ஞாயிறு, 20 நவம்பர், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -76

   


    யூதாஸ், ஜீசஸைப் பிடித்திழுத்துக் கொண்டு முன்னே சென்றான். "கேட்கிறதா? பார்! பார்! அவர் தான். அவர்தான் மெசியா! மெசியாவால் மட்டும் தான் அப்படி பேச முடியும்!"

    "இல்லை! யூதாஸ்! என் நண்பா! அவர் மெசியாவின் வருகைக்கானப் பாதைக்கு வழி செய்பவர். அவர் கோடாரியைக் கொண்டு அதைத்தான் பண்படுத்திகிறார். அதற்காகத் தான் அவர் ஆவேசத்துடன் பிரசங்கிக்கிறார். அவர் மெசியாவாக இருக்க வாய்ப்பில்லை!" ஜீசஸ் மெதுவாகக் குனிந்து செற்றையாகக் கிடக்கும் நிலத்தில், உயரமுனையும் ஒரு ஒற்றைப் புல்லின் நுனியைக் கிள்ளி வாயிலிட்டு மென்னிக் கொண்டே நகர்ந்தான்.

    "எவனொருவன் நம் தளைகளிலிருந்து விடுவிப்பதற்கான வழியைத் திறக்கிறானோ, அவனே மெசியா!" செந்தாடிக்காரன் கோபத்துடன் கூறினான்.  ஜீசஸைப் பின்னாலிருந்துப் பிடித்து முன்னே போகுமாறு உந்தித் தள்ளினான். ஜீசஸ் நிலைதடுமாறி நாணலின் கூர் நுனிகளை மிதித்துக் கொண்டு, விழுந்து விடாமல்  இருபுறமும் கைகளால் விலக்கிக் கொண்டே சென்றான்.

    "செல்! முன்னே செல்! உன்னை அவர் பார்க்கட்டும், நீ யார் என்பதை அவர் எங்களுக்குத் தெரிவிக்கட்டும்!" யூதாஸ் தன் காய்த்துப் போனக் கைகளால் ஜீசஸின் முதுகைப் பற்றிக் கொண்டு, இருபுறமும் உயர்ந்து நிற்கும், முட்கிளைகளையும், தாவரங்களையும் அழுத்தி மிதித்துக் கொண்டே ஓட்டமும் நடையுமாக விரைந்தான்.

    சட்டென வெட்டவெளியை அடைந்த ஜீசஸ், கூசும் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தான். கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தது. சூரிய வெளிச்சம், பழுத்து நிலத்தில் சாரம் சாரமாக ஒழுகியது. சரியாக அடி எடுத்து வைக்க  இயலாது தள்ளாடிக் கொண்டே நிமிர்ந்து முன்னே நிற்க முயன்றான்.  சற்றுத் தொலைவில், நதியில் அவனுக்கு முதுகு காட்டிக் கொண்டு ஒரு மனிதன், மந்திரங்கள் ஜபிக்க நின்று கொண்டிருந்தான். சுற்றியிருக்கும் அனைத்தும் மறைந்து, அம்மனிதனும் ஜீசஸும் தவிர மண்ணில் ஒன்றுமே இல்லாமல் ஆகியது. அவனது உடல் விதிர்விதிர்த்தது. கனவிலும் நனவிலுமாகக் கண்ட உருவம். மயிர்க்கால்கள் முளைத்துக் கொள்ள, அவர்தான்! அவர்தான்! என விம்மியது. அவனது ஆன்மா, இரு துடிக்கும் சிறகுகளாக அவரை நோக்கிப் பறந்து சென்றது. நீருக்கடியில், அவரது ஆகிருதி ஆழமாகப் பதித்து நிற்கும் பாதங்களைத் தொட்டு, நாணல் போலவே வளைந்து நெகிழும் கால்களை வருடியது. பின் அவர் உடல் முழுதும் ஸ்பரிசித்து, நெருப்புமிழும் தலையில் அமிழ்ந்துத் தானும்  இரு தீச்சிறகுகளாக எரிந்து கொண்டே வானம்  நோக்கி உயர்ந்தது. அவர் திரும்பி நோக்கினார். இன்னதென்று விளக்க முடியாத ஆட்படலில் தன் உடல் கவரப்படுவதை உள்ளும் புறமும் உணர முடிந்தது. சற்றேத் தன்னை உலுக்கும் பொழுது, அந்த இறுக்கம் இன்னும் இறுகுவதை, அதன் பார்வை நுனிகளின் கூர் முனைகள், பல நூறுப் புள்ளிகளாக அவரது உடல் முழுவதும் குத்தி அதிர்வதை,  ஏற்பதைத் தவிர  அவருக்கு வேறு வழி இருக்கவில்லை. தலையை இடமும் வலமும் அசைத்துக் கொண்டு, பொருளின்றிக் கத்தினார். ஒரு வெண்கல உலோகம், அதிர்வதைப் போல அக்குரலின் ஆன்மா உராய்ந்துப் பரவியது. இன்னும் முழுமையாகத் திறவாதக் கண்களுடன் ஒளி கூசும் வெளியை ஆத்திரத்துடன் நோட்டமிட்டார். "இவன்,யார்? யார்! அசைவற்று  என் முன்னே அமைதியாக நிற்கிறானே! இந்த இளைஞன் யார்?, ஏன் என்னை இப்படிப் பார்க்கிறான். வெண்ணுடை தரித்து நிற்கும், இந்த மெலிந்த உருவினை நாம் இதற்கு முன் எங்காவது பார்த்திருக்கோமோ? என்னால் யூகிக்க முடியவில்லையே! ஆனால் நான் இவனை அறிகிறேன். எங்கு? காலமற்று அலையடித்துக் கொண்டிருக்கும் இவனது நீல விழிகள் எனக்கு மிகவும் பரிட்சயப்பட்டதா? தெரியவில்லை! ஆனால் இவன்! இவன்! என் உடலும், உள்ளமும் இவனை அறிந்திருக்கிறது. எங்கே! எப்பொழுது? எனக்குத் தெரியவில்லை. இல்லை! இவனை நான் என் சொப்பனத்தின் நிழல் வெளியில் ஒரு அமானுட வெளிச்சமாகக் கண்டேனா? நிச்சயம் ஒரு உடலாக அல்ல! ஒரு இருப்பாக, இன்னும் ஒரு ஓளியாக, வெளிச்சத்துகளாக! நெடியாக! சொல்லாக! ஆதியிலிருந்தே என் காத்திருப்புகளின், இதோ! இந்தத் திரவவெளியின் நித்திய இருப்பினுள் அமிழ்ந்திருக்கும், அழியாப் பொருண்மையாக!"

    விளக்கவே முடியாத ஒன்றினைப் பற்றி, பலப் பல வழிகளில் திரட்டிக் கொள்ள முயன்றுத் தோற்றார். அவரது சொப்பனத்தின் கடலில், அலையடித்து மீண்டது. அது ஒரு வெண்ணிறம் மட்டுமேயாக உள்ளும் புறமுமாய் ஜொலிப்பதை நினைவு கூர்ந்தார். ஆனால் அப்பொழுது அந்த ஒளிப்பெருக்கினைக் குடித்துக் கொண்டு அமைதியாக மட்டுமே அவரால் நிற்க முடிந்தது. அதனருகில் செல்லும் பொழுதெல்லாம், அவரால் புரிந்து கொள்ள முடியாத இறுக்கம் பின் தளர்வு என, தனக்குள் ஏந்திக் கொள்ள முடியாத ஒரு பேருவகையையும், அதே நேரம் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயலும் எதிர்ப்பையும்தான் அவரால் செய்ய முடிந்தது. சரியாக அவர் அந்த உலுக்கிக் கொண்டு எழும்பும் பொழுது, அவ்வொளியின் மாயக்கரங்கள் மெல்லப் புகையாய் உயரத்தொடங்கும்.

    அவரால் தன் பார்வையை ஜீசஸை விட்டு விலக்க முடியவில்லை. அடக்க முடியாமல் கண்ணீர் பெருகியது. அவரால் அச்சொல்லை நினைவு கூற முடிந்தது. "அது நம் மூதாதை, தீர்க்கதரிசி எசாயாவின் சொல், ஆட்டுத் தோலில் பதிக்கப்பட்டிருந்த அந்த எழுத்துக்கள், பரல் மீன்கள் துள்ளுவதைப் போல, சொற்களின் பொருள்களின், காட்சிப்புலத்தை சிதறடித்தது. "ஆம்! ஒரு நாள்! இந்த மலைகள், பாறைகள், நிலம், மனிதர்கள், இந்த முட்புதர்கள், தாவரங்கள், நாணல் வெளிகள் என அனைத்தும் மறைந்தழியும். தீப்பிளர்க்கும் காற்று, பறையொலிக்கும், சிறகடிக்கும், வானம் ஒரு மாபெரும் பறவையாகி உயரும். அது கேவக் கேவ நிலம் பிளறும். நம் மூதாதையின் தீர்க்கம் பொருந்திய சொற்கள் திறக்கும், நான் காண்கிறேன். என் மெசியாவின் வருகையை! இதோ என் முன்னால் நிற்கும் இந்த மெலிந்த இளைஞனைப் போலவே வெண்ணுடை தரித்து, இப்பாலை நிலத்தில், வெற்றுக் கால்களுடன், இவனைப் போலவே பச்சைப் புல்லை வாயினில் அதக்கிக் கொண்டு அமைதியாக நிற்கும் என் மெசியாவை! ஆம்! ஆம்! இவன் தான்! இவன் தான்! உணர்வெழுச்சி பொங்க அவர் கத்தினார்.

    ஒரு சேரப் பயத்திலும், சந்தோசத்திலும் அவரது சுருக்கங்கள் அடர்ந்த முகம் மேலும் சுருங்கி விரிந்தது. இமையடைக்காது ஒருவித மயக்கத்துடன் தான் இன்னும் அந்த இளைஞனைக் கண்டு கொண்டிருந்தார். அவரால் நம்பமுடியவில்லை. ஆனால் அவரது காத்திருப்பின் அர்த்தப்பாடுகள் நிறைவடையும் என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். கால்கள் பரபரத்தன. கால்கள் பதித்திருந்த பாறையிலிருந்து வழுக்கி நதியில் குப்புற விழுந்து எழுந்தார். உடலின் அதிர்வுகள் இன்னும் அடங்கியிருக்கவில்லை.

"யார் நீ? சொல்! யார் நீ?" எதிர்பார்ப்பின் குரல் வறண்டிருந்தது.

    "உங்களுக்குத் தெரியவில்லையா?" ஜீசஸ் கேட்டான். பின் மெல்ல அவரை நோக்கி வந்தான். உண்மையில் அவனது விதி, அவர் சொல்லும் பதிலில் தான் இருக்கிறது என்பதை அவன் முழுமையாக உணர்ந்திருந்தான்.

    "அவன் தான்! ஆம்! அவன் தான்!" அவர் தனக்குள் குமுறினார். அவரது இருதயம் ஒரு தந்திக்கருவியைப் போல அதிர்ந்து கொண்டிருந்தது. இல்லை! இல்லை!" தெளிவாக அவருக்கு இன்னும் முடிவெடுக்கும் தைரியம் வரவில்லை. திரும்ப அவர் அவனை நோக்கிக் கத்தினார். "சொல்! நீ யார்?"

    "நீங்கள் நம் மூதாதைகள் அறிவித்த தீர்க்கதரிசனத்தை அறிந்தவர்தானே?" ஜீசஸ் சற்றுத் தயக்கத்துடன், ஆனால் தைரியத்தை வருவித்துக் கொண்டு விசனமாகக் கேட்டான். "சொல்லுங்கள்! ஞானவானே! நம் தீர்க்கதரிசி எசியாவின் அறிவிப்பு என்ன? உங்களுக்கு ஞாபகம் இல்லையா? சொல்லுங்கள்! நீங்களே முன்னோடி! நீங்களே அதை அறிவீர்!"

    "அது நீதானா?" முனகிக் கொண்டே அந்தத் துறவி ஜீசசை முறைத்துப் பார்த்தார். அவனது தோள்களைப் பற்றினார். கைகளை அழுத்தினார். அவரால் இன்னும் நம்பமுடியவில்லை. அவனை முழுமையாகப் பார்த்துத் திரும்பத் திரும்ப சோதனை செய்தார்.

    "நான் வந்து விட்டேன்..." ஜீசஸின் குரல் நடுங்கியது. மூச்சிரைக்கத் தன்னை அமைதிப்படுத்த முயன்றான். கைகளை இறுக்கிப் பிடித்திருந்தான். அவனது உடல்மொழி, தண்டனைக்குத் தன்னை உட்படுத்துவதைப் போலக் குன்றியிருந்தது. அடுத்த காலடி எடுத்து வைத்தால் விழுந்து விடுவோமோ என்ற பயத்தில், தனது வலது கை விரல்களால் நெற்றியை அழுத்தியிருந்தான்.

    அந்தக் காட்டுமிராண்டித் துறவி, அவனை மேலிருந்து கீழ் வரை அளந்தார். அவரால் இன்னுமே நம்பமுடியவில்லை. ஜீசஸின் உதடுகளிலிருந்து எழுந்த சொல்லின் வீரியம், ஒரு மலைப் பாம்பைப் போல அவரது அகத்தின் உடலைக் கட்டி இறுக்கியிருந்தது. நெறிபட நெறிபட அவர ஆனந்தத்தில் திளைத்தார்.

    "ஆமாம்! நான் வந்துவிட்டேன்...!" மேரியின் மகன் திரும்பவும் கூறினான். அது சற்றுத் தொலைவில் தன் செவிகளை கூர்ந்து நின்றிருந்த யூதாசுக்குக் கூட சரிவரக் கேட்கவில்லை. அவ்வளவு மென்மையுடன் ஜீசஸின் குரல் ஞானவான் ஜானினைத் தழுவியது. இந்த முறை அவர் ஜீசஸை அறிந்து கொண்டார்.

    "என்ன?" அவர் தலையை உதறினர். கற்றையான சடை முடிக்கற்றைகள் குறுமணிகள் போல அங்கும் இங்கும் குலுங்கின.

    ஒரு ஒற்றைக்காகம், அழுவது போலக் கரைந்து கொண்டு தலைக்கு மேலே நகர்ந்தது. அது நீரில் அமிழ்த்தி ஒரு உயிரைச் சாகடிக்கும் பொழுது முனகும் இரைச்சலைப் போலிருந்தது. அதன் விளி, ஜானைச் சலனப்படுத்தியது. அவர் காலுக்குக் கீழே இருந்தக் கல்லை எடுத்து வானத்தை நோக்கித் திட்டமின்றி வீசினார். பறவை பறந்த பின்னும் வானம் விலகுவதில்லை.  மேகங்கள் வானின் ஒளியைப் பிரதிபலித்து  மயங்கியது. அதனுள்ளிருந்து வெளிச்சக்கீற்றுக்கள் நீள்பட்டைகளாய் நீலம் நிரப்பி வெளியேறியது. வானம் நம் கைக்கு அடங்காமையினால் அதன் திண்மையை இழந்து புகை மூட்டமாய், வெளிச்சத்தைச் சீழ் போலத் துப்பியது. ஞானவானான ஜான், தன்னை ஆற்றுப்படுத்த முனைந்தார். எதிர்பார்ப்புகள் உரப்பாகியதும், ஏதோ இழந்ததைப் போலவும் அதே நேரம் காத்திருப்புக்களின் காலமின்மையும் திடத்தன்மைக் கரைந்து திரவ மினுக்கத்துடன் தன் முன்னே வெளிச்சம் பொங்க ஒளிர்வதையும் கண்டார். ஒருவகையில் சுழிகள் அடங்கி, சலனமற்று உள்ளேத் திரும்பிக் கொள்ளும் நீர்மையின் அனிச்சக் கைகளைப் பற்றிக் கொண்டார். அது அமைதியையும் சலனத்தையும் அவரைச் சுற்றி நிரப்பியது.

    "வா!" அவர் அவனை சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டேக் கூறினார். எந்த சினேக பாவமுமில்லை.

    ஜீசஸால் உண்மையில் நம்பமுடியவில்லை. அவன் பயந்தான். ஆனால் பரவசமும். தீர்க்கதரிசியின் அழைப்பு தனக்கானது தானா என்பதைப் பலமுறை  ஊர்ஜிதப்படுத்திக் கொண்டான். ஜீசஸ் அதனைத் தனக்குத் தான், என ஏற்றுக்கொண்ட பொழுது,  அவனைச் சூழ்ந்திருந்த சிதல்கள் பொடிந்துதிர்ந்தது. அது போல, இனி தான் என்பதன் அர்த்தப்பாடுகளும், கலக்கங்களும், குழப்பங்களும், அதிகப்படியான  அதன் பொறுப்புகளும் அவனை உண்மையில் கலக்கியது. ஆனால் அதனை ஏற்பதன் வசீகரம் தான் அவனை இன்னும் உயிர்ப்புள்ளவனாகவும், தன் சொந்த மீட்சியின் பலன் எனவும் உள்ளூற உணரவும் வைத்தது.

    ஞானவான், ஜீசஸை உற்று நோக்கினார். பின் அவரது பார்வை தான் ஏற்றிருந்த, நிலத்தைச் சுற்றிச் சுழன்றது. ஜோர்டான் நதியின் நிச்சலனம் அவருள், புழையாய் ஒழுகியது. முன்னே சுழியிட்டு முனகலாய் நகரும் நதியிடம் ஒப்படைப்பதை போல, தத்தமது பாவங்களை மண்டியிட்டு ஒப்புவிக்கும் மானுடர்களைக் கண்டார். சுருங்கியக் கண்களைத் துடைத்துக் கொண்டு கீழே மண்டியிட்டு அமர்ந்தார். கைகளில் மண் பொத்தைச் சாம்பலை எடுத்துத் தன் நெஞ்சில் அழுத்தித் தேய்த்தார். அது அவரின் விடைபெறல் போல இருந்தது. "ம்ம்! இப்பொழுது நான் புறப்படலாம் இல்லையா!" அவர் ஜீசஸைப் பார்த்து வினவினார்.

    "இன்னும் இல்லை, மூத்தவரே!, முதலில் நீங்கள் எனக்கு ஞான முழுக்கு அளிக்க வேண்டும். ஜீசஸ் தீர்க்கமாகவும், உறுதியுடனும் பதிலளித்தான்.

" நானா? நீர் தான் எமக்கு ஞானமுழுக்கிட வேண்டும்...தேவனே!"

    "சத்தமாகப் பேசாதீர்கள். அவர்கள் நாம் பேசுவதைக் கேட்கப் போகிறார்கள். என்னுடைய நேரம் இன்னும் வரவில்லை. அதனால் நான் சொல்வதைப் புரிந்து கொள்ளுங்கள். "ம்ம்! நடக்கட்டும்!"

    என்ன முயன்றும் யூதாசால் அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று அறிய முடியவில்லை. அவனால் ஒரு முணுமுணுப்பை மட்டும் தான் கேட்க முடிந்தது. நதியின் இரு வெவ்வேறு அலைகள் மோதித் தன்னைத் தானே விழுங்கிக் கொள்ளும் ஓசை. திரும்பத் திரும்பத் தீராத அதன் ஓட்டங்கள், உட்கொள்வதும், வெளியேறுவதுமாய்க் குமிழியிடும் முயக்க நடுக்கமன்றி வேறெதையும் அவனால் உணர அது வாய்ப்பளிக்கவில்லை.

    கரையில் மண்டியிட்டுப் பிரார்த்திக்கும் மனிதக் கூட்டம் அவர்கள் வந்ததும் மெல்ல விலகி வழி விட்டது. ஒளியையே உடலாக வரித்துக் கொண்டுத் தங்களைக் கடக்கும் இந்த யாத்ரீகன் யாராக இருக்கும். இத்தனை நிமிர்வுடனும், நம்பிக்கையுடனும் முன்னே செல்லும் இந்த மானுடனிடம் பாவங்களே அண்டாது போல! அவனது மிளிர்வே அவன் உறுதியையும், திடத்தையும் தெரிவிக்கிறது, என அவர்கள் வியப்பிலும், குழப்பத்திலும் ஆழ்ந்தனர். ஞானவானான ஜான் முன்னே செல்ல, இளைஞன் பின் தொடர்ந்தான். அடர்த்தியான மூட்டமாய் நீலம் கனக்கும் நதியின் உள்ளே உந்திக் கொண்டு செல்லும் அவர்களைச் சுற்றி சுழிப்புடன் நதி வழியைத் துலக்கியது. நடுமையத்தில் காலமற்றுக் கிடக்கும் குமிழ் போன்றப் பாறைப் பரப்பிற்கு மேலே ஜான் மெல்ல உக்கி ஏறிக் கொண்டார். அருகில் ஜீசஸ், தன் பாதங்கள் நதியின் அடிமண்ணில் நன்குப் பதிய நின்று கொண்டு சுற்றிலும் முகிழ்க்கும் திரவ வெளிக்கு முகம் காட்டி அமைதியாகப் பார்த்தான். ஓடும் நீர், பாறைப் பரப்பில் பட்டுத் தெறித்தது. அதன் குளிர்மையின் ஸ்பரிசம், இளைஞனின் மார்பிலும், தோளிலும், கன்னங்களிலும் தொட்டு மீண்டது.

    சரியாக அத்தருணத்தில் ஜான் கைகளில் நீரள்ளி ஜீசஸின் தலையில் முழுக்கிட்டார். தன்னிலை இழந்த ஆட்படலுடன், தன் மூதாதைகளின் ஆசிர்வதிக்கப்பட்டச் சொற்களின் மந்திரலயம் அவரது நாவில் அனிச்சையாக உறைந்திருந்தது. கரையில் நின்று கொண்டிருந்த மானுடர் குழாம் மொத்தமும் ஒருசேர அழத் தொடங்கின. நதியின் உயிர்த்தன்மைக் கூடிக் கூடி, அதன் நிச்சலனத்தின் நீள்வட்டங்கள் மெல்ல மெல்ல அமர்ந்து, நதி முற்றிலுமான மோனத்தில் ஆழ்ந்தது. பல வண்ண மீன்கள் அங்கும் இங்குமாக அவர்களைச் சுற்றிக் குதூகலித்துக் குதித்தன. செவுள்களை அசைத்தும், துடுப்புகளால் நீர் வெளியைக் கலக்கியும், அது அவைகள், அறியாத ஒன்றின் ஆட்படலில் பீடிக்கப்பட்டது போன்றப் பரவசத்துடனும், மூர்க்கத்துடனும் நடனமிடுவது போல இருந்தது. அவனைச் சுற்றிய அனைத்தும் உயிர் பெற்றிருந்தது. புத்தம் புதிய உயிர்மையின் இருப்பு துடிப்பே உடலாகப் பறந்தது. நதி வானாகியது. பாறைத்துண்டங்கள் மேகங்களாகின. துடிப்புகளெல்லாம் விண்மீன்களாகியது. சூரிய சந்திரர்கள் இருபெரிய ஒளிர் விண்மீன்களாய் துடுப்புகள் அடித்து அவனைச் சுற்றிக் குழுமி வட்டமிட்டது. தலைக்கு மேலும் கீழும் சன்னதம் பீறிட்டது. அவன் இதுவரை அறிந்தே இராத துடிப்புகளின் சங்கீதத்தைக் கேட்டான். திகைப்புடன் தன் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் கொண்டாட்டத்தை, பயம் கலந்த கவர்ச்சியுடன் கண்டு கொண்டிருந்தான்.

    கூட்டத்தால் நிகழ்வதன் அதிசயத்திலிருந்துத் தங்களை மீட்க இயலவில்லை. அவர்கள் சொற்களற்றுத் தங்கள் முன் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒளித்தூண்டுதல்களை, அதன் நடனத்தை, சீற்றத்தை,  அதன் கணக்கில்லா சன்னத ரூபங்களை வெறுமே கண்ணடைக்காது காண மட்டுமே முடிந்தது. பலர் அதன் விம்மலின் அனலைத் தாள இயலாது மண்ணில் தலை புதைந்துக் கண்களைப் பொத்திக் கொண்டனர். சிலர் தாங்கள் இதுவரை இருந்தத் திண்மம் குலைந்து, ஒரு புகை வெளியாய் உருமாறியதைப் போல, உடலதிர அங்கும் இங்கும் குதித்தும், தரையில் அறைந்தும், பொருளற்ற விளிகளால், கூச்சலிட்டும், வெறிகொள்ளக் கத்தினர். ஒரு முதியவர், தன்னைப் பிடித்துக் கொள்ள முடியாமல் அதிர்ந்து கொண்டே மண்ணில் முகம்பட விழுந்து எழுந்தார். கலனில் கொதிக்கும், கொப்புளங்களின் துளிகள் வெளியே தெறிப்பதைப் போல, சொல் அவரிலிருந்து அனிச்சையாகத் தெறித்தது. அக்குரல் அமானுடமாய் இருந்தது. "ஆம்! இதுதான் ஜோர்டானின் ஆன்மா!" என்று இரைந்து கொண்டே அவர் மண்ணில் மயங்கி விழுந்தார்.

    அத்துறவி, ஒரு குழிந்த நத்தை ஓட்டினை, நதியின் ஆழத்திலிருந்துப்பிடுங்கி வெளியெடுத்து, அதனுள் நதியை நிரப்பி ஜீசஸின் முகத்தில் ஊற்றினார். " நம் தேவனின் சேவகன் ஞானமுழுக்கடைந்து விட்டான்...." பின் எதையோ சொல்ல முயன்று நிறுத்திக் கொண்டார். அவனை என்ன பெயரிட்டு அழைப்பது என்று அப்பொழுதுதான் அவருக்கு உறைத்தது.

     அவர் திரும்பி ஜீசஸைப் பார்த்து வினவ எத்தனித்தார். அங்கே இருந்த அனைத்துமேத் திரும்பி அவனையே எதிர்பார்ப்புடன்  உற்று நோக்கியது. பெயர்! பெயர்! என அவைகள் ஒவ்வொன்றும் அதிர்ந்து கொண்டிருந்தன. இரு வெண்ணிறச் சிறகுகள் ஒடுங்கிக் கொண்டு நிலத்தில் அமர்ந்து அவனைப் பிரயாசையுடன் பார்த்தது. அது ஒரு பறவையைப் போல அல்லாது, ஜெகோவாவின் சிம்மாசனத்தில், அவரைத் தாங்கிக் பொருந்தியிருக்கும் தேவதைத் தோற்றம் கொண்டிருந்தது. ஒரு தீ ஜ்வாலையைப் போல அது முன்னேப் பாய்ந்து அவர்களின் முன்னே அமர்ந்தது. ஜானின் தலை இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது. அப்பறவை எந்த சலனமுமின்றி ஜீசஸின் கண்களை மட்டுமே, ஒருவிதப் பித்துடன் ஆதுரமாக எதிர்பார்ப்புடன் கூர்ந்தது. பின் திடீரென மெல்லத் தன் கூர்மையான உகிர்களால் மண்ணை உந்தி அந்தரவெளியில் சுற்றிச்சுழன்று மூன்று முறை படபடத்தது. பின் வளையம் போல ஒளியினைப் பெருக்கி மூன்று முறை வானுக்கும் மண்ணுக்குமிடையேச் சுழற்றி ஒளிர்ந்தது. ஒளியின் மகா இசைவினை, வெளி கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி உள்ளும் புறமுமாய் ஒளியன்றி ஒன்றுமில்லாததாகியது. அது தழும்பித் தழும்பிப் பெயர்! பெயர்! என தாகித்துப் பின் நடுங்கும் திரவ மினுக்கத்துடன் அப்பெயரைப் பிரகடனப் படுத்தும் வகையில், ஒரு கார்வையான அழுகையாய், சுருள் ஒளிப் புள்ளிகளாய் அவர்களின் அகத்தில் சுழன்றது. அமைதி பல்லாயிரம் கால்கள் கொண்டப் பூரான் போலத் தலைக்கு மேலே ஊர்ந்தது. நிலம் புரண்டு தலைகீழாகியது. படபடத்தலின் அவசர நுனிகள், வானத்தைத் தூண்டியது. மேகக் குவைகளிலிருந்து, ஞானவானின் விளிக்கு பதில், ஒரு மின்னல் கீற்றாய், நதியைக் கிழித்துத் துண்டாய் விழுந்தது.

    சிறகடிப்புகள் அடங்கவில்லை. மக்களின் காதுகளில் அச்சொல் ரீங்காரமிட்டது. அவர்களால் அதை உணரமுடிந்தது. ஆனால் விளக்க முடியவில்லை. எல்லோருமே பதற்றத்துடன் விம்மிக் கொண்டிருந்தனர். "அது தேவனின் குரலா?, இல்லை இப்பறவையின் துடித்தலா? எதையும் யூகிக்க வழியிருக்கவில்லை. பிளந்த நதிப்பரப்பில் வானின் தொடுகை, ஒரு அதிசயம் போல அவர்கள் முன்னே நிகழ்ந்தது. ஜீசஸ் விரைத்து நின்று, தன் உடலே காதாக அச்சொல்லைக் கூர்ந்தான். அக்கீற்றின் நிழல்களில் உருக்களாய்த் துடிக்கும் சொல்லின் அடியைப் பிடிக்க முயன்றான். அது தன் உண்மையானப் பெயர்தான் என்பதை அவன் மட்டுமே உணரும்படியான நிமித்தத்தை அவன் உணர்ந்தான். ஆனால் அவனால் அதனை நிரூபிக்கவோ விளக்கவோ இயலவில்லை. இல்லை! உண்மையில் அவனுக்கு அது தேவைப்ப்படவில்லை என்றே தோன்றியது.  ஆயிரம் சிறகுள்ள நிழல் பறவை ஒன்று ஒரேசமயம் தன் அனைத்து சிறகுகளினாலும் அப்பெயரைத் துடித்தது, அது சொல்லாக, விம்மலாக, தாளாத வாதையாக, வலியாக, உவகையாக, வன்மமாக, தீரா இன்மையின் இருப்பாக, வான் நோக்கிக் கரைந்து ஒளிக்குள் ஒளியாக, மின்னி மறைந்தது.

    இக்கொடிய பாலை நிலத்தில், காலங்களற்றுத் தனிமையைக் குடித்துக் கொண்டு வீற்றிருக்கும், இத்துறவிக்கு மட்டுமே அது சாத்தியம். தேவனின் சொல்லை அறிந்து கொள்வதென்பது தீயில் தன்னைத் தானே எரித்துக் கொள்வதன்றி வேறென்ன! அச்சொல்லின் மர்மத்தை, உண்மையைத் தேவனும், இந்த தீர்க்கதரிசியுமே அறிவர். இந்த நாள் புண்ணியமடைந்தது. அவர் நிறைவினால் தழும்பிக் கொண்டிருந்தார். "தேவனின் சேவகன், தேவகுமாரன், இம்மானுட குலத்தின் ஒரே நம்பிக்கை!, ஆம்! இந்த மண்ணும் வானும் இன்று திருப்தியடைந்தது" குரலின் நடுக்கம் இன்னும் அடங்கியிருக்கவில்லை.

    அவர் நதியைச் சுண்டினார். "செல்! இன்றைய நாளின் சடங்குகள் நிறைவுற்றது, செல்!" ஜோர்டான் நதி திரும்பவும் தன் ஓட்டத்தை அமைதியாகத் தொடர்ந்தது.


வியாழன், 17 நவம்பர், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம்- 75

   


    சபிக்கப்பட்ட சாக்கடலை, அவர்கள் வந்தடையும் பொழுது நண்பகலின் வெம்மை உக்கிரமாகப் பொழிந்து கொண்டிருந்தது. மரணத்தின் வெளிர்வு அவர்கள் ஒவ்வொருவர் முகத்திலும் அப்பி வழிந்தது. உமிழ்நீர் கூடச் சுரக்காது அகமும் புறமும் வற்றி வடிந்திருந்த அவர்கள், எந்த உயிர் நடமாட்டமும் இல்லாத நீர்ப்பரப்பினை வெறித்துப் பார்த்தனர். ஒரு மாபெரும் விஷக் குளம் போல அலைகளின்றி அமைதியாகக் கிடந்தது. ஜோர்டான் நதி வழி வரும் மீன்கள் கூட கடலின் கனத்த நீர்மையைத் தொட்டதும் உயிரிழந்துச் செத்து மிதந்தன. கரையில் சிறிதும் பெரிதுமாய் முள் மரங்கள் மட்டும், முட்களையே கிளைகளாகவும், இலைகளாகவும், வேராகவும் கொண்டு முடைந்துக் குத்தி நின்றன. கனத்த ஈயத்தை உருகி வழித்து விட்டாற் போல நீர்மை அடர்ந்தும், எந்தச்சலனமுமின்றியும் நொதித்தது. பக்தியுடன், இறைவழியை மட்டுமேப் பற்றுதலாய்க் கொண்டிருப்பவன் ஒருவேளை அதைக் காண முடியும். முற்றிலுமாய் அழித்தொழிக்கப்பட்ட சோடோம் மற்றும் கொமோரோ எனும் அவ்விரு நகரத்தை, நதியின் ஆழ்ந்த கரிய அடிப்படிவுகளில், காலாகாலத்திற்குமாக அந்நகரங்கள் அமிழ்ந்து கிடப்பதை உணரமுடியும்.

    ஜீசஸ் சற்று உயரமாக இருந்த ஒரு ஒற்றைப்பாறையில் ஏறி தூரத்தை அளவிட்டான். பாழ் நிலம் மட்டுமே விரிந்து பரவிக் கிடந்தது. சூட்டின் எரிவைக் குடித்துக் கொண்டு பூமியும், வானும் திக்கற்று முயங்கியது. திட திரவ மாறுபாடுகளின்றி காட்சிப்புலனில் காணும் அனைத்தும் உருகி மறைந்தன. நெழிந்து சுழித்தன. அமைதியின் மேற்தோல் தடித்துத் தடித்து, அழுத்தத்தை நிரப்பியது. காற்று, அகப்பட்டுக் கொண்ட குஞ்சுப்பறவை போல அங்கும் இங்கும் திசைகளுற்றுத் ததும்பிப் பின் அடங்கியது. ஜீசஸ், ஆண்ட்ரூவின் தோள்களைப் பற்றிக் கொண்டு விசனத்துடன் நோக்கினான். "எங்கே அவர்? ஞானஸ்நானம் அளிக்கும் ஜான்!, கண்ணுக்கெட்டியத் தொலைவு வரை எந்த உயிர்களையும் காணவில்லையே?"

    "அதோ! தூரே நீட்டமாய் வளர்ந்து நிற்கும் நாணல் புதர்களைத் தாண்டி நாம் போகவேண்டும். அங்கு இந்நதி, உயிருடன் செல்கிறது. அதன் திரவ நுனிகளில், அமைதியின் சலனம் பெருகி ஓடும் ரேகைகளைக் காண முடியும்.  பாறைகளின் இடைவெளி வழியே சதா தன்னைப் புதுப்பித்துக் கொண்டு ஒழுகும் நீர்ப்பரப்பில்தான் அவர் வருபவர்களுக்கு ஞானஸ்நானம் செய்கிறார். வாருங்கள்! நான் உங்களைக் கூட்டிப் போகிறேன்." ஆண்ட்ரூ கைதூண்டித் தொலைவைக் காட்டினான்.

    "நீ இரு. ஆண்ட்ரூ, ஏற்கனவே சோர்வாக இருக்கிறாய்! நீ மற்றவர்களுடன் இங்கேயே ஓய்வெடு. நான் தனித்துச் சென்று அவரைக் கண்டறிகிறேன்"

"அவர் பயங்கரமானவர்! நான் உங்களுடன் வருகிறேன் துறவியே!"

    "நான் தனியாகச் செல்ல விரும்புகிறேன், ஆண்ட்ரூ! நீ அவர்களுக்குத் துணையாக இங்கேயே இரு!"

    ஜீசஸ் நாணல் உயர்ந்து நிற்கும் புதரை நோக்கி விரையத் தொடங்கினான். அவனது இருதயம் காரணமின்றி படபடத்தது. அவன் தன் நெஞ்சில் கைவைத்து அழுத்தி, அமைதியாகு என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். வானம் இன்னும் வெக்கையைக் கைவிட்டிருக்கவில்லை. வெண்மை துலங்கும் ஒளியில் கரு நிறப் புள்ளிகளாக, மொத்தையானக் காக்கைக் கூட்டத்தின் சிறகடிப்புகள், பாலை வெளியிலிருந்து ஜெருசலேமை நோக்கி உயர்வதைக் கண்கள் கூச, அண்ணாந்து நோக்கினான். 

    தனக்குப் பின்னேத் தன்னை யாரோ தொடர்வது போலத் தோன்றவே திரும்பிப் பார்த்தான். யூதாஸ் எந்த உணர்ச்சிகளுமின்றி அமைதியாக வந்து கொண்டிருந்தான்.

    "நீ என்னை அழைக்க மறந்து விட்டாய்!" யூதாஸ் வெறுமனே உதடுகள் பிரியாது சிரித்தான். "இது ஒரு சிக்கலானத் தருணம், நான் உன்னுடன் கண்டிப்பாக இருக்க வேண்டும்"

"வா!" ஜீசஸ் கண்கள் பனிக்க அவனை அழைத்தான்.

    ஜீசஸ் முன்செல்ல, யூதாஸ் பின் தொடர்ந்தான். அவர்கள் நாணல் கற்றைகளை விலக்கி, வெதுவெதுப்பான நதியின் கால்கள் படிந்த சேற்றை மிதித்துக் கொண்டு சென்றனர். ஒரு கருத்த நாகம், பாறைக் குன்றத்தின் இடையில் புகுந்து ஊர்ந்து வெளிவந்தது. பத்தி விரித்துத் தன் பழுத்த செந்நிறக் கண்கள் உருள மிரட்சியுடன் சீறியது. அதன் பாதி உடல் பாறையின் உடலாக ஒட்டி இருந்தது. தலையும், கழுத்தும் விரிந்து விடைத்து நின்றது. ஜீசஸ் பதற்றம் கொள்ளாமல் மெல்லத் தன் கைகளை அசைத்தான். அது அதன் வருகையைத் தான் ஏற்றுக் கொள்வதைப் போல இருந்தது. யூதாஸ் மெல்லத் தன் கையிலிருந்த கம்பை ஓங்கத் தலைப் பட்டதும், ஜீசஸ் அவனைக் கட்டுப்படுத்தும் வகையில், அடித்தொண்டையில் செருமினான்.

"    வேண்டாம்! நண்பா! அதை ஒன்றும் செய்யாதே! அது அதற்கு இறைவன் என்ன அளித்தானோ, அதைத் தானேத் திரும்பச் செய்யும். கடிப்பது தானே அதன் குணம், விட்டு விடு நண்பா!"

    சூடு உராய்ந்து உராய்ந்து பல்கிப் பெருகியது. தீயைக் குடித்துக் குடித்து அந்நிலமும் தீயைப் போலவே ஆகி இருந்தது. பற்றிக் கொள்ளும் அனைத்தையும் நீக்கமற உட்கொள்ளும் அம்மண்ணில் ஆழக் காலூன்றி அவர்கள் முன்னேறினர். தெற்கிலிருந்து சாக்கடல் தொட்டு வீசும் காற்றின் துர்நாற்றம், அழுகியப் பிணங்கள் நொதித்துப் புழுப்பதை ஒத்திருந்தது. ஜீசஸ் அக்குரலைக் கூர்ந்தான். அதன் காட்டுத்தன்மையையும், கனத்தொலிக்கும் கார்வையையும் அவனால் உணர்ந்து யூகிக்க முடிந்தது. இப்பொழுதும் பின் என்றென்றைக்குமாக அவன் கேட்கும் சொல், "...தீ! கோடாரி! மலட்டு மரம்!..." அச்சப்தத்தின் வெம்மையைக்கூட அவன் தன் உடலில் உணர்ந்தான். வருந்து! வருந்து!" அது ஒன்றிலிருந்து பலவாக, எதிரொலிப்புக்கள் அடங்காது திக்குகள் எங்கும் பட்டுத் தெறித்து அவனைப் பேதலிக்க வைத்தது. ஜீசஸ் மெதுவாகவும், மிகுந்த கவனத்துடனும் ஒரு வன்மிருகத்தின் குகைக்குள் செல்வதைப் போல, அச்சொல்லைப் பிடித்துக் கொண்டு சென்றான். நாணல் வெளியைப் பிளந்து செல்லச் செல்லச் அச்சொல்லின் அதிர்வு கூடிக் கொண்டிருந்தது. சொல்! சொல்! சொல்! என அது பின்னிப் பிணைந்து அவனைச் சுறறிப் பெருகியது. "வருந்து! வருந்து!", ஒலி நாண்கள் சுருள் அவிழ்வதைப் போல சட்டென்று அவிழ்ந்து அவன் செவிப்பறைகளைக் கிழித்தது. சொல்லின் மந்திர நெடி, அதன் கனம், அதன் முடிவற்ற அதிர்வுகள், அவனால் தன்னிலையைப் பிடித்து நிறுத்த முடியவில்லை. அகம் சுண்டுவதை, ஒவ்வொரு ஒலித்தூண்டல்களுக்கும், அவனது நரம்புகள் இழுபட்டுத் தளர்வதை, அவனது உடல் ஒரு, நரம்பிசைக் கருவி போல, அமானுட உகிர்களால் நாண்கள் தந்தியதிர்ந்து, விம்முவதை என்ன செய்வதென்றறியாது அவனே உற்று நோக்கிக் கொண்டிருந்தான். விதிர்விதிர்க்க தன் உடல் முழுதும் உமிழும் படிக் கத்த வேண்டும் என இருந்தது அவனுக்கு. ஆம்! சரியாக அங்குதான் அவன் அந்தத் துறவியைக் கவனித்தான். நாணல் போலவே அவரது கால்கள் பாறைக்குன்றத்தின் மேலே துடித்துத் துடித்துக் காற்றின் இழுப்பிற்கு நடுங்கிக் கொண்டிருந்தது. ரோஜாக்களின் ரத்த நிற இதழ்கள் அவரைச் சுற்றிக் குழுமி, ஜோர்டான் நதி ஓட்டத்தைப் பற்றி நகர்ந்தது. "இவர்தானா! இப்பாலை நிலத்தின் வெட்டுக் கிளி!, பசியின் தேவதை! பழியை நிறைவேற்ற வந்திறங்கியத் தேவதூதன்?. கரை பற்றிக் கரையும் அலைகள். காலங்காலமாய் பழி தீர்க்க வந்துதித்த மனிதர்கள் அனைவரும், பாறைகளில், அலைகள் ஒவ்வொருமுறை முட்டி மோதி உடைவதைப் போல உடைந்து நொறுங்கிப் போயினர். எத்தனை குலங்கள்! மனிதர்கள்!. தங்கள் புருவங்களிலும், நகங்களிலும் வண்ணம் பூசிக் கொள்ளும் எத்தியோப்பியர்கள், கனத்த வளையங்களை மூக்கினில் தரிக்கும் சாலடியர்கள், அடர்த்தியாக மீசையைக் காது வரை வளர்த்துக் கொள்ளும் இஸ்ரேலியர்கள். எத்தனை பண்பாட்டினைக் கடந்தும் இச்சொல் அதன் வீரியம் குன்றாது தகித்துக் கொண்டிருக்கிறது என்பதை மையமின்றி நினைத்துக் கொண்டான். 

    தெற்கிலிருந்து வீசும் கனத்தக் காற்றில் இன்னும் அவர் அசைந்து நடுங்கிக் கொண்டிருந்தார். மடித்திருந்த சொற்கள் விரிந்து அவரிலிருந்து வெளியேறியது. "வருந்து, வருந்து! தேவனின் நாள் வந்து விட்டது! கேள்!  இந்த நிலம் ஒரு பாம்புச்சட்டை உரிவதைப் போலத் தன்னைச் சுருட்டிக் கொள்ளப் போகிறது. அவனது மூச்சின் ஆவேசத்தால் இந்த மண் ஒரு தூசுத்துகள்களாய்ப் பொடிந்து கரைந்தழியப் போகிறது. நம் தேவனின் படைகள் கட்டளையிடுகிறது! இந்த நாளில் சூரியன் நண்பகலில் மறையட்டும், சந்திரனின் வெண்துகில்களை உடைக்கக் கடவது, வானும் மண்ணும் இருளன்றி ஏதுமற்றுப் பாழாகட்டும். உனது சந்தோசங்கள் துக்கமாகத் திருப்பப்படும். உனது சங்கீதங்கள் ஒப்பாரிகளாகட்டும். நான் ஒரு சாம்பல் துகள்களாக உங்களை ஊதித் தள்ளுவேன். உங்களின் கை கால்கள் என அங்கங்களின் உறுப்புகள் அனைத்தும் சிதறித் தெறிக்கும் படியாய் ஆணையிடுவேன்" 

புதன், 16 நவம்பர், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம்- 74

 

    கார்ந்த வெளிச்சப் பட்டைகள், தடிமன் குறைந்து மெல்ல மெல்ல மெலியத் தொடங்கியது. கடுமை அடங்கி ஒளி, கருமையை உறிஞ்சிக் கொண்டது. செந்நிறமும், ஊதா நிறமும் கலந்து பாறைத் திட்டுக்களில் படிந்து பரவியது. தூரத்தில் இதுமியாவின் மலை அடுக்குகள், சூரியனின் அயர்வை உள்வாங்கிக் கொண்டு, இளஞ்சிவப்பு நிறத்தை ஓர்த்தது. கூசும் வெண்ணிற ஒளி மறைந்துக் கண்களைத் திறந்து உற்று நோக்க முடிந்தது. பாதையின் வளைவில் அவர்கள் திரும்புகையில், நிலம் மொத்தமும் திடீரென உருமாறித் தன்னைத் தானேப் புதுப்பித்துக் கொண்டிருந்தது. வெம்மையின் முடிச்சுக்கள் அவிழ்ந்து குளிரின் மென்பதம் பிசுபிசுப்புடன் ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அவர்களின் உடலும் மனமும், அதனை உள்வாங்கிக் கொள்ளவும், பசுமை வெளிர்க்கும் தூயப் புல்வெளிகள், சாம்பல் மணல்பரப்புகளைத் தாண்டி, எல்லையற்று விரவிக் கிடப்பதைக் கண்டனர். ஈரத்தின் தத்தல்கள் தழும்பி நிறையும் கிலுக்கு சப்தத்தை அவர்கள் உணர்ந்தனர். பழுத்த மாதுளையின், இனித்த மணம் ஆக்கிரமித்தது. தொலைவில் வெண் புள்ளிகள் போலக் குடில்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது. பருத்த இலைகள் அடர்ந்த காட்டுமல்லி மற்றும் ரோஜாப் பதியன்கள் விரியும் நறுமணமும் கலந்து, தொலைவினை மேலும் குளிர்மையாக்கியது.

    "ஜெரிகோ" ஆண்ட்ரூ குதூகலத்தில் கத்தினான். "அங்கு உலகிலேயே அதி உன்னதமான இனிப்பைக் கொண்ட பேரீச்சையும், அபூர்வமான வண்ணங்களில் ரோஜாக்களும் உண்டு. அவைகள் அழிவற்றதும் கூட. ஒருவேளை அவைகள் வாடினாலோ, நொய்ந்து போனாலோ, அவற்றை இந்தத் தண்ணீரில் முக்கி எடுத்தால் மட்டும் போதும், மறுபடியும் புத்தம் புதியதாக ஆகி விடும்"

    இரவின் நீள் கரங்களுக்குள் நிலம் தன்னைப் பொதிந்து கொண்டது. சட்டென இருளின் தீட்சண்யமானக் கோடுகள் அடர்ந்து வானமும் பூமியும், அப்பாலுள்ள பெரிய மொத்தையான உருவின் நிழல் போர்த்தியதைப் போல் முற்றிலுமாகக் கருமையை சுவீகரித்தது. முதல் விளக்கு ஒளியின், வெளிச்சக் கீற்றுக்களின் மஞ்சள் நிறத்தின் துடிப்புகள், ஒரு திரவமிணுக்கத்துடன் அலைந்து அலைந்து முன்னேறுவதை அவர்கள் கண்டனர்.

    "பயணம், இருளின் நீங்கா அமைதியினுள்,  இந்த அறிந்திராதக் கிராமத்தினுள், இரவின் முதல் ஒளித் தூண்டியிருப்பதை வழித்துணையாகக் கொண்டு உண்பதற்கு கைகளில் ஏதுமற்று, அயரவும், உறங்கவும் எந்த தாங்கல்களுக்கும் உரப்பு இல்லாது, இறைவனின் நீங்காக் கருணையினையும், மனிதனின் தீர்ந்துவிடாத நன்மையையும் மட்டுமே நம்பிப் பயணிப்பது!, ஆம்! அதுதானே உண்மையும், தூயதும், மகத்துவமுமான இவ்வுலகின் பேரின்பம் இல்லையா!" ஜீசஸ் சற்று நிமர்ந்து தூரத்தில் அவர்களுக்காகக் காத்திருக்கும் காருண்யத்தை நெஞ்சில் இருத்தி, அந்த நொடிப்பொழுதின் ஆன்மத் தேற்றலின் அளக்க இயலாத நிறைவின் இன்பத்தை உள்வாங்கிக் கொண்டிருந்தான்.

    நாய்கள் பழக்கப்படாத மனித வாடைகளினால் விசனித்து, குரைக்கத் தொடங்கின. கதவுகள் திறப்புதும், பின் ஊர்ந்து வீட்டினுள்ளே நுழைய முயலும் இருளைத் துண்டித்து மறைவதுமாய் இருந்தது. துணைவர்கள் ஒவ்வொருக் கதவுகளையும் அணுக, அவர்கள் கை நிறையத் தேவையான ரொட்டித் துண்டங்களும், மாதுளைப் பழங்களும், ஊறவைத்துக் கனிந்த பச்சை ஆலிவ் பழங்களும் இருந்தன. இறைவனின் கைகள் எப்பொழுதுமே அளவைக் கொண்டதல்ல. மனிதனின் இருதயம், என்றுமே இருள் பூசிக் கொள்வதில்லை. அதன் அளவிட முடியாத ஒளியே அவர்களைச் சோம்ப விடாமல், தளர்ச்சியடையும் பொழுதுகளிலெல்லாம் தன் வலுவானக் கரங்களினால் தாங்கி நிற்கிறது என்பதை உறுதியாக நம்பினர். தோட்டத்தின் ஓரத்தில், சிறுதாவரங்கள் பதிந்த நிலத்தில், தலைக்கு மேலே விண்மீன்கள் துளிர்க்கத் தொடங்குகையில், அவர்கள் திரட்டிய உணவினை நன்றாக உண்டு, நாளின் மொத்த அயர்வையும், ஒரு தூசுப்படலத்தை விலக்கிக் கொள்வதைப் போல விலக்கிக் கொண்டு தன்னிலை மறந்து உறங்கினர். பாலைநிலத்தின் பழுத்த வெண்ணிற ஒளிக் கூச்சல் அவர்களின் கனவினைக் கூட ஆக்கிரமித்திருந்தது. அது சலனிக்கும் காட்சிகளின் நெழிவு, விரிந்து விரிந்து மணல்வெளியும், கற்பாறைகளும், கரையினில் மீள மீளத் துடிக்கும் அலைப்படிவங்களாக மாறியது. பின் மண் நெகிழ்ந்து, நீர்மையின் தழும்பல்களால் அவர்களை முழுக்கியது. சுழிகள் உருவாகி விளிம்புகளில் உடைந்து, விரிந்து, மீண்டும் மீண்டும், அதக்குவதும் வெளித்தள்ளுவதுமாய் உடல்கள் நிரம்பி வழிந்தன. ஆனால் உறக்கத்தின் ஆழ்மையில் ஜீசஸ் மட்டும் தனித்திருந்தான். தோல் கருவிகளின் ஓசையின், தாளகதி தளர்ந்தும், உயர்ந்தும் முன்னும் பின்னும்  அவன் கனவில் போக்கு காட்டியது. சுற்றியிருக்கும் நிலம் நகர்வது போலவும், ஜெரிகோவின் சுவர்கள் பொடிந்து அவர்களைச் சுற்றி விழுவது போலவுமாக காட்சியின் பாதைகள் தளர்ந்துச் சுருங்கிப் பின் புள்ளியாகி மறைந்தது.

செவ்வாய், 15 நவம்பர், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -73

    


    நாள் கணக்கின்றி ஒரே இடத்தில், வெளி என்பதே அறிய இயலாது கட்டி வைக்கப்பட்டக் கான் மிருகம் ஒன்று, தன்னைப் போலவேக் கண்ணியில் அகப்பட விரையும் இன்னொரு மிருகத்தைக் கண்டால் அதன் கேவல், இல்லையேல் கட்டுப்படுத்த முடியாது அம்மிருகம் சமிஞ்சை செய்யும்  கத்தல் எப்படி இருக்குமோ, அதே போல அந்த பரிசேயன், கோவிலின் கடைசிப் படிக்கட்டின் ஓரத்தில் தனித்து நின்று கொண்டு, தன் தொண்டை நரம்புகள் இழுபடக் கதறினான். அவனது கைகளிலிலும் கழுத்திலும், புனிதத் திருமறையில் இறைவனால், யூதர்களுக்காக இம்மைக்கும் மறுமைக்குமாக அருளப்பட்ட அறுதியான சொற்சேர்க்கையின் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சின்னங்களை இணைத்து செய்யப்பட்டக் கயிறுகளை வைத்திருந்தான். அவனது முகம், கழுத்து, மார்பு என அனைத்தும், தொடர்ந்து மீள மீள வதைக்குள்ளாக்கப்பட்டப் புண்கள் புரையோடியிருந்தது. தொடர்ச்சியாக, காலக்கணக்கின்றி நிலத்தில் மண்டியிட்டு காய்ப்பேறியிருந்தது முன் நெற்றி. கால்களும், மூட்டுகளும் வளைந்து பார்ப்பதற்கு, கூன் விழுந்தது போலவும், அவனது நீள் முகவெட்டு,  காலத்தை அசை போட்டுக் கொண்டு, ஏதுமற்று வெறித்திருக்கும் ஒட்டகத்தை நினைவு படுத்தியது. ஒவ்வொரு முறையும் எல்லாம் வல்லத் தந்தை ஜெகோவாவின் ஈவிரக்கமற்ற ஏவல்களுக்கு ஆட்பட்டு, மேலும் மேலும் தன்னை சிதைத்துக் கொள்வதைத் தான் அவன் வழிபடலாகக் கொண்டிருந்தான். அப்பிரார்த்தனைகளின் நிலம் கூர்க் கற்களினால் பரந்திருந்தது. அங்கு தன் உடலும் ஆவியும் நிலத்தில் படியும் படி உராய்ந்துத் தன்னைத் தானே ரத்த விளாறாகப் பிய்த்துப் பிய்த்து மூர்ச்சையற்றுக் கிடப்பது ஒன்றே அவனுக்காக இறைவன் விதித்த வழி என்று அவன் உறுதியாக நம்பினான்.

    ஆண்ட்ரூவும், ஜானும் உடனடியாக ஜீசஸுக்கும் முன் சென்று இருபுறமும் அந்தப் பரிசேயனின் இருப்பு தெரியாதவாறுப் பார்த்துக் கொண்டனர். " அவன் யாரென்று உனக்குத் தெரியும் தானே?", பீட்டர் மெல்ல ஜேக்கப்பின் காதில் வினவினான். "அவன் அந்த தச்சன் ஜோசப்பின் மூத்த மகன் ஜேக்கப் தானே?,  உலோகத்தில் இறைச்சொற்கள் பொறிக்கப்பட்டு பல்வேறு வடிவங்களில் செய்யப்பட்ட புனிதக்கயிறுகளை சதுக்கத்தில் விற்கும் அதே ஜேக்கப்தானே அவன். ஒவ்வொரு மணித்தியாலங்களுக்கு ஒருமுறையும்  தீய சக்திகளால் பீடிக்கப்பட்டுத் தன்னைத்தானே கொன்று கொண்டிருக்கும் அந்த அப்பாவி ஜீவனை என்னவென்று சொல்வது"

    "அவனும் தன் உயிரைப் பணயம் வைத்து ஒரு குருவை தேடித்தான் தன்னை இப்படி வதைத்துக் கொள்கிறானோ என்னவோ?" சற்று  நின்று அவனை உற்று நோக்கிக் கொண்டே ஜேக்கப் பதிலளித்தான். 

    "ஆம்! அவன், தான் தன் குடும்பத்திற்கே அவமானம் ஏற்படுத்திய, இழிபிறவி" என்று கேட்பவரிடம் சொல்லிக் கொண்டு திரிகிறான்."

    அவர்கள் தங்கக் கதவுகள் பொருத்தியக் கோவிலின் வாசல் வழியே வெளியேறி, கிட்ரான் பள்ளத்தாக்கையும் தாண்டி சாக்கடலை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தனர். பின் ஜெத்சலேமின் சோலை வழிக் கடந்தனர். வானம் சாம்பல் நிற வெளிச்சத்தை, ஒரு அகல் விளக்கின் படபடத்தலுடன் ஒளிர்த்தது. திட்டுத்திட்டுகளாக படியும் வெம்மையின் தீற்றல்களை உட்கிரகித்துக் கொண்டு அவர்கள் நகர்ந்தனர். ஆலிவ் மரங்கள் அடர்ந்த மலைக்குன்றங்களைத் தாண்டினர். ஒளி இலைகளின் ஊடு வழி வழியே, நிழல்களை வானிலிருந்து உதிறும் அடர்ந்த இறகுகளைப் போல நிலத்தில் உதிர்த்தது. காகங்களின் கரைதலும், சிறகடிப்புகளும் ஜெருசலேமை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது.

    ஜீசஸின் தோள்களைப் பற்றிக் கொண்டு செல்லும் ஆண்ட்ரூவின் எண்ணங்கள் ஜோர்டான் நதிக்கரையில் சுழன்றது. தனது பழையக் குருவின் இருப்பினை நீக்கமற அவன் உணர்ந்தான். கர்ஜனை தெறிக்கும் அவரது மூச்சின் சுவாசத்தையும், வெம்மையையும் அருகாமையில் அறிந்தான். சூடு பொறுக்காது உருகி வழியும் பாகினைப் போல அவனது உடலும், உள்ளமும், கொதித்து ஆவியாகிக் கொண்டிருந்தது. 

    "அவர் ஒரு மெய்யான எபிரேயர். அவரைத் தீ என்றே அறிகிறேன். இரு நெருப்புப் புள்ளிகள் போலக் கனலும் கண்கள், மானுடனின் ஆன்மாவினை பரிசுத்தமாக்கும் தீப்புனல். அதற்காகவே ஜெகோவாவின் சொற்களை ஏந்தி கார்மல் மலை அடுக்குகளிலிருந்து நிலத்திற்கு வந்தார். அவரைச்சுற்றி மூட்டமாக எரிந்துக் கொண்டே இருக்கும் கங்கு வளையத்தை நான் என் சொந்தக் கண்களாலேயேக் கண்டிருக்கிறேன். ஒரு நள்ளிரவின் நிசப்தத்தில், கரியப் பறவை ஒன்று தீச்சொரியும், சிறகுகளுடன் அவருள் அமிழ்ந்து மறைவதை அதன் செம்மஞ்சள் நிற ஜ்வாலை, அவரது உடல் முழுதும் நீள்வட்டப் புள்ளிகளாய் சுழன்று மிதப்பதை பயம் அடங்கா விரைத்தலுடன் கண் அகலாது பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள், எனக்கு நானே தைரியப்படுத்திக் கொண்டு அவரிடம் வெகு நாட்களாக கேட்க நினைத்ததை அருகமர்ந்துக் கேட்டேன். நீங்கள் தான் மெசியாவா?. அவர் கண்கள் திறக்கவில்லை. அவரது அகம் சட்டென, அழுத்தத்தால் பீடிக்கப்பட்டது. கால்களுக்கடியிலிருந்த நிலம் கழன்று வீழ்ந்ததைப் போல, பதற்றத்துடன் விரைவாக தலையை அசைத்தார். "இல்லை! நிச்சயமாக இல்லை!" அவரது குரல் நடுங்கிக் கொண்டிருந்தது. நீண்ட பெருமூச்சுகளை இழுத்துக் கொண்டு மறுபடியும் இமை மூடிக் கொண்டு அமர்ந்தார். உதடுகள் துடித்தன. பனிக்கும் கண்களில் சொல் ஒன்று, தத்தித் தத்தி எம்பிக் கொண்டிருந்தது. சிறகுகள் படர்த்திய அச்சொல் அவரிடம் சதா வினவிக் கொண்டதற்கு பதில் கூறும் வகையில் அவர் முன்னே இருக்கும் வெளியையும், தொலைவில் முனகும் நதியின், தொடர் சலனத்தையும் கூர்ந்தார். "இல்லை! நான் ஒரு கலப்பை! மெசியாதான் விதை!"

" நீ ஏன் அவரை விட்டு வந்தாய்?" ஜீசஸ் ஆண்ட்ரூவிடம் கேட்டான்.

" நான் விதையை அறிய விளைந்தேன்!"

"நீ கண்டறிந்தாயா?"

    ஆண்ட்ரூவின் உள்ளம் தகித்தது. தன் கைகளுக்குள் அடங்கியிருக்கும் ஜீசஸின் உடலை இன்னும் இறுகத் தன்னுள்ளே செலுத்திக் கொள்வதைப் போல அழுத்திக் கொண்டான். ஜீசஸின் உடல் சூட்டைத் தன்னுள் அமர்த்தி, அவனது வியர்வையின் மகர்ந்தங்களின் உட்கிரியையை மணத்தி மணத்திப் பலகோடி முறை முத்திக் கொண்டான். தன்னிலையிழந்த நிலையில் பதில் எதுவும் கூறாமல் ஒரு விதமான ஆர்ப்பரிக்கும் துடிப்புடன் ஜீசஸின் அணுக்கத்தை இடைவிடாது, ஒரு துளி கூட சிந்தி விடாது தன்னுள் ஏந்திக் கொண்டுப் பிடைத்தான். ஆம்! எனத் தனக்குள் தானே எத்தனை முறை சொல்லியிருப்பானோ தெரியவில்லை. ஜீசஸ் எதுவும் பேசாமல் அவனது தகிப்பை உள் வாங்கிக் கொண்டு அமைதியாக நின்றான்.

    வெகுவேகமாக, நீள் சரிவுப் பாதைகளின் சரளைக் கற்களை மிதித்துக் கொண்டு சாக்கடலை நோக்கி அவர்கள் விரைந்தனர். ஒளியைப் பீய்ச்சிக் கொண்டிருந்த வானத்திலிருந்து, வெக்கை ஒரு கூர்மையானத் திரவக் குழாய் போன்று அவர்களது உள்ளும் புறமும் அனத்தியது. மோப் மலையின் குழிந்த சாந்து நிற, வறண்ட நிலம் கண்ணுக்கெட்டியத் தூரம் வரை செதுக்கல் பாறைகளால் நிரம்பிக் கிடந்தது. காலமற்றுக் கிழித்த காற்றின் கனத்த விரல்களின் ரேகைகள் படிந்த வழிப்பாதை, ஊர்ந்து ஊர்ந்துப் புள்ளிகளாய் உருமாறி வெகு தூரத்தே, வெண் திட்டுகளாய்த் தெரியும் இதுமியாவின் நிலம் வரை, ஒரு நீண்டு வளைந்த சுருக்கப் படிவுகளாய் நிலத்தில் பதிந்திருந்தது. தங்களைச் சுற்றிய மண் முகடுகளே ஒரு சுவர் எழுப்பியது போல உயர்ந்திருந்தது. ஏதோ ஆழமானக் கிணற்றின் நடுமையத்திலிருந்து சுற்றிச் சுற்றிப் பார்ப்பதைப் போல, அக்குழிவானப் பிரதேசத்திலிருந்து தூர தூரம் அகன்று அகன்று விரிந்துப் படர்ந்தது.

    அவர்கள் தங்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டு, வளைந்து வளைந்து செல்லும் பாதையின் பிடிமானத்தில் நகர்ந்து கொண்டிருந்தனர். மண் வானம், உடல், ஆவி என அனைத்தும் எரிந்துக் கசிந்துச் சுரந்தது. எரிவின் மணமன்றி எதுவுமில்லாத மூட்டம். எந்த தயைகளுக்கும் வாய்ப்பில்லாத வானம் கண்ணுக்கெட்டியத் தொலைவு வரை, ஒரு முட்டை வடிவ சாம்பல் பொதிச்சுருக்கு போலத் தொங்கிக் கொண்டிருந்தது. நிலமோ செல்லச் செல்ல எந்த உயிர் நடமாட்டமும் இல்லாது, வெற்றாய், காலகாலத்துக்கும் வெறுமையை மட்டுமே குடித்துக் கொண்டு, எரிவின் கந்தக நாற்றத்துடன் அவர்களின் கால்களில் புதைந்தது. நரகக் குழிக்குள் அகப்பட்டுக் கொண்டோமோ என அவர்கள் ஒருமித்து நினைத்தனர். காற்றின் ஒற்றைச் சலனம் மட்டுமே அவர்களை உயிர்ப்பித்திருந்தது. அதன் மிருகலயம், அந்நிலத்தின் சொல் என அவர்களின் காதுகளில் முழங்கியது. ஒரு சேரப் பயமும் கவர்ச்சியும் அடங்காது அவர்களின் செவிகளில் ஊளையிடும் காற்றின் உயிர்ப்பு மட்டுமே அவர்கள் அம்மாபெரும் வெளியின் உயிருள்ள இருப்புகள் என்பதை அவர்களுக்கே தெரிவித்துக் கொண்டிருந்தது.

    ஒளியின் கார்வை கூடிக் கூடி அவர்களை குருடாக்கியது. தடுமாறிக் கொண்டே அவர்கள் முன்னே சென்றனர். சூட்டின் பதற்றம் அவர்களின் மண்டையைக் கிளறியது. சரியாகச் சொல்வதெனில் நெருப்பு ஒரு பெரிய போர்வை போல வானிலிருந்து நேரடியாக நிலத்தை அமிழ்த்திக் கிடந்தது. அதனுள் அவர்கள் பாதையை அறியக் கூட முடியாது தப்பித் தப்பி மெல்ல சென்று கொண்டிருந்தனர். சற்றேத் தொலைவில் ஏதோ மணி சப்தம், ஒட்டகங்கள் நகர்ந்து செல்வதைப் போல மயக்கு. உண்மையில் அது பாறைப் படிவத்தின் நெழியும் மேற் தோல், அனலில் அது நகர்வதைப் போலக் காட்சி பிளற்வு. 

"எனக்குப் பயமாக இருக்கிறது" செபதீயின் இளையமகன், சற்றே அழும் தொனியில் கூறினான். "இது நரகக் குழி"

"தைரியமாக இரு!", ஆண்ட்ரூ அவனுக்குப் பதிலுரைத்தான். "நீ கேள்விப்பட்டதில்லையா! சொர்க்கத்தின் வாசல், நரகத்தின் இதயத்திலிருக்கிறது என்று!"

"சொர்க்கமா?"

" நீ சீக்கிரமேக் காண்பாய்!"
 

ஞாயிறு, 13 நவம்பர், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -72

    


    ஜெருசலேம் பச்சையுடுத்தி நின்றிருந்தாள். தெருக்கள், கூரைகள், சதுக்கங்கள் மற்றும் சந்தைப்பகுதிகள் எல்லாமே வசந்தத்தை வரவேற்கத் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. ஆலிவ் கிளைகள் மற்றும் திராட்சைக் கொடிகளாலும், ஈச்ச மரக் கொம்புகளாலும், தேவதாரு மரங்களின் அடிமரங்கள், அதன் கூம்பு இலை அமைப்புகள் மாறாது ஸ்தாபிக்கப்பட்டு, இஸ்ரவேலத்தின் கடவுளின் பெயரால், ஆயிரமாயிரம் கூடாரங்கள் நிலமெங்கும் எழுப்பப்பட்டிருந்தன.  தங்கள் மூதாதைகள் இவ்வனாந்தரத்திற்குத் ஒப்புக்கொடுத்த ஆதிகாலங்களின், தியாகங்களின் நினைவாகவும் மக்கள் இந்நிகழ்வைக் கொண்டாடுகின்றனர். வயல் அறுவடையும், கொடி முந்திரிப் பருவமும் பெரும்பாலும் முடிவடைந்து இந்த வருடமும் கிடைத்த நல்ல விளைச்சலால் மக்கள் திருப்தியடைந்திருந்தனர்.  நன்கு ஊட்டப்பட்டுத்  திடமாக வளர்க்கப்பட்ட ஒரு கொளுத்தக் கிடா, சதுக்கத்தின் மையத்தில் கட்டப்பட்டிருந்தது. கருப்பு நிறக் கழுத்தும், நெற்றியில் சாம்பல் வண்ணமும் தெளித்த அந்த செங்கிடா, தன் வளைந்த கொம்புகளை ஆட்டியும், தீவனமாக அளிக்கப்பட்டப் புற்கற்றைகளைச் சவைத்து அசை போட்டுக் கொண்டும்,  தன் பழுப்பு நிறக் குமிழ்க்கண்களால் சுற்றி நிற்கும் மக்கள்கூட்டத்தை வெறித்துப் பார்த்தது. இஸ்ரவேலத்தவர்களின் பாவங்களைச் சுமக்கப் போகும் அதன் தலை அங்கும் இங்கும் சதா நிற்காமல் ஆடிக்கொண்டிருந்தது. பாவங்களின் சுமையை ஆட்டின் மீது இறக்கி வைப்பது ஒரு சடங்காகப் பல காலம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அது தங்கள் ஆதித்தந்தைக்கு பலியாக பாலைவெளியில் அவிழ்த்து விடப்படும். அதன் மூலம் தேவன் ஜெகோவா, சாந்தப்படுவார் என்றும், மறுமை நாளில் தங்களை சொஸ்தப்படுத்துவார் என்றும்  அம்மக்கள் நம்பினர். பலவிதமான அளவைகள் கொண்ட வளையங்களை, ஆட்டின் கழுத்தில், அவரவர்கள் பாவங்களை ஓதிக் கட்டுவர். கயிற்றில் கோர்க்கப்பட்ட பாவங்களின் பழு, கழுத்தை இறுக்க பாலைவனத்திற்கு அது விரட்டியடிக்கப்படும். அவர்களின் ஆன்மா இதன் மூலம் தூய்மையாக்கபட்டு, புதிய வருடத்தைத் தூய்மையுடன் தொடங்குவர். கடவுளின் உடனான புதிய உடன்படிக்கையில் அவர்கள் தங்களையும் அதன் மூலம்  இணைத்துக் கொள்வதாக நம்பினர். விழாவில் தொடர்ந்து எட்டு தினங்கள் குடித்தும், நன்றாக உண்டும் வசந்தத்தின் பெருநாளைக் கவலையின்றிக் கொண்டாடுவர். பசுமை அடர்த்திய கூடாரங்களில் அமர்ந்து, தேவன் தருவித்த வளங்களுக்காகவும், தொய்வடையாத அவனின் காருண்யத்திற்காகவும், நன்றி தெரிவித்துப் பிரார்த்தனைகள் செய்து, அவர் பெருமைகளின் சங்கீதத்தைப் பாடி, இன்னும் இன்னும் தங்களின் நிலம், அவரின் வற்றா ஈரத்தில் செழிக்க வேண்டிச் சடங்குகளைச் செய்வர். பாவங்களைச் சுமக்க, இறைவனால் அளிக்கப்பட்ட இந்தக் கிடாவிற்காகவும், ஆம்! நம் மீட்சியின் அடையாளமான இந்த விலங்கின் நற் பெருமைக்காகவும் அவர்கள் இறைவனைத் துதிப்பர். அது, பாவங்களின் சுமை கழுத்தில் இறுபடப் பசியின் வேதனையுடன் பாலைவனத்தில் பாதையற்று அலைந்து, வயிறு வெடித்துக் குடல் வெளித்தள்ளி சாகும் பொழுது, மக்களின் பாவங்களும் அதனுடன் ஒன்றாகச் களையப்படும்.

    விரிந்து அகன்றிருக்கும் ஆலயத்தின் சதுக்கம், ரத்தத்தால் நிறைந்திருக்கிறது. அதன் தகன பலிப் பீடத்தில் மந்தை மந்தையாக இறைவனுக்கானப் பலி, தொடர்ந்து நடந்து வருகிறது. புனித நகரம் எங்கும் மாமிசத்தின் வீச்சம் தடையற நிரம்பி வழிந்தது. பலியிடும் மிருகங்களின் மலம் நிலமெங்கும் வெவ்வேறு வடிவங்களில் திட்டுத்திட்டாகச் சிந்திக் கிடக்கிறது. பிரட்டும் அதன் நெடி ஒரு தனித்த இருப்பாக ஆலயத்தைச் சுற்றி வீசியது. இந்நகரின் புனிதக் காற்று, நாற்றத்துடனும், கொம்புகளின், ஊதுகுழல்களின் முழக்கங்களில் ஒரு பசித்த ரோமங்கள் அடர்ந்த வன்மிருகம் போல ஊளையிடுகிறது. அதிகமாகத் தின்றும் குடித்தும் பருத்திருக்கும் நகரத்தின் மக்கள், தங்கள் பழுவான ஆன்மாவை ஒரு வீக்கமடைந்த உறுப்பைப் போலத் தூக்கிச் சுமக்கின்றனர். முதல் நாளின் சடங்குகளில், சங்கீதங்களும், பிரார்த்தனைகளும் நடத்திக் கண்களுக்குப் புலனாகாத் தந்தை ஜெகோவாவின் பெயரினால், அவர்கள் தங்கள் கூடாரங்களில், குடித்து, நிறைவாக உணவு உண்டு மகிழ்ந்தனர். இரண்டு மற்றும் மூன்றாம் நாட்களில், பலி தொடர்ந்து அளிப்பட்டுக் கொண்டிருந்தது, நேர்ச்சைக்காக வளர்க்கப்பட்ட மிருகங்களின் ஊனும் குருதியும் அளவில்லாமல் படைக்கப்பட்டது. மதுவின் கிறக்கத்திலும், மாமிசத்தின் மதர்ப்பிலும் அவர்கள்  தன்னிலையிழந்துத் திளைத்தனர். மதுக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவர்கள் தங்களுக்குள் ஆபாச செய்கைகள் செய்தும், கேலியும், கிண்டலும் பேசிக் கூத்தடித்தனர். அங்கங்களை வர்ணிக்கும், கொச்சையானப் பாடல்களைப் பாடிக் களித்தனர். ஆண்களும் பெண்களும் பாரபட்சமின்றிக் குடித்து, வெட்கமின்றி அசிங்கமாகக் குழைந்தும், நடமாடியும், வெளிச்சத்தில் காண்பவர் கூசும் செயல்களைச் செய்தனர். முதலில் அவர்களின் கூடாரத்திலும், பின் தெருக்களிலும், வழிப்பாதைகளிலும், பின் அதனடுத்து வியாபித்துக் கிடந்த புல்வெளியிலுமாகக் கிடந்துத் தங்கள் அந்தரங்கத் தேவைகளைத் தீர்க்கும் முயக்கத்தில் ஈடுபட்டனர். பக்கத்து கிராமங்களிலும், ஊர்களிலுமிருந்த, பேர் வாங்கியப் பரத்தையர்களின் கூட்டம் மொத்தமும் ஜெருசலேமில் குழுமியிருந்தது. அந்தப் பெண்கள் அதீதக் கவர்ச்சியை ஏற்படுத்தும் அலங்காரங்களுடன், நறுமணத்தைலம் பூசிக் கொண்டு, கையில் அகப்படும் ஆண்களை மயக்கி, வழிப்பறி செய்து கொண்டிருந்தனர்.கானான் நிலத்தின் கடைசி எல்லை வரை இந்த எளிய விவசாயிகளும், மீனவர்களும் இந்த அளப்பறியாப் புனிதங்களின் வசீகரத்தில் வீழ்ந்து இன்புற்று ஆரவாரித்தனர். தங்கள் வாழ்வில் இதுவரை அனுபவித்திராத உடல்களின் திரட்சியை, முத்தங்களின் பல்வேறு சுவைகளை, அதன் கலையானுபவத்தை ஆழ்ந்து உள்வாங்கிப் போதையுற்றுக் கிடந்தனர்.

தன் மூச்சைப் பிடித்துக் கொண்டு கோபத்துடன், வேகமாக நகரின் தெருக்களின் வழியே  ஜீசஸ் வந்து கொண்டிருந்தான். வழிப்பாதையில், போதையில் அரை நிர்வாணமாக மண்ணில் விழுந்து கிடக்கும் ஆண்களைப் பார்த்தான். மதுவின் புளித்த நெடி, கொப்பளிக்கும் மனித நாற்றம், அருவருப்பும், குமட்டலுமாக முன்னேறிக் கொண்டிருந்தான். "சீக்கிரம்! சீக்கிரம்!" தன் பின்னால் வருபவர்களை விரைவுபடுத்தினான். வலது புறம் ஜானும், இடது புறம் ஆண்ட்ரூவும் அவனுக்குத்துணையாக முன் ஏகினர்.

    ஆனால் பீட்டர் தான் நின்ற இடத்தை விட்டு நகரவில்லை. கலீலியிலிருந்து விழாவிற்கு வந்திருந்த யாத்திரீகர்கள் அளித்த மதுவும், நன்று சுட்டு வேகவைத்த சுவையான இறைச்சியையும் விட்டு வர அவனுக்கு மனம் வரவில்லை. கூடுகையில் பேசிக் கொண்டிருந்த உரையாடலில் இருந்து வெட்டி விட்டு வெளியேற ஒக்காமல் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அவன் யூதாசையும், ஜேக்கப்பையும் கூட பேச அழைத்தான். ஆனால் அவர்கள் தங்கள் நண்பர்களைப் பற்றி புகார் கூற விரும்பவில்லை. ஆனால் முன்னே சென்று கொண்டிருந்த அம்மூவர்கள் மட்டும் பதற்றத்துடன் நகர்ந்து கொண்டே இருந்தனர். மற்றும் வழியில் இருக்கும் தடைகளைப் பற்றி சொல்லிக் கொண்டே மற்றவர்களையும் அங்கிருந்து வந்து விடுமாறு சத்தமாக உரக்கக் கூறிக் கொண்டே சென்றனர்.

    "நல்ல கடவுள், இந்த ஆசிரியன் நம்மைக் கொஞ்சம் ஆசுவாசமாக மூச்சுக் கூட விட விடமாட்டான் போல இருக்கிறது. நாமும் மனிதை பிறவிகள் தானே" என்று சலித்துக் கொண்டே முணுமுணுத்தான். "நாம் அப்படி என்னப் பெரிதாய் செய்து விட்டோம் என்று இந்த மனிதன் இப்படி அங்கலாய்க்கிறான்"போதையின் களிப்பில் ஏற்கனவே திளைத்திருந்த ஜேக்கப்பின் சொற்கள் குழறின.

    "இத்தனை காலம் நீ எங்கிருந்தாய் எனதருமை பீட்டர்?" தலையை சற்றே சாய்வாக ஆக்கிக் கொண்டு கிண்டல் கலந்த தொனியில் யூதாஸ் கேட்டான். "என்ன நினைத்து நீ எங்களுடன் வந்தாய்? நாமென்ன கல்யாண விருந்திற்கா போய்க் கொண்டிருக்கிறோம். எந்த நம்பிக்கையில் நம் பாதையின் தளங்களைப் பற்றி நீ, நன்றாக இருக்கும் என்று நீ யூகிக்கிறாய்?, எனக்குப் புரியவில்லை பீட்டர்!"

    அவர்களும் அமூவரைப் பின் தொடர்ந்து விரையத்தொடங்கினர். ஒரு கனத்த கார்வையான ஆண்குரல் ஒன்று அங்கிருந்த ஒரு கூடாரத்தில் இருந்து பீட்டரை விளித்தது. "ஹேய் பீட்டர், ஜோனாவின் மகனே! நில்!, நாற்றம் பிடித்த கலீலியனே! நாம் நேருக்கு நேர் தலையில் முட்டிக் கொண்டும் என்னை  நீ கவனிக்கவில்லையா?, வா! கொஞ்சம் மது அருந்தி விட்டே பேசலாம் வா!, அப்பொழுதுதான் உன் வீங்கிய மண்டை கொஞ்சம் சுருங்கி நீ தெளிவடைவாய். எதிராளி யார்? எங்கிருக்கிறோம் என்ற போதம் கூட அன்றி எங்கு போவதற்கு இப்படி துடித்துக் கொண்டிருக்கிறாய்"

    அப்பொழுதுதான் பீட்டர் சரியாக அக்க்குரலின் மனிதனைக் கவனித்தான். " அட! நீயா! என் அருமைக் கொழுத்த சிரியனே! சைமன் மெதுவாக மற்ற இருவர்களையும் தன் ஈறுதெரிய சிரித்துக் கொண்டே பார்த்தான்.

    "பயல்களே! இந்த முறை நீங்கள் தப்பிக்க வாய்ப்பில்லை. வாருங்கள்! ஒரு குவளையாவது மது அருந்தாமல் நான் உங்களை விடப் போவதில்லை". சைமன் ஊருக்கே தெரிந்த மொடாக் குடிகாரன். டேவிட்டின் வாசலிற்கருகே அவனது மதுக்கூடம், இன்பங்களின் களிப்பிற்கும், போதையின் உச்சக் கட்டத் திளைப்பிற்கும், உறுதியளிக்கும் நம்பகமானவன். ஆம்! அதனால் சரியாக அவனது கழுத்தை இறுக்கித் தூக்கிலிட எல்லாத் தகுதிகளும் கொண்டவன். ஆனால் அப்படி ஒன்றும் மோசமானவன் அல்ல. நாம் அவனுக்குத் தகுந்த மரியாதையை அளித்தால் போதும்." பீட்டர் தன் நண்பகளிடம் சொல்லிக் கொண்டான்.

    உண்மையில் சைமன் நல்லவன். பெரிய புகார்கள் இல்லாதவன். இளமையில் சிரியாவிலிருந்து இங்கு வந்து மதுக்கடை ஒன்றைத் திறந்தான். ஒவ்வொருமுறையும் பீட்டர் ஜெருசலேமிற்கு வரும் பொழுதெல்லாம் அவந்து வீட்டில் தான் தங்குவான். கடையும் வீடும் ஒன்றுதான். அங்கு அவர்கள் குடித்தும், நன்றாகத் தின்றும், பலவிதமானக் கதைகள் பேசியும் பொழுதைக் கழிப்பார்கள். ஏதேதோ கிழுகிழுப்பான பாலியல் கதைகளையும், ஊரில் நடந்த வேடிக்கையான நிகழ்வுகளையும், இருவருக்கும் தெரிந்தவர்களைப் பற்றியக் கேலில் கிண்டல்களையும் பேசிப் பேசி இரவைக் கடப்பர். சிலசமயம் ஏதோ நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிக் களிப்பர். சிலசமயம் அடி போட்டுக் கொள்வர். எல்லாம் அடங்கியப் பின், அடர்த்தியானப் போர்வையால் தன்னைச் சுருட்டிக் ஒண்டு பீட்டர் அயர்வான். சைமன் மிச்சம் மீதி இருக்கும் மதுவையும் விடாமல் குடித்துத் தீர்த்து, போதம் கழன்று நின்ற இடத்திலேயே அப்படியே விழுவான். விட்ட இடத்திலிருந்து பாடலின் வரிகளைத் தேடி எடுத்துத் தனக்குத் தானே உளறலான மொழியில் பாடுவான். கையில் இருக்கும் குவளையில், மீதம் இருக்கும் மது கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தில் சொட்டிக் கொண்டிருக்கும். குடிப்பதற்காக வாழ்பவன் என்று அவனை ஒத்துக் கொள்ளலாம்.

    அவர்கள் இருவரும் ஆழத் தழுவிக் கொண்டனர். இருவருமே அரைபோதையில் இருந்தனர். ஒருவரை ஒருவர் அன்பு தழும்ப, கண்கள் பனிக்க உற்றூ நோக்கினர். இறுக்கி அணைத்துக் கனைத்துப் பின், ஆழமாக மூச்சிழுத்து மற்றவர்களின் உடல் வாடையை  வாங்கிக் கொண்டப் பின், சைமன் நிறுத்தாமல் சிரிக்கத்தொடங்கினான்.

    "நான் சம்மதிக்கிறேன், என் யூகம் என்றுமேத் தப்பியதில்லை, நீ ஞானஸ்நானம் செய்து கொள்ளத்தானே போய்க் கொண்டிருக்கிறாய்!" இன்னும் சிரிப்பை அடக்காமல் சைமன் தொடர்ந்தான். "நல்லது! சரியான வழி! நண்பா! என் ஆசிர்வாதங்களும், பிரார்த்தனைகளும். நானும் நேற்றுதான் என்னை முழுக்கிட்டுக் கொண்டேன். எந்த இடத்திலும் நான் அதை மறுக்கவே இல்லை தெரியுமா!. உண்மையில் இப்போது எவ்வளவு நிறைவாக உணர்கிறேன் தெரியுமா? நண்பா! நீ சரியானப் பாதையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாய்?" ம்ம்! வாழ்த்துக்கள்!"

    "அதன் பின்பு ஏதேனும் மாற்றங்களோ, இல்லை ஏதாவது மேம்பட்டதாக  உன்னிடம் உணர்கிறாயா?" யூதாஸ் எதையும் அருந்தாமல் இறைச்சித்துண்டங்களை சவைத்துக் கொண்டேக் கேட்டான். அவனது அகம் முழுதும் முட்களால் நிரம்பியிருந்தது.

    "உன்னிடம் சொல்வதெற்கென்ன நண்பா!, நான் முதன்முறைத் தண்ணீரை ஸ்பரிசித்த நொடியிலிருந்து இன்று வரை நினைக்கிறேன். நானும் நீரும் எதிரெதிர் கூர் முனைகள். நான் இயல்பாகவே மதுவினால் ஆனவன். இந்தத் தண்ணீர் தேரைகளுக்கானது. ஆனால் அன்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். இப்பொழுது என்னக் குடி முழுகி விடப் போகிறது. நாமும் ஞானஸ்நானம் செய்து கொள்வதில் ஒரு தவறும் ஆகிவிடப் போவதில்லை. கண்டிப்பாகப் புதிதாக திருமுழுக்கிடச் செல்பவர்களில் ஒரு சிலராவது தங்களின் ஆன்ம பலத்தைப் பெருக்கிக் கொள்ளக் குடிப்பவர்களாகத் தான் இருப்பார்களே! அந்த வாய்ப்பை நாம் ஏன் தவற விட வேண்டும். எப்படியும் தெரிந்த முகங்கள் யாராவது இருப்பார்கள். அது மட்டுமில்லாமல், வருபவர்கள் அனைவரும் ஒரே போல முட்டாளாக இருக்க மாட்டார்கள் இல்லையா! அதனால் எனக்கான வாடிக்கையாளர்களை நான் ஏன் தவற விட வேண்டும் என்று தோன்றியது. தவிர பெரும்பாலனவர்க்கு என்னையும், டேவிட்டின் வாசலிற்கருகேயே இருக்கும் என் மதுவிடுதியையும் நன்றாகவேத் தெரியும். எதற்கு நீட்டி முழக்கிக் கொண்டு, நான் அங்கு போனேன். உண்மையில் அந்த தீர்க்கதரிசி, ஒரு கட்டுப்ப்படுத்த முடியாத வனமிருகம் போல இருந்தார். எப்படி அவரைப்பற்றி விளக்குவது?, அவரது நாசித்துவாரங்களிலிருந்து தீ உமிழ்வதை நான் என் சொந்தக் கண்களாலேயேப் பார்த்தான். அந்த எல்லாம் வல்ல தேவன் தான் என்னைக் காப்பாற்றினார். அவர் என் கழுத்தைப் பிடித்துத் தூக்கி, ஆற்றினுள் இழுத்துக் கொண்டு போய், தலையத் தாழ்த்தி என் தாடியில் தண்ணீர் படும்வரை அமிழ்த்தி விட்டார். நான் துடிதுடித்து அலறிக் கொண்டிருந்தேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர் என்னை முழுவதுமாய் முக்கிக் கொன்று விடுவாரோ என்று தான் நினைத்தேன். எப்படியோ ஒரு வழியாக நான் பிழைத்துக் கொண்டு உங்கள் முன் அமர்ந்திருக்கிறேன்.

    "சரி! ஆனால் அதன் பின் நீ எவ்வாறு உணர்கிறாய்? உன்னில் எதுவும் மாற்றம் நிகழ்ந்ததா, முன்னிலும் நீ இப்பொழுது மேன்மையடைந்ததைப் போல ஏதும் நினைக்கிறாயா?" யூதாஸ் மறுபடியும் வினவினான்.

    "நிச்சயமாக, நான் அருந்தும் மதுவின் மீது சத்தியம் செய்து சொல்கிறேன். அதன் பின்பு நான் நிறைய நல்ல மாற்றங்களை அடைந்தேன். உண்மையில் ஒருவிதமான சிகிழ்ச்சை போல, நான் குணமடைந்ததை என்னால் அறிய முடிகிறது. அவர் சொன்னார் நீ உனது பாவங்களிலிருந்து விடுவிக்கப்படுகிறாய் என்று. ஆனால், அது அவ்வாறல்ல, நான் சொல்வது நமக்குள் மட்டுமே இருக்கட்டும், உண்மையில் அந்த ஜோர்டான் நதியின் மேற்பரப்பில், சரியாக ஒரு பிடி ஆழத்தில்,  ஒரு விதமான கனத்த எண்ணெய் படர்த்தப்பட்டிருக்கிறதோ என்று நினைக்கிறேன். என்னுடையப் பாவங்களிலிருந்து அல்ல, ஆனால் என் உடலின் ஒரு சில வலிப் புள்ளிகள், அழுந்தும் இடங்களிலிருந்து முற்றிலுமாக நிவாரணம் அடைந்திருக்கிறேன்".

    சொல்லி முடித்ததும், பெருமையாகத் தன் கையிலிருந்தக் குவளையைத் தூக்கிக் காட்டி ஒரே அடியில் விழுங்கிக் கொண்டான். தன் முகத்தின், கன்ன ரேகைகள் அழுந்த, கண்கள் சுருங்கிப் பற்கள் தெரிய சத்தமாக சிரித்துக் கொண்டே அருகில் இருந்த பீட்டருக்கும், ஜேக்கப்புக்கும் குடிவையிலிருந்த மதுவை நிரம்ப ஊற்றினான். பின் மற்றுமொரு குவளையை யூதாசிடம் நீட்டினான்.

    "இந்தா! வாங்கிக் கொள், கொல்லனே! நீ குடிக்க மாட்டாயா? முட்டாள் முரடனே! நீ ஆசிர்வதிக்கப்பட்டவன் தெரியுமா உனக்கு, இது தண்ணீர் அல்ல!"

    "நான் குடிப்பதில்லை!" நீட்டிய கையை மறித்து பதிலளித்தான் செந்தாடிக்காரன்.

    சைமனின் குரல் சற்று தாழ்ந்தது. "நீ அவர்களில் ஒருவனா?" திகைப்பு அடங்காமல் கேட்டான்.

    "ஆமாம்!" மென்மையாக சிரித்துக் கொண்டே அந்த உரையாடலை நிறுத்திக் கொண்டான்.

    சிவப்பு மட்டும் கருமையானப் முகப் பூச்சுகளை வரைந்திருந்த இரு மத்திய வயதுப் பெண்கள் அவர்களைக் கடந்து சென்றனர். அவர்களில் ஒருத்தி நமட்டுதலாகக் கண்ணடித்தாள்.

    "அப்படியென்றால் பெண்களும் கிடையாதா?" சைமன் தடுமாறும் குரலில் கேட்டான்.

"ஆம்! அதுவும் கிடையாது" யூதாஸின் குரல் வறண்டிருந்தது.

    "அடப் பாவமே! என்ன இது நண்பா!" எதற்காக இப்படிப் பொறுத்துக் கொள்ளவேண்டும். இல்லை! யாருக்காக இந்த சொந்த வன்முறை, கடவுள் இந்தப் பெண்களையும், திகட்டாத மதுவையும் அளித்தது பின் எதற்காக. அவர் இதைத் தவிர்த்தாரா இல்லை நம்மைத் தான் அவர் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினாரா! உண்மையில் எனக்குப் புரியவில்லை நண்பா!"

    சரியாக அந்நேரத்தில் ஆண்ட்ரூ ஓட்டமும் நடையுமாக அவர்கள் முன் வந்து சேர்ந்தான். "சீக்கிரம்! சீக்கிரம்! நமது ஆசிரியர் மிகுந்த அவசரத்தில் இருக்கிறார்!" ஆண்ட்ரூ கிட்டத்தட்ட கத்திக் கொண்டிருந்தான்.

    "யார்? யாரைச் சொல்கிறாய்? யார்! அந்த வெண்ணிற அங்கி அணிந்து வெற்றுக் காலுடன் நடந்து செல்பவனையா சொல்கிறாய் ஆசிரியன் என்று" சைமன் தூரத்தேப் பார்த்துக் கைதூண்டு ஆண்ட்ரூவிடம் கேட்டான்.

    ஆனால் அதற்குள் சைமனைத் தவிர மற்ற மூவர்களும் அங்கிருந்து போய் விட்டனர். காலியான மதுக்குவளையையும், கோப்பையையும் வைத்துக் கொண்டு அவன் தனியாக வீதியில் அவர்கள் செல்வதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். "இன்னொரு பைத்தியக்காரன், மறுமைக்கு வழி காட்டுபவன் போல. ஆங்! அது கிடக்கிறது. அவனது ஆரோக்கியத்திற்காகவும் குடிப்போம், அப்படியாவது இறைவன் அவனுக்கு நல்புத்தியை அருளட்டும்" சொல்லிக் கொண்டே வாயில் மதுவைக் கவிழ்த்துக் கொண்டான்.

    ஜீசசும், அவனது துணைவர்களும் அச்சமயம் சரியாகக் கோவில் வாசலின் முன்னே இருக்கும் பிரதான முற்றத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் பிரார்த்திக்கச் செல்வதற்கு ஆயத்தமாகத் தங்கள் கை கால்கள் மற்றும் வாயினை சுத்தமாகக் கழுவிக் கொண்டனர். சுற்றும் முற்றும் நிகழவதை வேகமாகக் கவனித்தனர். ஒன்றிலிருந்து ஒன்றாக மனிதர்களும், பலிக்கான நேர்ச்சை மிருகங்களும், நீண்டுயர்ந்த தூண் மாடங்களின் இடைவெளிகள் வழித் தெரிந்தனர். நீலச்சலவைக் கற்கள் பதிந்த பாதை நேராக உள் நோக்கிச் சென்றது. மக்கள் கூட்டம் கூட்டமாக உள்ளே செல்வதும் வெளியே வருவதும், அவர்களின் ஆர்ப்பரிப்பும், ஆரவாரமும், கூச்சல்களும், தோல்க்கருவிகளின் பறை ஒலியும் கலந்து எங்கும் என்னதென்று விளங்க முடியாத சத்தம் மட்டும் காதை அடைத்துக் கொண்டு வெளிவந்தது. வாசலின் இருபுறமும் தங்கவேலைப்பாடுகளால் செய்யப்பட்ட திராட்சைக் கிளைகளின் புடைப்பில், கரு நீல நிறக் கொத்துக்களாக கனிகள் தொங்கிக் கொண்டிருந்தது. உள்ளே செல்லும் அப்பாதையின் இருமருங்கிலும், சிறியதும் பெரியதுமானக் கூடாரங்களும், கழுதை வண்டிகளும், பணப்பரிமாற்றம் செய்து தரும் வியாபாரிகளும், மது விற்பனை செய்பவர்கள், முடி வெட்டுபவர்கள், இறைச்சி வெட்டுபவர்கள் என்று சரியாகச் சொல்வதெனில் சந்தைக் கூச்சல்.

    காற்று புகுவதற்குக் கூட வழியற்று நிரம்பி வழிந்த திரளில், ஆங்காங்கே சண்டை போட்டுக் கொண்டும், கத்திக் கொண்டும் இருந்தனர். துர்நாற்றம் மட்டுமே எங்கும் நீக்கமற இருந்தது. மனித மாமிச  நெடியும், மிருகங்களின் மூத்திரமும் மலமும் கலந்த வாடை அச்சூழலையே உருக்குலைத்திருந்தது. எங்கும் மக்கள் அதைப் பற்றிய எந்தத் தொந்தரவுகளுமின்றித் தங்கள் சடங்குகளைச் செய்து கொண்டுப் பூசலில் திளைத்தும், அங்காங்கே மூக்கு முட்டக் குடித்துக் கொண்டு, அடி போட்டுக் கொண்டுத் தங்களால் இயன்ற வரை அச்சூழலை எல்லா வகையிலும் ஆக்கிரமித்துக் கொண்டனர். 

    ஜீசஸ் தன் உள்ளங்கைகளால் மூக்கையும், வாயையும் ஒரு சேர மூடிக் கொண்டுத் தன் முன் நிகழ்வதைப் பார்த்தான், எங்குமே ஒரு கோவிலுக்கான,   தேவனின் இருப்பிடம் என்பதற்கான அறிகிறிகளேத் தென்படவில்லை. " எனக்கு அருவருப்பாக இருக்கிறது. இந்த இழிவான விழா? மூடத்தனமான இந்தச் சடங்குகள் உண்மையில் குமட்டுகின்றது. எனக்காக அறுக்கக் வைத்திருக்கும் இந்தக் கொழுத்த இளங்கன்றுகளை என்னால் ஏற்க இயலாது. உங்களின் சந்தடிகளை, சங்கீதங்களை, சத்தங்களைத் தூக்கிக் கொண்டு ஓடி விடுங்கள்.. நான் முற்றிலுமாக இவை அனைத்தையும் வெறுக்கிறேன். உண்மையில் என்னை மறுக்கும், என்னிருப்பை நிந்தனை செய்பவைகளாகவே இவைகளைக் கருதுகிறேன்". அச்சொல், தேவனுடையதோ இல்லை தீர்க்கதரிசியினுடையதோ அல்ல. அது தன் முன்னே தன் தந்தைக்கு நிகழும் அவலத்தின் பாதிப்பினால் அவனது இருதயத்தில் அழுத்தம் மீதுற அழுகையாய்க் கதறி வெளியேறியது. ஒரு கட்டத்தில் தாங்க இயலாது வெலவெலத்துக் கொண்டே நின்ற இடத்திலிருந்தே அவன் சரிந்து விழுந்தான். தன் முன்னே வியாபித்திருந்த சிறுமைகள் மொத்தமும் ஒரு தூசுப்படலம் விலகுவது போல விலகியது. கோவிலின் மேல் முகடுகள் நீலம் விரிந்து வானம் வெளித்தது. அதனுள்ளிருந்த கனத்த மேகத்துண்டங்க்ள் பிளந்து உடல் முழுதும் நெருப்பு பூத்த, ஜ்வாலையினால் சிறகுகள் அடர்ந்த ஒருதேவதை வெளிவந்தது. ஒரு தீப்பிழம்பு போலக் கோவிலின் நடுமையத்தில் சுழன்ற அதன் செந்நிற விளிம்புகளிலிருந்து, கூர் நுனி கொண்ட வாள் மையமிட்டது. அது தங்கத்தால் வார்த்து ஒழுகி, நெடிதுயர்ந்து நிற்கும் கோவிலைக் குறி வைத்தது.

    ஜீசஸ் தள்ளாடிக் கொண்டேத் தனக்குள் பொருளின்றி முனகினான். ஆண்ட்ரூவின் கைகளுக்குள்ளிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மெல்ல எழுந்து நின்றான். முன்னே அழுகல் நாற்றம் வீசும் கோவிலையும், சதா கூச்சலிட்டுக் கொண்டே இருந்த மக்களையும் கண்கள் திறந்துப் பார்த்தான். தேவதையின் பிழம்புகள் ஒரு அழிவற்ற ஒளிக்குமிழாய் அவனுள் அமிழ்வதை உணர்ந்தான். தன் துணைவர்களை நோக்கி மெல்ல ஒரு பறவையைப் போலக் கைகளை அகல விரித்தான்.

"என்னை மன்னித்து விடுங்கள், நான் இன்னும் என்னை இழந்து விடவில்லை, சற்று நடுக்கம் மட்டும் தான் வேறு ஒன்றுமில்லை. வாருங்கள் செல்வோம்" 

"பிரார்த்திக்காமல் செல்வதா?" ஜேக்கப் குறுக்கிட்டான். அது உண்மையில் ஒரு அவதூறான சொல் போல அவர்களுக்கு நடுவே விழுந்தது.

"நாம் நம்முள்ளே பிரார்த்திப்போம்! ஜேக்கப்! நம் உடலே நம்முடையக் கோவில்"

அவர்கள் விரைவாக அங்கிருந்து அகன்றனர். யூதாஸ் முன்னே அவர்களை வழி நடத்திச் சென்றான். 

    தன் கைக் கோலினை ஆழமாக நிலத்தில் அழுத்தி விரைவானக் காலடிகளுடன் அவர்களுக்கு முன்னே தனியாக யூதாஸ் சென்று கொண்டிருந்தான். 

    கோவிலில் நிகழ்ந்தவை, அவனை குழப்பமடையச் செய்தன. "ரத்ததையும், மாமிசத்தையும், வெறிக் கூச்சலையும் உண்மையில் இவனால் தாங்க முடியவில்லை. அஞ்சுகிறான். இவன் யார்? நிச்சயமாக இவன் மெசியாவாக இருக்க வாய்ப்பில்லை!" யூதாஸ் தனக்குள் சொல்லிக் கொண்டான்.