புதன், 31 ஜனவரி, 2018

பூனை

பூனை போல வளைய வருகிறது,
என் முன்னே இந்தத் தொலை தூர நெடுஞ்சாலை.
மெல்ல என் கணுக்கால்களின் பின்னே முட்டி வருடி
தன் இடுப்புச்சூட்டினால் அழுத்துகிறது.
எனக்கு முன்னும் பின்னுமாக வந்து போகிறது இரட்டைப் புள்ளிகள்.
இதற்கிடையிலான தூரத்தில்
அதைத் தூக்கிக் கொஞ்சுவதும்,
லாவகமாக அதன் அடிக்கழுத்தில் தடவுவதும்,
அதன் கண்கள் சொக்குவதுமாய் முன் பயணிக்கிறேன்.
முடியும் புள்ளியோ வெகு தொலைவில்,
செல்லும் பாதையோ நகரும் தோறும் மாற்றம்.
மெல்ல கால்கள் பதுங்க தலை தாழ்க்கிறது.
கண்களில் வெறி கொள் விழிப்பு.
இரவுக் கார்வைக்குள் மின்னும் பொறி.
தன் பின்னங்கால்கள் உள் மடிய உட்கார்ந்து
வெளிக் காட்டுகிறது
செந்நிற நாக்கையும் கோரைப் பற்களையும்.
வேகம் வேகம்.
தலை தெறிக்கின்றன காட்சிகள்.
முன்னும் பின்னுமான புள்ளிகள்,
சுருள் வட்ட வடிவமாய் உருமாறிற்று.
அதன் நடு மையத்தில் உள் புகுந்து விட்டேன்.
வெளிவர முயல்கையில்
என்னை நோக்கி
நகங்களைக்
கூர்
தீட்டிக் கொண்டிருந்தது

திங்கள், 29 ஜனவரி, 2018

முறிந்த சிறகுகள்

அந்தர நதியின் சிறகுகளை அறிவாயா,
தன் முட்டைகள் கனக்க கூடு தூக்கி வந்ததே உன்னிடம்,
உன் ஓடத்தின் துடுப்புகளால் உடைந்து போனதே,
உன் பாதையின் கட்டக் கடைசியில்
அதற்கு ஒரு வீடு உண்டு.
உனக்கு தெரியுமா,
அதன் இணை அங்கு ராவினை ஒளியேற்றி அழைக்கிறது,
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை,
உன் பயணத்தின் தனிமைச் சுழியில்
உன்னுடன் காத்திருக்க வந்ததே,
அது இந்த மேல் நோக்கி பாயும் நதியின் உடல். எங்கனம் உனக்கு சொல்வேன்,
இணைச் சிறகின் கனவுகளைத் தான்
நீ முறித்து விட்டாயே. 

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

பசி

தொடங்கியதும் பாழ் நிலவிரிவிலிருந்தேன்.
ஜன்னல்களில் துலக்கமாகியது
ஒரு நீள் வட்டப் பாதை.
மணல் திட்டுகளிலிருந்து கிளம்பும்
ஒலி நாக்குகளின் சீழ்க்கைகள்.
வழித்தடாகங்களில்,
கானல் பிம்பங்களின்
சதுப்புப் புதைவிற்கிடையில்
நெளிந்து நீளும் மென்மயிர் நெடுஞ்சாலை.
பதித்து பதித்து நகர்த்தப்படுகிறேன்.
திருப்பங்களிலெல்லாம்
முன்வரையறை இன்மையின்
நீண்ட பதற்றத்தின் நிறுத்தக் குறி.
நிறுத்தங்களிலெல்லாம்
மாறிப் போன பாதைத் தடங்களின் வெடித்த பீடம்.
பீடங்களிளெல்லாம்
தலைதிருகிய சேவல்களின் கேவல்கள்.
தேடித் தேடி வந்தடைந்த இறுதித்திறப்பில்
வற்றிய நீர்க்குளத்தின் பொருக்குகள்.
கரை படர்ந்த உடை முட்களில்
சொட்டச் சொட்டக் காத்திருந்தது,
எனக்கான குருதி.
தொடங்கியது என்றும் முடிந்தது என்றும்     
வெறுமனே சொல்லிக் கொள்கிறேன்.
வெட்டுண்டு
தலை தாழ்த்திக் கிடக்கிறது என் பசி
தன் குரலுடனும் நிழலுடனும்.

வியாழன், 25 ஜனவரி, 2018

பார்க்

எண்ணச் சருகுகள் சூழக் காத்திருக்கிறேன்.
அந்தியின் பிசுக்கல் மணத்துடன் மண்ணிலிருந்து எழுந்தடங்குகின்றன
நீர்ச்சுழிகள்.
பெஞ்சுகள் கேட்பாரற்ற சுமையுடன்
மனிதர்களின் குதவாசனையை முகர்ந்து,
தங்களுக்குள் குசுகுசுக்கின்றன.
இரவின் பளிங்கு வெம்மையுடன்,
மின்சாரத் துண்டங்களின் வெளிச்சம்
புள்ளியைக் குலைத்துக் கோழை வரைகின்றன.
நிலமெங்கும் நிறங்களின் கலங்கல் தெறிப்பு. வெகுநாட்கள் பழகிய இணக்கத்துடன்,
தன் பச்சிளம் அணைப்புடனும் கதகதப்புடனும், 
நடு நின்ற ஒற்றை மரம் மூச்சிழைக்கிறது.
அடிமரத்தின் வேர்ப்பிடிகளில்
என்னை அவிழ்த்து அவிழ்த்துக்
குமையத் தொடங்கின,
சருகுகளின் சொப்பனத் தாவல்.
அமைதியற்று சுழியும் நீர்த் தேக்கத்தில்
வந்தமர்ந்தது வானப் பறவை,
மிக மிகப் பொறுமையுடன்.

புதன், 24 ஜனவரி, 2018

மொழி

மௌனம் வெட்டிக் கிழித்த தோல்,
மொழியற்ற ஊமைத் தழும்பு.
மொழியின் காயம்,
வடிவம் துடிக்கும் குருதி.
அரை நிர்வாணப் பைத்தியத்தின் கைகளில்
கசங்கும்
பிளாஸ்டிக் குவளையில்
வழியும்
ஆறிய தேநீர் போலத்தானே
என் மொழியும் என் உலகினை வடிவமைக்கிறது. நடு ரோட்டில் அவன் சுயஇன்பம் செய்து அயர்வது போலவே
அதனை மறுதலிக்கவும் செய்கிறது. 

செவ்வாய், 23 ஜனவரி, 2018

கார்

எரிந்து களைத்த பெட்ரோல் வியர்வையுடன் என் அக்குள் ஈரம்.
இந்த வீடு தன் பராரித்தனத்துடன்  என்னிடம் முகிழ்கிறது.
இருக்கை நுனியில் தளர்ச்சியுற்ற அதன் ஸ்பரிசத்தினால்,
ஒரு மலைப்பாம்பினைப் போல சுருள்கிறது. பெருமூச்சுகள், கதகதப்பிடும் சமிங்ஜை.
பாதைகள் உருவிடும் வளைவுகளில் என்னுடன் சேர்ந்தே,
இந்தப் புது வெளியில், புது நிலத்தில் பதறுகிறது. என்னைப் போலவே சலிப்பின் முணங்குதலில்
மிகப் பெரிதாகவும், நழுக்கியும் குசு விட்டு அமைதியுறுகிறது.
ஆனால் நான் பயன்படுத்தும் பொருண்மை உலகினைத் தவிர்த்து
என்னை அது பயணம் செய்ய அழைக்கும் தூரமும்,
அதன் அனாமதேயத்திலும்
அது என் உயிருள்ள வீடு.

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

ஜன்னல் அளவு

இந்த நிலம் என் ஜன்னல் அளவுக்கே வளர்ந்திருக்கிறது.
நான் அதனைக் கடந்து செல்லும் போது மழைப்பூச்சி நெடி.
பாறைகளில் எழுதிய பெய்ண்ட் தழும்புகள் போல
எல்லாருக்குமாய் தத்தமது சொற்களை பாய் விரிக்கிறது.
இங்கு கதவுகளைத் திறந்து கொண்டு அழைக்கும் ராத்திரி மழையை நான் கண்டு கொள்ளவில்லை.
அப்படியானால் என் ஜன்னலை வடிவமைத்த பொழுதும்,
அதற்கு முன்பும் பின்பும் அந்த நிலம் இருந்திருக்கும்.
அதன் சொற்களும்.
இல்லை எல்லோரது சொற்களும்.
ஆனால் நான் ஜன்னல் அளவுக்கே அதை வைத்துக் கொள்வேன்.

சனி, 20 ஜனவரி, 2018

மகா பெரிய புரோட்டா

என்னால் என்ன செய்ய முடியும்
என்பதை திட்டவட்டமாக உணர்ந்திருக்கும் போது எந்த குழப்பமும் இல்லை.
ஆனால்
என்னால் செய்ய முடியாத ஒன்று
எனக்கு கிடைத்தவுடன்,
என் முன் அது மகா பெரிய புரோட்டாவாக உருக்கொள்கிறது.
பிய்க்க பிய்க்க எஞ்சியிருக்கும் அதனை துளியோண்டு சால்னாவால் விழுங்க வேண்டுமாம்.
நான் பிய்த்துக் கொண்டே இருக்கப் போகிறேன்.
இன்னும் ஒரு கிண்ணம் சால்னா கிடைக்கும் வரை.
செய்ய முடியாத ஒன்று மிகப்பெரியதாய் இருப்பது எவ்வளவு ஆசுவாசம்.

எதன் பொருட்டோ

கடிகார சப்தத்தின் மொழியிலிருந்து 
இருளை மெல்ல மெல்ல திரட்டுகிறேன். விடிபல்பின் இள நீலத்தில் தாத்தாவின் முகத்தில் வால் நெளிக்கிறது பல்லி. 
கழிவறைக்குழாய் அதனை நீர்மையாய் உருமாற்றிக் கனமெழுப்பி புரண்டு படுக்கிறது. இந்தத் திட்டுகள் படிந்த இரவு சமனில்லாத வறண்ட குளம் போல, 
எதன் பொருட்டோ கனவு எழுப்புகிறது. 
இதன் எண்ணற்ற டயர்த் தடங்கள், 
இரவின் கீழ்க்கழுத்தில் உன்னிகளாய் முளைக்கத் தொடங்கியதும், 
அமைதியற்றது மெல்ல மெல்ல திட ரூபம் கொள்கிறது.

பின் இந்த இரவினைத் திருப்தியாகக் கடத்தி விடுகிறேன். 
வயிறு முட்ட முட்டத் தண்ணீர் குடிப்பதைப் போல.

வெள்ளி, 19 ஜனவரி, 2018

ராவு

நட்சத்திரங்கள் ஒளிந்திருக்கும் குகை விளிம்பு
கித்தான்களின் கிழிசல்கள் வழி
எட்டிப் பார்க்கும் இராக்கூவல்
இன்னும் சஞ்சரிக்கா பகல்களின்
கணப்படுப்பின் கரித்துண்டங்கள்,
முக்கு மூலைகளில் தடாகத் தழும்பலுடன் பரிதவிக்கும் வெண்மையின்
கலங்கல் பரிசுத்தம்,
பிரம்மாண்ட விழுதுகள் கொண்ட ராட்சச மரத்தில் தொக்கி நிற்கும் கூடுகளாய் ராத்திரிக் கோளங்கள். விழுங்க இயலாத கருமை, தெங்கைப் போல
நீர்மையின் குலுங்கலுடன் என் உள்ளங்கைகளில் உருள உருள
எதிரொலிகள்.

