக் கண்களின் பித்துப் பார்வை. அது மெல்ல மெல்ல லாவகமாய் உணவை முழுவதுமாய் விழுங்கத் தொடங்கும். சொற்களும் அடிப்படையில்  ஊரும் ஊன் மிருகங்கள் தான். அது அதற்கான பசியுடன் சுற்றிக் கொண்டும் பதுங்கிக் கொண்டும் நோக்கும். அதன் பலி கிடைக்கையில் அங்கு எந்த விதிகளும் செல்லுபடியாகாது. பெரும் சோகம் கனத்த வெறியாக உருக்கொள்ளும். பசியுடன் இந்த பாலை நிலத்தில் பதுங்கியிருக்கும் ஜீவ ராசிகள் எல்லாவற்றிலும் உறைந்திருப்பது அது. சொற்களின் கனத்த ஊற்று புரண்டு உருவாகிய வெளுத்த மணல்வெளியின் ரேகைகளிலெல்லாம் நினம் பிதுங்கி முயங்குகிறது.
தனக்குள் உருவாகிக் கொண்டிருக்கும் சொற்களைத் திரும்பத் திரும்பக் கடைவாயில் அதக்கிப் பிழிந்துக் காறி உமிழ்ந்தான். பசித்த மணல்வெளி நாகங்கள் போன்றது. உறிந்து கொண்டே இருக்கும் அதன் நாளங்களில் நெருப்பு ஜிவாலை எரிகிறது. அனல் விஷக் கண்களுடன் தன்னைத் தானே உற்று நோக்கி மேலும் மேலும் அதைப் பெருக்கி எரிக்கிறது.
இறைவன் அளித்த நிலம், இதனைக் கானான் என்றனர். தூரத்து விளக்கொளியின் நடுக்கத்துடன் மினுங்கும் நிலத்தின் எல்கை முடிவிலாத் தூரம் வரை கையளிக்கப்பட்டிருந்தது. தெற்கே இதுமியா. ஊர்ந்து கொண்டே இருக்கும் நிலம். அரவங்கள் தங்கள் பாதைகளைக் கண்டறியும் தோறும் அது விரிந்து கொண்டே இருக்கிறது. நிலங்கள் தங்கள் மனிதர்களைக் கண்டறியும் பொழுது அது காந்தச் சுழற்சியில் அதிறும் இரும்புத் துகள்கள் போல உருமாறத் தொடங்குகிறது. ஆனால் நிலம் மனிதனிடம் எப்பொழுதுமே இருப்பதில்லை. மனிதர்கள் உருவாக்கிக் கொண்டிருப்பது வெறும் எல்லைகள் தானே. ஆனால் பற்றிப்படரும் வேர் முண்டுகளில் ஒளிந்திருக்கும் ஆதி வெறி தனது எல்லைகளைத் தனக்குத் தானே உருவாக்கிக் கொள்ளும். இது கடவுளர்களின் நிலங்களுக்கும் பொருந்தும்.
மறு எல்லையில் கனத்து நொதித்துக் கிடக்கும் மரணக்கடல். அலைகளின்றி இரையெடுத்த கரு நாகம் போல சுருண்டு அயர்கிறது. மரணமும் கடலும் ஒன்றே தான். ஒவ்வொரு மரணமும் மிகவும் கரிப்புடனேயே நம்முள் உறைகிறது. அது நம் மரணம். நாக்குகள் இல்லாத உலகில் மரணம் மென் சுனை போல அடித் தட்டி முணங்கிக் கொண்டிருக்கும். ஆழமற்ற அதன் கரைகளில் பாசித் துணுக்குகளாய் அல்லாடுகிறது நிலமெனும் காட்சிப்பிழை. ஜெருசலேமின் மக்களின் நிலம். அது கட்டளைகளை நியமிக்கிறது. கட்டளைகள் மனிதர்களைக் களிமண் பிண்டமாய் உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன. கட்டளைகளின் பாதுகாப்பு நெடி அவர்களின் குதத்தில் நிரந்தரமாக பொதிக்கப்படுகிறது. அவர்கள் அமைதியுடனும் நிம்மதியற்றும் ஒன்றாக வாழ்கின்றனர். தத்தமது குதங்களை முகர்ந்து கொண்டு வாழ்வதின் ஊடாக அவர்கள் நிச்சயத் தன்மையெனும் பிண்டத்தை உருவாக்கி வணங்கினர்.
நகர் நடுவே வணிகச் சந்தையின் ஊடாக புனலெடுத்து வழிந்து ஊடுகிறது குருதி. ஆடுகளும் தீர்க்க தரிசிகளும் தான் பலிக்கு உகந்தவர்கள். அவர்களின் பலி இறைச்சியின் மென் சூட்டினைப் பிழிய பிழியக் கதைகளை உருவாக்கி விடலாம். கடவுளின் பாதத் தூளிகளில் நெளியும் இறைச்சித்  துணுக்குகளில் தூபங்கள் எரிகின்றன. மானுடம் நிலம் எனும் பெருங்கனவிலிருந்து தங்களது கடவுளர்களுக்கு படைக்கப்படும் ஓராயிரம் கனவுகளில் இந்த ரத்தத்தின் சிவப்பன்றி ஏதும் உகந்ததல்ல. சிவப்பினைப் படைப்பதன் வழி நாம் உருவாக்குகிறோம் ஒரு நித்தியத்துவத்தை. அழியாத ஒன்றின் மூலமாய் உருவாக்கிய சொற்களின் மந்திரம் இந்த செங்குருதியினால் கழுவப்படும் பொழுது மட்டுமே பூரணமாகிறது, நிலையற்ற வாழ்வின் பெருஞ்சுழற்சி. அதன் பின் அழுக்கு படிந்த சுமேரியா. கடையெல்லையில் வெம்மையும் பசுமையும் சூழந்த சிறு நிலம் கலீலி.

