சனி, 24 நவம்பர், 2018

கிறுஸ்துவின் கடைசி சபலம் 9

அறை முழுதும் வியாபித்திருந்த உள்ளீடற்ற தன்மை.

முடியவில்லை! முடியவில்லை! வேண்டாம்!

ஒரு படலமாய் காட்சிகள் உருளத் தொடங்கின. நினைவின் பொந்துகளிலிருந்து மெல்லப் பத்தி உயர்த்தியது நிகழ்வுகள். நெசவு ஓடத்தைப் போல முன்னும் பின்னும் நகர்ந்தது காலம்.

ஒரு திருமண நாளாக அது இருந்திருக்கக் கூடும். காலைப் பொழுதின் ஒளியின் பச்சை அரும்புகள் தளிர்த்த சைப்ரஸ் மரங்கள், பெண்டுலம் போல அசைந்தாடிக் கொண்டிருந்தது. ஈச்ச மரங்களில் குருவிகளின் கீச்சிடல். பல்லாயிரம் சிறகடிப்புகள் தலைக்கு மேலே. பனி படர்த்திய மேகங்களின் இடைவெளியினுள்ளிருந்து ஒளி மஞ்சள் பிரகாசத்துடன், துலக்கமற்ற ஒளியினூடாக அவர்கள் அந்த தோட்டத்தினுள் நின்று கொண்டிருந்தனர். விசேஷ நாளுக்கே உரிய குதூகலம் ததும்பும் முகத்துடன் அவர்கள் தங்களுக்குள் உரையாடிக் கொண்டும் வரவேற்றுக் கொண்டும், விசாரித்துக் கொண்டும் இருந்தனர்.

ஜோசப் மிகுந்த மகிழ்ச்சியுடன் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்றுக் கொண்டிருந்தார். வைன் மற்றும் மாவினால் செய்யப்பட்ட இனிப்பு பலகாரம் எல்லோருக்கும் பரிமாறப்பட்டிருந்தது. ஒவ்வொருவரையும் தனித்தனியே அருகில் சென்று அணைத்து ஜோசப் உரையாடிக் கொண்டிருந்தார்.

ஏன்? ஏன்? அது நிகழ்ந்தது?
கேவிக் கேவி எழும் அழுகை...
நான்! நான்! நான்! என்று பிதற்றிக் கொண்டே இருந்தான் இளைஞன்.

தனது தந்தைக்கருகில் பிரமை பிடித்தவன் போல நின்று கொண்டிருந்தான் அவன். அவரைத் தூக்க கூட முயற்சிக்காமல் வெறுமனே வெறித்தான். தலை குப்பற அவன் முன்னே கைகால்கள் முறுக்கிக் கிடக்கும் ஜோசப்பின் நிலை குத்திய விழி அவனை சந்தித்து ஸ்தம்பித்து நின்றது. மெல்ல அவரை மடியில் இருத்தி கன்னங்களை தடவிக் கொடுத்தாள், செவுளில்  இரு முறை அறைந்து அவரை பெயர் சொல்லி விளித்தாள், அவனின் தாய் மரியம்.

நானும் அவரது நகல் தான் ஒரு வகையில்.  ஆம்! பயம்! அதிலிருந்து தப்பிக்கவும் அதனுள் சிக்கி அலைக்கழியவும் தானே நானும் செய்து கொண்டிருக்கிறேன் அவரைப் போலவே. தன்னால் ஆழம் காண முடியாத, மறுமுனை எங்கோ பிணைக்கப்பட்டு கட்டுண்டு கிடக்கும் வன விலங்கைப் போல.

என்னால் என்ன செய்ய முடிந்தது?

இவர்கள் அனைவருக்கும் நான் அளிப்பது ஒரு நுகத்துடியைத் தான். அவர்களை விட்டு காலத்துக்கும் அகலாத பாரத்தை நான் அளித்துக் கொண்டிருக்கிறேன்.

என் தந்தை? மக்தலேனா? இவர்கள் ஏன் என் வாழ்வினுள் வந்து சிதைந்து கொண்டிருக்கின்றனர்?

உனது சொந்தத் தேடலுக்கு பலியிடப்பட்டவர்களா அவர்கள்?

சொந்தக் காயங்களை  தன் நாவினாலேயே நக்கி நக்கி  ஆசுவாசப்பட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு இரவிலும் அது நீண்டு கொண்டே இருக்கிறது, என்னைச் சுற்றி நானே உருவாக்குகிறேன் இந்த பாழ் குழியை. அதனுள் அடியாழமேயற்ற சூனியத்துனுள் விழுந்து கொண்டே இருப்பதையே என் கனவுகளிலும் நனவிலும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

ஒரு பிரார்த்தனை போதும் என்னை மீட்டெடுக்க. சுயமிழந்து விடுதல். உன் பெரும் மழையின் ஒற்றைத் துளியாவது. உன் வானத்தில் இலக்கற்ற சிறகுகளாவ்து! உன் பூமியில் மறுதலிக்க முடியா விதையாவது! உன்னிலிருந்து முளைத்துக் கொண்டே இருப்பது. ஆனால்! ஆனால்! நான் நான்! எங்கும் முளைக்கப் போவதில்லை.

ஒற்றைச்சொல்! தந்தையின் நாவிலிருந்து வழுகி வழுகி தரையெங்கும் நசுனசுத்தது.

தன்னை ஒவ்வொரு அணுவாகப் பிளந்து கொள்வதைப் போல, கூர்மையான உகிர்களால் அந்தக் குரல் அவனிடத்தில் இறைஞ்சிக் கொண்டிருந்தது. அண்டை வீட்டிலிருந்து மெல்ல முன் நகர்ந்து கொண்டிருந்தது ஒரு ஒற்றை விளி.

மரங்களும் தளிர்களும் புல் பூண்டுகளும் நிலமெங்கும்  ஆகாயத்தின் ஈரத்தை உறிஞ்சி காலையை எழுப்பியது. சந்தடிகளில் மனிதர்களின் நெடி. ஒளித்துளிகள் விண்ணின் நாவாய் தன் கிரகணத்தின் வெண் சிவப்பால் நேற்றையதின் அழுக்குகளை ஒற்றியெடுத்துக் கொண்டிருந்தது.

அவன் தன் முன்னே வெறிக்கும் பழுப்பு நிறச்சுவரை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

தெருக்கள் வழமையாய் ஓடத் தொடங்கியது. ஒரு மீறலின் ஓலம். பித்து மொழியில் அவனை சூழ்ந்து குழுமியது.

நீ மரந்து விட்டாயா? ஓ! இஸ்ரவேலின் தெய்வமே! இன்னும் எத்தனை காலம்? இந்த ஏழைகளை நீ ஏமாற்றி விட்டாயா?

தழும்பும் நீரலைகளைப் போன்ற கேவலுடன் தயக்கமுற்று அந்தக் குரல் அந்தர வெளியில் நடுங்கிக் கொண்டிருந்தது.

முன் நெற்றி தரையில் வீழ அவர் பரிதவித்தார். தேவனே! எம்மை ஏற்றுக் கொள்ளும்! ஆற்றாமையின் ஏக்கத்தின் பலவீனத்தின் அலைவுகளுடன் ததும்பிக் கொண்டிருந்தது அந்த பிரார்த்தனை.

இளைஞன் தன்னுள் அழுந்துவது போல சுவரை ஓங்கி அறைந்தான். உள்ளங்கையின் அடிப்பாகம் கன்றிச் சிவந்தது.

தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான்...ஆம்! பிரார்த்தனைகள். மறுமையைத் தேடிக் கொண்டிருக்கும் அனல் கங்குகள். பற்றிக் கொள்ள விழையும் தழல் நுனிகள். இவையல்ல! இவையல்ல! நான் தேடுவது. குளக்கரையின் நுனிகளில் எந்த இலக்குமின்றி அலைந்து கொண்டிருக்கும் பாசிகளைப் போல இருக்கின்றன எனது தேடல்களும் பிரார்த்தனைகளும்.

தொய்ந்து ஊசலாடும் ஆடைகள், தோளிலிருந்து நழுவி தொங்கியது. வெளிரியிருந்த அவனது உடலில், புஜங்களும் உள்ளங்கைகளும், மணிக்கட்டை நரம்புகளும் சற்றே புடைத்திருந்தன. அனிச்சையாய் ஆடைகளை இழுத்துக் கொண்டே அவரது காலடிகளில் தளர்வுற்று வீழ்ந்தான், தாகம் கொண்ட வனமிருகம் தடாகத்தினுள் தலை முக்கிக் கொள்வது போல.

உள்ளொடுங்கிய வாதை மீதிறும் பதற்றம் தொக்கிய மிரட்சி ஒரு நிலைத்த பாவமாய் அவன் முகத்தில் இருந்தது. கன்னங்களில் தாடையில் அடர் சுருள் தாடி. சற்றே நீண்ட வளைவில்லாத மூக்கு. வரியோடிய உதடுகள் பிரிகையில் பழுப்பு நிறப் பற்கள் தெரிய சிரித்தான். தகிக்கும் விழிகள், சொப்பனங்களின் நீள் வட்டத்தை சதா சுற்றிச் குழன்று கொண்டே இருக்கும் போதைத்தன்மையைக் கூட்டியது.

தொலைவின் அப்பால் பல்லாயிரம் நிழல்களின் அடர்சுழல்.

-The Last Temptation of Christ -Nikos Kazantzakis

புதன், 21 நவம்பர், 2018

கிறுஸ்துவின் கடைசி சபலம் 8

அவனது கட்டிலைச் சுற்றி பல்லாயிரம் கால்களுடன் ஊறும் பூரானைப் போல ஒரு குரல் இல்லை ஒரு முணங்கல். சுவாசம் திணறத் திணற அடைபட்டு திமிறிய இளைப்பில், அது ஒரு மனித விளி போலவே இல்லை. பக்கத்து அறையில் இருந்த அவனது தந்தை. இளைப்பு நோயால் இரவு முழுமைக்கும் விடுபட்டு விடுபட்டு முணங்கிக் கொண்டிருந்தார். முடக்கு வாதத்தால் ஒடுங்கிய உடல், முதுகெங்கும் புண்கள். உறக்கமின்றி ரத்த சிவப்பாய்க் கன்றியிருந்தன கண்கள். வார்த்தைகளை கோர்க்க முயன்ற எத்தனிப்பில் சிதறிய மொழியாய் அவரது குரல் எதொரொலித்தது.வாயோரத்திலிருந்து வழிந்த எச்சிலை புறங்கையாய் துடைக்க எண்ணி இழுபட்டு முறுக்கினார். ஒரு ஒற்றைச்சொல்! ஒலிப்படலமாய் அறையின் சுவரெங்கும் சார்த்தியது,
பிதாவே! என் பிதாவே!

ஒற்றைச்சொல்லைத் திரும்பத் திரும்பத் திரட்டிக் கொண்டிருந்தார். நாள் முழுமைக்குமான பிரார்த்தனையாக அது இருந்தது.

இது என் தவறு! பெரும்பாவம்! பெரும்பாவம்!

இளைஞன் தன்னுள் ஆழ்ந்து அழுது கொண்டிருந்தான். இரவு இத்தனை அமைதியாக இருப்பது சூழலை இன்னும் கனத்தது. அந்த ஒற்றைச்சொல் மந்திர உச்சாடனை போல இவனது நாவிலும் நிலைத்தது.

அகன்ற கிணற்றின் சுவர்களில் முளைத்துக் கொண்டிருக்கும் தாவரங்களைப் போல உறக்கம். பாதி செதுக்கி வைத்திருந்த குறுக்கும் நெடுக்குமான கட்டைகளைத் தாண்டி வாசலில் நின்று கொண்டிருந்தான் செந்தாடிக் காரன். தழலிடும் புன்னகையுடன் அதை நோக்கினான். ஒரு முழு மனிதனை தொங்க வைக்க ஏதுவாக அது அமைக்கப்படிருப்பதை பார்வையாலேயே கணக்கிட்டுக் கொண்டு மெல்ல அவன் அருகில் நெருங்கினான்.

கனவுதான் கனவல்ல. வெளிச்சத்திலிருந்து இருள் நோக்கி செல்லும் நிலம். உறக்கம் துளை வண்டாக உரு மாறி அவனுள் குடைந்து குடைந்து மெல்ல முன்னேறிக் கொண்டிருந்தது.

சுவரை வெறுமனே பார்த்து வெறித்துக் கொண்டிருந்தான் இளைஞன். தலைக்கு மேலே வார்ப்பட்டை தொங்கிக் கொண்டிருந்தது. அதன் கூர்நுனிகளில் இன்னும் முழுதாய் காயாத ரத்தம் தோய்ந்திருந்தது. நிணத்தின் உப்பு நாற்றம் இன்னும் அடங்கியிருக்கவில்லை. வலி! உண்மையில் அதைப் போல ஆசுவாசப்பட என்ன இருக்கிறது. தனிமையினுள் அதை மட்டுமே துணைக்கு வைத்திருக்கிறேன். ஆம் அருகில் ஸ்தூலமான இன்னொரு உடல் போல அது எப்பொழுதும் என்னுடனேயே இருக்கிறது. மறுதலிக்க முடியாத ஒன்றை கூட்டாக வைத்திருப்பதன் மூலம் நான் என்ற ஒன்றிலிருந்து வெளிவந்து விடுகிறேன். என்னைச் சுற்றிக் குழுமும் அனைத்திலும் ஊதி ஊதி பெருக்கிக் கொள்ள என்னிடம் என் வலி உண்டு என்பது மட்டுமே இன்னும் ஒரு இரவைக் கடப்பதை சாத்தியமாக்குகிறது.

தன்னைத் தானே கொல்ல விரும்பும் உவகை! உடல் மட்டுமேயானது நம்முள் நிரம்புகையில் அதன் குறுகிய எல்லையினை, அதனுள் பதுங்கிக் கொள்ளும் பொழுது உருவாகும் போதையினுள் மெல்ல மெல்ல அமிழத் தொடங்கி விடலாம். அதன் பின்னான உறக்கத்தில் நான் எனும் உணர்வற்ற ஒன்றை உருவாக்கிக் கொள்வான். தன்னிலிருந்து மீள வேறு ஆது வழியும் அவன் அறிந்திருக்கவில்லை.

ஆனால் உறக்கம் அதனை மட்டும் கொண்டிருக்கவில்லை. சுயமற்ற ஒன்றினுள் முழுகியவுடன் வேறோரு திறப்பினுள் வந்து வீழ்வான். அங்கு கட்டுண்ட தனது உடலையே மறுபடியும் காண்பான். நெருங்க நெருங்க கை கால்கள் இழுபட தசைகள் முறுக்க கீழே விழுந்து துடித்துக் கொண்டிருப்பான். வாயில் நுரை தப்ப அரைபடுகையில் கட்டுப்பாடற்ற வன் கரங்களின் மத்தியில் நசுக்கப்பட்டுக் கொண்டிருப்பான். விழிப்பு தட்டியதும் தன்னிரு கைகாளலேயே தன் உடல் முழுமைக்கும் தொட்டுப்பார்த்துக் கொள்கையில், அந்த ஒற்றைச்சொல் எதிரொலிக்கத் தொடங்கும். பல்லாயிரம் குரல்களின் ஊடாக அதனைக் கோர்த்துக் கொண்டிருக்கும் சரடாய் இருள் அறையினுள் அங்கும் இங்குமாய் நகர்ந்து கொண்டிருக்கும்.

-The Last Temptation of Christ -Nikos Kazantzakis

செவ்வாய், 20 நவம்பர், 2018

கிறுஸ்துவின் கடைசி சபலம் 7


குறுக்கு மறுக்காக வெட்டிப் பிணைக்கப்பட்ட நீள மரத்துண்டுகள். இன்னும் முழுதாய் சீவி முடித்திருக்கவில்லை. செதில்கள் பிளந்து தடிமனாய், மேடும் பள்ளமுமாயிருந்தது. மரச்செதுக்கியும் மற்ற உபகரணங்களும் அங்காங்கு சிதறிக் கிடந்தது. குன்றியிருந்த அறை வெளிச்சத்த்தை ஜன்னல் கம்பிகளின் இடைவெளி வழியே உறிஞ்சிக் கொண்டிருந்தது இருள். மேகங்களற்ற வானம். மலைத்தொடரின் கோட்டு வெளிச்சத்தில் உப்பிக் கொண்டிருந்தது. நட்சத்திரங்கள் குழந்தைக் கண்களின் வியப்பில், வெளியை சுழற்றி மீண்டது.

கை கால்களை அசைக்க முடியவில்லை.  அது மார்பின் மேலே அழுந்திப் புரண்டது. தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்டிருந்தது வெளியிடத் துடித்துக் கொண்டிருந்த அலறல். அழுத்தம் கூடக் கூட தண்ணிருக்குள் உணர்வது போன்ற விரைப்பு அவனது உடல் முழுமைக்குமாய் அதிர்வுற்றது. பெரும் பாறாங்கல்லை நகர்த்தும் பாவத்துடன் எழுந்தடங்கினான். அசைய முடிந்தது. பதற்றத்துடன் எழுந்து உட்கார்ந்தான். முதுகுக்கு பின்னால் பயங்களின் அரூப உருவம் ஒன்று முளை விட்டுக் கொண்டிருப்பதைப் போல. அறை இருளின் குழியிருந்து புகை போல தன்னைச் சுற்றி பரவுவதாய் நினைத்து விதிர் விதிர்த்தான்.

அறையினுள் வெளிச்சம் முழுதாய் உட்கிரகிக்கப் பட்டு இருள் தன்னுள் போர்த்திக் கொண்டது. காற்று கூட புக முடியாத வண்ணம் அறையினுள் இருந்த திறப்புகளையெல்லாம் அடைக்கத் தொடங்கினான். இருளினுள் தான் மிக பாதுகாப்புடன் இருப்பதைப் போலவும் அதே நேரம் வெகு காலமாய் இதற்காகவே காத்துக் கிடந்த ஒன்றின் வாயினுள் தான் அகப்படுவதைப் போலவும் ஒரு சேர உணர்ந்தான். இருந்தும் வெளியுடன் இருந்த தொடர்பை முற்றிலும் தவிர்ப்பது மூலம் தப்பித்து விடலாம் என்று ஜீர வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தான்.

அது நெருங்கிக் கொண்டிருக்கிறதா?
அவர்கள் வந்து விட்டனரா?

சுவரோடு சுவராக தன்னைப் பதிந்து கொண்டு தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் அந்த இரைச்சலை கவனித்தான். ஆம்! ஆம்! நான்! நான்!

இருளினுள் சப்தங்கள் முளைக்கும் ஒவ்வோர் தருணத்திலும் முணுமுணுத்தான்.

நான்! நான்!

கொப்புளமிட்டு சுருங்கி விரியும் உருவங்களின் திமிறல். மொத்த கிராமமும் நீரின் அடியில் வயிறு வெடித்து ஊறிக் கனத்துக் கிடக்கும் வன மிருகம் போல மிதந்து கொண்டிருந்தது. இரவின் அடர் கருமை விழுதுகள் முளைத்து நிலைத்து பதிகிறது. விழிப்புக்கும் போதைக்குமிடையில் நகர்கிறது பிரஞ்சை. என்னெதிரே கிடக்கிறது பல்லாயிரம் தடவை குதறப்பட்ட பிணம். என்னுடலா?

என்னுடலா?
எழுந்திரு! எழுந்திரு! எழுந்திரு!

நிழல்கள் மட்டுமே சூழ்ந்திருந்தது அறையினுள். துண்டு வெளிச்சம் மெல்ல மெல்லப் பரவத் தொடங்கியதும் சுற்றிலுமிருந்த பொருள்கள் உருக்கொண்டன. வெளியின் காற்றை அகம் உணர்ந்தது. சருகுகள் இடையில் குமைந்தது அகம். உதிர்ந்து கொண்டிருந்த சருகுகள் ஆழம் பொதிந்த நதியைப் போல அறையின் விளிம்புகளில் அலையாடியது. ஏதோ மன்றாட்டைப் போல, அந்த ஊளை நிசப்த்ததை துளைத்துக் கொண்டு அரையெங்கும் எதிரொலித்தது. ஒவ்வொன்றும் ஒவ்வொன்றிலும் ஸ்பரிசித்து தொடர்புறுத்தியது. கட்புலனாகாத சமிக்ஜைகள் அங்குமிங்குமாக பரவிக் கொண்டிருப்பது, முடிவேயற்ற கண்ணிகளில் கோர்க்கப்பட்டுக் கொண்டே இருக்கும் சப்தங்களின் தொடர்ச்சியான நிகழ்வுகள் அவனுள் இன்னும் தன்னுள்ளே இருந்து வெளி வர இயலாத, அச்சத்தை மேலும் மேலும் கூட்டிக் கொண்டே இருந்தது. அறை உயரமான மலைப்பாறையாக உருமாறியது, எங்கும் நீக்கமுறக் குளிர். எதிரொலிகள் அவனுள் இருந்து கிளம்பி அவனுள்ளே சென்று பல்லாயிரம் பிம்ப அதிர்வுகளாக அவனை மூடியது.

தான் ஒருவன் மட்டுமே இவ்வுலகில் மிச்சமிருப்பதைப் போல தொண்டை நரம்புகள் இழுபடக் கத்தினான். அவனது குரல் பாளம் பாளமாய் நொறுங்கத் தொடங்கியது.

-The Last Temptation of Christ -Nikos Kazantzakis

திங்கள், 19 நவம்பர், 2018

கிறுஸ்துவின் கடைசி சபலம் 6

நீங்கா தண்டனைகளின் பெரும்பாரம் சுமக்க வாய்க்கப்பட்டவர்களே! சுமடுகளின் கனம் தலையழுந்துகிறதா? துதித்து மரணியுங்கள். மரணித்திருப்பது மட்டுமே உங்களுக்கு விதிக்கப்பட்டது. தன் உப்பின் துளியிலிருந்து உங்களைப் படைத்தான். கீழ்மையின் அடிமண்டிய பரப்பில் மிதக்கும் அமைதியில்லாத வேதனையின் குரல்களை அவனறிவான்.

நீங்கள் பிரார்த்திக்கிறீர்களா?

உண்மையை, நன்றியுணர்தலை தொட்டதுண்டா நீங்கள்? உங்களின் பாவங்களுக்காக இறக்கும் கடவுளை நோக்கியிருக்கிறீர்கள். உங்களின் முதுகுத்தோல் செதில் முளைத்திருப்பதை பார்க்கிறேன். இரைக்காக சதா காத்துக்கொண்டு உருண்டு கொண்டிருக்கும் பார்வையினுள் அதை நான் எப்பொழுதும் கண்டிருக்கிறேன்.

