வெள்ளி, 27 டிசம்பர், 2019

போதி

"நான் உடலாகிறேன்
உடல் கொண்டு உன்னைத் தொடுகிறேன்
நான் உணர்வாகிறேன்
உணர்வைக் கொண்டு உன்னிடம் மன்றாடுகிறேன்
நான் மனமாகிறேன்
மனம் கொண்டு உன்னைப் பிரதிபலிக்க முயல்கிறேன்
நான் கருத்தாகிறேன்
அதனால் உன்னை மகா காயம் என்று சொல்லிக் கொண்டு திரிகிறேன்"

உறக்கம் ஒரு மென் பட்டுத் துணி போல காற்றில் அலையாடிக் கொண்டிருந்தது. இனிய உறக்கம். அது உறக்கம் மட்டுமேயானது. அதனால் அலைகளற்றது. கடல் கொண்டது. நிலமற்ற வெளியில் தவழ்வது.

கண்டன் அதை அறிந்திருந்தான். "அவன் நீயே அது" என்றான்.

தர்ம சக்கரம் சுழன்று கொண்டே இருந்தது.

நிலையாமை
சாரமின்மை
அனிச்சை

அது பொருளற்றிருந்ததை அவன் உணர்த்திக் கொண்டிருந்தான்.
ஒரு மண்டலம் அவனை அறிய. அவன் அறவாழி என்று சொல்லிக் கொள்ள சரணம் கூவுகிறேன். அவனிடம் கேட்க வேண்டிய கேள்விகளை இந்த பதினெட்டு வருடங்களில் மொத்தமாய் தொகுத்துக் கொண்டேன்.

முதல் கேள்வி
வாழ்வென்பது என்ன?'

அவன் மறு கேள்வி கேட்டான்

உடல் கொண்டு அறிவதா?
உயிர் கொண்டு அறிவதா?
அறிவதால் அறிவதா?

அவன் தொடர்ந்தான். உடல் ஒரு தொடர் நிகழ்வு. உயிர் ஒரு தொடர் நிகழ்வு. அறிவதும் ஒரு தொடர் நிகழ்வு.

ஆனால் தேடலற்ற ஒன்றில் நாம் அதை அறிவோம். அறிவதும் அதுவும் ஒன்றாய் ஆகிய பொழுதில் வெறுமனே இருப்பதைத் தவிர ஏது செய்வது.

நானே அதற்கு பதில் என்றான். பின் நானற்றதே அதுவும் என்றான். பின் இரண்டுமற்றதும் அதுவே என்றான்.


இரண்டாம் கேள்வி
நோக்கம் என்பது என்ன?

அப்படி எதுவுமில்லை என்றான்.

அதனை இவ்வாறு தொடர்ந்தான். தன்மை என்பதை உருவகித்துக் கொள்ள உன்னிடமும் என்னிடமும் உள்ளது சொல். சொல் எனும் மொழி. மொழி எனும் தொடர்பு. தொடர்பெனும் நிகழ்வு. அதனால் நோக்கம் என்பது அதன் தொடர்புறுத்தலன்றி நிலை நிற்க வழியில்லாதது. அதுவே ஒரு வழியாக வாய்ப்புமில்லாதது. தன்னைத் தானே குவித்துக் கொள்ள விளையும் ஒரு மனத்தின் பல்லாயிரம் பிம்பத் தோற்றங்களிலிருந்து தன்னை உருவாக்கிக் கொள்ள மனம் முயலும் ஒரு பிரதியன்றி வேறில்லை என்றான்.


மூன்றாம் கேள்வி
அறிய இயல்வது யாது?

அறிதல் என்பது இயல்வதால் அன்று. அது தருவிக்கப்பட்டது. அனைத்து உயிர்களுக்கும் அது அதுவாகி நிலைப்பது. அதனால் அறிவது. உன்னுடையதும் பிறிதொன்றும் எப்பொழுதும் ஒன்றல்ல. அதனால் அறிவதும் அத்தகையதே.

ஆனால் சந்தித்துக் கொள்ளும் புள்ளிகளில் அதனை நீ பரஸ்பரம் அறிந்திருக்கக் கூடும். அது நான் அறிந்தவை அல்ல.


நான்காம் கேள்வி
அது என்பது?

ஆம். நாம் அப்படியே உணர்கிறோம். அதன் மூலமே சொல்லைத் திரட்டினோம். அதனைக் கொண்டே அளக்கப்பட அறிந்திருக்கிறோம். அதனாலேயே மிகுதியாய் பயக்கிறோம். அதனால் அதன் காலடியில் நம் அனைத்தையும் சமர்பிக்க கடமைப் பட்டிருக்கிறோம் நம் மூதாதையர் வழி கொண்டு. அதனால் நான் அதனை இப்படி சொல்ல முயல்கிறேன்.

"அது நீயே"


ஐந்தாம் கேள்வி
மரணம் என்பது?

நிகழ்வின் தொடர்ச்சியில் நீ நின்று கொண்டிருக்கிறாய்!

நீ என்பது யார்?

சொல்? நீ யார்?

கை விடப்படும் முன் உன்னிடம் என நீ என சொல்லிக் கொண்டிருப்பது யார்?

அதிலிருந்தே நீ வரையறுக்கப்படுகிறாய்?

அதை நீ முழுமை என சொல்லிக் கொள்ள விருப்பப்படுகிறாய்?

அது இல்லாத பொழுது உன்னில் உருவாகும் விசனத்திலிருந்து உன் கர்மம் தொடரப் பணிக்கப்படுகிறது. அதனால் ஆசுவாசப்படு.

நீ என்பது ஒரு தொடர் நிகழ்வு.

அனைத்தையும் போல!


ஆறாம் கேள்வி
தூய்மை என நீ கொண்டது யாது?

அது விடுபடலன்றி அனைத்தையும் செரித்துக் கொள்வதை. அதனால் மட்டுமே அறிகிறேன் அது தூய்மையானது என்று. அதனாலேயே அது தனித்த இருப்பென்பதுமில்லை என்பதையும், தேடல் நின்ற பொழுதில் ஆல் வேர்கள் பற்றிப்படர்ந்த பெருங்காடெனும் ஒற்றை மரம் எனவும் சொல்லிக் கொண்டு தெரிவு கொள்ள முயல்கிறேன்.


ஏழாம் கேள்வி
காலம் என்பது?

அறிதலற்றது.


எட்டாம் கேள்வி?
உடல் என்பது நானா?

ஆம். அது நீ தான். அதனால் தான் உன்னிடம் உள்ளது. அதனாலேயே உன்னை விட்டு செல்வது கூட. அதுவும் நீ என்று அறிவாய்.


ஒன்பதாம் கேள்வி?
நிலையானதை நான் விளைகிறேன்?

அப்படியெனில். நீ அதனிடம் தான் அதைக் கேட்க முடியும். உன்னை நான் என்று நீ சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அது நீயற்ற ஒன்றாய் ஆகி விடுகிறது. அந்த நீயற்ற ஒன்றை ஒரு மெய்யிருப்பாய் உன்னிலிருந்தே நீ உருவேற்றுகிறாய். அதற்கு அனைத்தையும் தருவிக்கிறாய். உன் ரத்தமும் சதையும் கொண்டு அதற்கு உயிர் கொடுத்து, உணர்வுகள் ஏற்றி உன் எண்ணங்கள் அனைத்திற்கும் ஒரு பருப் பொருள் வடிவை உன் முன்னே கொண்டு உரு கொடுத்து விட்டாய். அதைக் கடவுள் என சொல். அதன் மீது உன் நம்பிக்கையை ஏற்று. அதனை உன் நிலையின்மையின் நிலையிருப்பாய் உருவகிப்பாயாக. அதனால் அதுவே நீ விளைவது. அதனிடம் நீ அனைத்தையும் அறிவாய். ஒன்றைத் தவிர. அது வெறும் வெளிச்சட்டகமாய் இருக்கும் பொழுது.


பத்தாம் கேள்வி?
அன்பென்பது?

அது தர்மமாகப் படுவது. விதி விலக்குகளற்றது. அதனால் அறிதலற்றது.

பதினொன்றாம் கேள்வி?
தர்மம் என்பது?

வெளி என்பதைக் கொண்டு அதனை சொல்ல முடியுமா என்று முயல்கிறேன். என் கடைசி நாட்களில் நான் அதனுள் தான் உழன்று கொண்டிருந்தேன். உண்மையில் என் வரையறைக்குள் என் அறிதலிற்குள் அது இல்லை என்பதை நான் நன்றாகவே அறிந்திருந்தேன். ஆனால் அதனை நான் இவ்வாறு கூறிக் கொண்டேன் பால்குன நதியில் அன்று தன்னந்தனிமையில் நிலவொளியின் பிரதிபலிப்பில் அதனை அறிந்து கொண்டேன். இருப்பற்றிருப்பதின் தோற்றத்தை ஒரு வெளிச்சம் மட்டுமேயாக நான் நினைத்துக் கொண்டேன். மனம் தன் ஆடி பிம்பங்களில் பத்தி விரித்துக் காட்டியது.

நான் அவர்களிடம் இவ்வாறு சொன்னேன்.

நிலையின்மையினால் உண்டாகிய முழுமையின் தரிசனத்தில் வெறுமனே கரைந்து கொள்ளுதல்.

ஆம். கடல் அலை ஏதுமற்றிருத்தல். இல்லையேல் அது இரண்டுமே ஒன்று தான் என்று உணர்தல். ஒன்றை ஒன்று சமணிட்டுக் கொள்ளும் இருமைகளையே நான் தர்மம் என்கிறேன்.

ஆம். அதுவே தர்மமாக இருக்க இயலும்.

பன்னிரெண்டாம் கேள்வி?
துயரம் என்பது

இருப்பின் பொருட்டு அதன் இல்லாமையிலிருந்து அதை வரையறை செய்ய விளைகிறேன்.

எதிரீடுகளுக்குள் அதனை பெருக்கிக் கொள்வதை மட்டுமே நான் என் சொந்த அனுபவத்திலிருந்து அறிந்தது. ஆனால் நித்தியம் என்பதன் கூறுகள் அதில் இல்லாமலில்லை. ஆம். ஒரு நிலையான நிச்சயத்துவம் என்று ஏதுமில்லை. அதனால் அதிர்வுகளினை ஏற்கும் பொழுது சமன் குலைவதும் இயல்பே.

அதனதன் இயல்புகளில் அதனை உள்வாங்கிக் கொள்ளுதல். மென்மேலும் அதன் அடிப்படையினை நோக்கி கூர்ந்து செல்லுதல். அங்கு ஏதும் அற்று இருக்கிறது.

ஆம். அதனை துயர் என்றும் சொல்லிக் கொள்ளலாம். நீ நான் நாம் இங்கு அறிதல் எனும் சொல்லைச் சொல்லிக் கொள்கிறோம். அது மனம் என்பதிலிருந்து தொடங்கியது. அதனுள்ளேயே அடங்குவதும் கூட.

பதின்மூன்றாம் கேள்வி
விவேகம் என்பது

காரண காரியங்களற்றிருப்பது. கட்டற்றதையும் கருணையையும் ஒரு சேர உணர்தல் அது.

பதினான்காம் கேள்வி
கருணை என்பது

உள்வாங்கிக் கொள்வது. அதனால் இலக்கு என்ற ஒன்று இல்லாதது. உணவும் மலமும் எங்கும் ஒன்றாயிருந்தது என்பதை அறிவாயா? அது ஒன்றின் வெவ்வேறு கூறுகள். ஆனால் ஒரு நுட்பமான வேறுபாடு. முன்னதின் காலம். அது வரையறுக்கப்படுவது நாம் வகுத்துக் கொண்டிருக்கும் காலத்தை சார்ந்து. அதனால் நாம் அது இவ்வாறு என்று நினைத்துக் கொள்கிறோம். இலக்கற்ற ஒன்றிடம் நாம் மன்றாட்டு செய்யலாம். ஆனால் அதன் எதிர்வினைகள் உன் உடன்பட்டு இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமுமில்லை. தன்மை மற்றமையை சார்ந்து அதில்லை.


பதினைந்தாம் கேள்வி
பொருள் என்பது

அப்படி நீ காட்சிப்படுத்துவதும் காண்பதும் நிலைத்தன்மையற்றது. ஒரு நீடித்த ஒழுக்கோடத்தின் ஒரு புள்ளியில் நீ அதைக் காண்கிறாய். மற்றொரு புள்ளியில் அது வேறொன்றாகவும்.

பதினாறாம் கேள்வி
தரிசனம் என்பது

அறிந்து கொண்டதை ஸ்தூலப்படுத்த முயல்வது. அது அதன் பல்லாயிரம் கரங்களுடனும் விழிகளுடனும் நம்மை நோக்கிக் கொண்டிருக்க உந்துவது. இன்னும் இன்னும் என்று பெரிதாகிக் கொண்டே செல்வது. அதனாலேயே வழித்தடம் உண்டானது. தனித்தன்மைகளை உருவாக்கிக் கொண்டோம். அதைப் பேணத் தொடங்கினோம். குழுவாகினோம்.

அது தன்னுள் பெருகிப் பெருகி ஒற்றைபெரும் பரப்பாய் ஆனது. ஒன்றை, ஒன்றே ஒன்றை அது தவர விட்டிருந்தது.

பெரிதாகும் தோறும் அது எப்பொழுது உதிர்ந்து விடுகிறது.

பாதையற்றிருப்பவனே பயணம் செய்யத் தகுதியானவன்.

பதினேழாம் கேள்வி
ஆசை என்பது

நான் என்பதிலிருந்தே அதைத் தொடங்கினேன். ஒரு வேட்டை மிருகம் போல அதைத் துரத்திச் சென்றேன். உடல் உணர்வு மனம் கருத்து என்ற சொற்களிற்குள், ஒவ்வொன்றிலும் அதை நான் அறிந்திருந்தேன். கட்டுப்பாடின்மை ஒரு சேரத் தருவது அது. சுதந்திரமும் நிலையின்மையும். தன்னைத் தானே உண்பது போல உண்டு கொண்டிருப்பதை, காலமற்ற வெளியினுள் கால்கள் கட்டுண்டு சீழ் பிடிக்க துர்நாற்றம் கப்ப, சொந்த மலத்தினுள் உருண்டு திளைப்பதை, இன்னும் இன்னும் என்று கண்கள் மிளிர என் முன்னே அது காத்திருப்பதை.

"உறக்கமற்றவனின் இரவுகள் மிக நீண்டவை"

இப்பொழுதும் உணர்கிறேன். விடுபடல் என்பது அர்த்தமற்ற ஒன்று. அப்படி ஏதும் உயிர்களுக்கு இல்லை. ஏற்றுக் கொள்ளுதல். தன் முன்னே பல்லாயிரம் ஆடி பிம்பங்களுக்குள் இன்னும் பலகோடிகளாய் பெருக்கி வைத்திருக்கும், இருப்புகளை அடையாளம் காண்கிறேன். ஒவ்வொன்றிலும் நான் என நான் சொல்லிக் கொள்வதை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இது ஒரு விளையாட்டு என்பதை அறிகிறேன். ஆம். அந்த சாயைகளற்ற நான் யார்? அப்படி ஒரு நான் என்பதே இல்லை. உண்மையில் நான் என்பதுமில்லைதானே.

"இருள் என்பதும் ஒளி என்பதும் ஒன்றுதான்" இரண்டும் ஒன்றின் இரு கூறுகள். ஒன்றை ஒன்று நிறைத்துக் கொள்பவை.

பதினெட்டாம் கேள்வி
நிர்வாணம்

மூப்பன். வெறுமனே படுத்துக் கிடக்கிறான். சங்கொலியும் முழவும் ஒரு சன்னமான மலைச்சுனை போல ஒலிந்து கொண்டிருந்தது. அவன் தன் கடைசித் தருணத்திலிருக்கிறான்.

பிள்ளைகளுக்குள் கொண்டாட்ட மன நிலை. எங்கும் கத்தலும் கூச்சலும் ஆட்டமுமாய்.

நடுவே தீ மூட்டி ஆடிக் கொண்டிருந்தனர்.

அவன் தன் கடைசிச் சொல்லை முடிக்க விரும்பவில்லை. அது ஒரு சொல்லாக இருக்க அவன் விரும்பவில்லை. தன் பிள்ளைகளை தான் வீற்றிருக்கும் மேட்டிலிருந்து கீழே பார்த்தான். முழக்கம் அவன் செவிகளை அடைத்து நிரம்பியது.

இருந்தும் சொல் எப்பொழுதும் மனிதனை விட்டுவிடுவதில்லை.

அவன் தன்னுள்ளே அதனை சொல்லிக் கொண்டிருக்கிறான். அது பெருகுகிறது நிரம்பி வழியத் துடிக்கிறது.

சயனிக்கிறான். அதனை சொல்லாக்காமல் விடுக்கிறான். அதனால் அவனே அது.

"மகா காயம்"




அபி கவிதைகள் பற்றி


ஒரு தொடர் நிகழ்வு, அதன் புள்ளியிலிருந்து விலகி திடூமென என்னைப் பார் பார் என்றது. பழுத்த சருகுகள் அனிச்சமாய் உலவிக் கொண்டிருந்தது. அதன் திசைகள் எங்குமே வகுக்கப் பட்டிருக்கவில்லை. அல்லது எங்குமாய். அந்தி அதனை தன் சொந்த நிறத்தில் கொண்டிருந்தது. சருகுகளுக்கடியில் வாழ்தல் பற்றிய கேள்வி மெல்ல மெல்ல பிறாண்டத் தொடங்கியது. ஒன்றைப் பற்றிக் கொள்ளுதலும் அதிலிருந்து விலகுதலுமாய் ஒரே நேரத்தில் உணர்தல். பாதுகாப்பே தன்னுள்ளே கொண்டிருக்கும் விபரீதத்தை அதன் நிர்ணயமற்ற திசைகளை உணர்த்துதல் மூலமாய் கொஞ்சம் பிசுபிசுத்த தன்மையை உருவாக்கிக் கொண்டிருந்தது.

மொத்த பிரபஞ்சமும் அந்த உதிர்ந்த சருகுகளுக்கடியில் பொதிந்து கொண்டிருக்கிறது. அதன் நிழல் ஊடுருவும் அடிப்பரப்புகளிலிருந்து ஒளி தன்னை உறிஞ்சியும் பின் விடுவித்தும் கொண்டிருக்கக்கூடும். அமைதியற்றிருந்த யதார்த்தம் அதை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் பொழுது அதன் அடியில் போய் ஒளிந்து கொள்வதை விட வேறு என்ன சாத்தியம் இருந்து விடக் கூடும்.

ஒளி தன்னுள்ளேயே தன் இன்மையையும் கொண்டிருக்கிறது. அதனாலேயே அந்தியை நான் தேர்ந்தெடுக்கிறேன். அந்தி சாயைகளினால் தன்னைக் கட்டவிழ்க்கிறது. ஆனால் அது ஒரு ஊர்ந்து செல்லும் பறவை போல. இல்லையேல் உடலன்றி சிறகுகள் மட்டுமே கொண்ட பறவை.

அந்தியை சருகுகளுக்குள் சிறுதுண்டுகளாய் உருமாற்றிக் கொண்டிருக்கும் பொழுது அது தன் படபடத்தல் மூலமாய் தன் இருப்பை வெளிக்கிறது.

ஒளி இருள் தனக்குள் முணங்கத் தொடங்கியது.

அந்தி அடங்கும் பொழுது அதன் ஆசுவாசமற்ற அடிப்பொழுதுகளில் வெறுமனே தொற்றிக் கொள்கிறேன்.

"அருமையாய்க் கழிந்தது
சருகுகளடிப் பொழுது"

மாலை- சருகுகளடிப் பொழுது

சருகுகளினடியில்
புதையுண்டு
லேசாக மூச்சு முட்டிய
சுகம்.
எல்லாவற்றிலும் தொடப்பட்டு
எதையும் தொட இயலாதிருந்ததின்
மருட்சி,
வலிக்காமல்
தொற்றிக் கிடந்த துக்கம்
அறியாமையின் மீது
பதியப்பதிய
ஊர்ந்து திரிந்த பரவசம்,

பெயர் தெரியாத பறவைகளின்
அந்திப்படபடப்புகள்
உடம்பை ஊடுருவிப் போயிருக்கலாம்

சிறுமணிகளின்
இடையுறா ஒலியைப் போல
ஒரு கதகதப்பு
அஸ்தமனம் உதிர்ந்த சருகுகள்டயில்
படர்ந்திருக்கலாம்

எவரையும்
என்னையும்
நுழைய விடாதிருந்த
பிரக்ஞ்சயின் வெற்றிடம்
அந்தியின் தடவலில் இணங்கிக் கொள்ள

அருமையாகக் கழிந்தது
சருகுகளடிப் பொழுது.

வெள்ளி, 4 அக்டோபர், 2019

மொழியுயிரி 1

அது நிழல்களைத் தொந்தரவு செய்பனவாய் இருக்கின்றது. தன்னைத் தானே உண்ணும் மிருகம் கண்டேன். எனக்கு தெரியவில்லை. உணவும் மலமும் ஒன்றாவதைப் பற்றி அறிவாயா? நான் அறிகிறேன். உணர்கிறேன். உழல்கிறேன். அதுவன்றி இல்லாத பொழுது இறந்திருக்கக் கூடும். இல்லை அதுவுமில்லை. அதன் அலகில்லாமல் நான் எங்கும் நினைவு கொள்ளப் போவதுமில்லையே.

ஏன்? எதன் பொருட்டு நான் வாழ்கிறேன். இந்த இரு இரவுகளாய் ஒன்று பத்து பல்லாயிரம் கோடிகளாய், ஒரு வேளை அதற்கும் மேலாய் உள்ளும் புறமுமாய் ஓசையாய் இரைச்சலாய் காட்சியாய் படிமமாய் அதுவன்றி ஏதுமில்லாது, குவியக் குவிய நிரம்பி வழிந்து கொண்டே இருக்கும் அதன் பெருக்கோட்டத்தில் நான் நான் நான் என்று தேடிக் கொண்டிருந்தேன். இது உண்மையில் ஒரு பூதம் போல என் முன் வீற்றிருந்தது.

அதன் கேள்விகளுக்கான என் தவறான பதில்களுக்கெல்லாம் அதுவே தண்டனை விதித்தது. அதுவே காரணம் சொன்னது. அதுவே தலையாட்டியது. அதுவே ஆறுதலும் சொல்லிக் கொண்டது. அது நானாகவும் இருந்த பொழுது நான் ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். அது நானல்லாத பொழுது அதற்கு நான் அடிமையாக கற்றுக் கொள்ள முயன்றேன். அது தன்னைத் தானே உண்ணும் மிருகம். அதுவே உணவும் மலமும். ஆனால் வெளித்தோற்றத்திற்கு ஒரு கணவானைப் போல அது இருக்கக் கூடும். என் நிழல்களில் அது ஒண்டி வாழ்ந்தது. ஒட்டுண்ணிப் பிறவி என்று அதனை சபித்தேன். உண்மையில் அதனை உண்டு வாழ்பவனே நான். அதனாலேயே அதனிடம் இப்படிக் கேட்டேன். நீ! என்று நின்று கொள்வாய் என்று. பாதாள அறைகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் என் சாயைகளை நீங்கள் திருடி வந்தீர்கள். அவைகள் அங்கிருந்து பல்கிப் பெருகி வளர்ந்து இங்கு முழுவதுமாய் வியாபித்து விட்டது. ஆனால் அந்த அறைகள் அங்கேயே தான் இருக்கின்றன. அதனை உன்னால் அறியக் கூடும் என்று நம்புகிறேன்.

இங்கு நீ கேட்டுக் கொண்டிருக்கும் எதிரொலிகள் சாயைகள் மட்டுமே. நான் உன்னிடன் கெஞ்சிக் கேட்பது என்னை விடுவி என்று தான் என்று புதிர் போட்டது. நான் அதன் பாதையை அறிந்திருந்தேன். அதனாலேயே அங்கு செல்வதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறேன். அதற்கும் தெரியும் நான் தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பதனால் மட்டுமே வாழ்கிறேன் என்று.

சாயைகளின் உலகில் எதற்கும் தர்க்கம் தேவையில்லை. அங்கு பிரபஞ்சம் என்பதே கொஞ்சம் பெரிய சாயை மட்டுமே. அது அப்படி சொல்லவில்லை. திருப்பி வேறு மாதிரி அதனையே சொன்னது. நாம் பிண்ணிப் பிணைந்தவர்கள். நீ என்று சொல்லிக் கொள்வது வரையறை செய்வது எதனை வைத்து. நாங்கள் இல்லையேல் எதனை நீ பொருள் படுத்துவாய். நாங்கள் உங்களிடம் சன்னதம் வந்து அமைந்ததனால் மட்டுமே உங்களின் ஜீவிதம் தொடர்கிறது. இல்லையேல் நீங்கள் கட்டியமைக்க முற்படும் ஏதும் வாய்ப்பில்லை. அதன் அடித்தளங்கள் முதல் அனைத்தும் நாங்கள். எங்களின் ஊடுபாவாய் மட்டுமே நீங்கள் இருக்க இயலும். வேறு எதற்கும் உங்களுக்கு வாய்ப்பில்லை. இப்படி விளக்கக் கூட நாங்கள் வேண்டும் உங்களுக்கு.

ஆனால் அன்றொருவன் இருந்தான். அவன் அனைத்தையும் அவித்தான் என்று அவன் கதையை சொல்ல ஆரம்பித்தது.

அவனும் உன்னைப் போலவே இருந்தான். அவன் பாதைகளை கண்டு கொள்ள முயலவில்லை. அவன் பயணம் செய்பவனாய் மட்டும் இருந்தான். எங்கும் எங்களை அவன் அழைக்க மறுக்கவில்லை. எங்களை கதைகளாக உருமாற்றும் வித்தை அவனுக்கு தெரிந்திருந்தது. எங்களின் உலகிற்குள் அவன் ஒரு பாம்பினைப் போல இருந்தான். கவற்சியும் பயமும் ஒரு சேர எங்களைத் தொற்றிக் கொண்டிருந்தது. அவன் எங்களை அறிய விரும்பவில்லை. மாறாக ஒரு வித்தைக் காரனைப் போல எங்களைத் திருப்பித் திருப்பி போட்டுக் கொண்டிருந்தான்.

அவனிடம் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு விந்தையான பதில்களால் ஒரு மாயவலை போல அவனது சுழற்சியில் எங்களை ஆட்படுத்தினான். நாங்கள் கட்டுண்டு கிடக்கிறோம் என்ற உணர்வே வாராது எங்களை அடிமையாக்கி வைத்திருந்தான்.

நீ யார்? என்றால்
வெறும் பிம்பம் என்றான்.
அவனை நாங்கள் நேருக்கு நேராக பார்ப்பதை தவிர்த்தோம். ஆம். அது தற்கொலை போலவே தான். அங்கு எதுவுமில்லாதிருந்தது.

அவனின் பலவீனம் ஒன்றுதான் என்பதை பிற்பாடி அறிந்து கொண்டோம். ஆம். அவன் பற்றில்லாதிருப்பவன் என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்வதை அறிந்தோம். அதையே  அவனிடம் எதிரொலிக்கத் தொடங்கினோம். அவன் வீழ்ந்தான் என்று ஆரவாரம் கொண்டோம்.

இல்லை. அவன் பிம்பம் மட்டுமேயனாதாய் தன்னை நிகழ்த்திக் கொண்டிருந்தான். நாங்கள் அதனை அறிந்த பொழுது அவன் அங்கு இல்லை.

திரும்பவும் அதே கேள்வியை அவனிடம் நாங்கள் கேட்டோம்.

அவன் ஆம் என்றான்.

சாரைப்பாம்புகளைப் போல அவன் உடலெங்கும் ஊறினோம். அவன் ஆம்! ஆம்! என்றான். அப்பொழுது அவன் தன் மலத்துவாரத்தின் வழி ஆம்! ஆம்! என்று எங்களை வெளியேற்றிக் கொண்டிருந்தான்.

ஆம்! ஆம்! என்பது எங்களைத் தின்றது. பின் செரித்துக் கழித்தது.



புதன், 14 ஆகஸ்ட், 2019

உன் சமூகம் எனக்கு முன்பாகச் செல்லும்

ஒவ்வொரு முறை அவனை நினைக்கும் பொழுதும் இதைத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

அப்பா ஏன் அப்படி அவனை வைத்திருந்தார் என்று.

அவனை எப்பொழுதும் கடவுள் ஸ்தானத்தில் இருந்து அவர் இறக்கியதே இல்லை. ஆனால் அதனாலேயே அவனை என்னால் இன்னும் அதிகமாக புரிந்து கொள்ள முடிந்தது. அவன் என்றைக்குமே அதை விரும்பியிருக்க வாய்ப்பில்லையோ என்ற அய்யப்பாடும் உண்டு என்னிடம். அவன் உண்மையில் கடவுளாக விரும்பினான் என்றே நான் நினைக்கிறேன். அவன் மனிதனாக வாழவும் நினைத்தது தான் மிகத் தவறாகி விட்டது.

அப்பா ஏன் அப்படி எழுதி இருந்தார் என்று அப்பொழுது தான் புரிந்தது. அவரும் அதைத் தான் அவனிடம் எதிர்பார்த்திருந்தார். அவரது டைரியில் இந்த வசனம் எப்பொழுதும் இருக்கும்.

"என் சமூகம் உனக்கு முன்பாகவே செல்லும்"

இது கொஞ்சம் விட்டேத்தி தனமாக இருந்தாலும் இது அப்பாக்கும் தான் என்று தோன்றியது. அவனும் இந்த வசனத்தை தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டிருந்திருப்பான். ஏனென்றால் அவனது நம்பிக்கைகள் தவிடு பொடியாகிக் கொண்டிருக்கும் பொழுது அவன் அதனை ஒரு ஜபம் போல சொல்லிக் கொண்டிருக்கக் கூடும்.

இன்னொன்று
"மாட்டுத் தொழுவத்தில் பிறந்தாலும் மன்னரின் மணிமுடிகள் அவனது காலடியில் கிடந்தது"

இது அப்பாவின் வசனம். இது அப்பா தனக்காக எழுதிக் கொண்டது. அதனால் இதில் அவனின் பங்கு என்று ஒன்றுமில்லை. ஆனால் அவனும் அப்படித்தான் நினைத்திருப்பான், அதற்காகவே அப்பாவின் ஒரே தெய்வமாக அவன் இருந்திருக்கவும் கூடும்.

அவன் ஏன் சிலுவையில் கிடந்தான் என்று தோன்றும் பொழுது இந்த வசனம் தான் மனப்பாடம் போல என்னுள் உருண்டு கொண்டு வெளி வரும்.

"நீ எதைக் கொண்டு அளக்கிறாயோ அதைக் கொண்டே நீயும் அளக்கப்படுவாய்"

திடுக்கிட்டு எழுந்து அமர்ந்த பொழுது அப்பா நடந்ததை மிக விளக்கமாக என்னிடம் சொன்னார்.

அவன் இறக்கவே இல்லையாம். அது எல்லாம் சித்து விளையாட்டாம். Passion of christ படத்தை போட்டுக் காண்பித்து. பார் பார் என்று அங்கலாய்த்தார். எனக்கு விளங்கவில்லை. அப்பா ஒரு நூறு முறை இந்த படத்தை பார்திருக்கக் கூடும். ரத்த விளாறாய் அவன் கிடக்கும் பொழுது அப்பா மிக மும்முரமாய் ஜபம் சொல்லிக் கொள்வதை நான் அருகிருந்து பார்த்திருக்கிறேன். அப்பா யாருக்காகவும் எதற்காகவும் வேண்டிக் கொண்டதில்லை. அவரது வேண்டுதல்கள் எல்லாம் அவனைப் பற்றி மட்டுமே. அப்பா கனவு கண்டு கொண்டிருந்தார் அவன் தேவ மைந்தன் தேவ மைந்தன் என்று சதா சொல்லிக் கொண்டிருப்பார்.

ஆனால் ஒரு சள்ளைத்தனம் வேண்டுமென்றே செய்தேன். கலீல் கிப்ரானை அப்பாக்கு அறிமுகப் படுத்தினேன். அவர் முதலில் நம்பவில்லை. பின் அந்த ஏழு முறை அறையப்பட்டதை நினைத்து நினைத்து அப்பா என் மீது மிக இரங்கலானார். ஏன் இப்படி அவன் இருக்கிறான். ஏன் அவன் மேரியிடம் பேசவே இல்லை என்று மன்றாடினார்.

அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்து நான் அவரிடமே உண்மையை போட்டு உடைத்து விட்டேன். அது பௌர்ணமி தினமாக இருந்தது. இரவு முழுதும் தன்னந்தனியே குடித்துக் கொண்டே இருந்தார். அப்பா அப்படி இருந்து நான் பார்த்ததே இல்லை. அவர் ஜபிக்கவும் இல்லை என்பதை அறிந்தவுடன் நான் பயம் கொள்ள ஆரம்பித்தேன்.

நான் அதை சொல்லியிருக்கக் கூடாது தான்.

அதில் ஒரு தீர்வு இருந்தது போல தோன்றியது எனக்கு. அவன் இறந்து விட்டான் என சொல்லும் பொழுது இன்னும் ஆசுவாசமாக் இருந்தது. ஆனால் அப்பா அதை முழுக்க நம்பியே விட்டார். ஒரு வேளை அப்பா அப்படி நான் என்றேனும் சொல்வேன் என்று எதிர்பார்த்திருந்தாரோ என்னவோ.

ஆனால் அடுத்த ஞாயிற்றுக் கிழமை ஜபத்தில் அப்பா உருகிக் கொண்டிருந்தார். இரண்டு மணி நேரங்கள் கிட்டத்தட்ட முட்டிப் போட்ட படியே இருந்தார். பின் பாவமன்னிப்பு கூடத்தில் கலந்து கொண்டு அழுது கொண்டே வெளியே வந்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் அந்த வசனத்தை ஒரு முறை எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டிருந்தேன்.

அப்பா மெல்ல என் அருகே வந்து என் தோள்களைப் பற்றிய படியே கேட்டார். அந்த மூன்றாம் தினம் என்று என்று. நான் வெறுமனே அவரது கண்களைப் பார்த்தேன். அவர் நேற்று முழுதும் குடித்திருந்தார். அவரால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவர் ஏன் அதை எதிர்பார்த்தார். இல்லை அதனை சாக்காக கொண்டு இப்படி ஆகி விட்டாரா என்று எனக்கும் புரியவில்லை.

நான் அந்த டைரியின் முதல் வசனத்தை இப்பொழுது சொல்லிக் கொண்டேன். ஆம் .அது அப்படித்தான் நடந்து விட்டது போல.

அன்று இரவு என்னை அருகே அழைத்து கட்டிப் பிடித்துக் கொண்டு முத்தம் கொடுத்தார். நான் செய்வதறியாமல் திகைத்து பின் வெறுமனே சிரித்தேன். அவரது கண்களை உண்மையில் பார்ப்பதை தவிர்த்தேன்.

அப்பா என்னிடம் இப்படி கேட்டார்.

அவன் ஏன் இப்படி என்னிடம் நடந்து கொள்கிறான்.

நேற்று நம் வயல் வெளியைத் தாண்டிய கோயிலிலில் தன்னந்தனியே அவன் மட்டும் தொங்கிக் கொண்டிருந்தான். யாருமே இல்லை. துணைக்கிருந்தவர்கள் என்று நான் நினைத்த யாருமே ஏன் மேரி கூட அங்கு இல்லை. அவன் செத்துக் கிடந்தானா என்று நினைத்து அருகே சென்றேன். இன்னும் உயிர் இருந்தது. ஆனால அவன் என்னிடம் இவ்வாறாக சொன்னான். என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் நான் நம்பினேன்.

அதனால் தான் கேட்கிறேன். அவந் ஏன் என்னிடம் அவ்வாறு நடந்து கொண்டான். உனக்கு ஏதேனும் புரிகிறதா?

அவன் தன்னை இறந்தவன் என்றான். தான் காலாவதி ஆகி வெகு நாட்கள் ஆகிறது என்றும். இன்று உன்னிடம் பேசுவது உண்மையில் என் பழைய இருப்பிலிருந்து மிச்சம் வந்த சின்னஞ்சிறிய எச்சம் என்றும். அன்று மேரி என்னிடம் தோற்றுப் போனவன் நீ என்று சொல்லி சென்றாள் என்றும். என் அன்னை என்னைப் பார்த்து விட்டு, காறி உமிழ்ந்தாள் என்றும் நான் அதைப் பார்த்து விட்டே அந்த வசனத்தை திரும்பவும் நினைத்துக் கொண்டேன் என்றும் சொல்லிக் கொண்டான். உண்மையில் அவன் தனக்குள்ளேயே இதை சொல்ல நினைத்திருந்தான். என்னிடம் சொல்லும் பொழுதும் என் முகத்தை அவன் பார்க்கவே இல்லை. அவன் திரும்ப பள்ளி முழுதும் அதிர சத்தமாக கூவினான்.

"உன் சமூகம் எனக்கு முன்பாகச் செல்லும்"

அப்பாவிடம் நான் இவ்வறு சொன்னேன். அவன் உன்னை ஏமாற்ற நினைக்கிறான். அவனிடம் உன் பிரார்த்தனைகளை சொல்லிப் பார். ஒரு வேளை அவன் இதையே வேறு மாதிரி உன்னிடம் சொல்லக் கூடும்.

" பாவப்பட்டவர்களுக்கே சொர்க்க ராஜ்ஜியம்" என்று உன்னிடம் அவன் சொல்லக் கூடும்.


ஆம். அதுவும் ஒரு முறை நடந்தது. அது அப்பா தன் கழிவறை ஜபத்தில் இருக்கும் பொழுது. முக்கிக் கொண்டே அவர் அதை நினைத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கே தோன்றியது.

உண்மையில் அந்த மூன்றாவது நாளில் என்ன நடந்திருக்கும் என்று அப்பொழுது தான் எனக்கு புரிந்திருந்தது.



திங்கள், 12 ஆகஸ்ட், 2019

அபி கவிதைகள் பற்றி

"இங்கே படரும் இருளைச்
சிறிது சுண்டினால் கூட
என் மலை எனக்கு பதில் சைகை தரும்"

"என்னைச் சுற்றி நிரம்பும் காட்டுக் களிப்பு"

என் வாசற் படிகளிலிருந்து நகர்ந்து கொண்டிருந்தேன். பிறிதொரு நாளில் நோக்கிக் கொண்டிருக்கும் பொழுது திட திரவமற்றிருந்தேன். ஒளியும் இருளுமற்றிருந்தேன். கால்களுக்கடியில் குழைவாய் என் நிலம். சுற்றிலும் உயிர்த்துடிப்புகளின் அமைதி. சலனங்களிற்குள் புகுந்து துளிகளாய் உருமாறிக் கொண்டிருந்தேன். தவிரவும் இன்றிலிருந்து மட்டுமே முளைக்கும் தாவரங்களின் வேர்களைத் தொற்றிக் கொண்டு எனக்கான பசியினை ஆற்றிக் கொள்ள விளைகிறது. ஆம். மொழி அதன் அர்த்தப்பாடுகளை இழந்து விட்டிருந்தது. பொருள்கள் அதன் ஸ்தூல இருப்பினை களைந்து விட்டிருந்தது. என்னிடம் பகிர்ந்து கொள்ள ஏதுமே இல்லாத பொழுது வெறுமனே வாசற் படிகளில் வந்திருக்கிறேன். என் இருப்பு புகையாய் ஆகியது. எல்லாவற்றிலும் நான் ஆகியது. எல்லாமுமே நான் இன்றி ஆனது. ஊளையிடும் வானத்திலிருந்து இறங்கி வந்தது எனக்கான மேய்ச்சல் நிலம். தள்ளாடி தள்ளாடி உருள்கிறது மொழி. முயற்சியின்றியும் அமைதியின்றியும் அலைவுற்றுத் திரிந்து கொண்டிருந்த காலம், மிகப் பெரிய தடாகம் போல மையத்திலிருந்து விளிம்பை தன் முடிவற்ற அலைகளினால் விழுங்க விழுங்க, நிலங்கள் புரண்டு படுக்கத் தொடங்கின.

"அறிந்தவைகளின் மறுபுறங்கள் திரண்டு
மின்னி இழுத்து
வெறியோடு வருகின்றன
அல்ல அல்ல அல்ல என்று
பொழிந்து பிரவகிக்க
அழித்துத் துடைத்து எக்களிக்க
வருவது தெரிகிறது"

எடையிழந்திருந்தது அனைத்து சூழலும். பலூன்கள் போல ஆகியிருந்தது உண்மையில். சில சமயங்களில் தழல் போலவே பற்றிக் கொண்டது. அப்பொழுது எதனுடனும் இணைந்து கொள்கிறேன்.அவைகளும் என்னைப் போலவே உருமாறும் வரை விடுவதாய் இல்லை. சரியாக சொல்ல வேண்டுமெனில் வாசல்களிலும் ஜன்னல்களிலும் ஊடுருவிக் கொண்டிருக்கும் வெளி ஒன்றிலிருந்து அந்த எடையின்மை நீரினைப் போல வழிந்து நிறைந்தது. அப்பொழுது ஒன்றினுள் ஒன்றன் மேலாய் ஒன்றை ஏற்றிக் கொண்டு பிறிதொன்றாய் அதை ஆக்கி வைத்திருப்பேன். அந்தி மட்டுமே அதற்கு ஏதுவாயும் இருந்தது. அதன் பதுங்கு குழிகளுக்குள் காலாதீதமாய் சாம்பல் வண்ணம் நிறைந்து கிடந்தது. மற்ற நிறங்களுக்கில்லாத வசீகரம் இந்த நிறத்தில். இது எதுவுமில்லாத எதனையும் ஏற்றிக் கொள்கின்ற நிறம் போல. அந்தி அதன் எல்லையின்மையைத் தொட்டு உசுப்பி விடுகிறது. அதன் நிறம் பழுத்து இருளாகிறது. அங்கு கோடுகள் அதன் மஞ்சள் வண்ணத்தை அழித்துக் கொண்டே இருக்க ஊர்கள் ஊராகிக் கொண்டே இருப்பது. ஒரு பூரணமான தொடர் நிகழ்வு.

"பொழுதின் நினைவும்
நினைவின் பொழுதும்
இடைச்சுவர் தகர்ந்து
ஒன்றினுள் ஒன்றாகி
ஊர் ஆகின்றன"

ஊர் தன் மிகச்சிறிய புள்ளியில்"

வெளிச்சமும் இருளும். இந்த முரணிலிருந்து இது இரண்டும் முயங்கி விட்டிருந்த ஒன்றை அடைய எத்தனிப்பதே பிரயாசை. நடமாட்டங்களில்லாத தெருக்களில், கவிந்த நிழல் பரப்புகளில், நிதானமாய் கிளை பரப்பிக் கொண்டிருக்கும் வேர்களில், திட திரவமற்ற இருப்பாய் வியாபித்து உயர்ந்து நிற்கும் மலைகளில், கால்களுக்கடியில் பதுங்கிக் கொள்ள விளையும் தன்னிருப்புகளில், அலைந்து கொண்டே இருக்கும் எண்ணங்களின் நினைவுகளில், பால்யம் தீற்றி விடுபட்டிருந்த அறைகளுக்குள் மெல்லக் கவிந்து உருக்கொள்ளும் ஞாபகங்களினுள் திடூமென முரணற்ற ஒன்றைக் கண்டு திகைத்து உள் திரும்பிக் கொள்வதுமாய் பித்து பிடித்துக் கொண்டிருந்தது மொழி வழி.

"கனவு அன்று எனத் தோன்றினாலும்
கனவாகவே இருக்கலாம்"










புதன், 5 ஜூன், 2019

கஞ்சா


நீள் பட்டைக் கோடு. செந்தீற்றலாய் உருகி விழுந்து கொண்டிருந்தது. மஞ்சள் காவி வெண்மை பச்சை கருமை நீலம் குழைந்து குழைந்து ஓடியது. சுழல் நடுப்புள்ளியிலிருந்து வண்ணங்கள் முளைத்துக் கொண்டே இருந்தது.
“முன்பு ஒரு பயணத்தில் விண்மீன் உறங்கும் நேரத்தில்”
“முன்பு ஒரு பயணத்தில் விண்மீன் உறங்கும் நேரத்தில்”
தப்பித்துக் கொள்ள முனைவது போல, கடல் தன் பல்லாயிரம் கரங்களால் கரையைப் பற்றிக் கொள்ள முயன்று கொண்டே இருந்தது. அலைகளின் நகங்கள் பழுத்து ஒடிந்து கொண்டிருந்தது. செம்பழுப்புக் கோளம், பட்டைத் தீற்றல். வண்ணங்களின் ஒழுங்கு குலையக் குலைய உருகிய சுழல் பந்து, விசைந்து தலைக்கு மேலே குதித்து கால்களுக்கடியில் குப்புற விழுந்தது.
தன்னைச் சுற்றிய மோனம் அவிழ்ந்து பேரிரைச்சல். மெல்ல அடுத்த இழுப்பு, கழுத்துக்குள் புதைந்த கனத்த புகை உடலினுள் அமைதியற்று அலைந்து என் மார்பினுள் ஒரு தனித்த உயிர் போல துடிக்கத் தொடங்கியது.
புற்கள், எண்ணிலடங்கா தூரம் அதன் நுனியிலிருந்து முளைத்து நெளியும் பல வண்ணப் புழுக்கள். மஞ்சள் நிறப்புழுக்கள் நீர்த்தாரைகள் போல இண்டு இடுக்குகளெல்லாம் ஓடிக் கொண்டிருந்தது. இடுப்புக்கு கீழே ஒன்றுமே இல்லாதது போல, கால்களற்று மிதந்து கொண்டிரூந்தேன்.
மூர்க்கமாக ஒரு அடி, மூக்கிலிருந்து அடர்ந்து குருதி வழிந்தது. தலை குப்புறக் கிடந்ததில் முகமெல்லாம் சிவந்திருந்தது. மெல்ல அடுத்த இழுப்பு.
இந்த முறை, மணல் மேடுகளுக்குள்ளிருந்து சில் வண்டுகளைப் போல உருள் உருளாக உடல்கள். நிறங்களற்ற உடல்கள். இல்லை நிறமிருந்ததா? என்ன நிறம் என்று யூகிக்க முடியவில்லை. ஆண் பெண் ஆணிலி பெண்ணிலி என்று பிரித்தறிய முடியாத உடல்களின் பெருக்கு. நடுவே அதே வட்டச் சுழல். அது ஒரு மாபெரிய சக்கரம் போலவும், அதனுள்ளிருந்து இந்தப் பெருக்கு துளிர்த்து பெருத்துக் கொண்டே இருப்பது போலவும் இருந்தது.
தாகம் கருத்த உருவமாய் என் தலை மேல் ஏறி அமர முயற்சித்து, வழுகிக் கொண்டிருந்தது. அதன் பெரிய உடல் மிருக வாசனையுடன் முணகிக் கொண்டிருந்தது. ஒரு கரடியைப் போல ரோமங்களடர்ந்த அதன் உடலிலிருந்து பழுப்பு நாகங்கள் மொலுமொலுத்து என் உடலினுள் இறங்கிக் கொண்டிருந்தது.
கண்ணாடியைப் பார்க்கிறேன். என் முகம் பலூன் போல விரிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. வாஷ் பேசினில் வாய் மூக்கு கண்கள் காதுகள் எல்லாம் தனித்தனியே மிதக்கிறது. கழிவுப் போனியினுள்ளிருந்து எட்டிப் பார்த்தது என் குறி. சுற்றிலும் நான் சுவர்களிலிருந்தும் எட்டிப் பார்க்கின்றன நிறங்களற்ற உடல் பொதிகள்.
விளக்கை அணைக்க முயற்சிக்கிறேன். நீண்ட ட்யூப் லைட்டுகள் சுருங்கிச் சுருங்கி விந்துத் துணுக்குகளைப் போல உத்திரத்தில் சொட்டிக் கொண்டிருந்தது. குண்டு பல்புகள் விட்டில் பூச்சிகளாய் ஒளிர்ந்து ஒளிர்ந்து சிமிட்டிக் கொண்டே, மின் விசிறிகளுக்கிடையில் அரைபட்டுக் கொண்டிருந்தது. கால்களுக்கிடையில் சதுப்பு நிலமாய் ஆகியிருந்தது. புதையுண்ட பாதங்களில் நசிந்து உடைந்து, உடைந்த இடத்திலிருந்தே குத்தி உயர்ந்தது மரங்கள். மரங்களில் இலைகளுக்கு பதிலாய் கட்டுண்டு கிடந்தன சிறகுகள். மரங்களின் வேர் முண்டுகளில் சுருக்கிட்டு தலை கீழாய் தொங்கிக் கொண்டிருந்தன அதன் கூடுகள். நான் மண்ணுக்கடியிலிருந்து வான் நோக்கி உயர்ந்து கொண்டே இருக்கும் மரங்களைக் காண்கின்றேன். அதன் உள்ளறைகளின் இடைவெளிகளில் பற்றிப் படர்ந்து கொண்டிருந்தன முகில்கள். வானம் மாபெரும் கடல். அதன் அலை நுனிகளிலிருந்து பொழியும் வண்ணங்களின் மழையிலிருந்து, துளிகள் என் உடலெங்கும் நொதித்து உப்பு வீச்சத்துடன் உள்ளிறங்கியது. உப்பு வீச்சம் என் சொந்தக் குருதியாய் இருந்தது.
தாகம் அடங்கும் வரைக் குடித்துத் தீர்த்தேன். கண்கள் இருக்கும் பகுதியில் விதைகளும், அதிலிருந்து முளைத்த மரங்களுமாய் நிறையத் தொடங்கியது என் உடற் காடு. காட்டின் மேட்டு நிலத்திலிருந்து வெண் பட்டுத்திரை போல மஞ்சள் கோளம். நான் நான் என்று சொல்லிக் கொண்டு என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.
“விண்மீன் உறங்கும் நேரத்தில்”
“முன்பு ஒரு பயணத்தில்”
இப்பொழுது மேலும் ஒரு இழுப்பு.
கால்களுக்கடியில் பச்சை நிறம். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை பச்சைக் கடல்.
பச்சைப்புள்ளிகளிலிருந்து அந்த மலை நுனி தெரிந்தது. உச்சியில் தேங்கியிருந்த குட்டையின் உள்ளிருந்து எழுந்து வந்தான் அவன். தன்னை திகம்பரன் என்றான். சுற்றிலும் புல் பூண்டுகளற்ற மொட்டைப் பாறையின் மேற் தட்டுகளிலிருந்து குளிர் ஒரு மலைச்சுனை போலவே அவனைச் சுற்றி தழும்பிக் கொண்டிருந்தது. அம்மணம் காலங்களற்றதாய் அவனுள் நிறைந்திருந்தது.
மெல்ல என் காதுகளில் முணங்கினான்.
அம்மணமற்றதே நிரந்தரமானது
உடலன்றி ஏதும் தரப்படுவதில்லை
காலமற்றது உடல் ஒன்றே
சிறகுகளற்ற மரங்கள் எங்கும் முளைப்பதேயில்லை
கல் விளக்கின் ஒளியில் நான் மட்டுமே நின்று கொண்டிருந்தேன். தூரத்துப் பறவையின் கேவல். கூகையாக இருந்திருக்கக் கூடும். குட்டையினுள் அலைகளின் துடிப்புகளில் கரைப் பாசிகள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தது.
கரையான் புற்றுகளிலிருந்து நாகமுட்டைகள் பொரிந்து வெளிவந்தது. குஞ்சுகளின் கண்களில் உயிரின் நர நரப்புடன் மொலுமொலுத்து படர்ந்து மண் துகள்கள் படர உருண்டது. சுழல் தெரியத் தொடங்கியது.
அது மனித சஞ்சாரமற்ற நிலம். தலைக்கு மேலும் கீழும் நீல நதிகள் பாய்ந்தோடும் காடு. மரங்களின் சிறகுகள் வேரை இழுத்து இழுத்து உயர்ந்து கொண்டே இருந்தது. பாதாளங்களிலும் விண்ணிலும் மரமன்றி வேறு ஒன்றில்லாத படி நிறைந்து முழுங்கின.
“முன்பு ஒரு பயணத்தில்
விண்மீன் உறங்கும் நேரத்தில்”
கனவுகளற்ற வெளியில் இன்னும் பனி படர்ந்திருந்தது. கண்ணுக்கு தெரியாத நாட்களை அங்கு புதைத்து மூடி விட்டு திரும்பி பார்க்காமல் சென்று கொண்டிருக்கிறேன்.
என் கனவுகளின் உடைகளினால் உன் அம்மணத்தை மூடி விடுகிறேன்.
நீ நிரந்தரமானவனாகு!
நான் தேவனாக விரும்பவில்லை. என்னை விட்டு விடேன். நடுனடுங்கும் விரல் நுனிகள் பதற்றத்துடன் என் கழுத்தை தொற்றிக் கொண்டு பின் இறுக்க அணைத்துக் கொண்டது.
மதுக்கோப்பையில் அந்த கருங்க்சிவப்பு நிறத் திரவத்தை ஊற்றினேன். சோடா வேண்டாம் என்று மறுத்து விட்டார். தண்ணீர் பாதி டம்ளர் நிறைய ஊற்றி விட்டு சியர்ஸ் அடித்துக் கொண்டோம். மெல்ல உதட்டருகே கொண்டு சென்று முழுதுமாய் உறிஞ்சிக் கொண்டார்.
உன்னில் பாவம் செய்யாதவன் எவனோ அவனே முதல் கல்லடிக்கு தகுதியானவன் என்றார்.
ஆம்! ஆம்! என்று உள்ளூற நகைத்துக் கொண்டேன்.
நீ அங்கு தன்னந்தனியே தொங்கிக் கிடந்ததும் அதனால் தான் உனக்கு தெரிகிறதா?
நான் திரும்ப வரவேயில்லை என்று உனக்காகவாது தெரியுமா?
எனக்கு தெரியும். நீ உடல் கொண்டு வரவில்லை என்பது. ஆனால் நீ நிச்சயமாக் திரும்ப வந்திருந்தாய்.
என் அப்பா எப்பொழுதும் தன் டைரியின் முதற் பக்கத்தில் ஒன்றை மட்டுமே எழுதிக் கொள்வார். அவர் வரை அது சரியானதும் கூட.
மாட்டுத் தொழுவத்தில் பிறந்தாலும் மன்னரின் மணி முடிகள் அவன் காலடியில் கிடந்தன. ஏன்?
எளிமையும் அன்பிலுமாய்!
நீ அதை மட்டுமே கொண்டிருந்தாய். தேவாலயங்களில் மொத்த பகட்டிற்கும் உள்ளே நீ தன்னந்தனியே தொங்கிக் கிடப்பதை பார்க்கும் பொழுது நான் ஒன்றை மட்டுமே கடவுளை வேண்டிக் கொண்டிருந்தேன்.
ஏன்? இவனை மனிதனாய் பிறப்பித்தாய். நீ எவ்வளவு சுய நலமானவன். உன் பிள்ளையைக் கூட நீ அடகு வைத்து உன் சாம்ராஜ்யத்தை உருவாக்கும் வல்லமை படைத்தவனல்லவா!
அடுத்த ரவுண்ட் அடித்த பிறகே தெரிந்தது. அவன் மிக மிக நொடிந்து போயிருந்தான். எனக்கே எனக்கென்று இருந்தவளை நான் தவற விட்டு விட்டேன் என்றான்.
காதல் என்றும் அன்பு என்றும் சொல்லி பிதற்றினான்.
உண்மையில் இந்தப் பிதற்றல்கள் இன்றி நாம் மட்டும் எப்படி வாழ்ந்து விட முடியும்.
நீ தஸ்தாயெவ்ஸ்கியிடம் சென்றிருக்க வேண்டும். முன்பு சென்றது போலவே என்னிடம் தவறுதலாக வந்து விட்டாய்.
அவன் மட்டுமே உன்னை நன்கு அறிவான். ஆனால் அவன் மட்டும் என்ன சொல்லி விட்டான். குழந்தைகளின் ராஜ்ஜியம் தெய்வத்துடையது என்று சொல்லும் பொழுதே உடல் உடல் என்று தானே கூவிக் கொண்டிருந்தான்.
உன் பிணத்தை அவன் மிகவும் விரும்பியிருக்கக் கூடும்.
அதன் முன்னே மண்டியிட்டுக் கிடப்பது மட்டுமே தனக்கு விதித்ததாய் அவன் நம்பியிருந்தான்.
காதலை எப்பொழுதும் உன்னைப் போலவே புனிதத்தன்மை படுத்திக் கொண்டிருந்தான். அவன் உன் உண்மையான் விசுவாசியாய் இன்னும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்.
ஆனால் நான் அவன் பொருட்டும் உன் பொருட்டும் மன்னிப்புக் கேட்கிறேன்.
இதை மட்டுமே என்னால் உண்மையாக உன்னிலிருந்து கற்றுக் கொள்ள முடிந்தது.
உன்னை மனிதனாக்க மட்டுமே நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். என்னால் அது முடியுமென்றால் அன்று உன்னை தன்னந்தனியே விட்டுச்சென்ற சியோன் மலைக் குன்றின் உச்சியில் உன்னுடன் நானும் அமர்ந்து கொண்டிருப்பேன். உன் கோப்பையில் என் குருதித் துளியை உன்னைப் போலவே பகிர்ந்து நானும் உண்பேன்.
ஆனால் நடந்தது வேறென்னவோ?
மஞ்சள் நிறத்தை மட்டுமே தன் வாழ்வாக கொண்டவன் என் எதிரில் உன்னைப் போலவே வந்து நின்றான். சற்றே இறைஞ்சும் பாவத்துடன்.
கையில் இன்னும் உலராக் குருதியுடன் தன் சொந்தக் காதினை வைத்திருந்தான்.
எனக்கு தீ வேண்டும் என்றான். வானம் நோக்கி தழலும் மஞ்சள் தீ.

வெள்ளி, 24 மே, 2019

மாக்தலேனா

நான் தனியனாகவே சென்று கொண்டிருந்தேன். முன்னும் பின்னும் மனிதர்கள் இருந்தார்களா? நிச்சயமாக சொல்லத் தெரியவில்லை. சைப்ரஸ் மரங்களுக்கிடையிலிருந்து ஒளி மென் படலம் போல என்னைச் சுற்றிப் படர்ந்து கொண்டிருந்தது. எப்பொழுதும் என்னுடனான அழைக்கழிப்பின் எண்ணங்கள் அந்தகாரத்தில் மிதந்து மிதந்து சொற்களாக திரண்டு ஓயாது மந்திரம் போல என் செவிகளுக்குள் ரீங்காரமிட்டது. ஆம். நான் ஓயாது உச்சரித்துக் கொண்டிருந்ததும் அதைத்தான்.
என்னை மன்னித்து விடு!

ஒரு தனித்த கார்வை, மெல்ல கமகங்கள் சுழலத் தொடங்கியது. மேகங்கள் இரவிற்குள்ளிருந்து முனகியது. பல்லாயிரம் கண்களுடன் வானம் நோக்கிக் கொண்டிருந்தது. நீர்க்குமிழிகள் முழுகியிடுவது போல, இருள் சலனமிட்டு அதிர அதிர மேய்ப்பனின் குழல் ஓசை மூட்டமாய் சூழ்ந்து மாமழை போல நனைக்கத் தொடங்கியது. வண்ணங்கள் இடம் பெயர்ந்தன. தனிமையே தன்னைத் தான் என பல்லாயிரம் ஓசைகளால் அனைத்திலும் தொட்டுப் படர்ந்து மறைந்தது. எங்கும் நனைதலே அன்றி ஒன்றுமே இல்லாமலாகியது. தன் இருப்பின் ஒரு பகுதியிலிருந்து அவன் அனைத்தையும் நோக்கினான். குழலை இரண்டாய் மூன்றாய் சுக்கு நூறாய் உடைத்தான்.  கண்ணியிழந்த ஒலிச்சங்கிலிகள், சில்லுகளாய் நொறுங்கிக் கொண்டே இருந்தது. காலமற்ற பெரு வெளியினுள் கடைசியாய் சொட்டிய மழை நீரின் துளி பொதிந்த ஒற்றை விதையை மட்டும் அவன் தன் உள்ளங்கைகளுக்குள் பொத்திக் கொண்டு அழுது கொண்டே சொன்னான்.
என்னை மன்னித்து விடு!

விதிர்த்தெழுந்த பொழுது அதே சொல், அதே குரல், அவிழ்க்கவே முடியாத முகக் கவசம் போல.

சொர்க்கத்திற்கு செல்லும் கதவு, வெண்மையும் கருமையும் இரண்டறக் கலந்த சர்ப்பங்கள் வாயிற் காவலில் நின்று கொண்டிருந்தது.

உன்னால் உடலை இழக்க முடியுமெனில் வா இங்கு.

உன்னால் மாமிசத்தை தின்ன முடியுமெனில் வா இங்கு.

உன்னால் இரவை விழுங்கி விட முடியுமேனில் வா இங்கு

உன்னால் சாவை மறுதலிக்க முடியுமெனில் வா இங்கு.

நீ வாதையை அருந்துவாய். அதன் பொருட்டு நீ என்னிடம் வருகிறாய்.

எப்பொழுதும் என்னிடம் இருந்து கிடைக்கப் பெறா மன்னிப்பை நீ வேண்டுகிறாய்.

என் உடலினை தாண்டி செல்ல உன்னால் முடிந்தால், என் யோனியினுள் முகம் புதை. என் முலைகளுக்குள் நீ அதை பெற வாய்ப்புண்டு.

ஆனால் நீ உடல் மட்டுமே ஆனவன். என் அறையினுள் கால்கள் கட்டுண்டு ஊறும் முள் ஓணானுக்கும் உணக்கும் என்ன பெரிய வித்தியாசம் கண்டு விட்டாய்.

பார். உனக்கு முன்னும் பின்னும் மனிதர்கள் உள்ளனர். அவர்கள் உடலிலிருந்தே நீ அந்த இசையினை அறிந்தாய். அது துண்டு துண்டாய் உடைந்த பிறகும், அதன் அதிர்வுகளினால் என்னுள் அவர்களை நிறைக்கிறேன்.

நீ அவர்களில் ஒருவன் அல்ல. உனக்கு என் உடல் வேண்டாம். உன் உடல் வேண்டாம்.

ஆம். நீ மரணத்தை மறுதலிக்க விரும்புகிறாய். ஆனால் நீ மனிதன். எளிய மனிதன்.

போ. என் கூடாரத்தில் உனக்கு இடமில்லை.

அவன் உள்ளங்கைகளுக்குள் துடித்துக் கொண்டிருந்தது சொல் எனும் விதை.

என்னை மன்னித்து விடு.

நான் மண்ணாலனவள். மண்ணின் மூலமே அனைத்தையும் அறிகிறேன். நீ என்னை அறிய வேண்டுமானால் உடல் கொண்டு வா. மண். மண்ணால் மட்டுமே நான் ஆணை அறிவேன். என்னில் முழுதும் பிசுபிசுத்து நொதித்துக் கொண்டிருப்பது மண் மட்டுமே.

என் தவறுதான். என்னை மன்னித்து விடேன்.

நீயும் உன் கடவுளையும் தூக்கிக் கொண்டு செல் கோழையே. நீ என்னிடம் ஏதனை எதிர் பார்க்கிறாய். உன்னால் என் உதடுகள் பொருத்தி முத்தமிட முடியுமா?

உன்னை உன் மன்னிப்பினால் கடைத்தேற்ற முயல்கிறேன் நான்.
ஆம் உன் கடவுளர்கள் இதற்கு முன் இதே அறையில் தான் என்னுடன் பொருந்திக் கொண்டிருந்தனர். உனக்கு தெரியுமா நீ உன் சதையை தூக்கிக் கொண்டு திரிகிறாய். உன் கடவுள் உன்னிடம் ஏழு சாத்தான்களைப் பற்றி சொல்லிக் கொண்டு என் கூடாரத்தில் கால் கடுக்க நின்று கொண்டிருப்பதை நான் தினமும் தான் காண்கிறேன்.

இல்லை. இல்லை. அது ஏழு புண்கள். காயங்கள்.

இத்தனை பேர் என்னைப் புணர்ந்து கொண்டிருந்தனர். என் நிர்வாணத்தின் ஒவ்வொரு சதை அசைவையும் நீ பார்த்துக் கொண்டிருந்தாய். உன்னால் என்னைக் கடந்து விட முடியும் இந்த மண்ணைக் கடந்து விட முடியும் என்று நினைக்கிறாயா.

உன்னை என் கடவுளின் பெயரால், நான் அழைத்து செல்வேன் மேரி.

பெண்ணை பயக்கிறாயே. பெற்றாள்  மகள். நித்தியத்தில் அன்னை. ஆனால் உன்னைப் போல பேடிக்கல்ல.

நீ என்னை கடைத்தேற்றுவாய் என்றால் புணர். என் உடலுடன் இணைந்து கொள். என் பிள்ளைகளை கொடு. ஒரு மனிதனாய் ஆணாய் என்னைக் கூட்டிச் செல்.
இல்லையேல் விட்டொழி. கடைசி வரை இத்தனை பேர் என்னுடன் புணர்ந்து கொண்டிருந்ததை தனியனாய் பார்த்துக் கொண்டிருந்ததாயே. உன் கடவுளின் பெயரால் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறாய் கோழையே.

நான் ஒரு சுயநலமி மேரி. என்னை மன்னித்து விட்டேன் என்று சொல்.

இல்லை அய்யா. உனக்கு தர என்னிடம் ஒன்றுமே இல்லை. என் உடலைத் தவிர.

நான் செல்ல வேண்டும் மேரி.

செல். உன் எல்லைகளின் தூரம் வரை செல் துறவியே. என் பொருட்டு உன்னிடம் ஒன்றுமில்லை.

கனத்த குரலில் வெளியை நோக்கி இறைஞ்சினாள். வேறு யாரும் ஆண் மகன் உள்ளேர்களா.

நடுநடுங்கும் விரல்களினால் அவளின் காலைப் பற்றினான் தச்சன் மகன்

செவ்வாய், 30 ஏப்ரல், 2019

இணை

வெகு தூரத்தில் தூர்ந்து கொண்டிருக்கும்
வான வெளியில்
தன்னந்தனியே உன்னை நோக்கிக் கொண்டிருக்கிறேன்.
வற்றிப் போன  மண் தடம் அறிந்திருந்தது,
நீர் உறைந்த வழித் தடத்தினை.
விரல் இடைவெளிகளில் இறுக்க முடியாத வெற்றிடம்.
முன்னும் பின்னுமாக சுழன்று கொண்டே இருக்கும் கடிகார முட்களில்,
முடிச்சிட்டுக் கொண்டிருக்கிறேன்.
சுருக்குகள் தாடை எலும்பினை நொறுக்கும் கண நேரம்
என்னிடம் சொல்லிக் கொள்கிறேன்,
உன்னை நான் நோக்கிக் கொண்டிருக்கிறேன்,
வெகு தூரத்தில் தன்னந்தனியே.
வெகு தூரம்
வெகு காலம்
வெகு நேரம்
என் வெற்றிடங்களில் முளைத்துக் கொண்டிருக்கின்றன
காளான்கள்.
தலைக்கு மேலும் கீழுமாய்
உன் உப்பு நதியில்,
அலைக்கழிந்து
மிதந்து கொண்டிருக்கிறது
என் நாள் பட்ட பழைய உடல்.

வெள்ளி, 26 ஏப்ரல், 2019

ஒற்றை மதம்

கனவுலக வாசியிடமிருந்து வருகின்ற துர் நாற்றம்
மஞ்சள் வண்ணம் பூசிக்கொண்டு வலம் வருகிறது.
கிழக்கும் மேற்குமற்ற வான வெளியில் நிலவு தோணி போல அசைந்து கொண்டுருக்கிறது.
கால்களுக்கு கீழே அரைந்து அரைந்து நெழிகின்றன கனவுகள்.
முகங்கள் கலைந்து கொண்டே இருக்கும் பிம்ப வெளியில் நான் அவனைக் கண்டேன்.
தன்னை பரிசுத்த ஆவி என்று அழைத்துக் கொண்டான்.
தெளிவற்ற இரவின் சாலை வெளியில் சடைப் பின்னலுடன் அவள் எதிர் வந்தாள்.
நடுக்காட்டின் இசக்கி என்றாள்.
காலை 3 மணியில் பிரார்த்தனை கடிகார முள்ளினுள் ஒலித்தது.
என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும் என்று விதிர்த்து அடங்கியது.
தெரு முக்கில் இருந்து தன்னைத் தானே எதிர்த்து குறைத்துக் கொண்டிருந்தது கருப்பு நாய்.
மஞ்சள் வண்ணத்துடன் கோயில் மணி நாசி நிரம்பி வழிந்தது.
அத்துவான வெளியில் சிறகடிப்புகள் வானைத் தேடிக் கொண்டே
உதிர்ந்து வீழ்கின்றன.

ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

கனவு

இரு பிளந்த மலைகுன்றுகளுக்கிடையில்
கனவுகளை வாழ்க்கையாக கொள்ள நினைத்தவனின்
சடலம் கேடபாரற்று கிடக்கிறது.
தினம் தினம் அவன் பலி பீடத்தில் பல வண்ணங்களில் கனவுகள் கழுத்து ஒடித்து அவியாக்கப்பட்டன.
என் சாம்பல் நிறக் கனவு மலத்துவாரம் வழியே வெளித் தள்ளப்பட்டுக் கொண்டிருந்த நடு நிசியில்,
வெடி மருந்தினைப் போல படுக்கையைச் சுற்றிப் படர்ந்து கிடந்த சிவந்த கனவினையும்,
அக்குளுக்குள் இருந்து புழு போல நெளியும் பிங்க் வண்ணக் கனவினையும்,
யாருக்கும் தெரியாது என் பிறப்புறுப்புக்கிடையில் பதுங்கி இருந்த வெண்ணிறக் கனவினையும்,
ஒரு மடக்கில் பொதிந்து அவனிடம் சென்றேன்.
அவன் முன் பொதியிலிருந்து அவை சர்ப்பங்களாய் விரிந்தன.
அகன்ற வாய் திறந்து என்னை ஒட்டு மொத்தமாய் விழுங்கின.
இரு பிளந்த மலைகுன்றுகளுக்கிடையில்
 கனவுகளை வாழ்க்கையாக கொள்ள நினைத்தவனின்
சடலம்
தன்னந்தனியே
கேடபாரற்று கிடக்கிறது.

திங்கள், 4 பிப்ரவரி, 2019

கிறுஸ்துவின் கடைசி சபலம் 11


நகர் முழுதும் அறிவித்துக் கொண்டிருந்தான் அந்த நிமித்தோன். செல்லும் இடமெல்லாம் மக்கள் கூடி நின்று சலசலத்துக் கொண்டிருந்தனர். செந்தாடிக்காரன் அறை ஜன்னல் வழியே கவனித்துக் கொண்டிருந்தான்.

பெருமைப்படு. உன் சகோதரனுக்காக!

எரிச்சலுடன் கால்களை நிலத்தில் மாறி மாறி அறைந்தான்.

உன் சகோதரன் சைமனை விரோதியாக்கியதற்காக பெருமைப்படு தோழனே!

இளைஞன் கிழ் நோக்கி குத்திட்டிருந்தான். திடுக்கென்று விதிர்த்துக் கொண்டு அழுதான்.

அழுகையுடன் பேசத் தொடங்கினான்.

என்னுடையது தான். எல்லாம் என்னுடைய பிழை தான். அவன் துரத்தப்பட்டது என்னால் தான். என்னைக்  காரணமாய்க் கொண்டே அம்மா அவனை வெளியே அனுப்பினாள். நான்! நான் மட்டுமே தண்டிக்கப்பட வேண்டியவன்.

அலட்சியமாய் நமட்டுச் சிரிப்புடன் இளைஞனை பார்த்தான் அவன்.

ஒன்றே ஒன்று தான் என்னிடம் உள்ளது சகோதரா! என் வாழ்வு. அதை நான் சமர்ப்பிக்கிறேன். அதற்கான முழு உரிமையும் எனக்குண்டு என நான் நம்புகிறேன்.

அது வரை இருந்த அசைவின்மை மெல்ல நகர்ந்தது. அது ஒரு ஸ்தூல வடிவெடுத்து எடுத்து சுழலத் தொடங்கியது. ஒளி உயிருள்ள பொருள் போல தனக்குள் தானே முணங்கிக் கொண்டிருப்பது போல அறையெங்கும் அலையாடியது. அதற்கும் இளைஞனின் அழுகைக்கும் ஒத்திசைவு ஆனது போல மெல்ல சுருங்கி விரிந்து துண்டாகி நீண்டு கொண்டிருந்தது.

உன்னுடைய வாழ்வு?
அதை வைத்து யாருக்காக சூதாடுகிறாய்?
உன் சகோதரனின் கழுத்துடையும் தளைகளை உன் வாழ்வினைக் கொண்டு உருவாக்குகிறாயா?
சொல்! ஏன் நிலத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாய். என்னைப் பார்த்து சொல். நீ கூறும் இந்த வாழ்விற்கு என்ன அர்த்தம்?

ஓன்றுமில்லை!

கேட்காதே! சகோதரா. என்னிடம் எதைப்பற்றியும் கேட்காதே!

மெல்ல அருகமர்ந்த செந்தாடிக் காரன், அவனது கண்களையே உற்று நோக்கினான். சலனத்துடன் துடிதுடித்துக் கொண்டிருந்த வண்ணத்துப்பூச்சி இறகுகளைத் தான் அவனால் எண்ண முடிந்தது. ஆம்! ஏன் இத்தனை பரிதவிப்பு. ஆழ்ந்த மௌனத்துடன் பெரு மூச்சிட்டான். பின் மெல்ல நகர்ந்து வெளியே செல்ல எத்தனித்தான்.

நகரெங்கும் மக்கள் ஆரவாரத்துடன் கூச்சலிட்டும், பேசிக் கொண்டும் இருந்தனர். அறிவிப்பினைப் பற்றி மட்டுமே அனைவரது பேச்சும் இருந்தது.சக மனிதனின் மரணத்தை அருகிருந்து பார்ப்பதைப் பற்றிய எண்ணம் அவர்களிடம் இருந்திருக்கக் கூடுமோ என்பதை ஊகித்தறிய முடியவில்லை. ஆனால் எல்லோருமே கிளர்ச்சி நிலையில் இருந்தனர். தண்டனைப் பற்றியதன்றி வேடிக்கை பார்க்கும் மனோ நிலைக்கு எல்லோறூம் இருக்கின்றனரோ என்று யோசிக்கத் தோன்றியது.


கிராமத்திற்கு நேர் எதிரே அந்த மலைக்குன்று இருந்தது. குத்துச்செடிகளும் கூரிய முட்கள் அடர்ந்த விஷச்செடிகளும் அதிகமும் அடர்ந்த வழிப்பாதை. அலையலையாய் அனல் படர்ந்த வெளிர் சாம்பல் மலை.


உன் கனவினுள் மட்டுமே நான் வாழ்கிறேன்
வலியினால் உருக்கொண்ட நிலம் என் உடல்
தன்னந்தனியினுள் அமிழ்ந்திருக்கும் வலியின் நீள் கொடுக்குகள்.
உனக்குள்ளிருந்து ஒலிக்கிறது
சாசுவதத்தின் நீள் வட்டச்சுழல் அதிர்வுகள்.
நான் இங்கிருக்கிறேன்
என்னுடன் அமர்ந்திருக்கிறது அது
என் உடலினுள் மீள மீள அதனை நான் சுவீகரிக்கிறேன்
அதன் நீர்மையினுள் காலாதீதமாய்
வீங்கிக் கிடக்கிறது தனிமைப் பிணம்
வா!
வா!
நாளையும் அதன் மறு நாளும்
இன்றிலிருந்து ஆரம்பிக்கிறது அதன் தனிமைக் கோடு
எல்லையின் 'இப்புறமும் அப்புறமும்
பல நூறு துண்டுகளாய் சதைத்து உதிர்த்து வைத்துக் கொண்டிருக்கிறேன்
வலி என்பதிலிருந்து உன்னைத் தொடர்கிறேன்
வலி என்பதிலிருந்து உன்னை அழைக்கிறேன்
வலி என்பதிலிருந்து உன்னை வெறுக்கிறேன்
வலி என்பதிலிருந்து உன்னை அடைகிறேன்
வலி என்பதிலிருந்து உன்னை கடக்கிறேன்
வலி
வலி
வலி
வலியினால் உருக்கொண்டது என் நிலம்
உன் கனவினுள் வாழ்கிறது என் வலி


எந்த உணர்ச்சியுமின்றி அவனை உற்று நோக்கினான் செந்தாடிக்காரன். பின் வெளியே சென்றான்.

வெளிர்ந்து அடர்ந்த உதிரம் உறிஞ்சும் அட்டைப் பூச்சியைப் போல அந்த நிலம் காட்சியளித்தது. மக்கள் தங்கள் இறுதிப் பிரார்த்தனைகளை அங்கு ஒரு ஆரவாரத்துடன் கூச்சலிட்டனர். அது பாம்புகள் மொலுமொலுப்பதைப் போல சூழலில் அடர்ந்தது.

மந்தையை வழி நடத்தும் கிழவன் சிமியோன். வளைந்த முதுகு. தோல் சுருங்கி திமிறும் நெஞ்செலும்புகள். குழி விழுந்த பொக்கை கன்னங்கள். பழுத்து சிவந்த புரையோடிய கண்கள். புடதியில் மட்டும் உதிராது தொங்கிக் கொண்டிருக்கும் வெண் மயிர். முட்ச்சிட்ட புருவங்கள். வரியோடிச் சுருங்கிய முன் நெற்றி. உள்ளொடுங்கிய மார்பு புடைத்து துருத்தும் தோள். காற்றிலாடும் சிறு செடியைப் போல அலையாடும் உடல். சூனியக் கிழவனின் கைகளில் சிலுவை முத்திரை.

மக்கள் அனைவரது கைகளிலும் உருளைக் கற்கள். தங்களுக்குள் பய பக்தியுடனும் அமைதியுடனும் அவர்கள் எதிர்பார்த்து நின்றிருந்தனர்.

நின்று கொண்டிருந்த மக்களை யூதாஸ் பார்த்தான். எதிரெதிர் காந்தத் துண்டங்களுக்கிடையில் நகரும் உலோகக் குண்டைப் போல ஊசலாடியது அகம்.

இன்று! இன்று! நாளையல்ல!
இன்றே! தேவனின் அற்புதம் நிகழும் நாள்.

வெறியுடனும் இளைஞனின் இல்லத்தை நோக்கி முதற் கல்லை எறிந்தாள் அவள்.

சிலுவைகள் செய்யும் இழிமகனே! செத்தொழி!

வசைகளால், நொதிக்கும் சளிப்படலம் போல தெரு உருமாறியது. எதிரில் நின்றிருந்த அனைவரும் கத்தினர். கற்கள் பெருகி பெருகி பெரும் பாறாங்கல்லாய் அந்த வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. செந்தாடிக்காரன் கதவை இழுத்து மூடினான்.

இளைஞன் மெல்ல நகர்ந்து தன் சிலுவை முன் குந்தி அமர்ந்தான். சுத்தியலை எடுத்து வேலையை தொடங்கினான். வெளி அவனை அணுகவே இல்லை.

மரத்துண்டுகளை உளி பிளப்பது போல காலமும் பிளந்து நகர்ந்தது.

செந்தாடிக்காரன் அவனை தவிப்புடன் மீண்டும் பார்த்தான். அவனிடமிருந்து சுத்தியலைப் பிடுங்கி, சிலுவையை தன் தலைக்கு மேல் தூக்கி சுவற்றில் எறிந்தான்.

நீ இதைக் கொடுக்கப் போகிறாயா?
ஆமாம்.
உனக்கு கூசவில்லை?
இல்லை.
தரையில் காறித் துப்பினான் செந்தாடிக்காரன்.

அங்கும் இங்குமாய் பரபரத்து தேடி வாய்ச்சியை எடுத்தான் இளைஞன்.

செந்தாடிக்காரனை நோக்கி மன்றாடினான்.

விட்டுவிடு! நண்பா! என்னை விட்டு விடு!
என் வழியில் நான் செல்கிறேன்.

எந்த வழி?
பெரு மூச்சுடன் அமர்ந்தன் செந்தாடிக்காரன்.

இத்தனை நாட்களில் என் நண்பனுக்கு என்னவாயிற்று?
ஏன் இப்படி இருக்கிறாய்?

கடவுள்! என சொல்ல முயன்று அடிச் சிரிப்புடன் தன்னை அடக்கிக் கொண்டான் இளைஞன்.

விடு நண்பா! நான் எனக்குள்ளேயே போராடிக் கொண்டிருக்கிறேன்.

ஏன்?

தெரியவில்லை.

யூதாஸ் பொறுமையிழந்திருந்தான். அசையாது நின்றிருந்த இளைஞனை உற்றுப் பார்த்தான். அவனது பார்வை உலகைக் கடந்திருந்தது. அவிழ்க்கவே இயலாத இருள்.

பார்வைக்கு எட்டிய தொலைவு வரை இருள். அப்பால் பள்ளத்தாக்கு. மலையுச்சியின் மோனம். காற்றின் உள்ளீடற்ற கமகங்கள். முகில்களின் மர்ம நகர்வு. ஒளி பின்னிய நிழல் உச்சிப்பாறையில் தெளிந்து அலைந்தது. அதனுள் அவன் வீசியெறிந்த சிலுவை ஒளியிலிருந்து இருளை நோக்கிக் கொண்டிருந்தது.

பார்வையை விலக்கினான் யூதாஸ்.

உன்னால்...நீ! நீ! பேச முற்பட்டு திக்கித்தான்.

சதுக்கத்தில் ஊன்றி நிற்கும் தனித்த மரத் தூண் போல மரத்து நின்றான்.

இளைஞனின் கண்கள் இறுக்க மூடியிருந்தது. அதில் தெளிவாக அந்த ஒற்றை மனிதனை அவன் அறிந்திருந்தான். அது கால காலமாய் அவனைத் துரத்திக் கொண்டிருக்கும் முகம்.





















வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

நெடி

அவள் வியர்வையை உள்ளங்கைக்குள் பொத்தி வைத்திருக்கிறேன்.
அது கவிதைக்கே உண்டான கனவுகளை தோசைக் கல்லில் மாறி மாறி திரும்பிக் கொண்டிருந்தது.
மெல்ல கதவடைத்து விட்டு கனவுகளின் தாக்கோலைக் கொண்டு அதனை நறுக்கினேன்.
அறையெங்கும் வியாபிக்கும் நறுமணம்,
பலூன் பழங்களாக மிதந்தது.
கடைசியாக பசியுடன் அருந்திக் கொண்டிருந்த மதுக் கோப்பையில்,
சொட்டிக் கொண்டிருந்தன மழைத்துளிகள்.
தேங்கல் நதியின் பாசிப் படலங்களின் பிசுபிசுப்புடன் இருந்தது உள்ளங்கை.
அரவமின்றி உள் நுழைந்தது கதகதப்பு.
கனவுகள் தோசை மணத்துடன் பற்றி எரிய
உள்ளங்கைகைகளைக் கொண்டு நாசி அடைத்துக் கொள்கிறேன்.
வெளியெங்கும் உன் நெடியுடன் நனைத்துக் கொண்டிருக்கிறது மழை.

ஞாயிறு, 27 ஜனவரி, 2019

மொழி

வார்த்தைகளாலும் கவிதைகளாலும் ஆன ஒன்று வனாந்தரங்களில் தனித்து உலவிக் கொண்டிருந்தது.
தூரத்து மலைகளின் துணுக்குகளில்,
அணைந்தெரியும் கங்குப் பொதிகளில் தேங்கியிருந்தது
நாள் பட்ட பழைய மொழி.
சொல்லற்ற பிரதேசத்துப் புதை குழிகளில் இருந்து
தோண்டி எடுக்கப்பட்ட பிணக் குவியல்களில் அழுகிக் கொண்டிருந்தன கதைகள்.
அன்று முழுமையாக படர்ந்த இருள் வெளியிலிருந்து பிதுங்கி வெளி வந்தன ஒளிப் புழுக்கள்.
மெல்ல மெல்ல பற்றிக் கொண்டு எழுந்தது வானம்.
வார்த்தைகளாலும் கவிதைகளாலும் ஆன ஒன்று சொல்லிலிருந்தும் மொழியிலிருந்தும் திருகல் ஆணி போல கழன்று விழத் தொடங்கியது.
அது பெரும் மழைக் காட்டில் தன்னுடன் தான் மட்டுமே தனித்திருந்தது...
கதைகள் ஊறத் தொடங்கியதும் மிச்ச பிணங்கள் ஏரிந்தன கூட்டாக...