ஞாயிறு, 25 டிசம்பர், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் - 81

    


The Last Temptation of Christ - Nikos Kazantzakis

     ஜீசஸ் பாலையினுள் நுழைந்தான். எந்த சிந்தனைகளுக்கும் இடம் கொடுக்காமல் நேரடியாக உள்ளே சென்று கொண்டிருந்தான். ஆனால் முன்னே செல்லச் செல்ல உள்ளூற உதறலும், பதற்றமும் அவனை  ஆட்கொண்டது.  அந்நிலம் அவனுக்கும் மிகவும் பரீட்சயப்பட்டதைப் போலத் தோன்றியது. அதே சமயம் அது நிலமே அல்லாதது போல, ஒரு வெட்ட வெளி போலக், கிட்டத்தட்ட அந்தரத்தில் கால் பதிந்தது போன்ற உணர்வு. தலைக்கு மேலும், காலுக்குக் கீழும் ஸ்தூலமான ஏதுமற்ற ஒன்றாய்ப் பின், ஒவ்வொரு அடியிலும் கால்கள் கொழகொழத்துப் போவது போல, மண்ணின் புதைவு அவனைக் குழப்பியது. ஆனால் எதற்கும் பயக்காமல் தன்னுடைய இரு பாதச்சுவடுகள் மட்டுமே பதிந்து செல்லும், அங்கே தன் சொந்தத் தனிமையைக் குடித்துக் கொண்டு அமைதியாக முன்னேறிக் கொண்டிருந்தான். சுற்றிலும் சிற்சிலப் புதர்கள் அங்காங்கு கொத்தாய் மண்டிக் கிடந்தது. புழுதியின் சொல் மட்டுமே நீக்கமுற நிறைந்திருந்தது. அவன் பிதற்றலுடன் உரையாட முயல்வது அதனுடன் மட்டுமே. தவிர்த்து காற்றின் பீறிடல். அது ஒரு மாபெரும் துவாரத்திலிருந்து, எல்லையற்றுத் தன் கைகளை விரித்துப் படர்ந்திருந்தது. தெரிந்ததும் தெரியாததும் கூடிக் கூடி உருகொள்ளும் மாய வெளியாய்  அந்நிலம் அவனுள் உருவெடுத்துக் கொண்டிருந்தது. சிறுவயது முதலே, கனவுகளில் பீடிக்கப்பட்டிருந்த அவனது நினைவின் தாழ்வாரங்களில் பாலையும், அதன் வெந்த மணமும், சதா அலையடித்துக் கொண்டிருக்கும் காற்றின் கார்வையும் ஒன்று கூடிக் கூடி, ஒருமாதிரியான இருண்ட வெளியாகியது. ஒரு ஆழமானக் குகையை நோக்கிச் செல்வதைப் போல மயக்கும். மண் பாளங்களின் பழுப்பு நிறம் பெயர்ந்தும் ,நெழிந்தும் செல்லும் பாதை, கணம், காலம், நேரம் என்பதற்கான எந்த அடையாளங்களுமற்றிருந்தது. ஆனால் முன்னே அனைத்துமே உயிருள்ளது, அது மாறிக் கொண்டே இருப்பதே அதற்கான உறுதிப்பாடு. அதனால் திண்மையான ஒன்று என்று ஒன்றுமே அங்கில்லை. எல்லாமே உடைந்தும் சிதறியும், சேர்ந்தும், கலந்தும் என, அவனது அகம் போலவே ஒவ்வொரு மணித்துளிகளிலும் வெவ்வேறு உருவம் கொள்வதை அவன் வெறுமனே ஒரு இருப்பாக கவனித்துக் கொண்டே நடந்தான். ஆனால் அதுவரை அவனுள் தேங்கியிருந்த துக்கத்தின் பாடுகள், கரைந்தழிந்திருந்தது. ஒரு விதமான பரவசத்துடனும், களிப்புடனும், சரியாகச் சொல்வதெனில், தன் தாயைக் காணச் செல்வதைப் போல, ஆவலுடன் சென்று கொண்டிருந்தான்.

