திங்கள், 23 ஏப்ரல், 2018

கிறுஸ்துவின் கடைசி சபலம் 1

குளிர் நீலம் மிளிரும் காற்று. மறைந்து விசித்திரமாய் புன்னகைக்கும் நட்சத்திரங்கள். மொட்டவிழ்ந்த வான் வழி ஒளியின் மகரந்தங்கள் துளித்துளியாய் நிலமெங்கும் சிதறிக் கிடந்தது. பாறைத்துண்டங்களின் மெல்லிய முணங்கல். அனல் அலை அலையாய் மிதந்து கிடந்தது அந்த அத்துவான வெளியில். எங்கும் நிசப்தம் சூழ்ந்த மௌனம். அமைதி மென் சுனை நீருருண்டைகளாய் வானிலிருந்து நிலம் நோக்கி நகர்ந்தது. காற்றின் ஈரம்படிந்த எண்ணங்களுடன் பிரார்த்தனையில் அமிழ்ந்திருந்தான் அந்த இளைஞன். கீழே புகை மண்டித் திணறும் சுவாசங்கள். குட்டைப்புதர்களுள், பொந்துகளில் முணங்கும் மிருகங்களைப் போல கிராமம் நித்திரையுடன் போராடித் தளர்ந்திருந்தது.

அமைதியின்றி அடர்ந்து ஓலமிடத் தொடங்கியது காற்று. மனிதர்களும் விலங்குகளும் பிராணிகளும் படர்ந்த மூச்சு  வியர்வையுடன் உவர் நாற்றத்துடன் அங்கு பரவிக் கிடந்தது. புன்னை எண்ணையின் வாசனை பெண்களின் கூந்தலிலிருந்து நாசி துளைத்தது.  புளித்த வாடையுடன் ரொட்டி அடுப்பிலிருந்து சுடச் சுட எடுத்து வைக்கப்பட்டிருந்தது.

நீ எதை நோக்கினாய். உன் கண்கள் இருளை நோக்குகிறதா? சைபரஸின் அடித்தண்டு இருளைத் துளைத்து வேறுபடுவதை, பேரீச்சை ஒரு நீரூற்றாய் உருமாறி காற்றின் அலையடிப்பில் நெகிழ்வதை, அடர்த்தி குறைந்த ஆலிவ் மரங்கள் கருமையினுள் ஓளிர்வதை.

நீ இங்கு பார்க்கும் சிதறுண்ட பாழ்குடிகள், இந்த நிலவெளியெங்கும் மூச்சின்றி கிடக்கிறது. இந்த வீடுகள் உருவாக்கிய இரவின் இடைவெளியில் சேறும் சுடுமணலும் அப்பிக் கிடக்கும் வெண்ணிறப்பூச்சு. கூரைகளுக்கு மேலே வெறித்த வான் நோக்கிக் கிடக்கும் மக்கள். உன்னிடம் வந்து இறைஞ்சுகிறது அம்மக்கள் திரளின் நிணச் சொற்கள். சொற்களற்ற மௌனம். மொழியில் பிதற்றும் நம்பிக்கைகளின் காய்ந்த புண். புண் மொய்க்கும் எண்ணக் குமிழிகள். குமிழிகளிலிருந்து பொட்டித்து தெறிக்கும் பழுத்த வாழ்வின் சீழ்.

அமைதி தலை தெறிக்க ஓடியது. தனித்திருந்தது சூன்யம். அவர்களின் கை கால்கள் பிணைந்து முறுக்கியிருந்தது. அனாதைகளாய் கை விடப்பட்டிருந்தனர். இதயங்களின் பெருமூச்சுகள் கணப்புகளில் சிதறித் தெறிக்கும் பாளங்களாய் முறிந்தது. ஓலங்களின் இறைஞ்சல். அழுகைகளின் பிடிவாதக் கார்வை. துடைத்தழிந்து கிடந்தது வாழ்வு. இன்னும் எங்களிடம் என்ன எதிர் பார்க்கிறாய்.

கிராமத்தின் நடுவே  உயரமான கூரையிலிருந்து  அந்தக் கதறல் பீறிட்டுச் சாடியது.