புதன், 17 ஜனவரி, 2018

ஏன்

ஒரு நிச்சயத்தன்மையைக் குலைத்துக் கொண்டே இருப்பது
காலடிகளின் நடுக்கத்தை பதற்றத்துடன் பின் தொடர்வது
மலைகளுக்கப்பால் இருப்பதை மட்டும் கண்டடையத் துடிப்பது
தன் சொந்த உள்ளங்கைகளால் வேர்களை வேரோடு பிடுங்கி எறிவது
தனக்கான இருக்கையில் மலம் அள்ளிப் பூசுவது
காற்றின் கீறல்களால் காயங்களை உருவாக்கிக் கொள்வதும்
அதன் காரணங்களை
அறிவுஜீவித்தனத்துடன் ஒதுக்கிக் தள்ளுவதும்
துகில் களையும் பதைப்புடன்
எலிகளைத் தேடித் தேடிக் கொலை செய்வது,
பின் அதன் கல்லறைகளில்
முறிந்த சிறகுகளுடன் மலங்க மலங்க விழிப்பதும்
சாத்தியங்களின் சுவர்களில்
தனக்குப் பிடித்த ஆபாசங்களை வரைந்து
சுயமைதுனம் செய்து கொள்வது என்று...
இன்னும் எஞ்சியிருக்கும் வழித்தடத்தில்
ஏன் என்றோ, எங்கு செல்கிறோம் என்றோ தெரியாது,
தன் பாதச்சுவடுகளை அழுந்தப் பதிந்து
இரைக்காக காத்திருக்கிறது,
ஒரு வனமிருகம் போல.
ஏன் கவிஞனாக யாருமே விரும்புவதில்லை
கவிஞனைத்தவிர...

புத்தம்

எங்கிருந்து துவக்க என்பதை
அறியாது நின்றிருந்தது,
மரக்கிளையில் மகரந்தங்கள்.
அந்தியின் விரல்கள்,
கிளைக்கூந்தல் கோதி அவிழ்த்து
தன் பொன்னிற உள்ளங்கையில்
மிகப்பத்திரமாக அதனை சேமித்துக் கொண்டது
இரவு, தன் கனத்த அடிவயிற்றைத்
தடவித் தடவிக் கோர்த்த சூல் விதைகள், 
பூரிப்புடன் காத்திருக்கின்றன.
துவக்கத்தின் பதற்றம் தொலைந்து மரம்,
சூழ் கொள்ளும் உஷ்ணத்தை
மிகப்பாதுகாப்பாய்
உதிர்க்க உதிர்க்க
துளிகளும் துளித்துளிகளும்
உருத்திரண்டு
விடிய முயல்கிறது.
விடியல் தன் நடுங்கும் கரங்களால்
குமிழிகளாய்
ஒவ்வோர் இலை நுனிகளையும்
பற்றிக் கொள்கிறது.
தனித்த மரம் 
யாவர்க்குமாய் பகிர்ந்து கொண்டிருந்தது
அந்த
புத்தம் புது அதிகாலையை.

வியாழன், 11 ஜனவரி, 2018

தாடகை

3
அந்திக்கருக்கல். ஒற்றையடிப்பாதையின் வழக்கமான மென் தோல் பிருபிருப்பு, ஒவ்வோர் காலடியிலும் செருப்பின் கீழ் சதையை ஊடுருவிக் கொண்டிருந்தது. தேங்கலில்லாத நீரின் ஓட்டத்தில் சிறுபிள்ளைகளின் குழைவு. மதகில் அவிழ்த்துப் பொங்குகையில், கைகளைத் தூண்டி அழைக்கிறது. நித்திய சூலியாய் நின்றிருந்தது வேம்பு. பட்டையிலிருந்து ஒழுகும் பிசின் நீர்த்துமியைத் துழாவி, இரவின் மென்னிருளை ஸ்பரிசித்து நாசிகளில் மணத்தியது. சாரைப்பாம்பு அசைவை மெதுவாய் உள்ளிளுத்து நீரோட்டத்தில் கரை தாண்டத் திமிறி, தலை உந்தி பின் நீருக்குள் முழுகியது. படித்துறையில் பாசி நெடியினுள், நத்தைகள் குமுழிக் கொண்டே தனித்தனியாய் மோனத்தினுள் ஆழ்ந்து கற்படியில் விக்கித்திருந்தது. வீடுகளின் கண்கள் அணைந்து கொண்டிருந்தன. ஆல மரத்தின் கிளைகளில், இரவை அணங்காமல் அழைத்துக் கொண்டிருக்கும் பல நூறு நாக்குகள்.
பிருஷ்டம் போலவா, கூம்பா, இளம் முலைகளா, மூக்கு, முண்டிய வயிறு, கால்கள். எனக்கு முன்னால் வியாபித்துப் படர்ந்திருக்கிறது அந்தக் கருமை. உண்மையில் அதன் கோட்டு வெளிச்சம். வானம் இணையும் எல்லையில் சர்ப்ப நெளிவைப் போல. வடிவில்லாத காலமாய் உந்தி நிற்கிறது. காலம் கொண்டு அதனைப் பறண்டிக் கொண்டிருக்கிறேன். திகைத்து நிற்கையில் இந்தக் கதையின் ஞாபகம்.
ஆரண்யத்தில் பெரும் முலைக்காரியை யாவருமறிவர். இருளின் நிறத்தில் அவள் பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். வானத்துடன் புணர்ந்து பெற்றாளா இல்லை ஓயாது சமரிட்டுக் கொண்டிருக்கும் கரிய காலனை ஆலிங்கனித்து அவர்களுக்கு உருக்கொடுத்தாளா தெரியவில்லை. அவர்கள் பிறவியிலேயே அங்கங்கள் வளர்ந்த உருளைக்கற்களால் தேகம் வார்த்த பெரும் ரூபங்களாக வனம் படர்ந்து கிடந்தனர்.  தம் பிள்ளைகள் சப்பிய பால் போக மிச்சப்பால் வனாந்தரத்தின் இண்டு இடுக்குகளிலெல்லாம் ஒழுகி வளம் நிரப்பியது. சாகா வரமடைந்த பூக்களையும், வண்டுகளையும், வானமுந்தி அழைக்கும் நீள் மரங்களையும், வேர்களே உயிர்களாய் பச்சை நிரப்பும் புற்பூண்டுகளையும், கிழங்குகளையும். வனப்படைந்த ஓராயிரம் முலைக்காம்புகளாய் சக்கைகளையும், தன் கனாக்களைக் கொண்டு எண்ணற்ற சிறகுகளையும், மத நீர் கொண்டு வண்ணத்துப்பூச்சிகளையும், அக்குள் வியர்வை கொண்டு சுனைகளையும், தடாகங்களையும் உருவாக்கி வளம் பெருக்கினாள்.
தனி ராஜ்ஜியம் நடத்தும் அவளது பிரதேசத்தில், அங்கிங்கெனாத படிக்கு பிள்ளைகள் நிரம்பி வளர்ந்தன. ஆரண்யம் தாண்டியும் அவளது கால் விரல்கள் வெகுதூரத்திற்கு நீண்டு கிடந்தது. கோப முனி எறிந்த வெட்டுக்குத்தியால் அகழ்ந்த நிலத்தில் தன் மைத்துனன் நீலாழியைத் தழுவிக் கொண்டு காலமற்று ஆட்சி நடத்திக் கொண்டிருந்தாள். அவளுக்கு பெயரில்லை. சூட்சுமமாய் தன் கோவிக் கைகளால் பிள்ளையைத் தழுவிக் கொள்ளும் அம்மையைப்போல, கன்னியம்மையின் ஒளிர் மூக்குத்தி போல, வராகன் அகழ்ந்தெடுத்த தேவியைப் போல, வட்ட வடிவினளாய், வளைந்து தடாகையாய் கொழித்து செழித்திருந்தாள்.
தன்னைத்தானே அழித்தெடுப்பவள், தீக்கனல் சொரியும் இசக்கியவள். தன் பிள்ளைகளைக் கடித்து விழுங்கும் அவளது தழல் நாக்குகளை நான் கண்டிருக்கிறேன். ஆனி ஆடி மாதங்களில் அவளுக்கு வெறி பிடிக்கும். மலைகளையெல்லாம் தன்னுள் விழுங்கிக் கொள்வாள். நிலத்தையெல்லாம் தன் செண்பக விரல்களால், கசக்கியெறிவாள். கால் விரல்களின் கூர் உகிர்களால் உயர்ந்தனவற்றையெல்லாம் நெட்டித்தள்ளி பொடியாக்குவாள். அடங்காச் சினம் உருளும் அவள் நாசிகளில், உஷ்ணத்தின் தீக்கங்குகளாக இருள் தெறிக்கும். பிள்ளைகளை தன் அடங்காப்பசிக்கு வாரி வாரித் திம்பாள். ஒழுகும் கொதி மத நீர் அப்பொழுது சாரை சாரையாக கரு நாகங்களாய் உருவெடுத்து விடம் கக்கி, சூழ்ந்த பசுமையினைக் கரித்துக் கொண்டே செல்லும். எதுவும் மிஞ்சாது பாலையாவது வரை அவளின் உமிழ் நீர் திராவகமாய் பொழிந்து உயிர்களை வதைத்து சிதைத்து அழிக்கும்.
பின் அடங்குவாள். கருமையினைக் குடித்துக் கொண்டு, தனிமையில் தன் செந்தழல் கண்களால் உடலை நோக்குவாள். வறண்டு தொங்கும் முலைகளையும், காரை எலும்புகளையும், வெறித்து, காய்ந்திருக்கும் தன் அல்குலையும் காண்பாள். வானத்தை விழுங்க அண்ணாந்து கிடந்தாள். பொறுமையின்றி புரண்டு உருண்டாள்.  அந்த சமயம் தான் கட்டைமுனி அவள் பிரதேசத்திற்குள் நுழைந்தார். அதுவும் ஒரு கருக்கல் நேரம். அந்தகாரம் தன் மேற் போர்வையை குமிழ் குமிழாக திறந்தும் மூடியும் போக்கு காட்டிக் கொண்டிருந்தது. கதிரவன் சென்னிறக் கோழையாய் பாலையின் வெண் சாம்பலில், உழைந்து கொண்டிருந்தான். தாகமெடுத்த முனி கமண்டல நீரை கைகளில் ஊற்றினார். விஷம் சூழ்ந்த சூழ், உஷ்ணத்தில் நீர் வற்றி விட்டது. தடாகங்கள் கிடந்த சதுப்பு, வறண்டு அவளது உப்புக்குத்தியின் வெடிப்பாய்க் கிடந்தது. அங்கு இரு கரு உருவங்கள், ராஜ நாகங்களைத் தோலுரித்து சவைத்துக் கொண்டிருந்தான் ஒருவன். உடும்பின் தலையை ஒடித்து அதன் மென் அடித் தோலை தன் வீரப்பற்களால் இழுத்து கரும்பை மெல்வது போல அதன் சூடான குருதி ஒழுக சுவைத்துக் கொண்டிருந்தான். அவர்களுக்கு உருவமில்லை. ஒரு வேளை இருந்ததோ. ஆம்! அவர் திகைத்து விட்டார், இது வரை அவர் அறிந்த அவரது முன் முடிவுகளில் உதித்த எந்த உருவமும் அவர்களுக்கில்லை. ஆனால் ஏதோ ஒரு த்வனியில் அவர்களை ஆண்கள் என்று மட்டும் கணித்து விட்டார். மேலும் அவர்கள் சிறுவர்கள் தான் என்பதும். ஆனால் ஊகிக்க முடியாத கொடும் நாற்றம் அந்தச் சூழலை அவரின் கண்களிலிருந்து மறைத்தது.
கருமையின் கார்வை அங்கு மெல்ல ஒரு பிணத்தைப் போர்த்துவதைப் போல அவரை முழுக்கடித்தது. அவர்கள் தான். இப்பொழுது இரை கிடைத்த குதூகலத்தில் பாலையின் செம்போத்துகளாய் கீறினர். மானுட ரத்தத்தின் வாசனை, புளித்த தேனைப் போல கிறங்கடித்தது. அவர்களின் வயிறு இருக்குமிடத்தில் இருளாய், நிரம்பாத பிலங்கள். இருளுக்குள்ளிருக்கும் முனி பெரிதாகிக் கொண்டே இருந்தார். இவர்கள் விழுங்க முடியாத அளவு, ஆனால் இவர்களும் தத்தமது தாடைகளை விரித்துக் கொண்டே இருந்தனர். அவர் முடிவிலி வரை உந்தியிருந்தார். தழல் நாக்குகளின் சிவந்த உள்ளறைகளிலிருந்து, நெருப்பு ஒரு பாதாள நீரோட்டமாய் அலையாடிக் கொண்டிருந்தது. பிளந்த வாயை மூட இயலாது கதறினர். தாடை கிழிந்து கொடிக்கம்பம் சருகி விழுவதாய், உதிர் சருகுகளாய், தலை வெட்டிய அரவங்களாய், காட்டு நாய்களின் முணங்கல்களாய், பிளிறலாய், உறுமலாய், விதிர்த்தலாய், கேவலாய், அதட்டலாய் பல்லாயிரம் விளிகள். மல்லாந்து கிடந்த வறுமுலை அம்மையின் காதுகளில் கீரிச்சிடலாய் அணங்கிக் கொண்டிருந்தது.
கட்டைமுனி பிள்ளைகளுக்கு வாய்ப்பூட்டு போட்டு, பசித்து சாக சபித்து நிலத்தை விட்டு அகல எத்தனித்தான். எல்லை தாண்ட முயல்கையில் அம்மையின் அழைப்பு. அவள் கட்டை முனியை நன்கறிவாள்.
எங்க போறியோ…!
என்னய இங்கன சாவ உட்டுட்டு போவாதியோ…!
கேளும் வே…
அவள் அழகிய ரூபமெடுத்து அவர் முன் சிருங்கரித்தாள்.
என்னத் தெரியலயா…
லோபமுத்திரை. வெகு நாள் தேடியலையும் அவள் இங்கெப்படி வந்தாள். கட்டை முனி திடுக்கிட்டார்.
இங்கெப்படி வந்தாய்.
அன்னைக்கு கடைசியா நீங்க என்ன உட்டுட்டு போன பொறவு, பயங்கர மழை, ஒரு நாகம் வீட்டுக்குள்ள வந்து குட்டி போட்டுச்சு. அது ஒரு ராத்திரிலேயே நம்ம குடில் அளவுக்கு வளந்துட்டு. நான் பயந்துட்டு ஓடப்பாத்தேன். ஒங்கள விளிச்சேன். அது என்ன முழுங்கிட்டு. ஆனா, அதாலே முழுசா திங்க முடியல. இங்கன என்னத் துப்பிட்டு போய்ட்டு. நான் நீங்க வருவீங்கனு இத்தன நாள் காத்துக்கெடந்தேன். எப்படியோ இந்தா வந்துட்டேள்ளா. என்ன இங்கருந்து கூட்டிட்டு போய்ருங்கோ.
ஆனால் அவள் தந்திரமாக அவரை மயக்கி இங்கேயே இருத்தி, தன்னை மீட்டு விட முடிவு செய்திருந்தாள். காமத்துடன் அவரை நெருங்கித் தழுவினாள். மலை அருவிகளின் சுகந்தம் அங்கு நிரம்பியது. அருகில் நெருங்க நெருங்க கட்டை முனி விடைத்தார். பாசியுடன் இணைந்த மென் துமி ஒரு சரச நாதமாய், ஒலி புனைந்து நிலத்தில் புரண்டது. தீராக் காமத்துடன் அவர்கள் சர்ப்பங்களாய் பிணைந்து புணர்ந்தனர். தன் சூட்சும உடலை விட்டு கட்டை முனி ஒரு சிறுவனாய் உணர்ந்தார். அவரது குழந்தைமையை முத்தி இறுக்கினாள். அடுக்குகளாய் பிரிந்திருந்த அவரது அகக் கட்டுமானத்திற்குள் தாகம் இறைக்க, அவளது கேசம் அனல் நீரோட்டமாய் தொண்டைக் குழியில் இறங்கியது. அவர் நீலம் பாய்ந்த மதலை போல, அவளது கைகளுக்குள் துவண்டார். மோனமிழந்த சூழலில் அவளது மதம் உருகி வழிந்து நிரம்பிக்கொண்டிருந்தது. அவள் தன்னிலிருந்து எல்லை மீறி பீறிடும் முலைக் கண்களை, கணக்கற்ற தழல் அதரங்களுக்கு ஊட்டினாள். அடி நீரோட்டமாய்க் கலங்கியத் தொழியாய் நிலமெங்கும் பால் பொங்கிவழிந்தது. அது ஒரு பாலாழியாய், அந்த நிலமே ஒரு தோணியாய் உருமாறி அசைந்து கொண்டிருந்தது. விடைத்த அவரது குறியை மெல்ல மெல்ல அதக்கிப் பிழிந்தாள்.
சலனத்தின் மெல்லிய நொடி, தன்னைத் தின்று கொண்டிருக்கும் ஓநாயின் ஒளிக் கண்கள். இல்லை! இல்லை! ஸ்தம்பித்தது. இறுகியிருந்தது அவரது உடல். சுருங்கிய தேகத்தில் தீப்புண்கள். எழுந்து ஓங்கரித்தார். நீ! நீ!
அவள் வனத்தையே இடையாடையாய் அணிந்திருந்தாள். பொங்கிப் பெருகி சூழ்ந்து கொண்டிருந்தது ஆரண்யம். மதர்த்த அவளது முலைகளில் இன்னும் இன்னும் என்று நிறையாத பாலருவிகள். பாம்புகளை அரையிலும், கழுத்திலும் அணிந்திருந்தாள். குருதி சொட்டும் வெண் வீரப்பற்கள் தாடை வரை தொங்கிக் கிடந்தது. கருமையாய் உருண்ட விழிக் கோளங்கள். நீள் மூக்கின் விடைத்த நாசிகளில் உஷ்ணப் புகை. நெற்றியில் இமையற்ற ஒற்றைக் கண். அதில் பார்வை இல்லாத வெறித்த அந்தமற்ற நோக்கு. காதுகளில் எலும்புக் குழைகள். கருப்பி! கருமைக்கு உருவம் கொடுத்தால் உருவாகும் வடிவு. ஆனால் அவர் நோக்க நோக்க எஞ்சியிருக்கிறது இன்னும் அவளது உடல். கண்கள் தாங்க இயலாத அரூபத் தோற்றம். அயர்ந்து அயர்ந்து வடிவு தேடும் அகம். ஆனால் வடிவற்ற பிரம்மாண்டம். தெற்கிலிருந்து மேற்கு நோக்கி அவள் வளர்ந்து கொண்டே இருந்தாள். அவர் காணுந்தோறும் எல்லையின்மையாய் அவரது அறிதல் உடைந்து கொண்டே இருந்தது.

 இதுக்கென்ன உருவம் கொடுப்பது என்பதை யோசித்துக் கொண்டிருந்தேன். நீள் மஞ்சள் மூக்குப் பறவை ஒன்று இரை தேடும் திண்டாட்டத்தில் வேம்பின் கிளைகளில் சப்தித்தது. வள்ளியாமடத்து இசக்கி கோவிலின் களப மணம். முக்குத் தாண்டி வந்து கொண்டிருந்தேன்.
படித்துறையில் மெல்ல அளைந்து கொண்டிருக்கிறேன். கைகளுக்குள் அகப்பட்டும் நழுவியும் செல்கிறது இந்த கனத்த நீர்த்தாரை. எங்கிருந்து வந்து கொண்டிருக்கிறாள். யாரது முலைக்காம்புகளிலிருந்து கசிகிறது.
புரண்டு படுக்கிறேன். அம்மை திரும்பி படுத்திருக்கிறாள். அம்மையின் முடிக்கற்றை இருளினுள் விகாரமாய் உருவெடுத்திருக்கிறது. விடிபல்பு வெளிச்சத்தில் அதனுள் வடிவம் தேடிக் கொண்டிருக்கிறேன்.
அதற்கு வடிவங்களே இல்லை.


அக்கா

கண்ணாடி, தலை வாழை இலையில், பாளையங்கோட்டன் பழங்கள், வெற்றிலை, பாக்கு. பழத்தில் குத்தி நின்ற ஊதுபத்திப் புகை. ஸ்டூலுக்கடியில் கம்யூட்டர் சாம்பிராணி. கண்ணாடிக்குப் பின் சுவரின் மேல்வட்டமாக சிவப்புச் சாந்தும் கீழே நேர்க்கோடாய் குங்குமும். சாத்தியிருந்த சம்மங்கி மாலையும். தாம்பாளத்திற்கருகில் எவர்சில்வர் குவளை நிரம்ப சுண்டக்காச்சிய பால்.
என்னாச்சு…என்னாச்சு மக்கா!
குசுகுசுவென்று சித்திகள் தங்களுக்குள் பேசிப் பூரித்துக் கொண்டனர். எட்டி! நல்ல நேரமாக்கும். வளர்பிறை. தேவிக்க நாள். வெள்ளிக்கிழமை.
அக்கா, வயித்தை இறுகப்பிடித்து அழுது கொண்டிருந்தாள்.
தலைக்கு தண்ணி ஊத்தும் நாளிலும் எனக்குப் புரியவில்லை. யாரும் விளக்கவுமில்லை.
அவள் என்னைப் போலவே இருப்பாள். உருவத்திலும் வடிவிலும். ஆண் பெண் என்ற வித்தியாசம் தவிர்த்து. என்னைவிட இரண்டு வயது மூத்தவள்.
தோல் கிழிந்து சிவந்த முட்டியில் எச்சில் துப்பித் தடவினாள். காந்தல். கண்களை இறுக்கிக் கொண்டேன்.
எங்கப்போ, ரெத்தம் வருகு. அக்காவ மன்னிச்சிரு மக்கா. தெரியாம செஞ்சுட்டேன். கண்ணீர் மேலிருந்து என் மூக்கிற்கு மேலே துளித்துளியாய் விழுந்தது.
எனக்கு வலிக்கலட்டி. உண்மைலயே வலிக்கல. நாக்கைத் துருத்தி வலிச்சம் காட்டினேன்.
போலே. நாயே! பன்னி!
கண்ணாடியின் முன் முட்டுக்கன்னி போட்டு அழுது கொண்டிருந்தாள் அம்மா. அவளைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் அவளது அக்குள் வாடையைத் தான் அறிகிறேன். இங்கும் இருக்கிறாளா? சூட்சுமமாக அவளது உடலின் வியர்வையை, மதர்த்துக் கிளம்பும் அவளது உள்ளாடைகளின் நறுமணம் சாம்பிராணிப்புகை வழி என் அணுக்களில் நிரம்புகிறது. புண்ணில் ஈக்கள் போல அகத்தில் அரித்துக் கொண்டிருக்கிறாள்.
இது சரியில்ல கேட்டியா. இனிமேல் இது செய்யக்கூடாது. அம்மைக்கு மேல சத்தியம் செய்.
நான் நரம்புகள் இழுபட என் தாடையை இழுத்துக் கொண்டு, முகத்தைத் திருப்பி சத்தியம் செய்தேன்.
மத்தவனுக்க, கோவத்த பாத்தியா. லேய். சரி போட்டும். இனி செய்யாதே.
அவள் என்னுள்ளிலிருந்து நான் மருகும் இன்னொரு ஆகிருதி. என்னை நான் பெண்ணாய் அவளிடம் கண்டு கொண்டிருக்கிறேன். இன்றும் தான்.
லேய்! பாவாடைத் தும்பை கடிக்காதலே. இங்க பாரு லே! என் மூக்கின் நாசிகளை விரல்களால் அழுத்தி சிந்தினாள். சழுவை வடிய பின் அவள் மடியிலேயே அன்று உறங்கிப் போனேன்.
ஞாபகங்களின் அலைகள், நோயுற்ற யானையைப் போன்ற எண்ணவோட்டங்களின் குத்திட்ட இருப்பில் இடித்துப் பின் சென்றது. இரண்டு முறை அதன் பிறகு தற்கொலை முயற்சி செய்தேன். அதற்கு நான் காரணமில்லைதான். ஆனால் நான்…நான்…மிருகத்தைப் போல உணர்கிறேன் இன்று. என்னால்தான் அது நிகழ்ந்திருக்குமோ, இன்று வரை காரணங்களையும், நியாயங்களையும் சொல்லிக் கொண்டு சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
அன்று கரண்ட் இல்லை. நானும் அக்காவும் வீட்டிலிருந்தோம். எனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கலாம். அவள் மெல்ல என் நிக்கருக்குள் கை விட்டாள். எனக்கு புரியாத, இது வரை நான் உணராத கிளர்ச்சி. என் கையைப் பிடித்து அவள் பாவாடைக்குள் அழுத்தினாள். என்ன நிகழ்கிறது. அவள் மெல்ல அழுத்திக் கொண்டிருந்தாள். எனக்கு அவள் என்ன செய்தாளோ அதைப்போலவே நானும் அவளுக்கு செய்து கொண்டிருந்தேன். ஒரு  குறிப்பிட்ட கணம் நான் மேலெழும்புவதைப் போல, என் வலது காலின் பெருவிரல் பக்கவாட்டு நரம்புகள் துடித்தடங்குகிறது. குறி மெல்ல எழும்பி தாங்க இயலாத ஒரு காற்றழுத்தம் அதனுள் இருந்து கிளம்பி என் வயிற்றினுள் உருண்டது. அவள் அதை ஊகித்ததைப் போல நிறுத்திக் கொண்டாள்.

இரண்டு வருடம் முன்பு அவளை நான் ஸ்தூலமாக திரும்பக் கண்டேன். நான் அவளின் தோள்களில் அமர்ந்திருந்தேன். கழுத்தின் ஆரங்களின் நெழிவு அளவெடுத்த சமமான முலைகளுக்குள் அலுங்கியது. இறுகிய வயிற்றில் பிள்ளை பெற்ற தடம் போல இடையில் சிறு நெகிழ்வு. இடுப்புக்கச்சையில் ஒட்டியானங்களும், மணிகளும் கோர்த்திருக்கிறது. கோவிப்பொட்டும், பக்கவாட்டுக் கொண்டையும் வைத்திருந்தாள். நீண்ட கால்களின் பின் சதைகள் ஆணைப் போலவே. அவளது அக்குளில் நிச்சயம் முடி இருந்திருக்க வேண்டும். எண்ணெய் வழியும் அவளின் தேகத்தில், ஆம். இது அவள் தான் வெகு நாட்களாக நான் ஒதுக்கிக் கொண்டிருக்கும் அவளது நறுமணம். வியர்வையின் மதர்த்த நீர் அவளது உடலெங்கும் வழிகிறது. நான் சிறுபிள்ளையாய் நிக்கர் மாட்டிக் கொண்டு அவளது தோள்களில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறேன். எனது இடதுகாலைக் கெட்டியாக தன் சிவந்த விரல்களால் பிடித்து அழுத்தி வைத்திருக்கிறாள். நாங்கள் புறப்பட்டு சென்று விடுவோம். என்னைக் கூட்டிக் கொண்டு போக வந்து விட்டாள். அங்கேயே அமர்ந்து விட்டேன். கோவில் நடை சாத்தும் வரை.
ஒரு பிரமை போல அந்த நாளை இன்று மீட்ட முடிகிறது. அவளுக்கும் எனக்குமான உறவு பிண்ணிப்பிணைந்த இருதலை நாகங்களைப் போல. ஓருடல் தான் இருந்திருக்கும்.
சடங்குக்கு பிறகு அவளை நான் பார்ப்பதே உருமாறிக் கொண்டிருந்தது. ஆனால் இது ஒரு வகை ஊசலாட்டம். சொந்தத் தண்ணுணர்வு என்னை இழுத்துக் கொண்டிருக்கும். ஆனால் உள்ளே காந்தத்தை சுற்றி ஒட்டிக் கொள்ளும் இரும்புத்துகள்களைப் போல அவளை, அவளது அருகாமையை, குரலை, அசைவை, பாவனையை என்னை அறியாமலேயே நானும் நகல் செய்து எனக்குள் நடத்திக் கொண்டிருப்பேன். அவள் என்னை விட்டு விலகிக் கொண்டிருந்தாள். நான் அவளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தேன்.
அன்று யாரும் வீட்டிலில்லாத நாளில், அவளது உள்ளாடைகளையும், நைட்டியையும் நான் அணிந்து கொண்டேன். அவளையே இறுக்குவது போல என் கைகளால் என்னுடம்பை வலிக்கும் மட்டும் இறுக்கினேன். கழற்றிய உள்ளாடைகளை ஆசை தீர முகர்ந்தேன். அவளது குரல் போல அந்த வாடை என் செவிகளுக்குள்ளும் நிரம்பிக் கொண்டிருந்தது. கண்ணாடியில் என் பிம்பத்தை நானே ஆசைதீர முத்திக் கொண்டேன். அதில் ஒட்டி வைத்திருந்த ஸ்டிக்கர் பொட்டுக்களை எடுத்து என் குறியில் ஒட்டி வைத்து தடவினேன். அவளை இணக்கமாக அறிவது போல அவளது உடல் மொழி என்னுள் குடியேறியதைப் போல ஆடியில் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த பிம்பத்தில் நானும் இருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது என்ன உணர்வு. என்னுடல், என் அக்குளை முகரும் போது அதில் அவளை அறிவதாய் சில நேரம் தோன்றும். ஆனால் இது நான். ஒரு ஆணின் உடல் அங்கு எதிரொளிக்கிறது. ஆனால், ஆனால்…அவளைப்போலவே என் குறியை நான் வெகு நேரம் தடவிக் கொள்கிறேன்.
காமம் ஒரு வடு போல இருப்பதில்லை. செம்புண் போல. நமைத்துக் கொண்டே இருக்கும். சில நேரங்களில் தோன்றும் இதனால் என்ன இப்பொழுது. இல்லை. உண்மையில் அங்கு இன்னொரு பெண்ணை என்னால் வைக்க முடியவில்லை. உண்மையில் எந்தப்பெண்ணையும்.
கக்கூசுக்குள் நான் கத்தி அழுது கொண்டிருந்தேன். ப்ளேட் என் விரல்களுக்கிடையில் கூர்மையாக மினுங்குகிறது. தோர்த்தைத் துளைத்து எம்பி நிற்கிறது குறி.
லேய்! லேய்! யாம்லே…என்னாச்சு.
ஒன்னில்லம்மா, கால் சருகிட்டு. ஒன்னில்ல…
ஒன்றுமில்லையா. என் குறியைப் பார்க்க சகிக்கவில்லை. பெண்களிடம் ஒரு சேரக் கவர்ச்சியும், பயமும் தோன்றுகிறது. தினமும் சுயமைதுனம் செய்கிறேன். ஆனால் இந்தக் கை, இந்த விரல்கள் இது என்னுடையதல்ல. கூர் நகங்களால் என் முழங்கை சதையை நுள்ளி விடும் இந்த விரல்கள் என்னுடையதல்ல. ஆனால் சேர்கையில், சேராத ஒரு பாகம் துண்டாக இருக்கும். அந்த உடல் துண்டு, அறுந்த பல்லி வாலைப்போல துடித்துக் கொண்டிருக்கிறது. அது மறுதலித்துக் கொண்டு, விலக முயற்சிக்கிறது. நானல்ல. என்று நிரூபிக்க முயல்கிறது. இருந்தும் பயமா, காமமா என்று எண்ணுகையில் காமம் தான் வெல்கிறது.
மக்கா! ஒடுக்கத்தி வெள்ளிக்கெழம இன்னைக்கு, அக்காவ நெனச்சுக்கோ! மறந்துராத. சாப்டியா. கடைலயா. லேய். நல்லத வாங்கித்தின்ணு, ஜூஸ் குடி. சாயை கும்பிடுகேல்லா. உனக்கு யாராவது சித்தரத்தான் கும்பிடனும் கேட்டியா. லேய். கேக்க மாட்டுக்கு. சத்தமா பேசுலே. சரி, ஒடம்ப பாத்துக்கோ!
சரிம்மா. வைக்கேன்.
நினைக்கிறேன். எங்கிருந்து அவளை அறுத்தெறிய என்று. இல்லை எந்த பாகத்தில் அவளைத் தைத்துக் கொண்டு வாழ.
இரவின் மயான அமைதி. அவிழ முடியாத காற்று அறைக்குள் அடைபட்டு நாய்க்குட்டியைப் போல முணங்கிக் கொண்டிருந்தது. நான் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். மின்விசிறி தூசியைக் கக்கிக் கொண்டு, அமானுடமாய் இரைந்து கொண்டிருந்தது. கட்டில் ஒதுங்கியிருக்கும் முக்கில் இருள், ஜன்னல் வெளிச்சத்தில் அகப்பட்டு அதன் நிழல்களினுள் தன்னிருப்பை ஸ்திரப்படுத்திக் கொண்டிருந்தது. நான் அமைதியற்று போர்வைக்குள் உருண்டு கொண்டிருந்தேன். தோள்கள், தோள்கள். அவள் என்னைக் கூட்டிச் செல்வாள். நான் நம்பும் திசையில் என்னைக கடைத்தேற்றுவாள். ஒரு புலம்பல் உள்ளறைகளில் ரேடியம் பந்தைப் போல நிற்காமல் சாடிக் கொண்டிருக்கிறது. கரண்ட் போனது.
டேய்! நாகு, அக்காட்ட ஒனக்கு புடிச்சது என்ன சொல்லு.
நான் விழிபிதுங்க ஏதோ கண்டுபிடிக்க முயல்பவன் போல அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஒனக்கு தெரியாதே! தெரியாதே…
எங்கிட்ட புடிச்சத சொல்லு பாப்போம்
எனக்கா…எனக்கு உனக்குள்ள குஞ்சாமணிதான் புடிக்கும்
எம்மா……..
மணி நான்கு தாண்டியிருந்தது. திடுக்கிட்டு எழுந்ததில் கட்டில் குமிழ் இடித்து முன் மண்டை புடைத்து விட்டது. மின் விசிறியின் கிரீச் சத்தம் பெருச்சாளி மண் பறண்டுவதைப்போல செவிப்பறைகளில் வெட்டியது.
                டீ குடிக்க வெளியே சென்றேன்.  விடியற்காலை ஒரு வினோதமான உலகம். மக்கள் சயனத்திலிருக்கையில், இன்னும் சில மணி நேரங்களில் மற்றுமொரு நாள்.  ஆனால் நான் இன்னும் என்னுடைய பழைய நாட்களையே ஆமை ஓட்டினைப் போல சுற்றிக் கொண்டு எங்கும் செல்கிறேன். எழனிக்கூடை கால்களால் உதைத்து பின் அழுத்தி சதைக்கத் திமிறினேன்.
இதே மாதிரிதான், இது இங்க! லேடி பேர்டு சைக்கிள், மெல்லிசான டையர், உடைஞ்ச ரிம்…லாரி,லாரி.
                என்னாச்சு தம்பி, ஒன்னில்லன்னே. ஒரு பில்டர் கொடுங்க.
                வழக்கம் போலத்தானே, தம்பி.
                ஆமான்னே!
                சீனி போடாத ப்ளாக் டீ.
                திரும்ப எண்ணங்கள் ஒழுகினசேரி பழைய வீட்டின் ஓட்டு உத்திரத்தில் தொங்கத் தொடங்கியது.
                இதே போல ஒரு விடிகாலையில் தான். சதைந்து கிடந்தாள்.
                எனக்கு புடிச்சது…
                உனக்கு புடிச்சது…
                தோள்கள்…தோள்கள்…


வெட்டு

இந்த நாற்றம் என்னைத் திரும்ப திரும்ப ஞாபகப்படுத்துகிறது. என் வலது காதில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது இந்த ஈ. அசைய முடியாது கட்டிலில் பிணைந்திருக்கிறேன். ஆனால் எனக்கு எண்ணங்கள் உண்டு. இல்லையேல் அர்த்தமின்மையில் விழுந்து கிடக்கும் வாழ்வில் எதைக் கொண்டு நான் இன்னும் இழுத்துப்பிடித்துக் கொண்டிருக்க முடியும். நாங்கள் காதலித்து கல்யாணம் செய்து கொண்டோம். எட்டு வருடங்களுக்கு முன். இப்பொழுது நினைவலைகளில் நான் முன்னும் பின்னும் நிழல்களாய் பின்னிக் கொண்டிருப்பது மரணத்தை. இது வரை மூன்று முறை முயற்சி செய்து விட்டாள். நான் விடுவதாய் இல்லை. அவளும் கடைசி நொடியில் பின் வாங்கி விடுகிறாள். ஆனால் ஒவ்வொரு முறையும் அவள் அணுகும் பொழுது நான் அதை அறிகிறேன் அவள் கண்களின் வழி.
இம்முறை அது நடப்பதை நானே பார்த்தேன். என் அண்ணன் அவள் இடையைப்பற்றுவதையும், புட்டத்தை அழுத்தி அவளிடம் பேசிக்கொண்டிருப்பதையும். என்னறையிலேயே. நான் தூங்கிக் கொண்டிருந்தேன். அவர்களுக்கும் தெரியும். நான் என்ன செய்து விடமுடியும். அண்ணன் திரும்ப மடத்திற்கு செல்லவில்லை. வீட்டிலேயே தங்கி விட்டான். அவள் ஊட்டிய பால் ரவையை நான் துப்பிக் கொண்டே இருந்தேன். நான் சாகத்தான் வேண்டுமா. மருந்தும் பீ நாற்றமும் இணைந்த அழுகிய வாடை மட்டும் தான் ஒரு வருடமாய் நாசியில் நிறைத்துக் கொண்டிருக்கிறது. இந்த மருந்து நாற்றம், காற்றின் அசைவில் இருப்பு குலையாமல் வந்திறங்கும் உதிர் சருகினைப் போல அம்மை சொன்ன கதைகள், உண்மையில் கதைகளல்ல. அவளது வாழ்வில் நிகழ்ந்தவற்றை கோர்வையில்லாமல் அவளது குரலிலேயே நான் கேட்டுக் கொண்டிருப்பேன்.
நீ இருக்கம்போ, எழுவது நாளு கெடந்தேன். சர்க்கார் ஆசுவத்திரியில. செப்டிக் வார்டுனு விடிபல்பு மட்டும் எரியும். அங்க எனக்கு கிட்ட கெடந்தவ நேத்தைக்குதான் செத்தா. அவளும் சூலி. எனக்கு போதங்கெடையாது. அப்பாட்ட கையெழுத்து வாங்கியாச்சு. ஒன்னுஞ்செய்யதுக்கில்ல. ஒரு உயிருதான் பொழைக்குன்னுட்டாரு. கொடலு எறங்கி அடிவயிறு தொங்குகு. பச்சை நரம்பு தெரியும். நகம் பட்டாலே கிழியது மாறி தொலி சுருங்கி விரியு. அன்னைக்கு ராத்திரி நான் கண்டம் பாத்துக்கோ ஒரு சொப்பனம். ஒரு ஏணிப்படி, ரெண்டு செய்டும் நல்ல தொப்பை வச்சுக்கிட்டு ஏழடி ஒசரத்துல நிக்கானுகோ, கருத்த உருவமா. மூஞ்சியே இல்ல. அதுல பல்லிக்கு தோல் இருக்குல்லா அத மாறி செதிலு. வாலுண்டு, பன்னி வாலு. கைல ரெண்டு வேரும் ப்ளேடு வச்சிருக்கானுக. இல்ல, வெரலெல்லாம் ப்ளேடா இருக்கு. நான் அந்த ஏணிப்படில ஏறதுக்கு நிக்கேன். ஆனா நீ வயித்துல இல்ல. எனக்கு அப்பதான் வெட்டிழுக்க ஆரம்பிச்சிருக்கு. பொறவு கட்டைய வாய்ல வச்சு பாரு பல்லெல்லாம் கொட்டிப் போச்சு. தன் மேல் பல் செட்டைக் கழற்றி, பொக்கை வாயை காண்பித்தாள். திரும்ப அன்னைக்கு ராத்திரி அவ கூப்புடுகா! வாட்டி போவோன்னு. அதுலதான் ரெண்டாவது வெட்டுனு நெனைக்கேன். எப்படியோ கடவுள் புண்ணியத்துல செத்துப்பொழைசுல்லா மக்கா உன்னை பெத்தெடுத்தேன். வயித்தைக் கீறி. தையல் தழும்புகளுடன் சுருங்கிய அந்த வயித்துச் சூட்டில் என்னை அணைத்துக் கொண்டு குறுக்கில் தட்டிக் கொடுத்து உறக்காட்டினாள்.
எட்டி, அவனுக்கு எதியாங்கொடுத்து கழிச்சு விடுவியா, இப்படி வச்சுகிட்டிருக்க. இல்ல, எங்கயாவது கொண்டு போய் விட்டிரலாம். நீ எதுக்குட்டி இப்படி கெடந்து சாவனும்.
என்னை விட நான்கு வயது குறைந்தவள். அம்மா அவளைக் கடைசி வரை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆ...ஆ…நான் சத்தம் போடுகிறேன். எனக்கு குரலில்லை. வெறும் ஜடப்பொருளாக ஒரு வருடமாய் படுக்கையில் கிடக்கிறேன். ஆனால் மரணிக்கவும் இஷ்டமில்லை. திரும்ப சரியாகிவிடும் என நம்பிக் கொண்டிருக்கிறேன். டீவியில் கால்பந்தாட்டம் பார்த்துக் கொண்டிருக்கும் போது எனது வலது கால் சிறிது அசைய முயன்றது. நான் நம்பிக் கொண்டிருக்கிறேன் சரியாகி விடும். அவள் என்னை அணுகும் போது இப்பொழுது வெறுப்பு தட்டுகிறது. அவளைக் கொல்ல எனக்கு விருப்பமில்லை. ஆனால் அவளை அடிக்க வேண்டும் தாகம் தீர.
எட்டி, நீ சீன் படம் பாப்பியா. அவள் ஏதும் சொல்லாது சுண்டை மலத்தி தெரியாதவள் போல திகைத்தாள். உண்மையில் நடித்தாள், அது இப்போது புரிகிறது. எனக்கு கொஞ்சம் பாக்கணும். சரி பாருங்க. இருவரும் பார்த்துக் கொண்டிருந்தோம்.
இங்க வாயேன். அந்த செய்டு, இன்னும் கீழே.
நான் மேல படுத்துக்கிட்டா.
இல்லை, வேண்டாம். கொஞ்சம் சவுண்ட கூட்டு.        
நீயும் முணகு இத மாறி.
என்னத்துக்கு. எனக்கு வரல.
சும்மா செய்யுட்டி.
கொஞ்சம் திரும்பி படுங்களான். வாக்கா இல்ல. இப்படி, இப்படி.
அவள் சிரிக்க ஆரம்பித்தாள். நமட்டுதலாய் என் புட்டச்சதையை நுள்ளி விட்டு திரும்பி படுத்துக் கொண்டாள்.
அதுக்குள்ள பஞ்சராயிட்டாக்கும்.
நான் செவுளில் ஒன்று விட்டேன். அவள் எதிர்பார்க்கவில்லை அதை.
இப்ப என்னதுக்காக்கும் அடிச்ச.
வா! திரும்ப வச்சுக்கலாம்.
ஆமா…பேசாம படு.
இல்லை. நீ வா. வலிக்கும் வரை கடித்தேன்
அவள் சத்தம் போட்டாள். மதர்த்த பின் சதையை கை விரல்கள் பதியப்பதிய சிவக்கும் வரை அடித்தேன்.
விட்டிரு. விடுகியா?

அப்பொழுதுதான். இந்த ஓஷோ கதை ஞாபகம் வந்தது.
அறையில் இன்னொருத்தன் மனைவியுடன் புணர்ந்து கொண்டிருக்கிறான் ஒருவன். கணவன் வந்து விடுகிறான். இவன் தப்பித்து ஓடுகையில் அவன் குறியைக் குறி பார்த்து சுட்டு விடுகிறான். அவன் தன் நீள் நாக்கை வெளியே காட்டி வலிச்சம் காட்டிக் கொண்டு ஓடுகிறான்.
இன்றும் எல்லாக் காலையும் போல, பூஜை செய்து விட்டு திரு நீறிட்டாள். இன்னைக்கு நம்ம கல்யாண நாள். நான் கண்களை அகலத் திறந்து சமிக்ஜை செய்தேன். கண்ணீர் துளிர்த்து சன்னமாக வடிந்து கொண்டிருந்தது. அண்ணன் வந்திருந்தான். பதின்ம வயதுக்குபிறகு அவனிடம் பெரிதாக உரையாடியதேயில்லை. அண்ணன் தம்பிகள் உண்மையில் எதிராளிகள். சக போட்டியாளன் தான் இப்போது. அவனைப் பார்த்ததும் இவள் கண்கள் பூரித்ததா இல்லை வெறும் மயக்கா. அவன் அனுசரணையாக என் தலை மயிரைக் கோதி விட்டு நெற்றியில் முத்தமிட்டான். அவன் இப்படி செய்பவனல்ல. விசித்திரமாக இருந்தது. திரும்ப அம்மையைப் பற்றி பேச ஆரம்பித்தான்.
என் எண்ணங்கள், மேற்கூரையில் அசையாது நிற்கும் பல்லியைப் பார்த்துக் கொண்டிருந்தது. என்னிருப்பும் அதுவும் ஒன்றானது மாதிரி பிரமை. சிறு அசைவுமில்லை. வால் மட்டும் சற்று நெளிகிறது. பக்கவாட்டு கண்கள் மனிதக் கண்களைப்போல அவ்வளவு துல்லியம். இரட்டை நாக்கு, கதவிடுக்கு வழியே வெளிக்காற்று அனிச்சையாக பீறிடுவதைப் போல நீட்டி விழுங்கியது. வெண்மையான மேற்பரப்பில், இடது முக்கிலிருக்கும் சிலந்தி வலையை பார்த்துக் கொண்டே பல்லியையும் கவனப்படுத்திக் கொண்டிருந்தேன். சில நேரம் அது விரிந்து பெரிதாவதைப் போல தோன்றியது. அசையாதிருந்த ஒரு நொடித் துளியில் சட்டென, ஒரு கொசு நாக்கில் அகப்பட்டு வாயினுள் பிதுங்கி அறைபட ஆரம்பித்தது.
நான் என்ன செய்யதுக்கு சொல்லுங்க. இதுக்கு மேல முடியல. ஆனால் அவரை விரும்புறேன். அது எனக்கு நல்லாத் தெரியும்.
சரிதாம்மா, இது இப்படியே போனா சரிப்பட்டு வராது.
சமூகத்திற்கு தேவையில்லாதவைகளை அவர்கள் மூர்க்கமாக விலக்குவது இயல்புதானே. நான் உயிர் வாழ்வது யாருக்காகத்தான். இல்லை. எதுக்குத்தான். அப்புறம் ஏன் என் உயிர் போகலை. நான் சாவதுக்கு விரும்பலை. ஆனா நான் செத்துதானே தீரணும். இப்படிக் கொண்டு வந்ததுக்கு யார சபிக்க. என் பழைய உருவத்தை மனக்கண் முன் கொண்டு வர முயன்றேன். வாகான உடல் வாகு. ஜிம்முக்கு போய் கட்டுமஸ்தாக்கிய கைகள், மார்பு, தோள்பட்டைகள். பல்லி என் தலைக்கு நேராக நின்றிருந்தது இப்பொழுது. இடது காதினுள் கொசு அதன் ரீங்கரிப்பை சகிக்கவொண்ணாத வண்ணம் எழுப்பியது. கைகளை எழுப்ப என் உயிர் முழுவதையும் இணைத்து, ஒரு பெரும் பாறையை நிமிர்த்தும் பிம்பம் என் கண் முன் நிழலாடுவதாய் எண்ணிக் கொண்டு அசைக்கிறேன். கனத்து கிடந்தது உடல். எந்த அசைவுக்கும் இணங்கவில்லை. ரத்த ஓட்டம் மூளை நரம்புகளில் அழுந்தி கண்கள் சிவப்பதை உணர்ந்தேன்.
எப்பொழுதும் என் முன் கண்ணாடி ஒன்றில், நான் என்னையே பார்ப்பது போல உருவகிப்பேன். சீழ் படிந்த அந்த வாதை முகம் அதில் எனக்கு தெரிவதில்லை. என் பழைய முகத்தை அதில் கொண்டுவந்து நான் செய்ய இயலாததையெல்லாம் அந்த பிம்பத்தைக் கொண்டு செய்ய முயல்வேன். அன்றும் அப்படி முயற்சிக்கையில், கால் நரம்புகளில் வலியூடுருவதை உணர்ந்தேன். கழுத்துக்கு கீழ் வலியென்பதை அதுவரை உணர்ந்ததில்லை. நான் குதூகலித்து விக்கித்து எனக்குள் ஓலமிட்டேன். பாலைவன மணலில் தனித்துக் கிடக்கும் ஓநாயின் இரை தேடும் தனிமையின் அகால இரவுகளையும், பசியின் உன்மத்தத்தில் அதன் எச்சில் வழியும் தாடையில் சிவந்திருக்கும் அதன் ஈறுகளையும் அங்கு காண்பேன். அது நான் தான்! நான் தான்!
எனது பால்ய நண்பன் சிராஜ் வந்திருந்தான். எனக்கு நண்பர்கள் இருந்தார்கள். ஆனால் என்னை அதன் பிறகு யாரும் வந்து பார்க்கவில்லை. நெருங்கிய நண்பன் பாலா, என்னை உற்றுப்பார்த்து இது அவனில்லை என்று சொல்லிக் கொண்டு கடைசியாக சென்றது தான் ஞாபகம். அதன் பிறகு யாரும் வந்திருக்கவில்லை. அவனது இளமைத் தோற்றம் எனக்கு வெறுப்பைத்தான் உருவாக்கியது. எரிச்சலும் தன்னிரக்கமும் சேர, நான் கண்களை மூடிக் கொண்டேன். என் இமைகளுக்குள் ஓயாமல் நடுங்கிக் கொண்டிருந்தது. அவனைக் காறி உமிழ வேண்டும் போல இருந்தது.
இவளே என்னைக் கொன்று விட்டால் தீர்ந்தது. ஆனால் அவளுக்கும் தெரியும் நான் அதை விரும்பவில்லை என்பதை. அந்தக் கடைசி சந்திப்பில் தான் எத்தனை வன்மத்தைக் காட்டியிருப்பேன் அவளிடம். ஆனால் அவளுக்கும் தெரியும். நான் நம்புகிறேன். நான் அவளை என் வாழ்நாள் முழுமைக்கும் விரும்பிக் கொண்டிருக்கிறேன். தெரியவில்லை, சில சமயம் என்னுடல் போலவே அவளுடலையும் எண்ணுவேன். அவளது அசைவுகளை நான் என் அசைவற்ற உடலில் பாவனை செய்து கொண்டிருப்பேன். அதனால்தான் அன்று அவளிடம் கட்டற்ற வெறுப்பையும் பிரயோகித்தேனோ என்னவோ. இதெல்லாம் ஞாயப்படுத்துதல்கள். உண்மையில் அவள் எனக்கு தேவை. அதற்கு மேல் அவள் என்னிடம் எதிர்பார்த்தாள். இப்பொழுது பல்லி அங்கில்லை. வெற்றுச்சுவர். வெளுத்த சுவரின் மேற் தோல். ஏதுமற்ற சூன்ய வானம். ஒரு வருடத்தில் அதை நான் வானமாக மாற்றி விட்டிருந்தேன். அங்கு நட்சத்திரங்கள் உண்டு. சூரிய சந்திரர்கள் உண்டு. ஆனால் மேகங்களை நான் உருவாக்குகையில் நான் அவனைப் பார்க்க ஆரம்பித்தேன்.
மேகங்கள் அசைகையில் அதன் இடைவெளி வழியே அந்த மனிதன் என் பிம்பக் கண்ணாடிக்குள் புகுந்து விட்டான். பின் நான் என்னைப்பார்க்கையில், என் பின்னால் கருப்பு ரூபமாய் நிழலாய் அவனும் இருந்தான். அவளிடம் அதை தெரிவிக்க முயல்கையில் அவனது கூர் உகிர் என் பிம்பத்தின் கழுத்து நரம்புகளுக்குள் நுழையத் துடிக்கும். அந்த மனிதனுக்கும் முகமில்லை. அங்கு எதுவுமில்லை. இருந்தது. ஆனால் அது காட்சிப்பிறழ்வில் தோன்றி மறைந்து விடும். எனக்கு மிகப் பரிச்சயமான உடல் தான் அது. நான் வாழ்நாள் முழுவதும் அதை சூட்சுமமாய் அணுகி உணர்ந்திருக்கிறேன்.
இப்பொழுது காட்சிகள் எதுவும் தெரியவில்லை. கண்கள் மங்கி, வடிவிலிகளாய் என்னைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நான் மெத்தையில் இல்லை. எங்கிருக்கிறேன். வீட்டிலுமில்லை. வெட்ட வெளி. ஆனால் நான் தனியனாக இல்லை. சூழ நிற்கும் எல்லா உருவங்களும் நான் தான். பெரும் பனிப்பாறை உருகுதல் போல அந்த உடல்கள் பார்வைக்கெட்டா தொலைவிலிருந்து உருகி என்னைச் சுற்றி வட்டமாக இடைவெளி விட்டு கீழே பாழ் நிலத்தில் வடிந்து கொண்டே இருக்கிறது. நான் நிற்கிறேன், என்னால் உடலை அசைக்க முடிகிறது. என் பார்வை இன்னும் கூர்மையாகிறது. புலன்கள் இன்னும் இன்னும் என்று ரீங்கரிக்கிறது. படிவமாய் என்னைச் சுற்றியிருந்த நிலம் கண்மண் தெரியாது தலை தெறிக்க சுழல்கிறது. பார்க்கும் வெண்ணிற வானத்திலிருந்து பல்லிகள் மழையாய் பொழிந்து கொண்டிருக்கிறது. ஜெராக்ஸ் எடுத்தது போல ஒரே பல்லிதான் அத்தனையும். திரும்ப திரும்ப சத்தமிடுகிறேன் ஒலியின்றி மௌனத்தைத் துளைத்துக் கொண்டு அந்தக் கூச்சல், பாறை இடுக்குகளில் சிக்கிக் கொண்டு தேங்க ஆரம்பிக்கிறது. மௌனம் கலைகிறது. பார்வை எதையோ தவிர்க்க சொல்லிக் கொண்டே உந்துகிறது. அவள் நிற்கிறாள் அங்கு. அம்மணமாக. தொப்புளிலிருந்தே சுருள் மென் மயிரோட்டம், கருத்த மென் வெளிச்சதை, உள்ளே சிவந்து துடிக்கும் வழி, அவள் என்னை அழைக்கவில்லை. தூரத்தில் நிற்கிறாள். அவள்! அவளை நான் விரும்புகிறேன் என் வாழ்நாள் முழுமைக்கும் என்று பிதற்றுகிறது என்னைச் சுற்றி உருகி வழியும் கட்டில்லா என்னுடல்கள்.
ஆனால் முகம் அவளுடையதல்ல. இது யார்? அவள் சூலியாகிருந்தாள். அம்மை பார்த்த மரணித்த பெண்ணா? அவளைத்தான் எனக்குத் தெரியாதே! அம்மையின் முகமாகவும், நான் பால்யத்தில் விரும்பிய அத்தையின் முகமாகவும் உருமாறியது. இப்பொழுது பலமுறை என் விந்தினைத் தெறித்த முகம். முகங்கள் அலைவிளிம்புகளில் பட்டு மருண்டு சலனமாகி முகமல்லாத உடலாகியிருந்தது. ஆனால் அவள் இப்பொழுதும் அழைக்கவில்லை.
ஏங்க…ஏங்க…என்னாச்சு! கடவுளே!
எனக்கு திரும்பவும் வெட்டு வந்திருந்தது. ஆனால் இம்முறை அதை நான் கிரகிக்க முடிந்தது. அசையாத என் கால்கள் இழுபட்டு கட்டில் விளிம்புகளில் மோதி ரத்தம் சொட்டியது. என் கைகள் மூடி இறுகியிருந்தது. என்னால் விரல்களை அசைக்க முடிந்ததை, வாய்க் கோணுவதை அந்த பிம்பத்தில் நான் காணும் போதே அது உடைந்து சிதறியது. அந்த நிழல் மனிதனும். திரும்ப என்னுடைய பழைய முகத்தை என்னால் நினைவு படுத்திக் கொண்டு வர முடியவில்லை. எதுவுமே இல்லாததாய் இப்பொழுது நான் மாறியிருக்கிறேன்.
எதுவுமே நினைக்க முடியாத ஒன்றாய். ஆனால் அதே நாற்றம் என்னைத் திரும்ப திரும்ப ஞாபகப்படுத்த முயற்சிக்கிறது.


கனவு அல்ல கனவு


நீள் வட்டப்பரப்பாய் தார் ரோடு, குளத்தைச்சுற்றி வளையமாய் சுற்றிச் செல்கிறது.இரவில் சந்திர கிரகணம் போல தெருவிளக்கின் வெளிச்சத்தில் கருமை படிந்த வட்டக் கோளத்தை சூழ்ந்து சாலை ஊர்ந்து கொண்டிருக்கும். அது பிரிந்து மலையை நோக்கி செல்லும் இலந்தையடி விளையைத் தாண்டி கட்டங்களாய் குத்தி நிற்கும் காங்கிரீட் குப்பை வீடுகள் உள்ள ஊருக்குள் புகுந்து தென்னந்தோப்புகளில் மண் பாதையாக, கால்தடங்கள் பதிய உருமாறியிருக்கும். அங்கு தோப்புகளுக்குள் பட்டி அடித்த தரைகளில் உருளை உருளைகளாக அளவிட்ட புழுக்கைகளுக்குள் ஆடுகள் உவர்க்கும் வாடையுடன் தங்களுக்குள் சதா ரகசியங்கள் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும். அந்த இரவில் சுவர்க்கோழிகளின் மென் சலனிக்கும் குரல் மட்டுமே சூழ்ந்த சாலையில் இருபுறமும் வெட்டையான வயல்களின் ஊடே நடந்து வந்து கொண்டிருந்தேன். குளத்தினருகில் சப்பாத்துப் படித்துறையில் தீராத அலையடிப்பில் போத்தலொன்று கடக்க இயலாத குப்பிச்சத்தத்தை படிக்கல்லில் இடித்து இடித்து முணங்கியது.
மறுகரையில் ஆலமர விழுதுகள் குளத்தில் முடிச்சிட்டிருந்தது. வேர் முண்டுகள் நிலத்திலிருந்து வெடித்தெழுந்த மனிதப் பிரேதம் போல பாதி முங்கியும் மீதி தெறித்து வெளியிலும் நெம்பி இருந்தது. மரம் இரவைத் தவிர்க்க எண்ணியது போல நீர்ப்பரப்பில் எதிரொளிக்கும் தன் பிம்பத்தை தானே விழுங்க இலைகளடர்ந்த கிளைகளைத் துழாவித் துழாவி தன்னுள் அதை உட்கிரகித்தது. குளத்தினுள்ளுள் இருந்து இன்னொரு மரம் எழுந்து ஸ்தூலமான அதன் கருங்குழிகள் பொதிந்த மேற்தோலை உரசிக் கொண்டிருந்தது. மிணுங்கும் சாரைப்பாம்பு இதற்கு சம்பந்தமில்லாதது போல அதன் அடிவாரப் பொந்தில் சுருண்டு அயர்ந்திருந்தது. அதன் உரிந்த தோல் பிளாஸ்டிக் கவர் போல கரையில் கொவுர, அடுத்த சலனத்தில் அது முழுக்கடித்து மறைந்தது.
நான் படித்துறை மதிலில் அமர்ந்து கொண்டு அனிச்சையாக என்னுள் ஊடுருவும் ஒரு அன்னியக் குரலை கூர்ந்திருந்தேன். மிகப்பரிச்சயமான குரல். ஆனால் வெகுநாள் நான் தவறவிட்டிருந்தது. திரும்ப கிரகிக்க முயல்கையில் அது வீரியமிழந்து அதன் கார்வை மென் மலைச்சுனையில் பாறைப்பொந்துகளுக்கிடையில் ஊடுருவும் நதியின் த்வனியாய் ஆழத்தில் தடம் பதிந்தது. அக்கரை வெகு தூரத்திலும் அருகிலுமாக சுருங்கி விரிந்து காட்சி பிறழ்ந்தது. கண்டறிய எத்தனிக்க, குரல் குரல்களாய் மாறி அது தனித்தனி உருவங்களாய் குளத்தின் கரையை சுற்றி வடிவிலியாய் இருளுக்குள் அமிழ்ந்து பின் எழுந்து கொண்டிருந்தது. ஒரு ஓற்றைக் கண் என் தலைக்கு மேல் நின்று உற்று நோக்கிக் கொண்டிருந்தது. அண்ணாந்து பார்க்க துணியவில்லை. பெரிய கருப்பு ஓநாயைப் போல அது இருந்ததை பிறகுதான் நான் உணர்ந்து கொண்டேன். திரும்பி விடலாம், இந்த அமானுஷ்ய உருவங்கள் தங்களுக்குள் ஓயாது கதைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அதன் மொழி எனக்கு தெரியவில்லை. ஆனால் அதன் இசைவில் என் குரலின் வெவ்வேறு மங்கலான அதிர்வுகளின் கண்ணிகளின் வழி அதை நான் உணர முடிந்தது. அவைகள் பேசிக் கொண்டிருக்கவில்லை. அது ஒரு பாடலாக இருந்தது. ஒரு பெண் குரலைப் போலவும். நான் அந்த பாட்டைப்பாட ஆரம்பித்தேன் பெண் குரலில்.
“சிமிழிக்குள் அடைத்தாலும், சிவனறியா மாயமுண்டோ
அறைக்குள்ளே அடைத்தாலும் அரனறியா மாயமுண்டோ” என்று அந்த பகவானும்…என்று அந்த பகவானும்!

காட்சி மங்கியது. விடுமாடன் கொடையில், மஞ்சனை அவிய, என் கழுத்தறுபடுகிறது. மெல்ல ஒருக் கூரிய கத்தி குரல்வளைக் கீழ் நெளிவிலுள்ள தென்னிய நரம்பை மட்டும் துண்டாக்க, குருதி பீய்ச்சுகிறது. ஆனால் அது ஒரு பெரும் பள்ளத்தில் நிதானமின்றி நிரம்பி வழிந்து கொண்டே இருக்கிறது. என் முகம் முழுதும் மரப்பல்லிகள். எந்த எதிர்வினையுமில்லாது அதை நானே பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதன் அடித்தோலின் வெண்மையில் பச்சை நரம்புகளும், பக்கவாட்டில் நெளியும் வால்களுமாக மரத்திலிருந்து என் மேல் விழுந்து கொண்டே இருந்தது. சட்டென்று தலையை உதர, திரும்பவும் பாடல் சன்னமாக ஒலிக்கத் தொடங்கியது.
இந்த முறை என் வீட்டில் நான் படுத்துக் கிடந்தேன். என் அறைக் கதவிடுக்கில் ஒரு நீள் மூக்குள்ள மனிதன் அழைத்துக் கொண்டிருந்தான். ஒட்டிய கன்னங்களும், கிழிந்த வாயும், மயிரே இல்லாத உடலுமாக. ஆம் அவன் அம்மணமாக இருந்தான். ஆனால் அவனுக்கு குறி இல்லை. அதைத் தான் நான் முதலில் கவனித்தேன். துணிக்கடை பொம்மை போல சற்றே வீங்கியிருந்தது அங்கு. இதற்கு முன் நான் அவனை பார்த்தது அந்தக் குளத்துக்கரையில் தான். இல்லை அது அவனல்ல. அதே போல மூக்கு உள்ள நாரை. அந்த நாரையின் முகத் தோற்றம் தான் இவனுக்கும். ஆனால் அந்த உடல், அதன் உட்குழிவுகள், கூன் விழுந்த முதுகு என்று அவன் பார்க்க தட்சிணாமூர்த்தி கிழவனின் சாயல். கிறுக்கனாகி ஆள்காட்டி விரலைத் தூண்டி சுட்டிக் கொண்டே, அக்குளில் ஒரு அழுக்குத் துணியை அதக்கிக் கொண்டு கெட்டவார்த்தைகள் உதிர்த்து திரிபவன். அம்மணமாக மட்டுமில்லை, சிறு கோவணம் போல துணி இறுக்கி விட்டிருந்தார்கள் யாரோ. போன தீபாவளி நாளன்று ஒழுகினசேரி தண்டவாளத்தில் சிதைந்து கிடந்த அந்த உடல் இன்னும் கபாலத்தின் அதிர்விலிருந்து அகலவில்லை. உணர்ந்ததும் குறுக்கில் ஊசி நுழைந்தது போல திடுக்கிட்டேன். ஆனால் அவன் அழைக்கவில்லை, எப்பொழுதும் போல பிளாஸ்டிக் குவளையில் டீ கேட்டு மஞ்சள் பற்கள் விரிய, கருத்த சுண்டுகளை வலிக்க விரித்து இளித்தான்.
படியில் விதிர்த்தலையும் பாசிகள், எதையோ பற்றிக்கொள்ளத்துடிக்கும் வலையைப் போல ஓயாது ஒழுக்கின் அசைதலுக்கேற்ப நழுவிக் கொண்டிருந்தது. உருவமிழந்து விட்ட குரல்கள், இப்பொழுது சலசலப்பாய் தூரத்தில் ஓடிக் கொண்டிருந்தது. வாய்க்காலுக்கு திறந்து விட்ட மதகின் வழியே சதுப்பாய் நகர்ந்தது குளம். அது ஒரு நதியாக ஆகிவிட்ட பெருமிதம் தொனிக்க குதூகலித்தது. அகப்பட்டிருந்த எல்லைகள் உடைந்து பீறிடும் அந்த துமியில் குளைகள் அகப்பட்டு மட்டுப்படுத்தியது. ஆலமரத்தின் நிழல் கூந்தல் விரித்துக் கிடந்தது குளம் முழுமைக்கும். அதன் பின் பக்க பீடத்தில் தான் மாடனும் மாடத்தியும் குந்தியிருந்து ஊர்ப்பாடு பேசுவார்கள். அன்று என்னைப் பிள்ளையார் துரத்திய கதையைப் பற்றித்தான் கேலி செய்து கொண்டிருந்தனர். அவர்களின் இருப்பை நான் இங்கிருந்தே உணர்ந்து கொண்டிருந்தேன். மனிதக் குரல் போல அல்ல. அது கோட்டான்களின் விழி போலவும், அகவலும், கீரிச்சிடலாகவும் இருந்தது. ஆனால் அவர்கள் என்னைப்பற்றிப் பேசுவது எனக்கு விருப்பமில்லை. அதுவும் பிள்ளையார் துரத்தத் துரத்த நான் இந்தக் குளத்தைத் தான் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தேன். அவருக்கும் உடலில் மயிரே இல்லை. ஏதோ சதுர்த்தி விழாவிலிருந்து திடுதிப்பென எழுந்து வந்த பொம்மை தான். ஆனால் அதன் கண்கள் உயிருள்ள யானைக் கண்கள். மழுங்கிய சிவந்த பிளாஸ்டிக் கொம்புகள். தொப்பை அலங்கவே இல்லை. அங்கவஸ்திரம் கீழே விழும் போதெல்லாம் பிடிக்காமல் வழுகி விழுந்து எழுந்து வந்து துரத்தி வருகிறது. சட்டென நின்று விட்டேன். அவரும். ஆனால் மாடத்தி இதைப் பார்த்து விட்டாள். அவள் நளியாக ஏதோ குசுகுசுத்தாள். ஏன் என்று அப்போதுதான் புரிந்தது. நான் எதுவும் அணிந்திருக்கவில்லை. பத்தாதற்கு நான் நின்ற இடத்தில் முன் பின் தெரியாத ஒரு பேரிளம் பெண் என் குறியை உறிஞ்சி வாய்ப்புணர்ச்சி செய்து கொண்டிருக்கிறாள். அவள் உடையணிந்திருந்தாள். போர்வையை உடலில் சுற்றி வைத்திருந்தாள். தலைக்குக் கீழ் உடலெனும் ஒன்றிருப்பதாகத் தெரியவில்லை.
திரும்ப அந்தப் பாடலின், கதை வந்து பிரக்ஞையில் துளைத்தது. மதலை, வெறும் சதைப் பிண்டமாக, அம்மிக்குழவி போல உருளும் மாயாண்டி சுடலை ஈசன். அவனுக்கு கண் காது உருவங்களை ஈசன் வரைந்து உயிர்ப்பித்து அம்மையிடம் கொடுக்கிறார். அவன் தினமும் பூலோகத்தில் புகுந்து பிணம் தின்று வருகிறான். பிண நாற்றம் அடிப்பத்தை அறியும் அம்மை, தேவனிடம் செல்கிறாள். அவன் பூலோகத்திற்கே அவனை அனுப்பிக் சுடலையின் காவல் தெய்வமாக ஆக்குகிறான். மெல்ல ஒரு நீர்க்கோழி கழுத்து நீட்டி அலையெழுப்பி முழுகியது. நான் தணுப்பு தாங்காமல் விரைத்து, போர்வையை முகம் வரை மூடிப் புரண்டேன்.
ஹிட்லர் தனது கழிவறையில் விக்கித்து அழுது கொண்டிருந்தான். இதுவரையில் இரண்டு லட்சம் உயிர்களாவது பலி கொடுக்கப்பட்டிருக்கும். தனிமையில் புலம்பி அழுது கொண்டே கழிவறைக் கிண்ணத்தில் முக்கிக் கொண்டிருந்தான். அந்தக் கிண்ணம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. மலம் தூறலாய் பூமியெங்கும் விழுந்து கொண்டிருந்தது.
அவன் அறத்தினை எண்ணி அழுதிருப்பான் என்றான் தம்பி.
அப்படி ஒன்று இருக்கிறதா? இது நான்
பிறகு ஏன் அவன் அழ வேண்டும்.
அவன் வேறொன்றை நினைத்திருப்பான். தோல்வியுற்றவனாக ஆவதை அவன் உணர்ந்திருக்கக்கூடும். அவன் சாத்தானக்கப்படுதலை அவன் தெரியாமலா இருப்பான். அவன் அழுதது, தன் முன்னாலேயே தன் கோபுரங்கள் குப்புற விழுவதால் தான்.
இல்லை. அவன் பாவமன்னிப்பு கேட்க நினைத்திருப்பான். உயிர்கள் சாவதை அவன் தன் சாவை எதிர் நோக்கும் போது உணராமலா இருப்பான் என்றான்.
அதற்கு சாத்தியமே இல்லை. அவன் வெற்றியடைந்திருந்தால் இன்று இந்த சாவுகள் பற்றி உலகம் அறிந்திருக்கவே செய்யாது.
ஆம். ஆனால் அவன் தோல்வியுற்றது அறத்தின் பால் நம்பிக்கை கொள்ள வைக்கிறது.
என்ன நம்பிக்கை. அதில் என்ன உண்டு. கடவுள், கிறுஸ்து என்று சொல்லித்தானே யுதர்களைக் கொன்றார்கள் சாமன்ய மக்கள். மக்களுக்கு எந்தக்கருத்தியலும் கிடையாது. அவர்கள் பிம்பங்களின் மேல் தான் சரணடைவர். தனித்தனி மனிதர்களாக உள்ள விழுமியம். கூட்டத்தில் நிச்சயம் கிடையாது. அவன் மகா சல்லிப்பயல்தான்.
எனக்கு இன்னும் புரியாதது. அவன் அழுதது அவனுடைய மரணத்தை நினைத்துதான் என்றால், இத்தனை பிரேதங்களைப் பார்த்தும் அவனுக்கு அது தெரியாதது எப்படி. இத்தனைக் கொலைகளிலும் அவன் அறிந்தது அதிகாரத்தை விளைவது தானே. அது மனிதனை விடப் பெரிது.
ஆம். ஆனால் நான் அவனை நம்பவே விளைகிறேன். அவன் மனிதன் எனும் சாத்தியத்தில் இருக்கிறான்.
என்ன? மனிதன் வெற்றுக் கூடு.
இல்லை. அவன் ஒரு சோதனைப்பொருளாய் இருக்கிறான். அறியா சக்திகளின் முன்.
ஆமா! ஆமா! சக்திகள். அவனது மலம் உலகம் முழுதும் விதையெழுப்பியிருப்பதை நீ இன்று மறுக்க முடியுமா என்ன? அவனே அதற்கு முன் விழுந்த மலங்களின் எச்சம் தானே.
ஏன் இல்லை. நாம் கூட அதன் எச்சத்தின் சிறு துளியை சுவீகரித்துக் கொண்டிருக்கிறோம் அல்லவா!
இன்னும் மானுட அறம் என நீ சொல்வது எனக்கு விளங்கவில்லை.
தாயோளி! அத எங்கயோ மரபிலிருந்து எடுத்து சொல்லிட்டிருக்கோம் நிதர்சனத்துல நாய் மாறி ரோட்டுல சதைஞ்சு கெடக்குற மனுச உயிருக்கு யாரும் வந்து அறம் செய்யப்போறதில்லைலா!
தெரியவில்லை. ஆனால் என்னை நான் மாற்ற முடியும்னு நம்பிக்கைல நான் சொல்றேன்.
முடியாது. அறம்னு ஒன்னு நாம நமக்காக உருவாக்கி வச்சிறுக்கிற ஒன்னுதானே.
எதிர்மறையா யோசிச்சு பாரேன். அறம்னுஒன்னு இல்லைனா?
இல்லைனா என்ன? உன் பிள்ளைய உன் கண்ணு முன்னால உரிச்சு ஓப்பான்.
ஆமா! மனுசன் அத செய்யத்தானே விதிக்கப்பட்டிருக்கான். இல்லை இதை செய்யவும் தானா?
அவன் அழுதது அவன் சாவுக்குத்தான்னு சொல்றேன்.
இல்லை. அவன் அழுதது சாவுக்கு அதுக்க முன்னால, எல்லாம் புளிஞ்சு சக்கையா மனுசன் விடப்படதுனால.
அப்பம், அறங்றது…
சாளைப் புளிமொளம். போடா டேய்.

பதிலில்லாது அந்த அரூபக்குரல்கள் எதிர்க்கரையின் எருக்கஞ்செடிகளுக்கிடையில் சிக்கி என்னை விளித்துக் கொண்டிருந்தது. விடுமாடன் பீடத்தினருகியில் பழையாற்றுக்கு செல்லும் சாக்கடை நெளிந்து சென்று கொண்டிருந்தது. கதைகளின் மென் பொதியை அவிழ்த்து படிகளில் கவிழ்த்துக் கொண்டிருந்தேன். புளிப்பின் மதுரம் தேகமெங்கும் பரவி உருக ஆரம்பித்தது. நான் பிறளும் முன், அதை பார்த்தேன். அந்த ஒற்றைக்கண் இப்பொழுது என் எதிர்ப்புறம் நின்று சிமிட்டிக் கொண்டிருந்தது.


பிரார்த்தனைகள்


1
ஒரு தோல்வியுற்ற கணத்தில் தான்
அவனை சந்தித்தேன்
உண்மையில் அவனது மறுமுனையின் குரலை.
அந்தக்குரலின் ஏக்கமுற்ற குழறல்கள்
ஒரு பெரிய பாடலின் அல்லது புதிரின்
விடுபட்ட தடங்கள் போல
தொடர்ச்சியாகவும் பின் தொடர்ச்சியைத் தொலைத்தும்
வெகுதொலைவிலும் பின் நெருக்கமாகவும்
பின் தொடர்கிறது
அது ஒரு குடிகாரனின்
போதை முழுமையாகாத உளறலின்
துண்டுப்பிரசங்கங்களைப் போலவும்
உருமாறிக் கொண்டிருந்தது
நீர்மையினுள் அழுத்தம் கூடக்கூட…
வெற்று மிதவையாக அந்தக்குரல்
அலைகளுள் வெறுமனே ததும்பிக் கொண்டிருந்தது.
யாருடைய காதுகளுக்குமில்லாமல்,
தனக்குத்தானே அது புகார் செய்யத் தொடங்கிய போது
என்னுடைய சொந்தக்குரலாக,
ஒரு பிரார்த்தனையாக கதற ஆயத்தமானது.

2
ஒவ்வொரு முறையும் நிறைவின்மையைத் தரிக்கும்
அவனது துளையிட்ட கைகளில்
அன்றும் எந்த மாற்றமும் தென்படவில்லை
அனிச்சமாய் எனது கற்பாறைகளுக்கிடையில்
ஒரு மென் மலைச்சுனையாய் நுழைந்து
ஈரப்படுத்தி சென்று கொண்டே இருந்தான்
அதனால் காரணமேயில்லாது (காரணமுமிருக்கலாம்)
அவனுக்கு முதுகு காட்டி கேலி செய்தேன்
என் ஒவ்வோர் பழித்தலுக்கும் ஒரு வெண்துமியென
நகர்தலே மொழியாய் என்னில் கடந்து செல்கிறான்
அவனது தேங்கி நிற்கும் குழிகளில்
எனது பிம்பம்
தோல்வியை மட்டுமே பிரதிபலிக்கிறது
திரும்பிச் செல்லும் வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன
எண்ணிலடங்கா முறிந்த சிறகுகள்
எனது பிம்பத்தில் நான் பார்த்த அதே என்னுடைய சிறகுகள்.

3
என்னைச் சுற்றிக் குழுமுகிறது
உன் நெடி
உன் காய்ச்சல் படிந்த வெம்மை உள்ளங்கைகளுக்குள்
என் நிர்வாணத்தை அடகு வைத்திருக்கின்றேன்
தோள்களிலிருந்து நழுவுகிறது உன்னைத்தாங்கும் சிலுவை
அழுந்தப் பற்றுகையில்
உன் கைகளில்ன் பிரத்யேக மொழியால் அதற்றுகிறாய்
உன்னிலிருந்து தாவித் தப்பிக்க முயல்கிறேன்
சபலங்களின் படிகளில்,
நிரந்தரமாய்ப் படிகின்றன உன் கடல் அலை நுரைகள்.
பாசி பீடித்து வழுகுகிறது
ஒவ்வொரு அலை மீறல்களிலும்
உன் துடுப்புகளுயர்ந்து என்னை னோக்கி வருகின்றது
உன் உடலை நான் பார்த்திருக்கவில்லை
உன் முகம் எனக்கு பரீட்சயமுமில்லை
ஆனால் உன் அரூபக்கைகளின் வலுவை எனக்குத் தெரியும்
என் ஸ்பரிசப் பொந்துகளின் அதைப் பதுக்கி
விராட ரூபமெடுக்கும் அதன் முளைகளை
வருடி வருடி பெரிதாக்குகிறேன்
என்று என் ஆழம் பீறிடும் குழிகளை
அதில் நான் பார்க்கிறேனோ,
அன்று உன்னைப் போலவே நானும் நம்பியிருக்கிறேன்,
தயை கூறு!

4
அரசவையில் அவளது மடியில் உட்கார்ந்து கொள்ள
பின் அவளது கழிவறைக் கிண்ணத்தினடியில் ஒளிந்து கொள்ளவும்
ஊன் உண்ணும் தாவரத்தைப் போல
நீங்கா தாபத்துடன் அவள் முலைக்கண்களை உறிஞ்சுகிறேன்
ஆனால் சங்கிலிகளால் கொளுத்தியிடப்பட்ட
எண்ணற்ற அம்மணங்களை
என் மணிக்கட்டில் நிரந்தரமாக பிணைத்து இறுக்கியுள்ளேன்
அவளது வாசற்படிகளில் குந்தி அமர்ந்திருக்கிறேன்
இன்றோ! நாளையோ!
தெரியவில்லை…
ஒரு அஸ்தமன நாளில் அதை உள்வாங்கியிருப்பேன்
நீர்க்குமிழிகளுக்குள் அகப்பட்டுக் கொள்வேன் அதன்பிறகு.
அன்று
அவளிடம் செல்லத் தயங்க மாட்டேன்
எப்பொழுதும் என்னைத் தொங்கல்களில் ஊசலாட்டும்
செலுத்த….செலுத்த…
நான் தேடும் பாதையாயன்றி,
மீள, மீள வெளித்தள்ளும் ஒரு வழிப்பயணமாய் அவள் மாறி விடுகையில்,
என் தயக்கங்களையெல்லாம் சமர்பித்து விட,
திரும்பவும் அவளது அரசவைக் கூடத்திற்கு செல்வேன்.
வலிச்சம் காட்டும் குறிகளுக்கு மத்தியில்,
என் முடிவில்லாக் குறிகள் வெட்டுண்டு அவிசாக்கப்படும் பொழுது
நித்தியமாக அவளை நான் விரும்பிக் கொண்டே இருக்க வேண்டும்
என்பது மட்டுமே என் பிரார்த்தனை.

5
ரகசியம் கக்கும் குரல்களின்
கண்ணாடிச்சில்லுகளால்
என் பாதங்கள் கிழிந்து குருதி வழிகின்றன
சூழும் உடலங்களின் மதமதப்பில்
சாவகாசமாய் வந்திறங்கி அருள் பாலித்தது
ஒரே ஒரு ஒற்றைக்கை
அதன் உகிர்கள் பழுப்பேறியிருந்தது
ரேகைகள் அழிந்து வெளிறியிருந்தது
நெடு நாள் திரவக்குழியில் நொதித்துக் கிடந்ததால்
நசுநசுத்து சூம்பி மழுங்கியிருந்தன விரல் நுனிகள்
அதன் உள்ளங்கையில்
இமைகளற்ற விழிக்கோளம்
அந்தப்பார்வை எந்தச் சிறப்பையும் பெற்றிருக்கவில்லை
மண்டியிடும் ஜனங்களின் மத்தியில்
முடிவில்லாப் பிரார்த்தனைகளின் வாதையில்
அதன் இமையாக் கண்களை உற்று நோக்குகின்றேன்
அது என் சீழ்க்கசியும் பாதப்புண்ணின்
உள்ளிருந்து வெளியேறும்
சின்னஞ்சிறு புழுவினைப் போலவே இருந்தது.