திங்கள், 5 ஏப்ரல், 2021

 Eli Eli Lama Sapacthani!

என் உடலும் ரத்தமும் உங்களுக்கு போதுமானது.
புசிப்பீர் குடிப்பீர் விடாய் தணியும் வரை.
பொருத்தமற்ற புன்னகையுடன் மறுபடியும் அந்த சொல்லை நினைவு கூர்ந்தான்
Lama sapachthani!
அடியாழம் காணவியலா பள்ளத்தாக்கில் விழுதலும் பின் எழுதலுமாய் ஆன ஊசலாட்டத்தில் நினைவு தப்பிக் கொண்டிருந்தது. வலி என்பது ஒரு மெல்லிய பதற்றம் போல தொடங்கி ஒரு கட்டத்தில் உடலின் நீக்க இயலாத உறுப்பு போல ஆகியிருந்தது. அதன் ஒவ்வொரு துடிப்புகளுக்கும் எதிர்ச்சொல் ஒன்று வெளியிலிருந்து உருவாகி நால் புறமும் ஒழுகி ஓடிக் கொண்டிருந்தது. அதன் சின்னஞ்சிறிய துகளில் கூட துடித்துக் கொண்டிருந்தது அந்த சொல். ஒரு எதிரொலி போல எனக்கு நானே என் குரலில் அதைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
என் முன் வியாபித்த நிலமெங்கும் திட்டுத் திட்டாய் மக்கள் கூட்டம். நான் தொங்கிக் கொண்டிருக்கும் என் சிலுவையின் அடியிலிருந்து ஒரு சிறிய குன்று போல அவர்கள் வீசியெறிந்த கற்களின் குவியல். அது ரத்தம் தோய்ந்து சிவந்த முகடு போல ஒளிர்ந்தது.
கோழை துரோகி கிறுக்கன்
சொற்களின் வசைகளின் இடையில் நான் வேறு எதையோ நோக்கினேன். வானம் வெளிர்ந்து ஏதுமற்றதுமாய் இன்னும் அடர்ந்த அமைதியுடன் இருந்தது. மேகங்களின் தீற்றல் அங்கொன்றும் இன்கொன்றுமாய் எதையோ மறைக்க எத்தனிக்கும் முயற்சியில் நகர்ந்தது.
எனக்கான கேள்விகளின் உகிர்கள் அழுத்த நான் திரும்பவும் நினைவு கூர்கிறேன். நான் யார்? என் ராஜ்ஜியம்? என் பிதா? என் மரியா? என் வலி? என் மக்கள்? கானல் நீர் சலசலப்பு போல எங்கோ தூரத்தில் அலையடித்தது?
என் பால்யத்தை என் இளமையை என் மேரியை என் பிள்ளைகளை என் பேரக்குழந்தைகளை. காட்சிப்பிழை போல எல்லாம் நகர்ந்து சென்றது. தலை முடி உதிர்ந்து நுரை ததும்பும் தாடியுடன் என்னைப் பார்த்தேன்.
என் சொற்களின் கண்ணியில் அகப்பட்டுக் கொண்டிருந்தேன். காதுகளில் ரீங்காரமிட்டது என் சொந்த சொல்லின் பிரசங்கம்.
என் விண்ணரசை உற்று நோக்கினேன். சாம்பல் பீடித்த கண்களுடன் இங்கிருந்து எட்டிப் பார்க்கும் என் பிள்ளைகளைப் பார்க்கிறேன். அணுக்கமாக அனைவரையும் அணைத்துக் கொண்டு அவர்களிடம் சொல்கிறேன்.
என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும்.
நீங்களே என் உப்பும் ஒளியும்
என் உடலைப் புசியுங்கள்.
என் குருதியைக் குடியுங்கள்.
அதற்காகவே அது தருவிக்கப்பட்டது. உங்கள் ஒவ்வொருவரின் பசியும் தாகமும் என்னால் மட்டுமே தீர்க்க முடிந்தது.
ஆம். நானே இப்பரலோகத்தின் தகப்பன். என்னை உண்டு உங்களில் விழுங்கிக் கொள்ளுங்கள்.
என்னிலிருந்து முளைக்கும் ஒவ்வொரு அணுக்களும் உங்களுக்கு நினைவுறுத்துவது ஒன்றே.
அமைதியுறுங்கள். இவ்வுலகில் அனைத்தையும் விட பசியே உண்மையானது. அவ்வுண்மையின் பொருட்டு என் உடலை அளிக்கிறேன்.
ஆம். இப்பொழுது அது நிறைவடைந்தது முற்றிலுமாக!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக