ஞாயிறு, 25 டிசம்பர், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் - 81

    


The Last Temptation of Christ - Nikos Kazantzakis

     ஜீசஸ் பாலையினுள் நுழைந்தான். எந்த சிந்தனைகளுக்கும் இடம் கொடுக்காமல் நேரடியாக உள்ளே சென்று கொண்டிருந்தான். ஆனால் முன்னே செல்லச் செல்ல உள்ளூற உதறலும், பதற்றமும் அவனை  ஆட்கொண்டது.  அந்நிலம் அவனுக்கும் மிகவும் பரீட்சயப்பட்டதைப் போலத் தோன்றியது. அதே சமயம் அது நிலமே அல்லாதது போல, ஒரு வெட்ட வெளி போலக், கிட்டத்தட்ட அந்தரத்தில் கால் பதிந்தது போன்ற உணர்வு. தலைக்கு மேலும், காலுக்குக் கீழும் ஸ்தூலமான ஏதுமற்ற ஒன்றாய்ப் பின், ஒவ்வொரு அடியிலும் கால்கள் கொழகொழத்துப் போவது போல, மண்ணின் புதைவு அவனைக் குழப்பியது. ஆனால் எதற்கும் பயக்காமல் தன்னுடைய இரு பாதச்சுவடுகள் மட்டுமே பதிந்து செல்லும், அங்கே தன் சொந்தத் தனிமையைக் குடித்துக் கொண்டு அமைதியாக முன்னேறிக் கொண்டிருந்தான். சுற்றிலும் சிற்சிலப் புதர்கள் அங்காங்கு கொத்தாய் மண்டிக் கிடந்தது. புழுதியின் சொல் மட்டுமே நீக்கமுற நிறைந்திருந்தது. அவன் பிதற்றலுடன் உரையாட முயல்வது அதனுடன் மட்டுமே. தவிர்த்து காற்றின் பீறிடல். அது ஒரு மாபெரும் துவாரத்திலிருந்து, எல்லையற்றுத் தன் கைகளை விரித்துப் படர்ந்திருந்தது. தெரிந்ததும் தெரியாததும் கூடிக் கூடி உருகொள்ளும் மாய வெளியாய்  அந்நிலம் அவனுள் உருவெடுத்துக் கொண்டிருந்தது. சிறுவயது முதலே, கனவுகளில் பீடிக்கப்பட்டிருந்த அவனது நினைவின் தாழ்வாரங்களில் பாலையும், அதன் வெந்த மணமும், சதா அலையடித்துக் கொண்டிருக்கும் காற்றின் கார்வையும் ஒன்று கூடிக் கூடி, ஒருமாதிரியான இருண்ட வெளியாகியது. ஒரு ஆழமானக் குகையை நோக்கிச் செல்வதைப் போல மயக்கும். மண் பாளங்களின் பழுப்பு நிறம் பெயர்ந்தும் ,நெழிந்தும் செல்லும் பாதை, கணம், காலம், நேரம் என்பதற்கான எந்த அடையாளங்களுமற்றிருந்தது. ஆனால் முன்னே அனைத்துமே உயிருள்ளது, அது மாறிக் கொண்டே இருப்பதே அதற்கான உறுதிப்பாடு. அதனால் திண்மையான ஒன்று என்று ஒன்றுமே அங்கில்லை. எல்லாமே உடைந்தும் சிதறியும், சேர்ந்தும், கலந்தும் என, அவனது அகம் போலவே ஒவ்வொரு மணித்துளிகளிலும் வெவ்வேறு உருவம் கொள்வதை அவன் வெறுமனே ஒரு இருப்பாக கவனித்துக் கொண்டே நடந்தான். ஆனால் அதுவரை அவனுள் தேங்கியிருந்த துக்கத்தின் பாடுகள், கரைந்தழிந்திருந்தது. ஒரு விதமான பரவசத்துடனும், களிப்புடனும், சரியாகச் சொல்வதெனில், தன் தாயைக் காணச் செல்வதைப் போல, ஆவலுடன் சென்று கொண்டிருந்தான்.

    அம்மா எனும் நினைவுகள், அவனைக் கனவு வெளியினுள் தள்ளியது. சிறுவயதில், அவன் கண்ட ஒரு சொப்பனத்தினுள் தற்போது, தான் நிகழ்ந்து கொண்டிருப்பதாக அவன் நினைத்துக் கொண்டான். பல்லாயிரம் வருடங்களாக அவனின் எண்ணங்களின் தேங்கலில், குமிழியிடும் அந்த ஒரே கனவு. அது ஒரு இருண்ட, ஆழமானக் குகை. இரவின் வெளிச்சமன்றி ஏதுமற்றிருந்தது. அதனுள் ஒரு பெண் சிங்கம் தன் குட்டிகளை ஈனிக் கொண்டிருந்தது. அதன் உறுமலையும் , முணங்கலையும் கேட்ட ஜீசஸ் அதன் முன், தாகமும் பசியுமாக நின்று கொண்டிருந்தான். சட்டென்று எந்தத் தயக்கமுமின்றி அவன் அக்குட்டிகளுடன் சேர்ந்து அதன் முலையில், வாய் வைத்து பாலைச் சப்பத் தொடங்கினான். அப்பொழுது தான் எவ்வாறு இருந்தோம், என்ன உரு கொண்டிருந்தோம் என்பதைப் பற்றியத் தெளிவு அவனுக்கில்லை. அச்சிங்கமும் அவனைத் தன் இன்னொரு குட்டியைப் போலப் பாவித்துக் கொண்டு அமைதியாக அயர்ந்துக் கிடந்தது. பின் அவன் குட்டிகளோடு குட்டியாக, குகைக்கு முன்னே எல்லையற்று விரிந்துக் கிடக்கும், பசும் புல்வெளியில் குதூகலித்து விளையாடிக் கொண்டிருந்தான்.  சிங்கங்களுடன் ஒரு சிங்கக் குட்டிப் போல அவனும் கர்ஜித்துக் கொண்டும் குதித்து ஓடிக் கொண்டுமிருந்தவன், இடைவெட்டு போல ஒரு பெண்ணின் குரல் கேட்டு பதைபதைத்து எழுந்தான். அவனது அம்மா மேரி அருகில் ஒருக்கழித்துப் படுத்துக் கிடந்தாள். யாரிவள் என்றுத் துணுக்குற்றுப் பின் நிதானித்துக் கோபத்துடன் அவளைப் பார்த்தான். "ஏன் என்னை எழுப்பினாய்?, நான் என் சகோதரர்களுடனும், அம்மாவுடனும் விளையாடிக் கொண்டிருந்தேன் தெரியுமா?" வெறுப்பாக அச்சிறுவன் தன் அன்னையிடம் சண்டையிட்டதை இப்பொழுது நிகழ்ந்ததைப் போல ஜீசஸ் நினைத்துக் கொண்டான்.

    "அன்று ஏன் நான் அவ்வளவு மகிழ்ச்சியுடன் இருந்தேன் என்று இன்று தான் புரிகிறது. நான் என் அன்னையின் குகையில் இருந்தேன். ஒரு சிங்கத்தின் அணுக்கமான அரவணைப்பில். ஆம்! தனிமையின் மடியில்."

    வீரியன் பாம்புகளின் சீறல் ஒலி, கனத்தக் காற்று, மண் பாளங்களிலும், குன்றுகளின் மேடு பள்ளங்களிலிலும் பட்டுத் தெறித்துக் குமையும் சப்தம். காட்சிப்புலமற்ற இப்பாலையின் ஆன்மாவின் முடிவே இல்லாத அனக்கம்.

    ஜீசஸ் தலை குனிந்து மண்ணைப் பார்த்து, தன் வலதுகையை இடது நெஞ்சில் ஆழமாகப் பதித்து ஒரு அறைகூவல் போலத் தெரிவித்தான். " இங்கு நீ அறிந்து கொள்வாய்,  நீ நித்தியமானவன் என்று!"

    செவிகளைக் கூர்ந்து நடந்து சென்றான். பின் தொடரும் காலடிகள். ஆழமாக மண்ணை மிதித்து முன்னேறும் கனத்தத் தப்படிகள். "அமைதியாக, உறுதியுடன் தன்னைத் தொடர்ந்து எதுவோ வந்து கொண்டிருக்கிறது." நடுக்கத்துடன் நினைவு கூர்ந்தான். "அவள்! எப்படி மறந்தேன். அவள் என்னை விட்டு என்றுமே விலகவில்லை. என்னுடன் தானே அவள் எப்பொழுதுமே வந்து கொண்டிருக்கிறாள். அம்மா!....." அவனுக்குத் தெரியும், இது தன்னைப் பீடித்திருக்கும் சாபம் என்று. ஆனால் அவள் தம்முடனேயே எப்பொழுதுமே இருக்க வேண்டும் என்பதில் அவன் உறுதியாக இருந்தான்.

    பதற்றம் விலகி, திரும்பவும் நடக்கத் தொடங்கினான். எண்ணங்கள் சுழல் போலச் சுழன்று வேறு திசையில் கிளர்த்தியது. அந்தப் பறவை. வெண்ணிறச் சிறகுகளுடன் தலைக்கு மேலேக் குழறிக் கொண்டு சென்றதை நினைத்தான். அது சாதாரணமான ஒலி போல அல்ல. ஒரு எச்சரிக்கை போலவும், நிமித்தம் போலவும், வரவேற்பினைப் போலவும் பலவிதமாக அவனுக்குள் தோன்றியது. அது ஒரு மயக்கோ என்று கூடக் குழம்பினான். ஆனால் அது தான் தான் என்று அவன் நம்ப முயன்றான். தன்னுள் அது வரைக் கட்டுண்டிருந்தவை அனைத்தும் முறிந்து, சிறகுகள் படபடத்த தன் ஆன்மா பறப்பதாக எண்ணினான். அதுவரை அடைபட்டிருந்தப் பிடி தளர்ந்து அக்கணப்பொழுதில் பறத்தல் மட்டுமே உடலாகக் கொண்டு அது மேல் எழுவதை அவன் கண்ணுற்றான். ஆம்! ஆம்! நான் திருமுழுக்கிட்ட அச்சரியானக் கணத்தில் அதன் சீழ்க்கையை, சிறகடிப்புகளை, என்னைச் சுற்றி வட்டமிட்டு, அது எல்லையற்று வானமாய் விரிந்ததை நான் பார்த்தேன். அது தேவதூதனோ, இல்லை ஒரு காட்டுப்புறாவோ அல்ல, அது நான்! என் சொந்த ஆன்மா! "

    அப்பதிலினால் திருப்தியுற்றவன் போல உணர்ந்தவன், திரும்பவும் முன்னே நடக்கத் தொடங்கினான். அக்கனத்தக் காலடிகள் புழுதியை நசுக்கிக் கொண்டு அவனைப் பின் தொடர்ந்தது. இப்பொழுது அவனது எண்ணங்கள் ஓய்ந்து ஒருவாராக நிலைத்திருந்தது. தன்னால் தாங்க முடியாத ஒன்றுத் தனக்கு அளிக்கப்படுவதில்லை என்பதை அவன் உணர்ந்தான். "ஒரு மனித ஆன்மாவின் வலு அளப்பறியது. அது அற்புதங்களை நிகழ்த்துவது. அதனால் இயலாத ஒன்று என்று பூமியிலும், வானத்திலும் ஒன்றுமே இல்லை. அதுவே ஒரு பறவையின் விடுபடலாக, என் தலைக்கு மேலே எழுந்து வான் விரிந்தது. " தன்னைத் தானே தேற்றிக் கொண்டு, அமைதியாக வேகமெடுத்துச் சென்றான். ஆனால் சட்டென்று ஓரிடத்தில் நின்று விம்மத் தொடங்கினான். "ஏன்! அப்பறவை ஒரு மாயையாக, வெறும் கானல் நதியாக எனக்கு மட்டுமேத் தெரிந்த ஒரு காட்சிப்பிழையாக இருந்தால்," காற்றுச் சுழல், செவிப்பறைகளில் அறைகிறது, மண், புழுதித் தடத்தின் நீள் ரேகைகள் பதிந்தழிகிறது. தட்டழிந்து கொண்டிருந்தான் அப்புழுதியைப் போலவே. அவனால் எதனுள்ளும் தன்னைப் பொருத்திக் கொண்டு நிலை பெற முடிவதில்லை. அதுவே அவன் வரமும் சாபமும். இம்முடிவை எடுத்து, பாலை வெளியை அணுகுகையில் தன் உடல் முழுக்க ஒளி முகிழ்த்ததை, அது பட்டுப் படர்ந்து தன் பாதங்களிலிருந்து விரிந்துப் படர்ந்து, உலகம் முழுமைக்குமாய்த் தன் நீண்டக் கரங்களைப் படர்த்துவதை அவன் உணர்ந்திருந்தான். அதன் மாட்சிமை, அளப்பறியாத உவகை, வல்லமை, மறுக்க இயலாதத் தன்மை அனைத்தும்  சேர்ந்தே அவனை இயக்கியது.  "இந்நிலத்தினுள், நான் பணயம் வைப்பது என் தனிமையை, என் ரத்தத்தை, எலும்பும் நரம்பும் தோலும் உறுதியும் கொண்ட என் சொந்த உடலை,  என் திண்மையின் தளர்வுறாத நம்பிக்கையை. இங்கு  நான் கேட்க வேண்டியதையும், பார்க்க வேண்டியதையும் நிச்சயமாகக் காண்பேன். ஆம்! இதுவே என் கூடாரம். "தந்தையே! உம்மில் தாழ்ச்சியுறுகிறேன்!", நாம் இருவரும் இங்கு தனித்தமர்கிறோம். உம் சத்தியத்தின் பாதையை எமக்குக் காட்டும். நான் திரும்பிச் செல்லும் வழிகள் இல்லை. என் உடலையும் ஆன்மாவையும் உமக்கேக் காணிக்கையாக்கி உன் முன்னே நிற்கிறேன். இனிமேல் எனக்குப் பாடுகள் இல்லை. நீயே வழியும் உண்மையும் எனில், என்னை ஏமாற்றாது உன் சொற்களை அளியும்.  பலப் பலக் குரல்கள், சூறையாகக் காற்றில் அடித்து நிரம்புகிறது. பற்றுதலும், வேண்டுதலும் நீ மட்டுமே, தயை கூறும்! ஆமேன்!"

    சூரியனும் அவனும் ஒரே நேர்க்கோட்டில் பயணித்தனர். இப்பொழுது அவனது தலைக்கு மேலே சரியாக வானின் மேல் முகட்டில் அது ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவனது முழங்கால் வரை மண்ற்துகள்கள் பதிந்திருந்தன. தேகம் முழுதும் புழுதி திட்டுத் திட்டாகப் படிந்து வழிந்தது. தன்னைச்சுற்றிய வெற்று நிலத்தை அங்கும் இங்குமாய்த் திரும்பித் திரும்பிப் பார்த்தான். நிழலின் சின்னஞ்சிறியத் துணுக்குகள் கூட கிடைக்கவில்லை. வெட்டை நிலம், பொருமியது. ஒளியைப் பொசுக்கிப் பொசுக்கி நெடி கூடியிருந்தது. பாலை வேகுவது ஒரு மனிதஉடல் போலவே சுருங்கி விரிந்து சுவாசிப்பதாய் மயக்கு. சட்டென சிறகடிப்புகளை உணர்ந்தான். மேலே காகங்கள், வேகமாகக் கரைந்து கொண்டு, சற்றேத் தொலைவில் கருப்பாகக் கிடக்கும் ஒன்றினை நோக்கித் தரை இறங்குவதைக் கவனித்தான்.

    அழுகிக் கொண்டிருந்த ஒன்று அங்கு கிடந்தது. அதன் பிண நெடியின் கவிச்சி அவனை மெல்ல உலுக்கியது. சரியாக என்னவென்று தெரியவில்லை. மூக்கைப் பிடித்துக் கொண்டு அதனை நோக்கிச் சென்றான். காகங்கள் மூர்க்கமாகத் தன் கூர் நகங்களால் அதன் தோலைக் குத்தியும் கிழித்தும், தின்று கொண்டிருந்தன. அவைகளின் சப்தம், சுற்றிலும் பட்டுத் தெறித்து எதிரொலிப்பதைப் போல அவ்விடம் முழுதும் அதிர்ந்து கொண்டிருந்தது. ஒரு மனிதன் வருவதைக் கண்டதும், அவைகள் சிதறி விலகி, இன்னும் சத்தமாகக் கரையத் தொடங்கின. மெல்லப் பின் வாங்குவதும், பின் ஓரங்களிலிருந்து அதன் அருகே சென்று தன் அலகினால் குத்தி அதன் மாமிசத்தை துளைத்துக் கடிப்பதுமாய் அவைகள் ஒவ்வொன்றும் வெகு அவசரமாகத் தங்கள் வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தன. பறந்து விலகிய ஒவ்வொன்றின் வாயிலும் கொழுத்த மாமிசத் துண்டங்கள். வானத்தில் வட்டமிட்டுக் கொண்டே அவனை விரட்டும் தொனியில் அவைகள் இன்னும் சீற்றத்துடன் கரைந்தன. விலக்கி அருகே சென்ற ஜீசஸ், அடிவயிறு கிழிந்துக் குடல், மாலையாக வெளித்தள்ளிக் கிடக்கும அழுகிய ஆட்டின் உடலைப் பார்த்தான். வளைந்தக் கொம்புகளும், கருப்பும் சாம்பல் நிறமும் கொண்ட அதன் உடல், குதறப்பட்டுப் பிண்டமாய்க் கிடந்தது. ரத்தம் முழுதும்  வடிந்து நொதித்தழுகிக் கொண்டிருந்தது. கண்களும், விதைக் கொட்டைகளும் ஏற்கனவே உணவாகி விட்டன. ஒடிந்து ஒருபக்கமாகச் சரிந்துக் கிடக்கும் கழுத்தினில் கொத்தான வளையங்கள் இறுக்கிச் சீழும் ரத்தமும் படிந்து, சூரிய ஒளியினில் பளபளப்பதை ஜீசஸ் பார்த்தான்.  

    "பலி!" நடுக்கத்துடன் ஜீசஸ் பின் வாங்கினான். "மக்களின் பாவங்களைச் சுமந்து வந்தப் புனிதப் பலிகடா. கிராமங்களையும், மலைகளையும், புல்வெளிகளையும், கற்பாறைக் குன்றங்களையும் தாண்டி இறுதியாக இந்த வெட்டை நிலத்திற்கு வந்து உயிரை விட்டிருக்கிறது." வளையங்கள் இறுகி அதன் தலை வீங்கியிருந்தது. நாக்கு, ஊர்வன போல நகர்வதைக் கவனித்தான். அதனடியிலிருந்து எறும்புக் கூட்டம் ஒன்று, கொஞ்சம் கொஞ்சமாக அதனைப் பிய்த்துக் கொண்டிருந்தது.  

    சட்டென அருகே இருந்த மணல் மேட்டில், தன் கைகளாலேயே முடிந்த வரைக் குழி தோண்டினான். பின் அந்த செத்த உடலை அப்படியேத் தூக்கி குழிக்குள் இட்டு மண்ணள்ளி நிரப்பினான். கைகளில் இருந்த பிசுபிசுப்பை மணல் பரப்பில் பதித்துத் துடைத்துக் கொண்டான். ஆனால் துர் நாற்றத்தின் வீச்சம் அவன் உடல் முழுதும் தொற்றிக் கொண்டது. நாசியில் அதன் நெடியை அவனால் மறுதலிக்க முடியவில்லை.

    "என் சகோதரா,  எந்தத் தீங்குமற்றத் தூய மிருகமே! மனிதன்! தந்திரமிக்கவன். அனைத்திற்கும் மாற்று உபாயங்களை வகுத்து வைத்திருக்கும் கோழை. உன்னைப் பலியாக்கித் தங்களின் பாவங்களைக் கரைக்க நினைக்கும் ஈனன். அமைதியுறு!. உன் ஆன்மா நித்தியத்தின் இருப்பிற்குள் சாந்தியடைய என் தந்தையைப் பிரார்த்திக்கிறேன். தங்களின் பாவங்களுக்குப் பிராயச்சித்தம் தேடாது என் தந்தையின் கூடாரத்திற்குள் வருவிக்கப்படும் அவர்கள் மறுமையில் அவர் சினத்திற்கு ஆளாவார்கள். உன் தூய்மையின் பரிசுத்தம் உன்னைக் காக்கும். என் அன்பின் சகோதரனே! அமைதியுடன் விடைபெறு! ஆமென்!"

    முன்னே நடக்க எத்தனித்தவன்,  நின்று கலக்கத்துடன் தன் கைகளை  வான் உயர்த்தி அழைத்தான். " நிச்சயம் நாம் திரும்ப சந்திப்போம்!"

    காகங்கள் வெறிக் கூச்சலிட்டன. பல்லாயிரம் சிறகுகளின் படபடத்தல். "அருமையானத் தங்களின் உணவு பறிபோய் விட்டதை அவைகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவனைப் பின்தொடர்ந்து கூட்டமாகப் பறந்து வந்தன. எப்படி, தங்களுக்குக் கிடைத்த, அருளப்பட்ட உணவை இம்மனிதன், உண்ண விடாமல் தடுக்கலாம். அழுகிய உடல்களைத் தின்று வாழத்தானே எங்களை இந்தக் கடவுள் படைத்திருக்கிறான். இப்பொழுது என்ன கேடாகி விட்டது இம்மனிதனுக்கு. எங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட நிலத்தில் எங்களின் உரிமைகளைப் பறிக்க இவனுக்கு யார் கொடுத்தார்கள் அதிகாரம்? கண்டிப்பாக இவன் இதற்கான விலையைத் தந்து தான் தீர வேண்டும். நாங்கள் விடுவதாக இல்லை!" காகங்களின் கரைதல் அவனுள் எண்ணங்களாக விரிந்தன.

    இறுதியாக இரவு அணைத்தது. ஒரு பெரிய வட்ட வடிவிலான, மண் பாறையின் மேல் அவன் தளர்ச்சியுடன் அமர்ந்தான். "இனி மேல் என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது!" தனக்குக் கட்டளையிடும் யாரிடமோ சொல்வதைப் போன்றத் தொனியில் கூறினான். "இங்கு எனக்கான அரணை அமைத்துக் கொண்டு நான் விழிப்பில் அமரப்போகிறேன். எது வருமோ வரட்டும்!" இருள் சுருள் சுருளாக விரிந்துப் பாளம் பாளமாக, வானிலிருந்து மண்ணிற்கு உடைந்தும் நெழிந்தும், அடர்த்தியாகப் பரவிக் கொண்டிருந்தது. நாலாபுறமும் சுவர் போல கருமை எழும்பியது. குளிரின் வீரியம் கூடியது. காற்றின் சில்லிடல். அலறும் அதன் குரல், சட்டெனச் சன்னமாக ஒலித்துப் பின் உயர்ந்தது. ஒலி மேடு பள்ளங்கள் வழியாக அவனைச் சுற்றிக் குழுமியது. வானம் பெரிய மூடுதிரையாக வளைந்து கிடந்தது. இருளின் உயிர்த்தன்மை, அனக்கங்களாக, கூச்சலாக, ஓலங்களாக, நெடிகளாக, அடரும் மூட்டமாக அவன் முன்னேப் போக்குக் காட்டியது. பற்கள் கெட்டிக்கத் தொடங்கின. தன் வெண்ணிற மேலங்கியைக் கிளர்த்தி இறுக்கமாகச் சுற்றிக் கொண்டான். பகல் முழுதுமான அயர்ச்சியினால் தன்னையறியாமலேயே அவனது கண்கள் சொக்கின. கண்களை மூடியதும் பயம் ஒரு பூச்சியினைப் போல அவனைத் தொற்றிக் கொண்டது. தன்னைச் சுற்றி உலவும் இருள், அதன் பலவிதமான ஊளைகள்,  காற்றின் பம்முதல், எல்லாம் எந்நேரமும் தன்னைத் தாக்கிக் கொல்லப் போகும் வன் மிருகம் போல, அவன் அயர்ந்து வீழும் நொடிக்காகக் காத்திருப்பதைப் போல அவனுக்குத் தோன்றியது. சட்டென வானத்தைப் பார்த்தான். வெண் ஒளி மினுக்கம்.  அது பல்லாயிரம் விழிகள். இல்லை! பலப்பல மின்மினிப் பூச்சிகள். தேவனின் விரல் நகங்கள். அவனது உடல் முழுதும் ஜொலிக்கும், ஆபரணங்களின் மினுமினுத்தல்கள். தன் கற்பனையின் மொழியால், தன்னைத் தானே ஆசுவாசப்படுத்த முயன்றான். விண்மீன்களின் அசைவு, விண்ணுலகத்தின் அணுக்கத்தை அவனுக்கு ஸ்தூலமாகத் தெரிவித்தன. தேவனின் மணி முடியில், ஆறு ஒளிச்சிறகுகளாக ஒளிர்க்கும், சங்கீதங்களின் தாளத்தை அவனுக்கு நினைவு படுத்தின. ஆனால் அது வெகுதூரத்திலிருந்து ஒரு மெல்லியக் குரலாக அவனிடம் வந்தது. அவனால் அதன் முணங்கல் ஒலியை மட்டுமே அருகிருத்த முடிந்தது. அவனது அகம் முழுதும் பரவிய ஒளியின் வழியை மட்டுமே பற்றுக் கோடாகப் பிடித்துக் கொண்டிருந்தான். பசியும், தளர்ச்சியும், வாதையும் அவனை விட்டு விலகியது. அவனே அம்மாபெரும் இருள் வெளியின் கலங்கரை விளக்கம் போலத் தனக்குள் நினைத்தான். இறைவனை நோக்கியப் மன்றாட்டுதலின் கீர்த்தனைகளை தன்னுள்ளிருந்து பாட முயன்றான். அது தன்னை, தன் ஆன்மாவை, இருதயத்தைப் பிழிந்து சாறினை எடுப்பதைப் போல, சொற்களை, மொழியைத் தொடுத்து துதியை வருவிக்கும் பிரயத்தனமாக இருந்தது. தான் செய்கின்ற ஒவ்வொரு செயல்களும், கவனிக்கப்படுகிறது என்று நம்பினான். பணிவுடன், எளிமையான உடைகளுடன் நிற்கும் தேவதைச் சிறுமிகள் ஆதுரத்துடன் தன்னை நோக்கிக் கொண்டிருக்கின்றனர். அவனுள் இருக்கும் பதற்றமும் பயமும் மெல்ல மெல்ல விலகியது. சிறகுகள் ஒடுக்கித் தன்னைப் போர்த்திக் கொண்டு கண் அயரும், சின்னஞ்சிறு குருவியினைப் போல அவனும் உறங்கத் தொடங்கினான். சிறகடிப்புகள் கலைந்து ஒலியின் மோனம் நீக்கமுற நிறைந்திருந்தது.

    இரவின் குரல்கள் கலைந்தன. அவன் விழிக்கையில், இருள் துணுக்குகள் கூட மறைந்து, வானம் வெளிச்சம் உமிழத் தொடங்கியிருந்தது. கிழக்கிலிருந்து உயரும் மஞ்சள் கோளகம், ஆயிரம் தீக்கனல்களாய் ஒளியையும், வெம்மையையும் எல்லைகளின்றி விரித்தது. மண்ணிற்கு மேலே தழல் பூக்கும் மஞ்சளின் பாட்டையைப் பாறையின் மேலிருந்து உட்கிரகித்துக் கொண்டிருந்தவன், அதனைத் தந்தையின் உடல், ஸ்பரிசம், தொடுகை, அணைப்பு என்று பலவாறாக எண்ணி, அள்ளிப் பூசித் தன் உறக்கத்தைக் கலைத்தான். கண்களைச் சுருக்கி உறுத்தும் ஒளியினை கசக்கித் துடைத்தான். "தந்தையே! ஒரு தானியமணி போல இம்மண்ணில் கிடக்கிறேன், என்னை நீ அறிகிறாயா?, ஒரு விதையினைப் போல இம்மண்ணைப் பற்றிக் கொண்டிருக்கும் என் மூச்சினையும், குரலையும் கேட்கிறாயா? உன்னை விரும்பும், உன் சொல்லுக்காகக் காத்திருக்கும் உன் மகனை உன்னால் அடையாளம் காண முடிகிறதா? எந்த ஆயுதங்களும் என்னிடமில்லை. அன்பு எனும் ஒற்றைப் பிடிமானத்தைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டு உன் முன்னே அடிபணிகிறேன்.  நான் அறிவேன்! இது ஒரு போர்! என்னை நீ தேர்ந்தெடுப்பதற்கானத் தெரிவு! இங்கே நான் என் கைகளுக்குள் குஞ்சுப் பறவையைப் போலப் பாதுகாப்புடன் வைத்திருப்பது, என் பரிசுத்தமான அன்பு. அதனைக் கொண்டே நான் போரிட வந்துள்ளேன். தயை புரி தந்தையே!"

    தன்னுடன் ஜோர்டானிலிருந்துக் கொண்டு வந்திருந்த, கோரைப்புல்லினைக் கொண்டு, தான் அமர்ந்திருந்தப் பாறையைச் சுற்றி மண்ணில் வட்டமாக எல்கை வரைந்தான். 

    " நான் இந்த எல்லையினை விட்டு வெளிவர மாட்டேன்" சுற்றிலும் இருக்கும் வெட்ட வெளி முழுதும் கேட்கும் படி சத்தமாகக் கூறினான். அது அவனை எந்நேரமும் பற்றிக் கொள்ளக் காத்திருக்கும் காட்சிக்குப் புலனாகா சக்திகள் அறிந்துகொள்ளட்டும் என்பதைப் போல இருந்தது. "என் தந்தையின் சொல் என்னை அணுகாதவரை, நான் இதோ இங்கு வரைந்திருக்கும் தளத்தின் எல்லையை விட்டு நகரமாட்டேன். அவரது குரல் எனக்குத் தெளிவாகக் கேட்க வேண்டும். எப்பொழுதும் நிகழ்வதைப் போல, ஒரு தெளிவற்ற முணங்கலாக, ரகசியமாக, மின்னல் வெட்டாக, இடியின் குரலாக, பலப்பல சமிஞ்சைகளாக, வலியாக, பீடித்தலாக இல்லாது ஒரு தெளிவான மனிதக்குரலாக அவர் என் முன் வந்தாக வேண்டும். வந்து, அவர் என்னிடம் என்ன வேண்டுகிறார், என்னை என்ன செய்யச் சொல்கிறார், நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குத் தெளிவாக உரைக்கவேண்டும். அதுவரை இந்தத் தளத்தை விட்டு ஓரடி கூட நகரமாட்டேன். எதுவாயினும் சரி. அவரது கட்டளையை ஏற்பேன். மரணமானாலும், வாழ்வானாலும். அவரது விருப்பம். அவர் என்னை என்ன செய்ய முயல்கிறாரோ அதற்கு என் உடல், பொருள் ஆவி அனைத்தையும் காணிக்கையாக்குகிறேன்....என் தந்தையின் பெயரால்!, ஆமென்!"

    சூரியனுக்கு முன்னே முகத்தைக் காட்டிக் கொண்டு, எல்லையற்று விரியும் பாலையின் மணல் வெளியைத் தன் எல்லையினுள் அமர்ந்திருந்துப் பார்த்தான். கண்களை மூடியதும் எண்ணங்கள் ஓட்டமெடுத்தன. நாசரேத்திலுருந்துத் தொடங்கி, மாக்தலா, கார்பெர்னம், ஜேக்கப்பின் குடில், பின் ஜோர்டான் நதி என்று விலகி விலகி இறுதியாகத் தன் முன்னே வரிசைக்கிரமமாக அணிவகுக்கும் போர்வரிசையினை சூட்சுமமாக அவனுள் புலர்த்தியது. அவன் போர்புரிவதற்குத் தயாரானான்.

    நேராக நிமிர்ந்து, இறுக்கத்துடன் அமர்ந்திருந்தவனின் இமைகள் மூடியிருந்தன. அவன் தன்னுள் மூழ்கியிருந்தான். ஒலிகளின் கார்வை அவனுள்  கூடிக் கொண்டிருந்தது. ஆர்ப்பரிக்கும் நீர்மையின் பெருக்கோட்டம், கோரைப்புற்கள் கிலுங்கிக் கிலுங்கிக் கிழிகிறது, மனித விளி, புலம்பல்கள், ஓலங்கள்.....ஜோர்டான் நதியின் அலைப்பெருக்கு, கரைத் தொட்டு மீள்கையிலெல்லாம், வீறிட்டெழும் அழுகை, தூரத் தொலைவில் நடுக்கத்துடன் அதிர்ந்து கொண்டிருக்கும் நம்பிக்கையின் விதைப்பாடுகள், சீற்றத்தின் எழுச்சியால் கொஞ்சம் கொஞ்சமாகக் கரையக் காத்திருந்தது. ....அந்தக் காட்டு மனிதனுடன் மூன்று நீள் இரவுகளைக் கடத்திய ஞாபகங்கள் தான் அவனது மனதில் முதலில் வந்திறங்கியது. தன் எல்லாவிதமானத் தந்திரங்களுடனும், கவசத்துடனும் அவைகள், பாலைவெளிக்குள் அவனைக் குறிவைத்து ஊடுருவிக் கொண்டிருப்பதை அத்துறவி சரியாகவேக் கணித்திருந்தார்.

    அவருடன் இருந்த முதல் நாள் இரவு, ஒரு ராட்சச வெட்டுக் கிளி,  பழுத்த சாம்பல் நிறமான அதன் உருளையானக் வெறிக்கண்கள்,  படபடத்தும் அதன் வலுவானச் சிறகுகள், அதன் வெண்மையான அடிவயிற்றில் ஏதோ மந்திரச் சொல், பச்சையாகப் பொறித்திருந்தது. அதன் மூச்சின் கனம், சாக்கடலின் நெடியை ஒத்திருந்தது. வாயிலிருந்து வழியும் பசை நீர்மத்தை ஜீசஸின் மேல் உமிழ்ந்தது, அவன் நகர வாய்ப்பளிக்காமல் நேரடியாகத் தன் கூர்மையான உகிர்களால் அவன் தலையை அழுத்திப் பற்றியது. காற்றின் விசை, அதன் சிறகடிப்புகளால் கூடிக் கூடி அவன் பொடிந்து தூளாகி விடுவதைப் போல உணர்ந்தான். தன் உறுதியான மெலிந்தக் கைகளை, ஜெருசலேமின் இருள் பாதையை நோக்கி உயர்த்தி, அவர் ஜீசஸை நோக்கி வினவினார்.

"பார்! அங்கு நீ என்ன காண்கிறாய்?"

" எனக்கு எதுவும் தெரியவில்லை?"              

    "தெரியவில்லையா? பார்! உன் முன்னே தெரிவது ஜெருசலேம். புனித நகரம். நம் தந்தையின் கூடாரம். அங்கு அந்த வேசி உனக்குத் தெரிகிறாளா? ரோமானியர்களின்  கொழுத்த மடியில் அமர்ந்து கொண்டு, தன் தேகத்தால் அவர்களைக் கிளுகிளுப்பூட்டி, உறவு கொள்ளும் விலைமகள்.  நம் தந்தை அழுதுகொண்டிருக்கிறார். "எனக்கு வேண்டாம். இவள் தான் என் மனைவி என்றால் நிச்சயமாக எனக்கு இவள் வேண்டாம்!." நான் என் தந்தையின் காலடியில் அமர்ந்திருக்கும் காவல் நாய். அப்புனித நகரின் சதுக்கங்களிலும், தெருக்களிலும், ஆட்கள் கூடும் சந்தைகளிலும், மாடகோபுரங்களுக்கும் முன்னே சென்று அவளைப் பார்த்து வெறியேறக் குரைக்கிறேன். "இழிபிறப்பே! விட்டகன்று செல்! என் தந்தையின் நிலத்தை விட்டு ஓடிவிடு என்று". வானளவு உயர்ந்த, நான்கு மாபெரும் கோட்டை வாயில்கள் வழி அவளை அடையலாம். வாயிலின் முதலில் அமர்ந்திருப்பது பசி, பின் அச்சம், மூன்றாவதாக ஆநீதி, நான்காவது வடதிசை நோக்கித் திறந்திருப்பது இழிவு. அவளது தெருக்களுக்குள் முன்னும் பின்னும், இடமும் வலமுமாக எல்லா இண்டு இடுக்குகளுக்குள்ளும் செல்கிறேன். அவளது குடிகளை அணுகி சோதித்துப் பார்க்கிறேன். அவர்களது முகங்கள் கனத்தும், கொழுத்தும், வீங்கியும் இருந்த விகாரத் தோற்றத்தைப் பார். இவ்வுலகம் எப்போது அழியும் என்று தெரியுமா? மூவாயிரம் பேருக்கான உணவை, மூன்று பேர் மட்டுமே உண்டு செழித்து வாழ்வர். மற்றவர்கள் உண்ண ஏதுமின்றி, சொந்த மலத்தைத் தின்று, வயிறு வெடித்துச் சாவர். பார்! இம்மக்களின் அருளற்ற முகங்களை. பயம் மட்டுமே நீக்கமுறப் பீடித்து வெளிறிப் போயிருக்கிறது. சதா நடுங்கிக் கொண்டிருக்கும் அவர்களின் மூச்சின் அனத்தம் கேட்கிறதா? இவர்கள் நம் தேவனின் பிரார்த்தனைக்கூடங்களில் கூட, பெண்களுடன் சல்லாபிக்கின்றனர். மிகவும் நேர்மையானவன் என்று சொல்லிக்கொள்பவன் கூட, ரகசியமாக அவளின் மாமிசத்தின் ருசி அறிந்தவனே!"

    "பார்!...அவர்கள் மாளிகைகளின் வேர்களைப் பிடுங்கி எறிவதற்கே நான் வந்திருக்கிறேன். பார்! ராஜா என்று சொல்லிக் கொள்பவன், தன் சகோதரனின் மனைவியை, நிர்வாணப்படுத்திப் புணர்கிறான். நம் வேதங்களும், தீர்க்கதரிசன நூல்களும் என்ன கூறுகின்றன? எவன் ஒருவன் தன் சகோதரன் மனைவியை நிர்வாணப் படுத்துகிறானோ? அவன் சாவான். இந்தக் கேடுகெட்ட அரசன், சாக வேண்டியவன் தானே? ஒரு துறவியாக இதையே நான் கூற விளைகிறேன், ஆம்! நம் தந்தையின் நாள் வந்துவிட்டது. இவ்வுலகம் பொடிந்து தூள் தூளாகும் பார்!"

    ஒரு முழு நாளும், அக்காட்டுத்துறவியின் கனத்த ஆக்ரோஷமானச் சொற்கள், அவனை முழுக்கடித்திருந்தது. பசி, அச்சம், அநீதி, இழிவு எனும் நான்கு வாயில்கள் வழியாக, உள்ளும் புறமும் ஜெருசலேம் எனும் புனித நகரத்தில் பயணித்தான். வேசியின் நகரம், ரத்தத்தாலும், மாமிசத்தாலும் வேட்கையினாலும் நிறைந்திருந்தது. தேவனின் கோபம் வானின் மேகங்களை இருள் வெளியால் நிரப்பியது. செங்கனல் பொதிந்தக் கனத்தக் காற்று, தீக்கனல்களால் கீழிருக்கும் கீழ்மைகளை, ஒட்டுமொத்தமாக எரிக்கக் காத்துக் கொண்டிருந்தது.

    இரண்டாம் நாள் அவர், ஏதோ தன்னை உலுக்கி உந்துவதைப் போலச் சன்னதமெடுத்துக் கைகளை மேல் நோக்கி உயர்த்தினார். நாணல் புல்லைப் போல உயர்த்தியிருந்தக் கைகள் தங்களுக்குள் பிணைந்து சேர்ந்தும் அதிர்ந்து கொண்டிருந்தது. அது விண்ணிற்கும் மண்ணிற்குமாக ஏறி இறங்கியது. இரண்டையும் இணைப்பதும், மறுதலிப்பதுமான ஒன்றிடம் மன்றாடியது. சொல் எதுவும் எழுப்பவில்லை. ஆனால் சுற்றிலும் அதிர்வுகளின் தேற்றம். வானம் பொசுங்கும் நெடி. அது வெம்மையைத் திரட்டுகிறது. மண், அதனை உள்வாங்கித் தன் தேகமெங்கும் பரப்பி வெளிக்கிறது.

"காலம்! வெளி!"

"கவனி! நீ என்ன கேட்கிறாய்?"

"தெரியவில்லை!"

    "அவளது குரல், அந்த வேசை மகளின் குரைப்பொலி. கொஞ்சம் கூட வெட்கமின்றி, விண்ணுலகில் நம் தந்தையின் இருப்பிடத்தின் வாசலில் நின்று அவள் குரைப்பது உனக்குக் கேட்கவில்லையா? நீ வருகையில் அங்கு  ஜெருசலேமில் அதனைக் கவனித்திருப்பாயே, அங்கு கோவிலைச் சுற்றித் திரியும், பலவிதமானப் பூசாரிகளை. பொய்யர்களை, வீணர்களை. மந்திரம் சொல்லி அலறும் கீழ்ப்படி நிலையிலுள்ள பூசாரிகள், இறைவனிடம் நேரடியாகப் பேசி அற்புதங்கள் நிகழ்த்துவதாக, மக்களை ஏமாற்றிப் பணம் பிடுங்கும் மேல் நிலைப் பூசாரிகள், எழுத்தும், சொல்லும் அறிந்து வைத்திருந்து, வழிபாட்டினை மக்களுக்கு எடுத்தியம்பும், பொய்கள் கூறி அவர்களின் நம்பிக்கைகளைக் காசாக்கும் பூசாரிகள், சடங்குகள் செய்யும் பரிசேயர்கள் என ஒரு பெரும் கூட்டம் வாசலில், வியாபாரம் செய்து கொண்டிருக்கிறது. இவ்வுலகத்தின் ஆட்டங்களும், துடுக்குத்தனங்களும் வெகு நாட்கள் செல்லாது. தாங்கிக் கொண்டிருக்கும் கண்ணிகள் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து கொண்டிருக்கின்றன. அவனது பொறுமையின் கணங்கள் முடிகின்றன. அவன் எழுவான். தனக்கு முன்னே ஆத்திரமும், பின்னே தீ, வாதைமற்றும் பைத்தியம் எனும் மூன்று பேய்களுடன் அவன் வருகிறான். பெரும் பெரும் மலைகளை மிதித்து ஒரு காட்டாற்றினைப் போல அவன் இப்பூமிக்கு இறங்குவான். இக்கோவில் நகரம் சாம்பலாகும், இந்த இழிந்த பூசாரிகள் சாம்பலாவார்கள். இவர்களின் மாந்திரீகமும், அதன் லட்சிணைகளும் சாம்பலாகும், இப்பாதிரிமார்களின், பட்டுப் பீதாம்பரங்களும், தங்கக் கிரீடங்களும் எரிந்து சாம்பலாகும். அழிவற்றது! அழிவற்றது! என சதா துதித்துக் கொண்டிருக்கும், தங்க முலாம் பூசிய இந்த நீண்டுயர்ந்த கோவில் கோபுரங்கள் எரிந்தழியும். அனைத்தும் எரிந்து மட்கி சாம்பல் துகள்களாய் மீளும். ஜெருசலேம்! ஜெருசலேம்! நீ எங்கிருக்கிறாய், என் அருமை வேசி மகளே? என் கைவிளக்கினைப் பிடித்துக் கொண்டு, தேவனின் இருள்முடுக்குகளினுள் செல்கிறேன், அங்கு அனைத்தும் புழுதிப்படலமாக, மண்ணோடு மண்ணாகக் கரைந்து போயிருக்கும். என் கத்தலுக்கு, எதிரிடையாக காகங்கள் அங்காங்கு கரைந்து, கூட்டாக அழுகிய மீந்த உடல்களைத் தின்று கொண்டிருக்கும். நிணம் காயாத எலும்புகளும், மண்டை ஓடுகளும் என் முழங்கால் அளவு குவிந்து கிடக்கும். என்னையறியாது நான் அழுது கொண்டிருப்பேன். நான் என் கால்களால் விலக்கி முன்னே செல்கிறேன். கீழே குனிந்து சற்று நீண்ட ஒரு ஒற்றை எலும்பை எடுத்து, குழலாக்கி என் தந்தையின் மாட்சிமையைப் பாடத் தொடங்கினேன். அச்சங்கீதத்தின் இசைவு பெருகிப் பெருகி என்னைச் சுற்றிய நிலம் மொத்தமும் பரவசத்தில் நடனமாடிக் கொண்டிருந்தது.

    அந்த நாள் முழுதும், இருளடைந்திருந்தது. ஒளியும் கூட இருளைக் கூடியிருந்தது. அடங்காத அத்துறவியின் சிரிப்பொலி. ஜீசஸ் அவர் காலடிகளில் கிடந்து அழுது கொண்டிருந்தான். தீ! வாதை! கிறுக்கு! எனும் பேய்களின் பிடியில், பிணக்குவியல்களாய் நிரம்பி இருக்கும் மண்ணில் புழுக்களும், பூச்சிகளும், மாமிச உண்ணிகளும், மனித உடல்களை, மூர்க்கமாக உண்டு செரித்தன. 

    "வேண்டாம்! வேண்டாம்! ஏன்? நமது இரட்சிப்பின் நாள், அன்பின், கருணையின், களிப்பின் நாளாக இருக்கவில்லை, அதற்கான சிறு தொடுகையைக் கூடவா, நம் தந்தை நமக்கு அருளவில்லை!" ஜீசஸ் பொறுக்க முடியாது, கைகளால் தரையில் அறைந்தான்.

    துறவியின் பார்வை வான் நோக்கியிருந்தது. விண்மீன்களின் பரிசுத்த ஒளி. வானிற்கும் மண்ணிற்குமான இடைவெளி கூடிக் கூடிச் செல்வதைப் போல மயக்கு. ஊளை, சிறகடிப்புகள், கனைப்புகள், பூச்சிகளின் நிலையற்ற அரவம், காற்றின் ஜில்லிப்பு, பகல் முழுதும், எரிந்து வெந்த மண் திரும்பக் குளிர்ந்துத் தன்னைப் புதுப்பிக்கையில் உருவாகும் வாசனை எனப் பாலை நிலத்தின் அனைத்தும் உயிர்த்தன்மை கூடியிருந்தது. ஜோர்டான் நீரோட்டத்தின் நெகிழ்வு, நாணல் வெளிகள் அசைந்து அசைந்து, அந்த நீர்மையைச் உட்கிரகித்துஅத்துவான வெளியை நோக்கித் தெளிக்கும் துமி, காற்றினுள் நுழைந்து அதன் குளிர்ச்சியை தூரதூரத்திற்குப் பரப்பிக் கொண்டிருந்தது. 

    " நீ நம் மூதாதையர்களின் தீர்க்கதரிசனத்தை அறிந்தவன் தானே! நமது மீட்பர்களின் வருகை தீயாலானது. அவன் முதலில் நம் உடல்களை அழிப்பான். நாம் வெந்து சாவோம். விதைப்பதற்கு முன்னானப் பண்படுத்துதல் அது. நம் நிலங்கள் அனைத்தும் நெருப்பிட்டுக் கரியாகும். களைகளும் முட்புதர்களும் வேரோடுப் பிடுங்கி எரியப்படும். இந்தப் பொய்யையும், இழிவையும், அநீதியையும் வேறெப்படித் துடைக்க முடியும். பொய்யர்களை, வீணர்களை, மனிதத்தன்மையற்று நடந்துகொள்பவர்களை அழிக்காமல் எப்படி இந்தப் பூமியை சுத்தமாக்க முடியும். பயக்காதே! கவலையுறாதே! இது சுத்தமாக்கப் படவேண்டும். புதிய விதை, பரிசுத்தமான அந்நிலத்தில் முளைக்கப் பண்ணுவோம்!"

    இரண்டாவது இரவும் கடந்தது. ஜீசஸ் வாய் திறக்கவில்லை. மூன்றாவது இரவு அருளப்படட்டும். அந்த நாளில் தன் கேள்விக்கானத் தீர்வு கிடைக்கும் என்று அவன் நம்பினான்.

    மூன்றாவது இரவு, துறவி ஒரு பாறைக் குன்றத்தில் சம்மணமிட்டு மோனத்தில் அமர்ந்திருந்தார். வெறுமனே எதிரே அமர்ந்திருந்த ஜீசஸை நோக்கினார். அவனது உடல் முழுதும் பார்வையால் துளைத்தார். பின் தலையை அசைத்துக் கொண்டு வேதனையுடன் உள்முகமானார். அவரது ஆழந்த சுவாசத்தைத் தவிர்த்து அங்கு எந்த அனக்கமுமில்லை. நட்சத்திரங்கள் முளைத்துக் கொண்டிருந்தன. வானம் ஒரு மாபெரும் நதி போல நகர்ந்து கொண்டிருந்தது. பூமியின் ஒளியினால் அதன் நீர்மை மின்னி மறைவதே, நட்சத்திரத் திவலைகளாக மினுங்கியது. துறவியின் கண்கள் நிலைத்திருந்தது. அது வானின் சமிஞ்சைகளுக்குப் பதில் சொல்வதைப் போல வெவ்வேறு நிறம் மாறி பளபளத்தது. வெளிச்சம் நீள் அலகினைக் கொண்டப் பறவையினைப் போல மெல்ல சிறகுகள் ஒடுக்கி அவர்களைச் சுற்றி அமர்ந்தது. ஒளிரும் அவரது நெற்றி, சுருக்கங்கள் அடர்ந்து தீர்க்கமாகியது. இறுதியில் வானம் ஒளி கூடி, இருள் திட்டுத்திட்டுக்களாய்க் கரைந்து மறையத் தொடங்கியது. விடியலின் சுகந்தம் நிலத்தில் பரவியது. அவர் ஜீசஸின் கைகளை இறுக்கப் பிடித்துக் கொண்டு, அவன் பதற்றமுறும் கண்களை ஆழமாக நோக்கினார். சட்டெனக் கசப்புடன் தலை திருப்பினார். " நாணல் வெளியினுள் இருந்து நீ என்னை நோக்கி வருவதைப் பார்த்த அந்தக் கணம், என் அகம் ஒரு இளங்கன்றினைப் போல என்ன செய்ய என்று அறியாது துள்ளிக் குதித்தது. சிவந்த தலை முடி கொண்ட மேய்ப்பன், டேவிட்டை, சாமுவேல் பார்த்த அதே தருணம். அவன் எவ்வாறு உணர்ந்திருப்பான்? இதே போலத் தான் அவனது இருதயமும் துடித்ததா? ஆனால் தெரியவில்லை. இது என்ன? என்ன மாதிரியான உணர்வு என்று என்னால் விளக்க இயலவில்லை. ஆனால் இந்த இருதயம் ஒரு சதைப்பிண்டம். அது சதையையே நேசிக்கும். எனக்கு அதில் எந்த நம்பிக்கையுமில்லை. உன்னை முதல் முதல் பார்த்ததிலிருந்து உணர்கிறேன். நேற்று இரவும் அதுவே தோன்றியது. உன்னை ஆழமாக நான் சோதிக்கும் பொழுதெல்லாம், உன் கைகளைக் காணும் பொழுதெல்லாம் அது ஒரு தச்சனின் கைகளைப் போல இல்லை. ஒரு மீட்பனின் கைகளைப் போலவும் இல்லை.  மிருதுவும், உவகையும் அக்கைகளில் பொங்கி வழிகின்றன. அது பிள்ளையை அரவணைக்கும் தாயின் கைகளைப் போல, பாதுகாப்பும், கருணையும் மிக்கது. எப்படி இக்கைகளால் இந்த வலுவானக் கோடாரியைப் பிடிக்க முடியும். உன் கண்கள், அது ஒரு மீட்பனின் கண்கள் அல்ல. அது ஏன் இப்படி அல்லாடுகிறது. அதன் பதற்றம், அலைவுகள், அது பரிவுடன் என்னைப் பார்க்கிறது. அக்கண்கள் உண்மையில் என் அமைதியைக் குலைக்கிறது. ஒரு மானுடக் கண்கள் போலவே அது இல்லை. என்னால் உண்மையில் என்ன செய்ய என்று முடிவெடுக்க முடியவில்லை. தந்தையே! உன்னுடைய வழிகள் குழம்பியும், இருண்டும் இருக்கிறது.  ஒரு மென்மையானக் குஞ்சுப் பறவை, அநீதிக்கு எதிராக இவ்வுலகை, நெருப்பிலிடப் போகிறதா? நான் சதா வானத்தை உற்று நோக்கியிருந்தேன். ஒரு மின்னல் வெட்டாக, இடி முழக்கமாக, ஒரு கழுகினைப் போல இல்லையேல் ஒரு காகத்தைப் போல அல்லாது, ஒரு வெளிர்ந்த குஞ்சுப் பறவையினைக் கொண்டு நீ உன் வார்த்தைகளை எனக்களித்தாய்! கேள்வி கேட்பதாலோ, எதிர்ப்பதாலோ என்ன பயன்? உனக்கென்ன விருப்பமோ அதை நீ செய்யப் போகிறாய்?" அவர் தன் கைகளை விரித்து ஜீசஸைத் தன் உடலுடன் இறுக்கி வைத்துக் கொண்டார். அவனது நெற்றியிலும், இரு தோள்களிலும் முத்தமிட்டார். " நீயே அந்த ஒருவன் எனில், நான் காத்திருக்கிறேன். நீ நான் எதிர்பார்த்த வடிவத்தில் வரவில்லை. நான் இக்கோடாரியைத் தூக்கிக் கொண்டு நிற்பதன் பயன் என்ன? அல்லது அன்பின் பொருட்டே தேவன் இக்கோடாரியை எனக்களித்தானா? தெரியவில்லை. என்னால் முடிவெடுக்க முடியவில்லை." அவரது குரல் நடுங்கியது. "ஓரு வேளை என்ன நிகழப்போகிறது என்பதற்கான தீர்வை அறியாது நான் மரணிக்கலாம். ஆனால் நான் எனக்கு என் தந்தை வழங்கியதை சரிவரச் செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன். அதனை விரும்பியே செய்தேன்" அவர் ஜீசஸின் இருகைகளையும் பிடித்துக் கொண்டு ஆதுரத்துடன் பார்த்தார். பாரங்கள் மொத்தமும் இறங்கியிருந்தது. "போய் வா! பாலையில் உன் சொந்தத் தனிமையுடன் கடவுளை அணுகு. உனக்கான சொல்லை உள்வாங்கிக்கொள். ஆனால் இவ்வுலகத்தை தனித்து விட்டு விடாது சீக்கிரம் திரும்ப வா! இறைவனின் ஆணையுடன்!"

    ஜீசஸ் கண்களைத் திறந்தான். ஆனால் உள்முகமாக. ஜோர்டான் நதியின் நீள்வட்ட அலைகள் குமுழியிட்டு அவன் காணும் காட்சிப்படலத்தை நெகிழ்த்தியது. துறவியின் கடுமையானப் பார்வை அகலாது, அப்படியே அவரது உடல் மடிந்து கரைந்தது. மணலில் வரைந்தக் கிறுக்கல்கள், அலைப்பெருக்கில் கரைந்தழிவதைப் போல, அவன் முன் இருந்த வெளி மறைந்தது. சன்னதம் பூண்ட மனித உடல்கள், ஒட்டகங்கள் என்று எல்லாமும் உடைந்து உருகுவது வரை அவன் கண்கள் அகலாது, ஒரு மாயவெளியைக் காண்பதைப் போலத் தன் சொந்தக் காட்சிப்பிழையை அமைதியாக நோக்கிக் கொண்டிருந்தான். எல்லாம் மறைந்த பின், மண்ணும் காற்றும், வெம்மை மிகு ஒளியும் மட்டும் நீக்கமுற நிறைந்திருந்தது. பசி தலைக்கேறி சற்று மயக்கமுற்றிருந்தான். அவனது வயிறு இழித்துப் பிடித்துக் கொண்டது. நினைவுகள், எண்ணங்கள், தேவனின் சொல் என அனைத்தும் மறைந்து பசி எனும் உணர்வு, ஒரு தீயைப் போல அவனது உடலைப் பற்றியது. "எனக்குப் பசிக்கிறது!" தன் முன்னே இருந்தச் சிறிய பாறையிடம் முறையிடுவதைப் போலச் சொன்னான். தன் நீண்ட பயணத்தில், தான் உண்ட அத்தனை உணவுகளின் மணமும், சுவையும் அவனைக் கிளர்த்தியது. வரும் வழியில், தனக்கு உணவளித்த மூதாட்டியின் நரம்போடியச் சிறியக் கைகளை நினைத்தான். ரொட்டியின் மணம் நாசி நிரப்பியது. புளிப்பின், இனிப்பின் களிப்பு.  நாக்கினால் உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டான். ஊற வைத்த் ஆலிவ் பழங்கள்,  ஜென்னசரேட் நதிக்கரையில், துடிக்க துடிக்கப் பிடித்து சுட்டெடுத்துத் தனக்குத் தந்த சுவை குன்றா மீன்களின் ருசி, நுரைத்துப் பொங்கும் திராட்சை ரசத்தின் இனிய நறுமணம், மாதுளையின், பேரிச்சையின் அடி நாக்கில் தொற்றிக் கொள்ளும் இனிப்பு என, சுவைகளின் ரீங்காரம் அவனைச் சுழற்றியது. பசி எனும் ஒற்றை உணர்வைத் தவிர எதுவுமின்றி, கூசும் கண்களைச் சுருக்கி தூரத்தே வெறித்தான். அவனுள் குமையும் நெடிகள் இன்னும் பசியைக் கூட்டியது. ரத்தமும், மாமிசமும் எலும்பும் கொண்ட தன் சொந்த உடலைத் தவிர, பசிக்கு உணவாக ஏதுமற்ற நிலம், திக்கற்ற வானம். இரண்டிற்குமிடையில் ஓடிக் கொண்டிருக்கும் அந்தர நதியில், பசி எனும் சொல், ஒன்றாய் பலதாய், விரிந்து விரிந்துக் காணும் அனைத்தையும் விழுங்கி விடும் ஆக்ரோஷத்துடன் குமிழியிடுகிறது.

    தொண்டை எரிந்து அடைத்தது. மெல்ல வலியுடன் தன் உமிழ்நீரை வீச்சமான மணற்துகளுடன் விழுங்கிக் கொண்டான். உலகில் ஓடும் அனைத்து ஆறுகளின் நீரையும் குடித்தாலும் தீராத தாகம். வானிலிருந்து இறங்கி, பாறைகளையும், குன்றுகளையும், மணல் மேடுகளையும், பள்ளங்களையும் தாண்டி, இஸ்ரவேலத்தின் நரம்புகளின் வழி நிறைந்து, பல்வேறு கிளைகள் கிளைத்து இறுதியில் சாக்கடலில் கரைகிறது, இந்நிலத்தின் நீர். கிளம்பும் முன் ஜோர்டான் நதியில் கை நிறைய அள்ளிக் குடித்தபின் இங்கு வரும் வரை அவன் ஏதும் அருந்தியிருக்கவில்லை.பசியும் தாகமும் இணைந்து அவன் நாக்கை கசப்பாக்கியது. வெளிச்சத்தில் கலங்கிய கண்களைக் கசக்கித் துடைத்தான். சற்றே தொலைவில், பழுத்து நெழியும் வெயிலினுள் இருந்து இரு கருப்பு நிற முயல்கள் தத்தித் தத்தி அவன் அருகே வந்தது. இரு கைகளையும் பின்னால் பிடிமானமாக வைத்துக் கொண்டு சாய்ந்து அமர்ந்திருந்த அவன் கால்கள் வழி, இரு தோள்களிலும் பற்றி ஏறிக்கொண்டது. ஒன்று தண்ணீரைப் போலக் குழுமையாகவும், மற்றொன்று ரொட்டியினைப் போல மிதமான சூட்டுடன், புளிப்பு மணத்துடன் இருந்தது. சட்டென நிமிர்ந்து அமர்ந்தவன், வெறியுடன் அவைகளைப் பிடிக்க முயல்கையில், அது காற்றில் புகையாகக் கரைந்து மறைந்தது.

    அவன் கண்களை மூடிக் கொண்டான். பசி, தாகம் எனத் தன்னுள் உருளும் வலிகளின் பிடிமானங்களைத் தளர்த்த முயன்றான். தன்னிடம் போக்கு காட்டிக் கொண்டிருந்த மனத்தைப் பிடித்து இருத்தினான். அதன் சிதறிச் செல்ல முயலும் சொல்லை அடக்கி, ஒற்றைச் சொல்லாக்க முயன்றான். எண்ணங்கள் போதமற்றுக் குழுமியிருந்த வெளி சட்டென ஒற்றைச் சொல்லைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தது. மந்திரம் போல அச்சொல்லையேத் திரும்பத் திரும்ப முனகினான். சொல்லின் கூர்மை கூடக் கூட, உணர்வுகள் சுருங்கி, உடல் முழுதும் அதனைப் பிரதிபலித்து அதனுள் அடங்கியது. "மீட்பின் சொல்! தேவன் எனக்கருளிய ஒற்றைச் சொல்! அவன் சர்வ வல்லமை படைத்தவன் அல்லவா! ஏன்! அவன் அதனை நிகழ்த்தவில்லை. மானுடர்களின் இருதயத்தில் தன் தொடுகையால், இந்த மலர்ச்சியை அற்புதமாக அவனால் செய்திருக்க முடியுமே?. ஒரு தாவரத்தின் வெற்றுத் தண்டுகள் இலை துளிர்ப்பதைப் போல, ஒரு மாபெரும் புல்வெளி பச்சையே உடலாகப் பூத்துக் குலுங்குவதைப் போல, முட்களிலிருந்து பூவை மலரவைப்பதைப் போல, எளிதான காரியம். ஏன்? மனிதனின் ஆழத்திலிருந்து, வேர் பிடித்து ஒரு பரிசுத்தமான மலர்ச்சியை அவரால் தோற்றுவிக்க முடியாதா, என்ன?"



வியாழன், 22 டிசம்பர், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -80

     


    The Last Temptation of Christ - Nikos Kazantzakis

    ஜீசஸ் திரும்பவும் நதியைக் கவனித்தான். முன்னே வியாபித்துப்படரும் மண் பாறைக்குன்றங்கள், ஒன்றிலிருந்து ஒன்றாக ஊர்வனவற்றின் லாவகத்துடன், மேலும் கீழும் இறங்கி ஏறிக் கொண்டிருந்தது. எங்கும் நீக்கமுற நிறைந்திருந்தப் புழுதி, அதன் அடங்காத ஓலம். கீழே நின்று கொண்டிருந்த மக்கள் குழாம். அவர்கள் ஒவ்வொருத்தரிடமும் நிலையாக இருந்த அமைதியின்மை. தூரேக் கிடக்கும் சாக்கடல். தன் சொந்த நிழல், நதியின் அலையோட்டத்தில் நெழிந்தும், உடைந்தும் பின் சேர்ந்தும் உருவாகிக் கொண்டிருந்த வடிவமின்மை என்று ஒன்றொன்றாக அவனுள் காட்சிப்புலம் குறுக்குவெட்டாய்ச் சிதறிக் கலங்கியது.

    "எவ்வளவு ரம்மியமானச் சூழல், இந்நதிக்கரையில் காலமற்று அமர்ந்திருக்கிறேன். சதா அலையடித்துக் கொண்டிருக்கும் நீர்மையில்  என் நிழல் உருவின் தோற்ற மயக்கங்கள், வழியெல்லாம் பசிய மரங்களின் தொய்வற்றக் காற்று, அதற்குப் புறத்தே நாணல் வெளியின் முடிந்தேவிடாத இறைஞ்சுதல். பறவைகளின் சீழ்க்கை, சிறகடிப்புகள். இரவு நெருங்குகையில், விண்மீன்கள், தங்கள் சிறகுகள் ஒடுக்கி, நதிமரத்தில் கூடணைகின்றன. நீர்மையின் குமிழினுள், அதன் மிணுக்கங்களின் தெறிப்பு, நீள் கோடுகளாய் நெழிந்து, விளிம்புகளில் அலைக்கரங்களால் மண்ணைப் பற்ற முயன்றுப் பின்வாங்குகின்றன. நானும் ஒரு சின்னஞ்சிறிய விண்மீனைப் போல நதியினுள் பாய்ந்து விடவேண்டும். என் உடல் ஒரு நீள்வட்ட நீர்க்குமிழாய் உருமாறி, நதியின் ஓட்டத்திற்கேற்ப, நானும் உடைந்தும் கோர்த்தும், சுழன்றும், சலனித்தும், விளிம்பினிலிருந்து மறுபடியும் உட்புகுந்து என விளையாடிக் கொண்டே இருந்தால் எப்படி இருக்கும். ஆனால் வேண்டாம்! என்னை ஆக்கரமிக்க முயலும் இந்நிலத்தினால் விழுங்கப்பட்டு விடக்கூடாது...."ஜீசஸ் தன்னுள் திமிறும் எண்ணங்களுக்கு கொடுக்க முயன்ற வடிவங்களின் தோற்றங்கள் சட்டென்று அழிந்து மறைந்தது.

    தலையை இருபுறமும் உதறிச் சமநிலை படுத்த முயன்றான். தன்னுள் உருவான ஆசையின் கொதுப்புகள் அவனைக் குலைக்க முயல்வதாய் நினைத்தான். சட்டென்று தலையை நதியின் பார்வையிலிருந்து திருப்பினான். அவசர கதியில் வேகமாக, வெற்றுப் பாறைப் பிளவுகள் பதிந்த நிலத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். செந்தாடிக்காரன் கரையின் மற்றொரு ஓரத்தில் நின்று கொண்டு, அவனை வெறுமனே அதிருப்தியுடன் உற்று நோக்கினான். இன்னும் அவனால் நம்பமுடியவில்லை. எந்த நேரமும் இந்தப் பாவப்பட்ட ஜென்மம் தன் பாதையை விட்டு எப்படியும் விலகிவிடுவான் என்று அவன் உறுதியாக நம்பினான். தன் மேலங்கியின் கனத்த அடிப்பகுதியால் முகத்தை முற்றிலுமாக மறைத்துக் கொண்டு, அவனால் பார்வையிட முடியாத தொலைவிலிருந்து அவனைப் பின் தொடர்ந்து சென்றான்.  சாம்பல் பாறை நிலத்தைத் தாண்டிய பின், மண்ணைத் தவிர ஏதும் அற்ற நிலவெளி, அது முடிவேயற்ற வெற்று நிலம். உயிர்கள் கூட இருப்பதற்கு சாத்தியமற்ற அந்நிலத்தின் எல்லைதொடங்கும் இடம் வரை அவர்கள் பயணப்பட்டார்கள். ஜீசஸ் அதனுள் இறங்குவதற்கு முன்னே, செந்தாடிக்காரன், அவன் முன் மூச்சிறைக்க வந்து நின்றான்.

    "டேவிட்டின் மகனே! நில்! எதனால் என்னை இவ்வாறு நீ விட்டுச் செல்ல முனைகிறாய்?" 

    "யூதாஸ், என் அன்பனே!" மன்றாடும் தொனியில் ஜீசஸ் அவனைப் பார்த்தான். "வேண்டாம்! சகோதரா, இதற்கு மேல் நீ வராதே. நான் தனித்துச் செல்ல வேண்டும்."

    "நான் உன் ரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டும்." சற்று முன்னேறி அவனை நோக்கி வந்த யூதாஸ் பதிலுரைத்தான்.

    "அவசரப்படாதே! நண்பா, உனக்கான நேரத்தில், நீ அதனைச் சரியாகப் புரிந்து கொள்வாய். என்னால் இவ்வளவு தான் இப்பொழுது சொல்ல முடியும். கவலைப்படாதே, சகோதரனே! எல்லாம் சரியாகும். நம்பு!"

    "எல்லாம் சரியாகுமா? இந்த வெற்று வார்த்தைகள் என்னை சமாதானப்படுத்தும் என்று நீ நினைக்கிறாயா?, ஒரு ஓநாயின் பசி, இம்மாதிரியானச் சொற்களில் அடங்காது. ஒருவேளை அது உனக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அதனை நான் நன்றாகவே அறிவேன்."

    "என் மேல் உண்மையிலேயே நீ அன்பு கொண்டிருந்தால், காத்திரு. ஒரு மரத்தினைப் போல. விதை துளிர்த்துக் காய்த்துக் கனியாகும் வரை அது நிலத்திலிருந்து வான் நோக்கிக் காத்திருக்கும் மன்றாட்டினைப் போல!"

    " நான் மரமில்லை. ஒரு மனிதன்," மறுப்புடன் ஜீசசின் அருகில் வந்தான். " நான் மனிதன், மட்டுமல்லாது நம் செயல்களை அவசரமாகச் செய்தாக வேண்டியுள்ள நிர்பந்தம் உள்ளது. உனக்கேத் தெரியும், நான் என் சொந்த விதிகளை மட்டுமே நம்புவேன். அதுவே என் வழி."

"நம் தேவனின் என்றைக்கும் விதி ஒன்றே! அது மரமானாலும் மனிதனாலும் சரி,  யூதாஸ்."

    யூதாஸின் வெறுப்பும் கசப்பும் மட்டுமே கொண்ட கண்கள் மட்டுமே வெளித்தெரிந்தது. சொற்களினால் அவனுக்கு இதுவரை கிடைத்த நம்பிக்கையின்மை, ஒரு இருண்ட நிழல் உரு போல, அவன் தோள்களில் அமர்ந்திருக்கிறது. இன்னும்  இச்சொற்களின் பீடிப்பு தன்னை விட்டபாடில்லை என்று தனக்குள் நினைத்துக் கொண்டான்.

"ஓ! அப்படியா? அந்த விதி என்ன சொல்கிறது?"

    யூதாஸ் தன் கைமுஷ்டியை இறுக்கிக் கொண்டே அவனைப் பார்த்துக் கேட்டான். 

"காலம்!"

    அவன் அறிவான். உண்மையில் வேறு பதில்கள் எதுவும் இந்த மொன்னையான ஆட்டிடம் இருந்து கிடைக்கும் என அவன் எதிர்பார்க்கவில்லை. உண்மையில் இந்தக் காத்திருப்புகளின், பலிகளும், வாதைகளும், நோய்மையும்தான் அவனை ஒரு வனமிருகம் போல இப்போது ஆக்கியிருக்கிறது. கடவுளின் இந்த விதி என்பது மிகவும் மெதுவானது. உண்மையில் அப்படி ஒன்று நிகழ்கிது என்று கூட அவன் நம்பவில்லை. அதனால் கடவுளின் விதிக்கு எதிராகத் தன் சொந்த விதியை உருவாக்கிக் கொண்டான். அது நேரெதிரானது. காலம்! அதன் காத்திருப்புகள்! என்பதை அது நம்புவதில்லை. அதற்குப் பதிலாக செயல் புரிவதே, உறுதியானதும் விரைவானதுமான வழி என்று அவன் நினைத்தான். இதுவரை நிகழ்ந்த இழப்புகளுக்கெல்லாம் பதில் சொல்வதன் அவசரம் அவனிடம் தீர்க்கமாக இருந்தது.

    "நம் தேவன் மரணிப்பதில்லை. அவன் இன்னும் எத்தனை காலம் வாழ்வான் என்றும் அறுதியிட்டுக் கூற இயலாது" அவன் வெறியுடன் கத்தினான். "அழிவேயற்றவனல்லவா அவன்! அவனால் பொறூமையுடன் காத்திருக்க முடியும். ஆனால் நான்! நான் ஒரு மனிதன். உனக்கு ஒன்று சொல்கிறேன், கேள்! நான் என் மனதில் நினைத்திருப்பதை என் சாவுக்கு முன்பு பார்த்திருக்க வேண்டும். வெறுமனே பார்த்தல் அல்ல, அதன் ஒவ்வொரு அங்கங்களையும் என் சொந்தக் கைகளால் தொட்டு உணர வேண்டும். என்னுடைய அவசரம் உனக்குப் புரிகிறதா. இப்பொழுதும் நாம் விரைவு கொள்ளவில்லையெனில், உண்மையில் எனக்குத் தெரியவில்லை, நீ என்ன மாதிரியான நம்பிக்கையில், காத்திருக்கச் சொல்கிறாய் என்று!"

    "நிச்சயமாக நீ அதனைப் பார்ப்பாய்!". ஜீசஸ் தன் கைகளை உயர்த்தி அவனை அமைதிப்படுத்த முயன்றான். " நான் சொல்கிறேன், நாம் அதனைக் காண்போம், நம்மால் அதனைத் தொட்டு உணர முடியும். யூதாஸ், சகோதரா! நம்பிக்கையோடு இரு. விடை பெறுகிறேன். நம் தேவன், இப்பாலை நிலத்தினுள் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான்."

" நானும் உன்னோடு வருகிறேன்:"

"இந்த மாபெரும் பாலைவெளி நம் இருவரையும் ஏற்றுக் கொள்ளாதா என்ன?"

    ஒரு வேட்டை நாயைப் போல செந்தாடிக் காரன், தன் எஜமானனின் சொற்களுக்காக வெறியுடன் நின்று கொண்டிருந்தான். ஆனால் எந்தப் பலனும் இல்லை. நிலத்தில் குத்திட்டிருந்த அவனது பார்வை சற்றுத் தளர்ந்தது. திரும்பலாம் என்று முடிவெடுத்தான். திரும்ப, ஜோர்டான் நதியை நோக்கி விரைவாகச் செல்லத் தொடங்கினான். பராபஸுடன் மலைகளினுள், பதுங்கியிருந்ததும், தீவிரமாக எதிரிகளைக் கொல்வதைப் பற்றிய வியூகங்களை வரைந்ததும், அதைப் பற்றி விவாதித்துக் கொண்டதும் பற்றி நினைத்துக் கொண்டுத் தனக்குள் தானே பிதற்றினான். "இறைவனுக்கு நன்றி! பராபஸ்! அவனல்லவா! தலைவன். என்ன மாதிரியானச் சுதந்திரம் முழங்கும் வெறிகொள் சூழல் அது. இஸ்ரவேலத்தின் கடவுளின் பாதுகாவலன், ஒரு போர்வீரனாகத் தானே இருக்க வேண்டும். கடினமும், மாட்சிமையும் பொருந்திய என் தலைவன். அவனைப் போல ஒரு தலைவன் வேண்டும் நமக்கு. இந்த ரோமானியர்களின் கொட்டத்தை அடக்கி, இஸ்ரவேலத்தை விடுதலை அடையச் செய்ய நாம் அவனுடன் துணை நிற்கலாம். ஆனால் நான் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறேன். எதற்காக, இந்தப் பேதையைப் போன்ற மனிதனின் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறேன். ரத்தத்தைக் கண்டாலே அலறும், சதா அன்பு! அன்பு! என்று பிதற்றும் பித்தன்! தெரியவில்லை! பொறு! கொஞ்சம் பொறு! இவன் இப்பாலை வெளியிலிருந்து  மீண்டுத் திரும்பி வந்து நமக்காக என்ன கொண்டு வரப்போகிறான் என்று பார்க்கலாம்!"


புதன், 21 டிசம்பர், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் - 79

    


The Last Temptation of Christ - Nikoz Kazantzakis

    அந்தக் குகைப் பிளவைத்தாண்டி சற்று தொலைவில் ஒரு சிறிய பாறைத்துண்டத்திற்குக் கீழே மண்ணில் குத்துக் காலிட்டுத் தனித்து அம்ர்ந்திருந்தான் அவன். மற்றவர்களைப் பார்க்கவோ, இல்லை அவர்களிடம் பேசவோ அவன் விரும்பவில்லை. கால நேரமற்று அமர்ந்திருந்தவன் தன்னை அறியாமலேயே உறக்கத்தில் அயர்ந்தான். சரியாக அந்நேரத்தில் அவன் அத்தீர்க்கமானக் குரலினால் ஆட்கொள்ளப்பட்டான். சிதறிச் சிதறிக் குழறும் பாலையின் காற்று போல அது அவன் செவிகளில் அறைந்தது.

"தீ! சோடோம்! கொமோரோ! தயாராகு!"

    சட்டென்று விழிப்புற்று எழுந்து அமர்ந்தவன், யூகிக்க முடியாத சொற்களின் அதிர்வலைகள், அவனைத் தாண்டிச் சென்றதை உணர்ந்தான். பின் இரவுப் பறவைகளின் சிறகடிப்புகளாக, அலறல்களாக, காற்று வேகமெடுக்கையில், புழுதி கிளப்பும் சப்தங்களாக, ஓநாய்களின் ஊளையாக, நதியின் கரைகளில், காற்றின் திசைவேகத்திற்கு வளைந்து உராய்ந்து பரவும் நாணற்புற்களின் ஓசையாக என அச்சொற்கள் குவிந்தும் சிதறியும் உருமாறிக் கொண்டே இருந்ததைக் கூர்ந்து கவனித்தான். பின் தன்னிலையற்று, நதிக்கரையை நோக்கி, உந்தப்பட்டவன் போல, ஓடத் தொடங்கினான். நதியின் நீர்மை அடிப்பாதங்களில் புலப்பட்டதும், வேகம் கூடியது, நதியின் நடுப்பகுதிக்கு வந்தவன், விம்மிக் கொண்டிருக்கும் தலையை நீரினுள் முக்கினான். தீயை அள்ளிக் கொள்வதைப் போலச் சன்னதமெடுத்துத்,  தன் உடல் முழுதும் வெறியோடு நீரினால் அணைத்துக் கொண்டான். பசித்த மிருகம் இரையின் வயிற்றுத் தோலைக் கடித்துப் பிளப்பதைப் போல, நதியின் தோலைக் கிழித்து அதன் ஆழ்ந்த வெம்மையிண் துடிதுடிப்பினுள் தன்னைப் புதைத்துக் கொள்ள முயல்வதாய் இருந்தது.

    "எப்படியும் அவன் இங்குதான் வரவேண்டும். வேறு வழியில்லை. அவனுக்கு பிடிக்கிறதோ இல்லையோ, நான் அந்த ரகசியத்தை அவனிடமிருந்துப் பிடுங்கிக் கொள்ளத்தான் வேண்டும்." என்று தனக்குள் கருவிக் கொண்டான். 

    ஜீசஸ் மலைக் குன்றங்களைத் தாண்டி முன்னேறி வருவது ஒரு புள்ளியாகத் தெரிந்தது. யூதாஸ் அங்கிருந்து கிட்டத்தட்ட ஒரு ஓநாயைப் போலவேத் தன் கையில் இருந்தக் கவைக் கோலை அழுத்தமாக ஊன்றிக் கொண்டு அவனை நோக்கி விரைந்து ஓடினான். மற்றவர்களும், ஆரவாரத்துடன் அவனை வரவேற்க ஓடினர். அருகில் வந்ததும், அவனது கை, கால்கள், உடல் எனத் தடவிக் கொடுத்தனர். அணைத்து முத்தமிட்டனர். ஜான் தாங்கமுடியாது அழுது கொண்டிருந்தான். ஒரு தோல்பறை போல பம்! பம்! என அவனது அகம், தனது ஆத்மகுருவினைத் தேடி சதா அதிர்ந்து கொண்டிருந்தது. அது கண்ணீர்த்துளிகளாய் ஜீசஸின் பாதங்களை வருடியது. ஆனால் போனவனும் திரும்பி வந்தவனும் ஒருவனல்ல என்பது அவர்கள் அனைவருக்கும் தீர்க்கமாக உரைத்தது. தங்கள் குருவிடம் இன்னதென்று அறிந்து கொள்ள முடியாத ஒரு மர்ம பாவம் ரேகைகளாக முடிச்சிட்டிருப்பதை அனைவரும் உணர்ந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாகவும், கூட்டாகவும் அதுவரை, அந்தக் காட்டுமிராண்டித் துறவியுடன், தங்கள் குருவின் சம்பாஷணைகளை பல்வேறு விதமாகக் கதையாடிக் கொண்டிருந்ததை நினைத்து அத்தருணம் துணுக்குற்றனர். ஆனால் வந்திருக்கும் மனிதன் முற்றிலும் தாங்கள் அதுவரை அறிந்து  வைத்திருந்தத் தன்மையிலிருந்து வேறுபடவில்லை, என்பது ஒன்றே அவர்களை சற்று அமைதி கொள்ள வைத்தது.

    பீட்டரால் இதற்குமேலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. "துறவியே! தயை கூர்ந்து சொல்லுங்கள், திருமுழுக்கிடுபவருடன் தாங்கள் மூன்று பகலிரவுகளாக என்ன உரையாடினீர்கள். தங்களின் அகம் உவப்போடு இல்லை. முகம் வாடி, துக்கத்தில் இருண்டிருக்கிறது. என்னவாயிற்று? "

    "அவர் இன்னும் சிறிது காலமே இவ்வுலகில் இருப்பார்" ஜீசஸ் அமைதியாக அனைவரின் கண்களையும் கூர்ந்து பதிலளித்தான். "அனைவரும் அவருடன் இருந்து, திருமுழுக்கைப் பெற்றுக் கொள்ளுங்கள். நான் போக வேண்டும்"

    "எங்கே செல்லப் போகிறீர்கள்?" நாங்களும் உங்களுடன் வருகிறோம்!" செபெதீயின் இளையமகன், நடுக்கத்துடன் ஜீசஸின் அங்கி நுனியைப் பற்றிக் கொண்டு சிறுபிள்ளை போல அழத் தொடங்கினான்.

    "இப்பயணம் தனித்தது. நான் தனியனாகவே செல்ல வேண்டும். அங்கு நம் கடவுளின் குரலுக்கு நான் செவி சாய்க்க வேண்டும். எனக்கான பதிலை அவன் அருளட்டும்." ஜீசஸ் சலனமின்றிக் கூறினான்.

    "கடவுளுடனா?, எங்கே! இந்தப் பாலைவெளியின் ஆழத்திலா! வேண்டாம். உங்களால் திரும்ப வரவே முடியாது." பீட்டர் சற்று அமைதியிழந்திருந்தான்.

    "நான் திரும்பி வரவேண்டும்!" ஜீசஸின் குரல் தாழ்ந்திருந்தது. "கண்டிப்பாக நான் திரும்ப வந்துதான் ஆகவேண்டும். ஆம்!  நம்புங்கள் சகோதரர்களே! இந்த மொத்த உலகும் ஒற்றை நூலினால் கோர்க்கப்பட்டிருக்கிறது. நம் தேவனின் சொற்களை நான் தனித்திருந்தே அறிதல் அவசியம். எனக்காக அருளப்பட்டது எதுவாயினும் அதனை ஏற்கத் தலைப்படுவேன். நான் திரும்பி வருவேன்" ஒரு வீர முழக்கம் போல, ஜீசஸ் அவர்களை நோக்கிக் கூறினான்.

    "எப்பொழுது? இன்னும் எத்தனை நாட்கள் நாங்கள் காத்திருக்க வேண்டும் துறவியே! பாருங்கள் நீங்கள் எம்மை எப்படி விட்டுச் செல்கிறீர்கள் என்று. நாங்கள் உங்களை இப்படி அத்துவானத்தில் விட்டுக் காத்திருக்க இயலாது. புரிந்து கொள்ளுங்கள். வேண்டாம்!"  அனைவரும் ஜீசஸைப் போக விடாது தடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அங்கு வந்த யூதாஸ் மட்டும் எதுவும் பேசாது அனைவரையும், தனித்தனியாக உற்று நோக்கினான். அமைதியாக, ஆழமான வெறுப்புடன் ஜீசஸைப் பார்த்தான். கேலியாகத் தன் தாடியை வருடிக் கொண்டே, சிரித்தான். " பலியாடு! பலியாடு....! இஸ்ரவேலத்தின் தெய்வத்திற்கு நன்றி, அவர் என்னை ஒரு ஓநாயாகப் படைத்ததற்கு" ஆனால் உள்ளூற சிறு குழப்பமும் தயக்கமும் உடனடியாக அவனைப் பீடித்துக் கொண்டது. வேறு எதுவும் பேசிக் கொள்ளாமல், ஜீசஸின் கண்களை மட்டுமே ஆழ்ந்து நோக்கினான். அவனால் உண்மையில் அதனை சகித்துக் கொள்ள முடியவில்லை. சட்டென்று பார்வையைத் தவிர்த்து, முகம் திருப்பி மண்ணை நோக்கிக் காறி உமிழ்ந்தான்.

    "நான் வருவேன்! இறைவனின் விருப்பமிருந்தால், அதுவரை நீங்கள் இங்கேயே காத்திருங்கள். வேறென்ன! ம்ம்! விடைபெறுகிறேன்! என் சகோதரர்களே!"

    கலங்கிய விழிகளுடன், அவர்கள் அனைவரும் மெதுமெதுவாக, ஜீசஸ் பாலையை நோக்கிச் செல்வதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். முற்றிலுமாக உருமாறிப் போயிருந்தத் தங்களின் தலைவரை அவர்கள் ஒருவிதப் பரவசத்துடனும், பதைப்புடன் பார்த்தனர். வழக்கத்திற்கு மாறாக, கால்களைப் புழுதியில் அழுந்தப் பதிந்து, சற்று சாய்வாக முன்னேறிக் கொண்டிருந்தார். கணத்திற்குக் கணம் உருமாறிக் கொண்டே இருக்கும் அவரது உடல் மொழியை அவர்கள் ஒவ்வொருவரும் நினைத்துப் புதிரடைந்தனர். வழியில் குனிந்து ஒரு நாணல் புல்லைப் பிடுங்கிக் கையில் துணைக்கு வைத்துக் கொண்டு, பாறைப் பிளவுகளுக்கு இடைப்பட்ட, நதிக்குக் குறுக்காகப் போடப்பட்ட வளைந்தப் பாலத்தைக் கடந்து கொண்டிருந்தான். சட்டென்று நின்றவன், எதிரே நதியை நோக்கினான். பழுத்த வண்டல் அடர்த்தியை முழுக்கிக் கொண்டு அமைதியாக நகர்வே உடலாகக் கொண்ட நீர்மையின் நீண்டப் பாட்டையை உற்று நோக்கினான்.  அதனுள் நின்று கொண்டிருக்கும் மனிதத் தலைகள். முகங்களின் இருளடைந்த பிரதேசங்களில் குறுக்கு மறுக்காகப் பயணப்பட்டான். நிழல்வெளிகள் அங்காங்கே உலர்ந்தும், உடைந்தும் பொருக்கோடிப் போயிருந்த நதிக் கரைகளில், தங்கள் மார்புகளில் அறைந்து கொண்டு பிரார்த்தனைகளால், பாவங்களைக் கழுவ முயலும், துயர் வடிவங்களின் சன்னதத்தைக் கவனித்தான். சற்றுக் கூன் விழுந்தது போல அவர்களுக்கு மத்தியில், துடியுடன் அதிர்ந்து கொண்டிருக்கும் துறவி, அவர்களை ஒவ்வொருத்தராக நீரினுள் முக்கி எடுக்கையில், அவரின் உடல் நரம்புகள் ஒரு நீண்டத் தந்திக் கருவி போல வானிற்கும் பூமிக்குமாக, அதிர்ந்து விம்மி விம்மித் தன்னிலை இழந்துத் தளர்ந்துப் பின் சுருங்கி நீள்வதை அவனால் நேரடியாக உணர முடிந்தது. அக்காட்டுக் கூச்சல்களினுள் அவன் எதையோ, தொலைந்ததைத் தேடுவதைப் போலக் கூர்ந்தான். அவனால் அதனை எப்படி என்று விளக்கமுடியவில்லை, ஆனால் அவன் அதிருப்தியடைந்திருந்தான். உண்மையில் நம்பிக்கையும் இழந்திருந்தான். அங்கு நிகழ்வதில் எந்தத் தர்க்கப்பாடுகளையும் அவனால் அறிய முடியவில்லை. ஏன் இத்தனைக் கோபம், வெறிக் கூச்சல். எங்குமே அன்பின் நிமித்தத்தைக் கூட உணர முடியவில்லையே! என்று தனக்குள் பிதற்றினான். ஒரு மந்தையானக் குழாம் முடிந்ததும் அடுத்த மந்தைகள் தன்னுணர்வின்றி, அப்படியே நதியினுள் இறங்கித் தங்களை முழுக்கிட்டுக் கொண்டனர். அவர் வானத்தை அத்தனை ஆக்ரோஷத்துடன் வெறித்தார். ஒரு உறிஞ்சுக்குழாய் போல வானத்தின் தயையினை வேண்டிக் கொண்டு நிற்கும் மூர்க்கம் அதை அப்படியே பூமிக்குள் இறக்குவிட வேண்டும் எனும் பதைப்பு, அது நடந்தேற இயலாதத் தன்மையினால் உருவாகும் அமைதியிழப்பு, வெறிகொள்ளல், சன்னதமெடுத்து  மறுபடியும், ஒரு தூற்றல் போலப் பழித்தல். பின் திரும்பவும் முடிவிலிருந்து தொடங்கி, இறைஞ்சுதல், பிரார்த்தித்தல், துக்கித்தல், பாவங்களுக்காக வருந்தி அழுதல் என்றுத் திரும்பத் திரும்ப நிகழ்ந்து கொண்டிருந்தது. ஒருவகையான மன்றாடுதல் மட்டுமின்றி, எதிர்பார்ப்புகளின் திண்மை உடையும் பொழுதெல்லாம், கோபம் தலைக்கேறிக் கொண்டே இருந்தது. அது நீரினுள் இறங்கியது. மண்ணெல்லாம்  நீக்கமற்றுப் பரவி, சர்ப்பம் போல மொலுமொலுத்தது. அவரது குரல் மட்டும் இரவும் பகலுமற்று, அக்காட்டு நிலத்தினை ஆக்கிரமித்து அதிர்ந்து கொண்டே இருந்தது. 

செவ்வாய், 20 டிசம்பர், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -78

     

The Last Temptation of Christ - Nikos Kazantzakis

    திருமுழுக்கு ஜான் ஜீசஸை, உதடுகள் பொருத்தி ஆழ்ந்து முத்தமிட்டார். அவரின் வலுவானக் கரங்களுக்குள் ஜீசஸ் நடுங்கிக் கொண்டிருந்தான். எரி கங்கு போன்ற அவரின் தனல் ஜீசஸின் அகத்திற்குள் இறங்கியது. "இறுதியாக நான் என் ஆன்மாவை உமக்கு அளிக்கிறேன். நீயே அந்த ஒருவன் எனில், நான் எனக்கான இறுதிச்சொல்லுக்காகக் காத்திருக்கத் தலைப்படுகிறேன். அதே சமயம் இதுவே நாம் சந்திக்கும் கடைசித் தருணம் போல என் உள்ளுணர்வு துடிக்கிறது. ஆம்! இவ்வுலகில் நாம் சந்தித்துக் கொள்ளும் கடைசி சந்திப்பு இதுவாகவே இருக்கக் கூடும் என நான் நினைக்கிறேன்" சன்னதமெடுத்த அவரது கனத்தக் குரல் சூழலின் நிசப்தத்தைக் கிழித்துச் சென்றது. சொல், ஒரு ஆதி ஆயுதம் போல அவர்களுக்கு முன்னானப் பெரு நிலத்தைக் குத்திக் கிழித்து முன்னேறுவதை அவர்கள் இருவரும்  தன் ஆன்மாவின் நெருப்பினால் கேட்டுக் கொண்டிருந்தனர்.

    "ஆம்! நானும் கேட்கிறேன்" ஜீசஸ் மெல்லியக் குரலில் கூறினான். அவனது குரலின் மென்மை, ஒரு சேரக் குழைவும் தீவிரமும் கொண்டிருந்தது."அச்சொல்லை நான் எவ்வாறு அர்த்தப்படுத்திக் கொள்ள, தாழ்ச்சியுறுகிறேன் சகோதரரே! எம்மைப் பெலப்படுத்தும்"

        "உன் உணர்வுகளை மாற்றிக் கொள்ள முயற்சி செய்! இளைஞனே! உறுதியுடனும், திடத்துடனும் பயணப்படு. உன்னுடைய வாழ்வின் கனத்தை என்னால் அறியமுடிகிறது. உன்  புருவங்களிலிருந்து ரத்தம் வழிவதைப் பார்க்கிறேன். முட்களால் தருவிக்கப்பட்டக் கிரீடம் உன் தலையை அழுத்துகிறது. சகோதரா! வலி! வலி! என்று அதிரும் குரலினைக் கேட்கிறேன். தாங்கிக் கொள்! என் அன்பே! உன் முன்னே இருவேறு பாதைகள். ஒன்று மனிதனுக்கானது, அது பண்படுத்தப்பட்டச் சம நிலம். இன்னொன்று தேவனுக்கானது, கடினமானது. கூர்மையானக் கற்களும், வெட்டுப்பாறைகளும், பாளங்களையுமேப் பாதையாகக் கொண்டது. கடினத்தைத் தேர்ந்துகொள். அதுவே சத்தியத்தின் வழி. பயக்காதே! வழிப்பாதையின், சலனங்களினால் பாதிக்காது உனைக் காத்துக் கொள். ஒடுங்குவதும் பின்வாங்குவதுமல்ல, தைரியம்! அது மட்டுமே உனக்குக் காப்பு. அதுவே உன்னை பெலப்படுத்தும். அதுவே தேவனின் வாக்கும், சித்தமும் கூட. ஆனால் ஞாபகம் வைத்துக் கொள். இவ்விரு வழிகளுமே நம் தேவனின் பிள்ளைகள் தாம். ஆனால் தீயே மூத்தது. அதன் பிறகுதான் அன்பு பிறந்தது. அதனால் தீயைக் கைகொள். அது உன்னை வழி நடத்தும். உன் பாதையின் குரலுக்கு, தீயினால் பதிலுறு. நித்தியத்துவமான தேவகாரியம், உனக்குக் கை கொள்ள என் தந்தையிடம் மண்டியிடுகிறேன். முன்னேறு! என் சகோதரா! சத்தியம் உன்னைக் காக்கட்டும்."

    சூரியன் தலைக்கு மேலே சுழன்றெரிந்துக் கொண்டிருந்தது. விளிம்புகள் காண இயலாத, எல்லையற்றப் பாலைவனத்தின் நுனிகளிலிருந்து, கதிர்களின் பாட்டைகள், காற்றில் வளைந்து நெழியும் மணல் பரப்பில் பற்றி எரிந்தது. ஒரு சில யாத்ரீகர்கள் நதியை நோக்கி வந்து கொண்டிருந்தனர். பல நிறங்களிலான, நீண்டத் தலைப்பாகை அவர்கள் கீழை தேசத்தவர் என்று அறிவித்தது. தங்கள் கைகளிலும், கழுத்திலும் தாயத்துகள் அணிந்திருந்தனர். அது காட்டுப்பன்றியின், இல்லை ஏதோ ஒரு வனமிருகத்தின் பல்லாகவோ, இல்லைத் தாங்கள் அழித்தத் தங்களின் எதிரிகளின் கூர்ப்பல்லாகவோ இருக்கக்கூடும்,  கழுத்தில் அவர்களின் பெண் கடவுளர்களின் உருவச்சின்னங்கள் பொருத்திய, உலோகப்பட்டைகளை அணிந்திருந்த அவர்கள் எரிவே உடலாகக், கொடும் பார்வையுடன், மண்ணை வெறித்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தனர். திருமுழுக்கிட்டு ஞானம் அடைவதே நோக்கமாக துறவியின் இருப்பிடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். காடே உடலாகக் கொண்ட அவர்களின் வருகையைக் கண்டத் துறவி, தொலைவை நோக்கித் தன் கடும் குரலால் ஊளையிட்டார். அது காட்டின் சமிஞ்சை. அவர்களும் அக்குரலுக்கு எதிர்குரலாக, மிருகலயத்துடன் ஓலமிட்டனர். தங்களின் ஒட்டகங்களைத் தரையில் அமர்த்திவிட்டு அவர்கள் நதியை நோக்கி முன்னேறினர். கருணையற்ற பாலை மண்ணின் குரல் மீண்டும்  எழும்பத் தொடங்கியது. "வருந்து! தாழ்ச்சியுறு, தேவனின் வருகை அமைந்து விட்டது"

    அதே சமயம், ஜீசஸ் தன் துணைவர்கள் தூரத்தே, நதிக்கரையோரம் கால்கள் ஒடுக்கி அமைதியாக அமர்ந்திருப்பதைக் கண்டுகொண்டான். ஆனால் நதியின் ஒவ்வொரு சலனத்திற்கும் அவர்களின் அகம் அதிர்ந்து கொண்டிருந்தது. சரியாக முன்று பகல்களும் இரவுகளுமாக அவர்கள் தங்கள் குருவிற்காகத் தனித்துக் காத்திருக்கின்றனர். ஆனால் இன்னும் அவர் வருகையின் நிமித்தம் கூடத் தெரியவில்லை. திருமுழுக்கிடும் சடங்குகளும் இந்நாட்களில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்தக் காட்டுத்தனமானத் துறவி, மீள மீள அவனிடம் பேசிக் கொண்டே இருந்தார். இரவும் பகலுமாக ஊன் உறக்கமின்றி அவரின் சொல், அவனுள் செலுத்தப்பட்டது. குனிந்த தலையுடன் அச்சொல்லை ரத்தமும் சதையுமாகத் தன்னுள் உள்வாங்கிக் கொண்டிருந்தான். ஒரு  வல்லூறைப் போல, கூர்மையானப் பார்வையுடன் அவர், ஜீசஸை உலுக்கிக் கொண்டிருந்தார். ஆனால் ஏன், அவ்விருவரில் ஒருவர் மிகக் கடுமையாகவும், ஒருவர் துக்கித்தும் இருந்தனர். செந்தாடிக்காரன் ஆத்திரம் பொங்க, நதி ஒழுக்கில் கால்கள் சளசளக்க அங்கும் இங்கும் அலைந்தான். இரவு மெல்ல மெல்லக் கரையேறும் பொழுது அவன் ரகசியமாக அந்தக் குகைப் பிளவை நோக்கி சென்றான். அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை அறிந்து கொள்வது அவனுக்கு மிக முக்கியமாக இருந்தது. ஆனால் எப்படிக் கூர்ந்து நோக்கினாலும், அவர்கள் இருவரும் பேசும் முணுமுணுப்புகளைத் தவிர்த்து அவனால் எதனையும் கேட்டுணர முடியவில்லை. அங்கு தன்னைக் கலைத்தலும் அடுக்குதலும் போல, சொற்பிரவாகம் ஊற்றெடுத்து ஓடியது. பேச்சுகளின் அதிர்வுகள் கூட, நிசப்தத்தை ஊடுருவும் நீரலைகளின் மென் சலனம் போல அதிர்ந்தது.  அவனால் இன்னதென்று ஊகிக்க முடியாத ஒரு மர்மம் அச்சூழலை ஆக்கிரமித்திருந்ததை மட்டுமே அவனால் அறிய முடிந்தது. ஆனால் அவன் ஒன்றைக் கவனித்தான். அது ஒற்றைக் குரல். பல சமய்ம் அந்தக் காட்டு மனிதரின் குரலைத் தவிர்த்து வேறு ஒன்றுமே அங்கு நிகழாதது போலத் தோன்றியது. ஜீசஸ் தன்னால் இயன்றவரை, அவரின் சொல் எனும் தடாகத்திலிருந்து தனக்கானப் பாதையைத் தேர்ந்தெடுக்கும், சொல்லினை முக்கி எடுத்துக் கொண்டிருக்கிறான் என்று யூதாஸ் நினைத்துக்கொண்டான். அவன், அருகிருந்த பாறைப்பிளவினுள் அமர்ந்து கொண்டு வானத்தை வெறித்தான். இருளின் ஊடுபாவுகள். மெல்ல மெல்ல தன்னை இழைத்து இழைத்துக் கோர்ப்பத்தை அமைதியின்றிப் பார்த்தான். "எனக்கே என் மேல் வெறுப்பாக இருக்கிறது, வெட்கக்கேடு! என்னை வேண்டுமென்றே அவர்கள் தவிர்த்து விட்டு, இஸ்ரவேலத்தின் விடுதலையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் அந்த ஞானத்துறவி என்னிடமே,  தன் கோடாரியை அளித்து, இஸ்ரவேலத்தைக் காக்கும் பொறுப்பைக் கொடுத்திருக்க வேண்டும். அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவனும், பொருத்தமானவனும் என்னைத் தவிர யாருளர் இங்கு. என்னாலேயே இந்நிலத்தின் வலியை உள்ளூற உணரமுடிகிறது. நிச்சயமாக அந்தப் பாவப்பட்ட ஆட்டினால் அதை அறியக் கூட முடியாது. எந்த அவமான பாவமுமின்றி அவன் அனைவரையும் சகோதரர்கள் என்றல்லவா சொன்னான். நாசமாய்ப் போகட்டும். நம்மை வதைப்பவர்களும், நாமும் ஒன்றாம். இஸ்ரவேலத்தவர்களும், ரோமர்களும், கிரேக்கர்களும் ஓரு தாய்ப் பிள்ளைகளாம். பைத்தியக்காரன். சாத்தான் அவர்களை இரட்சிக்கட்டும்."

திங்கள், 19 டிசம்பர், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -77

    


    காற்றின் திசைகளுக்கேற்ப, பாளம் பாளமாய்ப் பிளர்ந்தப் புழுதிப்பாதைகள், கணத்திற்குக் கணம் ரேகைகளைக் கலைத்துச் சுழற்ற, பாதைகளுக்கு அப்பாலிருந்து செந்நிறக் கோளகை உருவெடுத்து எழும்பியது. அதன் தீற்றல்களின் நீள் பாட்டைகள் மண்ணில் படும் இடங்களிலெல்லாம், வெப்பம் சலனித்து, பின் உசுப்பி விட்டு, அதன் அறியாதக் கனவுகளின் மேற் தோலைப் பிறாண்டியது. ஒளியின் மூர்க்கம் கூடக் கூட, அது ஒரு வன் மிருகத்தின் லயத்தை ஆட்கொண்டது. பாலையின் விளிம்புகள் எல்லைகள் வரைகையில், பூதாகரமான ஒரு ஆண் சிங்கம் மெல்ல சிலுப்பிக் கொண்டு அடி எடுத்து வைப்பதைப் போல ஒளியும், மண்ணின் பழுப்பைப் பூசிக் கொண்டுத் தன் உடல் முழுவதையும் உதறிக் கொண்டு மேலெழும்பியது. அக்கதிர்களின் நீண்டுக் கனத்தக் கைகள் இஸ்ரவேலத்தின் ஒவ்வொரு வீட்டுக் கதவுகளையும் முட்டி உள் நுழைந்து, அவர்களின் காலைப் பிரார்த்தனைக்குள், ஊடுருவிக் கொண்டிருந்தது. தங்களின் இறைஞ்சல்களையும், வாழ்த்துத்துதிகளையும், கடினமே உருவான ஆதித்தந்தையும், கடவுளுமான ஜெகோவாவிடம் அவர்கள் சமர்ப்பித்துக் கொண்டிருந்தனர்.

    "நாங்கள் உம்மை மகிமைப் படுத்துவோம், எங்கள் துதிகளின் சங்கீதத்தால், எம்மைப் பெலப்படுத்தும்,  எம் தேவனே! எம் தந்தையர்களுக்கும் தேவனே! நித்திய ரூபனே! சினம் பொருந்தியவனே! நீரே எமக்கு சத்தியமும், தைரியமும். உமக்கே மகிமை! நித்தியனே! நாங்கள் உம்மை மகிமைப் படுத்துவோம்! எம் தந்தை ஆப்ரகாமிற்குப் பாதுகாவலனே! நீர் எம்முடன் இருக்கையில் எவர் வருவர் எங்களுடன் மோதிட! நீரே! உண்மையும், உறுதியும். உம்மைப் பற்றுதலே எங்களின் விடுதலை! உம்மைத் தவிர யாருளர் எங்களின் அடிமைச் சங்கிலியை உடைக்க. எங்களின் பாடுகளை நீரே அறிவீர். தாழ்ச்சியுறுகிறோம்! எம்மைக் கொல்வதும், மீட்பதும் உனையன்றி யாருமிலர். மகிமை! எம் தேவனுக்கு மகிமை! ஆண்டவரே! எங்கள் எதிரிகளைப் பொடித்துத் தூளாக்கு! அவர்களின் பாதைகள், பாழ்குழிகளாகட்டும். ஆனால் சீக்கிரம். எங்கள் இறப்பிற்கு முன்னே நீவிர் சத்தியத்தை மீட்கக் கடவீர். ஆம்! இஸ்ரவேலத்தின் சுதந்திரம் ஒன்றே நாங்கள் இறைஞ்சும் ஒற்றைப் பிரார்த்தனை. எம் தேவனே! இம்மைக்கும் மறுமைக்குமாய் நாங்கள் உம் சொல்லைக் கூர்கிறோம்! எம்மைப் பெலப்படுத்தும்!"

    ஜோர்டான் நதிக்கருகில் மேலேக் குத்தற இருக்கும் ஒரு சாம்பல் பாறைப் பிளவினுள், ஜீசஸும், திருமுழுக்கு ஜானும் அமர்ந்திருந்தனர். வெளிச்சம் ஊர்ந்து வரும் பிராணியைப் போல அவர்களின் பாதங்களில், நெழிந்து சென்றது. முழு இரவும், அவர்கள் என்ன செய்வதென்று அறியாது, தங்கள் கைகளுக்குள் இவ்வுலகத்தை பதற்றத்துடன் அமிழ்த்தி வைத்துக் கொண்டிருந்தனர். ஒருவர் மாறி ஒருவர் அதனை கைமாற்றி அமைதியிழந்தனர். ஆனால் வேறு வேறு வகையில். சன்னதத்தில் தன்னை உதறிக் கொண்டிருந்த ஒருவரின் முகம் கோபமும் தீர்க்கமும் கொண்டு வெறியேறியிருந்தது. தன் கையில் வைத்திருந்தக் கோடாரியினால் அந்த அழுத்தத்தை மேலும் கீழுமாகக் கிழித்துக் கொண்டிருந்தார். மற்றொருவன் தன்னுள் எழுந்தமரும் அதிர்வுகளுக்கு செவி கொடுத்திருந்தான். அவன் கண்கள் பனித்திருந்தன. எல்லையில்லாக் கருணையின் துக்கத்தைத் தன்னுள் அனுமதித்துக் கொண்டிருந்தவனின் முகம் நிலத்தில் குத்திட்டிருந்தது.

"அன்பு மட்டும் போதுமானதா?" ஜீசஸ் கேட்டான்.

    "இல்லை. நிச்சயமாக இல்லை!" திருமுழுக்கு ஜான் கோபத்துடன் பதிலுரைத்தார். "வேர் அழுகிக் கொண்டிருக்கிறது. நம் தேவன் எம்மை அழைத்து, என் கைகளினுள் இக்கூர்மையானக் கோடாரியை அளித்தார். நான் இவ்வழுகல் வேர்களை வெட்டி எறிந்துத் தகுதியான நிலத்தில் மரத்தினை ஊன்றிப் புதுப்பிக்க முயல்கிறேன். என்னுடையக் கடமையை நான் செய்தேன்.இப்பொழுது உன் வழி. ஆம்! இக்கோடாரியை எடுத்துக் கொள்! முன் ஏகு!"

    "நான் தீயாக இருப்பேன் எனில் எரிவேன், ஒரு மரம் வெட்டும் கோடாரியாக இருப்பின், எதிர்படுபவற்றை வெட்டி வீழ்த்துவேன். ஆனால் நான் இருதயம், என்னால் அன்பு கொள்ள மட்டுமே முடியும்"

    "நானும் இருதயமே, அதனாலேயே என்னால் அநியாயங்களை, இழிவை, இந்தக் கேடுகெட்டத்தனைத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எப்படி அநீதியான ஒன்றிடம் உன்னால் அன்பு கொள்ள முடியும். இந்தக் கீழ்மைகளின் முன் ஒருவன் வெறியும், வெறுப்பும் கொள்ளவே சாத்தியம். கேள்! மனிதனின் அதிமுக்கியத் தகுதியானக் குணமான கோபத்தைக் கைகொள். அதுவே நம் சத்தியமும் வழியுமாக இருக்கட்டும்."

    "கோபமா?" ஜீசஸின் குரல் நடுங்கியது. அவன் தன் கைகளை குறுக்காக இறுக்கக் கட்டி நின்று கொண்டிருந்தான். கொந்தளிப்பின் அதிர்வுகள் அவன் உடல் முழுதும் சலனித்து அமர்ந்தது. " நாம் சகோதரர்கள் இல்லையா?"

    "சகோதரர்களா?" ஜான் ஒருவித வெறிப்புன்னகையுடன் அவனைப் பார்த்தார். நீ உண்மையில், இறைவனின் வழி அன்பு ஒன்றே என நம்புகிறாயா? ம்ம்! அங்கே பார்!"

    தன் வலிமையான மயிரடர்ந்தக் கைகளைத் தூண்டி தூரத்தே, சலனமற்றுக் கிடக்கும் சாக்கடலைக் காண்பித்தார். நாட்பட்டு வயிறுவெடித்துக் குடல் அழுகிக் கிடக்கும் பூதாகரமான மிருகத்தின் அழுகிய சடலம் போல விகாரமான அக்கரியக்கடலை ஜீசஸ் நோக்கினான்.

    "இதன் ஆழ்குழிகளின் உலகை நீ அறிவாயா? அதன் பாழினுள் நாறிக் கிடக்கும்  இரு கீழ்மை நகரங்களைப் பற்றி உனக்குத் தெரியுமா? சோடோம் மற்றும் கொமோரோ எனும் இரு நகரங்கள் அதன் அடியினுள் அமிழ்ந்திருக்கிறது. நம் தேவனின் கோபமே அதனை எரித்து சாம்பலாக்கியது. பின் இம்மாபெரும் கடல் அவற்றை மிச்சமின்றி விழுங்கிக் கொண்டது. கேள்! நம் அப்பனின் வழியே நம்முடையதும். அதுவே உறுதியும் மீட்சியும் கொண்டது. நம் மூதாதையர்களின் தீர்க்க தரிசனங்கள் என்ன உரைக்கின்றன? " நம் தேவனின் தீர்ப்பு நாளில், மரங்களின் நரம்புகளிலிருந்து ரத்தம் பீறிடும். வீடுகளின் கற்கள் உயிர் பெறும். அவைகள் ராட்சசர்களாக் உருமாறி வீட்டின் உரிமையாளர்களைக் கொல்லும். தேவனின் தீர்ப்பின் நிமித்தம், அந்த நாள் நெருங்கிவிட்டது. நானே அதனை முதலில் கண்டுணர்ந்தேன். ஒரு தீக்குமிழ் உருள்வதைப் போல அது என்னுள் எழும்பியது. அடக்கமுடியாத ஆர்ப்பரிப்பும், அழுகையுமாக இப்புனிதக்கோடாரியைக் கைகளில் ஏந்திக் கொண்டேன். வெட்டு! வெட்டு! எனும் சொல் மட்டுமே என் முன்னே இருந்தது. நான் அதனை உள்வாங்கிக் கொண்டேன். இப்பூமியின் சீழ் பிடித்த வேர்களை வெட்டி எறிவது ஒன்றே எனக்க்கிட்டப் பணி. தேவனின் சொல்லை என்னுள் அணையாது வைத்துக் கொண்டேன். இரவு பகலற்று, காலங்களற்று நான் உன்னை அழைத்தேன். இதோ! நீ வந்து விட்டாய்! இனி உன் வழி! நான் இங்கே என்னை நிறுத்திக் கொள்வதே! தேவனின் ஆணை!"

    அவர் தன் உடலுடன் ஜீசஸை அணைத்து இறுக்கிக் கொண்டார். அவரது உடலின் சூடு அவனுள் மெல்ல இறங்கியது. கைகளுக்குள் இருந்த கோடாரியின் பிடி, அவன் முதுகினை அழுத்தியது. அவன் பயந்து விலக்கிப் பின் வாங்க முயன்றான். "கொஞ்சம் பொறுங்கள், இன்னும் சிறிது காலம், நான் உங்களிடம் மண்டியிட்டுக் கேட்கிறேன். அவசரம் வேண்டாம். நான் பாலையிடம் செல்கிறேன். இறைவனிடம் தனித்து செல்கிறேன். அங்கே அவனது குரலைத் தனித்து அறிவேன். எனக்கான சொல்லை ஏற்றுக் கொள்வேன். அதுவரைப் பொறுத்திருங்கள்."

    "சபலத்தின் சொற்களையும்! ஜாக்கிரதை! சாத்தான் அங்கு உனக்காகத் தன் அனைத்துப் படைகளுடன் வரிசைக் கிரமமாகக் காத்துக் கொண்டிருப்பான். அவனுக்குத் தெரியும், நீ பணயம் வைப்பது உன் வாழ்வை என்று. அவன் தன் எல்லாவிதமானத் தந்திரங்களுடனும், வன்மத்துடனும் உன்னிடம் வருவான். காத்துக் கொள். இந்தப்பாலைவனத்தின் குரல், இன்மையின், மரணத்தின் குரல் மட்டுமல்ல. நம்முள் நீங்காது கனல முயலும், விருப்பு வெறுப்புகளின், தாபங்களின், கீழ்மைகளின், அதிகாரத்தின், ஆணவத்தின் குரலும் கூட."

    "அது இன்பங்களின் குரலோ, மரணத்தின் குரலோ, எதுவாக இருப்பினும் நான் அடிபணிய மாட்டேன், என்னில் சத்தியம் கொள்ளுங்கள்!"

    " நிச்சயமாக, நான் காத்திருப்பேன். அது சாத்தானின் சொல்லோ, இல்லையேல் தேவனின் சொல்லோ!, நீயே அதை உன் சொந்த ஆன்மாவால் அறிந்து கொள்ளும், நீயே, அந்த ஒருவன் எனில் நான் உனக்காக காத்துக் கொண்டிருப்பேன். இறைவனின் சொல் ஏற்கனவே அருளப்பட்டு விட்டது. உன்னால் அதிலிருந்து விலக முடியாது. நீ அந்த ஒருவன் இல்லையெனில், நீ நசிந்தழிவதைப் பற்றி யார் கவலை கொள்ளப் போகிறார். ஆம், முன்னேறு! பார்க்கலாம்! ஆனால் விரைவாக, நான் இவ்வுலகைத் விட்டுத் தனியனாகச் செல்ல விரும்பவில்லை."

    "எனக்குத் திருமுழுக்கிடும் பொழுது, நம் தலைக்கு மேலே இரு நீண்ட வெண் சிறகுகள் வினோதமாகச் சிறகடித்துக் கொண்டு ஒலி எழுப்பிச் சென்றதே, அது என்ன சொல்லியது?"

    "அது வெறும் சிறகுகள் மட்டுமல்ல! உன்னுடைய நாளில் அதன் சொல்லை நீ அறிவாய். ஆனால் அதுவரை அச்சொல் இரு கூரிய வாட்கள் போல உன் தலைக்கு மேலேத் தொங்கிக் கொண்டிருக்கும்."

    ஜீசஸ் தன் கைகளை அவரை  நோக்கி நீட்டிப் புறப்பட ஆயத்தமானான். "என் அன்பின் சகோதரரே! விடைபெறுகிறேன். ஒருவேளை, என்றென்றைக்குமாக!"


ஞாயிறு, 20 நவம்பர், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -76

   


    யூதாஸ், ஜீசஸைப் பிடித்திழுத்துக் கொண்டு முன்னே சென்றான். "கேட்கிறதா? பார்! பார்! அவர் தான். அவர்தான் மெசியா! மெசியாவால் மட்டும் தான் அப்படி பேச முடியும்!"

    "இல்லை! யூதாஸ்! என் நண்பா! அவர் மெசியாவின் வருகைக்கானப் பாதைக்கு வழி செய்பவர். அவர் கோடாரியைக் கொண்டு அதைத்தான் பண்படுத்திகிறார். அதற்காகத் தான் அவர் ஆவேசத்துடன் பிரசங்கிக்கிறார். அவர் மெசியாவாக இருக்க வாய்ப்பில்லை!" ஜீசஸ் மெதுவாகக் குனிந்து செற்றையாகக் கிடக்கும் நிலத்தில், உயரமுனையும் ஒரு ஒற்றைப் புல்லின் நுனியைக் கிள்ளி வாயிலிட்டு மென்னிக் கொண்டே நகர்ந்தான்.

    "எவனொருவன் நம் தளைகளிலிருந்து விடுவிப்பதற்கான வழியைத் திறக்கிறானோ, அவனே மெசியா!" செந்தாடிக்காரன் கோபத்துடன் கூறினான்.  ஜீசஸைப் பின்னாலிருந்துப் பிடித்து முன்னே போகுமாறு உந்தித் தள்ளினான். ஜீசஸ் நிலைதடுமாறி நாணலின் கூர் நுனிகளை மிதித்துக் கொண்டு, விழுந்து விடாமல்  இருபுறமும் கைகளால் விலக்கிக் கொண்டே சென்றான்.

    "செல்! முன்னே செல்! உன்னை அவர் பார்க்கட்டும், நீ யார் என்பதை அவர் எங்களுக்குத் தெரிவிக்கட்டும்!" யூதாஸ் தன் காய்த்துப் போனக் கைகளால் ஜீசஸின் முதுகைப் பற்றிக் கொண்டு, இருபுறமும் உயர்ந்து நிற்கும், முட்கிளைகளையும், தாவரங்களையும் அழுத்தி மிதித்துக் கொண்டே ஓட்டமும் நடையுமாக விரைந்தான்.

    சட்டென வெட்டவெளியை அடைந்த ஜீசஸ், கூசும் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தான். கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தது. சூரிய வெளிச்சம், பழுத்து நிலத்தில் சாரம் சாரமாக ஒழுகியது. சரியாக அடி எடுத்து வைக்க  இயலாது தள்ளாடிக் கொண்டே நிமிர்ந்து முன்னே நிற்க முயன்றான்.  சற்றுத் தொலைவில், நதியில் அவனுக்கு முதுகு காட்டிக் கொண்டு ஒரு மனிதன், மந்திரங்கள் ஜபிக்க நின்று கொண்டிருந்தான். சுற்றியிருக்கும் அனைத்தும் மறைந்து, அம்மனிதனும் ஜீசஸும் தவிர மண்ணில் ஒன்றுமே இல்லாமல் ஆகியது. அவனது உடல் விதிர்விதிர்த்தது. கனவிலும் நனவிலுமாகக் கண்ட உருவம். மயிர்க்கால்கள் முளைத்துக் கொள்ள, அவர்தான்! அவர்தான்! என விம்மியது. அவனது ஆன்மா, இரு துடிக்கும் சிறகுகளாக அவரை நோக்கிப் பறந்து சென்றது. நீருக்கடியில், அவரது ஆகிருதி ஆழமாகப் பதித்து நிற்கும் பாதங்களைத் தொட்டு, நாணல் போலவே வளைந்து நெகிழும் கால்களை வருடியது. பின் அவர் உடல் முழுதும் ஸ்பரிசித்து, நெருப்புமிழும் தலையில் அமிழ்ந்துத் தானும்  இரு தீச்சிறகுகளாக எரிந்து கொண்டே வானம்  நோக்கி உயர்ந்தது. அவர் திரும்பி நோக்கினார். இன்னதென்று விளக்க முடியாத ஆட்படலில் தன் உடல் கவரப்படுவதை உள்ளும் புறமும் உணர முடிந்தது. சற்றேத் தன்னை உலுக்கும் பொழுது, அந்த இறுக்கம் இன்னும் இறுகுவதை, அதன் பார்வை நுனிகளின் கூர் முனைகள், பல நூறுப் புள்ளிகளாக அவரது உடல் முழுவதும் குத்தி அதிர்வதை,  ஏற்பதைத் தவிர  அவருக்கு வேறு வழி இருக்கவில்லை. தலையை இடமும் வலமும் அசைத்துக் கொண்டு, பொருளின்றிக் கத்தினார். ஒரு வெண்கல உலோகம், அதிர்வதைப் போல அக்குரலின் ஆன்மா உராய்ந்துப் பரவியது. இன்னும் முழுமையாகத் திறவாதக் கண்களுடன் ஒளி கூசும் வெளியை ஆத்திரத்துடன் நோட்டமிட்டார். "இவன்,யார்? யார்! அசைவற்று  என் முன்னே அமைதியாக நிற்கிறானே! இந்த இளைஞன் யார்?, ஏன் என்னை இப்படிப் பார்க்கிறான். வெண்ணுடை தரித்து நிற்கும், இந்த மெலிந்த உருவினை நாம் இதற்கு முன் எங்காவது பார்த்திருக்கோமோ? என்னால் யூகிக்க முடியவில்லையே! ஆனால் நான் இவனை அறிகிறேன். எங்கு? காலமற்று அலையடித்துக் கொண்டிருக்கும் இவனது நீல விழிகள் எனக்கு மிகவும் பரிட்சயப்பட்டதா? தெரியவில்லை! ஆனால் இவன்! இவன்! என் உடலும், உள்ளமும் இவனை அறிந்திருக்கிறது. எங்கே! எப்பொழுது? எனக்குத் தெரியவில்லை. இல்லை! இவனை நான் என் சொப்பனத்தின் நிழல் வெளியில் ஒரு அமானுட வெளிச்சமாகக் கண்டேனா? நிச்சயம் ஒரு உடலாக அல்ல! ஒரு இருப்பாக, இன்னும் ஒரு ஓளியாக, வெளிச்சத்துகளாக! நெடியாக! சொல்லாக! ஆதியிலிருந்தே என் காத்திருப்புகளின், இதோ! இந்தத் திரவவெளியின் நித்திய இருப்பினுள் அமிழ்ந்திருக்கும், அழியாப் பொருண்மையாக!"

    விளக்கவே முடியாத ஒன்றினைப் பற்றி, பலப் பல வழிகளில் திரட்டிக் கொள்ள முயன்றுத் தோற்றார். அவரது சொப்பனத்தின் கடலில், அலையடித்து மீண்டது. அது ஒரு வெண்ணிறம் மட்டுமேயாக உள்ளும் புறமுமாய் ஜொலிப்பதை நினைவு கூர்ந்தார். ஆனால் அப்பொழுது அந்த ஒளிப்பெருக்கினைக் குடித்துக் கொண்டு அமைதியாக மட்டுமே அவரால் நிற்க முடிந்தது. அதனருகில் செல்லும் பொழுதெல்லாம், அவரால் புரிந்து கொள்ள முடியாத இறுக்கம் பின் தளர்வு என, தனக்குள் ஏந்திக் கொள்ள முடியாத ஒரு பேருவகையையும், அதே நேரம் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயலும் எதிர்ப்பையும்தான் அவரால் செய்ய முடிந்தது. சரியாக அவர் அந்த உலுக்கிக் கொண்டு எழும்பும் பொழுது, அவ்வொளியின் மாயக்கரங்கள் மெல்லப் புகையாய் உயரத்தொடங்கும்.

    அவரால் தன் பார்வையை ஜீசஸை விட்டு விலக்க முடியவில்லை. அடக்க முடியாமல் கண்ணீர் பெருகியது. அவரால் அச்சொல்லை நினைவு கூற முடிந்தது. "அது நம் மூதாதை, தீர்க்கதரிசி எசாயாவின் சொல், ஆட்டுத் தோலில் பதிக்கப்பட்டிருந்த அந்த எழுத்துக்கள், பரல் மீன்கள் துள்ளுவதைப் போல, சொற்களின் பொருள்களின், காட்சிப்புலத்தை சிதறடித்தது. "ஆம்! ஒரு நாள்! இந்த மலைகள், பாறைகள், நிலம், மனிதர்கள், இந்த முட்புதர்கள், தாவரங்கள், நாணல் வெளிகள் என அனைத்தும் மறைந்தழியும். தீப்பிளர்க்கும் காற்று, பறையொலிக்கும், சிறகடிக்கும், வானம் ஒரு மாபெரும் பறவையாகி உயரும். அது கேவக் கேவ நிலம் பிளறும். நம் மூதாதையின் தீர்க்கம் பொருந்திய சொற்கள் திறக்கும், நான் காண்கிறேன். என் மெசியாவின் வருகையை! இதோ என் முன்னால் நிற்கும் இந்த மெலிந்த இளைஞனைப் போலவே வெண்ணுடை தரித்து, இப்பாலை நிலத்தில், வெற்றுக் கால்களுடன், இவனைப் போலவே பச்சைப் புல்லை வாயினில் அதக்கிக் கொண்டு அமைதியாக நிற்கும் என் மெசியாவை! ஆம்! ஆம்! இவன் தான்! இவன் தான்! உணர்வெழுச்சி பொங்க அவர் கத்தினார்.

    ஒரு சேரப் பயத்திலும், சந்தோசத்திலும் அவரது சுருக்கங்கள் அடர்ந்த முகம் மேலும் சுருங்கி விரிந்தது. இமையடைக்காது ஒருவித மயக்கத்துடன் தான் இன்னும் அந்த இளைஞனைக் கண்டு கொண்டிருந்தார். அவரால் நம்பமுடியவில்லை. ஆனால் அவரது காத்திருப்பின் அர்த்தப்பாடுகள் நிறைவடையும் என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். கால்கள் பரபரத்தன. கால்கள் பதித்திருந்த பாறையிலிருந்து வழுக்கி நதியில் குப்புற விழுந்து எழுந்தார். உடலின் அதிர்வுகள் இன்னும் அடங்கியிருக்கவில்லை.

"யார் நீ? சொல்! யார் நீ?" எதிர்பார்ப்பின் குரல் வறண்டிருந்தது.

    "உங்களுக்குத் தெரியவில்லையா?" ஜீசஸ் கேட்டான். பின் மெல்ல அவரை நோக்கி வந்தான். உண்மையில் அவனது விதி, அவர் சொல்லும் பதிலில் தான் இருக்கிறது என்பதை அவன் முழுமையாக உணர்ந்திருந்தான்.

    "அவன் தான்! ஆம்! அவன் தான்!" அவர் தனக்குள் குமுறினார். அவரது இருதயம் ஒரு தந்திக்கருவியைப் போல அதிர்ந்து கொண்டிருந்தது. இல்லை! இல்லை!" தெளிவாக அவருக்கு இன்னும் முடிவெடுக்கும் தைரியம் வரவில்லை. திரும்ப அவர் அவனை நோக்கிக் கத்தினார். "சொல்! நீ யார்?"

    "நீங்கள் நம் மூதாதைகள் அறிவித்த தீர்க்கதரிசனத்தை அறிந்தவர்தானே?" ஜீசஸ் சற்றுத் தயக்கத்துடன், ஆனால் தைரியத்தை வருவித்துக் கொண்டு விசனமாகக் கேட்டான். "சொல்லுங்கள்! ஞானவானே! நம் தீர்க்கதரிசி எசியாவின் அறிவிப்பு என்ன? உங்களுக்கு ஞாபகம் இல்லையா? சொல்லுங்கள்! நீங்களே முன்னோடி! நீங்களே அதை அறிவீர்!"

    "அது நீதானா?" முனகிக் கொண்டே அந்தத் துறவி ஜீசசை முறைத்துப் பார்த்தார். அவனது தோள்களைப் பற்றினார். கைகளை அழுத்தினார். அவரால் இன்னும் நம்பமுடியவில்லை. அவனை முழுமையாகப் பார்த்துத் திரும்பத் திரும்ப சோதனை செய்தார்.

    "நான் வந்து விட்டேன்..." ஜீசஸின் குரல் நடுங்கியது. மூச்சிரைக்கத் தன்னை அமைதிப்படுத்த முயன்றான். கைகளை இறுக்கிப் பிடித்திருந்தான். அவனது உடல்மொழி, தண்டனைக்குத் தன்னை உட்படுத்துவதைப் போலக் குன்றியிருந்தது. அடுத்த காலடி எடுத்து வைத்தால் விழுந்து விடுவோமோ என்ற பயத்தில், தனது வலது கை விரல்களால் நெற்றியை அழுத்தியிருந்தான்.

    அந்தக் காட்டுமிராண்டித் துறவி, அவனை மேலிருந்து கீழ் வரை அளந்தார். அவரால் இன்னுமே நம்பமுடியவில்லை. ஜீசஸின் உதடுகளிலிருந்து எழுந்த சொல்லின் வீரியம், ஒரு மலைப் பாம்பைப் போல அவரது அகத்தின் உடலைக் கட்டி இறுக்கியிருந்தது. நெறிபட நெறிபட அவர ஆனந்தத்தில் திளைத்தார்.

    "ஆமாம்! நான் வந்துவிட்டேன்...!" மேரியின் மகன் திரும்பவும் கூறினான். அது சற்றுத் தொலைவில் தன் செவிகளை கூர்ந்து நின்றிருந்த யூதாசுக்குக் கூட சரிவரக் கேட்கவில்லை. அவ்வளவு மென்மையுடன் ஜீசஸின் குரல் ஞானவான் ஜானினைத் தழுவியது. இந்த முறை அவர் ஜீசஸை அறிந்து கொண்டார்.

    "என்ன?" அவர் தலையை உதறினர். கற்றையான சடை முடிக்கற்றைகள் குறுமணிகள் போல அங்கும் இங்கும் குலுங்கின.

    ஒரு ஒற்றைக்காகம், அழுவது போலக் கரைந்து கொண்டு தலைக்கு மேலே நகர்ந்தது. அது நீரில் அமிழ்த்தி ஒரு உயிரைச் சாகடிக்கும் பொழுது முனகும் இரைச்சலைப் போலிருந்தது. அதன் விளி, ஜானைச் சலனப்படுத்தியது. அவர் காலுக்குக் கீழே இருந்தக் கல்லை எடுத்து வானத்தை நோக்கித் திட்டமின்றி வீசினார். பறவை பறந்த பின்னும் வானம் விலகுவதில்லை.  மேகங்கள் வானின் ஒளியைப் பிரதிபலித்து  மயங்கியது. அதனுள்ளிருந்து வெளிச்சக்கீற்றுக்கள் நீள்பட்டைகளாய் நீலம் நிரப்பி வெளியேறியது. வானம் நம் கைக்கு அடங்காமையினால் அதன் திண்மையை இழந்து புகை மூட்டமாய், வெளிச்சத்தைச் சீழ் போலத் துப்பியது. ஞானவானான ஜான், தன்னை ஆற்றுப்படுத்த முனைந்தார். எதிர்பார்ப்புகள் உரப்பாகியதும், ஏதோ இழந்ததைப் போலவும் அதே நேரம் காத்திருப்புக்களின் காலமின்மையும் திடத்தன்மைக் கரைந்து திரவ மினுக்கத்துடன் தன் முன்னே வெளிச்சம் பொங்க ஒளிர்வதையும் கண்டார். ஒருவகையில் சுழிகள் அடங்கி, சலனமற்று உள்ளேத் திரும்பிக் கொள்ளும் நீர்மையின் அனிச்சக் கைகளைப் பற்றிக் கொண்டார். அது அமைதியையும் சலனத்தையும் அவரைச் சுற்றி நிரப்பியது.

    "வா!" அவர் அவனை சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டேக் கூறினார். எந்த சினேக பாவமுமில்லை.

    ஜீசஸால் உண்மையில் நம்பமுடியவில்லை. அவன் பயந்தான். ஆனால் பரவசமும். தீர்க்கதரிசியின் அழைப்பு தனக்கானது தானா என்பதைப் பலமுறை  ஊர்ஜிதப்படுத்திக் கொண்டான். ஜீசஸ் அதனைத் தனக்குத் தான், என ஏற்றுக்கொண்ட பொழுது,  அவனைச் சூழ்ந்திருந்த சிதல்கள் பொடிந்துதிர்ந்தது. அது போல, இனி தான் என்பதன் அர்த்தப்பாடுகளும், கலக்கங்களும், குழப்பங்களும், அதிகப்படியான  அதன் பொறுப்புகளும் அவனை உண்மையில் கலக்கியது. ஆனால் அதனை ஏற்பதன் வசீகரம் தான் அவனை இன்னும் உயிர்ப்புள்ளவனாகவும், தன் சொந்த மீட்சியின் பலன் எனவும் உள்ளூற உணரவும் வைத்தது.

    ஞானவான், ஜீசஸை உற்று நோக்கினார். பின் அவரது பார்வை தான் ஏற்றிருந்த, நிலத்தைச் சுற்றிச் சுழன்றது. ஜோர்டான் நதியின் நிச்சலனம் அவருள், புழையாய் ஒழுகியது. முன்னே சுழியிட்டு முனகலாய் நகரும் நதியிடம் ஒப்படைப்பதை போல, தத்தமது பாவங்களை மண்டியிட்டு ஒப்புவிக்கும் மானுடர்களைக் கண்டார். சுருங்கியக் கண்களைத் துடைத்துக் கொண்டு கீழே மண்டியிட்டு அமர்ந்தார். கைகளில் மண் பொத்தைச் சாம்பலை எடுத்துத் தன் நெஞ்சில் அழுத்தித் தேய்த்தார். அது அவரின் விடைபெறல் போல இருந்தது. "ம்ம்! இப்பொழுது நான் புறப்படலாம் இல்லையா!" அவர் ஜீசஸைப் பார்த்து வினவினார்.

    "இன்னும் இல்லை, மூத்தவரே!, முதலில் நீங்கள் எனக்கு ஞான முழுக்கு அளிக்க வேண்டும். ஜீசஸ் தீர்க்கமாகவும், உறுதியுடனும் பதிலளித்தான்.

" நானா? நீர் தான் எமக்கு ஞானமுழுக்கிட வேண்டும்...தேவனே!"

    "சத்தமாகப் பேசாதீர்கள். அவர்கள் நாம் பேசுவதைக் கேட்கப் போகிறார்கள். என்னுடைய நேரம் இன்னும் வரவில்லை. அதனால் நான் சொல்வதைப் புரிந்து கொள்ளுங்கள். "ம்ம்! நடக்கட்டும்!"

    என்ன முயன்றும் யூதாசால் அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று அறிய முடியவில்லை. அவனால் ஒரு முணுமுணுப்பை மட்டும் தான் கேட்க முடிந்தது. நதியின் இரு வெவ்வேறு அலைகள் மோதித் தன்னைத் தானே விழுங்கிக் கொள்ளும் ஓசை. திரும்பத் திரும்பத் தீராத அதன் ஓட்டங்கள், உட்கொள்வதும், வெளியேறுவதுமாய்க் குமிழியிடும் முயக்க நடுக்கமன்றி வேறெதையும் அவனால் உணர அது வாய்ப்பளிக்கவில்லை.

    கரையில் மண்டியிட்டுப் பிரார்த்திக்கும் மனிதக் கூட்டம் அவர்கள் வந்ததும் மெல்ல விலகி வழி விட்டது. ஒளியையே உடலாக வரித்துக் கொண்டுத் தங்களைக் கடக்கும் இந்த யாத்ரீகன் யாராக இருக்கும். இத்தனை நிமிர்வுடனும், நம்பிக்கையுடனும் முன்னே செல்லும் இந்த மானுடனிடம் பாவங்களே அண்டாது போல! அவனது மிளிர்வே அவன் உறுதியையும், திடத்தையும் தெரிவிக்கிறது, என அவர்கள் வியப்பிலும், குழப்பத்திலும் ஆழ்ந்தனர். ஞானவானான ஜான் முன்னே செல்ல, இளைஞன் பின் தொடர்ந்தான். அடர்த்தியான மூட்டமாய் நீலம் கனக்கும் நதியின் உள்ளே உந்திக் கொண்டு செல்லும் அவர்களைச் சுற்றி சுழிப்புடன் நதி வழியைத் துலக்கியது. நடுமையத்தில் காலமற்றுக் கிடக்கும் குமிழ் போன்றப் பாறைப் பரப்பிற்கு மேலே ஜான் மெல்ல உக்கி ஏறிக் கொண்டார். அருகில் ஜீசஸ், தன் பாதங்கள் நதியின் அடிமண்ணில் நன்குப் பதிய நின்று கொண்டு சுற்றிலும் முகிழ்க்கும் திரவ வெளிக்கு முகம் காட்டி அமைதியாகப் பார்த்தான். ஓடும் நீர், பாறைப் பரப்பில் பட்டுத் தெறித்தது. அதன் குளிர்மையின் ஸ்பரிசம், இளைஞனின் மார்பிலும், தோளிலும், கன்னங்களிலும் தொட்டு மீண்டது.

    சரியாக அத்தருணத்தில் ஜான் கைகளில் நீரள்ளி ஜீசஸின் தலையில் முழுக்கிட்டார். தன்னிலை இழந்த ஆட்படலுடன், தன் மூதாதைகளின் ஆசிர்வதிக்கப்பட்டச் சொற்களின் மந்திரலயம் அவரது நாவில் அனிச்சையாக உறைந்திருந்தது. கரையில் நின்று கொண்டிருந்த மானுடர் குழாம் மொத்தமும் ஒருசேர அழத் தொடங்கின. நதியின் உயிர்த்தன்மைக் கூடிக் கூடி, அதன் நிச்சலனத்தின் நீள்வட்டங்கள் மெல்ல மெல்ல அமர்ந்து, நதி முற்றிலுமான மோனத்தில் ஆழ்ந்தது. பல வண்ண மீன்கள் அங்கும் இங்குமாக அவர்களைச் சுற்றிக் குதூகலித்துக் குதித்தன. செவுள்களை அசைத்தும், துடுப்புகளால் நீர் வெளியைக் கலக்கியும், அது அவைகள், அறியாத ஒன்றின் ஆட்படலில் பீடிக்கப்பட்டது போன்றப் பரவசத்துடனும், மூர்க்கத்துடனும் நடனமிடுவது போல இருந்தது. அவனைச் சுற்றிய அனைத்தும் உயிர் பெற்றிருந்தது. புத்தம் புதிய உயிர்மையின் இருப்பு துடிப்பே உடலாகப் பறந்தது. நதி வானாகியது. பாறைத்துண்டங்கள் மேகங்களாகின. துடிப்புகளெல்லாம் விண்மீன்களாகியது. சூரிய சந்திரர்கள் இருபெரிய ஒளிர் விண்மீன்களாய் துடுப்புகள் அடித்து அவனைச் சுற்றிக் குழுமி வட்டமிட்டது. தலைக்கு மேலும் கீழும் சன்னதம் பீறிட்டது. அவன் இதுவரை அறிந்தே இராத துடிப்புகளின் சங்கீதத்தைக் கேட்டான். திகைப்புடன் தன் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் கொண்டாட்டத்தை, பயம் கலந்த கவர்ச்சியுடன் கண்டு கொண்டிருந்தான்.

    கூட்டத்தால் நிகழ்வதன் அதிசயத்திலிருந்துத் தங்களை மீட்க இயலவில்லை. அவர்கள் சொற்களற்றுத் தங்கள் முன் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒளித்தூண்டுதல்களை, அதன் நடனத்தை, சீற்றத்தை,  அதன் கணக்கில்லா சன்னத ரூபங்களை வெறுமே கண்ணடைக்காது காண மட்டுமே முடிந்தது. பலர் அதன் விம்மலின் அனலைத் தாள இயலாது மண்ணில் தலை புதைந்துக் கண்களைப் பொத்திக் கொண்டனர். சிலர் தாங்கள் இதுவரை இருந்தத் திண்மம் குலைந்து, ஒரு புகை வெளியாய் உருமாறியதைப் போல, உடலதிர அங்கும் இங்கும் குதித்தும், தரையில் அறைந்தும், பொருளற்ற விளிகளால், கூச்சலிட்டும், வெறிகொள்ளக் கத்தினர். ஒரு முதியவர், தன்னைப் பிடித்துக் கொள்ள முடியாமல் அதிர்ந்து கொண்டே மண்ணில் முகம்பட விழுந்து எழுந்தார். கலனில் கொதிக்கும், கொப்புளங்களின் துளிகள் வெளியே தெறிப்பதைப் போல, சொல் அவரிலிருந்து அனிச்சையாகத் தெறித்தது. அக்குரல் அமானுடமாய் இருந்தது. "ஆம்! இதுதான் ஜோர்டானின் ஆன்மா!" என்று இரைந்து கொண்டே அவர் மண்ணில் மயங்கி விழுந்தார்.

    அத்துறவி, ஒரு குழிந்த நத்தை ஓட்டினை, நதியின் ஆழத்திலிருந்துப்பிடுங்கி வெளியெடுத்து, அதனுள் நதியை நிரப்பி ஜீசஸின் முகத்தில் ஊற்றினார். " நம் தேவனின் சேவகன் ஞானமுழுக்கடைந்து விட்டான்...." பின் எதையோ சொல்ல முயன்று நிறுத்திக் கொண்டார். அவனை என்ன பெயரிட்டு அழைப்பது என்று அப்பொழுதுதான் அவருக்கு உறைத்தது.

     அவர் திரும்பி ஜீசஸைப் பார்த்து வினவ எத்தனித்தார். அங்கே இருந்த அனைத்துமேத் திரும்பி அவனையே எதிர்பார்ப்புடன்  உற்று நோக்கியது. பெயர்! பெயர்! என அவைகள் ஒவ்வொன்றும் அதிர்ந்து கொண்டிருந்தன. இரு வெண்ணிறச் சிறகுகள் ஒடுங்கிக் கொண்டு நிலத்தில் அமர்ந்து அவனைப் பிரயாசையுடன் பார்த்தது. அது ஒரு பறவையைப் போல அல்லாது, ஜெகோவாவின் சிம்மாசனத்தில், அவரைத் தாங்கிக் பொருந்தியிருக்கும் தேவதைத் தோற்றம் கொண்டிருந்தது. ஒரு தீ ஜ்வாலையைப் போல அது முன்னேப் பாய்ந்து அவர்களின் முன்னே அமர்ந்தது. ஜானின் தலை இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது. அப்பறவை எந்த சலனமுமின்றி ஜீசஸின் கண்களை மட்டுமே, ஒருவிதப் பித்துடன் ஆதுரமாக எதிர்பார்ப்புடன் கூர்ந்தது. பின் திடீரென மெல்லத் தன் கூர்மையான உகிர்களால் மண்ணை உந்தி அந்தரவெளியில் சுற்றிச்சுழன்று மூன்று முறை படபடத்தது. பின் வளையம் போல ஒளியினைப் பெருக்கி மூன்று முறை வானுக்கும் மண்ணுக்குமிடையேச் சுழற்றி ஒளிர்ந்தது. ஒளியின் மகா இசைவினை, வெளி கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி உள்ளும் புறமுமாய் ஒளியன்றி ஒன்றுமில்லாததாகியது. அது தழும்பித் தழும்பிப் பெயர்! பெயர்! என தாகித்துப் பின் நடுங்கும் திரவ மினுக்கத்துடன் அப்பெயரைப் பிரகடனப் படுத்தும் வகையில், ஒரு கார்வையான அழுகையாய், சுருள் ஒளிப் புள்ளிகளாய் அவர்களின் அகத்தில் சுழன்றது. அமைதி பல்லாயிரம் கால்கள் கொண்டப் பூரான் போலத் தலைக்கு மேலே ஊர்ந்தது. நிலம் புரண்டு தலைகீழாகியது. படபடத்தலின் அவசர நுனிகள், வானத்தைத் தூண்டியது. மேகக் குவைகளிலிருந்து, ஞானவானின் விளிக்கு பதில், ஒரு மின்னல் கீற்றாய், நதியைக் கிழித்துத் துண்டாய் விழுந்தது.

    சிறகடிப்புகள் அடங்கவில்லை. மக்களின் காதுகளில் அச்சொல் ரீங்காரமிட்டது. அவர்களால் அதை உணரமுடிந்தது. ஆனால் விளக்க முடியவில்லை. எல்லோருமே பதற்றத்துடன் விம்மிக் கொண்டிருந்தனர். "அது தேவனின் குரலா?, இல்லை இப்பறவையின் துடித்தலா? எதையும் யூகிக்க வழியிருக்கவில்லை. பிளந்த நதிப்பரப்பில் வானின் தொடுகை, ஒரு அதிசயம் போல அவர்கள் முன்னே நிகழ்ந்தது. ஜீசஸ் விரைத்து நின்று, தன் உடலே காதாக அச்சொல்லைக் கூர்ந்தான். அக்கீற்றின் நிழல்களில் உருக்களாய்த் துடிக்கும் சொல்லின் அடியைப் பிடிக்க முயன்றான். அது தன் உண்மையானப் பெயர்தான் என்பதை அவன் மட்டுமே உணரும்படியான நிமித்தத்தை அவன் உணர்ந்தான். ஆனால் அவனால் அதனை நிரூபிக்கவோ விளக்கவோ இயலவில்லை. இல்லை! உண்மையில் அவனுக்கு அது தேவைப்ப்படவில்லை என்றே தோன்றியது.  ஆயிரம் சிறகுள்ள நிழல் பறவை ஒன்று ஒரேசமயம் தன் அனைத்து சிறகுகளினாலும் அப்பெயரைத் துடித்தது, அது சொல்லாக, விம்மலாக, தாளாத வாதையாக, வலியாக, உவகையாக, வன்மமாக, தீரா இன்மையின் இருப்பாக, வான் நோக்கிக் கரைந்து ஒளிக்குள் ஒளியாக, மின்னி மறைந்தது.

    இக்கொடிய பாலை நிலத்தில், காலங்களற்றுத் தனிமையைக் குடித்துக் கொண்டு வீற்றிருக்கும், இத்துறவிக்கு மட்டுமே அது சாத்தியம். தேவனின் சொல்லை அறிந்து கொள்வதென்பது தீயில் தன்னைத் தானே எரித்துக் கொள்வதன்றி வேறென்ன! அச்சொல்லின் மர்மத்தை, உண்மையைத் தேவனும், இந்த தீர்க்கதரிசியுமே அறிவர். இந்த நாள் புண்ணியமடைந்தது. அவர் நிறைவினால் தழும்பிக் கொண்டிருந்தார். "தேவனின் சேவகன், தேவகுமாரன், இம்மானுட குலத்தின் ஒரே நம்பிக்கை!, ஆம்! இந்த மண்ணும் வானும் இன்று திருப்தியடைந்தது" குரலின் நடுக்கம் இன்னும் அடங்கியிருக்கவில்லை.

    அவர் நதியைச் சுண்டினார். "செல்! இன்றைய நாளின் சடங்குகள் நிறைவுற்றது, செல்!" ஜோர்டான் நதி திரும்பவும் தன் ஓட்டத்தை அமைதியாகத் தொடர்ந்தது.


வியாழன், 17 நவம்பர், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம்- 75

   


    சபிக்கப்பட்ட சாக்கடலை, அவர்கள் வந்தடையும் பொழுது நண்பகலின் வெம்மை உக்கிரமாகப் பொழிந்து கொண்டிருந்தது. மரணத்தின் வெளிர்வு அவர்கள் ஒவ்வொருவர் முகத்திலும் அப்பி வழிந்தது. உமிழ்நீர் கூடச் சுரக்காது அகமும் புறமும் வற்றி வடிந்திருந்த அவர்கள், எந்த உயிர் நடமாட்டமும் இல்லாத நீர்ப்பரப்பினை வெறித்துப் பார்த்தனர். ஒரு மாபெரும் விஷக் குளம் போல அலைகளின்றி அமைதியாகக் கிடந்தது. ஜோர்டான் நதி வழி வரும் மீன்கள் கூட கடலின் கனத்த நீர்மையைத் தொட்டதும் உயிரிழந்துச் செத்து மிதந்தன. கரையில் சிறிதும் பெரிதுமாய் முள் மரங்கள் மட்டும், முட்களையே கிளைகளாகவும், இலைகளாகவும், வேராகவும் கொண்டு முடைந்துக் குத்தி நின்றன. கனத்த ஈயத்தை உருகி வழித்து விட்டாற் போல நீர்மை அடர்ந்தும், எந்தச்சலனமுமின்றியும் நொதித்தது. பக்தியுடன், இறைவழியை மட்டுமேப் பற்றுதலாய்க் கொண்டிருப்பவன் ஒருவேளை அதைக் காண முடியும். முற்றிலுமாய் அழித்தொழிக்கப்பட்ட சோடோம் மற்றும் கொமோரோ எனும் அவ்விரு நகரத்தை, நதியின் ஆழ்ந்த கரிய அடிப்படிவுகளில், காலாகாலத்திற்குமாக அந்நகரங்கள் அமிழ்ந்து கிடப்பதை உணரமுடியும்.

    ஜீசஸ் சற்று உயரமாக இருந்த ஒரு ஒற்றைப்பாறையில் ஏறி தூரத்தை அளவிட்டான். பாழ் நிலம் மட்டுமே விரிந்து பரவிக் கிடந்தது. சூட்டின் எரிவைக் குடித்துக் கொண்டு பூமியும், வானும் திக்கற்று முயங்கியது. திட திரவ மாறுபாடுகளின்றி காட்சிப்புலனில் காணும் அனைத்தும் உருகி மறைந்தன. நெழிந்து சுழித்தன. அமைதியின் மேற்தோல் தடித்துத் தடித்து, அழுத்தத்தை நிரப்பியது. காற்று, அகப்பட்டுக் கொண்ட குஞ்சுப்பறவை போல அங்கும் இங்கும் திசைகளுற்றுத் ததும்பிப் பின் அடங்கியது. ஜீசஸ், ஆண்ட்ரூவின் தோள்களைப் பற்றிக் கொண்டு விசனத்துடன் நோக்கினான். "எங்கே அவர்? ஞானஸ்நானம் அளிக்கும் ஜான்!, கண்ணுக்கெட்டியத் தொலைவு வரை எந்த உயிர்களையும் காணவில்லையே?"

    "அதோ! தூரே நீட்டமாய் வளர்ந்து நிற்கும் நாணல் புதர்களைத் தாண்டி நாம் போகவேண்டும். அங்கு இந்நதி, உயிருடன் செல்கிறது. அதன் திரவ நுனிகளில், அமைதியின் சலனம் பெருகி ஓடும் ரேகைகளைக் காண முடியும்.  பாறைகளின் இடைவெளி வழியே சதா தன்னைப் புதுப்பித்துக் கொண்டு ஒழுகும் நீர்ப்பரப்பில்தான் அவர் வருபவர்களுக்கு ஞானஸ்நானம் செய்கிறார். வாருங்கள்! நான் உங்களைக் கூட்டிப் போகிறேன்." ஆண்ட்ரூ கைதூண்டித் தொலைவைக் காட்டினான்.

    "நீ இரு. ஆண்ட்ரூ, ஏற்கனவே சோர்வாக இருக்கிறாய்! நீ மற்றவர்களுடன் இங்கேயே ஓய்வெடு. நான் தனித்துச் சென்று அவரைக் கண்டறிகிறேன்"

"அவர் பயங்கரமானவர்! நான் உங்களுடன் வருகிறேன் துறவியே!"

    "நான் தனியாகச் செல்ல விரும்புகிறேன், ஆண்ட்ரூ! நீ அவர்களுக்குத் துணையாக இங்கேயே இரு!"

    ஜீசஸ் நாணல் உயர்ந்து நிற்கும் புதரை நோக்கி விரையத் தொடங்கினான். அவனது இருதயம் காரணமின்றி படபடத்தது. அவன் தன் நெஞ்சில் கைவைத்து அழுத்தி, அமைதியாகு என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். வானம் இன்னும் வெக்கையைக் கைவிட்டிருக்கவில்லை. வெண்மை துலங்கும் ஒளியில் கரு நிறப் புள்ளிகளாக, மொத்தையானக் காக்கைக் கூட்டத்தின் சிறகடிப்புகள், பாலை வெளியிலிருந்து ஜெருசலேமை நோக்கி உயர்வதைக் கண்கள் கூச, அண்ணாந்து நோக்கினான். 

    தனக்குப் பின்னேத் தன்னை யாரோ தொடர்வது போலத் தோன்றவே திரும்பிப் பார்த்தான். யூதாஸ் எந்த உணர்ச்சிகளுமின்றி அமைதியாக வந்து கொண்டிருந்தான்.

    "நீ என்னை அழைக்க மறந்து விட்டாய்!" யூதாஸ் வெறுமனே உதடுகள் பிரியாது சிரித்தான். "இது ஒரு சிக்கலானத் தருணம், நான் உன்னுடன் கண்டிப்பாக இருக்க வேண்டும்"

"வா!" ஜீசஸ் கண்கள் பனிக்க அவனை அழைத்தான்.

    ஜீசஸ் முன்செல்ல, யூதாஸ் பின் தொடர்ந்தான். அவர்கள் நாணல் கற்றைகளை விலக்கி, வெதுவெதுப்பான நதியின் கால்கள் படிந்த சேற்றை மிதித்துக் கொண்டு சென்றனர். ஒரு கருத்த நாகம், பாறைக் குன்றத்தின் இடையில் புகுந்து ஊர்ந்து வெளிவந்தது. பத்தி விரித்துத் தன் பழுத்த செந்நிறக் கண்கள் உருள மிரட்சியுடன் சீறியது. அதன் பாதி உடல் பாறையின் உடலாக ஒட்டி இருந்தது. தலையும், கழுத்தும் விரிந்து விடைத்து நின்றது. ஜீசஸ் பதற்றம் கொள்ளாமல் மெல்லத் தன் கைகளை அசைத்தான். அது அதன் வருகையைத் தான் ஏற்றுக் கொள்வதைப் போல இருந்தது. யூதாஸ் மெல்லத் தன் கையிலிருந்த கம்பை ஓங்கத் தலைப் பட்டதும், ஜீசஸ் அவனைக் கட்டுப்படுத்தும் வகையில், அடித்தொண்டையில் செருமினான்.

"    வேண்டாம்! நண்பா! அதை ஒன்றும் செய்யாதே! அது அதற்கு இறைவன் என்ன அளித்தானோ, அதைத் தானேத் திரும்பச் செய்யும். கடிப்பது தானே அதன் குணம், விட்டு விடு நண்பா!"

    சூடு உராய்ந்து உராய்ந்து பல்கிப் பெருகியது. தீயைக் குடித்துக் குடித்து அந்நிலமும் தீயைப் போலவே ஆகி இருந்தது. பற்றிக் கொள்ளும் அனைத்தையும் நீக்கமற உட்கொள்ளும் அம்மண்ணில் ஆழக் காலூன்றி அவர்கள் முன்னேறினர். தெற்கிலிருந்து சாக்கடல் தொட்டு வீசும் காற்றின் துர்நாற்றம், அழுகியப் பிணங்கள் நொதித்துப் புழுப்பதை ஒத்திருந்தது. ஜீசஸ் அக்குரலைக் கூர்ந்தான். அதன் காட்டுத்தன்மையையும், கனத்தொலிக்கும் கார்வையையும் அவனால் உணர்ந்து யூகிக்க முடிந்தது. இப்பொழுதும் பின் என்றென்றைக்குமாக அவன் கேட்கும் சொல், "...தீ! கோடாரி! மலட்டு மரம்!..." அச்சப்தத்தின் வெம்மையைக்கூட அவன் தன் உடலில் உணர்ந்தான். வருந்து! வருந்து!" அது ஒன்றிலிருந்து பலவாக, எதிரொலிப்புக்கள் அடங்காது திக்குகள் எங்கும் பட்டுத் தெறித்து அவனைப் பேதலிக்க வைத்தது. ஜீசஸ் மெதுவாகவும், மிகுந்த கவனத்துடனும் ஒரு வன்மிருகத்தின் குகைக்குள் செல்வதைப் போல, அச்சொல்லைப் பிடித்துக் கொண்டு சென்றான். நாணல் வெளியைப் பிளந்து செல்லச் செல்லச் அச்சொல்லின் அதிர்வு கூடிக் கொண்டிருந்தது. சொல்! சொல்! சொல்! என அது பின்னிப் பிணைந்து அவனைச் சுறறிப் பெருகியது. "வருந்து! வருந்து!", ஒலி நாண்கள் சுருள் அவிழ்வதைப் போல சட்டென்று அவிழ்ந்து அவன் செவிப்பறைகளைக் கிழித்தது. சொல்லின் மந்திர நெடி, அதன் கனம், அதன் முடிவற்ற அதிர்வுகள், அவனால் தன்னிலையைப் பிடித்து நிறுத்த முடியவில்லை. அகம் சுண்டுவதை, ஒவ்வொரு ஒலித்தூண்டல்களுக்கும், அவனது நரம்புகள் இழுபட்டுத் தளர்வதை, அவனது உடல் ஒரு, நரம்பிசைக் கருவி போல, அமானுட உகிர்களால் நாண்கள் தந்தியதிர்ந்து, விம்முவதை என்ன செய்வதென்றறியாது அவனே உற்று நோக்கிக் கொண்டிருந்தான். விதிர்விதிர்க்க தன் உடல் முழுதும் உமிழும் படிக் கத்த வேண்டும் என இருந்தது அவனுக்கு. ஆம்! சரியாக அங்குதான் அவன் அந்தத் துறவியைக் கவனித்தான். நாணல் போலவே அவரது கால்கள் பாறைக்குன்றத்தின் மேலே துடித்துத் துடித்துக் காற்றின் இழுப்பிற்கு நடுங்கிக் கொண்டிருந்தது. ரோஜாக்களின் ரத்த நிற இதழ்கள் அவரைச் சுற்றிக் குழுமி, ஜோர்டான் நதி ஓட்டத்தைப் பற்றி நகர்ந்தது. "இவர்தானா! இப்பாலை நிலத்தின் வெட்டுக் கிளி!, பசியின் தேவதை! பழியை நிறைவேற்ற வந்திறங்கியத் தேவதூதன்?. கரை பற்றிக் கரையும் அலைகள். காலங்காலமாய் பழி தீர்க்க வந்துதித்த மனிதர்கள் அனைவரும், பாறைகளில், அலைகள் ஒவ்வொருமுறை முட்டி மோதி உடைவதைப் போல உடைந்து நொறுங்கிப் போயினர். எத்தனை குலங்கள்! மனிதர்கள்!. தங்கள் புருவங்களிலும், நகங்களிலும் வண்ணம் பூசிக் கொள்ளும் எத்தியோப்பியர்கள், கனத்த வளையங்களை மூக்கினில் தரிக்கும் சாலடியர்கள், அடர்த்தியாக மீசையைக் காது வரை வளர்த்துக் கொள்ளும் இஸ்ரேலியர்கள். எத்தனை பண்பாட்டினைக் கடந்தும் இச்சொல் அதன் வீரியம் குன்றாது தகித்துக் கொண்டிருக்கிறது என்பதை மையமின்றி நினைத்துக் கொண்டான். 

    தெற்கிலிருந்து வீசும் கனத்தக் காற்றில் இன்னும் அவர் அசைந்து நடுங்கிக் கொண்டிருந்தார். மடித்திருந்த சொற்கள் விரிந்து அவரிலிருந்து வெளியேறியது. "வருந்து, வருந்து! தேவனின் நாள் வந்து விட்டது! கேள்!  இந்த நிலம் ஒரு பாம்புச்சட்டை உரிவதைப் போலத் தன்னைச் சுருட்டிக் கொள்ளப் போகிறது. அவனது மூச்சின் ஆவேசத்தால் இந்த மண் ஒரு தூசுத்துகள்களாய்ப் பொடிந்து கரைந்தழியப் போகிறது. நம் தேவனின் படைகள் கட்டளையிடுகிறது! இந்த நாளில் சூரியன் நண்பகலில் மறையட்டும், சந்திரனின் வெண்துகில்களை உடைக்கக் கடவது, வானும் மண்ணும் இருளன்றி ஏதுமற்றுப் பாழாகட்டும். உனது சந்தோசங்கள் துக்கமாகத் திருப்பப்படும். உனது சங்கீதங்கள் ஒப்பாரிகளாகட்டும். நான் ஒரு சாம்பல் துகள்களாக உங்களை ஊதித் தள்ளுவேன். உங்களின் கை கால்கள் என அங்கங்களின் உறுப்புகள் அனைத்தும் சிதறித் தெறிக்கும் படியாய் ஆணையிடுவேன்" 

புதன், 16 நவம்பர், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம்- 74

 

    கார்ந்த வெளிச்சப் பட்டைகள், தடிமன் குறைந்து மெல்ல மெல்ல மெலியத் தொடங்கியது. கடுமை அடங்கி ஒளி, கருமையை உறிஞ்சிக் கொண்டது. செந்நிறமும், ஊதா நிறமும் கலந்து பாறைத் திட்டுக்களில் படிந்து பரவியது. தூரத்தில் இதுமியாவின் மலை அடுக்குகள், சூரியனின் அயர்வை உள்வாங்கிக் கொண்டு, இளஞ்சிவப்பு நிறத்தை ஓர்த்தது. கூசும் வெண்ணிற ஒளி மறைந்துக் கண்களைத் திறந்து உற்று நோக்க முடிந்தது. பாதையின் வளைவில் அவர்கள் திரும்புகையில், நிலம் மொத்தமும் திடீரென உருமாறித் தன்னைத் தானேப் புதுப்பித்துக் கொண்டிருந்தது. வெம்மையின் முடிச்சுக்கள் அவிழ்ந்து குளிரின் மென்பதம் பிசுபிசுப்புடன் ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அவர்களின் உடலும் மனமும், அதனை உள்வாங்கிக் கொள்ளவும், பசுமை வெளிர்க்கும் தூயப் புல்வெளிகள், சாம்பல் மணல்பரப்புகளைத் தாண்டி, எல்லையற்று விரவிக் கிடப்பதைக் கண்டனர். ஈரத்தின் தத்தல்கள் தழும்பி நிறையும் கிலுக்கு சப்தத்தை அவர்கள் உணர்ந்தனர். பழுத்த மாதுளையின், இனித்த மணம் ஆக்கிரமித்தது. தொலைவில் வெண் புள்ளிகள் போலக் குடில்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது. பருத்த இலைகள் அடர்ந்த காட்டுமல்லி மற்றும் ரோஜாப் பதியன்கள் விரியும் நறுமணமும் கலந்து, தொலைவினை மேலும் குளிர்மையாக்கியது.

    "ஜெரிகோ" ஆண்ட்ரூ குதூகலத்தில் கத்தினான். "அங்கு உலகிலேயே அதி உன்னதமான இனிப்பைக் கொண்ட பேரீச்சையும், அபூர்வமான வண்ணங்களில் ரோஜாக்களும் உண்டு. அவைகள் அழிவற்றதும் கூட. ஒருவேளை அவைகள் வாடினாலோ, நொய்ந்து போனாலோ, அவற்றை இந்தத் தண்ணீரில் முக்கி எடுத்தால் மட்டும் போதும், மறுபடியும் புத்தம் புதியதாக ஆகி விடும்"

    இரவின் நீள் கரங்களுக்குள் நிலம் தன்னைப் பொதிந்து கொண்டது. சட்டென இருளின் தீட்சண்யமானக் கோடுகள் அடர்ந்து வானமும் பூமியும், அப்பாலுள்ள பெரிய மொத்தையான உருவின் நிழல் போர்த்தியதைப் போல் முற்றிலுமாகக் கருமையை சுவீகரித்தது. முதல் விளக்கு ஒளியின், வெளிச்சக் கீற்றுக்களின் மஞ்சள் நிறத்தின் துடிப்புகள், ஒரு திரவமிணுக்கத்துடன் அலைந்து அலைந்து முன்னேறுவதை அவர்கள் கண்டனர்.

    "பயணம், இருளின் நீங்கா அமைதியினுள்,  இந்த அறிந்திராதக் கிராமத்தினுள், இரவின் முதல் ஒளித் தூண்டியிருப்பதை வழித்துணையாகக் கொண்டு உண்பதற்கு கைகளில் ஏதுமற்று, அயரவும், உறங்கவும் எந்த தாங்கல்களுக்கும் உரப்பு இல்லாது, இறைவனின் நீங்காக் கருணையினையும், மனிதனின் தீர்ந்துவிடாத நன்மையையும் மட்டுமே நம்பிப் பயணிப்பது!, ஆம்! அதுதானே உண்மையும், தூயதும், மகத்துவமுமான இவ்வுலகின் பேரின்பம் இல்லையா!" ஜீசஸ் சற்று நிமர்ந்து தூரத்தில் அவர்களுக்காகக் காத்திருக்கும் காருண்யத்தை நெஞ்சில் இருத்தி, அந்த நொடிப்பொழுதின் ஆன்மத் தேற்றலின் அளக்க இயலாத நிறைவின் இன்பத்தை உள்வாங்கிக் கொண்டிருந்தான்.

    நாய்கள் பழக்கப்படாத மனித வாடைகளினால் விசனித்து, குரைக்கத் தொடங்கின. கதவுகள் திறப்புதும், பின் ஊர்ந்து வீட்டினுள்ளே நுழைய முயலும் இருளைத் துண்டித்து மறைவதுமாய் இருந்தது. துணைவர்கள் ஒவ்வொருக் கதவுகளையும் அணுக, அவர்கள் கை நிறையத் தேவையான ரொட்டித் துண்டங்களும், மாதுளைப் பழங்களும், ஊறவைத்துக் கனிந்த பச்சை ஆலிவ் பழங்களும் இருந்தன. இறைவனின் கைகள் எப்பொழுதுமே அளவைக் கொண்டதல்ல. மனிதனின் இருதயம், என்றுமே இருள் பூசிக் கொள்வதில்லை. அதன் அளவிட முடியாத ஒளியே அவர்களைச் சோம்ப விடாமல், தளர்ச்சியடையும் பொழுதுகளிலெல்லாம் தன் வலுவானக் கரங்களினால் தாங்கி நிற்கிறது என்பதை உறுதியாக நம்பினர். தோட்டத்தின் ஓரத்தில், சிறுதாவரங்கள் பதிந்த நிலத்தில், தலைக்கு மேலே விண்மீன்கள் துளிர்க்கத் தொடங்குகையில், அவர்கள் திரட்டிய உணவினை நன்றாக உண்டு, நாளின் மொத்த அயர்வையும், ஒரு தூசுப்படலத்தை விலக்கிக் கொள்வதைப் போல விலக்கிக் கொண்டு தன்னிலை மறந்து உறங்கினர். பாலைநிலத்தின் பழுத்த வெண்ணிற ஒளிக் கூச்சல் அவர்களின் கனவினைக் கூட ஆக்கிரமித்திருந்தது. அது சலனிக்கும் காட்சிகளின் நெழிவு, விரிந்து விரிந்து மணல்வெளியும், கற்பாறைகளும், கரையினில் மீள மீளத் துடிக்கும் அலைப்படிவங்களாக மாறியது. பின் மண் நெகிழ்ந்து, நீர்மையின் தழும்பல்களால் அவர்களை முழுக்கியது. சுழிகள் உருவாகி விளிம்புகளில் உடைந்து, விரிந்து, மீண்டும் மீண்டும், அதக்குவதும் வெளித்தள்ளுவதுமாய் உடல்கள் நிரம்பி வழிந்தன. ஆனால் உறக்கத்தின் ஆழ்மையில் ஜீசஸ் மட்டும் தனித்திருந்தான். தோல் கருவிகளின் ஓசையின், தாளகதி தளர்ந்தும், உயர்ந்தும் முன்னும் பின்னும்  அவன் கனவில் போக்கு காட்டியது. சுற்றியிருக்கும் நிலம் நகர்வது போலவும், ஜெரிகோவின் சுவர்கள் பொடிந்து அவர்களைச் சுற்றி விழுவது போலவுமாக காட்சியின் பாதைகள் தளர்ந்துச் சுருங்கிப் பின் புள்ளியாகி மறைந்தது.