சனி, 31 மார்ச், 2018

போப் ஆண்டவர் செய்ட்லுஸ்- ஐசக் பாஷவிஸ் சிங்கர்


வெள்ளிகிழமைகளின் நடு நிசிகள், அதிர அதிர உறுமும் சப்தங்களின் மத்தியில் போர்வையில் புரண்டு கெடையில் மோண்டிருப்பேன்.இரவின் கனவுகளில் என் தலைக்கு மேலே அந்த நதி மெல்லிய சிணுங்கல்களுடன் நகர்ந்து கொண்டிருக்க, அடிக் கூழாங்கற்களாய் அகம் கவிழக்கவிழ, நடு மத்தியிலிருந்து புறப்பட்டு அலைகள் விளிம்புகளில் உடைந்து கரையும். கோதைகிராமத்து களத்து வீட்டில், சித்தியும், தம்பியும் நானும் படுத்திருப்போம், களத்தை தாண்டிய நிலத்தில் மூன்று பீடங்கள். பன்றிமாடனும் மாடத்தியும், முத்தாரம்மையும். அந்த சாமத்தில் கேட்ட உறுமல்கள் பன்றிமாடனுடையது. சாமி கொண்டாடி முட்டிக் கொண்டே இருந்தார். நடு மண்டையில் குருதி தெறிக்க மண்ணை பிறாண்டிக் கொண்டே இருக்கிறார். களபம் கமக்க சுற்றிலும் ஒத்தைக் கொட்டின் மெல்லிய உசுப்பலில், முன்னும் பின்னுமாய் கால்களை அதக்கி பீடத்துப்படியில் முட்டிக் கொண்டிருந்தது அந்த பன்றி. புடைப்புகளாய் நகர்ந்து கொண்டிருக்கையில் அதை நான் திரும்பவும் பார்த்தேன். மாமல்லபுரம் பாறைக் குன்றுகளுக்கிடையில் அது தன் மடியில் மாடத்தியை ஏந்திக் கொண்டு அதே கொம்பன் பன்றியாக, வெறிக்க வெறிக்க உற்று நோக்கியது. என்று அது இந்த வராக ரூபமெடுத்து பெருந்தெய்வமாக உருவெடுத்தது.
காதுகள் விடைக்க, இடுப்புக் கச்சை மணிகள் கிலுக்க, கால் தண்டைகள் இழுபட, உக்கிரக் கண்களில் நான் பார்ப்பது எதனை. அபயக் கரங்களுடன் அது சங்கும் சக்கரமும் ஒளிர சாந்தபாவத்துடன் என்னைப் பார்க்கையில், ரத்த வாயுடன் ஆட்டின் கழுத்தை உறியும் லெட்சுமண சித்தப்பாவின் உறுமல் ஒலி என்னுள் நிறைந்து வழிகிறது. தெளிவற்ற அந்த குரல்களின் நடுவில், குளம்படியோசைகளுக்கிடையில் செய்ட்லுஸ் தன் ஆழ்மனத்துடன் இணைந்து கொள்வது எங்கே? அங்கு ஒரு பாகன் தெய்வம் அவருள் குடியேறுவதை, அதன் பலிகளும், களிகளும், கும்மாளங்களும் இணைந்து அந்த பலிச்சோறை உண்பதாக உணர்ந்தேன். அந்த லௌசீக நிலையில், தெளிவு என்பதே தேவையில்லை. வாழ்வை வாழ்ந்தால் மட்டுமே போதுமானதாக இருந்தது. சாத்தியமான வகையில்.
ஆனால், கேள்விகள்? இருப்பு என்பது என்னவாகப் போகிறது. ஜய விஜயர்கள் காத்திருக்கிறார்களா? எமனின் பாசக்கயிறு சுருக்கிடப் போகிறதா? கரிய அதன் காலடிகளின் சப்தத்தில் அனைத்தும் ஒடுங்கப் போகிறதா? வாழ்வதன் அர்த்தம் என்ன? வெறும் மூளைப் பிண்டம் தான் மனிதனா? எதையுமே அறிய முடியாத ஒரு எளிய உடலாய் மட்டும் மனிதன் இருக்கிறானா? எல்லைக்குட்பட்ட அவனது புரிதலில் அவன் நிகழ்த்திக் கொள்வது மட்டுமே தற்கால நிஜமாக அவன் உருவகித்து அதனுள்ளேயே மாண்டு விடுகிறானா? மதமும், ஆன்மீகமும், கடவுளும் அவனுக்கு எதையுமே தரப்போவதுமில்லையா? அப்படியெனில் அவன் அறிந்து கொள்வது எதனை. அவனது சங்கிலியின் கண்ணிகள் எங்கு கொளுத்தப்பட்டிருக்கின்றன. எதனுடைய, யாருடைய கனவுலகின் சுவைகளுக்காக அவனது நாக்குகள் துண்டாடப்படுகின்றன. அறியாது விழிக்கிறேன். சபலங்களின் பிடிகளில் நித்தியமாய் முடிச்சியிட்டுக் கொள்வது எளிதாக உள்ளது. அதன் பலவீனங்களை அப்படியே ஏற்றுக் கொள்வது அவ்வளவு எளிதில்லையா? ஒரு தூய மிருகமாக வாழ்வதென்பது மனிதனுக்கு அளிக்கப்படவில்லை என்பது எவ்வளவு காத்திரமாக உணர்த்துகிறது அந்த போப் செய்ட்லஸை கேலி செய்யும் கிங்கரர்கள் வழி.
எங்குமே மீட்பில்லாத மனிதன் எதன் பொருட்டு, எதை நிகழ்த்த, எதை அறிய வாழ்கிறான். அவன் ஒரு சோதனை எலியைப் போல பூமியில் உழல்கிறானா? அறியும் ஆவலுடன் நீர்க்குழாய் மின்னி வழிய வழிய என் முன் அம்மை இடுப்புகளில் இருக்கும் குழந்தைகளின் கண்களைப் பார்க்கின்றேன். எவ்வளவு சாத்தியங்கள் இருக்கின்றன அவற்றுள். ஆனால் பழுப்பேறிக் கிடக்கும், வயோதிகர்களின் சுளிப்பில், திருப்தியின்மையில் அதன் இடைவெளி எதனால், இப்படிக் கூளங்களால் நிரம்பி ஒன்றுமற்றதாக உருமாறிக் கிடக்கிறது. சாத்தானின் சம்பாசனைகளின் அதை அறிய விளைந்தேன். “அங்கு ஒன்று உள்ளது, அது இன்மையாகவும் உள்ளது” என்றது அது.
ஒரு குரூரமான பகடியாக இருக்கிறது. உண்மையை அறிதல் மனிதனுக்கு சாத்தியமில்லை என்று சொல்லி நகைக்கிறது. பின் தொடரும் மரணத்தின் முன் அமைதியின்றி அழலெரிய உருகிக் கொண்டிருக்கும் மனித மனத்தில் எதைக்கொண்டு அவியாக்க. வாழ்வது என்பது ஒரு பெரிய பகடியாக உரு மாறுமிடத்தில், ஒன்றும் ஒன்றும் பெரிய ஒன்றாக மாறுவது எத்தனை எளிது. அதைப் பிடித்துக் கொண்டு வாழ்ந்து விடலாமே என்று ஏங்குகிறது மனம்.
அங்கு எந்த இடைவெளிகளும் இல்லாதது போல உணர்கிறேன். ஒரு எளிய உயிரியாய், எதிர்பார்த்தல்களின்றி நிதர்சனத்தில் இயல்புடன், பலவீனங்களுடன் வாழ்வதென்பது சாத்தியமான ஒன்றுதானே. ஆனால் இந்த எளிய சுயக் கேலி சாத்தியப்படுமா…இன்னும் தெரியவில்லை. மூர்க்கமாக நான் சோரை வழிய முட்டிக்  கொண்டு இருக்கவே முயல்கிறேன். அங்கு என் தன்னுணர்வில், நான் பெரியவன் என்றும், அறிய முற்படுபவன் என்றும் காட்டிக் கொள்ள முயல்கிறேன். வாழ்வின் முன் தோற்கடிக்கப்படும் ஒவ்வோர் தருணங்களிலும், சிதைந்து போன இந்தக் கேள்விகளில் அல்லாடுகிறது. கடவுள் உண்மையில் உண்டா? இல்லை வெறும் அணுக்களின் விளைவுதானா? ஆன்மா உண்டா? இல்லை. வெறும் மூளைப் பிதுங்கல் தானா? நாம்.
எப்பொழுதும் இப்படி இருமுனைகளிலும் ஊசலாடிக் கொண்டே இருக்கிறது.

நீர்ப்பறவைகளின் தியானம் கதைப்பற்றி




திடூமென சலனித்து மின்னி மறையும் நீர்க்கோழிகளிடமிருந்து கரைப்படித்துறையை முட்டி முட்டி அவிழும் கதைச்சரடுகளை ஆற்றொழுக்கில் அலையும் பாசிகள் கவ்வ முயல, அவைகள் அந்த சரடின் துணுக்குகளை மட்டுமே கொண்டு வலை போல பின்னித் தலைகாட்டி மௌனித்து முழுகும். கனவுகளின் உலகம் நேர்க்கோடில்லாது சஞ்சரிக்கையில், கலைந்து விழிக்கையில். அதன் பிரதிபிம்பங்களைக் கொண்டு மீள் செய்ய முயற்சிக்க, சிறுவர் மலரில் புள்ளிகளை இணைக்க இணைக்க உருவம் உருவானது போல. கதைகளும் முரண் வடிவம் கொண்டு வியாபிக்க மறுதலிக்கிறது. இன்னும் அவிழாத எஞ்சியப் பகுதி கனவாகவே நிலைத்திருக்கிறது. அங்கு கதைகளின் பெரும் பரப்பு மூடுபனி வெளியில் பள்ளத்தாக்குகள் அமைதியற்று ஒலியை மட்டும் எதிரொலிப்பதைப் போல மீண்டும் மீண்டும் கனவுகள் அதன் திண்மங்களை மறைத்து வைத்து, துணுக்குகளின் குறுக்குவெட்டை மட்டும் மெல்லத் தலைகாட்டி ஆழத்திற்குள் இரை தேட சென்று விடுகிறது.
கதை மொழிதலில் டீக்கடையிலிருந்து ஆரம்பமாகி ஆங்கிலப்பத்திரிக்கையில் கடிதங்கள் தேடி அதன் வாயிலாகவே முடிவடையாது அப்படியே நிற்கையில், ஸ்தம்பித்து நிற்கிறேன். எங்கிருந்து எப்படி மீள் செய்து திரும்ப காட்சிப்படுத்தி உருவாக்கிக் கொள்ள, அங்கு இன்னும் மிச்சக்கதையின் பகுதி வெட்டிய சதைத் துண்டமாய் கனத்து தொங்கிக் கொண்டிருக்கிறது. கனவினைப் போலவே நீட்சியின்றி அங்கிங்கு வெளிச்சமூட்டி, நிழலாடி, துரத்தி முடிவின்றித் தொடர்வது. என் கனவுகளில் அடிக்கடி பிள்ளையார் துரத்துவார். எட்டிப்பிடிக்கும் தூரம் வரை வருகையில் நான் பாய் கடையில் புரோட்டாவில் சால்னாவைக் குழைத்துக் கொண்டிருப்பேன். அங்கிருந்து என் அறைக் கதவிடுக்கு வழி அந்த நீள் மூக்கு மனிதன் அழைத்துக் கொண்டிருப்பான். முன் பின் அறியாப் பெண்ணுடன் வாய்ப்புணர்ச்சி செய்து கொண்டே, என் காதுகளில் அலைபேசியில் ஒலிக்கும் பாட்டின் ஒலிகளும் இணையும், மாய நதியொன்று மார்பில் வழியுதே என. இவ்வாறு குறுக்கு மறுக்காய் ஓடிக்கொண்டே இருக்கும் காட்சிகளுக்கு நடுவில் நான் கனவு காண்கிறேன் என்ற இருப்பும் மெல்லத் தலை தூக்கிப் பின் அந்த அரூபக் குளத்தில் மறைந்து விடும்.
அந்தப்பத்திரிக்கை கடிதங்களில் இருந்து அந்த மேற்கோள்களினுள் நுழைந்தேன்.
“பிரபஞ்சம் கருப்பை அல்ல. கருப்பைக்குள் முடங்கிக் கிடக்கும் கருவேயாகும்.”
பின் அந்தக்கட்டுரையின் புள்ளியிலிருந்து வெளியேறிய எண்ணங்கள் வழி கரையான் புற்றுகள் வளர்ந்திருந்த வடிவிலியானத் தோற்றத்தில், அவளது மார்புப் புற்று நோய் அரிக்க ஆரம்பித்தது. அங்கே அந்த செவிலியின் பளிங்கு முன்னங்கால்கள், அவனது கனமழுத்தும் கனவு, கரையான் புற்றுப் பெண்ணுருவம், காரை மண், லூசியின் முகமாய் மாறி உதிர்தல். அதுவரை மூண்ட செவிலியுடனான காமம், லூசியின் புற்றுடன் இணைந்து கரைந்தொழுகும் போது, தன் மகன் தன்னை விட்டு பிரிந்து செல்லும் ஆசிரியரின் நினைவுப்புள்ளியில் அது எங்கு வந்து குத்தி எண்ணங்களைக் கலைத்தது.
                “குவிந்து கவனித்தலும், குவிதலின் விளிம்பினையும் அதனுள் கிரகித்தலும்” சுருங்கி விரியும் மரப்பல்லியாய் உருமாறியது. நேர்க்கோட்டிலிருந்து பிறளாத அம்மாவின் இருப்பு, ஒரு புள்ளியைப் பற்றிக் கொள்ள பல்லி காணாமலாகுவதும் அவனுக்கு குழந்தை பிறப்பதும், இறந்த அவன் அப்பா மறுபடிப் பிறத்தலான சமாதானமும் விளிம்பு வரைக் குவிந்த பிரஞ்சையில் குதிரைக் கண்களைப் போன்ற பல்லியின் பக்கவாட்டு விழிகளும், அதன் நெளியும் வாலும் சிதறிய காட்சிகளாய் நேற்றைய கனவில் என் முகத்தினருகில் அதன் ரெட்டை நாக்கு படமாடுவதும் பின் அந்தப்பச்சை செதில் நிறத்தோல் விம்மி எழுவதும், அதன் அடிப்பரப்பின் வெண்மையில் பச்சை நரம்புகள் பிணைந்தசைவதும் கண்டு எழுந்தேன். ஒரு வேளை அதே நேரம் தானா என்று கூடப் பார்க்க தவரவில்லல். கடிகாரம் 2.30 யைக் காட்டியது.
                நீர்ப்பறவைகளின் மோனத்தில் காட்சிகள் மாறாக் கணத்தில், காலம் அதன் இயல்புத்தன்மையை தலைகீழாக்கிக் கொண்டிருப்பதையும். ஒவ்வொரு மனிதனுக்குமான தனித்தனி கடிகார முட்கள் வெவ்வேறு இடமாற்றங்களில் ஓடிக்கொண்டிருப்பதையும் காண்கின்றேன். தன் வாழ் நாள் முழுதும் நீர் இறைத்துக் கொண்டே இருக்கும் பிட்சுவின் காலம் வேறு. அதைக் கண்டு கொண்டு விமர்சிக்கும் குருவின் காலம் வேறானதாக இருக்கிறது. சீடனாக முயலும் இளைஞன் அந்த அதீதத்தை பனிப்பாளமாய் உருகி நிற்கும் நதியின் கரையில் மாறா நிமித்தத்துடன் தன் முன் வானமுந்தி நிற்கும் மலைக்குன்றுகளுக்கிடையில், அசைவற்ற நதியும், அங்கு கழுத்துந்திப் பார்க்கும் நீர்ப்பறவையின் கண்களிலும் இருந்து மீட்டெடுக்க முனைகையில் அங்கு குரு பிணம் போலத் திரைக்கு பின்னால் கிடக்கிறார். திரைகளுக்கு வெளியே கணக்கற்ற இடைவெளிகளில் காலங்களின் தீட்சண்யம் அவனுள் மோதக் காத்துக் கொண்டிருக்கிறது. அந்த நீர்வெளியில் காலத்தை இரையாய் விழுங்கி நீர்ப்பறவைகள் எட்டிப்பார்த்து மின்னி மறைகின்றன.

ஞாயிறு, 18 மார்ச், 2018

பறவைகள் விட்டுச் சென்ற வானம்

பறவைகளற்ற பிரதேசத்தில்
கிளைகளை மரங்கள் உதிர்த்துக் கொண்டிருக்கின்றன.
பல்லாயிரம் காத தூரம் ஓடிக் கொண்டிருந்த
நதித்தடம் கொண்டு
கடலை அடைந்தேன்.
உப்பு மலைகள் வானம் வரை நீண்டு கிடந்தது.
பறவைகளின் எச்சங்களும் சாம்பல்களும் கொண்டு உருவாக்கிய
கடவுளர் பீடங்களில் அவிசாக்கப்பட்டுக் கொண்டிருந்தன,
உதிர்ந்த கிளைகளும்
ஒடிந்த சிறகுகளின் மிச்சங்களும்.
கவி மிக அவசரமாக பறவைகளை மொழியாக்கியிருந்தான்.
அவனது கதைப் பாடலில்
பல கோடி சிறகுகளால் ஆன தெய்வம்
ஆவாகனம் செய்யப்பட்டது.
தொடர்ச்சியாக மனிதர்கள் தங்கள் குறுக்கெலும்புகளை உடைத்து உடைத்து காணிக்கை செலுத்தினர்.
பறவைகளற்ற பிரதேசத்தில்
வானம் ஒரு பொட்டல் வெளியாகியிருந்தது.
பிறையும் சூரியனும் என்றோ மறைந்து விட்டன.
பகலும் இரவுமில்லா
இந்த கைவிடப்பட்ட நிலத்தில்
மனிதர்களும் மரங்களும்
சில கவிகளும் கதைகளும்
கதைகளுள் பறவைகளும் மட்டும் உயிர் வாழ்ந்தனர்.
அங்கு பறவைகள் விட்டுச் சென்ற வானமும் எங்காவது  இருந்திருக்கக் கூடும்.

நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்

துயில் கலைந்த பின்
என் கனவிற்குள் நடந்து கொண்டிருக்கிறேன்.
கனவின் பகலிற்குள் நுழைய நுழைய
கரை நிறைத்த எச்சில் நதி.
நடுவில் தனித்த திட்டாய் மிதக்கிறது கட்டில்.
மணல் பரப்பிற்குள் பதுக்கி வைத்திருந்த
ஊற்றுக்கண்ணிலிருந்து
புடைத்துக் கிளம்புகிறது, கானல் ஓடை.
நான் பகலில் இருக்கிறேன்.
நண்பகல் சூரியனின்
வெளிச்சக் கோடுகளுக்கிடையில்
ஈரம் உறிஞ்சுகிறேன்.
தெப்பமான படுக்கையினடிச் சதுப்பில்
ஊறிக் கொண்டிருக்கின்றன,
நேற்று நீ கைத்தவறுதலாய் விட்டுச்சென்ற ரகசியங்கள்.
வெகு தூரம் நடந்த பின் தான் தெரிந்தது,
நேற்று உன் முத்தத்தின் உப்பை அள்ளி உருவாக்கிய
ஈச்சம்பழ விதைகள் உலர்ந்து கொண்டிருப்பதை.
நான் இரவிற்குள் புகும் முன் வீச்சம் இழந்திருந்தன.
இன்னும் ஒன்று ஒன்றே ஒன்று தந்து விடேன்.
இரவு இன்னும் முடிந்து விடவில்லை.
சதைத் திரட்சியுடன் நதியினடியில் முழுகிக் கிடக்கின்றன,
பெரும் பெரும் ஈச்சங்காடுகளும்,
உப்பு மலைகளும்.

வெள்ளி, 16 மார்ச், 2018

மாயநதி

முத்தத்தின் நிறங்களை வகைப் படுத்திக் கொண்டிருக்கிறேன்.
மிக நீண்ட கடற்கரையில் தொட்டு மீளும்
ரகசியப் பாய்ச்சல்களில்
அலை அவிழ்த்து விட்டுச் சென்ற ஈரம்.
நிர்வாணப் புதையலாய்
காற்றின் விளிம்புகளிலிருந்து
ஒன்று ஒன்றாக பாலித்தீன் பைகள்
தன் ஒவ்வோர் மீறலுக்கும்
கரையினை எடுத்துச் செல்கிறது.
நேற்றைய இரவின் மிக நீண்ட முத்தம்
ஒரு சப்தக் கோர்வையாய்
காது மடல்களுக்குள் சேகரமாகும் பொழுது
சிவந்து கொழுத்த தீ நிறம்.
அந்தியின் கழுத்தைக் கவ்வ விளையும்
ராத்திரியின் பிரம்மாண்ட மூடுதிரையில்
துளையிட்டு உற்று நோக்குகிறது
வெண் நிறம்.
நீ மறைத்து வைத்து கன்னம் கவ்வியப் பற்தடம்,
மூங்கில் பச்சை.
கால் நகங்களில் படிந்திருக்கும்  மண் பழுப்பு.
அந்தரங்கங்களில் மேவுகிறது உவர்த்த கார் நிறம்.
மூச்சு கிழிந்த தீ முட்கள்,
வானிலிருந்து ஒடிந்து வீழ்கின்றன
நிறக் குமிழிகள்.
திட்டுத் திட்டாய் நிரம்புகிறது
இந்த மிக நீண்ட கடலின் ஒதுக்குப்புறத்தில்
புழை போல மெல்ல மெல்ல நுழைகிறது.
பிதுக்கியெறியப்பட்ட
நுரைகளிலிருந்து பிரிந்தோடுகின்றன எண்ணிலடங்கா நரம்புகள்
தனித்தனியே.
உன் முத்தம்
வண்ணங்களின் சுழல்களிலிருந்து
முளைத்துக் கொண்டே இருக்கின்றன.
பின் நுழைந்து கொண்டே இருக்கின்றன. 

வியாழன், 15 மார்ச், 2018

தஸ்தாயெவ்ஸ்கியும் தல்ஸ்தோயும்

கிழவனுக்குள்ளும் இளைஞனுக்குள்ளும் திரும்பத் திரும்ப வீழ்கிறேன். ஆனால் சூதாடும் மனது இளைஞனைப் பற்றிக் கொள்ள பலப்பிரயோகம் செய்கிறது. என்னுடைய கீழ்மை படிந்த சொந்த அகத்துக்குள்ளேயே அடி மண்டிக் கிடப்பது பாதுகாப்பாய் இருப்பதாய் தோன்றுகிறது. விட்டத்தின் சிலந்தி வலைகளின் நடு மையத்தில் பொதியப்பட்டிருக்கும் இரையாகவும், கொடுக்குகள் இழுபட விழுங்கக் காத்திருக்கும் சிலந்தியாகவும் ஒரே சமயத்தில் உருமாறும் விந்தையினுள் அமிழ்ந்திருப்பதிலேயே காலம் கழித்து விடலாம் என்று நம்பிக்கை கொள்கிறேன். அழுக்கு படிந்த என் கட்டில் துணிகளுக்கிடையில், அதன் உவர் நாற்றத்தின் வாதையினுள் முகம் புதைந்து வீழ்ச்சியுற்றவனாய், பாவம் படிந்தவனாய், தனியனாய், வெறுப்புமிழ்பவனாய், கூச்சம் மிகுந்தவனாய், அன்னியனாய் ஆனால் உலகையே அணைத்துக் கொண்டு, சுண்டு விரல் பற்றி வழி செல்ல விளையும் சின்னஞ்சிறு உயிரைப் போலவும் கட்டின்றி புனைந்து கொண்டே இருக்கிறது.  ஆனால் தனிமையின் பாதைகளுள் நான் இருளைக் கொண்டு ஒளியைத் தேடிக் கொண்டிருந்தேன். நான் பல்லாயிரம் நாக்குகளுடன் அங்கு வாதிட்டுக் கொண்டிருந்தேன். சபலங்கள் தீண்டிய, நீலம் கன்றிய இருள் அறைகளுள் எனது பிரத்யேகமான மொழியால் அனுதாபப் பட்டுக்கொள்ள, மூர்க்கமாய் முட்டிக் குருதி வடிய பிளந்து செல்ல, மண்டியிட, அணைந்து கொள்ள, காறி உமிழ, இன்னொரு மனிதனை நான் அங்குத் தேடியும், பின் உருவகித்தும் கொண்டேன். கீழ்மைகளினுள் உழல்வது ஒன்றே மனிதனுக்கு சாத்தியப்படுவது என்பதை நான் அந்த வெளிச்சத்தின் மிணுங்கலில் திரும்பத் திரும்ப உணர்ந்து கொண்டேன். ஆனால் ஒரு கனவுலக வாசியாக என்னைப் புனையும் தோறும் நான் மகத்தான ஒன்றின் உஷ்ணத்தால் உருகி வழியப்பட்டேன். எண்ணிலடங்கா திரைச்சீலைகளின் உள் எந்த மாற்றமுமின்றி அந்த ஒளி அசைவின்மையத் தரித்துக் கொண்டு தனக்குள் தானே ஒளிந்து கிடக்கிறது. அதை மானுடம் மொத்ததுக்குமாய்த் தூண்டி விட நான் சூதாடுகிறேன். இன்றைக்கும் என்றைக்குமாய் அந்த வீழ்ச்சியில் என் சிறகுகளை அவிசாக்கி, அதனுள் செல்ல விளைவேன்.
ஆனால் நான் நன்மை தீமைகளை உருவாக்கிக் கொள்ளும் தோறும் அதன் முகமூடிகள் கழன்று திருகி நிற்கிறது. உள்ளும் புறமும் தீமைகளை மட்டுமே ஏந்திச் செல்லும் சிலுவையினுள் மானுடத்தின் ஆன்மா அடகு வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த சாம்பல் படிந்த பிரேதத்தின் அலைக்கழிப்பைத்தான் எவ்வளவு ஆதுரமாய் நாம் விரும்பினோம். நம் பாவங்களின் பொதிகளை அவன் நுகத் தடியில் கொளுத்தி விடத்தான் எத்தனை ஆயத்தம் கொண்டோம். ஒரு வாட்சுக்காக உயிர் நண்பனைக் கத்தியால் குத்திக் கிழிக்கும் மூர்க்கம் விளங்குகிறது. ஒரு சிலுவைக்காக மானுடம் முழுமையும் அழிக்கும் தழல் நம்மில் ஊட்டப்படும் போதும், வெறுமனே முத்தமிட மட்டுமே லாயக்கான அந்த மனித குமாரனை நான் அவன் வழிக் காண்கிறேன். வெற்றுடலுடன் அவனது இரண்டாவது வருகையின் பொழுதும் அவன் சிலுவையில் அறையப்படுவான் என்பதை நான் இன்று முழுமையாக நம்புகிறேன். இன்னும் எத்தனை முறை வந்தாலும். நிச்சயம் அவனது ஒரு பெருங்கதையாடல் அல்ல. ஆனால் அழுக்கு படிந்த பீட்டர்ஸ்பர்க்கின் தெருக்களில் அவன் கட்டவிழ்த்திருப்பது உலகம் முழுமைக்குமான இருளின் நாக்குகளை.
ஒரு லௌசீகத்தனம் அவனிடம் தென்பட்டதா? திரும்பத் திரும்ப அவன் குற்றத்தின் பால் சென்று கொண்டிருந்தது ஏன்? தன் பெண்டாட்டி ஓடிப்போவதை ஊரெல்லாம் பரப்பி அழும் அவன், பின் எல்லா பெண்களிடமும் ஈர்ப்பான விஷயம் ஏதாவது ஒன்றாவது இருக்கும் என்கிறான். எதிரெதிர் சுவர்களில் இழுபடும் விசையுறு பந்தினைப் போல பாதாள உலகங்களிலும், விண்ணிற்கும் அவன் புக முனையும் வேட்கையில், கழுத்து கட்டப்பட்ட நாயின் வெறி வேட்கையைப் போல மனிதனுள் பொதியப்படும் ஆன்மிகத்தின், அமைப்பின் துர் நாற்றன் சீழ் வழிய வீச்சமெடுக்கிறது. அங்கு வாதிடத்துணியும் ஜோசிமாக் கிழவனும் வயிறு புழுத்து வெடித்து நாற்றம் கமழ பிணமாய்க் கிடப்பதை உள் வாங்க முடியாது அலைக் கழிகிறது. ஒன்றிலும் பற்றின்றி வீழ்கிறது அகம். தீமையினுள் சொரூபமாய் மிளிரும் நன்மையையும், நன்மையினுள் மலப் புழுக்கள் நெழிவதையும்.
எல்லைகள் தகர்ந்து அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டதுதானா? என்று புழங்குகிறது. அங்கு சாத்தான் பதில் சொல்லக் காத்திருக்கிறது. உனது ஆன்மிகத்தின் வழியில் பல்லாயிரம் காதம் நடந்து கொண்டே இருக்க சாபமிடுகிறது. அங்கு தூங்கி விடும் மானுடத்தை, எழுப்பி திரும்ப ஆரம்பித்த இடத்திற்கே செல்ல கட்டளையிடுகிறது. பாவங்களின் பால் நம்பிக்கை இழக்காத தேவமைந்தன் அங்கு தன் ஒளிர் மிகு சிறகுகளால் மனிதத்தை ஏற்றுக் கொள்வான். ஆம். ஆனால் அவன் மண்டியிட வேண்டும். தன் குற்றத்தினை அவன் மொத்த மானுடத்திற்கும் முன் மண்ணை முத்தி ஏற்க வேண்டும். எந்த நிமிடத்திலும் அவன் எதிரில் இருக்கும் பிலத்தில் விழுவது சாத்தியமே. அங்கு அவன் சாய்ந்து கொள்ள ஒரு தூய ஆன்மாவை நாடி நிற்கிறான். எல்லா வழிகளிலும் வலியினை உணர்ந்த ஆன்மா. அது மனிதனை அதன் சாத்தியமான வழியில் உணர்ந்து கொண்ட ஆன்மா. அது தன் தூய்மையினால் அவனை ஏற்றுக் கொள்ளும்.
அப்படி நம்பிக் கொண்டிருக்கையிலேயே அந்த ஆன்மாவின் பிரேதத்தையும் காட்டிச்செல்வது எத்தனை குரூரமானது. கிறுஸ்துவின் மனித உடல், வலிகளினால் துடி துடிக்கும் உடல், மண்ணில் அனாதராவாய்க் கிடக்கும் உடல். தேவனின் குழந்தைக்கு விதிக்கப்பட்ட சாத்தியமான இறுதி. ஒரு கை விடப்பட்ட ஆடாய் அவன் கிடக்கையில் திரும்ப தீமையினுள்ளேயே அமிழ மனிதன் விதிக்கப்பட்டிருக்கிறானா? ஒரு பெருத்த அவ நம்பிக்கை சூழ்கிறது. ஏன் இப்படி ஒவ்வொரு முறையும் ஏற்றுக் கொள்ளுதலும் மறுதலித்தலும். குற்றங்களின் ஆதி தேவதையின் முலைக் கண்களிலிருந்து வழிகின்றன நிராதரவற்ற கீழ்மையின் நியாயங்கள். அதனைக் கொண்டு அவனது சூதாட்ட விடுதியில் பணயம் வைக்கிறேன். அதன் சுழல்களின் தற்செயல்களில் அலைவுறுவதைத் தான் மீண்டும் மீண்டும் காட்டிக்கொண்டே இருக்கிறான், ஒரு கொம்பு முளைத்த, சிறகுகள் கொண்ட அந்த தேவதைச் சாத்தான்.
ஆனால் கிழவன் நன்மை தீமைகளை வெறுமனேக் காட்டிச் செல்கிறான். மனிதனின் இயல்பான சபலத்தின் அனிச்சத்தை வெளிப்படையாய்க் காட்டிக் கொண்டு நகர்கிறான். லௌசீகமாய் அவன் பெண்ணை வர்ணிக்கிறான். சுண்டுகளுக்கு மேல் படரும் மெல்லிய மயிரைக் கூட அவன் தவற விடுவதில்லை. நாடகீயம் அவனுக்கு தேவைப்படவுமில்லை. பெரும்பரப்பில் பிரபஞ்சத்தின் சின்னத் துளியாயும், அந்தத் துளியினால் வழியும் காட்டாறாகவும் ஒரே சமயத்தில் காட்டி விட அவனால் முடிகிறது. உண்மையில் அவனில் தனி மனிதர்களே இல்லை. திரளின் ஒட்டுமொத்த கதையாடலில் மானுடர்கள் என்று தனித்தனியே யாருமில்லை அல்லது எல்லாருமிருக்கிறார்கள். இன்னும் இன்னும் சலிப்பேற்றத் தெரிந்திருக்கிறது. அவனின் கதைத் திரளில் உலகத்தின் ஒட்டுமொத்த வரலாற்றையும் இணைத்து விடும் கண்ணிகளைப் பொருத்தி விடுகிறான்.
ஆனால் அவன் கையில் பைபிள் இருக்கிறது. அதன் போதனைகளின் உக்கிரம் இன்னும் ஆறா ரணமாய் எரிய எரியக் காத்திருக்கிறது. எல்லா செய்கைகளிலும், வரலாற்றின் போக்குகளிலும் அந்த போதனைகளிலிருந்து வழி தேட விழையும் அவனது ஆற்றாமையை எளிதில் மறுதலிக்கவும் முடியவில்லை.

நான் எதைத் தேர்ந்தெடுக்க… அவனது போதனைகளையா? இல்லை, பிரேதத்தையா? தெரியவில்லை. ஆனால் திரும்பத் திரும்ப அந்த இளைஞனையே நாட முயல்கிறது மூர்க்கமாக.

செவ்வாய், 13 மார்ச், 2018

வருத்து

பறவைகள் இல்லாத வானம் ஒன்றிருந்தது.
உடைந்து போன சிதல வெளியில்
யாரும் காணாது வெறித்துக் கிடந்தது மாநகரம்.
புற்றுக்களினால் உருவான கருவறையில் சயனித்திருந்தாள் வண்டிமலச்சி.
சர்ப்பங்கள் உதிர்த்த மொட்டைத்தலையுடன் 
காலடியில் அரவு நீள் சடையான்.
அம்மணமாய் உதிர்ந்தது தெருவெங்கும் வில்வம்.
நாக லிங்கப் பூச்சிகள் கொத்துக் கொத்தாய் கூடமைத்தது
சோழன் கொண்ட பழையாற்றுக் கரையினில்.
ஒடிந்த சிறகுகளுடன் பேந்தப் பேந்த விழிக்கிறது
கோலவார்குழலியின் தோளமர்ந்த ஒற்றைக் கிளி.
கிலி கொண்டு பந்தம் பற்றினான் கோட்டை மாடன்.
எங்கோடி கண்டன் கடைசிப் படையலுடன்
நாடு விட்டு அகல்கிறான்.
ஆரல் கணவாயில் பதைபதைக்க
நெஞ்சடிக்கிறாள் அவ்வை.
இசக்கியின் சூல்
ஒரு பெரும் ஆலமாய் சுற்றி வேர்கிளப்பி
இரை எடுக்கிறது.
பறவைகள் இல்லா வானத்தில்
எச்சங்களால் நிரம்பிய
பெரும் பிரதேசம் அடைகாக்கப்பட்டது.
மரங்கள் மட்டுமே வாழத் தகுந்த நிலம்.
நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம்,
நகர் விட்டு,
ஊர் விட்டு,
எல்லை விட்டு,
வான் விட்டு.
என்னையும் உன்னையும் விட்டு.
பூதங்களினால்
வாதைகளினால்
பேய்களினால்
நாங்கள் அமைக்கிறோம்.
சிறகடிப்புகளின் தீராக் கனவுகளையும்,
எண்ணிலடங்கா உதிரத்துளிகளையும்.
உங்கள் அடர் இருள் சாமங்களில் உயிர்ப்பிக்கிறோம்
பெரும் உயிர் வெளியை.
அங்கு உன்னைப் போலவே புணர்ந்து பெற்றெடுக்கிறோம்
எங்களுக்கான பலி தெய்வங்களை.

திங்கள், 12 மார்ச், 2018

என் மீட்சியும் வாதையும்

எரியில் அழல்வதும்
உன்னில் ஆழ்வதும் ஒன்றுதானா.
ஒன்றுமில்லாமல் ஆவது,
மௌனமான மெழுகுவர்த்தித் துண்டங்கள் போல.
அமைதியற்ற பொழுதுகளில்
என் நிழலை என்னை விடப் பெரிதாகக் காட்டிக் கொண்டிருக்கிறாய் 
திக்கற்ற வீதிகளில்
பலவீனமான உன் நடுங்கும் விரல்களைப் பற்றுகிறேன்.
என்னைப் போலவே அலைபாயும்
உன் தீர்க்கமற்ற குரலில்,
என் பலவீனங்களின் ஆடைகளைக் களைந்து
ஒரு அட்டையைப் போல
உன்னைத் தொற்றிக் கொள்கிறேன்.
தவிப்புடன் இரவின் தோல் உலர்கிறது,
சிறு துளி
சின்னஞ்சிறு புன்னகை
மெல்லிய இடுப்பசைவு போதும்.
அடர் கானகத்தின் குளிரில்
என் மீது நீ புகையாய் படரும் போது
ஒன்றை மட்டுமே வேண்டும் வேண்டும் என்கிறேன்.
ஒன்றுமில்லாமல் ஆவது.
இன்றைப் போல நாளை இருப்பதில்லை.
சீக்கிரம் வா...
ஆனால் ஆனால்
இரவினைக் கடப்பதே இல்லையே நான்.
கடைசி வரை ஒளிர்ந்து அடங்கும்
தீக்குச்சி போல ஒரு உடல் போதும் எனக்கு.
சீக்கிரம் வா...


வெள்ளி, 9 மார்ச், 2018

சமனில்லாதது

சமனில்லாத கோபுரத்தின் உச்சி நுனி,
இந்த எரி நட்சத்திரம் பிறந்தது முதலே நான் அறிவேன்.
உறக்கத்தின் வேர்களில் தீயிடும் பொழுது
இதன் மகரந்தங்கள் பீய்ச்சப்பட்டன.
காலாதீதமான கலன் இதற்காக காத்திருந்தது.
அது பதற்றத்துடன்
தன் பழுத்த இலைகளை உதிர்த்த நேரம்
சிறகடிப்புகள் மடிந்த இந்நகர வீதிகளில்,
முடுக்குகளில்,
அழையா விருந்தாளிகளாக
வந்தமரும் வான நிழல்களை
நினைவு கூர்கிறேன்.
வண்டல் நதிக் கரைத்திப்பிகளில்
தேயாது அலைகிறது
பழுத்த முழுநிலவு.
அந்தரங்க முடிக்கற்றைகள் போல
தாபம் தீண்டும் இரவின் மணம்.
கோர்க்க இயலாத கண்ணிகளால் ஆன ஒளி.
சமனில்லாதது ஊன்
சமனில்லாதது அதன் உண்மை
சமனில்லாதது இந்த வானம்
சத்தங்களால் அளவிடப்படும் இதன் உயரங்கள்
இதன் மூடிய பிரதேசங்களுக்குள்
நான் அறிகிறேன்,
அணையாத அந்த எரியை
ஒரு சமனற்ற மலைமுகட்டிற்கிடையில் வந்தமரும்
மேகத்தைப் போல

திங்கள், 5 மார்ச், 2018

உன் தீரா வஞ்சினம்

இன்னும் நகர இடமில்லை.
பொழுதுகள் வழியே
நான் உருவாக்கும் உன் நினைவுகள்
இந்தப் பெருக்கில் தக்கையாய் புரள்கிறது.
சன்னதமெடுத்த உன் உதடுகளின் வழி,
வழி வழியே
துளிர்த்துக் கொள்கிறேன்
ஒரு மாபெரும் ஆகாசத்திடலை.
சிவக்கும் அதி சூரியனின்
தேகக்குமிழ்கள்
உன்னிடம் அரும்பி அரும்பி மொட்டவிழ்க்கிறதா.
முகப்பருக்களிலாலான மலைக்குன்றங்கள்
ராட்சசக் கனல் சொரிகின்றனவே.
கலங்கல் குளமாய்,
திரும்பத் திரும்ப கரைகளில் 
சுழன்று திரிகிறேன்.
பாதத்தடங்களினால் அவிழ்த்தெடுத்த
உன் உடலின் வெம்மணம்.
இங்கு காடவியப் பற்றி எரியும் செம்மை.
உன்னிடம்
உன் வழியே
உன்னைக் கொண்டு
உன்னை ஏற்றி
உன்னைப் பற்றி
உன் வசம்
உன் உன் உன் உன் 
தலை கீழ் சுழன்றாடும் ராட்சச இறக்கைகள்
என் முதுகினில் செதில் புற்றுகள்
என் கால்களில் பசை நீர்மங்கள்
எனக்கு வால் முளைக்கிறது.
கொம்புகள் குத்தி நிற்கிறேன்.
பலித்தூபங்களின் சாம்பல் குரல். 
காம்புகள் உலர்ந்தன.
இன்னும் இடமில்லை தேவி.
என்னிடம் எஞ்சியிருக்கிறது ஒன்று.
இந்த வாசலின் அந்தத்தில்
நான் ஆண்
நீ பெண் என்றாய்
நான் நான் நீ நீ.
கானல் நதியின் கரைகளை உடைக்க நீ யாரடி.
சின்ன சின்ன கூழாங்கற்களினால் நான் பொதிந்த என் சாபங்களுள் நெளிந்து உருளும் நீ யார்.
என் ஊறும் கடல் பெருக்கில் ஒற்றைக்கால்த் தடம், உன் தீரா வஞ்சினம் நான் தானா.
ஒரு ஆண் தானா.

சனி, 3 மார்ச், 2018

உன் தூய்மை

முற்றிலும் மூடிய அறையினுள்
பெரும் பெரும் பாறைகளை
மலைக் கூட்டங்களை பதுக்கி வைக்கிறேன்.
இடைவெளிக் குழிகளில்
நிரம்பத் தொடங்குகிறது பேய் மழைக் குமிழ்கள்.
அது வரை பொறுத்திருந்த
மௌனக் கரைகள் உடைந்தன.
நாள்தோறும் க்‌ஷணந் தோறுமாய்
உன் உள்ளறைகளின் பள்ளத்தாக்குகளில்
இடைவிடாது
அழுந்தி வீழ்கிறேன்.
இந்தப் பேரருவி
சொற்கள் இழந்த
ஒரு மொட்டைப் பாறையாய் அன்றும் இருந்தது.
உன் தூயத் தீ படர்ந்த
வான்வெளியில்
பசும்மேகங்களாய் காட்டிக் கொண்டிருந்தது, அன்று நீ எனக்கே எனக்காய் உடுத்தியிருந்த
இல்லை மறைக்கத் தவறிய
உன் இடையாடையை.
உருவி எடுக்க எடுக்க
என் அறையெல்லாம் பொங்கிப் பெருக்கெடுக்கிறது
உன் தூய்மை.

நெடும் பயணம்

கருப்பு கனாக்கள் போர்த்திய சாலைகளுக்கடியில்
அடைகாக்கப்படுகின்றன
நெடும் பயணத்தின் முட்டைகள்.
ஓடு பிரியா வண்ணம்
அவைகள் காலா காலாத்துக்கும் குளிர்பதனம் செய்து கொள்கின்றன.
செல்லரிக்காத பாதத் தூளிகளின்
வரைபடத்தில் நிரம்பி வழியும்
நாளையை
ஒற்றி ஒற்றி எடுக்கிறேன்.
தலைச்சுமையாய் கொண்டு வந்த தீவனங்களை வழி தோறும் கொட்டிக் கொட்டி
அவைகளையும்  உடன் அழைத்து வருகிறேன்.
இந்தப் புது பயணத்தில் என் குஞ்சுகளை மெல்ல மெல்லக் குத்தி கருவாய் விழுங்கிப் பசி அடக்குகிறேன்.
ஏன் கனாக்கள் இத்தனை வன்மத்துடன் என்னருகே கமழ்கின்றன.
ஏன் இந்தப் பயணம் முடிவடையப் போவதில்லை எனத் தெரிந்தும்
தினமும் உன்னுடன் ஊடாடுகிறேன்.
நெடும் பயணங்களில் தனிமை இல்லைதான்.
ஆனால் தனித்தே வருகிறேன்.
யாருமில்லா குளக்கரையில் அமர்ந்து
சுய மைதுனம் செய்து கொள்வது போல.

வெள்ளி, 2 மார்ச், 2018

இரை

உதிர்ந்தஇறகுகள்
டயர்த்தடம்
சாலையின் இந்த வெள்ளைப்பட்டைக் கோடுகள்
நசுங்கிய உடல்
காக்கைகளின் கதறல்
பிய்ந்து சிதறிப்பரவும் சோற்றுப்பொதி பாலித்தீன்களின் தள்ளாட்டம்
டாஸ்மாக் மணம்
தெளிவான அந்தி
சாக்கடைக் குமுறல்
கேஸ் அடுப்புகள் சட்டிகள்.
இத்தனைக்கும் சற்று முன்னம் தான்
தன் இரையின் குடலை அலகால் குத்திக் குத்தி உண்டது.
இரை என்பது நிச்சயம் நிரந்தரமே இல்லாதது.
இல்லை முற்றிலும் நிரந்தரமானது.