ஜோடான் நதிக்கரை. கண்ணாடிக் குழாய்கள் போல பெருக்கெடுக்கிறது நதி. ஆழமும் ஆழமின்மையும் நொதிக்கும் திரவக் குழி. கரைகளில் தழும்பிக் கொண்டிருக்கும் மணற் துகள். குவிமையமின்றி காட்சி பிளர்ந்தது. முன் பின்னற்ற காலவெளியில் துடுப்பின்றி அலைக்கழிந்தது. இங்கும் அங்குமாய் உருவாகின வெளிச்சக் கீற்றுகளும் இருளின் அடர்ந்த நிழல்களும். தவிப்புடன் ஒவ்வொரு முறை அந்த இளைஞன் மீட்க முயன்றபொழுது அவனது மூடிய இமைகளினுள்  தூண்டில் மீன்கள் போலத் துடிதுடித்தன விழிகள்.  

 The Last Temptation of Christ- Nikos Kazantzakis

செவ்வாய், 17 ஜூலை, 2018

அருகருகே

அருகருகே முளைக்கின்றன
கொலை வேல் நுனிகள்
துவர்க்கும்
அடித்தொண்டை செருமல் போல
ஒவ்வொரு முறை நினைவுகளை பொதி மூடுகிறேன்
அந்து சிந்தும் பாலித்தீன் திரவமாய்
என் விந்துத் துளி
சொட்டிய நொடியிலிருந்து
இந்த பச்சைக் காடுகளினுள் வடிந்தோடுகிறது.
பனி பொங்கிய அந்திச் சூரியனிடமிருந்து
நழுவி நழுவி
ஆழம் நுழையும்
பேரருவியின் சின்னஞ் சிறிய கையிருப்பில்
திருவிழாக் கடைகளில் தொங்க விடப்படும்
பல நிறக் குழந்தை பொம்மைகளின்
விழிகளைப் பார்த்தேன்
அருகருகே நொதிக்கின்றன
உன்னுடையதாய்
நான் உருவாக்கிக் கொண்ட
பாவனைகளின் கனத்த தோல்பை
அதனால்
வெறுமனே உறங்கிப் போகிறேன்
இரவின்
சோர்ந்து போன க்ளிசேக்களைக்
கூட்டிக் கொண்டே இருக்கும்
தொலை தூர வாகன இரைச்சலிலிருந்து
அலைக்கழிந்து
ஈரமாகிக் கொண்டே இருந்தது
சலனமற்ற நதி
அருகருகே இருக்கின்றன
நீயும் நானும்
ஜன்னலுக்கு அப்பால்
வெறித்து நிற்கும்
மதில் சுவர் போல...

செவ்வாய், 10 ஜூலை, 2018

தனித்திரு விழித்திரு பசித்திரு 3

பெண்களின் பிறப்புறுப்புகளில் ஒளிந்திருக்கின்றன நாகங்கள். முட்டைகளை காலா காலத்திற்கும் அடை காத்துக் கொண்டிருக்கும் அவை. ஆனால் நான் காண்பதோ வேறாய் இருந்தது. உயிருள்ள பாம்புகள் அவர்களை நித்தியமாய் புணர்ந்து கொண்டே இருக்கின்றனவாம். அதற்காகவே அவர்கள் நாகங்களை முழுமையாய் படம் விரிய தங்கள் மார்புகளில் பச்சைகுத்திக் கொள்கிறார்கள். படம் விரித்த அதன் நீலக் கண்கள் இரு காம்புகள் வழி மிளிரிக் கொண்டிருக்கிறது. நடுமார்பில் வழிந்தோடும் விடம் ஒழுகி பிளந்து போனது இரும்பை லிங்கத்தின் மண்டை. மண்டை ஓடு தெறித்த அகால ரூபன் சிவன். நாகங்களில் ஆதி நாகம். ஆம் அழித்தலிலிருந்தே தொடங்குகின்றன பாதாளத் திண்டுகள்.

காமம் விடைத்த பிளந்த குறி. நல்ல பாம்பு உறங்கும் அடிப் பொந்து. சோழனின் புடைத்த லிங்கதினடியிலும் அணங்குகிறது பற்கள் விழுந்த பழைய நாகம். தோலுறிந்த நிலையில் வவ்வால்கள் மொய்க்கக் கண்டேன். நாகங்கள் தங்கள் காலத்தினுள் இறப்பதில்லை. அவைகள் பூஜிக்கப்படும் தோறும் பிறந்து கொண்டே இருக்கின்றனவே தவிர இறப்பதில்லை. புற்றுக்கள் வளர்ந்த இருள் முக்கில் சொற்கள் தனக்குள் உசாவிக் கொண்டே வரலாற்றைப் பிதுக்கிக் கொண்டிருக்கிறது. நேற்றைய கனவின் மொழியில் படிந்த விந்துத் துளியின் காய்ந்த படிமத்தைத் தேடி அலைக்கழிகிறது காமம் எனும் நல்ல பாம்பு.

அணங்குகள் உண்மையில் பாம்புகள் தானா. உன்னைப் பீடிக்க பீடிக்க உனக்குள் கிளம்புமே ஒரு வெறிக் கவர்ச்சி. அது பாம்பைத் தவிர எதில் கண்டாய். பெண் பாம்பல்லாது வேறேன்ன. குருதி சொட்டக் காத்திருக்கிறது கரு முட்டைகள். பலிகளின் அடியினுள் புதைந்து கிடக்கிறது எதிர்காலம். ஏன் இப்பொழுது காலத்தை இழுக்கிறாய். இல்லை. பலிகளுக்கடியில் காத்திருக்கின்றன வன்மத்தின் தீர்க்கமான கூர் நுனி. அவன் முதுகில் வரையப்பட்ட பாம்பின் வால் குதத்தின் வழி வெளி நெளிகிறது. கனவுகளின் சிதல் புற்றிலிருந்து நெடிதுயர்கிறது மொழி. காலமும் கரு நாகமாய் உருமாறிச் சீறுகிறது. அட்டை போலத் தான் கனவுகளும்.

குருதி ருசி ரெட்டை நாக்கிலிருந்து வழிந்தோடுகிறது. கருவறைக்குள் வீற்றிருக்கிறது ஆவுடை. நல்லபாம்புகள் காலத்தைப் புணர்ந்து கருவுறுகின்றன அணங்குகளை.

ரமேஷ் பிரேதனின் நல்லபாம்பு: நீல அணங்கின் கதை பற்றி.

தனித்திரு விழித்திரு பசித்திரு 2

உனக்கு தகுதியிருப்பின் நீ கடவுளை உருவாக்கியிருக்க மாடடாய். மாறாய் கடவுள்கள் வழி வந்த பாதையினைப் பற்றி புத்தகம் எழுதியிருப்பாய். அப்பொழுது கணவாய்கள் எழுப்பப்பட்டுக் கொண்டிருந்தன. நீலம் படிந்த கடவுள்கள் அனைத்து இணைப்புகளின் வழியாகவும் ஒரு வழியாய் வந்து சேர்ந்த பொழுது நாகங்களின் முடடைத் தோடுகளைக் கொண்டு கதைகளை உருவாக்கினர். அக்கதைகளில் இந்த வெள்ளை நிற உருண்டைகளிலிருந்து காமம் உருவாகியது என்றனர். ஆம் அனைத்து ஜீவ ராசிகளும் உருவாகிய வாய் அது. முதன் முதல் தோன்றிய ஆதி விதை.

உயிர்கள் தோன்றும் முன்னேயே பாதாளம் இருந்தது. பாம்புகளும் இருந்தன. அவை மண்ணின் வேர் முடிச்சுகளாய் துளிர்த்தன. பின் விழுதுகளாய் தாங்கின. புற்களாய் பாசிகளாய் கிழங்குகளாய் புழுக்களாய் மீன்களாய் பாம்புகளாய் இன்னும் இன்னும் என வழி எங்கும் படர்ந்து பொங்கிப் பெருகித் துளிர்த்தன. அப்பொழுது தான் நான் கேட்டேன். பாம்புகளுமா? ஆம் அவைகளும் தான். அனைத்தும் உருவாகின முடடையில் இருந்து. முடடைக்கு முன் என்ன என்று எண்ணிய படிக் கடவுளர்கள் திகைத்தனர். பூமி ஒரு மாபெரும் முடடை. பால் வெளியெங்கும் நெளிந்து ஊறுகின்றன பல்லாயிரம் நாகங்கள். கரிய வெளியில் நிரம்ப நிரம்ப அடை காக்கப்படுகின்றன. அதனால் உருமாறிக் கொண்டே இருக்கின்றன. சொற்கள் மெல்ல அசை போடும் தாவர உண்ணி போல ஓரிடத்திலேயே சுழன்று கொண்டிருந்தது.

மழையும் வெயிலும் தனக்குத் தானே உருவாக்கிக் கொண்ட ஒரு ஏற்பாடு. இருள் பகல் என உருண்டோடிக்கொண்டே இருக்கும் பொழுது, ஆம் ஏன் இவைகள் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. தன்னைத் தானாகவும் பிரபஞ்சம் முழுமைக்குமாய். பாம்புகள் ஓரிடத்தில் நிரந்தரமாய் தங்கி விடுவதில்லை. கடல் அலைகள் போலத் தான் அதன் இருப்பும். இருப்பு கொள்ளாத இருப்பு. தாய் மிருகத்தின் அடிவயிற்றைப் போல அமர்த்திய சூடுள்ள இடத்தில் தான் அவைகள் தங்கியிருக்கின்றன. அண்டம் முழுமையும் குளிர் மட்டுமே உறைவதில்லை. ஆனால் பாம்புகள் திசையற்றவை. நெளிந்தூறும் அனைத்தும் திசையற்று வியாபிக்கின்றன. திசைகளில்லாதவைகள் காலமும் அற்றதாய் ஆகி விடுகிறது. நிதானமாய் நோக்குகையில் அவ்வாறில்லை. காலம் உண்டு. ஆனால் அளவீடுகள் அற்றதாய் ஆகி விடும் போல. என் கனவுகளின் சொற் கூட்டில் கட்டு வீரியன்கள் மொலுமொலுக்கின்றன. இப்பொழுது அதே சொற்கள் ஊண் உண்ணியைப் போல மெல்ல உற்று நோக்குகின்றன.

எண்ண எண்ணத் தொலைந்து கொண்டிருந்தது சொற்களின் கால் பட்ட சுவடுகள். தவிப்புடன் அமர்ந்திருக்கிறேன். நாகர்களின் குளம் சவலைப் பிள்ளையைப் போலக் கிடந்தது. அடி மண்டிய தொழியில் எஞ்சிக் கிடந்தன எலும்புத் துண்டங்கள். பிணக்குளத்தில் மிஞ்சிய எலும்புத் துண்டங்களும் உறிந்த தோல்களுமாய். பாசியற்ற நீலக்குளம் போலவே நல்ல பாம்பின் கதைகளும் உள்ளீடற்றதாய் உருமாறிக் கொண்டே இருந்தது.

ரமேஷ் பிரேதனின் நல்லபாம்பு: நீல அணங்கின் கதை பற்றி


தனித்திரு விழித்திரு பசித்திரு 1


முலையை  தெய்வமாய் வணங்கும் கோவில் கண்டேன்.  அங்கு என் கனவினுள் இருக்கும் சொற்களின் கூட்டு உருவாக்கிய கோபுர நுனிகளில் இருந்து குமிழ்ந்து பெய்கிறது பால் மழை. கழுத்தில் கால்களில் இடையில் தோள்களில் மார்பில் முலைகளில் குறுக்கில் நெளிந்து கொண்டிருக்கின்றன நாகங்கள். கடவுளர்கள் நாகங்களின்றி வெளிர்ந்து போய்விடுகின்றனர். ஆம் காலம் அறியும். அதுவே அழிக்கும். அரவுகளின் உலகம் பாதாளம். நாகங்களிலானது புடவி. பயமும்  கவரச்சியும் ஒரு சேர என் இடைக் கீழ் துயிலும் கரு நாகக் கண்களைக் காண்கிறேன். முலைக்கண்களின் நடுவே இருந்து விடம் ஊருகிறது.

மார் பியத்தெறிந்த நொடி மதுரை எரிந்தது. விடைத்த குறியை பிய்த்து எறிந்ததும் அவை நாகங்களாய் உருமாறின.விண்ணை நோக்கி படம் விரித்து ஆடின. விஷ நாக்குகளால் அனல் கக்கி எரித்தன. மதுரை அழிந்தது. கண்ணகன் பெரும் லிங்க ரூபனாய் ஆவாகனம் செய்யப்படடான் நகர் நடுவில். அவன் கழுத்தை சுற்றிப் படர்ந்தன நாகங்கள். தெய்வங்கள் உருவாகின்ற பொழுதெல்லாம் நாகங்கள் காத்திருக்கின்றன. அவைகளும் கடவுளாக்கப்படும் பொழுது மகுடி வாசிக்கத் தொடங்குகிறது. பின் வரும் வரலாற்றில் பெண்களும் பாம்புகளும் ஒன்றுதான் என்றும். அவைகளின் விஷப்பற்களுக்கு பதில் முலைகள் படைக்கப்படடன என்றும் சொல்லிக் கலைந்தன என் கனவின் மொழி.

தவறி விழுந்து கொண்டிருக்கிறேன் வெகு ஆழத்தில். பெண்களின் ஓரினச்சேர்க்கையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இது இது. இரு வேறு உடல்களின் புழைகள் அதக்க அதக்க பீறிடும் முணங்கல். சீறிச்செல்லும் வெம்மை. தாயாகவும் மகளாகவும் ஒரு சேர முளைக்கின்றன கதைகள். பின் அவளைக் காணும் போதெல்லாம் அறிகிறேன். மஞ்சள் கயிறுகளால் இறுக்கப்பட்ட நாகச் சிற்பங்களை. நாக ராஜா கோவிலின் மூலச்சிலை இருக்கும் குடிசைக்கு புறத்தே இருக்கிறது அந்த கரு நீலக் குளம். நடுவே பீடத்தில் ஐந்து தலையும் ஒருடலுமாய் அவள். ஒவ்வொர் தலையிலும் ஒவ்வோர் பாவம். ரெட்டை நாக்குகள் சூழச் சுற்றிலும் பரவுகிறது நீலம். பின்னொரு நாளில் கதைகளுக்கு மத்தியில் சுருண்டு கிடந்த நல்லபாம்பு கணக்கின்றி முட்டைகள் இடத் தொடங்கியது.

ரமேஷ் பிரேதனின் நல்லபாம்பு: நீல அணங்கின் கதை பற்றி.
https://rameshpredan.blogspot.com/2018/01/nallabambutale-of-blue-goddess-novel.html?m=1

சனி, 7 ஜூலை, 2018

தனித்திரு விழித்திரு பசித்திரு


மஞ்சள் உறைய உறைய கருங்கல் மேனி மெல்ல நெளியத் தொடங்கியது. அதன் உலகம் வேறு. அங்கு காலம் வெற்றுப் பாலித்தீன் பை போல உருமாறிக் கொண்டிருந்தது. காலமற்ற வெளி திரவக்குமிழ்களாய் உடைந்து கரைந்து அலை படிந்து கரை தொட்டு ததும்பி சுழன்று கொண்டே இருந்தது. நெளிய நெளியப் பின்ன பின்ன உடல்கள் ஜடத் தன்மையை இழக்க ஒரு பக்கம், அதுவே சுழன்று ஸ்தூல உருவமாகிக் கொண்டிருந்தது.

லிங்க ரூபமெடுக்கும் என் குறியைப் பிளந்து வெளி நுழைகிறது பாம்பு வால். இரு உடல்கள். இரு இருப்பு. இரு புள்ளிகள். இரு வழிகள். இரட்டை இரட்டை. புணர விடைத்த இரு குறிகளா? ஊறி நிற்கும் பிளந்த நாக்குகளின் விடம் உருவும் நொடித் தீண்டல். ஆலகாலம் முளைக்கும் அதல பாதாளப் புற்று. புற்றினுள் ஒளிந்து கொள்ளும் சர்ப்பம். ஒற்றைக் கரு நாகம். பாதையெங்கும் உரித்தெடுத்த தோல்கள். உரியாத மினுக்கம் உறைந்த கருங்கல் சிலை.

இரட்டைப் பாம்புகள் பிணைந்து பிளந்த லிங்க ரூபம். மண்டை பிளந்த அருவ உருவம். இரும்பைக் கோவில். பாசி தெறித்த குளக்கரை. பிணம் உயிர் வாழும் நீர்மை. கரு நீலம் துய்க்கும் விடம். காலம் அளந்து கிடக்கும் இரட்டைப் பாம்புகள். ஒன்றை ஒன்று கவ்வ முனைய பிய்த்தெறியப்பட்ட அழுகிய ஆண் குறிகள். சூம்பிய விதைப்பைகளுடன் கோயில் கருவறையில் வீற்றிருக்கிறது ராஜ ராஜனின் பெரும் நாகம். பிய்த்துப் புணர தன் ஆழ் பாதாளங்களின் இருள் வெம்மையை உவர்த்தும் நீலம். நீலம், ஆலகாலம். விஷம் விஷம் விஷம். நீலம், வெம்மை வெறி சாபம் மொய்க்கும் இருள். நீலம், காலம் ஒளி பாதாளம் படரும் நிழல். நீலம் நீங்கா இருண்மையின் ஒற்றைக் குமிழ். நீலம் பெண்மை காமம் பிறப்பு இறப்பு. நீலம் நீலம் நீலம். நீ...நீ...நீ.

நீலம் போதம் குலைந்த திரவ ஒளி. நீலம் இறுக்கிப் பிணைந்த ஒற்றைக் குறி. நீலம் கவ்விக் குதறும் குருதி உடல். நீலம் அவள். அவள் நாகம். நாகம் உறைந்த புற்று. புற்றில் உறைந்த பெரும் லிங்கம். லிங்கம் முழுகிய அணையா நெருப்பு.நெருப்பு படரும் நீல வெளி. நீலமெங்கும் அவள் பிய்த்தெரிந்த ஒற்றை முலை. முலையிலிருந்து பெருகி ஊடும் வற்றாப் பகை. பிணைந்து முறுக்கிய இரட்டைப் பாம்புகள். இடையிலிருந்து முட்டித் தெறிக்கும் சிவ ரூபம். சிவ ரூபம் மழுங்கிக் கிடக்கும் காலம் தொலைத்த பொந்துகள். ஆழம் விழுங்கிய இருள் குழிகளிலிருந்து முளைதெழுகின்றன நல்ல பாம்பின் கதைகள்.

நல்லபாம்பு: நீல அணங்கின் கதை - ரமேஷ் பிரேதன் பற்றி