    அம்மா எனும் நினைவுகள், அவனைக் கனவு வெளியினுள் தள்ளியது. சிறுவயதில், அவன் கண்ட ஒரு சொப்பனத்தினுள் தற்போது, தான் நிகழ்ந்து கொண்டிருப்பதாக அவன் நினைத்துக் கொண்டான். பல்லாயிரம் வருடங்களாக அவனின் எண்ணங்களின் தேங்கலில், குமிழியிடும் அந்த ஒரே கனவு. அது ஒரு இருண்ட, ஆழமானக் குகை. இரவின் வெளிச்சமன்றி ஏதுமற்றிருந்தது. அதனுள் ஒரு பெண் சிங்கம் தன் குட்டிகளை ஈனிக் கொண்டிருந்தது. அதன் உறுமலையும் , முணங்கலையும் கேட்ட ஜீசஸ் அதன் முன், தாகமும் பசியுமாக நின்று கொண்டிருந்தான். சட்டென்று எந்தத் தயக்கமுமின்றி அவன் அக்குட்டிகளுடன் சேர்ந்து அதன் முலையில், வாய் வைத்து பாலைச் சப்பத் தொடங்கினான். அப்பொழுது தான் எவ்வாறு இருந்தோம், என்ன உரு கொண்டிருந்தோம் என்பதைப் பற்றியத் தெளிவு அவனுக்கில்லை. அச்சிங்கமும் அவனைத் தன் இன்னொரு குட்டியைப் போலப் பாவித்துக் கொண்டு அமைதியாக அயர்ந்துக் கிடந்தது. பின் அவன் குட்டிகளோடு குட்டியாக, குகைக்கு முன்னே எல்லையற்று விரிந்துக் கிடக்கும், பசும் புல்வெளியில் குதூகலித்து விளையாடிக் கொண்டிருந்தான்.  சிங்கங்களுடன் ஒரு சிங்கக் குட்டிப் போல அவனும் கர்ஜித்துக் கொண்டும் குதித்து ஓடிக் கொண்டுமிருந்தவன், இடைவெட்டு போல ஒரு பெண்ணின் குரல் கேட்டு பதைபதைத்து எழுந்தான். அவனது அம்மா மேரி அருகில் ஒருக்கழித்துப் படுத்துக் கிடந்தாள். யாரிவள் என்றுத் துணுக்குற்றுப் பின் நிதானித்துக் கோபத்துடன் அவளைப் பார்த்தான். "ஏன் என்னை எழுப்பினாய்?, நான் என் சகோதரர்களுடனும், அம்மாவுடனும் விளையாடிக் கொண்டிருந்தேன் தெரியுமா?" வெறுப்பாக அச்சிறுவன் தன் அன்னையிடம் சண்டையிட்டதை இப்பொழுது நிகழ்ந்ததைப் போல ஜீசஸ் நினைத்துக் கொண்டான்.

    "அன்று ஏன் நான் அவ்வளவு மகிழ்ச்சியுடன் இருந்தேன் என்று இன்று தான் புரிகிறது. நான் என் அன்னையின் குகையில் இருந்தேன். ஒரு சிங்கத்தின் அணுக்கமான அரவணைப்பில். ஆம்! தனிமையின் மடியில்."

    வீரியன் பாம்புகளின் சீறல் ஒலி, கனத்தக் காற்று, மண் பாளங்களிலும், குன்றுகளின் மேடு பள்ளங்களிலிலும் பட்டுத் தெறித்துக் குமையும் சப்தம். காட்சிப்புலமற்ற இப்பாலையின் ஆன்மாவின் முடிவே இல்லாத அனக்கம்.

    ஜீசஸ் தலை குனிந்து மண்ணைப் பார்த்து, தன் வலதுகையை இடது நெஞ்சில் ஆழமாகப் பதித்து ஒரு அறைகூவல் போலத் தெரிவித்தான். " இங்கு நீ அறிந்து கொள்வாய்,  நீ நித்தியமானவன் என்று!"

    செவிகளைக் கூர்ந்து நடந்து சென்றான். பின் தொடரும் காலடிகள். ஆழமாக மண்ணை மிதித்து முன்னேறும் கனத்தத் தப்படிகள். "அமைதியாக, உறுதியுடன் தன்னைத் தொடர்ந்து எதுவோ வந்து கொண்டிருக்கிறது." நடுக்கத்துடன் நினைவு கூர்ந்தான். "அவள்! எப்படி மறந்தேன். அவள் என்னை விட்டு என்றுமே விலகவில்லை. என்னுடன் தானே அவள் எப்பொழுதுமே வந்து கொண்டிருக்கிறாள். அம்மா!....." அவனுக்குத் தெரியும், இது தன்னைப் பீடித்திருக்கும் சாபம் என்று. ஆனால் அவள் தம்முடனேயே எப்பொழுதுமே இருக்க வேண்டும் என்பதில் அவன் உறுதியாக இருந்தான்.

    பதற்றம் விலகி, திரும்பவும் நடக்கத் தொடங்கினான். எண்ணங்கள் சுழல் போலச் சுழன்று வேறு திசையில் கிளர்த்தியது. அந்தப் பறவை. வெண்ணிறச் சிறகுகளுடன் தலைக்கு மேலேக் குழறிக் கொண்டு சென்றதை நினைத்தான். அது சாதாரணமான ஒலி போல அல்ல. ஒரு எச்சரிக்கை போலவும், நிமித்தம் போலவும், வரவேற்பினைப் போலவும் பலவிதமாக அவனுக்குள் தோன்றியது. அது ஒரு மயக்கோ என்று கூடக் குழம்பினான். ஆனால் அது தான் தான் என்று அவன் நம்ப முயன்றான். தன்னுள் அது வரைக் கட்டுண்டிருந்தவை அனைத்தும் முறிந்து, சிறகுகள் படபடத்த தன் ஆன்மா பறப்பதாக எண்ணினான். அதுவரை அடைபட்டிருந்தப் பிடி தளர்ந்து அக்கணப்பொழுதில் பறத்தல் மட்டுமே உடலாகக் கொண்டு அது மேல் எழுவதை அவன் கண்ணுற்றான். ஆம்! ஆம்! நான் திருமுழுக்கிட்ட அச்சரியானக் கணத்தில் அதன் சீழ்க்கையை, சிறகடிப்புகளை, என்னைச் சுற்றி வட்டமிட்டு, அது எல்லையற்று வானமாய் விரிந்ததை நான் பார்த்தேன். அது தேவதூதனோ, இல்லை ஒரு காட்டுப்புறாவோ அல்ல, அது நான்! என் சொந்த ஆன்மா! "

    அப்பதிலினால் திருப்தியுற்றவன் போல உணர்ந்தவன், திரும்பவும் முன்னே நடக்கத் தொடங்கினான். அக்கனத்தக் காலடிகள் புழுதியை நசுக்கிக் கொண்டு அவனைப் பின் தொடர்ந்தது. இப்பொழுது அவனது எண்ணங்கள் ஓய்ந்து ஒருவாராக நிலைத்திருந்தது. தன்னால் தாங்க முடியாத ஒன்றுத் தனக்கு அளிக்கப்படுவதில்லை என்பதை அவன் உணர்ந்தான். "ஒரு மனித ஆன்மாவின் வலு அளப்பறியது. அது அற்புதங்களை நிகழ்த்துவது. அதனால் இயலாத ஒன்று என்று பூமியிலும், வானத்திலும் ஒன்றுமே இல்லை. அதுவே ஒரு பறவையின் விடுபடலாக, என் தலைக்கு மேலே எழுந்து வான் விரிந்தது. " தன்னைத் தானே தேற்றிக் கொண்டு, அமைதியாக வேகமெடுத்துச் சென்றான். ஆனால் சட்டென்று ஓரிடத்தில் நின்று விம்மத் தொடங்கினான். "ஏன்! அப்பறவை ஒரு மாயையாக, வெறும் கானல் நதியாக எனக்கு மட்டுமேத் தெரிந்த ஒரு காட்சிப்பிழையாக இருந்தால்," காற்றுச் சுழல், செவிப்பறைகளில் அறைகிறது, மண், புழுதித் தடத்தின் நீள் ரேகைகள் பதிந்தழிகிறது. தட்டழிந்து கொண்டிருந்தான் அப்புழுதியைப் போலவே. அவனால் எதனுள்ளும் தன்னைப் பொருத்திக் கொண்டு நிலை பெற முடிவதில்லை. அதுவே அவன் வரமும் சாபமும். இம்முடிவை எடுத்து, பாலை வெளியை அணுகுகையில் தன் உடல் முழுக்க ஒளி முகிழ்த்ததை, அது பட்டுப் படர்ந்து தன் பாதங்களிலிருந்து விரிந்துப் படர்ந்து, உலகம் முழுமைக்குமாய்த் தன் நீண்டக் கரங்களைப் படர்த்துவதை அவன் உணர்ந்திருந்தான். அதன் மாட்சிமை, அளப்பறியாத உவகை, வல்லமை, மறுக்க இயலாதத் தன்மை அனைத்தும்  சேர்ந்தே அவனை இயக்கியது.  "இந்நிலத்தினுள், நான் பணயம் வைப்பது என் தனிமையை, என் ரத்தத்தை, எலும்பும் நரம்பும் தோலும் உறுதியும் கொண்ட என் சொந்த உடலை,  என் திண்மையின் தளர்வுறாத நம்பிக்கையை. இங்கு  நான் கேட்க வேண்டியதையும், பார்க்க வேண்டியதையும் நிச்சயமாகக் காண்பேன். ஆம்! இதுவே என் கூடாரம். "தந்தையே! உம்மில் தாழ்ச்சியுறுகிறேன்!", நாம் இருவரும் இங்கு தனித்தமர்கிறோம். உம் சத்தியத்தின் பாதையை எமக்குக் காட்டும். நான் திரும்பிச் செல்லும் வழிகள் இல்லை. என் உடலையும் ஆன்மாவையும் உமக்கேக் காணிக்கையாக்கி உன் முன்னே நிற்கிறேன். இனிமேல் எனக்குப் பாடுகள் இல்லை. நீயே வழியும் உண்மையும் எனில், என்னை ஏமாற்றாது உன் சொற்களை அளியும்.  பலப் பலக் குரல்கள், சூறையாகக் காற்றில் அடித்து நிரம்புகிறது. பற்றுதலும், வேண்டுதலும் நீ மட்டுமே, தயை கூறும்! ஆமேன்!"

    சூரியனும் அவனும் ஒரே நேர்க்கோட்டில் பயணித்தனர். இப்பொழுது அவனது தலைக்கு மேலே சரியாக வானின் மேல் முகட்டில் அது ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவனது முழங்கால் வரை மண்ற்துகள்கள் பதிந்திருந்தன. தேகம் முழுதும் புழுதி திட்டுத் திட்டாகப் படிந்து வழிந்தது. தன்னைச்சுற்றிய வெற்று நிலத்தை அங்கும் இங்குமாய்த் திரும்பித் திரும்பிப் பார்த்தான். நிழலின் சின்னஞ்சிறியத் துணுக்குகள் கூட கிடைக்கவில்லை. வெட்டை நிலம், பொருமியது. ஒளியைப் பொசுக்கிப் பொசுக்கி நெடி கூடியிருந்தது. பாலை வேகுவது ஒரு மனிதஉடல் போலவே சுருங்கி விரிந்து சுவாசிப்பதாய் மயக்கு. சட்டென சிறகடிப்புகளை உணர்ந்தான். மேலே காகங்கள், வேகமாகக் கரைந்து கொண்டு, சற்றேத் தொலைவில் கருப்பாகக் கிடக்கும் ஒன்றினை நோக்கித் தரை இறங்குவதைக் கவனித்தான்.

    அழுகிக் கொண்டிருந்த ஒன்று அங்கு கிடந்தது. அதன் பிண நெடியின் கவிச்சி அவனை மெல்ல உலுக்கியது. சரியாக என்னவென்று தெரியவில்லை. மூக்கைப் பிடித்துக் கொண்டு அதனை நோக்கிச் சென்றான். காகங்கள் மூர்க்கமாகத் தன் கூர் நகங்களால் அதன் தோலைக் குத்தியும் கிழித்தும், தின்று கொண்டிருந்தன. அவைகளின் சப்தம், சுற்றிலும் பட்டுத் தெறித்து எதிரொலிப்பதைப் போல அவ்விடம் முழுதும் அதிர்ந்து கொண்டிருந்தது. ஒரு மனிதன் வருவதைக் கண்டதும், அவைகள் சிதறி விலகி, இன்னும் சத்தமாகக் கரையத் தொடங்கின. மெல்லப் பின் வாங்குவதும், பின் ஓரங்களிலிருந்து அதன் அருகே சென்று தன் அலகினால் குத்தி அதன் மாமிசத்தை துளைத்துக் கடிப்பதுமாய் அவைகள் ஒவ்வொன்றும் வெகு அவசரமாகத் தங்கள் வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தன. பறந்து விலகிய ஒவ்வொன்றின் வாயிலும் கொழுத்த மாமிசத் துண்டங்கள். வானத்தில் வட்டமிட்டுக் கொண்டே அவனை விரட்டும் தொனியில் அவைகள் இன்னும் சீற்றத்துடன் கரைந்தன. விலக்கி அருகே சென்ற ஜீசஸ், அடிவயிறு கிழிந்துக் குடல், மாலையாக வெளித்தள்ளிக் கிடக்கும அழுகிய ஆட்டின் உடலைப் பார்த்தான். வளைந்தக் கொம்புகளும், கருப்பும் சாம்பல் நிறமும் கொண்ட அதன் உடல், குதறப்பட்டுப் பிண்டமாய்க் கிடந்தது. ரத்தம் முழுதும்  வடிந்து நொதித்தழுகிக் கொண்டிருந்தது. கண்களும், விதைக் கொட்டைகளும் ஏற்கனவே உணவாகி விட்டன. ