புதன், 16 மார்ச், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -71

    


     "யார் முட்டாள்கள், யார் புத்திசாலிகள்?" பீட்டர் கேட்டான். "நீங்கள் யாரென்று நினைக்கிறீர்கள்". ஜான் மெதுவாக அவனிடம் கேட்டான்.

"அந்தக் கடவுள், நம் தந்தை!" செபெதீயின் மகன் அதற்குப் பதிலளித்தான்.

    எல்லோரும் விழாவில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அதன் பிறகு ஏனையர்கள் மணமக்களை இல்லத்தின் மத்தியில் இருத்தி,  திருமணச்சடங்குகளைச் செய்யத்துவங்கினர். வந்திருந்த விருந்தினர்கள், ஊர்மக்கள் எல்லோரும் தங்கள் முத்தங்களையும், வாழ்த்துக்களையும், ஆசிர்வாதங்களையும் தெரிவித்து, கொண்டு வந்திருந்த பரிசுப் பொருட்களை அளித்தனர். புதியத் தம்பதிகளுக்கு ஆண்மகவு பிறந்து, அதன் மூலமாவது இஸ்ரவேலத்தின் அடிமைத்தளை விலகட்டும் என அவர்கள் தங்கள் வேண்டுதல்களைத் தெரிவித்தனர். பின் பார்வையற்ற இசைக்கலைஞர்களின், யாழின்  நரம்புகள் அவிழத் தொடங்கியது. கடல் அலைகளின் கார்வையான லயத்துடன் கமகங்கள் மெருகேறின. எல்லோரும் உண்டும், குடித்தும் ,நடனமிட்டும் குதூகலித்தனர். ஜீசஸ் தன் துணைவர்களுடன் நன்றாகக் குடித்து நிறைவாகச் சேர்ந்து நடனமாடினான். நேரம் சிறிது சிறுதாகக் கடந்தது. நிலவின் சாம்பல் நிற ஒளி, வானத்திற்கு குறுக்கே, பூமியின் உருக்களுக்கிடையே ஊடுருவி நிலத்தின் அங்கங்களிலெல்லாம், வியர்வைத் துளிகள் குமிழ்வது போலச் பொட்டுகளாகத் திரண்டுக் குமிழ்ந்தது. வசந்ததத்தின் மென் குளிரும், கதகதப்பும் அடர்ந்துக் காற்றின் மெல்லிய அலைவுகளில், மரங்களில் இலைகளின் தாளமிடலும், பூச்சிகளின் பொறுமையற்ற ரீங்காரங்களும் தொடர்ந்து இரவைக் கடத்தின. அவர்கள் தங்கள் பயணத்தைத் திரும்பவும் துவங்கினர். இரவுப் பறவைகளின் பொருளற்றக் குழறல்களின் ஊடே அவர்களின் விரைவானக் காலடிச் சப்தமும் இணைந்து இருளின் பாதைகளின் வழியே முன்னேறினர்.

    நீண்டு கிடந்த ஜெருசலேமிற்கான பாதையில் அவர்கள் விரைந்து கொண்டிருந்தனர். திருப்தியாகக் குடித்திருந்ததால் பார்க்கும் உருக்களின் ஒழுங்கு குலைந்து மயங்கித் தெளிந்தது. அவர்களின் உடல்கள், ஆன்மாக்களைத் தாங்கிக் கொண்டு கால்கள் பாவிக்காது மிதந்தன, சிறகுகள் முளைத்தக் கால்கள் பாதைகளைத் தாவிக் கடந்தன. இடப்புறம் ஜோர்டான் தூரத்தொலைவில் ஒரு புள்ளியாகத் தெரிகிறது. வலப்புறம் நிலவின் சாம்பல் வண்ண ஒளியின் குளிர்வும், வளமும் கூடிக் கூடி அவர்களை உள்ளும் புறமும் கிளர்த்தியது. அதன் வெளிச்சங்களின் ஊடே சாபுலோன்களின் விளைச்சல் நிலங்களை கண் காணாத் தொலைவு வரை அவர்கள்  பார்வையிட்டனர். இந்த வருடமும் எந்தக் குறைவுமில்லாது பயிர்கள் செழித்துத் திருப்தியுற வித்துக்கள் கொணர்ந்து சாய்ந்து நிற்கின்றன. திரும்பவும் மக்களின் வேண்டுகோள்களுக்கு இணங்கி நம் தேவன் அவர்களுக்கு பாத்தியப்பட்டதை, அவர்களின் உழைப்பின் நம்பிக்கைக்கு எந்த சஞ்சலமும் ஏற்படாத வண்ணம் நல்விளைச்சலுக்கானக் குன்றிமணிகளை, தேவைக்குக் குறைவில்லாது அள்ளித் தந்திருந்தான். திராட்சைத் தோட்டங்களில் கொடிகளில் கொத்துக் கொத்தாகப் பழங்கள் நிறைந்து குலுங்குகின்றன. ஆலிவ் காய்கள், கனிந்து பறிப்பதற்காகத் தொங்குகின்றன. அனைத்தும் தன் வித்துக்களை பலப்பலவாகப் பெருக்கி, அயர்ந்து அறுவடைக்காக, பேறுகால வயிற்றுப் பிள்ளைத்தாச்சி போலக் காத்து நிற்கின்றன.

    "ஆஹ்! என்ன ஒரு இன்பமயமான நேரம் இது!" பீட்டர் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். அவர்களுக்கு அளிக்கப்படும் கருணை உண்மையில் அவர்களால் தாங்க முடியாதவாறு இருந்தது. இத்தனைப் பெரியக் காருண்யத்தின் கைகளில் சின்னஞ்சிறியக் குஞ்சுகளாகியத் தங்களை அணைத்துக் கொள்ளும், மாபெரும் பேரன்பினால் அவர்களின் மகிழ்வு கூடிக் கொண்டே போனது. அந்த இரவுப்பயணத்தில், இருளும் ஒளியும் ஒரு சேர அவர்களுடன் கடக்கின்றது. "இது நிஜம் தானா?, இல்லை கனவா?, என்னைச் சுற்றி எல்லாமும் மகிழ்வில் கிறங்கிக் கிடகின்றனவே! கட்டுப்படுத்த முடியாதப் பிரவாகம் போல என்னுள் பீறிடும் இன்பத்தின் சங்கீதத்தை நான் பாடி என்னை அமைதிப்படுத்துவதே ஒரே வழி, இல்லையேல் வெடித்துச் சிதற வேண்டியதுதான். உண்மையில் இவ்வனுபவம் என் சக்திக்கு மீறியது." பீட்டரின் இதயம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

" நாம் ஒன்றாக!" ஜீசஸ் தேம்பினான். அவர்களுக்கு முன்னால் வந்து நின்றுத் தலை நிமிர்ந்து வான் நோக்கினான். அவன் குரலில்  இனிமையும், உணர்வெழுச்சியும் கூடிக் கொண்டிருந்தது. இடம் மற்றும் வலப்புறம் ஜானும், ஆண்ட்ரூவும் அவனுடன் இணைந்து கொண்டனர். அவர்கள் தங்கள் குரல்களைத் தாழ்த்தி மென்மையாக ஜீசஸுன் குரலுடன் ஒத்திசையும்படிப் பாட முற்பட்டனர். இம்மூவரின் குரலும் இணைகையில் அதன் அதிர்வுகளின் தேற்றத்தின், கைக்கொள்ளாத தன்மை வான் வரை விரிந்து பரவியது. பொங்கியெழும் மனிதக்குரல்கள், இருதயத்தின் துடிப்புகள் தாவிச் செல்வதைப் போல, அவர்களால் வைத்துக் கொள்ள முடியாது, வெளிப்படுத்தித் தீர்க்க முனைந்தன. அப்பாடலின் தித்திப்பு கிறுகிறுக்க வைத்தது. ஒவ்வொருத்தராக அதன் இசைவிற்குள் மூழ்கி, அதன் அலைவினுள் அடித்துச் செல்லப்பட்டனர். ஆழ்ந்த வசந்தத்திற்குள் முளைக்கின்ற பாடலின் துடிப்புகள் கட்டுப்பாடுகளை இழந்து, தன்னிலையை மீறிப் பீறிட்டது. அதன் எல்லையின்மையினால் தடுமாறும் பொழுதெல்லாம், தங்களைச் சமப்படுத்த பெரும் முயற்சி எடுத்தனர். திடீரென, அந்த ஆண்கள் தங்களின் குரல்களின் வழியே ஒற்றை ஆண் உடல் ஆகினர். அவர்களின் தனித்தனியானக் குதூகலங்களின் ஊடுவழிகள், மடங்கி ஒற்றைப் பெருங்குரலாகியது. அந்த இன்பத்தின், சுவையின், களிப்பின் அனைத்துக் கூறுகளையும் ஒருமித்து உணர்ந்து இன்புற்றனர். யூதாஸும், ஜேக்கப்பும் கைகளை உயர்த்திக் காற்றின் திசையில் ஒரு மரக்கிளை போல நடனமாடத் தொடங்கினார்கள். அதன் வெற்றியை, மிதப்பை, அழிவில்லாத் தன்மையை அவர்கள் ஒவ்வொருத்தரும் தங்களின் சொந்த உணர்வெழுச்சிகளின் மூலம் உட்கிரகித்துக் கொண்டு, அதன் பறத்தலிலே சொர்க்கங்களை நோக்கி கைகளை உயர்த்தி, அச்சங்கீதத்தைத் தங்களின் முழு உடலும், வலுவும் சக்தியும் வெளிப்படும்படி, இந்த புனிதப்பயணத்தின் சிறப்புகளாக பாடி ஆடத் தொடங்கினர்.

"ஓ! இதை விட இனிமையானதும் , சிறந்ததும் எதுவும் இம்மண்ணில் உண்டா!

 நாங்கள் சகோதரர்கள் ஓருடலாகி உம்மை நோக்கி வருகின்றோம்!

ஆரோனின் கேசத்திலிருந்து வழியும் புனித வியர்வையைப் போல

நாங்கள் விரைந்து வருகின்றோம்!

ஹெர்மானின் முடிவற்ற வானத்தில் சேகரமானத்

தூயப் பனித்துளி, சியோனின் மலைக்குன்றங்களில் பேரன்புடன் பொழிவதைப் போல

தேவனே! உம் ஆசிர்வாதங்களும், கருணையும் எங்களினுள் பொங்கிப் பெருகுகட்டும்!

எங்களின் வாழ்வு என்றென்றைக்குமாக உம் அணுக்கத்தில் நித்தியத்துவம் அடையட்டும்!"

    நேரம் கடந்து கொண்டிருந்தது. விண்மீன்கள் ஒளி மங்கி வானம் வெளித்தது. சூரியன் உதித்தது. கலீலியின் சிவந்த நிலத்தைக் கடந்து அவர்கள் சமாரியாவின் கருமை நிலத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர்.

    யூதாஸ் அவர்களை நிற்கச் சொன்னான். "நாம் வேறு பாதை வழியே செல்வோம்" இது நம் கடவுளுக்கு எதிரான, சபிக்கப்பட்ட நிலம். நாம் ஜோர்டான் பாலத்தைக் கடந்து அதன் நதிப்படுகைகளின் வழியே  போகலாம். நாம் சட்டத்தை மீறுவது பாவமாகும். அவர்களின் கடவுளர்களின் மாசு இந்த நிலத்திலும், தண்ணீரிலும், உணவிலும் கலந்திருக்கிறது. இந்நிலத்தின் உணவை உண்பது என்பது பன்றி இறைச்சியை உண்பதற்குச் சமம் என என் தாய் எனக்குச் சின்னவயதில் அறிவுறுத்தியிருக்கிறாள். இந்த சமாரிட்டனின் நிலத்தை விட்டு அகன்று நாம் வேறு வழியில் செல்வதே நல்லது.

    ஆனால் ஜீசஸ், யூதாஸைத் தன் கைகளில் பற்றிக் கொண்டு ஒன்றாக நின்று அவன் முகத்தைப் பார்த்தான். "யூதாஸ், என் சகோதரா! ஒரு தூய மனிதன், அழுக்கடைந்தவனைத் தொடும் பொழுது, அழுக்கடைந்தவன் சுத்தப்படுவான். மறுக்காதே! நாம் இவர்களுக்காகவே, இந்தப் பாவிகளுக்காகவே வந்திருக்கிறோம். அவர்களுக்கு உரிமைப்பட்டதை நாம் அவர்களுக்கு உறுதியாக வழங்கித் தீர வேண்டும். இதோ இங்கிருக்கிறது சமாரியா! கருணையின் சொல்லினால் நாம் ஒரு நல்ஆன்மாவை மீட்க முடியும். ஆம்! யூதாஸ், ஒரு கருணையின் சொல்! நாம் செய்யும் ஓர் நற்செயல்! அவர்கள் நம்மைக் கடக்கும் பொழுது அவர்களைப் பார்த்து உளமாறப் புன்னகைப்பதே! உனக்குப் புரிகிறதா?"

    யூதாஸ், அருகில் நிற்கும் மற்றவர்களுக்குக் கேட்காத படி, மெதுவானக் குரலில் அவனிடம் பேசினான். "இது அல்ல, சரியானப் பாதை!, இல்லை! கண்டிப்பாக, இந்த வழியல்ல!. ஆனால் அந்தக் காட்டுத்துறவியைக் காணும் வரை நான் பொறுமையாக இருக்க வேண்டும். அவன் உன்னைக் கண்டறியட்டும். அதுவரை, உனக்கு எங்கெல்லாம் போக விருப்பமோ, போ! எதையெல்லாம் செய்ய நினைக்கிறாயோ, செய்! நான் உன்னை விட்டு விலக மாட்டேன்."

    அவன் தான் முறித்து வைத்திருந்தக் காட்டுமரத்தின் கிளையைத் தோள்களில் வைத்துக் கொண்டு, தன்னை முழு விசையில் உந்தி ஜீசஸ் காட்டியப் பாதையில் நகர முற்பட்டான்.

    பின்னால் உரையாடிக் கொண்டிருந்த மற்றவர்களும் அவனைத் தொடர்ந்தனர். ஜீசஸ் அவர்களிடம் அன்பு, தேவன், சொர்க்க ராஜ்ஜியம் பற்றிப் பேசினான். ஆன்மாக்களில் புத்திசாலி, முட்டாள் எனப் பிளவுபடுதல், விளக்குகள், ஒளி, எண்ணெய் என அவன் சொன்னக் கதையைப் பற்றி விவரித்தான். யார் அந்த மணமகன். எதனால் முட்டாள்க் கன்னியர்களை வீட்டிற்குள் வரவிடாமல், இந்தப் புத்திசாலிக் கன்னிகள் தடுத்து நிறுத்தினர். இருந்தும் அவர்களின் தளர்வுற்றுக் களைத்த பாதங்களையே, பணியாட்கள் சுத்தம் செய்யுமாறு ஏன் பணிக்கப்பட்டனர். அந்த நான்குத் துணைவர்களும் அவனுடைய விளக்கங்களை ஊன்றிக் கவனித்தனர். கேட்கக் கேட்க அவர்களின் உள்ளம் விரிவடைந்தது. இருதயங்கள் மலர்ச்சியடைந்தன.  எப்படி அந்த முட்டாள்க் கன்னியர்கள் அழுது கொண்டே வாசலுக்கு வெளியே, தங்கள் அணைந்த விளக்குகளுடன் கெஞ்சிக் கொண்டிருந்தார்களோ, அதேபோல அவர்களும் தங்கள் பாவங்களை ஏந்திக் கொண்டு தேவனின் வாசலில், சாத்தியக் கதவுகளுக்கு வெளியேக் கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்தனர்.

    அவர்களின் பாதை இன்னும் இன்னும் என விரிவடைந்தது. பயணம் தொடர்ந்தது. வானம், மேகங்கள் அடர்ந்துக் கருமையாகி மழை பொழியக் காத்திருந்தன. காற்றின் சிலுசிலுப்பு மழையினைத் தீர்க்கமாக நிலத்தில் அறிவித்தது.

    அவர்கள் வெகுதூரத்து வெற்று நிலங்களைக் கடந்து, முதல் கிராமத்தை வந்தடைந்தனர். ஜெரிசிம் கிராமத்தின் மலை அடிவாரம் அது. அவர்களின் முன்னோர்கள் புனித மலைக்குன்றங்களாக வான் நோக்கி உயர்ந்து வீற்றிருந்தனர். கிராமத்தின் நுழைவில் பேரீச்சை மரங்களும், வயல் வெளிகளின் நாணல் புற்களும் வரவேற்றன. ஒரு  பழமையானக் கிணறு ஒன்றை ஜேக்கப் பார்த்தான். இந்தக் கிணற்றில் தான்,  மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகளுக்கும், தங்களுக்கும் தாகம் தீர்த்துக் கொள்கிறார்கள். அதன் வெளிவிளிம்பு பலதலைமுறைகளாகக் நீர் இறைக்கக் கயிறு இழுத்து இழுத்து மழுங்கித் தேய்ந்து வடிவற்றிருந்தது.

    ஜீசஸ் மிகவும் களைத்திருந்தான். அவனது அடிப்பாதங்களில் குத்துக்கற்கள் பதிந்து அங்கங்குப் பிளந்து ரத்தம் கன்றியிருந்தது. "நான் இங்கேயே இருக்கிறேன், நீங்கள் ஊருக்குள் சென்று வீடுகளின் கதவைத் தட்டுங்கள். நல் உள்ளம் படைத்தவர்கள் நமக்காக சில ரொட்டித்துண்டங்களைக் காணிக்கையாக அளிப்பார்கள். பெண்கள் யாராவது கிணற்றிலிருந்து நமக்கு குடிக்க நீர் இறைத்துத் தருவார்கள். நாம் நம் தேவனிடமும், மனிதர்களிடமும் நம்பிக்கை வைப்போம்."

    மற்ற ஐவரும் கிராமத்திற்குள் செல்ல எத்தனித்தனர். போகும் வழியில் யூதாஸ் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான். "இந்தக் கறை படிந்த நிலத்திற்குள் நான் வரமாட்டேன். அவர்களின் உணவை என்னால் உண்ணவும் முடியாது. நான் இந்த அத்திமரத்தின் நிழலில் நீங்கள் வரும்வரைக் காத்திருக்கிறேன்" யூதாஸ் அவர்களிடம் சொன்னான்.

    ஜீசஸ் நாணற்புற்கள் அடர்ந்தத் தாழ்வானப் பகுதியில் கால்கள் நீட்டி அமர்ந்து கொண்டான். அவனுக்குத் தாகமாக இருந்தது. ஆனால் கிணறோ மிக ஆழம். எப்படிக் குடிக்க? சற்றுத் தலை சாய்த்து அவன் எண்ணங்களுக்குள் முழுகத் தொடங்கினான். அவன் தான் செல்வதற்கு மிகக்கடினமானப் பாதை ஒன்றைத் தனக்கு முன்னே அமைத்திருக்கிறான். அவனது உடலோ வலுவற்றிருக்கிறது. சோர்வு அப்பி, மூட்டுகள் தளர்வடைந்துவிட்டன. அவன் தன் ஆன்மாவைப் பற்றிக்கொள்ளும் வலுவையும் இழந்து கொண்டிருந்தான். அவன் தளர்ந்து வீழும் பொழுதெல்லாம், இறைவன் குளிர்மையையும், ஒளிர்வையும், ஆசுவாசத்தையும் அவனுக்கு மேலேத் தருவிப்பதைத் தவறியதில்லை. அவன் தன் உடல் வலுவைத் திரும்பவும் மீட்டுக்கொண்டு, உறுதியுடன் எழுந்துத் தன் வழியைத் தொடர்வான். தொடர்ந்து கொண்டே இருப்பான். எப்பொழுது வரை? இன்னும் எத்தனை காலம்? சாகும் வரையா? சாவிற்கும் அப்பாலா?

    அவன் தனக்குள் கடவுள், மனிதம், மரணம் என்று போராடிக் கொண்டிருக்கும் பொழுது, வளைகளும், காதணிகளும் அணிந்த மத்திம வயதுப் பெண் ஒருத்தி,  குடத்துடன், கிணற்றை நோக்கிச் சென்றாள். கிணற்றின் விளிம்பினில் நின்றுகொண்டு கயிற்றினை இழுத்துக் கொஞ்சம் கொஞ்சமாக நீர் இறைத்துக் குடத்தில் நிரப்பினாள். நாணலில் சாய்ந்து கொண்டு, அமைதியாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்த ஜீசஸுற்கு தாகம் தலைக்கேறியது.

    "பெண்ணே!" அவன் சற்று எழுந்து கத்தையாகத் தரையில் கிடந்த புற்களை மிதித்து வெளிப்பட்டான். "கொஞ்சம் அருந்த நீர் கொடு."

    அவனது திடீர் பிரவேசத்தால், திகைத்து அவள் சட்டென நின்றுவிட்டாள்.

    "பயப்படாதே,"" நான் ஒரு யோக்கியமான மனிதன் தான், தாகமதிகமாக இருக்கிறது. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் வேண்டும்"

    "யார் நம்மிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார் என இவள் அறிந்திருந்தால், உடனடியாக நீரினை அருந்தக் கொடுத்திருப்பாளோ! பிறகு என் கால்களில் விழுந்து மண்டியிட்டு, அழிவேயில்லாத நீர்மையினால் எம் இருதயத்தின் தாகத்தைத் தீர்த்து வையும் என்று மன்றாடியிருப்பாளோ! ஜீசஸ் கேலியாக யாருக்கோ சொல்வது போலச் சொன்னான்.

    இதைக் கேட்ட அந்தப் பெண் குழம்பிப் போனாள். உம்மிடம் கயிறோ, வாளியோ, ஏன் குடம் கூட இல்லை. எந்த நம்பிக்கையில் நீ  என் தாகத்தைத் தீர்ப்பாய்? அவள் விசனத்துடன் கேட்டாள்.

    "இந்தக் கிணற்றிலிருந்து நீர் அருந்துபவனின் தாகம் தற்சமயம் வேண்டுமானால் தீரலாம். ஆனால் அவனுக்குத் திரும்பவும் தாகம் எடுக்கும். ஆனால் நானளிக்கும் தண்ணீரை அருந்துபவனின் தாகமோ முற்றிலுமாக அடங்கிவிடும்" 

    "ஐயா! அந்த நீரினை எனக்கு அளியும். நானும் இத்தாகத்தின் பிடியிலிருந்து நித்தியமாக என்னை விடுவித்துக் கொள்கிறேன். இல்லையேல் தினமும் நான் இந்தக் கிணற்றிற்கு வந்துதான் ஆக வேண்டும்" அவள் ஜீசஸுடம் வேண்டினாள்.

    "போ! போய் உன் கணவனை அழைத்து வா!" ஜீசஸ் அவளிடம் கூறினான்.

"எனக்கு கணவன் இல்லை!"

    "சரியாகச் சொன்னாய், உனக்கு கணவன் இல்லை என்று. நீ இதுவரை ஐந்து கணவன்களை வைத்திருந்தாய். ஆனால் உன்னுடன் இப்போதிருப்பவன் உன் கணவன்  இல்லை. சரிதானே!"

    "ஐயா! நீங்கள் யார்? தீர்க்கதரிசியா?" வியப்புடன் அவள் கேட்டாள். "உங்களுக்கு எல்லாமும் தெரியுமா?"

    "உனக்கு என்னிடம் ஏதாவது கேட்க வேண்டுமென்று நினைத்தால், சங்கடமின்றிக் கேள்!" ஜீசஸ் சிரித்துக் கொண்டே பதிலளித்தான்.

    "ஆமாம். ஒரே ஒரு விஷயத்திற்கு மட்டும், நீங்கள் எனக்கு பதிலளிக்க வேண்டுகிறேன். இது நாள் வரை எங்கள் தந்தையர்கள் ஜெரிசிம்மின் இந்தப் புனிதமலையில் இருக்கும் தெய்வத்தையே வழிபட்டுக் கொண்டிருந்தனர். இப்பொழுது திடீரென, உங்களைப் போன்றத் தீர்க்கதரிசிகள், ஜெருசலேம்மிற்கு வந்துதான் நீங்கள் கடவுள் வழிபாடும், பிரார்த்தனையும் செய்ய வேண்டும் என்று எங்களை நிர்பந்திக்கிறீர்கள். எது சரி? கடவுள் உண்மையில் எங்கே இருக்கிறார்? எனக்கு நீங்கள் மெய்யைப் போதியும்!"

    ஜீசஸ் தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தான். எதுவும் பேசவில்லை. "இந்தப் பாவப்பட்டப் பெண், இந்த வேண்டுதல்களினாலும், இறை வழிபாட்டிற்காகவும் அதிகமும் துன்புறத்தப்பட்டிருக்கிறாள்.  தான் என்ன செய்வது என்ற குழப்பத்தில், அவளது இருதயம் அலைக்கழிகிறது. அவள் தன் விதியுடன் போராடிக் கொண்டிருக்கிறாள். அவளைத் தேற்றுவதற்கான சரியானச் சொல்லிற்காக அவனும் தன்னுள் துழாவிக் கொண்டிருந்தான். திடீரென அவன் தலை நிமிர்ந்துப் பார்த்தான். பொலிவான அவனது ஒளிரும் முகத்தை அவள் கண்டு விக்கித்து நின்றாள்.

    "பெண்ணே! நான் சொல்வதை உன் இருதயத்தினுள் இருத்திக் கொள்! நமக்கான நாள் வந்துகொண்டிருக்கிறது. ஆம்! அது வந்துவிட்டது. மனிதன்,  நம் தேவனை மலைகளிலோ இல்லை ஜெருசலேமிற்கோப் போய்த் தேட வேண்டியதில்லை. இறைவன் என்பவன் நம் தூய ஆன்மா! அவனை நம் ஆன்மாவினுள் இருந்து மட்டுமே வணங்க வேண்டும்!"

    அந்தப் பெண்மணிக்கு உண்மையில் ஒழுங்காகப் புரியவில்லை. சஞ்சலத்துடன் அவள் அவனை ஏறிட்டு நோக்கினாள். மெதுவாக....மிக மெதுவாக அவள் நடுங்கும் குரலில் கேட்டாள், "நீங்கள்? உண்மையில், நீங்கள் தான் நாங்கள் காத்துக் கொண்டிருக்கும் ஒருவராக இருக்க முடியுமா?"

"யாருக்காக நீங்கள் காத்திருக்கிறீர்கள்?"

    "உங்களுக்குத் தெரியும்! என்னை ஏன் அவரது பெயரை உச்சரிக்கச் சொல்கிறீர்கள்? உங்களுக்குத்தான் தெரியுமே! எனது உதடுகள் அழுக்கடைந்தவை! பாவம் பொருந்தியவை என்று!"

    ஜீசஸ் தன் தலை தாழ்த்தி, மார்பை பார்க்கும் படி நின்றிருந்தான். அது அவன் தன் இருதயத்தின் குரலுக்கு செவி கூர்வது போல இருந்தது. அதற்கானப் பதில் அங்கிருந்து நிச்சயமாகக் கிடைக்கும் என அவன் எதிர்பார்த்திருந்தான். அவனை நேருக்கு நேராகப் பார்த்து நின்ற அப்பெண்மணி, காய்ச்சலுற்றவள் போல அதிர்ந்து கொண்டிருந்தாள்.

    அவர்கள் இருவரும் கலக்கத்துடன் அமைதியாக நின்றிருந்தனர். ஆரவாரித்துக் கொண்டு வரும் குரல்களை அவர்கள் கேட்டனர். அவனது சீடர்கள் கைகளில், ரொட்டித் துண்டங்களை வைத்து ஆட்டிக் கொண்டு மகிழ்ச்சியுடன் வந்தனர். ஒரு பெண்ணுடன் தங்களின் ஆசிரியன் நிற்பதைப் பார்த்ததும் அவர்கள் அப்படியே நின்று விட்டனர். அவர்களது வருகை, அப்பெண்ணுக்குப் பதிலளிப்பத்தைச் சற்று ஒத்திப் போடவைத்ததை நினைத்து அவன் கொஞ்சம் அமைதியானான். அவர்களைப் பார்த்து கையுயர்த்தி அருகில் அழைத்தான்.

    "வாருங்கள்!" இந்த நல்ல மனுஷி நம் தாகம் தீர்ப்பதற்காகக் கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொண்டு வந்திருக்கிறாள்."

    யூதாசைத் தவிர்த்து மற்ற அனைவரும் அங்கிருந்தனர். அவன் சற்றுத்தொலைவில் மர நிழலில் தனித்திருந்தான். ஒரு சமாரிட்டனின் உணவினால் தான் மாசடைவதை அவன் விரும்பவில்லை.

    அவள் ஒரு மண்சாடியில் நீர் நிரப்பி அவர்களுக்கு வழங்கினாள். தாகம் தீர அவர்கள் குடிக்கும் வரைக் காத்திருந்து, பின் அந்தச் சாடி நிரம்ப நீரினை அளித்துவிட்டுக் குடத்தை லாவகமாகத் தலையில் வைத்தவள், அமைதியாகவும், நடந்த சம்பாஷணையைத் தனக்குள் உருட்டிக் கொண்டும் கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

    "துறவியே! யார் அந்தப் பெண்?" பீட்டர் கேட்டான். நீங்கள் இருவரும் நின்று பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த பொழுது, நீங்கள் பலவருடங்கள் பரிட்சயப் பட்டவர்கள் போலத் தெரிந்தது."

    "அவள் என்னுடைய சகோதரிகளில் ஒருத்தி!, நான் என் தாகம் அடங்க அவளிடம் நீர் கேட்டேன். ஆனால் அவள் தன் தாகம் அணைந்துச் சென்றுவிட்டாள்.

    பீட்டர் தன் தலையைப் பலமாக ஆட்டினான். "எனக்குப் புரியவில்லை,"

    "அது விஷயமில்லை" ஜீசஸ் தன் நண்பனின் சாம்பல் நிறத் தலையைச் செல்லமாகத் தட்டினான். "பொறுமையிழக்காதே!, நீ கொஞ்சம் கொஞ்சமாக இதனைப் புரிந்து கொள்ளும் நேரம் வரும்.  இப்போது நாம் பசியில் இருக்கிறோம். அதனால் முதலில் சாப்பிடுவோம்!"

    அவர்கள் ஒரு நீண்ட கிளைகள் கொண்ட பேரீச்சை மரத்தின் அடியில் அமர்ந்தனர். ஆண்ட்ரூ எவ்வாறுத் தாங்கள் ஊர்மக்களை அணுகிப் பிச்சை கேட்டோம் எனச் சொல்லத் தொடங்கினான்.

    "நாங்கள் ஒவ்வொரு வீட்டுக் கதவுகளையும் தட்டிப் பிச்சை கேட்டோம், அவர்கள் எங்களைப் பார்தத்தும் குழப்பமடைந்துக் கூச்சலிட்டு விரட்டினர். கடைசியில், கிராமத்தின் எதிர் எல்லையில், ஒரு மூதாட்டிக் கதவைத் திறந்து எங்கள் ஒவ்வொருவரையும் கவனமாகத் தலை முதல் கால் வரை நோட்டமிட்டாள், பின் தெருவில் யாராவது தன்னைக் கவனிக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். தெருவில் ஒரு ஆளரவமுமில்லை. அவள் கொஞ்சம் ரொட்டித்துண்டங்களை எடுத்து எங்களிடம் வீசி விட்டு, கதவை உடனடியாகச் சாத்தி விட்டாள். நாங்கள் அதனை வாங்கிக் கொண்டு, அங்கிருந்து தப்பித்தோம், பிழைத்தோம் என்று இங்கு ஓடி வந்துவிட்டோம்."

    "நாம் அவளது பெயரைக் கேட்காமல் விட்டதற்கு வெட்கப்படவேண்டும்!" பீட்டர் கூறினான்.  "நாம் கேட்டிருந்தால் நம் தேவன் அவள் பெயரை நினைவில் நிறுத்தியிருப்பான்."

    ஜீசஸ் சிரித்துக் கொண்டே பதிலளித்தான். "அந்தக் கணக்கைப் பற்றி நீ வருத்தம் கொள்ளாதே, பீட்டர்! தேவனுக்கு அவளின்  பெயர் தெரியும்!"

    ஜீசஸ் ரொட்டிகளைக் கையில் எடுத்துக் கண்கள் மூடி, அதை வழங்கிய அந்த மூதாட்டியின் பெயரால், இறைவனுக்கு நன்றிகளைத் தெரிவித்தான். பிறகு அதை சமபாகமாகப் பிரித்து ஆறு சிறியத் துண்டங்களாக்கிப் பகிரத் தொடங்கினான். அருகிலிருந்த மரத்தில் அமர்ந்திருந்த யூதாஸ் தன் கையில் இருந்த கம்பால் அவன் பங்கை விலக்கி தலை திருப்பிக் கொண்டான். சமாரிட்டன்களின் ரொட்டியை நான் உண்ண மாட்டேன். "நான் பன்றியை உண்பதில்லை."

    ஜீசஸ் அவனுடன் மேலும் வாதிட விரும்பவில்லை. யூதாஸின் இருதயம் கடினமானது, அது மென்மையாவதற்கு இன்னும் சமயம், இன்னும் வலு, இன்னும் அதிகமான அன்பு தேவை என ஜீசஸுக்குத் தெரியும்.

    "நாம் உண்போம்!" அவன் மற்றவர்களிடம் கூறினான். "கலீலியர்கள் உண்ணுவதால், சமாரிட்டன்களின் ரொட்டித் துண்டமும் கலீலியர்களாகும். மனிதன் உண்பதால் பன்றிக் கறியும் மனிதச் சதையாகும். அதனால் நம் தேவனின் பெயரால் நாம் உண்போம்!"

    அனைவரும் பசியுடன் இருந்ததால், அந்த எளிய உணவும் சுவையாக இருந்தது. அவர்கள் அருமையான சமாரிட்டனின் உணவை உண்டு மகிழ்ந்தனர். உண்டு முடித்ததும், களைப்பிலும், சோர்விலும் அப்படியே உறங்கியும் போயினர். ஒருத்தனைத் தவிர. அவன் தன் கையிலிருந்த கிளையைப் பொருளற்றுத் தரையில் அறைந்து அடித்துக் கொண்டிருந்தான். "அவமானமடைவதை விட பசித்திருப்பது நல்லது. இல்லையேல் இது என்னை அசுத்தப்படுத்தியிருக்கும்."

    வானத்தின் முதல் துளி, நாணற்புற்களில் விழுந்தது. பின் துளிப் பெருகிப் பெருகி ஓலமாக வானம் உடைந்து நிலத்தில் விழத் தொடங்கியது. அயர்ந்து உறங்கியவர்கள், திடுக்கென்று தன்னிலை உணர்ந்து எழுந்தனர்.

    "இது முதல் மழை!" ஜேக்கப் சொன்னான். " நிலம் தன் தாகம் அடங்க வானத்தை அருந்திக் கொள்ளட்டும்!"

    ஆனால் அவர்கள் இங்கு எங்கே போய்த் தங்குவது. எதாவது குகை இருக்க வாய்ப்பிருக்குமா என்று ஆலோசித்தனர். வடக்கிலிருந்து மேகக் கூட்டங்கள் அடர்ந்து இருளாகிக் குளிர்க்காற்றினை அலைத்தது. நீர்த்துளிகள் காற்றின் பாடுகளுக்கு தன் சிறகுகளை விரித்துப் பறக்கத் தொடங்கின.

    அத்திமரங்களில் பழங்கள், ஈரக்காற்றை மென்று அசைந்தன. மாதுளம் கிளைகளில் சிவந்த மாதுளைகள், இன்னும் நன்றாகப் பொலிந்துக் குலுங்கின. நால்வரும் நனைந்து கொண்டே அப்பழங்களைப் பறித்துத் தின்று, தங்கள் சோர்வை விலக்கி இளைப்பாறினர். விவசாயிகளின் கைகள் நிலத்திலிருந்து வான் உயர்ந்தன. மழைத்துளிகளுக்கிடையே  வெளிப்படும் கலீலியர்களை அவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். சமாரியாவில் இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? எதற்காக சமாரிட்டன்களின் நிலத்திற்கு வந்து, எங்களின் ரொட்டித்துண்டங்களையும், இங்கு விளைந்த பழங்களையும், இவர்கள் தின்கிறார்கள்? சீக்கிரமே நம் பார்வையிலிருந்து விலகிச் செல்வது இவர்களுக்கு நல்லது!

    நின்று கொண்டிருந்த ஒரு முதியவர், தாங்கமாட்டாமல் பழத்தோட்டத்திலிருந்து அவர்களை நோக்கி சத்தம் போட்டுக்கொண்டே ஒடி வந்தார். "ஹேய்! கலீலியன்களா," இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்களின் அநியாயமான சட்டங்களால், எங்களை, எங்கள் கடவுளர்களை வெறுத்து ஒதுக்கி அப்புறப்படுத்தி, இந்தப் புனித நிலத்தின், பெருமையைக் குலைத்தது மட்டுமல்லாமல், இங்கும் வந்து எங்கள் மண்ணை மிதிக்க உங்களுக்கு என்ன தைரியம்! சமாரியாவில் உங்களுக்கென்ன வேலை வேண்டிக் கிடக்கிறது. ம்ம்! ஓடிப்போய்விடுங்கள் எங்களின் பார்வையிலிருந்து. ம்ம்! சீக்கிரம்!."

    "நாங்கள் ஜெருசலேமிற்கு எங்களின் வழிபாட்டிற்காகச் செல்கிறோம்." பீட்டர் தன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அந்தப் பெரியவரின் முன் வந்து நின்றான்.

    "நீங்கள் இங்கல்லவா உங்கள் வழிபாட்டினைச் செய்ய வேண்டும், விசுவாசமற்றப் பிறவிகளே!, இங்கு, இந்த ஜெரிசிம்மில், கடவுளின் பாதம் படிந்த இம்மலைக்குன்றங்களில்!, முதியவர் நிதானிக்க முடியாமல் கத்தினார். " நீங்கள் உங்களின் வேத நூல்களை என்றாவது படித்திருக்கிறீர்களா? அதில் தெளிவாக இருக்கிறதே! அது இங்கே நிகழ்ந்தது. இதோ ஜெரிசிம்மின் காலடிகளில், கருவேல மரங்கள் அடர்ந்த இந்தப் பாதைகளின் ஊடே, எல்லாம் வல்ல நம் தேவன், ஆப்ரஹாமிற்குக் காட்சியளித்தார். ஆம்! அவர் ஆப்ரஹாமிற்குக் காண்பித்தார், தூர தூர மலைகளையும், வயல் வெளிகளையும், வெற்று நிலங்களையும் ஒரு எல்லையிலிருந்து மறு எல்லை வரை. ஹெப்ரான் மலையடுக்குகளிலிருந்து இதூமியா வழியே, மிடியானின் நிலப்பரப்பு வரை. பின் அவர் சொன்னார், "பார்! இது நான் உனக்குக் கையளித்திருக்கும் நிலம். இந்நிலத்தில் பாலும் தேனும் கொழிக்கும். நான் எம்முடைய வார்த்தையை வழங்கினேன். அது உனக்காக உனக்கு மட்டுமேயாக யாம் அளித்துள்ளோம். அதன் பிறகு அவர்கள் கைகள் குலுக்கிக் கொண்டு, ஒப்பந்தத்தை மூடி முத்திரைக் குத்திவிட்டனர். கேட்கிறீர்களா, கலீலியன்களா? இதைத்தான் நம் வேதம் நமக்கு எடுத்துரைக்கிறது. யாரெல்லாம் தம் வேண்டுதல்களையும், பிரார்த்தனைகளையும், வழிபாடுகளையும் செய்ய நினைக்கிறீர்களோ, அவர்கள் இந்தப் புனித நிலத்தில் நம் கடவுளிடம் மண்டியிட்டு வேண்டுங்கள், அதில்லாமல் நம் புனிதர்களைக் கொன்றுக் குவித்த ஜெருசலேமிற்கல்ல, நீங்கள் செல்ல வேண்டியது."

    "எல்லா நிலமும் புனிதமானதே! முதியவரே!" ஜீசஸ் அமைதியாகக் கூறினான். "கடவுள் எங்கும் இருக்கிறார், நாம் அனைவரும் சகோதரர்கள் ஐயா!"

    அவர் ஜீசஸை வியந்து நோக்கினார். "சமாரிட்டன்களும், கலீலியன்களும் கூடவா?

    "ஆம்! நாம் சமாரிட்டன்களும், கலீலியர்களும், ஏன் யூதர்களும். அனைவரும்!"

    தன் நரைத்தத் தாடியைத் தடவிக் கொண்டே அந்தக் கிழவர் ஜீசஸை தலை முதல் கால் வரை நோட்டமிட்டார்.

    "தேவனும் சாத்தானும் கூடவா?" அவர் மிக மெல்லியக் குரலில் ஏதேனும் அமானுஷ்ய சக்தித் தன்னைத் தாக்கி விடுமோ என்று பயந்து கொண்டே அதைக் கேட்டார்.

     ஜீசஸ் அந்தக் கேள்வியின் அதிர்ச்சியிலிருந்து விலகாமலேயே அவரைப் பார்த்தான். அவன் தன் வாழ்நாளில், இது நாள் வரை இப்படி ஒரு கேள்வியை எதிர்கொண்டதில்லை. கடவுளின் மாபெரும் கருணையினால் அவர் ஒரு நாள் அந்த சாத்தானையே மன்னித்து, அவனைத் தன் சொர்க்கத்தின் ராஜ்ஜியத்திற்கு அழைத்துச் செல்வார் என்று அவனால் உண்மையில் அச்சமயம் நம்பமுடியவில்லை.

    "எனக்குத் தெரியாது, முதியவரே! எனக்குத் தெரியாது!, நான் ஒரு மனிதன். என்னுடைய அக்கறை மனிதர்களிடம் மட்டுமே. அதற்கு அப்பால் உள்ளவை தேவனின் காரியம்."

    கிழவர் இன்னும் தன் தாடியைத் தடவிக் கொண்டே தன் அகத்திற்குள் உழன்று கொண்டிருந்தார்.  அவர் தூரத்தில் செல்லும் இரு வழிப்போக்கர்கள், மரக்கூட்டங்களை விரைவாகக் கடந்து ஒரு புள்ளியாவது வரை  பொருளற்று, அப்படியே ஸ்தம்பித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

    இரவு வந்தமைந்தது. மழையின் ஈரப்பதத்துடன் குளிர்க்காற்று ஊசித்துளைப்பதைப் போலச் சில்லிட்டது. இறுதியில் அவர்கள் அங்கு ஒருக் குகையைக் கண்டுபிடித்தனர். மலைப் பாறைகளின் அடியில் ஒரு ஆள் உட்செல்லும்படி இருந்தது அந்தக் குகை. குளிரில் விரைத்திருந்த உடலைக் கதகதப்பாக்குவதற்காக, ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டனர். பின் மிச்சமிருந்த ரொட்டித்துண்டங்களை உண்டனர். செந்தாடிக்காரன் வெளியே சென்று சிலச் சுள்ளிகளைப் பொறுக்கிவந்து, தீ மூட்டினான். எல்லோரும் தீயின் ஜ்வாலையைச் சுற்றி அமர்ந்து தன் உடலை வெதுவெதுப்பாக்கிக் கொண்டனர். தழலாடலுடன் அவர்கள் அமைதியாகத் தனித்திருந்தனர். ஒற்றைத் துவாரத்தின் வழியே வெளிக் காற்றின் மென் பீறிடல், நரிகளின் ஊளை, தொலைவில் இடி இடிக்கும் அதிர்வுகளின் முணக்கம், அது சிற்சிலச் சிதறல்களாக, ஜெரிசிம் மலைக் குன்றத்தைக் குடைவதைப் போல இருந்தது. துவாரம் வானத்தைக் காட்டியது. வானத்தின் இருள், மேகங்களின் சாம்பல்த் தூவல்களுக்கிடையில், விண்மீன்களும் நிலவும் தத்தளித்துக் கொண்டிருந்தன. வெளித்தும் மறைத்தும் போக்கு காட்டிக் கொண்டிருக்கும் வெளிச்சம், பின் திடீரன முற்றிலும் உறைந்து இருள் மட்டுமேயானது. தீயின் மஞ்சள் ஒளி மட்டும் ஒருக் கீற்று போல இருளைக் கீறிக் கொண்டுக் வெளியேக் கோடுகளாகப் பிளந்துப் பரவியது. அதன் அலைவுகளின் ஊடே, வானத்துச் செதும்புகளின் கோரைகள், நாணல் வெளி போல அலையிட்டுச் சுழன்றது. அவர்கள் தங்கள் கண்களை மூடிக் கொண்டு, ஒருவர் தோள்களில் ஒருவர் தலை சாய்த்து அமர்ந்திருந்தனர். ஜான் மிக மெதுவாகத் தன்னுள் அணிந்திருந்த கம்பளி அங்கியை வெளியே எடுத்து ஜீசஸுன் முதுகில் போர்த்தி விட்டான். குத்துக்காலிட்டு அருகருகே அமர்ந்திருந்தவர்கள், ஒருவர் மற்றொருவரின் மூச்சின் வெப்பத்தினை உள்ளிழுத்து உறங்கத்தொடங்கினர். இருளின் முடிச்சுகள் இறுகிக் கொண்டிருந்தன. அவர்களின் இருப்பு பார்ப்பதற்கு சிறகுகள் ஒடுக்கி ஓய்ந்திருக்கும் சின்னஞ்சிறியப் பறவைகள் போல இருந்தது.

    அடுத்த நாள் அவர்கள் யூதேயாவை வந்தடைந்தனர். நிலத்தின், மரங்களின் அமைப்பில் உருவாகியிருக்கும் நுட்பமான மாற்றத்தை அவர்கள் கவனித்தனர். இருபுறமும் மரங்கள் அடர்ந்த நெடும்பாதை. மஞ்சள் வண்ண இலைகள் நெரியும் நெட்டிலிங்கங்கள், பழமையான தேவதாருக்கள், வெட்டுக்கிளிகளின் ஓய்வொழுச்சல் இல்லாதக் கூச்சல்கள், சிறகடிப்புகளைத் தாண்டி அவர்கள் போய்க் கொண்டிருந்தனர். மரங்களுக்கு அப்பால் இருக்கும் மண் பாதைகள், பாறைக் கற்கள் சிறிதும் பெரிதுமாய் முளைத்த, வறண்டப் பாழ் நிலம், காட்டுக் குத்துச் செடிகளும், புதர்களும், முட்செடிகளும் அடர்ந்து அங்காங்கே கொத்தாய்ப் படர்ந்திருந்தன. அதில் நீல நிறக் காட்டுப் பூக்கள் செறிந்து வளர்ந்திருந்தன. தூரத் தொலைவில் விவாசாயிகளின் வீட்டு அடுப்படிகளில் கனலும் தீப்பொறிகளின் மஞ்சள் துகள்களை அங்காங்கேப் புள்ளிகளாய்க் காண முடிந்தது.  மந்தமான அமைதி, சிலசமயம் நிசப்தம் உண்டாக்கும், அதன் பூதாகரம், மலை இடுக்குகளில் என்றோ பெய்த மழையின் எச்சமாக நீர்ப்பாதையின் உதிரி மண்துகள்கள். ஒரு ஒற்றைக் கௌதாரியின் தொடர்க் குழறல் ஒலி அனாயசமாகச் சூழலை மர்மம் கொள்ள வைத்தது. தாகத்திற்கு நீர்த் தேடும் அப்பறவையின் குரலை அனைவரும் ஒருமித்துக் கேட்டனர். அதன் மென்மையானத் தேகத்தின், உயிர்த்துடிப்பை குழறல் ஒலியின் வழித் தன் உள்ளங்கைகளில் அமர்த்தி, தன்னுடைய  உடற்சூட்டில் பத்திரப்படுத்தினான் ஜீசஸ்.

    அவர்கள் ஜெருசலேம்மை நெருங்க நெருங்க நிலம் மேலும் பாழ்த்தன்மை கொண்டுக் கடுமையாகியது. அவர்கள் காணும் கடவுள் கூட உருமாறியிருந்தது. இந்த நிலம் சிரிக்கவில்லை. கலீலியில், கிராமத்து மக்களின் இன்பப் பெருக்கும், மகிழ்ச்சியும் ஒரு தீப்பொறி போல அனைவரிடமும் பரவி வெடித்ததே, கடவுளும் கூட அவர்களின் முகங்களின் வழியேத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டாரே, அதேபோல சிறிதளவாயினும், சொர்க்கத்தின் மண் வாசனை, மழையின் ஈரத்தால் சமாரியாவின் நிலம், அதன் வற்றா நீர்மையினால் நம்மைப் புத்துணர்ச்சி அடையச் செய்ததே. ஆனால் இங்கு நிலம் எரிகிறது. சூரியன் ஒருப் பழுக்கக் காய்ச்சிய, இரும்பு உருளியைப்போல சென்னிறமாக  வானத்தில் சுழல்கிறது. அந்தத் தழலும் அடுப்பினுள் அவர்கள் மூச்சிரைக்க  முன்னேறிக் கொண்டிருந்தனர். இருள் அடரும் சமயம், பாறைகளை வெட்டி உருவாக்கப்பட்ட பலவிதமான சமாதிகள், உடலின் வீக்கங்கள் போல, மண்ணிற்கு மேலேக் கிளம்பி இருள்த்தன்மையுடன் வெளிக்கின்றன. ஆயிரமாயிரம் மூதாதையர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுக் கருங்கற்களாக மாறியிருந்தன. அதனில் காலியாகக் கிடந்த ஒரு சமாதியின் துவாரத்திற்குள் சென்று அவர்கள் சீக்கிரமேத் தங்களை உறக்கத்தினுள் ஆழ்த்திக் கொண்டனர். அடுத்த நாளில், புதுத்தெம்புடன்,  விடியலிலேயே அந்தப் புனித நகரத்தினுள் நுழைய அவர்கள்  எண்ணம் கொண்டிருந்தனர்.

    ஜீசஸ் மட்டும் உறங்கவில்லை. அவன் அந்தக் கல்லறைகளின் பாதையில் அங்குமிங்கும், இருளை மோப்பமிட்டுக் கொண்டுத் தீவிரமாக அலைந்து கொண்டிருந்தான். அவனது நெஞ்சம் அமைதியற்றிருந்தது. அகத்தினுள் தெளிவற்றக் குரல்கள் ஒலித்தன. மாபெரும் ஓலங்கள், பல்லாயிரம் உடலங்களின் வாதை விளிகள்....நள்ளிரவில், காற்றின் அனக்கம் கூட இல்லாமல் இருளின் முற்றமைதி. அமைதி, கரிய பிசின் போல அடர்த்தியாய் அவனைச் சுற்றி வழிகிறது. ஒருக் கார்வையான அழுகுரல் அதனைக்கிழித்து உள்நுழைகிறது. முதலில் அது ஒரு பசித்த ஓநாயின் கேவலோ என்று நினைத்தான். ஆனால் சட்டென்று அந்த ஊளைத் தன் இருதயத்திலிருந்து வெளிவருவதைப் பதைபதைப்புடன் உணர்ந்து கொண்டான்.

    "தந்தையே! யார் என்னுள் அழுகிறார்கள்,  ஏன் இப்படிக் கத்தி ஊளையிடுகின்றன? அவன் நடுக்கத்துடன் தனக்குத்தானே முணுமுணுத்தான்.

    பிறகு சோர்வுடன் தன் தளர்வடைந்த உடலைத் தூக்கிக் கொண்டு அவனும் ஒரு கல்லறைக்கு மேலேபோய்ச் சாய்ந்துத் தன்னைக் கடவுளின் கருணைமிகு கைகளில் ஒப்புவித்தான். படுத்தவுடன் உறங்கியும் விட்டான். விடியற்காலைக்குச் சற்று முன்னே ஒரு கனவு. அதில் அவன், மாக்தலேனுடன் இருந்தான். அவர்கள் இருவரும் அந்தரத்தில் கூரைகளுக்கு மேலே மிதந்து கொண்டிருந்தனர். அவர்களின் உடல்கள் காற்றின் இலகுவுடன் அந்தரவெளியில் ஒரு பறவையின் இறகினைப் போல திசையற்றுப் பறந்தன. அவர்கள் பறந்துப் பறந்துக் கிராமத்தின் எல்லைவரை சென்று விட்டனர். எல்லை விளிம்பினில் இருந்த ஒரு வீட்டிலிருந்து வயதானப் பருத்தக் கிழவர் ஒருவர், கதவைத் திறந்து வெளியே வந்தார். அவரது வெண்ணிறத்தாடி காற்றில் அலைந்தது. இரு குமிழ்க்கண்கள் இருளினுள் கான் மிருகம் போலப் பிரகாசித்தது. தன் மேல் அங்கியின் கைகளை இழுத்து மடித்திருந்தவரின் முழங்கைகள் வரை மண் சாந்து அப்பியிருந்தது. அண்ணாந்து அவர்கள் பறப்பதைப் பார்த்து அவர் கத்தினார். " நில்லுங்கள்! நில்லுங்கள்! நான் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டும்". உடனே அவர்களும் நின்றனர்.

"சொல்! கிழவரே! நாங்கள் கேட்கிறோம்!"

    "மெசியா இந்த உலகையே நேசிப்பவன், இந்த மொத்த உலகினையும் நேசிப்பதனால், அவன் அதற்காகச் சாகவும் துணிவான்"

"வேறென்ன?" மாக்தலேன் கேட்டாள்.

"இந்தச் செய்தி உனக்குப் போதாதா!" கிழவர் எரிந்து விழுந்தார்.

    "நாங்கள் உங்களின் பட்டறைக்குள் நுழைவதற்கு வாய்ப்பிருக்கிறதா" மாக்தலேன் கேட்டாள்.

    "இல்லை! நீ என் கைகளைக் கவனிக்கவில்லையா? அது முழுக்கக் களிமண் அப்பியிருக்கிறது. உள்ளே நான் மண்ணைக் குழைத்து நமக்கான மெசியாவை படைத்துக் கொண்டிருக்கிறேன்."

    ஜீசஸ் திடுக்கிட்டு விழித்தெழுந்தான். அவனது உடல் எடையற்றிருந்தது, பறப்பதைப் போல, கடலலையில் பாதை தவறிப் பயணிக்கும் ஆளற்றத் தோணி போல அலைந்தது. மற்றத் துணைவர்களும் எழுந்துவிட்டனர். புதிய நாள் தொடங்கிவிட்டது. விடியலின் மங்கல் வெளிச்சத்திற்குள்ளிருந்து கிளம்பிக் கோட்டு உருவங்களாய் வெளித்தெரியும் மலைகளும், குன்றுகளும் கருமையினுள் இருந்து பையப் பையச் சாம்பல் வண்ணம் பெறும் ஜெருசலேமின் திசைகளை அவர்கள் அனைவரும் ஒருமித்து நோக்கினர்.

    அவர்கள் புறப்படத் தயாராகினர். சீக்கிரமே போய்ச் சேரவேண்டும் என்ற ஆர்வத்தில் பொறுமையற்றிருந்தனர். அவர்கள் முன் ஏகிச் செல்கிறார்கள். ஆனால் தூரமும் பாதையும் முடிவடையாமல் வந்துகொண்டே இருந்தன. தூரத்து மலைகள் அசைவற்று, எந்த மாற்றமுமில்லாமல் அதே தொலைவில் நின்றிருந்தன.

    "நாம் ஜெருசலேமிற்குப் போவோம் என்று எனக்குத் தோன்றவில்லை சகோதரர்களே!" பீட்டர் விரக்தியாகக் கூறினான். " நமக்கு என்ன நிகழ்கிறது? நாம் அவளை நோக்கிச் செல்லச் செல்ல அவள் நம்மை விட்டு விலகி இன்னும் இன்னும் எனத் தொலைதூரம் போகின்றாள்."

    "அவள் நமக்கு மிக அருகில் வந்துவிட்டாள்" ஜீசஸ் கனிவுடன் பதில் அளித்தான். "தைரியம் கொள், பீட்டர்!, நாம் அவளைக் கண்டறியும் பொழுது அவளும் நம்மைக் கண்டு கொள்வாள், நமது மெசியாவைப் போல!"

    "மெசியா!" யூதாஸ் அதுவரை இருந்தத் தன் அமைதியை விடுத்து திடீரெனக் கேட்டான்.

    "மெசியா வந்து கொண்டிருக்கிறார்!" ஜீசஸ் ஆழமாகத் தனக்குள்ளும் ஊடுருவும் வகையில் சத்தமாகச் சொன்னான். "உனக்கு நன்றாகத் தெரியும் யூதாஸ், என் சகோதரா,  எதுவாகிலும் நாம் சரியானப் பாதையில் அவனை எதிர்கொள்வோம். நாம் நன்மையினாலும், நற்செயல்களினாலும், கருணையின் தூய்மையான வார்த்தையை உச்சரிக்கும் பொழுதும்,  நம்மை நோக்கி அவன் காலடிகள் விரைவதை உணர்கிறேன். அநீதியும், நேர்மையின்மையும், தீய்மையும், பயமும் நம்மை ஆட்கொள்ளும் பொழுது அவன் நமக்கு முதுகு காட்டிக் கொண்டு தூரதூரங்களுக்கு பின் நோக்கிச் செல்வதையும் பார்க்கிறேன். ஜெருசலேம்மின் இயக்கமே மெசியாவினால் தான் நிகழ்கிறது. நண்பர்களே! அதன் துரிதம் நமக்குள் பற்றட்டும். ம்ம்! வேகமெடுங்கள் நாம் அவளைச் சீக்கிரமே கண்டறிவோம்! நம் தேவனிடமும், மனிதனின் அழிவில்லா ஆன்மபலத்திடமும்  நம்பிக்கை வைப்போம்!"

    அவனது சொல்லின் ஊக்கத்தில், அவர்கள் விரைவாகப் பயணத்தைத் தொடர்ந்தனர். யூதாஸ் மறுபடியும் முதல் ஆளாக, அவர்களை வழி நடத்தி முன்னே சென்று கொண்டிருந்தான். அவனது உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கியது. "அவன் நன்றாகச் சொல்லிவிட்டான்." தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான். "ஆம்! மேரியின் மகன் சொல்வது சரிதான். அந்த முதியத்துறவியும் இதையே தானெ நம்மிடம் சொன்னார். நமது இரட்சிப்பு, முழுக்க முழுக்க நம்மைச் சார்ந்ததே! நாம் வெறுமனே நம் கைகளைக் கட்டிக் கொண்டு அமர்நிருந்தால், இஸ்ரவேலம் என்றுமே விடுதலை அடையாது. நாம் நம் கைகளை உயர்த்துவோம், நம் ஆயுதங்களைக் கையிலெடுப்போம், நமக்கான சுதந்திரத்தைப் பெறுவதற்காக!"

    யூதாஸ் தொடர்ந்து தனக்குளேயே விவாதித்துக் கொண்டு வந்தான். திடீரென மறுதலித்து நின்றான். அவன் முற்றிலுமாகக் குழம்பிப் போனான். "அப்படியென்றால் யார் இந்த மெசியா?, யார்?, ஒருவேளை இந்த அனைத்து மக்களுமா?"

    அவனது அடர்ந்த புருவங்களுக்கிடையிலிருந்து, வியர்வை, குமிழ்களாக வழிந்தன.  "இல்லை! ஒரு வேளை நாம்! அனைத்து மக்களுமேவா?" முதல்முறையாக இப்படி ஒரு எண்ணம் அவனுக்குத் தோன்றியது. அது அவனைத் தொந்தரவு செய்தது. "மெசியா என்பவன் இந்த மொத்த மக்களுமாக இருக்க முடியுமா?" அவன் திரும்பத் திரும்பத் தனக்குள்ளேயே உசாவினான். அப்படியென்றால் நாம் இத்தனைக் காலம் இந்தப் புனிதர்களையும், தவறானத் தீர்க்கதரிசிகளையும் வைத்துக் கொண்டு என்ன செய்கிறோம்? எதற்காக இப்படி அணுதினமும் வேதனையில் உழன்று, அவனைக் காணுவதற்காக முயற்சி செய்து ஏங்கிக் கொண்டிருக்கிறோம்? ஆம்! அவ்வளவு தான்! நாம் தான்! மக்கள் தான் அந்த மெசியா!. நீ, நான், நாம், நாம் அனைவரும்தான். நாம் ஒட்டுமொத்தமாக நம் ஆயுதங்களைக் கையில் எடுப்பதே நாம் செய்யவேண்டியது!"

    அவன் தொடர்ந்து நடையிட்டான். தன் கையிலிருந்த கம்பை உயர்த்தி வானத்தில் சுழற்றினான். ஒரு விளையாட்டுத் தோழன் போல அது அவன் சொல்வதையெல்லாம் கேட்டது. தனக்குத் தோன்றிய இந்தப் புது எண்ணத்தில் மகிழ்ச்சியாகத் தன்னை மூழ்கடித்துக் கொண்டு முன்நோக்கிச் சென்றான். சடாரென அவன் உடைந்து அழுதான். அவனுக்கு முன்னே ரெட்டைச் சிகரங்களாய் முளைத்திருந்த புனித ஜெருசலேமின் மலைகள் தெளிவாகத் தெரிந்தது. அழகும் பெருமையும் வாய்ந்த அதன் வெண்ணிற முகடுகள் சூரிய ஒளியை விழுங்கிக் கொண்டு ஒளிர்ந்து தெரிந்தன. அவனுக்குப் பின்னால் வந்துகொண்டிருப்பவர்களை அவன் இன்னும் அழைக்கவில்லை. அவன் தான் மட்டும் தனித்து அதனைத் தன்னால் முடிந்த அளவுப் பார்த்து,  ரசித்து அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தான். அரண்மனைகளும், கோட்டை, கோபுரங்களும், பரந்து விரிந்து செல்லும் நீல வெளிகளான அதன் ஊடு பாதைகளும், அதன் நடுமையமாக நம் தேவனால் பாதுகாக்கப்படும் கோவிலையும் வியப்புடனும், பயபக்தியுடனும் கண்டான். கோவிலின் பிரகாரங்களும், அதில் ஜொலிக்கும் பளிங்கு மற்றும் தங்க முலாம்களையும். தேவதாரு மரங்கள் சூழ்ந்த நீள் வரிசைக்கிடையில், அதனை ஒரு ஆன்மானுபவமாக அவனுள் உள்வாங்கிக் கொண்டான்.

    மற்றவர்களும் அவனுக்கருகில் வந்து அவன் கண்ட அனைத்தையும் கண்டு சந்தோஷத்தில் திக்குமுக்காடினர். 

    "வாருங்கள், நமது இறை மனுஷியின் பெருமைகளைப் பாடுவோம்!" கூட்டத்தில் சிறந்த பாட்டுக்காரனான பீட்டர் கூறினான். "தயாரா! நாம் ஒருமித்துப் பாடவோம்!"

ஐவரும் கைகளைக் கோர்த்துக்கொண்டு வட்டமிட்டு நின்று நடனமாடத் தயாராகினர். ஜீசஸ் அவர்களின் நடுவே அசைவற்று அந்தப் புனித சங்கீதத்தினைப் பாடத் தொடங்கினான்.

"அவர்கள் சொன்னபோது என்னுள் மகிழ்ச்சி பொங்கியது,

எழுக! நாம் நம் தேவனின் இல்லத்தை நோக்கிப் பயணப்படுவோம்!

என்னுடையக் கால்கள் உமக்கு முன் தாழ்ச்சியுறுகின்றன,

இதோ நாங்கள் உம்  சதுக்கத்திலே! ஓ! ஜெருசலேமே.

ஜெருசலேமே! திடமான உம் கோட்டை அரண்களே,

உம் வலிமை மிகு கோபுரங்களில் அமைதி நிலவுகிறது

உம் மாளிகையினில் இன்பம் பெருகுகிறது

என் உடன் பிறப்புகளே, என் துணைவர்களே, உங்களின் நிமித்தம்

சாந்தம் ! சாந்தம் எழுக!, என் ஜெருசலேமே!

திங்கள், 14 மார்ச், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -70

    

    முதிய ஜோனா இந்நேரம், வீட்டில் சமையல் செய்து கொண்டும், தன் நினைவுகளில் மூழ்கியும் பீட்டருக்காக உணவைத் தயார் செய்துக் காத்திருப்பார். அவர்கள் எப்பொழுதுமே ஒன்றாக உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். "பீட்டர்! என் ஒரு மகனையாவது எனக்காக இந்தக் கடவுள் விட்டு வைத்தாரே! நல்லது! ஆண்ட்ரூவைப் போல அல்ல, பீட்டர். அவன் விவேகமாகவும், சமயோஜிதமாகவும் விஷயங்களைக் கையாள்பவன். செயல்களைச் செய்வதிலும், வேலை வாங்குவதிலும் சிறந்த ஆளுமைத்திறனுடையவன். ஆனால் ஆண்ட்ரூ, அவனின் உணர்ச்சிவேகமும், ஆர்வக் கோளாறும் தான் அவன் பிரச்சனையே!. அவனால் நிதானமாக எதனையும் அணுக முடியாது. எந்தப் புதியவிஷயங்களைப் பற்றியும் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமலேயே எல்லாம் தெரிந்தது போலப் பாவனைகள் செய்து கொள்வதும், அதில் பெருமையடைவதும் இயல்பாகவே அவனைப் பிரச்சனையில் தான் கொண்டு போய் சேர்த்திருக்கிறது. தன் பிள்ளைகளைப் பற்றியக் கவலையில் மூழ்கியிருந்த முதியவரின் எண்ணங்கள், அதில்லாவிட்டால் ஏரியும், வலையும், மீன்களையும் தவிர்த்து எதனுள்ளும் சிலாகித்து இருந்ததில்லை. மனைவி இறந்ததும் பிள்ளைகளையேப் பெரிதும் நம்பியிருந்தவருக்கு, ஆண்ட்ரூவினால் காலம் மாபெரும் துன்பத்தைக் கொடுத்துச் சென்றுவிட்டது. பீட்டரை மட்டும் தன் இனிமேலான வாழ்விற்கு வலு சேர்க்கும் ஒரேக் குவியமாக அவர் நம்பியிருந்தார். தயாராகிவிட்ட உணவை எடுத்து வைத்து, தன் மகனுக்காக, நண்பகல் கழிந்தும் பசியுடன் காத்திருந்தார் அவர், அவனின் வருகையை எதிர்நோக்கிக் கைகளை மார்புக்குக் குறுக்காக மடக்கிக் கொண்டு அமைதியாக  வாதிலில் அமர்ந்திருந்தார்.

    செபெதீயின் இல்லத்தின் எல்லாக் கதவுகளும் திறந்துகிடந்தது. வீட்டு முற்றத்தின் ஓரத்தில் கூடைகளும், ஜாடிகளும் நிரம்பி இருந்தன. மது தயாரிக்கும் தொட்டியில் இருந்து திராட்சை ரசம் நுரைக்க நுரைக்கப் பீப்பாய்களில் மாற்றப்பட்டிருந்தது அதன் மீதமிருந்த, தோலும் விதைகளும் குடுவைகளில் நொதிக்க விடப்பட்டிருந்தது, புளிப்பேறிய மதுவின் மணம் வீடு முழுதும் அலைந்து கொண்டிருந்தது. மிச்ச மீதிகளும், திராட்சைக் கழிவுகளும் இன்னும் அகற்றப்படாமல் ஈக்கள் மொய்க்க முற்றத்தின் ஒரு மூலையில் கிடந்தன. மதுவின் புளிப்பு வீச்சத்தைக் கலந்து தங்கள் இரவுணவை உண்டு கொண்டிருந்தனர் முதிய செபெதீயும், அவர் மனைவியும். செபெதீ உணவைக் கைகளால் முடிந்த அளவுப் பிசைந்து வாயிலிட்டார். பற்களில்லாத பொக்கை வாயில் ஈறுகளினால் சவைத்து மென்று விழுங்கினார். ஒவ்வொரு கவளத்துக்கும் முகத்தில் பலபல விசித்திரமான பாவங்களைக் காட்டிக் கொண்டிருந்தார். அருகிலிருக்கும் முதிய நஹும்மின் குடிலின் மேல் அவருக்கு ஒரு கண். அவரின் தந்திரபுத்தி, எப்படித்தன்  வியாபாரத்தை வளர்ப்பது என்பதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தது. ஏற்கனவே கடனினால் அந்தக் குடிலை விற்கும் எண்ணத்தில் அவர்கள் இருந்ததால், தனக்குத் தர வேண்டியதற்குப் பணயமாக, அந்தக் குடிலைக் குறைந்த விலைக்கு ஏலத்தில் எடுக்க வேண்டும் என்பது தான் அவரது தற்போதைய யோசனை. இறைவனின் அருளால் அடுத்த வாரத்திற்குள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அந்தக் குடிலை வாங்கியபின், இரு வீடுகளுக்கும் இடைப்பட்ட சுவரை அகற்றி ஒரேக் குடிலாக ஆக்கி விட்டால், பின் அங்கே ஒரு ஆலிவ் எண்ணெய் தயாரிக்கும் உற்பத்தி அலகை அமைக்க வேண்டும். ஏற்கனவே நம்மிடம் உள்ள திராட்சை மது உற்பத்திக்கு செய்த அதே சூத்திரத்தை, இதற்கும் பயன்படுத்தலாம். ஜனங்களிடமிருந்து பழங்களை வாங்கி, எண்ணெய் எடுக்கலாம். நாம் செய்ய வேண்டியது ஒரு முதலீடு, பின் எப்படியும் ஒரு வருடம்,  வீட்டிற்குத் தேவையான எண்ணெய்க்கு குறை இருக்காது. வியாபாரமும் செய்யலாம். அவர்களுக்கு பங்கிட்டுக் கொடுப்பதில், சரியான லாபமாக, நமக்குக் கிடைக்கும் கணிசமான வருமானத்திற்கு வருமானமும் ஆயிற்று என்று மனத்தில் கணக்குகளைப் போட்டுக் கொண்டிருந்தார். அதனால் என்ன செய்தாவது அந்தக் குடிலை விலைக்கு வாங்கிவிட வேண்டும். அது ஒரு நிரந்தர வருமானத்திற்கானச் சரியான வழி என்று நினைத்து உறுதி எடுத்துக் கொண்டார்.

    முதிய சலோமி வழக்கமானத் தன் கணவனின் அங்கலாய்ப்புகளை வெறுமனேக் கேட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் அவளது உள்ளம், ஜானைத் தேடிக் கொண்டிருந்தது. தன் நேசத்திற்குரியக் குட்டிப் பையன் எங்கே இருக்கிறானோ, என்ன செய்கிறானோ, சாப்பிட்டானோ என்னவோ என்று அல்லாடியது. அவனைக் காண வேண்டும் என அவள் ஏங்கிக் கொண்டிருந்தாள். மேலும் புதிய தீர்க்கதரிசியின் சொற்கள் அவளை எல்லா வகையிலும் ஆற்றுப்படுத்தியது. அதை மறுபடியும் கேட்க வேண்டும் என்னும் எண்ணம் அவளினுள் நிறைந்தது. தேவனின் வார்த்தைகளின் பூரணத்தையும், சத்தியத்தையும், மனித இதயங்களுக்கு அளிக்கும் அவனது தேன் தடவிய உதடுகளை அவள் பக்தியுடன் விரும்பினாள். என்னுடைய மகன் செய்தது சரியே! அவன் இப்பொழுதுதான் தனக்கானச் சரியானப் பாதையினைத் தேர்ந்தெடுத்திருக்கிறான் என்று அவள் உறுதியாக நம்பினாள். நான் அவனை என் ஆன்மாவின் உள்ளிருந்து ஆசிர்வதிக்கிறேன். இரு தினங்களுக்கு முன் அவளுக்கு வந்த சொப்பனத்தினைப் பற்றி அவள் எண்ணினாள். தன் இல்லத்தின் உறுதியானக் கதவுகளை உடைத்துத் திறந்து அவள் வெளியே ஓடுகிறாள். வெளியே பாதையில் அவளுக்கு முன்னே அந்தப் புனிதன் வெளிச்சமாகச் செல்கிறான். அவள் தன்னை அடக்க முடியாமல் அவன் பெயரை அழுத்தமாக உச்சரித்துக் கொண்டே, அவனை நோக்கி ஓடுகிறாள். வெற்றுக் கால்களுடன், தன் பசி, தாகம் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு, தன் வீடு, அதன் ஆடம்பரங்கள் அனைத்தையும் ஒரு தூசு போல உதறிவிட்டு விரைகிறாள். தன் வாழ்நாளில் அன்றுதான் அவளால் மகிழ்ச்சி என்பதை உண்மையாக உணரமுடிந்தது. தன் பசியும் தாகமும் இந்த சாதாரண உணவினாலும், தண்ணீரினாலும் அடங்காது, அது விளைவது தேவனின் அணுக்கமே என்று அவள் மனதார வேண்டினாள்.

    "சலோமி! சலோமி!, என்னாயிற்று இவளுக்கு, நான் பேசுவதைக் கேட்கிறாயா" செபெதீ தன் மனைவியின் எங்கோ ஸ்தம்பித்து நிற்கும் விழிகளைப் பார்த்து அவளை உலுக்கினார்.

"என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?"

    "நான் நீங்கள் பேசுவதைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்?" அவரைப் பொருளற்றுப் பார்த்தன சலோமியின் விழிகள். அது இன்னும் தான் தொலைந்த இடத்திலிருந்து மீளாமலேயே இருந்தது.

    அந்தக்கணத்தில் தெருவில், தனக்கு நன்கு தெரிந்தக் குரல்களைக் கவனித்த முதியவர், வாதிலைக் கூர்ந்து வெளியேப் பார்த்தார்.

    "அதோ அவர்களேதான்" வாசலிற்கு வந்தவர்,  வெளியே வெள்ளை அங்கி அணிந்திருந்த ஒருவன் தன் வீட்டைக் கடந்து , தன் இரு மகன்களையும், இரு தோள்களிலும் கைகளால் தாங்கிக் கொண்டு செல்வதைப் பார்த்து, வாயிலிருந்த சாப்பாட்டின் எச்சில் தெறிக்கக் கத்தினார்.

"எங்கே செல்வதாய் உத்தேசம் தம்பிகளா! நில்லுங்கள் அங்கேயே!"

    பீட்டர் அவரிடம் பேசமுற்பட்டான். இன்னொருத்தன் சட்டென அங்கிருந்து சற்று விலகி நின்றான். 

    "எங்களுக்கு செய்யவேண்டிய  அத்தியாவசியமான வேலை ஒன்று இருக்கிறது, நாங்கள் போகவேண்டும்"

"என்ன வேலை"

    "அது முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டியச் சிக்கலான வேலை" சொன்னவன் அடக்க மாட்டாமல் சிரித்தான்.

    முதியவர் நிமிர்ந்து அவர்களை உற்றுப் பார்த்தார். நீயுமா? ஜேக்கப்! நீயுமா!". அவர் தன் வாயிலிருந்து மிச்ச உணவைச் சவைத்துக் கொண்டே அழத்தொடங்கினார். அவரது குரல் கம்மியது. தொண்டைக்குழி அடைத்தது போலக் கமறி இருமினார். பின் அங்கிருந்து வீட்டிற்குள்ளே சென்றுத் தன் மனைவியைப் பார்த்தார்.

    "உம் மகன்களுக்கு விடைபெறல் கூறு செபெதீ," அவள் தன் தலையை ஆட்டிக் கொண்டே சொன்னாள். "அவன் நம்மிடமிருந்து அவர்களை எடுத்துக் கொண்டான்."

    "ஜேக்கப்புமா?" அவர் அதிர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறினார். "அவன் மண்டையிலாவது ஏதாவது இருக்கும் என்றல்லாவா  நான் நினைத்தேன், இதற்கு வாய்ப்பே இல்லை!"

    சலோமி பேசாமல் நின்றிருந்தாள். "என்ன பேச அவரிடம்? என்ன சொன்னாலும் அவர் எப்படியும் புரிந்துகொள்ளமாட்டார்?" தனக்கு இனி பசியும், துக்கமுமில்லை என்று நினைத்துக் கொண்டவள், வாசலிற்கு வந்தாள். அவர்களுக்குத் துணையாக, அவர்களை அணைத்து நிற்கும்  கருணையின் வடிவான இளைஞனைக் கண் கொட்டாமல் கண்டாள். பின் தன் கைகளை அசைத்து யாருக்கும் கேட்கா வண்ணம் மெல்லியக் குரலில் பேசினாள். "என் ஆசிர்வாதங்கள் என்றும் உங்களுக்கு உண்டு, போய் வாருங்கள் குழந்தைகளா" என்றாள். அவர்கள் மூவரும் தேவன் விதியிட்டத் தேடலின் பாதையில், ஜெருசலேம் வழியாக ஜோர்டானை  நோக்கி விரைவாக நடையிட்டனர்.

    கிராமத்தின் எல்லையில் பிலிப் எதிர்பட்டான். அவன் ஏரியின் கடைசி நிலத்தில் தன் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தான். ஒரு சிவந்தப் பாறைக்குன்றில் தன் துரட்டிக் கம்பினை ஊன்றி சாய்ந்து கொண்டு ஏரியின் தூரத்தை அளந்து கொண்டிருந்தான். நீலப்பச்சையான நீர்மையில், கருமையான வளையங்கள் அலையிட்டுக் கரை ஒதுங்குகிறது. கரைப்பாசிகளின் அனிச்சையான அலைதல். ஒவ்வொரு அலைத்துள்ளலுக்கும், அதன் சுழல் வட்டம் பெரிதாகி பெரிதாகி விளிம்பில் முறிந்து கொண்டிருந்தது. தனக்குப் பின்னே கூழாங்கற்களை மிதித்து வரும் காலடிகளைக் கவனித்தவன் திரும்பி, நிமிர்ந்து அவர்களை நோக்கினான்.

    "ஹேய்!என்னைத் தெரிகிறதா?" அவன் அவர்களை நன்றாகத் தமக்குத் தெரியும் என்கிறத் தொனியில் சத்தமாக விளித்தான்,  "எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்?"

    "தேவனின் சொர்க்க ராஜ்ஜியத்திற்கு!" ஆண்ட்ரூ சத்தமாகக் கூறினான். " நீயும் வருகிறாயா?"

    "இதோ பார், ஆண்ட்ரூ கொஞ்சம் காரியமாகப் பேசுகிறாயா?", நீங்கள் மாக்தலாவில் நடக்கும் திருமண விருந்திற்குப் போகிற மாதிரி இருந்தால், சரி! நானும் வருகிறேன். நாத்தனேல் என்னையும் அழைத்திருக்கிறான். அவனது அக்காளின் மகளுக்குக் கல்யாணம் இன்று இரவு நிகழ்கிறது.

    "ஏன்? மாக்தலாவையும் தாண்டி இன்னும் தூரமாகப் போவதாய் இருந்தால் நீ வரமாட்டாயா என்ன? ஜேக்கப் கிண்டலாகக் கூறினான்.

    "அய்யைய்யோ! என் ஆடுகள் இருக்கிறதே! அதுகளை எங்கேக் கொண்டுபோய் விட?"

    " நம் தேவனின் கைகளில்" ஜீசஸ் திரும்பிப்பார்க்காமல் பதிலுரைத்தான்.

"ஓநாய்கள் அதுகளைத் தின்றுவிடும்"

"திங்கட்டுமே!" ஜான் கத்தினான்.

    "சரிதான்! கடவுளுக்கும் பைத்தியம் பிடித்துவிடும், இவர்களின் பேச்சைக் கேட்டால்!", இந்தப் பயல்கள் முழுக்கிறுக்காக ஆகி விட்டார்கள் போல" நமக்கெதற்கு வம்பு! என்று அந்த மேய்ப்பன் சீழ்க்கை அடித்து, தன் துரட்டியை ஆட்டி ஆடுகளை ஓட்டத் தொடங்கினான்.

    அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். யூதாஸ் தன் கையிலிருந்த முறித்தக் கிளையை ஆட்டிக் கொண்டே, முன்னே அவர்களை வழி நடத்திச் சென்றான். சீக்கிரமே சென்று சேர வேண்டும் என்ற அவசரத்தில் அவன் வேகமாக நடந்தான். பின்னால் வரும் மற்ற அனைவருமே சந்தோஷத்தில் இருந்தனர். அவர்கள் ஒரு பறவைக்கூட்டம் போல சத்தமாக சீழ்க்கை அடித்தும், அளவளாவிக் கொண்டும், சிரித்துக்கொண்டும் வந்தனர். பீட்டர் ஓடிப் போய் யூதாஸை அணுகினான். யூதாஸ் இது எதிலும் கலந்துகொள்ளாமல், அவசரகதியில் மூச்சிரைக்க நடக்கிறான். எந்த உணர்ச்சிகளும் வெளிக்காட்டாது நேரம் கடக்க கடக்க அவனது நடையின் வேகம் அதிகரித்துக் கொண்டே சென்றது.

    "யூதாஸ், நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்று ஒருமுறை என்னிடம் சொல்லிவிடு!" பீட்டர் மென்மையாக அவனுக்கு கோபம் வராதவாறுக் கேட்டான்.

"தேவனின் சொர்க்க ராஜ்ஜியத்திற்குத்தான், வேறெங்கு!" அவனது பாதி முகத்தில் வெறிப்பு கரிந்தது.

    "கேலிப் பேச்சு வேண்டாம், யூதாஸ். எனக்கு நம் ஆசிரியனிடம் கேட்கப் பயமாக இருக்கிறது. கடவுளுக்கே வெளிச்சம்! நாம் எங்கு போகிறோம் என்று சொல்லேன்"

"ஜெருசலேமிற்கு"

    "ஐயோ, மூன்று  நாட்கள் தொடர்ந்து நடக்க வேண்டுமே! ச்சே! முன்னமே தெரிந்திருந்தால் நான் கொஞ்சம் ரொட்டியும், குடுவையில் புதிய மதுவும், செருப்பும் போட்டுக் கொண்டு வந்திருப்பேன். என் கைக்கோலையும் எடுத்திருக்கலாம். இப்போது ஒன்றும் செய்வதற்கில்லை."

    இந்த முறை செந்தாடிக்காரனின் முகம் முழுதும் சிரிப்பு படர்ந்தது. அவனின் வெறிப்பார்வையில், ஏளனம் குடிகொண்டது. "ஐயோ, பீட்டர்! பீட்டர்! பாவம் நீ!. பந்து ஏற்கனவே உருளத் தொடங்கி விட்டது. இனி இதனை யார் நினைத்தாலும் நிறுத்த முடியாது. நீ உன் செருப்புகளுக்கும், ரொட்டி மற்றும் மதுவிற்கும் கடைசி விடைபெறல் கூறிவிடு. நீ திரும்பி வரமுடியாதப் பாதையைத் தேர்ந்திருக்கிறாய். நாம் ஏற்கனவே அதைவிட்டு வந்தாயிற்று. புரிந்ததா உனக்கு! நீ உன் உலகத்தை விட்டு, உன் கடலின் வழிகளை விட்டு வெகுதூரம் வந்தாயிற்று. ஆனால் இன்னும் உனக்கு நேரம் இருக்கிறது. போவதென்றால் இப்பொழுதே ஓடிப்போய்விடு! அவன் வெடித்துச் சிரித்தான்.

    " என்னால் இனிமேல் எப்படித் திரும்பிப் போகமுடியும்?" பீட்டர் கூறினான். தன் கைகளை உயர்த்தி சுற்றிக் காண்பித்தான். நான் உள்ளே நுழைந்தாயிற்று. கண்ணுக்குத்தெரியாத சூட்சுமத்தின் கைகளில் அகப்பட்டுக்கொண்டிருக்கிறேன். இனிமேல் நானே நினைத்தாலும் திரும்பிப் போவதற்கு வாய்ப்பில்லை. இனி எல்லாவற்றையும் கடவுள் தீர்மானிக்கட்டும். எனக்கு உண்மையில் சலித்துவிட்டது. இந்த ஏரியும், அதன் மீன்களும் இன்னும் இன்னும் என்னை அர்த்தமற்றாதாக்கிக் கொண்டிருக்கிறது. எனது படகுகளையும், இந்த கார்பெர்னத்தையும் நான் அடியோடு வெறுக்கிறேன். இதனை முற்றிலுமாக  மறந்து எனக்கானப் பாதையை நான் சுயமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அதன் எல்லா கூடுதல் குறைவுகளோடும் நான் அதனைப் பார்த்துக் கொள்கிறேன்.

    "நல்லது! நானும் ஒத்துக் கொள்கிறேன்!, அப்படியென்றால் உன் தேவையற்றப் புலம்பகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, பேசாமல் என்னுடன் வா!"

    கிராமத்தின் தெரு நாய்கள், பரிட்சயமற்ற ஆட்களின் வாடையை உணர்ந்துக் குரைக்கத் தொடங்கின. பிறகு ஊரின் சிறுவர், சிறுமிகள் மாக்தேலாவின் முடுக்குகளுக்குள் கத்திக் கொண்டே ஓடினர்.

"அவர் வந்து கொண்டிருக்கிறார்! அவர் வந்து கொண்டிருக்கிறார்!"

"யார் வருகிறார், பொடியன்களா?" கிராமத்து மக்கள் தங்கள் இல்லக் கதவுகளைத் திறந்து கொண்டு கேட்டனர்.

"புதிய தீர்க்கதரிசி!"

    கிராமத்தின் முகப்பிலிருக்கும் சதுக்கம் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என நிறையத் தொடங்கியது. ஆண்கள் தங்கள் வேலைகளை அப்படியே நிறுத்தி விட்டு அங்கு வந்தனர். நோய் வாய்ப்பட்டவர்கள் மகிழ்ச்சியுடன், அவனது தொடுகையை ஏங்கி வருகின்றனர். அவனைப் பற்றியச் செய்திகள் ஏற்கனவே மக்களுக்குத் தெரிந்திருந்தது. அவனது அற்புதங்களின் சங்கீதங்களைக் கதைப்பாடல்களாக, ஜென்னசரேட் ஏரிக்கரையிலிருந்து சுற்றுவட்டாரக் கிராமங்கள் முழுதும் பறைசாற்றப்பட்டிருந்தது. அவனது தொடுகைகளின், அணுக்கத்தின், சமீபத்தின் மகத்துவமும், மருத்துவமும், வலிப்பு கண்டவர்களையும், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட முதியவர்களையும், பார்வையிழந்தவர்கள், பேய், பிசாசுகள் பிடித்து மூர்க்கமடைந்தவர்களையும், கிறுக்கர்களையும் குணப்படுத்துவதன் அதிசயங்களை மக்கள் எல்லோருமே அறிவர். அதனால் அவனின் வருகை என்பது சாதாரண நிகழ்வல்ல. அவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியும், குதூகலமும், பக்தியும், மன்றாட்டும், பிரார்த்தனைகளும் என ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்தில் தங்களை அங்கே வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

    "அவர் என் இருளடைந்த விழிகளைத் தொட்டார், நான் ஒளி பெற்றேன்!"

    "அவர் என் ஊன்றுகோல்களைத் தூக்கித் தூர எறியச் சொன்னார், நான் என் கால்களில் வலுவைப் பெற்றேன். நடனமாடினேன்!"

    " சாத்தான்களின் சந்ததிகள் அனைத்தும் என்னுள் கிளர்ந்து என்னை ஆட்டுவித்தன. அவர் தன் கைகளை உயர்த்தி என்னிடம் ஆணையிட்டார். "அப்பாலே போ சாத்தானே! போய் அந்தப் பன்றிகளைப் பற்றிக்கொள்" அவைகள் ஒரே வீச்சில் என் உடலிலிருந்து உதறி என் ஆவியினுள் இருந்து, கெட்ட ரத்தம் பீறிடுவதைப் போல வெளியேறி, கடற்கரையினில் மேய்ந்து கொண்டிருந்த பன்றிகளிடம் போய் அண்டிக் கொண்டன. அந்த விலங்குகள் பைத்தியம் பிடித்துக் கத்தின. அவைகள் ஒன்றை ஒன்று மூர்க்கமாய் முட்டிக் கொண்டு சண்டையிட்டு நீரினுள்  மூழ்கி மறைவதை நான் என் சொந்தக் கண்களால் பார்த்தேன்."

    அவனின் வருகையின் இனிய செய்தியை அறிந்ததும் மாக்தலேன் அவளது கூடத்திலிருந்து வெளியே வந்தாள். என்று மேரியின் மகன் அவளைத் திரும்பப் போகச் சொல்லி, இனி உனக்குப் பாவங்கள் இல்லை என்று சொன்னானோ அதன் பிறகு அவள் தன் முகத்தை யாருக்கும் வெளிக்காட்டவில்லை. வீட்டை விட்டு அவள் வெளியேயும் வரவில்லை. அவள் அழுகையினாலும், தன்னுள் ஊறிக் கொண்டே இருந்த பிரார்த்தனைகளின் தூய்மையினாலும் , தன் கடந்தகாலத்தின் அத்தனை அழுக்குகளையும் சுத்தப்படுத்தித் தன்னுடைய ஆன்மாவை நிர்மலமாக்கியிருந்தாள். இரவு விழிப்புகளின், உடலின் தாபங்களின் சுரப்புகளை, அதன் வலிகளை, வாதைகளை  என்று எல்லாவற்றையும் அழிக்கும் பொருட்டு அவள் போராடித் திரும்பவும் தன்னைப் புதிதாக பிறப்பித்திருந்தாள். அவள் தன் கன்னித்தன்மையைத் திரும்பவும் மீட்டெடுத்தாள். ஆம்! தேவனின் அணுக்கத்தைத் தன்னுள் உணரும் வண்ணம் இரவு பகலாகப் பிரார்த்தனைகளன்றி எதனுள்ளும் தன்னை ஒப்புக் கொடுக்காமல் அவள் மீண்டு வந்திருந்தாள். அவளுடைய பிரார்த்தனைகளின் வழியே ஜீசஸ்! ஜீசஸ்! எனும் சொல் ஒன்றே அவளை ஒளியிலும், இருளிலும் ஒரு கவசம் போலப் பாதுகாத்தது. அந்தப் பெயரன்றி அவளினுள் எதுவும் தழும்பவில்லை. அவள், தான் அந்தப் பெயர் எனும் இருமை ஒழிந்து ஜீசஸ்! எனும் சொல்லிற்குத் தன் உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் பாரபட்சமின்றி, சந்தேகங்களின்றி சமர்ப்பணம் செய்துவிட்டாள். தன் இம்மைக்கும் மறுமைக்கும் ஏதுமின்றி அந்த ஒரு பெயர் மட்டுமேத் தனக்குப் போதுமானதாக இருப்பதாக அவள் மனதார நம்பினாள். தன் மரணத்தின் நொடியிலும் அப்பெயரை உச்சரித்து, அருள் ததும்பச் சாவதே அவளது வாழ்வின் நோக்கமாக இருந்தது. பெரும்பாலான இரவுகளில், அவளது சொப்பனத்தின் வழியே அவள் ஜீசஸைக் கண்டாள். தூர தூரங்கள் பயணித்து சோர்வுடன், புழுதி படிந்த வெற்றுக் கால்களுடன் அயர்ந்து அவன் நள்ளிரவுகளில் வருகிறான். அவள் வெந்நீர் வைத்து அவன் பாதங்களைக் கழுவி, தன் கேசத்தால் அதனை ஒற்றித் துடைக்கிறாள். அவனுக்கு இரவுணவு அளிக்கிறாள். அவர்கள் இரவு முழுதும் ஏதேதோ விஷயங்களைப் பேசி சிரிக்கிறார்கள். அவன் தன்னிடம் என்ன பேசினான் என்பதை அவளால் ஞாபகப்படுத்த முடியவில்லை. ஆனால் அவனின் அணுக்கம் உண்மையில் அவளுக்கு சொப்பனம் போல இல்லை. ஒரு நித்திய இருப்பாக எல்லா இரவுகளிலும் அவனை அவள் உணர்ந்து கொண்டிருந்தாள். ஒவ்வொரு நாளும் காலையில் படுக்கையை விட்டு எழும்பும் பொழுது அவன் நினைவுகளின் சுகந்தத்தினாலும், அவனது குரலின் எல்லையில்லாத் தன்மையினாலும் தான் அடித்துச் செல்லப்படுவதும், அந்த ஆதியந்தமற்ற நதியில், அவள் பாதைகளே அற்று மிதந்து செல்வதைப் போலவும் துணுக்குற்றுத் தனக்குள்ளேயே மகிழ்ந்திருந்தாள். சில நேரங்களில் அவள் அவனுடன் பேசுவதைப் போலத் தனக்குள் பேசிக் கொள்வாள். கொஞ்சுவாள், அழுவாள், மன்றாடுவாள். ஆனால் யாருக்கும் கேட்காதபடி தாழ்ந்த குரலில் அவளுக்கு மட்டுமேயானத் தனி உலகினில் அவள் அதனை உருவாக்கி வைத்திருந்தாள். இன்று இந்தச் சிறுவர்களின் கூச்சலையும், ஆரவாரத்தையும் கேட்டவள், தன்னைச் சற்றும் நிதானப்படுத்த முடியாமல், வாதிலை விட்டு வெளியே வந்தாள். நீளமானக் கண்களைத் தவிரத் தன் உடலின் அனைத்து தடங்களையும் முற்றிலுமாக மறைத்து, அவனது வருகையின் நிமித்தம் அவனைப் பார்க்க ஓடி வந்து கொண்டிருந்தாள்.

    மாலைப் பொழுதில் கிராமமே உற்சாகத்தில் திளைந்திருந்தது. இளம் பெண்கள், தங்கள் ஆபரணங்களையும், வனப்பான உடைகளையும் அணிந்து கொண்டு அங்கு நடக்கும் திருமணத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். தங்களுக்குள் வம்பளந்துக் கொண்டும், அவர்களின் அலங்காரங்களை, அணிகலன்களை ஒருத்தொருக்கொருத்தர் நோட்டமிட்டு ஒப்பிட்டுக் கொண்டும் வந்தனர். நாத்தனேலின் சகோதரியின் மகளுக்குத் திருமண நிகழ்வு ஒருங்கமைந்து கொண்டிருந்தது. இளம்பெண்கள் விளக்குகளை ஏற்றி, வீட்டினுள் அலங்காரங்களை அமைப்பதைப் பார்த்துக் கொண்டனர். செருப்பு தைக்கும் தொழிலாளியான நாத்தனேலின் மாமா, விருந்திற்கானக் காரியங்களை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். மணப்பெண் முழு அலங்காரத்துடன், தன் கண்கள்  மட்டும் தெரியும்படி முக்காடிட்டுக் கொண்டு நடு வீட்டில், திருமணத்திற்காகப் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து, கிராமத்தின் ஆண்கள்,பெண்கள், விளக்கொளிகளுடன் வரவேற்க வரும் இளம்பெண்களின் வருக்கைக்காகக் காத்திருந்தாள். விளக்கொளியில் அவள் காதுகளில் அணிந்திருந்த, வெள்ளிக் கம்மல்கள் மிளிர்ந்தன. முக்காட்டிற்குள்ளிருந்தும் அவளின் புன்சிரிப்பினைக் கண்கள் வழியேக் காண முடிந்தது. தனது வேத நூல்களைப் பிரித்து அவர்களின் திருமணத்தை நிகழ்த்தி வைக்கும் அந்தக் கிராமத்தின் துறவியின் ஆசிர்வாதங்களுக்காகவும் காத்திருக்கிறாள். ஆனால் யாருமே இன்னும் வந்து சேரவில்லை. அவள் மட்டும் தனியே தன் தடித்த மூக்கை உறிஞ்சிக்கொண்டு இருக்கையில் அலங்காரங்களுடன் அமர்ந்து மந்தமாக வெளியை நோக்கிக் கொண்டிருந்தாள்.

    நாத்தனேலும் அச்சிறுவர்களின் விளியைக் கேட்டு, தன் நண்பர்களைத் திருமணத்திற்கு அழைப்பதற்காக வெளியே ஓடினான். அவர்கள் கிராமத்தின் முகப்பில் இருக்கும் கேணியின் அருகிலிருந்த திண்டில் அமர்ந்திருப்பதை அவன் கண்டான். கிராமத்தின் தாகம் தீர்க்கும் குடிதண்ணீர் சுரக்கும் சுனை அக்கிணறு, மாக்தலேன் அவனின் காலடியில் அமர்ந்திருந்தாள். தன் அழுகையினால் அவன் பாதங்களை நனைத்து, கேசத்தால் வருடிக் கொண்டிருந்தாள்.

    அவன் அவர்களை நோக்கி அருகில் வந்தான். "இன்றிரவு என் சகோதரியின் மகளுக்குத் திருமணம். நீங்கள் கண்டிப்பாக திருமண விருந்தில் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கோடையில், செபெதீயிடம் வேலை செய்ததற்குக் கூலியாக வாங்கியப் புதிய, இனிமையான திராட்சை ரசத்துடன் நாம் இவ்விருந்தினைக் கொண்டாடுவோம்." 

    அவன் ஜீசஸைப் பார்த்தான். "மேரியின் மகனே, நாங்கள் உம் புனிதத்தின் மகத்துவத்தைப் பற்றி எல்லா இடமும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.  எங்களைக் கௌரவிக்கும் விதத்தில் நீ இந்தத் திருமண வைபவத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி ஆசிர்வதிக்க வேண்டும். அவர்கள் ஆண்மகவுகளைப் பெற்றெடுத்து இஸ்ரவேலத்தின் புகழுக்கு வலுசேர்க்கட்டும்!"

    ஜீசஸ் எழுந்தான். "மனித இதயங்களின் புனிதம் அவர்களின் இன்பத்திலேயே நிலைக்கிறது" ஆம்! என் துணைவர்களே! வாருங்கள் நாம் போகலாம்!"

    ஆவன் மேரியின் கைகளைப் பிடித்துத் தூக்கினான். "வா! மேரி! எங்களுடன் இணைந்துகொள்!"

    உற்சாகம் பொங்க அவன் கூட்டத்தை வழி நடத்தி முன்னே சென்றான். திருவிழா மன நிலையை அவன் எப்போதுமே விரும்பினான். மனிதர்களின் பிரகாசிக்கும் முகங்கள் அவனை சந்தோஷப்படுத்தும். இளையவர்கள் இணையும் அந்த அற்புதமான நொடி. அந்த இருமனங்களும் ஒன்றாகும் நிகழ்வில் அவர்களின் ஆனந்தமான மகிழ்ச்சியைக் காணுவது அவனுக்கு மிகவும் பிடிக்கும். அங்கு உடல், மனம், ஆன்மா ஒன்றிணைந்து இருவரும் ஒருவராக பற்றிக் கொள்வதற்கான சடங்குகளைச் செய்விப்பதையும், அதைப் பார்ப்பதையும் அவன் தவறவிட்டதில்லை. இறைவன் படைத்த எல்லாமே புனிதத்தன்மை கொண்டவையே. ஆம்! மண், மரம், பூச்சிகள், விலங்குகள், மனிதர்கள் என்று எல்லாமே அவனின் வேறு வேறு உருவங்களே அன்றி வேறென்ன!. நாம் எதற்காக வாழ்கிறோம்? நம் தேவனை மகிமைப் படுத்துவதற்காக? மனிதம், என்றென்றும் எப்போதும் நீடூழி வாழட்டும்!"

    வெண்ணிறத் தூய ஆடைகளை அணிந்துகொண்டு அலங்காரமிட்ட வாயிலில் இளம்பெண்கள், தங்கள் வீச்சமான நறுமணம் வீச நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் தங்கள் கைகளில் விளக்குகளை ஏந்திக் கொண்டு, மணமகளை வரவேற்கும் வண்ணம் திருமணத்திற்கானப் பழமையான பாடல்களைப் பாடினர். அது மணமகனைக் கேலியும், கிண்டலும் செய்யும் தொனியில் எழுதப்பட்டது.  அது இறைவனையும்  தங்களின் வரவேற்பில் இணைந்து கொள்ளுமாறு வேண்டுகிறது. ஒரு திருமண நிகழ்வென்பது, இஸ்ரவேலத்தில் இரு உடல்கள் தங்களை ஒன்றை ஒன்று அந்த நாளின் இரவில் கண்டுகொண்டு ஒன்றிணைவதன் வழியே எல்லாம் வல்ல இறைத்தன்மையை அடைவதற்கான வாசலைத் திறப்பதாகும். ....அந்த நாளின் இரவை மேலும் நீட்டிக்க இளம்பெண்கள், மணமகனை வழியில் தடுத்து நிறுத்திக் காக்க வைப்பதும்,  கேள்விகள் கேட்டு நாண வைப்பதும் சம்பிராதயமாக நடக்கும். அவர்கள் மேலும் மேலும் தனித்திருக்கும் மணப்பெண்ணைக் காக்க வைத்து, விழாவின் எதிர்ப்பார்ப்பைக் கூட்டுவர்.

    அவர்கள் பாடிக் கொண்டிருக்கும்பொழுது, ஜீசஸ் கூட்டத்தை முன் நடத்தி உள்ளே வந்தான். கன்னியர்கள் அவனின் எழிலை ஆச்சர்யத்துடன் பார்த்தனர். ஆனால்மாக்தலேனைப் பார்த்ததும் அவர்களின் பாடலின் ஸ்வரம் அப்படியேத் தாழ்ந்து நின்றுவிட்டது, அங்கு திடீரென அமைதி  படிந்து, அவர்கள் பின் வாங்கினர். "இந்த வேசிக்கு இங்கென்ன வேலை?, எங்கே அந்த கிராமத் தலைவர், இவளைத் தடுக்காமல் எங்கே போனார்? இவள் இந்தத் திருமணத்தின் புனிதத்தை அசுத்தப்படுத்துவதற்கென்றே வந்திருக்கிறாள். கூட்டத்தில் நின்றிருந்த திருமணமானப் பெண்கள், அவளை முறைத்துக் கொண்டும், தங்களுக்குள் வசைபாடிக்  கொண்டுமிருந்தனர். சலம்பலும், குழப்பமும், கூச்சலுமாக அங்கே சம நிலைக் குலைந்து கொண்டிருந்தது. எல்லோரும் ஒட்டுமொத்தமாக அசௌகரியத்தை உணர்ந்தனர். அந்த வீட்டின் ஆட்களும், வந்திருந்த விருந்தாளிகளும் அடைத்திருந்த கதவைப் பார்த்து வெறுப்புடனும், தங்களுக்குள் சலசலத்துக் கொண்டும் பொறுமையின்றி நின்றனர். மாக்தலேன் தன் ஒளிர்வுடன் பூரணமாக ஜீசஸின் அருகில் நின்று கொண்டிருந்தாள். மாசுமருவற்ற அவளது, முகம், தேகம், இன்னும் தன் கன்னித்தன்மை அகலாத உதடுகள் எல்லாமே, தூய்மையின் பொலிவுடன் இருந்தது. கூட்டத்தின் உள்ளிருந்து, கட்டை தாட்டியான, அக்கிராமத்தின்  தலைவரான ஒரு முதியவர் வந்து மேரியை அணுகினார். அவள் கைகளைப் பிடித்து இழுத்து வெளியே போகும்படித் தலையை ஆட்டி எச்சரிக்கை செய்தார்.

    தன்னருகே இருக்கும் மக்களின் முகத்தில், கைகளில், அவர்களின் உடல்மொழியில் வெறுப்பின் நச்சுத்தன்மை உமிழ்ந்து கொண்டிருப்பதை ஜீசஸ் உற்று நோக்கினான். அவன் தன்னிலை இழக்கத் தொடங்கினான். உடல் முழுதும் சிறு சிறுக் கணுக்களாகப் பல்லாயிரம் கூர் முட்கள் குத்திக் கிழிப்பதைப் போலக் காயங்களின் வலி அவன் தலைக்கேறுகிறது, அவன் அதிர்ந்து கொண்டிருந்தான். அந்த முதியக் கிராமத் தலைவரை, சத்தமாய் வசை பாடும் ஆண்களை, நேர்மையான அவர்களின் மனைவிகளை, வெறுப்புடன் பார்க்கும் கன்னிப்பெண்களை எல்லோரையும் ஜீசஸுன் கண்கள் மாறி மாறி நோக்கின. அவனால் தாங்க முடியவில்லை. மூச்சை இழுத்துவிட்டான். இன்னும் எத்தனை நாட்கள் இந்த மனிதர்கள் இப்படியே இருக்கப் போகிறார்கள். நாம் சகோதரர்கள் இல்லையா?. ஜீசஸின் தேகம் மறுபடியும் பலவீனமடையத் தொடங்கியது. அவன் தலையில் பாரம் ஏறக் கண்கள் கலங்கின.

    அவர்களின் முணுமுணுப்புகள் தீவிரமாகின. இருளின் அச்சுறுத்துதல்கள் அவர்களினுள் முளைக்கத் தொடங்கின. நாத்தனேல் ஜீசஸுடம் பேசுவதற்கு முனைந்தான். ஆனால் ஜீசஸ் அவனை விலக்கிக் கொண்டு முன்னே செல்ல எத்தனித்தான். வாசலில் நின்று கொண்டிருந்த கன்னிப் பெண்களையும், அவர்களின் கைகளில் ஊசலாடிக் கொண்டிருக்கும் விளக்கொளியையும் பார்த்தான். அவன் முன்னே செல்லச் செல்ல அவர்கள் விலகி வழிவிட்டனர். அவர்களுக்கு மத்தியில் நின்று ஜீசஸ், தன் கைகளை வான் நோக்கி உயர்த்தினான். "கன்னிகளே! என் சகோதரிகளே! நம் தேவன் என் இருதயத்திலிருந்து, அவரது அன்பானச் சொற்களை எனக்களித்து என்னைப் பேச வைக்கிறார். என் மூலம் அவர் நிகழ்த்தும் வார்த்தைகளைச் செவி கூர்வீர்களாக! இந்தப் புனித இரவில், என் சகோதரிகளே! உங்கள் இருதயத்தைத் திறந்திடுங்கள். என் சகோதரர்களே! கொஞ்சம் அமைதியாகுங்கள். நான் உங்களிடம் பேச விளைகிறேன்!"

    சஞ்சலத்துடன் அவர்கள் அவனைப் பார்த்தனர். அவனது அழைப்பு உண்மையில், ஆண்களிடம் இப்போது வெறுப்பை உண்டாக்கியது. அவர்கள் கோபமாக நின்று கொண்டிருந்தனர். பெண்கள் ஏதும் பேசாமால் சோகச்சாயம் பூசிக் கொண்டுத் தரையைப் பார்த்தனர். யாரும் எந்தக் குரலும் எழுப்பவில்லை. இரு பார்வையற்ற இசைக்கலைஞர்கள், முற்றத்தின் ஒரு ஓரத்தில் தங்களின் நரம்பிசைக் கருவியை மீட்டித் தூண்டிக் கொண்டிருந்தனர். அதன் தந்தி அசைவுகளின் லயம் அங்கிருந்து கிளம்பி சூழலுக்குள் ஒரு அனிச்சம் போலக் குழைந்து ஒழுகியது.

    "சகோதரிகளே! நம் தேவனின் சொர்க்க ராஜ்ஜியம் எவ்வாறு இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அது ஒரு  திருமண மேடை. நம் தேவனே அதில் மணமகன். அத்திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது இல்லையா! மனிதகுலம் மொத்தத்தையும் அவர் அதற்காக அழைக்கிறார். என்னை மன்னியுங்கள், சகோதரர்களே! என்னிடம் கடவுள் இப்படித்தான் பேசுகிறார். கதைகளின் வழியாக. ஆகவே நானும் அக்கதையையே உங்களுக்கு அளிக்கிறேன்.

    "முன்னொரு சமயம், ஒரு கிராமத்தில், ஒரு திருமண நிகழ்வு நடந்தது. பத்து கன்னிமார்கள் விளக்கேந்தி ஒளிபொருத்தி வாசலில் நின்றனர். அதில் புத்திசாலியான ஐந்து கன்னிகள், விளக்கு எரிப்பதற்கான எண்ணையையும், கையோடு எடுத்து வந்திருந்தார்கள். ஆனால் மற்ற ஐந்து முட்டாள் கன்னியர்களோ வெறும் விளக்கை மட்டும் ஒளிர்வித்துக் கொண்டு வந்திருந்தார்கள், அவர்களிடம் மேலதிகமாக எண்ணெய் இல்லை. அவர்கள் வெகு நேரமாக மணமகனின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். அந்த மணமகன் வருவதற்கு இன்னும் தாமதமானதால், அவர்கள் சோர்வுற்று அங்கேயே உறங்கிப் போயினர். அந்த நாளின் நள்ளிரவில், அந்த சத்தம் கேட்டு அவர்கள் அலறிக் கொண்டு எழுந்தனர். "இதோ நம் மணமகன் வந்து கொண்டிருக்கிறான்! சீக்கிரம் ஓடிப் போய் அவனை வரவேற்கச் செல்லுங்கள்" அந்தப் பத்துக் கன்னியர்களும் ,தங்கள் விளக்குகளை ஏந்திக் கொண்டு அவசர அவசரமாகக் கிளம்ப ஆயத்தமாகினர். ஆனால் அந்த ஐந்து முட்டாள்களிடம் எண்ணெய் இல்லை. அவர்கள் என்ன செய்வது என்று பதைபதைத்துக் கொண்டு மற்ற ஐந்து கன்னிமார்களிடம் தங்களுக்குக் கொஞ்சம் எண்ணெய் தரும்படிக் கெஞ்சினர். எங்களின் விளக்குகள் கூடிய சீக்கிரம் எண்ணெய் இல்லாமல் அணைந்துவிடும் சகோதரிகளே! தயவு செய்து உதவுங்கள்" என்று கேட்டனர். அந்தப் புத்திசாலிப் பெண்களோ, தங்களிடமும் எண்ணெய் வேறு இருப்பு இல்லை என்றும், அவர்களிடம் போய் எடுத்து வருமாறும் கூறிக் கொண்டு தங்களுக்குள் குசுகுசுத்துக் கொண்டனர். இந்த முட்டாள்களோ எண்ணெய்க்காக அங்கும் இங்கும் ஓடி அலைந்தனர். சரியாக அந்தத் தருணத்தில் மணமகன் உள்ளே வந்தான். அந்தப் புத்திசாலிப் பெண்கள் அவனை வரவேற்று, அழைத்துச் சென்றுக் கதவை இறுக்கிச் சாத்திவிட்டனர்.

    சிறிது நேரம் கழித்து, அந்த முட்டாள் பெண்கள் விளக்கை ஒளிர்வித்து ஓடோடி வந்தனர். ஆனால் கதவு அடைத்திருந்தது. அவர்கள் கதவைத் திறக்கும் படி, வெளியே நின்று கொண்டு மன்றாடினர். உள்ளே இருந்த புத்திசாலிக் கன்னியர்கள், அவர்களைக் கேலி செய்து நகைத்தனர். "உங்களுக்கு சரியான பாடம் கிடைத்தது. இனிமேல் இந்தக் கதவு திறக்காது! இங்கிருந்து போய்விடுங்கள்!" ஆனால் அந்த ஐந்து பேரும் வெளியில் நின்று கதறி அழுதனர், பிச்சை கேட்பதைப் போலக் கெஞ்சிக் கூத்தாடினர். கதவைத் திறங்கள்! கதவைத் திறங்கள்! கதவைத் திறங்கள்!"

    ஜீசஸ் கதை சொல்வதை நிறுத்தினான். திரும்ப அந்தக் கிராமத் தலைவரை, விருந்தாளிகளை, நேர்மையான இல்லத்தரசிகளை, விளக்கை ஏந்திக் கொண்டு நிற்கும் கன்னிமார்களை, என ஒவ்வொருத்தராக ஜீசஸ் நோட்டமிட்டான். பின் வெறுமனே சிரித்தான்.

    "அதற்குப் பிறகு என்னாயிற்று/" நாத்தனேல் தன் திறந்த வாய் மூடாமல் ஆர்வத்துடன் கேட்டான். அவனுடைய எளிய மந்தமான மனம், அமைதியின்றிக் குழம்பியது. "துறவியே! சொல்லுமைய்யா! அதற்குப் பிறகு என்னதான் நடந்தது?"

    "நீ இந்த நிலைமையில் இருந்தால் என்ன செய்திருப்பாய் நாத்தனேல்?" ஜீசஸ் கேட்டான். அவனது நீண்ட மயக்கும் விழிகள் அவனை உற்று நோக்கியது. " நீ அந்த மணமகனாய் இருந்தால் உண்மையில் உன்னால் என்ன செய்திருக்க முடியும்?"

    நாத்தனேல் எதுவும் பேசவில்லை. அவனால் அதனை இன்னும் தெளிவாக யோசித்துச் சொல்ல முடியவில்லை, தான் என்ன செய்திருப்பேன் என்று! ஒரு சமயம் அவர்கள் அப்படியே வெளியே தான் கிடக்க வேண்டும், அது தான் சரி என்று நினைத்தான். ஆனால் மறுசமயம் அவர்களின் அலறல்களையும், அழுகையும் கேட்கும் அவன் மனம் அவர்களுக்காக வருந்தியது. அவர்களை உள்ளே அழைத்திட வேண்டும் என்று நினைத்தது.

    "சொல்! நாத்தனேல்! உன்னால் என்ன செய்திருக்க முடியும், நீ மட்டும் அந்த மணமகனாக இருக்கும் பட்சத்தில்" ஜீசஸ் மறுபடியும் கேட்டான். விடாப்பிடியாக, அதே நேரம் ஆதுரத்துடன், ஜீசஸின் கனிவனாப் பார்வை அந்த எளியக், கள்ளங்கபடமற்ற மனிதனின் கண்களை நோக்கியது.

    "நான் கதவைத் திறப்பேன்" அவன் தன் குரலைத் தாழ்த்திக் கொண்டு யாருக்கும் கேட்டு விடுமோ என்ற பயத்தில் பதிலளித்தான். தனக்கு எதிரே நிற்கும் இந்த மனிதனின் கண்களைத் தன்னால் எக்காலத்திலும் மறுக்க முடியாது என்பதை அவன் உள்ளூற உணர்ந்தே அந்தப் பதிலைச் சொன்னான்.

    "நான் என் மனமார உன்னை வாழ்த்துகிறேன், என் அன்பே! நாத்தனேல், என் சகோதரா" ஜீசஸ் மகிழ்ச்சி பொங்கத் தன் கைகளை உயர்த்தி அவனை ஆசிர்வதித்தான். "இந்தக் கணம், ஆம்! என் நேசத்திற்குரியவர்களே! கேளுங்கள்! இந்தக் கணத்தில் உங்களில் யாரெல்லாம் உயிரோடு இருக்கிறோம் என்று நம்புகிறீர்களோ, அவர்களுக்காக சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும், நம் மணமகன்! நம் தேவனும் நீங்கள் உறுதியாக எதைச் சொன்னீர்களோ, அதையே செய்விப்பான். அவன் தன் பணியாட்களை அனுப்பி உங்களுக்காக, அவனது ராஜ்ஜியத்தின் கதவுகளைத் திறப்பான். "ஆம்! இது ஒரு திருமண விழா" அவன் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தான். "நாம் உண்போம், குடிப்போம், நம் களிப்பைப் பகிர்வோம்!" இந்த முட்டாள் கன்னிக்காக உங்களின் கதவுகளைத் திறங்கள் எம்மக்களே! அவள் வெகுதூரம் ஓடிக் களைத்து உங்களிடம் வந்திருக்கிறாள். அவள் பாதங்களைக் கழுவி அவளை ஆற்றுப்படுத்துங்கள்."

    மாக்தலேனின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. ஜீசஸுன் அருகில் நின்றிருந்த அவளது உதடுகள் தழுதழுக்க, அவளின் நீண்ட கண்களிலிருந்து, கண்ணீர்த்துளிகள் இரு கன்னங்களையும் தாண்டிச் சிந்தியது. அந்த வார்த்தைகளை உச்சரித்த மனிதனின் உதடுகளைத் தன் உயிர் உருக முத்தமிட வேண்டும் என்று அவளது உள்ளம் நாடியது. நாத்தனேல் தலை முதல் கால் வரை, அவனது ஆசிர்வாதங்களை உட்கிரகித்துக் கொண்டான். அவனது தேகம் இன்னும் அதிர்வுகளை நிறுத்தவில்லை. ஆனால் அந்தக் கிராமத்தலைவரின் முகம் வெளிர்ந்து, வெறுப்பில் ஒளியிழந்திருந்தது.

    நீ சட்டத்தை எதிர்க்கிறாய், புரிகிறதா இளைஞனே! அவரது கடுமையானக் குரல் உயர்ந்தது. 

    "இல்லை! சட்டம் என் இதயத்தின் பாதையை எதிர்க்கிறது", ஜீசஸ் அமைதியாகப் பதிலளித்தான்.

அங்கு மணமகனின் வருகை வரும்வரை அவன் பேசிக்கொண்டிருந்தான்.  நன்றாக உடுத்தி, நறுமணத்தைலம் பூசிக்கொண்டு, தலையில் தன் சுருள் முடியைச் சுற்றி பச்சைச்சரமாய், பூக்களைச் சூடிக் கொண்டு அவன் வந்தான். நாணத்தால் அவனது முகம் சிவந்திருந்தது. ஒரே உந்தில் கதவைத் திறந்து அவன் தன்னை வெளிப்படுத்தினான். விருந்தினர்கள் அவனைத் தொடர்ந்து உள்ளே சென்றனர். மேரியைக் கைப்பிடித்துக் கொண்டு ஜீசஸும் உள்ளே நுழைந்தான்.

ஞாயிறு, 13 மார்ச், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் - 69

     

Author: Nikos Kazantzakis

    வழிப்பாதையில் ஆலிவ் மரங்கள் அடர்ந்த ஒரு பகுதியில், அம்மரங்களுக்குக் கீழே அமர்ந்து அவர்கள் அன்றைய இரவைக் கடக்க முடிவு செய்திருந்தனர். நாளின் அயர்வில் கால்கள் நீட்டி ஒருக்கழித்து உறங்கத் தயாராகினர். அவர்களுடன் யூதாஸ் படுக்கவில்லை. அவன் அமைதியிழந்திருந்தான். சற்று தொலைவில் இருந்த ஒரு சிறியப் பாறைக் குன்றத்திற்குப் பின்புறம் தனியாக எரிச்சலுடன் அமர்ந்திருந்தான். குழுவில் ஜீசஸ் இன்னும் உறங்கவில்லை. மற்றவர்களின் நீண்ட மூச்சுச் சப்தத்திற்கு இடையில் அவன் தனித்திருந்தான். அவர்கள் இருவருமே ஏதோ ஒரு வகையில் அந்த இரவை அசௌகரியமாக உணர்ந்தனர். வானத்தின் நட்சத்திரங்களில் சில மின்னாமினுங்கிகள், இங்கும் அங்கும் பயணித்து, ஒரு தீப்பொறி போல ஒளிர்ந்து அணைகிறது. அருகிலிருந்த ஆலிவ் மரத்தின் வேர் ஆழமாக நிலத்தில் ஊன்றி, மண்ணைப் பிறாண்டி வெளியேத் தெரிகிறது. கிளைகளின் தலைவிரி கோலம், இருளினுள் மாய உருவம் கொண்டிருந்தது. நிலத்திலிருந்து இணைந்துப் பிணைந்த அடிமரம் பின் விரிந்துக் கிளைத்த கிளைகள், கிளைகளிலிருந்து நாலாபுறமும் துளிர்த்தும், காய்ந்தும் தொங்கும் இலைகள், உருண்டைக் கொத்துக்களாய்க் கருஞ்சிவப்பு நிறக் கனிகள், வெளிர்பச்சை நிறக் காய்கள். நன்கு வயதான அம்மரத்தின் வேர்ப்பட்டைகளில் இரு மரப்பல்லிகள் அசையாமல் காத்திருக்கின்றன. அவைகள் தங்களின் இரையை எதிர் நோக்கி அமைந்திருக்கின்றன. ஒன்று வேர் நுனியிலும், இன்னொன்று வேர், தண்டாக கிளம்பும் அடிமரத்தின் தொடக்கத்திலும் இருக்கிறது. அவைகளின் கண்களில் கூட சிறிதும் அசைவில்லை. ஒன்றின் சாம்பல் நிறச் செதில்களில் ஒரு எறும்பு ஊறி ஏற முயற்சிக்கிறது. பல்லியின் நாக்கு சட்டென அதைக் கவ்விக் கொண்டு சவைக்கிறது. எறும்பின் உடல் முறியும் சப்தம். பின் அதே அசைவின்மை. அதன் செதில்களில், கண்களில் சின்ன சிலிர்ப்பு, பின் மறுபடியும் அது அசைவற்று அமிழ்கிறது. காற்றின் நீடித்தப் பீறிடல். அடிமரத்தின் நுனியில் இருந்த பல்லி இப்பொழுது மேலேறி மரத்தின் ஒரு பொந்து வழியே உட்குழிந்து உள்ளே சென்று விட்டது. ஜீசஸ் பெருமூச்சுகளுடன் புரண்டு படுத்தான். உறக்கமற்ற இரவு நீண்டு கொண்டிருந்தது. காற்றின் சலனம் அவனது அமைதியைக் குலைத்தது. யூதாசுக்கு அவனுடன் பேச வேண்டும், அப்பொழுதுதான் அவன் தன் மனத்திண்மையை மீட்டெடுக்க முடியும். அல்லாது தனக்கானப் பாதையில் இடரும் கற்களைப் பற்றியப் புரிதல் அவனுக்குச் சரியாகத் தெரியாமல் போகலாம். இன்றைய நிகழ்வு அவனைப் பெரிதும் தொந்தரவு செய்து கொண்டிருந்தது. யூதாஸ் ஜீசஸுடன் அதைப் பற்றியத் தன் தெளிவான அபிப்ராயத்தையும், நம் குழுவின் உண்மையான நோக்கம் என்ன என்பதை அறிந்து கொண்டு தான் எவ்வகையில் முன்னேறிச் செல்லவேண்டும் என்பதைப் பற்றியும் பேச நினைத்திருந்தான். ஒரு வியாபாரியின் தராசினைப் போல தம் இருவரின் எண்ணங்கள், செயல்கள் சரிவிகிதமாக அளக்கப்படுதல் அவசியம் என்பதில் அவன் உறுதியாக இருந்தான். சக உயிர்களை வஞ்சித்து, சுகபோகம் அனுபவிக்கும் ஒரு குற்றவாளியான அந்தக் கிழவனுக்கு, அதற்கானத் தக்க தண்டனை நரகத்தில்  வழங்கப்படும் என்று உணரும் வகையில் அவன் மகிழ்ச்சியாகக் கைகளைத் தட்டி ஆரவாரித்தான், "அவனுக்கானது சரியாக வழங்கப்பட்டுள்ளது" என்று. அப்பொழுது அவனது இடதுபுறம் கடைசியில் அமர்ந்திருந்த ஜீசஸுன் கண்கள் அவனைத் தொட்டு மீண்டதை அவன் கவனித்தான். அந்தப் பார்வை வெகுரகசியமாக ஒரு வசையினைப் போல ஒரு நொடி அவனை வெறித்துச் சென்றது. அதுதான் அவனை வெறுப்பேற்றி, வேதனைப்படுத்துகிறது. "இப்பொழுது வரைத் தன்னுள் நொதித்துக் கொண்டிருக்கும் அப்பார்வைக்கான அர்த்தம் என்ன? இதுவரை எங்களுக்குள் எந்தக் கையளித்தலும் இல்லை. எங்களுக்கிடையிலானக் கணக்குகள் எப்பொழுதும் ஒரே அளவை தான். முற்றுப் பெறாத பாதி வார்த்தைகளோ அல்லது இது போல ரகசியமானக் கண்டிக்கும் பார்வைகளோ இந்த யூதாஸ் ஒருபோதும் விரும்புவதில்லை"

"வா! யூதாஸ், நான் உனக்காகவே காத்திருந்தேன்."

    "மேரியின் மகனே நான் மற்றவர்களைப் போல உன் சொற்களில் பொருந்திப் போகிறவன் அல்ல", செந்தாடிக்காரன் நேரடியாக அவனைப் பார்த்து முறைத்தான். எனக்கு உன் அன்பானவனான, இந்தச் சிறுவன் ஜானைப் போல, கன்னித்தன்மையோ இல்லை நன்மையைப் பற்றி அறிந்துகொள்ளும் எண்ணங்களோ கிடையாது. இன்னொருத்தன், இந்தப் பகல்கனவு காண்பவனும், காற்றின் திசைக்குத் தன் புத்தியையும் மாற்றிக் கொள்ளும், சிதறிய எண்ணங்களும், எந்த உறுதிப்பாடுகளும் இல்லாத மாட்டு மூளைக்காரன் ஆண்ட்ரூவினைப் போல என்னை எண்ணி விடாதே. நான் சற்றுக் கடுமையானவன். எந்த சமரசமும் கொள்ள விரும்பாத ஒரு காட்டுமிருகம் நான். முறைதவறிப் பிறந்தவன், என் தாய் என்னைப் பிஞ்சிலேயே ஒரு புதர்க்காட்டில் வீசி விட்டுச் சென்றுவிட்டாள். அங்கு நான் ஓநாய்களின் பாலைக் குடித்து வளர்ந்தேன். அதனால் நான் கடினமும், முரட்டுத்தனமும் கொண்ட ஒரு நேர்மையான விலங்கு. நான் யாரை நேசிக்கிறேனோ, அவன் காலடியில் ஒரு தூசாகக் கூடக் கிடப்பேன். வெறுப்பவர்களைக் கொல்வதில் எந்த பச்சாதாபமும் காட்டமாட்டேன்.

    அவனது திடமானக் குரல் உயர்ந்து எதிரொலித்தது. கண்கள் இருளினுள் கனன்று கொண்டிருந்தது. அதிர்ந்து கொண்டிருக்கும் அவனது தலையில் தன் கைகளை வைத்து அமைதிப்படுத்த முயன்றான் ஜீசஸ். ஆனால் செந்தாடிக்காரன் தன் தலையை அசைத்து அவனது கைகளை விலக்கினான்.

    அவனில் அழுந்திக்கொண்டிருந்த சொற்கள் ஒன்று ஒன்றாக வெளிவந்து கொண்டிருந்தது. "நான் என் அன்பிற்குரியவர்களையும் கொல்வேன், அவர்கள் உண்மையானப் பாதையிலிருந்து தவறிச் செல்ல நினைத்தால்" 

"எது உண்மையானப் பாதை, யூதாஸ், என் சகோதரா?"

"இஸ்ரவேலத்தின் விடுதலை"

    ஜீசஸ் எந்தப் பதிலும் பேசாமல் தன் கண்களை மூடிக் கொண்டான். இரு தீப்பிழம்புகள் அவனுக்கு முன் தழலாடின, அது கொஞ்சம் கொஞ்சமாக அவனில் பற்றி எரிகின்றன. யூதாஸின் சொற்களின் தழலில் அவன் உருகிக் கொண்டிருந்தான். "ஆம்! விடுதலை! இஸ்ரவேலத்தின் விடுதலை. ஆனால் ஏன் இஸ்ரவேல், எதற்காக இஸ்ரவேலத்திற்கு மட்டும்? நாம் அனைவருமே சகோதரர்கள் அல்லவா?

    செந்தாடிக் காரன் ஜீசஸின் பதிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான். யூதாஸ் அவனைப் பிடித்து உலுக்கி, எழுப்ப முயன்றான். "உனக்குப் புரிகிறதா? நான் என்ன சொல்கிறேன் என்று உனக்குப் புரிகிறதா?"

    "ஆம்! நான் புரிந்துகொண்டேன்" கண்களைத் திறந்த ஜீசஸ் பதிலுரைத்தான்.

    "நான் உன்னிடம் நேரடியாகக் கேட்கிறேன், எந்தக் கதைகளுமின்றி, எந்தப் புதிர்களுமின்றி நேருக்கு நேராக உன்னைக் கேட்கிறேன். நான் யார்? என் விருப்பம் என்ன?  என்பதை நீ அறிந்து கொண்டு எனக்கு பதிலளி. என்னை உன்னுடன் அழைத்துச் செல்ல நீ விரும்புகிறாயா இல்லையா? எனக்கது தெரிய வேண்டும்.

"என்னுடன் நீ வர வேண்டும், யூதாஸ், என் அன்புச் சகோதரனே!"

    "ம்ம்! நான் உன்னிடம் வெளிப்படையாக என் மனத்தில் உள்ளதைப் பற்றி ஒளிவுமறைவின்றிப் பேச விளைகிறேன். உனக்கு ஒரு விஷயம் சரியென்று தோன்றுகிறது. ஆனால் எனக்கு அது தவறாகத் தெரிகிறது. நான் அதைச் சரியாக விளக்குகிறேன், அப்போது உன் மனதிலிருக்கும் சந்தேகங்கள் தெளிவுறும். எல்லோரும் நீ போதிப்பதை வாயைத் திறந்து கொண்டு ஆச்சர்யத்தோடும், அன்போடும் ஆமோதித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் என்னால் முடியாது. நான் யாருக்கும் அடிமையில்லை., சுதந்திரமானவன். நான் எனக்கான வழியிலேயே சிந்திப்பேன். அதனால் உன் பாவனைகளை அகற்றிச் சரியாக அதனை எனக்கு விளக்குவது, உனக்கு நல்லது"

    "ஆம்! சுதந்திரம்!, நானும் அதனையே என்னுள்ளும் விளைகிறேன், யூதாஸ்"

    செந்தாடிக்காரன் சட்டென அவன் தோள்களில் தன் வலுவானக் கைகளை வைத்து அழுத்திப் பேசத் தொடங்கினான். ஆம்! அதுதான் சரி! அப்படியென்றால் இஸ்ரவேலத்தை ரோமானியர்களிடமிருந்து விடுவிப்பதே உன் விருப்பமும்?"

"பாவங்களிலிருந்து நம் ஆன்மாவை விடுவிப்பது"

    அவன் தோள்களிலிருந்து கைகளை விலக்கிய யூதாஸ், அவனைப் பார்த்துக் கொண்டே அருகிலிருந்த ஆலிவ் மரத்தின் அடிப்பட்டையில், தன் கை முஷ்டியினால் ஆத்திரம் தீரக் குத்தினான்."இங்குதான் நம் வழிகள் பிரிகின்றன", அவனது குரல் ஒரு ஓநாயைப் போல ஊளையிட்டது. ஜீசஸுன் முகத்தை ஏறிட்டு வெறுப்புடன் பார்த்தது, "முதலில் நம் உடல் ரோமானியர்களிடமிருந்து விடுபடவேண்டும், அதன் பிறகே நம் ஆன்மா பாவத்திலிருந்து விடுபடும். இது தான் பாதை. உன்னால் இப்பாதையில் வரமுடியுமா? கூரையிலிருந்து தொடங்கி ஒரு வீட்டைக் கட்ட முடியாது. நாம் அடித்தளத்திலிருந்துத் தொடங்க வேண்டும்."

"நமது ஆன்மாவே அடித்தளம் யூதாஸ்"

    "இல்லை, நமது உடலே அடித்தளம்-அதிலிருந்தே நாம் தொடங்குகின்றோம். நன்றாகக் கவனி மேரியின் மகனே! நான் சொன்னதைத் திரும்பவும் உனக்குச் சொல்கிறேன். கவனித்துக்கொள்! இந்தப்பாதையைத் தேர்ந்துகொள். நான் சொல்வதைக் கேள்! நான் எதற்காக உன்னுடன் இணைந்து வந்து கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறாய்? உனக்கானச் சரியானப் பாதையை காட்டுவதற்காகவே."

    பக்கத்திலிருந்த ஆலிவ் மரத்தடியில் படுத்திருந்த ஆண்ட்ரூ, சத்தம் கேட்டு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தான். தீவிரமாகப் போய்க் கொண்டிருக்கும் அச்சப்தங்களின் கூச்சல் அவனை முதலில் பயமுறுத்தியது.அதில் ஒன்று துறவியின் அமைதியானக் குரல். மற்றொன்று கடுமையாக, கோபத்தில் பேசும் முரட்டுக்குரல். அவனால் சரியாக என்ன நடக்கிறது என்பதை யூகிக்க முடியவில்லை. அவன் கடுவாயைக் கண்ட மான் போல நடுக்கமுறத் திடுக்கிட்டு அசையாது அச்சப்தத்தைக் கூர்ந்தான். "இரவில் யாரேனும் வந்துத் துறவியினைத் தொந்தரவு செய்கிறார்களா? நமது ஆசிரியர் எங்கு சென்றாலும், அங்குள்ள ஆண்களும், பெண்களும், ரோகிகளும், பாவப்பட்டத் தொழிலாளிகளும், குழந்தைகளும் அவரது வருகையை அவ்வளவு விரும்புகின்றனர். அவரது சொல்லிற்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணிக்கக் காத்துக் கிடக்கின்றனர். அதே நேரம், ஊரிலுள்ள, முக்கியஸ்தர்கள், பணக்காரர்கள், ஏழைகளின் உழைப்பைச் சுரண்டி வாழ்க்கை நடத்தும் காரியக்காரர்கள் எல்லாம் அவரை வெறுக்கின்றனர். தங்கள் கூழ்ச்சியினால், அவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தவும், குற்றங்கள் சுமத்தவும் முயல்கின்றனர். இந்தப் படுபாவிகள் நம் குருவிற்குத் தீங்குவிளைவிக்க, ஏதும் போக்கிரியை அனுப்பி விட்டிருப்பார்களோ? என்று பதைபதைத்தான். அவன் அப்படியே சத்தமிடாமல் மெல்ல ஊர்ந்து, அக்குரல்களின் திசை நோக்கிச் சென்றான். அச்சூழலில் சிறிதாகச் சலனம் ஏற்படுவதை செந்தாடிக்காரன் உணர்ந்தான். அவனது அழுத்தமானக் காலடிகளை வைத்து முன் நோக்கி உற்றுப் பார்த்தான்.

"யார் அது" அவன் விளித்தான்.

    ஆண்ட்ரூவிற்கு அக்குரல் யாரென்று புரிந்தது. "யூதாஸ், இது நான் தான். ஆண்ட்ரூ"

    "திரும்பிப் போய்ப் படுத்துக் கொள், ஜோனாவின் மகனே! நாங்கள் தனியாகப் பேச வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது"

"போய் உறங்கு, என் அன்பே" ஜீசஸும் சொன்னான்.

    யூதாஸ் தன் குரலைத் தாழ்த்திக் கொண்டான். அவனது ஆழமான சுவாசத்தின் சூட்டை எதிரே ஜீசஸ் பலமாக உணர்ந்தான்.

    "உனக்கு ஞாபகம் இருக்கிறதா? பாலைவனத்தில் என்னை நான் உன்னிடம் வெளிப்படுத்தினேனே ! உன்னைக் கொல்வதற்காக எங்களின் சகோதரக் குழு என்னைத்தான் நியமித்திருந்தது. ஆனால் கடைசி நொடியில் நான் என் மனதை மாற்றிக் கொண்டு என் கத்தியைத் திரும்ப உறையில் போட்டுவிட்டு, மடாலயத்திலிருந்து ஒரு திருடனைப் போலத் தப்பிச்சென்றேன்.

    "எதனால் நீ உன் மனதை மாற்றிக் கொண்டாய, யூதாஸ், என் சகோதரனே. நான் தயாராகவே இருந்தேன்" 

"நான் காத்திருக்க எண்ணினேன்"

"எதற்காகக் காத்திருக்க?"

    யூதாஸ் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தான். "ஒரு வேளை நாங்கள், இஸ்ரவேலத்து மக்கள் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் அந்த ஒருவன் நீதானா என்று அறிந்து கொள்வதற்காக" என்று திடீரென்று ஜீசஸுன் கண்களை ஆழமாக உற்று நோக்கிக் கூறினான்.

    உடலதிர பின்னால் இருந்த ஆலிவ் மரத்தின் மேல் அப்படியே சாய்ந்தான் ஜீசஸ். அவனது கை கால்கள் நடுங்கத் தொடங்கின.

    "நான் இதில் அவசரப்பட விரும்பவில்லை. ஏனென்றால் எங்களுக்கான மீட்பனை நான் கொல்லத் துணியவில்லை. ஆம்! நான் அதை ஒருக்காலும் செய்ய மாட்டேன்." அவனது குரல் தழுதழுக்க கண்ணீர் சிந்தினான். தன் நெற்றி வியர்வையை அழுத்திச் சிந்திக் கொண்டு திரும்பவும் பேசத் தொடங்கினான். "உனக்குப் புரிகிறதா? அவன் தன் உடலும் உள்ளமும் நோக உள்ளார்ந்துக் கதறினான். யாரோ அவனது கழுத்தைப்பிடித்து நெரிப்பதைப் போல தாடை இறுகி, தோள்பட்டைகள் உயர்ந்தன. "உனக்குப் புரிந்ததா? நான் அதனை ஒருக்காலும் செய்ய மாட்டேன்"

    அவன் உடலைக் குலுக்கித் தன்னைச் சமப்படுத்த முயன்றான். "ஓருவேளை அவனுக்குக் கூடத் தான் யார் என்பது தெரியாமல் இருக்கலாம், நான் எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன். அதனால் நான் பொறுமையாகக் காத்திருக்கிறேன். அவன் உயிரோடு இருக்க வேண்டும். உயிரோடு இருந்தால் தான் அவன் என்ன சொல்கிறான், செய்கிறான், என்பதை நாங்கள் அறிந்து கொள்ள முடியும். அவன் நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அந்த ஒருவனாக இல்லாத பட்சத்தில் அவனைக் கொன்றுக் கிழித்துத் தொங்க விடப் பெரிதாக நேரம் தேவைப்படாது. இதைத் தான் எனக்குள் நானே  சொல்லி கொண்டிருக்கிறேன். அதனால்தான் நான் உன்னை இன்னும் உயிரோடு விட்டு வைத்திருக்கிறேன்."

    கொந்தளித்துக் கொண்டிருந்த அவன் இதயம் சற்று அமைதிப்பட்டது. அவன் அங்கும் இங்கும் கற்களை ஆழமாக மிதித்து நடந்தான். வானத்தைப் பார்த்து வெறித்தான், நிலத்தில் காறி உமிழ்ந்துத் தொண்டையை செருமிக் கொண்டான். ஜீசஸை நோக்கி வந்தவன் திடீரென அவனைத் தன் கைகளில் பிடித்து இறுக்கிக் கொண்டான். உதட்டைச் சுழித்துக் கசப்புடன் அவன் முகத்தைப் பார்த்தான். அவனுள் அவநம்பிக்கைத் தொற்றிக் கொண்டது. "எனக்குத் தெரியவில்லை, உன்னை எப்படி அழைப்பது என்று, நீ மேரியின் மகனா? தச்சனின் மகனா? இல்லை, டேவிட்டின் மகனா? உன்னைப் பார்க்கையில், என்னால் இன்னும் இதில் நீ யாரென்று அறிந்து கொள்ளமுடியவில்லை. ஆனால் இதில் ஏதாவது ஒன்றுதான் நீ என்று என் உள்ளம் சொல்கிறது. நாம் இதற்கானப் பதிலைக் கண்டறிவோம். இதனால்தான் நம் இருவருக்குமே விடுதலை. இல்லை! இந்த உறுதிப்பாடின்மை இப்படியேப் போய்விடாது. இதோ! உன்னைப் பின்தொடரும் மற்றவர்கள். நீ இவர்களைப் பார்க்காதே! இவர்கள் பாவப்பட்ட ஆட்டு மந்தைகள். உன்னைக் கவர்வதற்காகவும், அனுதாபம் தேடுவதற்காகவும் உன்னை நோக்கி வரும் பெண்களைப் பார்க்காதே!, எப்படியானாலும் அவர்கள் வெறும் பெண்கள். அவர்களுக்கு இருதயத்தை மட்டுமே ஆண்டவன் கொடுத்திருக்கிறான். மூளையை அல்ல. நமக்கு அதை வைத்து எந்தப் பிரயோஜனமுமில்லை. இது நாம், நம்மிருவர் மட்டுமே கண்டறிய வேண்டிய ஒன்று. இந்த ஜ்வாலையில் எரிவதன் மூலம்,  நீ இஸ்ரவேலத்தின் கடவுளா இல்லை சாத்தானா என்று நிச்சயமாகத் தெரிந்து விடும். ஆம்! உறுதியாகச் சொல்கிறேன், நாம் தான் இந்தக் கனலெரியும் கங்குக் குழியினுள் குதிக்க வேண்டும். வேறு வழியில்லை."

    கலங்கிய விழிகளுடன், தடுமாற்றத்துடன் ஜீசஸ் பேசத் தொடங்கினான். "இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும், யூதாஸ், என் அன்பே? நம்மால் எப்படி இதன் பதிலைத் தெரிந்து கொள்ள முடியும், எனக்கு உதவி செய்! என் நண்பா!

"அதற்கு ஒரு வழி இருக்கிறது"

"என்ன?"

    "நாம் அந்த ஞானஸ்நானம் செய்து வைக்கும் துறவியான யோவானைக் காணுவோம். அவன் இதற்கு சரியான வழி கூறுவான். அவன் தானே சதா கத்திக் கொண்டிருக்கிறான், "அவன் வருகிறான், வருகிறான்! வந்து கொண்டிருக்கிறான் என்று" அதனால் அவன் உன்னைக் காணட்டும். அவன்  அனுதினமும் அழைத்துக் கொண்டிருப்பவன் நீதானா!, என்பதை அவன் கண்டறியட்டும். நாம் அவனிடம்  போகலாம். நீ உன்னை, உன் உணர்வுகளை சற்று அமைதிப்படுத்து. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குள் யோசிக்கிறேன்"

    ஜீசஸ் கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் மூழ்கினான். அவனது எண்ணங்கள் அவனது வலிகளிற்குள் சென்று கொண்டிருந்தது. எத்தனை முறை இந்தக் கவலை, பழுக்ககாய்ச்சியக் கம்பியைப் போல அவனுள் பாய்ந்து, அவன் அகத்தைச் சிதைத்திருக்கிறது. எத்தனை முறை அந்தக் கூரிய நகங்களால் அவன் மூளைக்கூழ் பிளந்து, வாயில் நுரைதப்ப, கைகால்கள் இழுத்து வெட்டு வந்துத் தன்னிலை அழிந்துத் தரையோடுத் தரையாகக் கிடந்திருப்பான். அவன் பேய்களாலும், சாத்தான்களாலும் ஆட்கொள்ளப்பட்டுப் பித்துப் பிடித்து அலைகிறான் என்று, மனிதர்கள் அவனருகில் வரக் கூடப்பயந்து ஓடினார்கள். ஆனால் அவனோ இன்று  தேவனின் ஏழாவது சொர்க்கத்தில் இருக்கிறான். அவனது உள்ளம் தான் இருந்த வலிகளின் கூண்டினுள்ளிருந்து வெளியேப் பாய்ந்து, வானத்திற்கு உந்திப்பறக்கிறது. அங்கு தேவனின் கதவைத் தட்டி அவனை அழைத்துக் கேட்கிறது, "நான் யார்? நான் ஏன் பிறந்தேன்? இந்த உலகைக்காக்க நான் என்ன செய்ய வேண்டும்? எது அதற்கான குறுகிய பாதை? ஒரு வேளை என் மரணம் தான் அதற்கான வழியா?"

    அவன் கண்கள் திறக்காது தன் கைகளை வான் நோக்கி உயர்த்தினான். யூதாசின் முழு உடலும் அவன் மேலே சாய்ந்தது.

    "யூதாஸ், என் சகோதரா, என்னருகில் படுத்துக் கொள். நம் தேவன் ஒரு ஆழ்ந்த உறக்கமாய் நம் மேல் கவிந்து நம்மை அணைத்துக் கொள்ளட்டும். நாளை விடியலில் சீக்கிரமே, நாம் தேவனின் ஆணைப்படி, யூதேயாவிலிருக்கும் அந்த தீர்க்கதரிசியைக் காணச் செல்வோம். நம் தேவனின் நோக்கம் எதுவோ அது நடந்தேறட்டும். நான் தயாராக உள்ளேன்."

"நானும் தயாராக இருக்கிறேன்",

     அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து கொண்டு, அம்மரத்தின் அடியில் படுத்துக் கொண்டனர்.

    மிகுந்த சோர்விலிருந்த இருவரும் படுத்தவுடன் உறங்கிவிட்டனர். அடுத்த நாள் காலை விடியல் துளிர்க்கும் பொழுது, முதலில் எழுந்த ஆண்ட்ரூ அக்காட்சியைக் கண்டான். அவர்கள் ஒருவரின் கைகளில் இன்னொருவர் தலையை வைத்து, ஒரே உடல் போல ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

    காலை இளஞ்சூரியன் எல்லாவற்றையும் மொட்டவிழ்க்கிறது. ஏரி நீரில் அதன் ஒளிக்கதிர்களின் மினுக்கம், பூமியில் பல்லாயிரம் நட்சத்திரங்கள் முளைத்தைதைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது. வெக்கை எரியும் பாதையின் வழியே செந்தாடிக் காரன் முன்னே சென்று கொண்டிருந்தான். அவனைப் பின்தொடர்ந்து ஜீசஸ் தன் இரு துணைவர்களுடன் வந்து கொண்டிருந்தான். தாமஸ்ஸுன் வியாபாரம் முடியடையவில்லை. விற்பதற்கு இன்னும் பொருட்கள் இருந்ததால் அவன் கிராமத்திலேயேத் தங்கி விட்டான். "மேரியின் மகன் சொல்வது உண்மையில் ஒரு  நல்ல வழிதான்". தாமஸ் தனக்குள் நினைத்துக்கொண்டான். அது நிலைமையின் இருபக்கங்களிலும் இருக்கும் சிறந்ததைக் கோருகிறது. ஏழைகள் தங்கள் வயிறு நிரம்பத் தின்றும், குடித்தும் என்றைக்குமாய் சுகப்படட்டும்...சீக்கிரமே அவர்கள் உழைப்பைக் கைவிட்டுத் தங்கள் கூடைகளை எட்டி உதைக்கட்டும். அது சரிதான்! அதற்குப்பின் தான் இருக்கிறது  சமாச்சாரம், ஆம்! அப்புறம் அவர்களுக்கு என்ன நேரும், அவர்கள் என்ன செய்வார்கள்? என்பதுதான் இவன் வார்த்தைகளில் இருக்கும் சூட்சுமம். கவனம், தாமஸ்! கவனம்! இருபக்கங்களிலும் அதற்கே உண்டானப் பாதகமானச் சூழல் இருக்கிறது. அதனால் எந்த ஒன்றிலும் நாம் சிக்கிக் கொள்ளக் கூடாது. மிக நூதனமாக, நாம் நமக்குப் பாதுகாப்பான வழியைக் கைகொள்ள வேண்டும். நாம் செய்யவேண்டியது, நம் கூடையின் மேல்தட்டில், அதே பழையப் பொருட்களான, சீப்பு, கண்ணாடி, வண்ண நாடாக்கள், அழகு சாதனப் பொருட்களால் நிரப்பிக்  கொள்ள வேண்டும். கூடைக்கு அடியில், நமது முதற்தர வாடிக்கையாளர்களுக்காகவே ஒதுக்கப்பட்ட  தேவனின் சொர்க்க ராஜ்ஜியத்தை ஒளித்து வைத்திருக்க வேண்டும்.....தனக்குள்ளேயே இளித்துக் கொண்டவன் சுமையைத் திரும்பவும் ஏற்றிக் கொண்டான். வெளிச்சம் உருளும் பாதையில், தன் ஊதுகுழலை ஊதிக்கொண்டே மறுபடியும் பெத்சைடாவின் தெருக்களின் வழியே, பூமிக்குத் தேவையானப் பொருட்களைக் கூவி கூவி விற்கத் தொடங்கினான்.

    கார்பெர்னத்தில், பீட்டரும், ஜேக்கப்பும் விடியலுக்கு முன்னேமே கரை திரும்பியிருந்தனர். அவர்களின் வலையில் குவிந்த கொத்துக் கொத்தான மீன்களின் பாரம் அழுந்த, வலுக்கொண்டுக் கரைக்குத் தங்கள் படகுகளை இழுத்து வந்தனர். இதுவே முன்பு நிகழ்ந்திருந்தால், இந்தச் சிறந்த அறுவடைக்கு அவர்களின் மகிழ்ச்சியும், களிப்பும், ஆரவாரமும் இருமடங்காகி இந்த நாளையேக் கொண்டாடித் தீர்த்திருப்பர். ஆனால் இன்று அவர்கள் மனம் இதில் லயிக்கவில்லை. ஒரு சிறு சொல் கூடப் பேசிக்கொள்ளாமல் அமைதியாக வள்ளத்தை ஓட்டிக் கொண்டு வந்தனர். அவர்களின் எண்ணங்கள் கடலுக்கும் வானத்திற்கும் அப்பால் எங்கோ தூக்கியெறியப்பட்டிருந்தது. காலங்காலமாக இந்த ஏரியின் மாயத்தூண்டில்களில் தங்களின் செவுள்கள் தலைமுறை தலைமுறையாக அகப்பட்டுக் கொண்டிருக்கும் விதியை அவர்கள் தங்களின் அகத்தில் அசை போட்டுக் கொண்டிருந்தனர். திரும்பத் திரும்பத் தங்களுக்கு அமையப் பெறாத சிறகுகளைப் பற்றியக் கனவுகளில் அவர்கள் போராடிக் கொண்டிருந்தனர். "என்னடா வாழ்க்கை இது!, வலை வீசி, மீன் பிடித்து, உண்டு உறங்கிப் பின் அடுத்த நாளைக்கும், அதே பழையக் கைக்கும் வாய்க்கும் பிழைக்கும் பாடு. திரும்பத்திரும்ப , நாளுக்கு நாள், வருடம் முழுதும், நம் வாழ்வு முழுமைக்கும். இப்படியேக் காலம் கடத்தி, இப்படியே செத்து மடியவும் வேண்டும். அவர்கள் இதுவரைத் தங்கள் வாழ்வில் இப்படி ஒரு எண்ணத்தால் அடித்துச் செல்லப்பட்டதில்லை. தங்களுக்குக் கிடைத்த வாழ்வை முடிந்த வரை அதன் போக்கிலேயே சாந்தமாகக் கழித்து தங்கள் முதுமையிலும் கூட எந்தப் புகார்களும், குழப்பங்களும் இன்றி வாழ்வதே நோக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்களது பெற்றோர்களே அதற்குச் சரியான உதாரணம். ஏன் அவர்களின் தாத்தாக்களும் மற்றும் அனைத்து மூதாதையர்களுமே இப்படித்தான் இந்த ஏரியிலேயே வாழ்க்கை முழுதும் மீன்களுடன் போராடித் தங்கள் வாழ்க்கையைக் கழித்தனர். பின் ஒரு நாள், தன் விரைத்த கைகளை மடித்துக் கொண்டு மாண்டும் போயினர். அவர்களின் பிள்ளைகளும் , பேரக்குழந்தைகளும் அந்தப் பழக்கப்பட்டப் பாதையின் வழக்கமான ஜீவிதத்தின் அலைப்பாடுகளில் அயராமல் துடுப்புகளிட்டு இன்றுவரை ஓய்வொழிச்சலின்றி இயங்கித் தங்கள் படகுகள் இந்த வானத்திற்குக் கீழேக் கவிழாமல் பார்த்துக்கொண்டனர். இந்த இருவர்களும், பீட்டரும் ஜேக்கப்பும் கூட புகார்கள் ஏதுமின்றியே உழைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் திடீரென அவர்களைச் சுற்றிச் சுவர் எழும்பி, அவர்கள் மூச்சு கூட விட முடியாதவாறு அழுத்தத் தொடங்கி விட்டது. அவர்கள் வேலையைத் தொடர்ந்தாலும், பார்வை எங்கோ தூரத்தொலைவிலேயே வழி தவறி விட்டிருந்தது. எங்கே? எதை நோக்கி? அவர்களால் இப்போது வரையிலும் கூட இந்த உள்ளார்ந்தத் துன்பத்தின் அலைக்கழிதலைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களுக்குப் புரிவதெல்லாம் எதோ ஒரு விசைத் தங்களை அழுத்திக் கொண்டே இருப்பது மட்டும் தான்.

    இந்த வேதனைகள் போதாதென்று, ஒவ்வொரு நாளும் வழிப்போக்கர்கள்  வேறு புதிய புதிய செய்திகளைச் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். "இறந்த சடலங்கள் உயிர்ப்பிக்கப்படுகின்றன. கை கால்கள் முடங்கிக் கிடந்தவர்கள் எழுந்து நடக்கிறார்கள். பார்வையிழந்தவர்களுக்கு பார்வை கிடைத்து அவர்கள் ஒளியை உணர்ந்தனர். "யார் இந்தப் புதிய தீர்க்கதரிசி?" ஒரு வழிப்போக்கன் அந்த இரு மீனவர்களிடம் கேட்டான். அவன் தச்சனின் மகனல்ல. புனிதர் டேவிட்டின் மகன் என்று சொல்லிக் கொள்கிறார்களே! அது உண்மையா?."ஆனால் அவர்கள் அதைப்பற்றி சட்டை செய்யாதது போல தங்கள் தோள்களைக் குலுக்கிக் கொண்டுத் திரும்பவும் வலையை இழுக்கத் தொடங்கினர். உண்மையில் அவர்கள் உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தனர். அவர்கள் இந்தப் பிரச்சனையிலிருந்து எப்படி விடுபட என்பது தெரியாமல் புலம்பிக் கொண்டிருந்தனர். அந்த வழிப்போக்கன் சற்றுத் தூரத்தொலைவிற்குப் போன பின், பீட்டர் தன் சகதோழனைத் திரும்பிப் பார்த்தான். "நீ இந்த அற்புதங்களை உண்மையிலேயே நம்புகிறாயா, ஜேக்கப்?"

    "பேசாமல் வலையை இழு!"அந்த வாயாடிக் கிழவனின் மகன் ஜேக்கப் அவனிடம் பொரிந்தான். ஒரு பக்கம் அமிழ்ந்து பாரம் அழுந்தும் தக்கையை அவன் கையில் கொடுத்து இன்னும் வலுவாக இழுக்கச் சொன்னான். கரையில் தரை தட்டும், வலையின் பின் பக்கத்தைத் தன் கைகளில் தாங்கி முன்னே உந்தித்தள்ள முயன்று கொண்டிருந்தான் ஜேக்கப்.

    அதே நாளில், சில பார வண்டிக்காரர்கள் அந்த வழியேப் புதிய செய்திகளுடன் வந்தார்கள். அவர்கள் விஸ்தாரமாக இழுத்து இழுத்து நடந்த நிகழ்வுகளைப் பற்றிச் சொல்லத்தொடங்கினர். "அதாவது புதிய தீர்க்கதரிசி பெத்சைடாவில் இருக்கும் கிழட்டுக் கருமியான அனானியஸ்ஸுன் இல்லத்திற்கு விருந்துக்குப் போனதும், அங்கு அவரும், அவர் சீடர்களும் கிழவனுடன் சேர்ந்து உண்டு, குடித்துச் சாப்பிட்டு முடித்ததும், கைகளைக் கழுவிக் கொண்டதும், அடிமைகள் அவர்களுக்கு உபசரித்ததும்,  அவர் அந்தக் கிழவனின் அருகில் அமர்ந்து காதில் எதுவோ மந்திரம் போல ஓதிவிட்டதையும். அந்தக் கணத்தில் கிழவனின் மனதில் அழுந்திக் கொண்டிருந்தத் துன்பங்களின் பாரங்களெல்லாம் இறங்கி முற்றிலுமாகக் குணமாகித் திருந்தி,  தன்னிடமிருந்த பொருட்களையெல்லாம் பங்கிட்டு அந்த ஊரிலிருந்த ஏழை பாளைகளுக்கே தானமாக அளித்துவிட்டானென்றும் ஒருவழியாகச் சொல்லி முடித்தார்கள்.

    "என்ன ரகசியம் அவன் ஓதினான்?" பீட்டர் கேட்டான். அவனது பார்வைத் திரும்பவும் நிலையழிந்து, தூர தூரத்திற்குப் போயிருந்தது.

    "ஆஹ்! அது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தால்!" அந்த வண்டிக்காரன் இளித்துக் கொண்டே பேசினான்." நான் அந்த மந்திரத்தை ஊரிலுள்ள எல்லா பணக்கார முதலாளிகளின் காதுகளிலும் ஓதியிருப்பேனே! பாவப்பட்ட நாமளும் கொஞ்சம் நிம்மதியாக மூச்சு விட்டிருப்போம்" "சரி! அது கிடக்கட்டும். இன்றைக்கு மீன் பிடி எப்படி? நல்ல அமோகமா!" என்று கண்கள் விரியத் தாழ்ந்து கிடக்கும் வலையைக் கவனித்தான். "அப்போ! சரி! நாங்கள் போய்வருகிறோம்! என்று அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

    பீட்டர் தன் துணைவனுடன் பேசுவதற்கு விளைந்தான் ஆனால் உடனே தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். "என்ன அவனிடம் சொல்வது? இன்னும் அதிகமான வார்த்தைகள்? இவர்கள் பிதற்றியது காணாதா? இதில் நான் வேறு".அவன் தன் முன்னிருக்கும் இந்த உலகையே உடைத்துத் தவிடு பொடியாக்கிட வேண்டும் என்று நினைத்தான். அவ்வளவு வெறுப்பும் கோபமும் அவனை ஆட்படுத்தியிருந்தது. அங்கிருந்து எங்காவது, கண் காணாத தொலைவு ஓடிப் போய்விடலாமா என்றும் தோன்றியது. எங்கே? எங்காவது போகலாம் எனில் எங்கே? அவனுக்குத் தெரியவில்லை. ஜோனாவின் குடில் அவனது இருப்பிற்கு உண்மையில் மிகவும் சிறியதாக இருந்தது. பிறகு இந்தக் கழுவும் தொட்டி, ஜென்னசரேட் ஏரியும்  அதன் நீர்மையும். ச்சே! இதற்குப் பெயர் தான் வாழ்க்கையா? நான் எங்காவது போகிறேன்! என்ன இது? என்ன நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? இல்லை! இல்லை! என்று தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டான். 

    ஜேக்கப் அவனை உற்றுப்பார்த்தான். "என்ன புலம்பிக் கொண்டிருக்கிறாய் நீ? கொஞ்சம் அமைதியாய் இரு" என்றான்.

    "ஒன்றுமில்லை! அடச்சே! ஒன்றுமில்லை!" பதில் சொன்ன பீட்டர், வேகவேகமாக வலையை இழுக்கத் தொடங்கினான்.

    சரியாக அதே கணம், ஒரு தனித்த ஓநாய் வெறியுடன் வருவதைப் போல யூதாஸ் தன் திடமான ஆகிருதியை, நிலைத்து முன் வைத்து, ஜீசஸ் தன் முதல் வார்த்தையை அறிவித்த, பசுமை அடர்ந்த மலைக்குன்றின் உச்சியிலிருந்து வெளிப்பட்டான். அவன் கைகளில் ஒரு முதிர்ந்து ஓய்ந்தக் காட்டுக் கருவேல மரத்தின் கிளையை முறித்து துரட்டிக்கம்பைப் போல வைத்திருந்தான்.மற்ற மூன்றுத் துணைவர்களும் அவனுக்குப் பின்னால் வந்துகொண்டிருந்தனர். மூச்சிரைக்க மலை உச்சியில் சற்றே நிதானித்த அவர்கள் கீழே இருக்கும் உலகத்தை வெறுமனே நோட்டமிட்டனர். வானின் வெளிச்சம். சூரியக்குழாய்கள் மேகங்களின் வழியே ஏரி நீரைத் தழுவிப் படர்ந்திருந்தது. புள்ளிகளாகப் பலவண்ணப் படகுகள். மனிதர்களின் நடமாட்டங்கள். சற்றுத்தொலைவில் சந்தையின் கூச்சல்கள்.அப்பால் ஏரி, கடலில் கலக்கும் விளிம்பின்  எல்லைக் கோடு வரைத் தெரிந்தது. கடற்காகங்களின் கிரீச்சிடல்கள். நீல நீரினில், மீனவர்கள் துடுப்புகளுடன் படகுகளில் கடப்பது, பறவைகள் சிறகுயர்த்தி திசையற்ற வானத்தைக் கடப்பதைப் போல இருந்தது. ஒளிக்கு கீழே எல்லாம் தீர்க்கமாகவும், தெளிவாகவும் அதனதன் சுயத்திலிருந்து ஒளிர்ந்தன.

    "பார்! அதோ பீட்டர்" ஆண்ட்ரூ கரையைக் காண்பித்தான். அங்கே பீட்டர் வலையை இழுத்துக் கரைக்குக் கொண்டு வர உந்திக் கொண்டிருந்தான்.

    "ஜேக்கப்பும் நிற்கிறான்" ஜான் பெருமூச்சுடன் சொன்னான். "நல்லது, அவர்கள் இன்னும் தங்களை உலகத்திலிருந்து பிடுங்கி எறிந்துவிடவில்லை"

    ஜீசஸ் சிரித்துக் கொண்டான். "கவலை கொள்ளாதே என் அன்பே! நீங்கள் இங்கேயே அமர்ந்து ஓய்வெடுங்கள். நான் கீழே போய் அவர்களை அழைத்து வருகிறேன்"

    அவன் வேகமாகச் சரிவுகள் வழியே, ஓட்டமும் நடையுமாகச் சென்று கொண்டிருந்தான். "அவர் செல்வது உண்மையில் நடப்பதைப் போலவே இல்லை. காற்றில் மிதந்துகொண்டே அவர் தூரங்களைக் கடக்கிறாரோ என்று தோன்றுகிறது." ஜான் ஜீசஸ் போவதையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். "ஒன்றே ஒன்றுதான் தவறுகிறது. அது அவரது இரு சிறகுகள். அதுவும் இருந்தால் அவர் ஒரு தேவதையேதான்." அவன் தன்னை பக்தியுடன் ஜீசஸுக்கு அர்ப்பணித்திருந்தான்.

    பாறைகளையும், சரளைக்கற்களையும் மிதித்து அவன் கீழிறங்கிக் கொண்டிருந்தான். பார்வைக்கு அவர்கள் தெளிவாகத் தெரிந்ததும், ஏரி மண்ணில் கால்பாவித்து விரைவாக அவர்களை நெருங்கினான். அங்கே அவர்கள் இன்னும் தங்கள் வலையுடன் போராடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு முன்னே வந்து நின்ற ஜீசஸ், வெகு நேரம் எதுவும் பேசாது அமைதியாகப் பார்த்தான். எந்த சிந்தனைகளும் அவனுள் இல்லை, முழுதும் காலியானது போல உணர்ந்தான். இது வரை அவனை இழுத்துக் கூட்டி வந்த சக்தி சட்டென்று எங்கோ போய்விட்டதைப் போல இருந்தது அவனுக்கு. அவனுக்கு முன்னால் இருந்த நிலத்தின் காட்சிப் பிளன்றது. எல்லாமே ஒளிர்வுடன் மிதப்பதை அவன் பார்த்தான். ஏரி நீரின் மேல் ஒளிர்வு கூடுகிறது. அதன் திரவ மிணுக்கத்தில் அலையிடும் வெளிச்சம் கூடிக் கூடித் தன் முன் நிற்கும் இரு மீனவர்களும் ஒளியாலானார்கள். வீச்சமான வெண்ணிற ஒளி ஒரு மாபெரும் போர்வை போல அச்சூழலையே மூடி மறைத்தது. கண்களை விரித்து இன்னும் இன்னும் என ஒளியினுள் நுழைகின்றான், ஒளித்திட்டுகளில் மனிதர்கள், சிரிக்கிறார்கள், அழுகிறார்கள், களிப்புறுகிறார்கள், நடனமாடுகிறார்கள், நீர்மையெங்கும் மனிதக் கொண்டாட்டம் நுரைத்துத் ததும்புகிறது. துள்ளத்துடிக்க மீன்களைப் போலச் சாடிக் கொண்டும், பறந்து கொண்டும் இருப்பது மனிதர்களே. தெய்வத்தின் கருணையே அந்த நீரின் விளைச்சல்கள். அதை அறுவடை செய்து இன்புற்றிருப்பதே மனிதத்தின் நோக்கம்."

    திடீரென அந்த இரு மீனவர்களும், தங்கள் தலைக்கு மேலேக் கூசும் வெளிச்சம் அடர்வதைப் பார்த்தனர். அதன் இனிமையான மிருது அவர்கள் உடலினுள் ஊடுருவி அவர்களை அப்படியே ஸ்தம்பித்து நிற்க வைத்தது. அசைவற்று ஒளியினை ஊடுருவிப் பார்க்கும் இரு மனிதக் கண்களை அந்த நிலையிலும் அவர்கள் அணுக்கமாக உணர்ந்தனர்.  சட்டென்று தன்னிலையடைந்தவர்கள் தங்களை இழுத்து முடித்து சரிசெய்ய முயன்றனர். கைகால்களை அசைத்து ஒழுங்கு படுத்தினர். அவர்கள் உடல் முழுதும் ஒளியின் வெம்மையினால், சூடாகி உருகி நடுங்கியது. ஆனால் வலியில்லை. அது ஒரு சுகமான இருப்பாக அவர்களுக்குள் சுழன்றது. அவர்களுக்கு முன்னே ஜீசஸ் அமைதியாக, அசைவற்று நின்று அவர்களை உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.

    மன்னித்து விடு துறவியே! பீட்டர் தலை குனிந்து நின்றுகொண்டிருந்தான்.

    "எதற்காக பீட்டர்? நான் மன்னிக்க வேண்டிய அளவுக்கு நீ என்ன செய்துவிட்டாய்!"

    "ஓன்றுமில்லை!" பீட்டர் நடுங்கிக்கொண்டிருந்தான். "நீ இதனை வாழ்க்கை என்று சொல்வாயா? இது என்னை உயிரோடுத் தின்கிறது."

    "நான் மட்டும் என்ன?" ஜேக்கப் தன் கைகளிலிருந்த வலைத்தக்கைகளை அழுத்தி, ஆத்திரம் தலைக்கேறத் தரையில் எறிந்து மிதித்தான். ஒரு உயிருள்ள பொருள் போலவே அது தரையினுள் அலைந்து மிதந்தது.

    "வாருங்கள்" ஜீசஸ் தன் கரங்களை இருபுறமும் நீட்டி அவர்களைத் தன் உடலோடு அணைத்துக் கொள்வதைப் போல அழைத்தான். "வாருங்கள், நான் உங்களை மனித இதயங்களைப் பிடிப்பவர்களாக்குகிறேன!"

    அவன் அவர்களை தன் கைகளினுள் அணைத்துக் கொண்டு இணைந்து நடக்கத் தொடங்கினான். "நாம் போகலாம்!".

    "நான் என் தந்தையிடம் விடைபெறல் சொல்ல வேண்டுமா?" பீட்டர் தன் தந்தை ஜோனா தனியாக இருப்பதை நினைத்துக் கேட்டான்.

"திரும்பிப் பார்க்காதே பீட்டர், நமக்கு நேரமில்லை. நாம் செல்வோம்"

"எங்கே?" ஜேக்கப் நின்றான்.

    "எதுவும் கேட்காதே? எந்தக்கேள்விகளும் இல்லை, ஜேக்கப்! வா!. அவனது குரலை அவர்களால் மறுக்க முடியவில்லை. பயமும், கவர்ச்சியும் பற்றிக் கொள்ள அவர்கள் இணைந்து சென்றனர்.

வியாழன், 10 மார்ச், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் - 68

     

Author: Nikos Kazantzakis

    காலம் என்பது ஒரு நிலமல்ல. அது கடலினாலோ, எல்லைகளினாலோ அல்லது தூரங்களினாலோ கூட அளக்கப்படுவது அல்ல. அது ஒரு இதயத்தின் துடிப்பு. நாட்கள்? மாதங்கள்? வருடங்கள்? என நிச்சயத்தின் காலம் நீடித்துக் கொண்டே இருக்கட்டும்.  மேரியின் மகனின் உதடுகளிலிருந்து நல் வார்த்தைகள், ஒவ்வொரு கிராமம் கிராமமாக வெளிப்படுகிறது. ஆம்! கிராமம் கிராமமாக, மலைகள் மலைகளாக, இன்னும் படகு வரிசைகளின் வழியே ஏரியின் இக்கரையிலிருந்து அக்கரைக்கும், அக்கரையிலிருந்து இக்கரைக்கும் அது  வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. இந்த நிச்சயத்தில் அவனே மணமகன். நிலமே அவன் நிச்சயித்த மணப்பெண். நிலத்தில் அவன் பாதங்கள் மிதிக்கும் இடங்களெல்லாம் பூக்கள் முளைக்கின்றன. மரங்களைப் பார்த்ததும், அது காய்த்துக் கனிந்துக் குலுங்குகின்றன. மீனவர்களின் படகில் அவன் ஏறியதும், மீன் பிடிக்குச் சாதகமானக் காற்றும் அலையும் கொண்டு கடல் அவனை வரவேற்கிறது. மட்பாண்டங்கள் செய்யும் குயவனைப் போல, அவன் மனிதர்களின் இதயங்களை சிறகுகளாகத் தன் வார்த்தைகளால் வடிக்கிறான். அவனது நிலம் மனிதனின் இதயம். அவனது நிச்சயத்தில் களிப்பின், இன்பத்தின் தினங்களுக்கு முடிவே இல்லை. தன் கனிவின், கருணையின், பேரன்பின் சொற்களை அவன் தன் நாவுகளால் இந்நிலத்தில் விதைத்துக் கொண்டே இருக்கிறான். தற்செயலாக, நிலத்தில் கிடக்கும் கல்லைக் குனிந்தெடுத்துப் பார்த்தால் தேவனின் கிருபை அதன் அடியிலிருந்து வெளிப்படுகிறது. கதவைத் தட்டினால், நம் தேவன் உனக்கானக் கதவைத் திறக்கிறான். உன்னதக் கண்களால் உன் நண்பனையோ இல்லை எதிரியையோப் பார்த்தால் நம் தேவன் அவனுள் ஒரு சிறுவனைப் போலத் தன் குறும்பான ஒளிர்ப்புன்னகையுடன் அமர்ந்திருப்பதை நீ காண்பாய்.

    ஜீசஸின் செயல்களினால் மக்காபீசுகளின் வழித்தோன்றல்களான பரிசேயர்கள், ஏமாற்றமும் கோபமும் அடைந்தனர் "மனிதனுக்கான ஆன்மத்தேற்றல், விரதங்களிலும், தன்னை வருத்துவதிலும், தன் பாவங்களுக்காகக் கண்ணீர்விட்டுக் கதறுவதிலும் தான் இருக்கிறது என்கிறார் தீர்க்கதரிசி யோவான்-ஞானஸ்நானம் செய்பவர் ". அவர்கள் ஜீசஸை மறுத்துக் கடுமையாகத் திட்டத் தொடங்கினர். அவன் மேல் மிகுந்த அதிருப்தியுடன் அவர்கள் பலப்பலக் குற்றங்கள் சுமத்தினர். "எங்களின் தீர்க்கதரிசி யோவான் சிரிப்பதில்லை, அச்சுறுத்தும் வகையில் அவரின் போதனைகள் இருக்கின்றன. ஆனால் நீ---எங்கு திருமணம் நிகழ்ந்தாலும் நீயே அங்கு முதன்மையும், முக்கியத்துவமும் பெற்றவனாய் இருக்கிறாய். அவர்களுடன் கூடி உண்பதும், குடிப்பதும், சிரித்துக் குலாவுவதும், ச்ச்சீ... கானாவில் நடந்த ஒரு திருமண விழாவில் எந்த வெட்கமுமின்றி நீ இளம் பெண்களுடன் நடனமாடினாய். இது போல சிரிக்கின்ற, நடனமாடுகின்ற ஒரு தீர்க்கதரிசியை யாராவது இவ்வுலகில் கண்டதுண்டா?"

    ஆனால் ஜீசஸ் வெறுமனே உணர்ச்சிகளின்றி சிரித்தான், "பரிசேயர்களே, என் சகோதரர்களே, நான் என்னைத் தீர்க்கதரிசி என்று எப்பொழுதுமே சொன்னதில்லையே! நான் திருமணத்திற்காக நிச்சயிக்கப்பட்ட மணமகன்."

    "மணமகனா?" பரிசேயர்கள் எரிச்சலிலும், குழப்பத்திலும், பித்துப்பிடித்தது போலத்  தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு அலறினர்.

    "ஆம்! பரிசேயர்களே, என் சகோதரர்களே, நான் ஒரு மணமகன். என்னை மன்னித்துவிடுங்கள், என்னை வெளிப்படுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை"

    ஜீசஸுன் பார்வை,  தன் துணைவர்களான ஜான், ஆண்ட்ரூ மற்றும் யூதாஸ் வழியாக,  அவன் வார்த்தைகளைக் கேட்க, அந்த முகத்தின் வசீகரத்தால் ஆட்கொள்ளப்பட்டு, தங்கள் வயல்வெளிகளையும், படகுகளையும் அப்படியேப் போட்டுவிட்டு வந்து நிற்கும் விவசாயிகளையும், மீனவர்களையும், பின் அவர்களையும் தாண்டி நிற்கும் பெண்களையும் பார்க்கிறது. அவர்களின் இடுப்பில் அமர்ந்திருக்கும் குழந்தைகளைக் கவனிக்கிறது.

    "உங்களுடன் உங்களின் மணமகன் இருக்கிறான். ஆகையால் களிப்புறுக,இன்பமடைக!, "அவன் உங்களுக்குத் தெரிவிப்பான். " நீங்கள் விதவைகளாகவும், அனாதைகளாகவும் ஆவதற்கான நாள் வரலாம், ஆனால் உங்களின் நம்பிக்கைகளைத் தேவனிடம் நிலையாக வைப்பீர். வானத்துப் பறவைகளைப் பாருங்கள், அவைகள் விதைப்பதோ, அறுப்பதோ இல்லை. இருந்தும் தேவன் அவற்றிற்கு உணவிட மறப்பதில்லை. மண்ணில் விரிந்திருக்கும் பூக்கள், நூல் நூற்பதோ, துணி நெய்வதோ இல்லை. ஆனால் யார் அதன் இதழ்களை இத்தனை சிரத்தையுடனும், அழகுடனும் வடிவமைத்தார். உடலைப் பற்றி எண்ணுவதை விட்டொழியுங்கள்.  அது என்ன உண்ணும்,  எதை உடுத்தும், எங்கு போய்த் தங்கும் என்பதை தேவனின் கையில் கொடுத்துவிடுங்கள். உங்களின் உடல் என்பது புழுதி. அது இறுதியில் புழுதியில் தான் போய்ச் சேரும். உங்களின் கவலையும், அக்கறையும் தேவனின் ராஜ்ஜியத்தில் அமையட்டும். ஆம்! மகத்தான அழிவற்ற ஆன்மாவில் நாம் உயிர்த்திருப்போம்!"

    கேட்டுக் கொண்டிருந்த யூதாஸ், தன் உதடுகளை அதிருப்தியில் சுழித்தான். அவனது புருவ ரேகைகள் முடிச்சுகளிட்டன. உண்மையில் இந்த சொர்க்க ராஜ்ஜியங்களின் பிதற்றல்களில் அவனுக்கு எந்த நம்பிக்கையுமில்லை. அவன் இதோ நம் முன் தெளிவாகத் தெரியும் பூமி முழுமைக்குமான ராஜ்ஜியத்தை அடைவதைப் பற்றியும், குறைந்தபட்சம் நம் இஸ்ரவேலவர்களுக்கானத் தனித்த அதிகாரம் கொண்ட ராஜ்ஜியத்தின் உருவாக்கதைப் பற்றியும் சிந்திப்பவன். இந்த ராஜ்ஜியம் மண்ணாலும், கற்களாலும், மனிதனாலும் உருவாக்கப்பட்டது. எங்கோ மேகங்களுக்குள்ளிலோ, பிரார்த்தனைகளினாலோ கட்டுவிக்கப்படும் மாயலோகமல்ல அது. எங்கிருந்தோ வந்த இந்த அந்நியர்களும், காட்டுமிராண்டிகளுமான ரோமானியர்களின் காலடியில் மிதிபட்டு அமிழ்ந்து சுவாசிக்கக் கூட வழியில்லாமல் கிடக்கிறது நம் சொந்த மண். முதலில் இவர்களின் அதிகார பீடத்தை உடைத்து, இவர்களை இங்கிருந்து வெளியேற்ற வேண்டும். நம் மண்ணை, நம் சொந்த ரத்தத்தைக் கொடுத்து மீட்டெடுக்க வேண்டும்.அப்புறம் இந்த சொர்க்க ராஜ்ஜியத்தைப் பற்றிய அபத்தங்களைப் பற்றிக் கனவு காணலாம்.

    யூதாஸின் சுருக்கள் அடர்ந்தக் குழப்பமான முகத்தைப் பார்த்ததுமே. அவன் மனதின் ரேகைகள் ஜீசஸுக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது.

    "சொர்க்கமும், பூமியும் ஒன்றே, யூதாஸ், என் அன்பு சகோதரனே", என்று அவனைப் பார்த்து புன்முறுவலுடன் பேசத் தொடங்கினான் ஜீசஸ். "கற்களும், மேகங்களும் வேறு வேறல்ல, தேவனின் சொர்க்க ராஜ்ஜியம் எங்கோ வானத்தினுள் இல்லை, அது நம்முள், நம் ஒவ்வொருத்தரின் இதயங்களிலும் இருக்கிறது. ஆம்! யூதாஸ், உன் இதயத்திடம் கேள்! வானும் மண்ணும் ஒன்றுகலக்கட்டும். இஸ்ரவேலத்தவர்களும், ரோமானியர்களும் பரஸ்பரம் தழுவிக் கொள்ளட்டும், எல்லாம் ஒன்றாக ஆகட்டும்"

    செந்தாடிக்காடிக்காரன் கோபத்தைத் தன்னுள் அடக்கிகொண்டான். அதன் கொந்தளிப்புகளை அடைகாப்பதைப் போலத் தனக்குள் சேமித்துவைத்து, நான் சரியானத் தருணத்திற்காகக் காத்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டான். "இவன் தான் என்ன பேசுகிறோம் என்று புரியாமலேயே பேசிக் கொண்டிருக்கிறான். ஏதோ ஒரு கனவுலகில் இருப்பதைப் போன்ற பிரம்மையுடன், தன்னைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருப்பவற்றின் உண்மைத்தன்மையைப் புரிந்து கொள்ளாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறான். என்னைச் சூழ்ந்திருக்கும் இந்த உலகம் மாறாமல் என் இதயம் எப்படி மாறும். என் இதயம் சொல்வதையே நான் கேட்கிறேன். எப்பொழுது ரோமானியர்கள் இந்த மண்ணை விட்டு அகல்கிறார்களோ, அன்றே என் துயர் என்னை விட்டு நீங்கும்."

    செபெதீயின் இளையமகன் நாளின் ஓய்வானச் சமயத்தில், தன் சந்தேகங்களைச் ஜீசஸிடம் கேட்க விளைந்தான். 

    "என்னை மன்னித்துவிடுங்கள் துறவியே", என்னுள், என்னால் யூதாசை விரும்ப முடியவில்லை. நான் அவனருகில் செல்லும் பொழுதெல்லாம் இருள் சூழ்ந்த வனத்தில், தனியாக அகப்பட்டதைப் போல உணர்கிறேன். வேடனின் வலையினில் கால்கள் பிறண்டு, தத்தளிக்கும் ஒரு சிறியப் பறவையின் வேதனையே என்னில் தோன்றுகிறது. அவனது பார்வை, பல்லாயிரம் கூர் ஊசிகள் போல என்னைத் துளைத்து உடல் முழுதும் காயங்கள் ஆக்குகின்றன. ஒரு நாள் நான் அதைப் பார்த்தேன். அவன் முதுகுக்குப் புறத்தே ஒரு கருப்பு உருவம் புகை போலப் பரவுகிறது. அது அவன் காதுகளில் ஏதோ ரகசியம் கிசுகிசுக்கிறது. என்ன சொல்லியிருக்கும் அந்தக் கருப்பு உரு?"

    "அந்த ரகசியத்தின் முன்னறிவிப்பை நான் அறிவேன்" ஜீசஸ் அமைதியாகத் தன் வெளிமூச்சை சீராக வெளிவிட்டான்.

"என்ன, எனக்குப் பயமாக இருக்கிறது" என்ன சொல்லியது அந்த உரு?"

    "சரியானத் தருணத்தில் நீ அதனை உணர்ந்து கொள்வாய், உண்மையில் எனக்கும் சரியாக அதன் அர்த்தப்பாடுகள் விளங்கவில்லை."

    "ஏன் அவனை உங்களுடன் எப்பொழுதும் கூட்டிச் செல்கிறீர்? இரவும் பகலும் அவன் உங்களுடன் பயணிக்க, உங்களைத் தொடர ஏன் அனுமதிக்கிறீர்? ஏன் உங்களின் குரல் எங்களிடம் பேசுவதை விடவும் அவனிடம் பேசும் பொழுது, மிகுந்தக் கனிவுடனும், நடுக்கத்துடனும் இருக்கிறது?"

"அது அப்படித்தான் என் அன்பு சகோதரனே, அவன் அன்பிற்காக ஏங்கி நிற்கிறான். இதைவிடப் பெரிய விளக்கங்கள் தேவையில்லை"

    ஆண்ட்ரூ தனது புதிய ஆசிரியனைத் தொடர்கின்றான். அவனது உலகம் நாளுக்கு நாள் மாறிக் கொண்டிருக்கிறது. உண்மையில் உலகமல்ல, அவனது இதயம்! உண்பதும், குடிப்பதும், களிப்பதும் இனிமேல் பாவங்கள் இல்லை என்பதே அவன் திருப்தியுறுவதற்குப் போதுமானதாக இருந்தது. அவன் நிலத்தில் தன்னை முழுமையாக வேர் விட்டிருந்தான். வானிற்குக் கீழே பூமியின் கருணையில் அவன் அமைதியடைந்திருந்தான். அவனது ஒரு நாள் இனி கோபத்திலும், ஆத்திரத்திலும், வெடித்துச் சிதறப் போவதில்லை. உலகத்தின் இறுதி நாள், இறுதித்தீர்ப்பு போன்ற கட்டுக்கதைகளை அவன் நம்பப் போவதில்லை. ஒரு நாள் என்பது அறுவடை, மது நொதிக்கும் பருவம், திருமணம், முழுமையான நடனம். அது நிலம் தன் கன்னித் தன்மையை நிரந்தரமாகப் புதுப்பித்துக் கொண்டே இருப்பது. ஒரு நாள் என்பது ஒவ்வொரு நொடியும் மாறிக் கொண்டே இருக்கும் ஒரு மலர்ச்சி. மொட்டவிழ்ந்து பூ விரிவது போல, காலமும் தன்னை அவிழ்க்கிறது. ஒவ்வொரு நாளையும் நம் தேவன் ஆசிர்வதிக்கிறார். அவரின் புனிதமானக் கைகளின் ஸ்பரிசம் பட்டு நிலமெங்கும் கருணை ஒரு மழையினைப் போலத் தங்கு தடையின்றிப் பொழிகிறது. மழையினைப் போல நீ எனக்கு எல்லாம் தந்தாய்!

    நாட்கள் செல்லச் செல்ல ஆண்ட்ரூ புதியவனானான். அவனது நடுக்கங்கள் முற்றிலுமாகக் குணமாகியிருந்தது. நண்பர்களுடன் சந்தோஷமாகப் பங்கிட்டு உணவு உண்டான். அவனது வெளிர்ந்தக் கன்னங்கள் சிவந்தன. சோர்வுகள் எல்லாம் மறந்து ஒரு உற்சாகமான மனிதனாகிவிட்டான். எப்பொழுதும் விருந்துகள் இருந்தன. நன்றாக உண்பதும் ,குடிப்பதும் தான் அவனது முக்கியத் தேவையாக இப்போது இருந்தது. நண்பர்களின் விருந்துகளில், தன் உணவைப் பங்கிட்டுக் கொடுப்பது ஜீசஸின் பழக்கம். அவனது ரொட்டித்துண்டை வாங்கிக் கொள்ளும் ஆண்ட்ரூ அதில் தன் மிகுதியான அன்பினையும், சிரிப்பினையும் கலந்து எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பான். தனது நண்பர்களுடனும், அவர்களின் குடும்பத்துடனும், உணவுண்டு மகிழ்ந்து நிறைவாகக் கழித்தான்.

    ஆனால் ஒரு நாள், அவன் தன் மாறவே மாறாத தந்தையையும், முதிய செபெதீயையும் நினைத்துப்பார்த்தான். அவனது நினைவுகள் தூரத்தைக் கடந்து சென்றது. அந்த இரு முதியவர்களும் பூமியின் இரு வேறு துருவங்களில் தன்னந்தனியே நிற்பதைப் பார்த்தான். அதே போல ஜேக்கப்பும் ,பீட்டரும். அவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள். எந்த வாதையினால் உழன்று கொண்டிருக்கிறார்கள். அவனது எண்ணங்கள் சுழன்றோடின.

    "நாம் அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும்" ஜீசஸ் சிரித்துக் கொண்டே பதிலளித்தான். அவர்களும் நம்மைக் கண்டறிவார்களாக!, கவலைப்படாதே, ஆண்ட்ரூ. நம் தேவனின் முகப்போ மிகப்பெரியது. அதில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக இடம் உண்டு." 

    ஒரு மாலைப்பொழுதில் ஜீசஸ் பெத்சைதா கிராமத்திற்கு வந்திருந்தான். சிறுவர்கள் ஆலிவ் மற்றும் பேரீச்சை மரக் கிளைகளினைக் கைகளில் வைத்துக் கொண்டு அவனை வரவேற்றனர். இல்லத்தரசிகள் தங்கள் வீட்டு வேலைகளை அப்படியேப் போட்டுவிட்டு மேரியின்மகனைப் பார்ப்பதற்காகவும், அவனது நற் சொற்களைக் கேட்பதற்காகவும் ஓடோடி வந்தனர். மகன்கள் தங்கள் கைகால்கள் செயழிழந்த வயதானப் பெற்றோர்களையும், பேரர்கள், விழிகள் மங்கிப் போனத் தாத்தா, பாட்டிகளையும், நாட்பட்ட நோயினால் மடிந்து கொண்டிருப்பவர்களையும்,  தங்கள் தோள்களில் சாய்த்துக் கொண்டும் கைகளில் ஏந்திக் கொண்டும் அவனை நோக்கிப் படையெடுத்தனர். பிசாசுகளினால் பீடிக்கப்பட்ட, கிறுக்குப்பிடித்த மனிதர்களையும், அவர்களின் உறவினர்கள் அங்கே கட்டி இழுத்து வந்தனர். ஜீசஸின் கைகள் பட்டால் போதும், அவர்களின் ரோகமெல்லாம் குணமாகி விடும் என்ற நம்பிக்கையில் அவர்கள் தங்கள் பாரங்களைச் சுமந்துகொண்டு அவனைப் பின் தொடர்ந்து வந்தனர்.

    அதே நாளில் தான் தாமஸ், தெருத்தெருவாய்ச் சென்று பொருட்களை விற்பனை செய்பவன்,  அந்தக் கிராமத்தில் வியாபாரத்திற்காக வந்திருந்தான். தன் தலைச்சம்மாடாக வைத்திருந்தக் கூடையில் பலவண்ண நாடாக்கள், வாறுகோல்கள், பெண்களுக்குத் தேவையான சில அழகு சாதனப் பொருட்கள், பித்தளை வளைகள், வெள்ளிக் கம்மல்கள் போன்ற பொருட்கள் இருந்தன. அவன் ஊதுகுழலை ஊதிக் கொண்டும், வாடிக்கையாளர்களை நோக்கிப் பொருட்களின் பட்டியலைக் கூறிக் கொண்டும், கிராமத்தின் தெருக்களில் அங்குமிங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்தான். ஊதுகுழல் சத்தத்தை வைத்துதான் அந்த மக்களின் ஆரவாரத்திற்கிடையிலும் ஜீசஸ் தாமஸைக் கண்டுபிடித்தான். அவனைப் பார்த்ததும் ஜீசஸுக்கு சூழலின் நிலைமையே முற்றிலுமாக மாறிவிட்டது போல இருந்தது. அவன் கண்களுக்கு தாமஸ் ஒரு மாறுகண் கொண்ட முரட்டு வியாபாரி மாதிரித் தெரியவில்லை. தாமஸ் கைகளில் ஒரு ரெசமட்டம் வைத்திருக்கிறான். அவனைச் சுற்றி வேறு வேறு தேசங்களிலிருந்து வந்திருக்கும் பலவிதமான மனிதர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கு ஒரு மாபெரும் கட்டிடம் கட்டி எழுப்பப்படுகிறது. கூலியாட்கள் அதற்கானக் கற்களைப் பாரவண்டியில் இழுத்து வருகிறார்கள். மண்ணும், களிமண்ணும் கலந்தக் கலவைகளை, மண்வெட்டியால் குழைத்துக் கொண்டிருக்கிறது ஒரு குழு. இது வரை உலகில் இல்லாத அழகுடன் , பளிங்குக் கற்களால் அது வடிவமைக்கப்படுகிறது. அதன் வாசலில் எழுப்பப்பட்ட தூண்களை அணுகும், அந்த மாபெரும் கோவிலின் கட்டிட நுணுக்கங்களை வடிவமைத்த பெருஞ்சிற்பியானத் தாமஸ் தன் ரெசமட்டத்தைக் கொண்டு அத்தூண்களை அளக்கிறான். அதன் கட்டுமானங்களிற்குள் அங்கும் இங்கும் அலைந்து எல்லா புறமும் அதன் ஒழுங்கை அளந்து பார்த்து, பணி, திட்டமிட்ட படி சரியாக நடக்கிறதா என்று நோட்டமிடுகிறான்....ஜீசஸ் தன் கண்களைச் சிமிட்டுகிறான். அதற்கு பதில் சொல்வது போல தாமஸ்ஸும் கண்களைச் சிமிட்டுகிறான். அச்சமயம் சரியாக அவர்கள் தங்களைத் தாங்கள் அறிந்து கொண்டனர். அவன் தன் தலைச் சம்மாட்டைக் கீழே இறக்கி வைத்து விட்டு, தன் ஒன்றரைக் கண்களை உருட்டியபடி, திடமானக் கைகளால் காற்றைத் துழாவிக் கொண்டே அவனிடம் வந்தான்.

    ஜீசஸ் அவன் தலையில் தன் கைகளை வைத்து ஆசிர்வதித்தான். "தாமஸ் நீ என்னுடன் வா, நான் உன் தலையில் வேறுவிதமானப் பாரங்களை ஏற்றி விடுகிறேன்: ஆன்மாவின் உன்னதமான ஆபரணங்களையும், அதன் நறுமணத்தைப் பரப்பும் சொற்களின் பெருக்கையும் உனக்கு அளிக்கிறேன். நீ உலகின் கடைசி எல்லை வரை அதைக் கொண்டு செல். இந்தப் புதிய மகத்துவமான பொருட்களின் பூரணத்துவத்தை அவர்களுக்கு விளக்கிப் பங்கிட்டுக் கொடு"

    நான் என்னிடம் இருப்பதை வைத்துப் பிழைத்துக் கொள்கிறேன். அந்த புத்திசாலி வியாபாரி சிரித்துக் கொண்டே பதிலளித்தான். "ம்ம்! பார்ப்போம்! உன்னுடைய வித்தைகளும் எத்தனை நாட்கள் விலைபோகின்றன என்று. கொஞ்சம் பொறுப்போமே! என்ன!..."அவனது குரலின் அழுத்தம் கூட, ஏளனமாகக் கைகாட்டி நகைத்தான். பின் தன் சம்மாட்டைத் தூக்கிக் கொண்டு பாரம் அழுந்த அங்கிருந்து நழுவித் தன் அன்றைய வியாபாரத்தைத் தொடர்ந்தான்.

    ஜீசஸுன் விழிகளில் இந்தப் பழமையானக் கிராமம், ஒருபுறம் மிகுந்த வசதியும், கருணையின்மையும்,  அநீதியையும் ஒருங்கேக் கொண்டிருந்தது. அதன் நெரிசல்களுக்கிடையில், அவன் அதனைக் கைவைத்து அகற்றி முன்னேறி மறுபுறம் அதன் மக்களைக் காண வருகிறான். தன் முன் நிற்கும் மக்கள் திரளை ஆச்சர்யத்துடனும், ஆர்வத்துடன் நோக்குகின்றான். சிறுவர்கள் கூட்டம் கூட்டமாக பேரீச்சை இலைகளையும், ஆலிக் கொப்புகளையும் தங்கள் தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு ஆரவாரித்து அவனை வரவேற்கின்றனர். கிராமத்திலிருந்த எல்லா வீட்டுக் கதவுகளையும் தட்டி அவனது வருகையை அறிவிக்கின்றனர். "அவர் வருகிறார், டேவிட்டின் மகன் இங்கே வந்து கொண்டிருக்கிறார்" என்று. தூய வெண்ணிறமான அங்கி அணிந்த, தன் தோள்கள் வரைக் கிடக்கும் முடியைக் கோதிக் கொண்டு வாசல்கள் தோறும் கடந்து வரும் அந்த இளைஞனை அவர்கள் பின் தொடர்ந்து செல்கின்றனர். தன் வலப்புறமும், இடப்புறமும் நிற்கும் மக்களின் தவிப்பான முகங்களை உற்று நோக்கும் அவன் தன் இதயத்தில் கைவைத்து ஆசிர்வதிக்கின்றான். அவனருகில் வருபவர்கள் சிலரைத் தொடுகின்றான், ஆரத்தழுவுகின்றான், தன் கைகளால் அவர்களின் தலையில் கைவைத்து இனிய சொற்களைப் பேசுகின்றான். சிலரை கட்டிப்பிடித்துக் கன்னங்களில் முத்தமிடுகின்றான். அடுத்தகணம் என்ன செய்வான் என்பதை அவனாலும் கூடத் தீர்மானிக்க் முடியவில்லை. அவனை ஸ்பரிசிக்கவும், முடியவில்லை என்றால் அவனது உடையின் சிறு தீண்டலையாவது தன் மீது ஏந்திக்கொள்ளவாவது  வேண்டும் என்ற ஏக்கத்துடனும் இரு பெண்கள் போட்டி போட்டு ஓட்டமும் நடையுமாக நெரிசலிற்குள் அவனைப் பின் தொடர்கின்றனர். தூர தூரத்தில் பார்வையிழந்தவர்களும், நலிந்தவர்களும், குணப்படுத்தமுடியாத ரோகத்தால் முடங்கிக் கிடப்பவர்களும், எனப் புதியப் புதியக் கதவுகள் அவனை நோக்கித் திறந்து கொண்டே இருந்தன. அவன் ஒவ்வொருத்தராக தன் வருகையையும், இறைவனின் கிருபையையும், நம்பிக்கையையும், தன் தந்தையின் மாட்சிமை பொருந்திய பரலோக ராஜ்ஜியத்தையும் பற்றி அறிவித்துக் கொண்டே வந்தான்.

    "இப்போது இது யார் புதிதாக?" ஒரு கிழவனார் தன் சஞ்சலமானக் குரலில் தள்ளாடிக் கொண்டே கேட்டார். கூட்டநெரிசலை முறித்துக் கொண்டு அவரால் போகமுடியவில்லை. நடக்கவும் தெம்பில்லாமல் ஓரிடத்தில் உட்கார்ந்திருந்தார். 

    "நம்முடையப் புதிய தீர்க்கதரிசி". வழியில் அவரைக் கடந்து சென்ற ஒருவன் பதிலளித்தான். "அனானியஸ், உம்மைக் கடந்து செல்லும் அந்த வெள்ளை அங்கி அணிந்த மனிதனை நீர் பார்த்தீரா? அவன் தன் ஒரு கையில் வாழ்வையும், மறுகையில் மரணத்தையும் வைத்திருக்கிறான். அதனை சரிசமமாகப் பங்கிடும் வித்தை அறிந்தவன். முடிந்தால் அவனை வரவேற்று உபசரித்துத் திருப்திபடுத்தும். அவனின் ஞான வார்த்தைகளால் உமக்கும் கிருபை உண்டாகவும் வாய்ப்புண்டு"

    அதைக் கேட்ட முதிய அனானியஸ், அவரது பயங்களை நினைத்து திகிலுற்றார். இது நாள்வரை அவரை அச்சுறுத்தும் விசித்திரப் பிரச்சனைகளைப் பற்றிய எண்ணங்களுக்குள் தலையிட்டார். அது அவரது ஆன்மாவைத் தினம் தினம்  சிதைத்துக் கொண்டிருந்தது. தினமும் இரவில் தான் திடுக்கிட்டு எழும் சமயங்களில், தன்னால் பேசமுடியாதவாறு தன் நாக்கு மரத்துப் போவதும், தொண்டை அடைத்து விடுவதும். நரகக்குழியினில் தன்னுடலின் கழுத்திலிருந்து, கால்வரை தீயில் வெந்து கொண்டிருக்க, தன் தலை தாளமுடியாத வலியினால் நாக்கு நீட்டி அலறிக் கொண்டிருப்பது போலவும், தன் சொப்பனங்களில், தான் துர்மரணம் அடைந்து உடல் சிதைந்து கிடப்பதைப் போலவும், இந்த பயங்கள் அவரை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. "இதிலிருந்து விடுபடுவதற்கான மார்க்கமாகக் கூட இத்தருணம் அமையலாம். ஒருவேளை இவனால் என்னைக் காப்பாற்றமுடிந்தால். உலகம் சுழல்வதே ஒரு வித மந்திரவித்தைதான். இந்த மனிதனும் மாய மந்திரங்களில் விற்பன்னனாகத் தெரிகிறான். இவனுக்கு ஒரு நல்விருந்தினை ஒருங்கு செய்வோம். பெரிதாய் ஒன்றும் செலவாகிவிடாது. பார்க்கலாம், ஒருவேளை இவன் அற்புதங்கள் புரிந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை" என்ற முடிவுக்கு வந்த முதியவர் எழுந்து, அவனை நோக்கி நடக்க முற்பட்டார்.

அவர் தன் ஒரு கையை நெஞ்சில் வைத்துக் கொண்டு, அவனை அழைத்துக் கொண்டே கூட்டத்திற்குள் புகுந்தார் "டேவிட்டின் மகனே" "இந்த முதியவனின் பெயர் அனானியஸ், நான் ஒரு பாவி, நீயோ புனிதன். எங்களின் கிராமத்திற்குள் நீ அடியெடுத்து வைத்திருக்கிறாய் என்பதை இப்பொழுதுதான் அறிந்துகொண்டேன். நான் உனக்காகவும், உன் துணைவர்களுக்காகவும் என்னுடைய இல்லத்தில் ஒரு சிறியவிருந்தினை ஏற்பாடு செய்ய விரும்புகிறேன். தயை கூர்ந்து என்னுடன் வந்து இரவுணவை ஏற்றுக்கொள்ளும். நீ கருணாமூர்த்தி என்பது எங்களுக்குத் தெரியும். இது பாவிகள் புனிதர்களுக்கு அளிக்கும் சிறிய  காணிக்கை என்று வைத்துக் கொள்ளும். இருள் மண்டிக் கிடக்கும் என் உலகத்தில் நீவீர் ஒளி பாய்ச்சுவீர். என் இல்லத்தின் புனித தாகத்தை உன் தேவனின் வார்த்தைகளால் நிறைக்கப்பண்ணுவீர்!

    ஜீசஸ் நின்று திரும்பி அம்முதியவரைப் பார்த்தான். "உங்களின் தயையை நான் ஏற்றுக் கொள்கிறேன், உங்களை சந்தித்ததில் உண்மையில் பெருமகிழ்ச்சியடைகிறேன்."

    அவன் அந்தக் கிராமத்திலேயே இருந்த ஒரு பெரிய பங்களாவிற்கு அழைத்து வரப்பட்டான். அடிமைகள் முற்றத்தில் சாப்பாட்டு மேஜைகளை அமைத்து, அவர்கள் சுகமாக இருக்கப் பண்ணுவதற்காக, தலையணைகளை அமைத்தனர். ஜீசஸ் நடுவில் அமர, இருபுறமும், ஜான், யூதாஸ் மற்றும் ஆண்ட்ரூ அமர்ந்தனர். தாமஸ்ஸும் இடையில் இக்கூட்டத்திற்குள் வந்து அவர்களுடன் கலந்துவிட்டான். ஒரு நல்ல இரவுணவை அவன் இழக்க விரும்பாததால், சீடனைப் போல பவ்யமாக வந்து ஜீசஸுக்கு வலப்புறம் வந்து அமர்ந்திருந்தான். செல்வந்தரான முதியவர் ஜீசஸுக்கு எதிரே அவனை நேருக்கு நேரே பார்க்கும் வண்ணம் தனது விலையுயர்ந்த ஆசனத்தில் அமர்ந்தார். முதியவர் தன்னுள் ஆழ்ந்திருந்தார். அவர் எப்படி உரையாடலைத் தன் துர்க்கனவுகளைப் பற்றித் திருப்ப என்று நுட்பமாக யோசித்தவர், ஒருசமயம் இவனது மந்திரங்களால் தன் தீராத இந்த மரணம் பற்றியக் கவலைக்குத் தீர்வு கிடைக்குமா என்று குழம்பிக் கொண்டிருந்தார். உணவுகள் பாத்திரங்களிலிருந்து எடுத்து வைக்கப்பட்டன. இரண்டு குடுவைகள் நிறைய திராட்சை மது நிரம்ப நுரைக்க முன்னே வைக்கப்பட்டது. வாசலுக்கு வெளியே மக்கள் கூட்டம் காத்துக் கொண்டிருந்தது. உணவு உண்ணுதல், கடவுள் பற்றிய வியாக்கானங்களை உரையாடுதல், தட்பவெப்ப நிலை, அறுவடைக்காலம், பயிர்களின் வளர்ச்சி, திராட்சைத் தோட்டங்களைப் பராமரித்தல் என்று ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள் என்று அவர்கள் நினைத்துக் கொண்டனர். தங்களுக்குள் கேலி பேசிக் கொண்டும், குசுகுசுத்துக் கொண்டுமிருந்த ஆண் பெண்களின் சலசலப்புகள் சூழலின் அமைதியை குலைத்தது. விருந்தினர்கள் உண்டு  முடித்ததும் கை கழுவி விட்டு, நிமிர்ந்து அமர்ந்தனர், உணவுண்டக் கோப்பைகள், பாத்திரங்கள் மற்றும் குவளைகளை அவரது அடிமைகள் எடுத்துச் சென்றனர்.  மேசையில், ஒரு ஜாடி தண்ணீரும், குவளைகளும், ஒரு தட்டு நிறையப் பேரீச்சைப் பழங்களும் மட்டும் இருந்தது. நான் நினைத்தது போல இவனுக்கும், இவன் துணைவர்களுக்கும் நன்றாகவே விருந்தளித்து விட்டேன். திருப்தியாக உண்டும், குடித்தும் வந்து அமர்ந்திருக்கிறார்கள். இப்பொழுது நான் உரிமையுடன் இவனிடம் என் பிரச்சனைகளுக்கானத் தீர்வினைக் கேட்கலாம் என்று தனக்குள் சொல்லிகொண்டார். 

    "துறவியே! எனக்கு இரவில் துர்கனவுகள் வருகின்றன," அவர் சொல்லத்தொடங்கினார். நீர்  மந்திர, தந்திரங்களில் தேர்ந்தவர் என்பது என் திண்ணம். நான் உமக்கு வேண்டிய அனைத்தையும் செய்யச் சித்தமாக இருக்கிறேன். உம் புனிதத்தன்மையினால் எனக்கு நீர் உதவி செய்யவேண்டும். நீர் கதைகளின் வாயிலாகவே, உம்மந்திரங்களை வெளிப்படுத்துவதாய் நான் கேள்விப்பட்டேன். எனக்காக நீர் கதை சொல்லும், அதிலிருக்கும் உள்ளார்ந்த அர்த்தத்தை நான் புரிந்து கொண்டு குணமடைகிறேன். இந்த உலகில் அனைத்தும் மாயஜாலங்களினாலேயே நிகழ்கிறது என்று நான் நம்புகிறேன். அப்படித்தானே! அப்படியென்றால் உம் மந்திரத்தால் எம்மை பெலப்படுத்தும்!

    பொருளற்று சிரித்த ஜீசஸ், தீவிரமாக முதியவரின் கண்களுக்குள் பார்த்தான். இது போன்றப் பேராசை கொண்ட முகங்களைப் பார்ப்பது அவனுக்கு இது முதல்முறையல்ல. பெருந்தீனியால் உடல் கொளுத்த ஒரு முதிய உடல். தாடைச் சதை இறங்கி கழுத்தை ஆக்கரமித்திருந்தது. பெருத்த வயிறு அங்கியினுள் இருந்துப் புடைத்து எட்டிப் பார்க்கிறது. கண்ணுக்கு கீழே ரெப்பை தொங்க, சிவந்து வீங்கியிருக்கும் இந்த தேகத்தைப் பார்க்க உண்மையில் அவனுக்கு அருவருப்பாக இருந்தது. "இவர்கள் தங்களைத் தாங்களே நாசப்படுத்திக் கொள்கிறார்கள். இந்த உலகம் தனக்கு மட்டுமே சொந்தமானது என்பது போல, இந்தப் பிறவிகள் உண்கிறார்கள், குடிக்கிறார்கள், சிரிக்கிறார்கள், நடனமிடுகிறார்கள்,பரத்தையர்களையும், பிற பெண்டிர்களையும் நாடிச் செல்கிறார்கள். ஆனால் இவர்கள் கொஞ்சமும் இதைப்பற்றி வருந்துவதில்லை, தான் செய்யும் செயல்கள் மூலமே நரகத்திலிருக்கும் தனக்கானக் குழியில் தாமே கங்குகள் இட்டுக் கனல வைக்கிறோம் என்பதை. ஆனால் அவர்களை மரணம் நெருங்கும்பொழுது, தனது நிரந்தரமான நித்திரையின் காலம் நெருங்கிவிட்டது என்பதை அவர்கள் உணரும் பொழுது கண் விழிக்கிறார்கள். "ஜீசஸ், திரும்பவும் நன்றாக உற்றுப்பார், இந்தக் கொழுத்துப் பருத்த உடம்பை, கண்களை, அளவுக்கு மீறிப் பிதுங்கும் சதையை. ஆம்! அதனுள் இருக்கும் உண்மைத்தன்மையை நீ கதையாகச் சொல்." 

    "உங்கள் காதுகளையும், இதயத்தையும்  நன்றாகத் திறந்து வையுங்கள். கடவுளின் பெயரால் நான் சொல்கிறேன்"

    "கேளுங்கள் அனானியஸ், ஒரு ஊரில் நியாயமும், நேர்மையுமற்ற பணக்காரன் ஒருவன் இருந்தான். அவன் நன்றாக உண்பதும், குடிப்பதும், பட்டும், பவளமுமாய், ஆடம்பரமாக உடுத்திக் கொண்டுத் தன்னை அலங்கரிக்கவும் செய்து தன் படோபடத்தை ஊராரிடம் காட்டிக் கொண்டிருந்தான். ஆனால் தன்னிடமிருக்கும் செல்வத்தில் ஒரு சிறிய சருகினைக் கூட அவன் தன் அண்டை வீட்டிலிருந்த பசியிலும், வறுமையிலும், குளிரிலும் வாடிக்கொண்டிருக்கும் லாசரஸ்ஸுக்கு கொடுக்கவில்லை. லாசரஸ் அவன் உண்டு மீதமாய்க் குப்பையில் போட்ட எச்சியிலிருந்து, ரொட்டித்துண்டங்களில் எஞ்சியதையும், கழிந்த எலும்புகளையும் நக்கித் தன் ஜீவிதம் நடத்திவந்தான். ஆனால் அவனது அடிமைகள் அவனை அடித்து உதைத்து வெளியே துரத்தினர். ஆனாலும் அவன் அனானியஸ்ஸுன் வீட்டு வாசலிலேயே எதாவது கிடைக்காதா எனக் கை நீட்டி அமர்ந்திருந்தான். அங்கு கிடக்கும் தெரு நாய்கள் அவன் காயங்களை நக்கி அவனை ஆற்றுப்படுத்தின. பிறகு அவர்களுக்காக நியமித்த நாள் வந்தது. அவர்கள் மரணித்தார்கள். ஒருவன் அழியாத நெருப்பில் இடப்பட்டான். ஒருவன் ஆப்ரஹாமின் நெஞ்சத்தில் நித்தியமாக இருத்தப்பட்டான்.  ஒரு நாள் அந்தப் பணக்காரன் தன் நரகக்குழியினுள் வெந்து கொண்டே வெளியே எட்டிப்பார்த்தான். அங்கே லாசரஸ் தேவனின் அணுக்கமான இருப்பில் மகிழ்வும், களிப்புமாகச் சிரித்துக் கொண்டிருந்தான். "என் தேவனே! என் தேவனே! லாசரசைக் கீழே இறக்கிவிடும், அவனது குளிர்ச்சியான விரல்களினால் நான் என்னைக் கொஞ்சம் ஈரப்படுத்திக் கொள்கிறேன். இங்கே நான் எரிந்து கொண்டிருக்கிறேன் என் தந்தையே! 

    "உன் கடந்தகாலத்தைக் கொஞ்சம் சிந்தித்துப்பார். நீ நன்றாக உண்டும் ,குடித்தும், உன் சொகுசுவாழ்க்கையை அனுபவித்துப் பெருத்துக் கிடக்கும் பொழுது இவன் தன் பசியுடனும், குளிருடனும் போராடிக் கொண்டிருந்தான். உன்னால் முடிந்தும், நீ இவனுக்காக ஒரு சிறிய பருக்கையாவது உன் உள்ளம் உவந்து கொடுத்திருப்பாயா? இப்பொழுது இவனுடைய முறை, இவனை நான் மகிழ்ச்சியாக இருக்கப் பண்ணுவேன். நீ இந்த எரிகுழியில் காலமற்று வெந்து கிடப்பாய்!" 

    ஜீசஸ் பெருமூச்சுகளுடன் கதையை முடித்துக் கொண்டு அமைதியானான். முதிய அனானியஸ்ஸுன் எதையோக் கேட்க எண்ணினார். ஆனால் எதுவும் பேசாமல் காத்திருந்தார். அவரது தொண்டை அடைத்திருந்தது. உதடுகள் காய்ந்திருந்தன. தன் நிலையற்றச் சிறியக் கண்களால் ஜீசஸை நோக்கினார். அனாதரவற்ற அந்தக் கலங்கிய கண்கள் பரிதவித்துப் பின் நிலத்தைப் பார்த்தது.

    "அவ்வளவு தானா?" அவர் திரும்பத்திரும்பக் கேட்டார். "அவ்வளவுதானா, இல்லை, இன்னும் இருக்கிறதா"

    "அவனுக்குச் சரியாக வழங்கப்பட்டது" யூதாஸ் அவரை முறைத்துக் கொண்டே சிரித்தான். எவனொருவன் தன் தேவையை மீறி உண்ணவும், குடிக்கவும் செய்கிறானோ, அவன் அவை  எல்லாவற்றையும் நரகத்திற்கு செல்கையில் திரும்ப வாந்தியெடுத்தேத் தீரவேண்டும்."

    ஆனால் செபெதீயின் இளையமகன்,  தாய் அடித்தாலும் திரும்பத் திரும்ப  அவளிடமே போய்ஒட்டிக்கொள்ளும் குழந்தையின் பாவத்தில், ஜீசஸின் மார்பில் சாய்ந்து அவனது முகத்தைப் பார்த்தான். "துறவியே, உங்களது வார்த்தைகளே எங்கள் இருதயத்திற்கு மருந்து. ஒவ்வொருமுறையும் உங்களின் சொற்களின் வழியிலேயே நான் சிந்திக்கிறேன். அதுவே நான் தேக்கி வைத்திருக்கும் தேவையற்றப் பாரங்களைவிட்டு இறங்க வழி செய்கிறது. நீங்கள் எத்தனை முறை எங்களுக்கு அறிவுறுத்தியிருப்பீர்கள், எதிரிகளையும் மன்னிக்க! "நீ உன் எதிரியையும் நேசிக்க வேண்டும் என்று சொன்னீர்கள். உன் எதிரி உனக்கெதிராக ஏழு முறை அல்ல, எழுபத்து ஏழு முறையும் தீமையே செய்தாலும், அவனுக்கு அந்த  எழுபத்து ஏழு முறையும் நீ நன்மை மட்டுமே செய்யவே விளைய வேண்டும் என்று எங்களுக்கு போதித்தீர்கள். வெறுப்பை ஒட்டுமொத்தமாக இந்த உலகம் முழுக்கிலுமிருந்து வெளியேற்றுவதற்கான சரியான வழி அதுவே என்று நான் நிச்சயமாக நம்புகிறேன் ஆனால்....இங்கே அந்தத் தேவனினால் கூட மன்னிக்க முடியாதா?

    "மனிதனை விட இறைவன் நேர்மையானவன்" இடைமறித்துப் பேசியச் செந்தாடிக்காரன், முதிய அனானியஸ்ஸைக் கிண்டலாகப் பார்த்தான்.

"இறைவன் பூரணமானக் கிருபையுடையவன்" ஜான் மறுத்தான்.

    "நம்பிக்கையிழப்பே இதன் முடிவா!" கிழவரின் தடுமாறிய சொற்கள் அவர்களுக்கு நடுவில் வந்து விழுந்தன. "இந்த நீதிக்கதை இத்துடன் முடிந்துவிட்டதா?"

    திடீரென எழுந்து வாசற்கதவை நோக்கி செல்லத் தொடங்கிய தாமஸ் நின்று திரும்பி அவர்களைப் பார்த்தான். "இல்லை! அன்பானக் கிழவரே! இன்னும் கதை முடியவில்லை", ஏளனமாக அவரைப் பார்த்து இளித்துக் கொண்டு தொடர்ந்தான். "இன்னும் சொல்வதற்கு மிச்சம் இருக்கிறது"

    "அதைச்சொல்! என் குழந்தையே! என்னுடைய ஆசிர்வாதங்கள் உனக்கு எப்போதும் உண்டு!"

    "அந்தப் பணக்காரனின் பெயர் அனானியஸ்!" என்று கத்திச் சொன்னவன், தன் அகன்ற கூடைச் சுமையைத் தலையில் ஏற்றிக்கொண்டு, வெளிப்பாதையில், தன் வியாபாத்தை பழைய மாதிரியே இயந்திரகதியில் தொடர்ந்தான். அவனது சத்தமானச் சிரிப்பொலி சிறிது நேரத்திற்கு சூழலில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.

    அவரது முகம் ரத்தம் தலைக்கேறிச் சிவந்து விட்டது. கொப்பளிக்கும் நடுக்கம் அவரை ஆட்கொள்ள அவரது பார்வை சிறுகச் சிறுக மங்கியது. தன் உடலைச் சற்று உலுக்கி சகஜப்படுத்திக் கொள்ள முயன்றார்.

    ஜீசஸ், அன்புக்குரிய ஜானின் கேசத்தில் தன் நீண்ட விரல்களால் அளைந்தான். ஒரு காதலன் காதலியைப் பார்ப்பதைப் போல அவனைத் தன் கண்களுக்குள் உள்வாங்கி அமைதியாகச் சற்று நேரம் பார்த்தான். "ஜான்" தித்திப்புடன் அப்பெயர் அவன் உதடுகளிலிருந்து வெளிவந்தது. "எல்லோருக்கும் காதுகள் இருக்கின்றன, அவர்கள் கேட்கிறார்கள். எல்லோருக்கும் மனம் இருக்கிறது, அவர்கள் முடிவெடுக்கிறார்கள். இறைவன் நேர்மையானவன் என்று அவர்கள் சொல்கிறார்கள். அதற்கப்பால் அவர்களால் செல்ல முடியாது. ஆனால் நீ உன் இருதயம் சொல்வதன் வழி நடக்கிறாய். அதனால் உனக்கு இறைவனின் நேர்மை மட்டும் போதவில்லை. ஆம்! அவன் பூரணமானக் கிருபையும் கொண்டவன். அதனால் இந்த நீதிக்கதையை இத்துடன் முடிக்க முடியாது. இதற்கு வேறு ஒரு முடிவு நிச்சயமாக இருக்கிறது."

    "மன்னித்துவிடுங்கள், துறவியே" , ஆனால் இதைத்தான் என் உள்ளுணர்வு உணர்கிறது. மனிதன் மன்னிப்பான். அதை நானே எனக்குச் சொல்கிறேன். இது சாத்தியமெனில் கடவுளினால் ஏன் முடியாது? இல்லை, இது நிச்சயமாகச் சாத்தியம் தான். இந்தக் கதை அந்தரத்தில் நிற்கிறது. ஒரு காறியுமிழ்ந்த வசை போல. கண்டிப்பாக இதற்கு வேறொரு முடிவு உண்டு என்று நான் நம்புகிறேன்."

    இக்கதைக்கு பிறிதொரு முடிவு இருக்கிறது என் அன்பானவனே", ஜீசஸ் புன்சிரிப்புடன் பேசத் தொடங்கினான். "கேளுங்கள் அனானியஸ், இதை நான் உறுதியுடன் கூற விளைகிறேன். கேளுங்கள், முகப்பிலும், வெளியேயும் நிற்கும் எம்மக்களே, தெருக்களில் சிரித்துக் கொண்டு நிற்கும் அண்டை அயலார்களே!, கடவுள் நேர்மையானவர் மட்டுமல்ல, அவர் நல்லவர், நல்லவர் மட்டுமல்ல, அவர் நம் தந்தையும் ஆவார். லாசரஸ் தன் தந்தையின் சொல்லைக் கேட்டதும், அவன் தன் மனதிற்குள்ளிருந்து கடவுளை அழைத்தான். "கடவுளே, எப்படி ஒரு மனிதனின் ஆன்மா என் கண் முன்னே காலமற்றுத் தீப்பற்றி வெந்து கொண்டிருக்கையில் உன் சொர்க்க ராஜ்ஜியத்தில் என்னால் சுகம் அனுபவித்து மகிழமுடியும். அவனை இளைப்பாற்று, கடவுளே, நானும் இளைப்பாறுகிறேன். அவனை விடுவி, நானும் விடுபடுகிறேன். இல்லையென்றால் அந்த எரியின் வெம்மையை எனக்கும் அளித்துவிடு. கடவுள், அவனது வார்த்தைகளினால் மகிழ்ச்சியடைந்தார். "லாசரஸ், என் அன்புக்குரியவனே!", கீழே செல். நரகக் குழியில் தாகத்தால் வெந்து கொண்டிருக்கும் உன் நண்பனை விடுவிக்க நீயே உன் கைகளைக் கொடு. எனது சுனையின் நீர்மை என்றுமே வற்றுவதில்லை. அவனை இங்கு அழைத்து வா, தாகம் தீர என் நீரினை அருந்தி அவன் தன்னை விடுவித்துக் கொள்ளட்டும். ஆம்! அவன் மூலம் நீயும் புத்தியிர்ப்படைவாய்!....என் அன்பே! உங்கள் இருவரையும் என் முடிவற்ற நித்தியத்துவத்திற்குள் இருக்கப் பண்ணுவேன்.

    ஜீசஸ் அத்துடன் நிறுத்திக் கொண்டு எழுந்துவிட்டான். இரவு நன்றாகத் தெளிந்திருந்தது. தூரத்தில் ஒளித்துணுக்குகள் பொட்டலங்களாக ஆங்காங்கே கிடந்தன. கூடியிருந்த மக்கள் கூட்டம் காலியாகியிருந்தது. ஆண்களும், பெண்களும் தங்களின் குடில்களுக்குச் சென்று, அன்று நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் எண்ணிக் கொண்டு சிலாகித்துக் கொண்டனர். அவர்களின் இருதயங்கள் பூரண அமைதியில் திருப்தியுற்றிருந்தது. ஒரு சொல்லைத் தின்று உயிர்வாழ்ந்திட முடியுமா? தெரியவில்லை. ஆனால், அச்சொல்லின் மகத்துவம் அதனை சாத்தியப்படுத்தும்.

    ஜீசஸ் தன் விடைபெறுதலை அந்த வயதான முதலாளியிடம் கூறுவதற்காக கைகளை உயர்த்தினான். ஆனால் சற்றும் எதிர்பாராவண்ணம் அனானியஸ் அவனது கால்களில் விழுந்தார்.

"துறவியே,""என்னை மன்னியும்!" அவர் வெடித்தழத் தொடங்கினார்.