திங்கள், 3 டிசம்பர், 2018

நட்சத்திரங்கள் உதிர்ந்து கொண்டிருந்த வானம்

இன்னும் அலைந்து கொண்டிருக்கிறான் எங்கோடி கண்டன்.
நட்சத்திரங்கள் உதிர்ந்து கொண்டிருந்த வானில் இருந்து அமைந்தது ஜோதி. கருப்பனிடம் உள்ள பிணக்கில் சிறிது போட்டிருந்தான் போல.
குழலை எடுத்து தாகம் தீர ஊதத் தொடங்கினான்.
கருத்த வனம் அவனை மத்தகத்தில் இருத்தியது.
மெல்ல ஊன் பலியின் ரத்த வெள்ளம் சுனையெடுத்து கொதிந்தது
நட்சத்திரங்கள் உதிர்ந்து கொண்ட வானம் மழையை இரையெடுத்து நெளிந்தது.
ஊன் ஊன் ஊன்.
கால்களினடியில் நொதித்துக் கொண்டிருந்த கள்ளின் ஊற்றிலிருந்து முளைத்தெழுந்தான் கருப்பன்.
இருவரின் கோப்பைகளுக்கு நடுவில் வந்தமர்ந்தது  ஏதுமற்ற கருத்த வானம்.

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

கிறுஸ்துவின் கடைசி சபலம் 10

அவர்கள் தான்! அவர்கள் தான்!

கதவு இறுக்க மூடி அடைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்டான். குளம்பொலிகள் மிக அணுக்கமாய் நகர்ந்து கொண்டிருந்தன. நீர்மையினுள் கொதி குமிழியிடுவதைப் போல இருளும் ஓலியும் குலைந்த சமனற்ற ஒன்று அவனைச் சூழ்வதை. முகங்கள் மாறிக் கொண்டே இருக்கும் எண்ணற்ற ஆடிப்பிம்பங்களினுள் நிலைக்கும் தீற்றலான ஒன்று. ஆம்! ஆம்! மரப்பட்டைகளினுள்ளிருந்து பிசின் உமிழ்வது போல, அது மெல்ல மெல்ல பொள்ளிக் கொண்டிருந்தது.

அன்று புழுவைப் போல நெளிந்து கொண்டிருந்தேன். பலவீனமான என்னிடமிருந்து அவர்கள் அதைத் தான் எதிர் பார்த்திருக்கக் கூடும். எப்பொழுதும் எப்பொழுதும் சுற்றியிருக்கும் பார்வைகளில் முழுக்க நிர்வாணப்பட்டிருப்பதை நான் உணர்கிறேன். சிறு வயதிலிருந்தே எந்த களியிலும் எவருடனும் இணையாமலேயே தனிக்கப்பட்டிருந்தேன். பின்பான சமயத்தில் பொருக்குகளை உடைத்துப் பிய்க்கும் வதையில் ஆசுவாசப்பட்டுக் கொள்வேன்

இன்னும் என்னை அவன் தொடர்ந்து கொண்டிருக்கிறான். நெருக்கமாக நகரும் இந்த சப்த அலைகள் அந்த வருகையத் தான சலனிக்கின்றன.

கதவு உந்தி இழுபட்டது. வெளியிலிருந்து யாரோ அல்லது எதுவோ முழு வலுவுடன் அதை மோதியது. தாழ்ப்பாள் உடைந்து சிதறியது. அலையும் கதவுகளின் இடைவெளி வழியே அவன் தெரிந்தான். செந்தழல் சுருட்டை முடியும் நீள் தாடியும் கொண்ட மனிதன். வேட்டை மிருகம் போல இளைஞனை நோக்கிக் கொண்டிருந்தான் வெளியிலிருந்து.

மெல்ல் அறையினுள் நுழைந்தவன்.  அறையெங்கும் சிதறிக்கிடந்த பொருள்களை ஒவ்வொன்றாக நோக்கினான். அறை முற்றிலுமாக உலகினிலிருந்து தனித்து விடப்பட்டிருந்தது. வெளியின் ஜன நடமாட்டம், பல்லாயிரம்  புழுக்கள் ஒரு சேர நெளிவது போல நகர்ந்து கொண்டிருந்தது வீதியெங்கும்.

முக்கில் கிடந்த இருப்பு பலகையில் அமர்ந்து உத்தரத்தில் தொங்கும் சிலந்தி வலைகளை மையமின்றி வெறித்துக் கொண்டிருந்தான்.
நிசப்தம் பல்லிடுக்கில் மாட்டிக் கொண்ட உணவுத்துணுக்கு போல தென்னியது.

நீ தயாராகி விட்டாயா?

செந்தாடிக் காரன் மெல்ல அவனின் மணிக் கட்டுகளை அழுத்தி பழுப்பு நிற பற்கள் தெரிய அருகமர்ந்தான்.

நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

வெளியிலிருந்து நீண்ட பட்டைக் குழாயாய் ஒளி அறையினுள் குமிழ்ந்தது. பாதி இருளினுள் அவனது முகம், பாதி ஒளிர்ந்தது. வலியினால் இம்சித்துக் கொண்டே இருக்கும், ஏக்கங்களால் தீய்ந்து கொண்டே இருக்கும் ஒரு பாதி. மற்றொன்று அடர்ந்து கனத்த தோல். அசைவின்றி அமிழ்ந்து கிடக்கும் உலோகத்துண்டு. ஒன்றில் ஒன்று முரணிட்டு குலைந்து குவிந்து முயங்கி அளைந்து கொண்டிருந்தது.

நீ தயாராகி விட்டாயா?

முரசரைந்து வந்து கொண்டிருந்தது  ரோமன்படைவீரர்களின் அணிவகுப்பு!

இன்று! இன்று! இஸ்ரவேலின் தெய்வமே! நாளையல்ல!
இன்று! இன்று மட்டுமே!

தன்னுள் நடுங்கிக் கொண்டிருந்த இளைஞனை உலுக்கிக் கேட்டான். ஆம்! நீ தயாராகி விட்டாயா?

இல்லை! வேண்டாம். நீ அதை செய்யக் கூடாது. நீ அதை தூக்கி வராதே!

மக்கள் அனைவரும் சதுக்கத்தில் குழுமியிருந்தனர்.

செந்தாடிக் காரன் இளைஞனை கூர்ந்து நோக்கினான். அறையின் ஓரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த சிலுவையைக் கீழே சரித்து உடைக்க முயன்றான். காறி உமிழ்ந்தான். நீ! நீ! நீ!

அவன் வருகையை நீ அறிகிறாயா? அந்த வெற்றிக் கூச்சல் உனக்கு கேடகவில்லையா? அது அறிவிக்கப்பட்டு விட்டது. உனது மாமா, அந்த போதகரிடம் போய்க் கேள்.

உனது போதகர், நேற்று பிரார்த்தனைக் கூட்டத்தில் முறையிட்டார்.

ஏன், நமது ரட்சகன் வரவில்லை. அவன் வரப்போவதுமில்லை. நாம் நம் காலம் முழுமைக்கும் பாவங்களில் புதைந்துழன்று வழியின்றி பரிதவித்து பின்னும் பின்னும் அதன் கனத்த கண்ணிகளில் கொளுத்தப்பட்டு, நம் நம்பிக்கைகளெல்லாம் பிடுங்கப்பட்டு அம்மணமாய் தொங்க விடப்படுவோம். எதிர்காலத்தின் நிச்சயமின்மையால் நம் பார்வைகள் குருடாக்கப்படும். சொற்களின் பலனின்றி செவிடாக்கப்படுவோம். முடிவிலி தொலைவு வரை கடவுளர்களுடன் சண்டையிட்டு பலியாவதே நமக்கு விதிக்கப்பட்ட ஊழ்.

ஆம்! அது உண்மையும் கூட. நமக்கு கடவுளர்கள் போதாது. கழுத்து கவ்வத் துடிக்கும் அதன் கூரிய பற்களை நான் தினமும் காண்பவன். நாம் மோதியே ஆக வேண்டும். காலம் அனைத்தையுன் நிர்ணயிக்கட்டும்.

நீ எங்கிருக்கிறாய்? என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்? கனவுக் கண்களுடன் இமைக்கும் இளைஞனை உலுக்கினான் செந்தாடிக்காரன்.

இன்றே! இன்றே! அவன் நாதியற்று தொங்கப்போகிறான்.  என்ன செய்வது. ஒருவேளை அவன் தானா? நாம் தேடிக் கொண்டிருக்கும் ஒருவன். நம் ரட்சகன்.  இஸ்ரவேலைக் காக்கும் தேவமைந்தன். எந்த உதவிகளும் கிடைக்கும் வழியின்றி வலியில் துடிதுடிக்க சாகப் போகிறானா? தன்னை வெளிப்படுத்தும் சிறுகணம் கூட அறியப்படாமல் பிணமாகப் போகிறானா? துருவேறிய ஆணிகளினுள் அவன் கைகால்கள் அறையப்படும் பொழுது, முழுக்க முழுக்க மனிதனாய் வதைபட்டு வெற்றுக்கூடாய் ஆன பிறகு. என்ன நிகழ்ந்து விட முடியும்.

செந்தாடிக்காரன் பேசுவது பெரும்பாலும் தனக்குள்ளேயே தான். எதிராளி ஒரு வெற்று சுவர். தன்னுள் தர்கித்து ஒரு சுழல் போல அவனது குரல் அறையெங்கும் அலையெழுப்பிக் கொண்டிருந்தது.

இல்லை! இல்லை!

அவனை காப்பாற்றியாக வேண்டும். அவனை மீட்கும் பொருட்டு எதிர்ப்பவர்கள் அத்தனை பேரையும் கொல்லலாம்.  நாம் அவனைக் காப்பாற்றியாக வேண்டும். அதிசயங்கள் நிகழும். நம்பிக்கையின் மீது நம்பிக்கை கொள்வோம். நாங்கள் சாக விடமாட்டோம். டேவிட்டின் ஒளி பொருந்திய முடி அவன் தலையினை அலங்கரிக்கும். அவனே விண்ணிற்கும் மண்ணிற்கும் அரசன்.

நீ கேட்கவில்லையா? தச்சன் மகனே?

எதிரே பழுத்த சுவரைப் பிளந்து அறையப்பட்டிருந்த களிம்பேறிய ஆணியில் குத்திட்டு நின்றது இளைஞனின் கண்கள். அதன் முனையின் வட்டச்சுழியில் நிலைத்திருந்தது அது. அடுத்த அறையிலிருந்து கிழவரின் வலி பொருந்திய சொல் அடித்தொண்டையிலிருந்து விம்மி உடைந்து சிதறி அரையெங்கும் உதிர்ந்தது.

எதிரெதிர் கூர் நுனிகள். எதிரொலிக்கும் பள்ளத்தாக்குகள். அசைய மறுக்கும் குத்துப்பாறைகள்.  சுழன்று கொண்டே இருக்கும் நீள் வட்டச்சுருள்கள்.

மனிதன்! மனிதன்! எல்லாம் போலி! போலி!

நமது ரட்சகன் இந்த வழியில் வரப் போவதில்லை. சுவரை வெறித்துக் கொண்டே நடுங்கும் குரலில் இளைஞன் பேச ஆரம்பித்தான்.

ஆம்! என்றுமே இங்கு வரப்போவதுமில்லை.

தேவனோ மனிதனோ யாருமே வரப்போவதில்லை. நாம் பூனையின் கூர் நகங்களுக்குள் பந்தாடப்படும் சுண்டெலி போல மரணத்திற்கிடையில் நித்தியமாய் அகப்பட்டுக் கொள்வோம். எந்த மணி மகுடமும் அரசாண்மையும் அவனுக்கு கிடைக்காது. அம்மணமாய் அவன் சிலுவையில் தன்னந்தனியே அறையப்படுவான். காலத்தினுள் கரைந்தொழிவது ஒன்றே அவனுக்கு சாத்தியப்படும். கொதிக்கும் குத்துப்பாறைகளுக்கிடையில் தனித்த பிணமாய் அவன் எஞ்சுவான். எந்த தேவனும் அவனுக்காக வந்திறங்கப் போவதில்லை.

உனக்கெப்படி தெரியும்? யார் சொன்னார்கள்?

பதிலேதுமின்றி ஜீர வேகத்தில் எழுந்தான். பகலின் வெளிச்சம் அறையின் அந்தரங்கங்களை ஊடுருவிப் பரவியது. கையில் உளி, சுத்தியல் மற்றும் ஆணிகளை எடுத்துக் கொண்டு கீழே கிடந்த சிலுவையினை அணுகினான்.

உனக்கு வெட்கமாக இல்லை. எல்லோரும் எல்லா தச்சர்களும், நாசரேத்திலும் கனாவிலும் கப்ரேனிலும் ஒதுக்கிய கீழ்மைச் செயலை நீ செய்து கொண்டிருக்கிறாய்.

இளைஞனைப் பிடித்திழுத்து சுவரோடு சுவராக பதித்து, ஓங்கி அறைந்தான்.

நீ ஒரு சுய நலமி என்றான். ஆனால் அவனது கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தான். ஏன்? ஏன்? அது மிகுந்த தன்னிரக்கத்தை உண்டு பண்ணியது.

பசித்த மிருகத்தின் மூச்சினைப் போல, பாலைக் காற்றின் அலைச்சல்.  காய்ந்த முட் பரப்பாய் சாம்பல் வான். உள்ளும் புறமுமாய் பூச்சிகளின் மென் உராய்தல். மரங்களின் பருத்த அடித்தண்டை ரம்பத்தினால் கீறுவது போல, அந்தக் குரல் அன்னகரின் வீடுகளின் சுவர்களைப் பிளந்தது. செந்தாடிக் காரன் மெல்ல கதவினருகில் வந்து கவனித்தான்.  பெரும் மக்கள் திரள். அவர்களின் அழுகை, விம்மல், எல்லாம் குழம்பி துண்டிக்கப்பட்ட இசைக்கருவியின் ஒற்றை நரம்பைப் போல ஓலமிட்டது.

மக்களே! ஆப்ரகாமின் உதிரத் துளிகளே! ஈசாக்கின் வழி வந்தவர்களே! ஜேகோபின் பிள்ளைகளே!

கேளுங்கள்!

மாட்சிமை பொருந்திய நம் பேரரசின் கட்டளை என்னவென்றால், நமது வீழ்ச்சியடையா செங்கோல் ஏந்திய மாமன்னரின் ஆணை. அவரை எதிர்த்த கலகக்காரனுக்கான தண்டனையை நிறைவேற்றப் போகிறோம்.  நாட்டின் துரோகியை சிலுவையில் அறைந்து கொல்லும் தண்டனையை நாட்டு மக்கள் அனைவரும் காணவேண்டுமென்பது அரச கட்டளை!

-The Last Temptation of Christ -Nikos Kazantzakis