"இஸ்ரவேலின் தெய்வமே! இஸ்ரவேலின் தெய்வமே! பிதாவே!
இன்னும் எத்தனை காலம். ஒரு மன்றாட்டு. செத்த இறைச்சியை பிய்த்துக் குதறும் காட்டு நாய்களின் நரனரப்பும் வன்மமும் புதைந்த மன்றாட்டு.

மொத்த கிராமமும் யாருடைய கனவிலோ விழுந்ததைப் போல கூச்சலிட்டது. வசைகளைப் பொழிந்து காறி உமிழ்ந்தது. இஸ்ரவேலின் நிலமெங்கும் செத்து மீந்த எலும்புத்துண்டங்கள்.

அல்குல் பிளந்த மண். அலறும் பிறப்பு. மூட்டிய பேரமைதிக்குப்பின் அழுகையின் மென் ஓலம்.

"இன்னும் எத்தனை நாட்கள்? எத்தனை காலம்? நாய்களின் ஊளை அனல்கிடங்காய் மூடியது ஒட்டு மொத்த வெளியையும். வலுக்கும் குரல்களின் சப்தங்களின் கலங்கிய பரப்பில் மூர்ச்சையுற்று புரண்டான் அவன்.

கனவின் பிடியிலிருந்த முடிச்சுகள் இன்னும் இன்னும் என இறுக்கியது.

இருள் கோடுகளில் அந்தக்குன்றின் உள்முகம் வெளிப்பட்டது. அது பாறைகளால் ஆனதல்ல. மங்கிச் சுழன்றது, தலைகீழாகிப் பரவியது ஆழ மிதிக்கும் காலடி இரைச்சல். கருமையிலிருந்து கோட்டு வெளிச்சமாய் நகர்ந்து வந்து கொண்டிருந்தது உருவங்களின் இருள் பொதிந்த மூச்சுகள். பெரிய புருவங்களும், கைகால்களும், கரடுமுரடான  தாடி மீசைகளும் வைத்திருந்தனர். நீண்டுக் குறுகிப் பிரிந்து உருமாறி புகை கலைந்ததைப் போல வடிவற்று மறைந்தனர்.

இருள் ரசம் மங்கிய கண்ணாடிப்பாளமாய் பிம்பங்களை இழந்தது. உறக்கம் பாம்புச்சட்டை போல உரிய உரிய விழிப்பு குளத்தினுள் துளிர்த்த முதல் அலையடிப்பாய் பின் எண்ணிலடங்கா அலைகளாய் மெல்ல மெல்ல கரையைத் தாண்டி சிதறியது. விழிப்பு தட்டியவுடன், அந்த முகங்களின் இழிபட்ட வரைவு ஒரு கோட்டுச்சித்திரத்தைப் போல அறையின் விரிசலிட்ட ஒளியில் மிதந்து கரைந்தது. வண்ணங்களற்ற அந்த சாம்பல் உருவங்கள் எதைத் தேடியது. ஏன் அத்தனை வன்மத்துடன் அதன் கண்கள் என்னை உற்று நோக்கின. தலையழுந்தும் பாரத்துடன் அவன் வீழ்ந்த கடைசி நொடியத் திரும்பவும் நினைவு படுத்த முயன்று இரு உள்ளங்கைகளாலும் தலையை அழுந்திப்பற்றி சொற்களற்ற மொழியில் தனக்குள்ளேயே பிதற்றினான்.

கவிந்திருக்கும் குவையில் மேகங்கள் சதையும் எலும்புமாய் ஒழுகியது. யாரோ திணறிக்கொண்டிருப்பதைப் போலவும், ஊடுவது போலவும் உணர்ந்தான். செந்தாடிக் காரன் மலைக்குன்றின் உச்சியில் திரும்ப வந்து கொண்டிருந்தான். அவனது மேலாடை திறந்து கிடந்தது. வியர்வை ஒழுக வெற்றுக்கால்களில் வந்து கொண்டிருந்தான். மூச்சைப்போல பின் தொடரும் அவனது வீரர்கள் பின் வந்து கொண்டிருந்தார்கள். பாறைகளின் நிலைத்த நெரிசலின் நடுவே ரகசியங்கள் சிமிட்டின. கீழ்வானத்தில் குவியும் வெளியில் வெள்ளிப்பிழம்பாய் திரண்டது ஒற்றை விண்மீன். நாள் சில்லுகளாய் உடைந்து முடிந்திருந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக