திங்கள், 4 பிப்ரவரி, 2019

கிறுஸ்துவின் கடைசி சபலம் 11


நகர் முழுதும் அறிவித்துக் கொண்டிருந்தான் அந்த நிமித்தோன். செல்லும் இடமெல்லாம் மக்கள் கூடி நின்று சலசலத்துக் கொண்டிருந்தனர். செந்தாடிக்காரன் அறை ஜன்னல் வழியே கவனித்துக் கொண்டிருந்தான்.

பெருமைப்படு. உன் சகோதரனுக்காக!

எரிச்சலுடன் கால்களை நிலத்தில் மாறி மாறி அறைந்தான்.

உன் சகோதரன் சைமனை விரோதியாக்கியதற்காக பெருமைப்படு தோழனே!

இளைஞன் கிழ் நோக்கி குத்திட்டிருந்தான். திடுக்கென்று விதிர்த்துக் கொண்டு அழுதான்.

அழுகையுடன் பேசத் தொடங்கினான்.

என்னுடையது தான். எல்லாம் என்னுடைய பிழை தான். அவன் துரத்தப்பட்டது என்னால் தான். என்னைக்  காரணமாய்க் கொண்டே அம்மா அவனை வெளியே அனுப்பினாள். நான்! நான் மட்டுமே தண்டிக்கப்பட வேண்டியவன்.

அலட்சியமாய் நமட்டுச் சிரிப்புடன் இளைஞனை பார்த்தான் அவன்.

ஒன்றே ஒன்று தான் என்னிடம் உள்ளது சகோதரா! என் வாழ்வு. அதை நான் சமர்ப்பிக்கிறேன். அதற்கான முழு உரிமையும் எனக்குண்டு என நான் நம்புகிறேன்.

அது வரை இருந்த அசைவின்மை மெல்ல நகர்ந்தது. அது ஒரு ஸ்தூல வடிவெடுத்து எடுத்து சுழலத் தொடங்கியது. ஒளி உயிருள்ள பொருள் போல தனக்குள் தானே முணங்கிக் கொண்டிருப்பது போல அறையெங்கும் அலையாடியது. அதற்கும் இளைஞனின் அழுகைக்கும் ஒத்திசைவு ஆனது போல மெல்ல சுருங்கி விரிந்து துண்டாகி நீண்டு கொண்டிருந்தது.

உன்னுடைய வாழ்வு?
அதை வைத்து யாருக்காக சூதாடுகிறாய்?
உன் சகோதரனின் கழுத்துடையும் தளைகளை உன் வாழ்வினைக் கொண்டு உருவாக்குகிறாயா?
சொல்! ஏன் நிலத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாய். என்னைப் பார்த்து சொல். நீ கூறும் இந்த வாழ்விற்கு என்ன அர்த்தம்?

ஓன்றுமில்லை!

கேட்காதே! சகோதரா. என்னிடம் எதைப்பற்றியும் கேட்காதே!

மெல்ல அருகமர்ந்த செந்தாடிக் காரன், அவனது கண்களையே உற்று நோக்கினான். சலனத்துடன் துடிதுடித்துக் கொண்டிருந்த வண்ணத்துப்பூச்சி இறகுகளைத் தான் அவனால் எண்ண முடிந்தது. ஆம்! ஏன் இத்தனை பரிதவிப்பு. ஆழ்ந்த மௌனத்துடன் பெரு மூச்சிட்டான். பின் மெல்ல நகர்ந்து வெளியே செல்ல எத்தனித்தான்.

நகரெங்கும் மக்கள் ஆரவாரத்துடன் கூச்சலிட்டும், பேசிக் கொண்டும் இருந்தனர். அறிவிப்பினைப் பற்றி மட்டுமே அனைவரது பேச்சும் இருந்தது.சக மனிதனின் மரணத்தை அருகிருந்து பார்ப்பதைப் பற்றிய எண்ணம் அவர்களிடம் இருந்திருக்கக் கூடுமோ என்பதை ஊகித்தறிய முடியவில்லை. ஆனால் எல்லோருமே கிளர்ச்சி நிலையில் இருந்தனர். தண்டனைப் பற்றியதன்றி வேடிக்கை பார்க்கும் மனோ நிலைக்கு எல்லோறூம் இருக்கின்றனரோ என்று யோசிக்கத் தோன்றியது.


கிராமத்திற்கு நேர் எதிரே அந்த மலைக்குன்று இருந்தது. குத்துச்செடிகளும் கூரிய முட்கள் அடர்ந்த விஷச்செடிகளும் அதிகமும் அடர்ந்த வழிப்பாதை. அலையலையாய் அனல் படர்ந்த வெளிர் சாம்பல் மலை.


உன் கனவினுள் மட்டுமே நான் வாழ்கிறேன்
வலியினால் உருக்கொண்ட நிலம் என் உடல்
தன்னந்தனியினுள் அமிழ்ந்திருக்கும் வலியின் நீள் கொடுக்குகள்.
உனக்குள்ளிருந்து ஒலிக்கிறது
சாசுவதத்தின் நீள் வட்டச்சுழல் அதிர்வுகள்.
நான் இங்கிருக்கிறேன்
என்னுடன் அமர்ந்திருக்கிறது அது
என் உடலினுள் மீள மீள அதனை நான் சுவீகரிக்கிறேன்
அதன் நீர்மையினுள் காலாதீதமாய்
வீங்கிக் கிடக்கிறது தனிமைப் பிணம்
வா!
வா!
நாளையும் அதன் மறு நாளும்
இன்றிலிருந்து ஆரம்பிக்கிறது அதன் தனிமைக் கோடு
எல்லையின் 'இப்புறமும் அப்புறமும்
பல நூறு துண்டுகளாய் சதைத்து உதிர்த்து வைத்துக் கொண்டிருக்கிறேன்
வலி என்பதிலிருந்து உன்னைத் தொடர்கிறேன்
வலி என்பதிலிருந்து உன்னை அழைக்கிறேன்
வலி என்பதிலிருந்து உன்னை வெறுக்கிறேன்
வலி என்பதிலிருந்து உன்னை அடைகிறேன்
வலி என்பதிலிருந்து உன்னை கடக்கிறேன்
வலி
வலி
வலி
வலியினால் உருக்கொண்டது என் நிலம்
உன் கனவினுள் வாழ்கிறது என் வலி


எந்த உணர்ச்சியுமின்றி அவனை உற்று நோக்கினான் செந்தாடிக்காரன். பின் வெளியே சென்றான்.

வெளிர்ந்து அடர்ந்த உதிரம் உறிஞ்சும் அட்டைப் பூச்சியைப் போல அந்த நிலம் காட்சியளித்தது. மக்கள் தங்கள் இறுதிப் பிரார்த்தனைகளை அங்கு ஒரு ஆரவாரத்துடன் கூச்சலிட்டனர். அது பாம்புகள் மொலுமொலுப்பதைப் போல சூழலில் அடர்ந்தது.

மந்தையை வழி நடத்தும் கிழவன் சிமியோன். வளைந்த முதுகு. தோல் சுருங்கி திமிறும் நெஞ்செலும்புகள். குழி விழுந்த பொக்கை கன்னங்கள். பழுத்து சிவந்த புரையோடிய கண்கள். புடதியில் மட்டும் உதிராது தொங்கிக் கொண்டிருக்கும் வெண் மயிர். முட்ச்சிட்ட புருவங்கள். வரியோடிச் சுருங்கிய முன் நெற்றி. உள்ளொடுங்கிய மார்பு புடைத்து துருத்தும் தோள். காற்றிலாடும் சிறு செடியைப் போல அலையாடும் உடல். சூனியக் கிழவனின் கைகளில் சிலுவை முத்திரை.

மக்கள் அனைவரது கைகளிலும் உருளைக் கற்கள். தங்களுக்குள் பய பக்தியுடனும் அமைதியுடனும் அவர்கள் எதிர்பார்த்து நின்றிருந்தனர்.

நின்று கொண்டிருந்த மக்களை யூதாஸ் பார்த்தான். எதிரெதிர் காந்தத் துண்டங்களுக்கிடையில் நகரும் உலோகக் குண்டைப் போல ஊசலாடியது அகம்.

இன்று! இன்று! நாளையல்ல!
இன்றே! தேவனின் அற்புதம் நிகழும் நாள்.

வெறியுடனும் இளைஞனின் இல்லத்தை நோக்கி முதற் கல்லை எறிந்தாள் அவள்.

சிலுவைகள் செய்யும் இழிமகனே! செத்தொழி!

வசைகளால், நொதிக்கும் சளிப்படலம் போல தெரு உருமாறியது. எதிரில் நின்றிருந்த அனைவரும் கத்தினர். கற்கள் பெருகி பெருகி பெரும் பாறாங்கல்லாய் அந்த வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. செந்தாடிக்காரன் கதவை இழுத்து மூடினான்.

இளைஞன் மெல்ல நகர்ந்து தன் சிலுவை முன் குந்தி அமர்ந்தான். சுத்தியலை எடுத்து வேலையை தொடங்கினான். வெளி அவனை அணுகவே இல்லை.

மரத்துண்டுகளை உளி பிளப்பது போல காலமும் பிளந்து நகர்ந்தது.

செந்தாடிக்காரன் அவனை தவிப்புடன் மீண்டும் பார்த்தான். அவனிடமிருந்து சுத்தியலைப் பிடுங்கி, சிலுவையை தன் தலைக்கு மேல் தூக்கி சுவற்றில் எறிந்தான்.

நீ இதைக் கொடுக்கப் போகிறாயா?
ஆமாம்.
உனக்கு கூசவில்லை?
இல்லை.
தரையில் காறித் துப்பினான் செந்தாடிக்காரன்.

அங்கும் இங்குமாய் பரபரத்து தேடி வாய்ச்சியை எடுத்தான் இளைஞன்.

செந்தாடிக்காரனை நோக்கி மன்றாடினான்.

விட்டுவிடு! நண்பா! என்னை விட்டு விடு!
என் வழியில் நான் செல்கிறேன்.

எந்த வழி?
பெரு மூச்சுடன் அமர்ந்தன் செந்தாடிக்காரன்.

இத்தனை நாட்களில் என் நண்பனுக்கு என்னவாயிற்று?
ஏன் இப்படி இருக்கிறாய்?

கடவுள்! என சொல்ல முயன்று அடிச் சிரிப்புடன் தன்னை அடக்கிக் கொண்டான் இளைஞன்.

விடு நண்பா! நான் எனக்குள்ளேயே போராடிக் கொண்டிருக்கிறேன்.

ஏன்?

தெரியவில்லை.

யூதாஸ் பொறுமையிழந்திருந்தான். அசையாது நின்றிருந்த இளைஞனை உற்றுப் பார்த்தான். அவனது பார்வை உலகைக் கடந்திருந்தது. அவிழ்க்கவே இயலாத இருள்.

பார்வைக்கு எட்டிய தொலைவு வரை இருள். அப்பால் பள்ளத்தாக்கு. மலையுச்சியின் மோனம். காற்றின் உள்ளீடற்ற கமகங்கள். முகில்களின் மர்ம நகர்வு. ஒளி பின்னிய நிழல் உச்சிப்பாறையில் தெளிந்து அலைந்தது. அதனுள் அவன் வீசியெறிந்த சிலுவை ஒளியிலிருந்து இருளை நோக்கிக் கொண்டிருந்தது.

பார்வையை விலக்கினான் யூதாஸ்.

உன்னால்...நீ! நீ! பேச முற்பட்டு திக்கித்தான்.

சதுக்கத்தில் ஊன்றி நிற்கும் தனித்த மரத் தூண் போல மரத்து நின்றான்.

இளைஞனின் கண்கள் இறுக்க மூடியிருந்தது. அதில் தெளிவாக அந்த ஒற்றை மனிதனை அவன் அறிந்திருந்தான். அது கால காலமாய் அவனைத் துரத்திக் கொண்டிருக்கும் முகம்.





















வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

நெடி

அவள் வியர்வையை உள்ளங்கைக்குள் பொத்தி வைத்திருக்கிறேன்.
அது கவிதைக்கே உண்டான கனவுகளை தோசைக் கல்லில் மாறி மாறி திரும்பிக் கொண்டிருந்தது.
மெல்ல கதவடைத்து விட்டு கனவுகளின் தாக்கோலைக் கொண்டு அதனை நறுக்கினேன்.
அறையெங்கும் வியாபிக்கும் நறுமணம்,
பலூன் பழங்களாக மிதந்தது.
கடைசியாக பசியுடன் அருந்திக் கொண்டிருந்த மதுக் கோப்பையில்,
சொட்டிக் கொண்டிருந்தன மழைத்துளிகள்.
தேங்கல் நதியின் பாசிப் படலங்களின் பிசுபிசுப்புடன் இருந்தது உள்ளங்கை.
அரவமின்றி உள் நுழைந்தது கதகதப்பு.
கனவுகள் தோசை மணத்துடன் பற்றி எரிய
உள்ளங்கைகைகளைக் கொண்டு நாசி அடைத்துக் கொள்கிறேன்.
வெளியெங்கும் உன் நெடியுடன் நனைத்துக் கொண்டிருக்கிறது மழை.