இன்னும் எத்தனை காலம். பிதாவே! இன்னும் எத்தனை காலம்! காலம்  எங்களை மலைப்பாம்பை போல  சுருட்டி விழுங்கிக் கொண்டிருக்கிறது. அண்ணாந்து வானத்தை நோக்கினான். விண்மீன்களின் அனந்தப் பெருவெளி. ஓராயிரம் விழிகளுடன் சொர்க்கத்தின் தூயமணிகள் கிணுங்க பூமியைப் பார்த்து சிமிட்டிக் கொண்டிருக்கிறது. காற்றின் தாள கதி மெல்ல மெல்ல உயர்ந்து குறுகிப் படர்ந்து ஒரு சிலந்தி வலை போல அவர்களைச் சுற்றிக் குமைந்தது. தூய வானின் கீழ் பலிக்காக காத்திருக்கும் இரைகளைப் போல அந்தர வெளியில் அவர்கள் அசைவின்றி நின்றிருந்தனர். பாலை மணற்துகள்கள் பதற்றமுற்ற முதியவனின் விரல்களைப் போல அவர்களி ஸ்பரிசம் தொட்டு தொட்டு இறைஞ்சியது.

செந்தாடிக்காரன் ஒவ்வொருவராய் தனித்தனியாய் பார்த்து சிரித்தான். ஏதோ விழுங்க இயலாத ஒன்றை மெல்ல மெல்லக் கரைத்து தனக்குள் இட்டது போல  பற்களும் ஈறுகளும் தெரிய வாய் பிளந்து சிரித்தான். ஆனால் சப்தம் ஏதும் வெளிப்படவில்லை.

கிறுக்கன்! கிறுக்கன்!
எல்லாம் இழந்தாகி விட்டது. அறிவு! உள்ளுணர்வு! புத்தி!
நம் தேவதூதனுக்காக அலையும் அனுமானிக்க வழியற்ற பாதையில் பயணம் செய்கிறோம் நாம்.

யாருமே இல்லை என்னுடன். மனைவியும் பிள்ளைகளும்...
தனியனாய் என்னை பலி கொடுப்பதாயினும் செய்வேன்.

அவர்களின் முன் எல்லாம் தெளிவாக இருந்தது. ஒரு சூட்சுமமான மையச்சரடுஅவர்களின்  ஒவ்வோர் இடைவெளிகளிலும் முடிச்சுகளை இட்டுக் கொண்டே இருந்தது.

இருளுக்குள் ஒளி நுழைந்து கொண்டிருந்தது. வானம் சடையடர்ந்த மயிர்க்கற்றைகளைப் போல வரையிட்டிருந்தது. ஆழமற்ற சேற்றுக் குழியினுள் கால்கள் புதையும் பொழுது உருவாகும் பதற்றமும் மெல்ல அடுத்த அடியில் நகக் கண்களில் கூர்மையாகும் அகமும் போல மென் குமிழியிட்டு ஒளி பழக்கப்பட்ட திசையில் ஒளிரத் தொடங்கியது.

அவன் தூரத்தை பார்த்துக் கொண்டிருந்தான். பழுத்திருக்கும் மண் அவன் ஞாபகங்களில் அலையிட்டது. காறி உமிழ்ந்தான். சருகுகளிடை ஊர்ந்து கொண்டிருந்த வீரியன் குஞ்சுகளின் மொலுமொலுப்பு. அவர்கள் நின்று கொண்டிருந்த மலைக்குன்றுகள் ஒரு பெரிய சுருக்குக் கயிறைப் போல அந்த கிராமத்தின் கழுத்தை சுற்றிப் படர்ந்திருந்தது. அந்த சின்னன்சிறு சரிவான பாதையின் வழியே பாதங்கள் நரனரக்க கூர் கற்களை மிதித்துக் கொண்டே ஓட்டனமும் நடையுமாய் நகர்ந்தான்.

உறக்கம், கடைசியாக ஒலி அடங்கிய நுனியிலிருந்து சொட்டத் தொடங்கியது. முகங்களின் பெருங்கடல். அலைகளின் வழியே அந்தரங்கமாய் விதிர்க்கும் உணர்ச்சிகளின் கூச்சல். கலங்கல் குளத்தில் அலையும் கரைப்பாசி. செம்மண் நீரில் மிதக்கும் சாம்பல் மரத்துண்டு. வடிவங்களின் வடிவின்மை. கானல் நீரின் பிரவாக வெளி. நிறங்களின் ஊசலாட்டம். கட்டமைப்புகள் சிதையச் சிதைய துண்டாடி உருளும் பாழ் நிலம். முண்டங்களின் குரல். சப்தமின்மையின் கவந்த வாய்.

இளைஞனின் இமைகள் முடிச்சிட்டுத் திணறின. கனவின் கடிய கார்வை செவியடைத்தது. நிழலின் ஆடி பிம்பங்களாய் உருகியோடின உருக்கள். ஜன்னல்கள் யாருடைய குரலையோ வாங்கிச் சிதறிச்சாத்தியது. இருள்! இருள்!

அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது.

-The Last Temptation of Christ -Nikos Kazantzakis

ஞாயிறு, 18 நவம்பர், 2018

கிறுஸ்துவின் கடைச் சபலம் 5

அவர்கள் பன்னிருவர் இருந்தனர். ஒவ்வொருவரையும் தனித்தனியே நோக்கினான். சுற்றிலும் பெரும் பாலை நிலம். வானம் தாய் மிருகத்தின் அடிவயிறு போல சுருங்கி விரிந்து மூச்சிழைத்தது. அதன் நீலத் துணுக்குகளில் வெண்ணிற முடிக் கற்றைகள் போல விண்மீன்கள் சுருண்டிருந்தது. அவர்களின் இருப்பு அந்த இருள் நதியினுள் உதிர்ந்து விழுந்த இலைக் கற்றைகள் போல சலனமின்றி அலையாடியது. குழப்பத்துடன் அவர்கள் ஒவ்வொருவரையும் தொட்டு மீள்கையில் அவனது உறுதிப்பாடு அவர்களிடையில் கடத்தப்பட்டது. ஒரு பெரிய சிலையின் பூதாகர உறுப்புகள் போல அவர்கள் இருந்தனர். ஆனால் தனித்தனியே அவர்கள் நதியினுள் சலனமின்றி பாசி பீடித்து உறங்கிக் கிடக்கும் பாறைகள் போல எண்ணங்களே இன்றி இருந்திருக்கக் கூடும். தங்களுக்குள் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் அறிந்திருந்தனர். செந்தாடிக் காரனின் சொற்கள் எண்ணங்களாய் உருமாறும் முன்னரே அவர்கள் உணர்ந்தனர். அமைதியாக அவன் வழி நடப்பதையே அவர்களும் விரும்பினர். இருந்தும் அவர்கள் தியாகத்தை அஞ்சினர். மரணம் என்றும் தியாகமாவதில்லை. அதன் இறுதிச் சொல் நிச்சயம் வன்மத்துடன் தான் இருக்க முடியும். யாதொரு மனிதனும் தியாகத்தின் பொருட்டு தன்னை முழுக்க ஒப்புக் கொடுத்திட முடியாது என்றே நம்பினர். ஆனால் அவர்கள் ஒற்றை உடலாக ஆகுகையில் எதனையும் செய்யும் ஒரு இயந்திர பாவம் அவர்களுள் உருவாகி விடுகிறது. அதன் பின் எதன் முன்னும் முட்டி மோதி அவர்கள் நகர்ந்து கொண்டே இருப்பர். கடவுளர்களின் சொற்களால் வழி நடத்தப்படுவதாகவே அவர்கள் முழுக்க நம்பினர். நம்பிக்கையின் பேரில் நம்பிக்கை கொண்டனர். அதனால் கொலைகள் மானுடத் தூய்மையை நோக்கியே எனும் பெரும் லட்சியத்தின் முன் அவர்கள் அதன் கருவிகளாக தங்கள் கடமையை செய்வதாகவும் தங்களுக்கு மீட்பு உண்டு என்றும் உறுதி கொண்டனர்.

காலத்தின் நிழலில் சர்ப்பம் போல நெளிந்து தலைகீழாகியது காட்சிகள். கனவும் அல்லாததும் குழம்பிய சேற்று வண்டலாய் சொத சொதத்துக் கிடந்தது.

யாரை ஏமாற்றுகிறாய். நீ! அந்த இறவாப் பேறுடைய ஆப்ரகாமின் மைந்தன். நீதானே! பயத்தினை ஒழித்தவன். தீமை அண்டாத தூயன். கருணை உருவாய் ஆனவன். வெற்றுப் பிண்டங்கள். உன் நல்லொழுக்கங்களை குப்பையில் வீசியெறி. அண்டிப்பிழைக்கும் அற்பக் கூட்டங்களே. சுயமில்லாத முதுகற்ற புழுக்களே.

ஓ! நீ! மத்தேயுவின் புத்திரனல்லவா! சந்தைக் கடைகளில் தேவனின் ராஜ்ஜியத்தை விற்றுக் கொண்டிருக்கிறீர்களே. உங்களுக்கு வெறும் பொருள் தானே அவன்.

கடவுளர்கள் உங்கள் கிடங்குகளில் ஊற வைக்கப்பட்டிருக்கும் போதை ரசம். உங்களின் இன்பக் களியாடல்களில் அவர்களை இருத்தி வியாபாரம் செய்து கொள்வீர்கள். ஜெகோவாவை அறிவீர்களா நீங்கள்? அவனது குகைக்கருகில் செல்லும் தைரியம் உண்டா உங்களுக்கு? உங்களது சொற்களுக்குள் அவரது பெயர்கள் எத்தகைய விலையைப் பெறுகின்றன.

உன் அகங்காரத்தையும் வன்மத்தையும் உன் முட்டாள் தனங்களையும் கொண்டு நீ வரைந்த உன் ஆடிப்பிம்பம் உன் கடவுள். அதன் முன் உன்குறைகளை மண்டியிட்டு அழு.

தெருவெங்கும் ஓடுகிறது, பலிபீடங்களிலிருந்து சிதறிதெறிக்கும் அடர் குருதி. ஆம். அவனது சொந்தக் குருதி. அவர்களிடமிருந்து பறித்ததைக் கொண்டு அவர்களுக்கு உதவுங்கள். தயாளர்களே! இந்த நன்மைகளின், அன்பின் விசுவாசத்தின் ஆன்ம தியாகத்தின் ஒவ்வோர் துளிகளையும்... தேவா! உன் நாமத்தால்...

உன் நாமமே! எங்களுக்கு கிடைத்த கொலைக் கூர் வாள்.

மறுமையின் காரியங்களை செய்து கொண்டிருக்கும் துர் நாற்றம் அண்டிய செல்வக் கிடங்குகளில். கால்கள் இறுக்க கண்ணிகளால் கட்டப்பட்டு விலைப்பட்டியல் இடப்பட்டு தலை கீழாக தொங்க விடப்பட்டிருக்கும் கடவுளர்களின் இறைச்சியைக் கண்டிருக்கிறேன். நீ காறி உமிழவும் மலம் கழிக்கவும் அமைக்கப்பட்ட கூடாரங்களில் தன்னந்தனியே அகப்பட்டுக் கிடக்கும் அந்த அனாதரவான கடவுளை நான் அறிவேன். உனது சொந்த நியாயங்களுக்கும் காரியங்களுக்கும் உன்னுடன் புணர்ந்து கொள்ள ஒரு உருவம் கிடைத்தே விட்டது. உனது வன்மங்களின் சபலங்களின் நிமித்தத்தின் பொருட்டு நீ தேடிக் கிடைக்கும் கீழ்மைகளின் சிக்கல்களுக்கு வழியமைத்துக் கொடுக்கவும் ஒரு உருவம். கால பேதமற்ற ஒன்றை நீ உனக்காகவெ உருவாக்கிக் கொண்டாய். மரணக்கிழியின் அனத்தத்தில் நான் உன்னை சந்த்திப்பேன். அதுவே உன்னிடம் நான் பகிர்ந்து ஏதேனும் உள்ள ஒரு இடம். கால் கைகள் முடுக்கி வெறும் பிண்டமாய்க் கிடக்கும் அது நீதானா? உனக்கு பெயருண்டா? மதிப்புண்டா? இருப்பு ஏதெனுமுண்டா? நீ யார்? நாற்றம். நாற்றம். மறுமையின் வருகையில் அழுகிக் கொண்டிருக்கிறது. ஆசிர்வதிக்கப்பட்ட மறுமை.


பன்னிருவர்களும் வார்த்தைகளின்றி இருந்தனர். தங்கள் முன் நிற்கும் தலைவனின் ஒவ்வொரு அலைக்கழிதலும் நீரலை போல அதிர்வுற்று அதிர்வுற்று அவர்கள் ஒவ்வோர் உடல் கணுக்களிலும் நெளியத் தொடங்கியது.

-The Last Temptation of Christ -Nikos Kazantzakis


வெள்ளி, 16 நவம்பர், 2018

இரவுகள்

சிறிதும் பெரிதுமாய் கூந்தல் இழைகளை சேமித்துக் கொண்டே இருக்கிறேன்
தலையணை இடைவெளிகளில் அனத்தும் கவுச்சியை ஒரு உருவமாக்கி கொள்ள முயல்கையில்
கால்களைச் சுற்றிப் படர்கிறது உன் நிழல்.
போர்த்திக் கொண்டிருந்த அடிப்பாவாடை நுனிகளில் ஈரம்,
கண்ணாடிப்பாட்டில்களுக்குள் அக்கப்பட்டு மிதக்கும் தலை பிரட்டைகளை வாரி வாரி உண்கிறது இரவு
மெல்ல தலை உயர்த்திப் பார்க்கிறேன்
நீ போர்வையாகிக் கொண்டிருந்தாய்,
பாதியில் எழுந்து சிறு நீர் கழித்தேன்.
ஏனோ அன்று நீயும் இதைப்போலவே அமர்ந்திருக்கையில்
உன்னிடம் பகிர்ந்த முத்தங்கள் வெண்ணிறக் கோளங்களாக தரையில் படர்கின்றன
நூறு நூறு நிலாக்கள் கூடிய பழுப்பு நிற வானம் கால்களுக்கடியில் உராயத் தொடங்கியது.
நீ போர்வையாகிக்
கொண்டிருந்தாய் இரவின் காரிருளினுள்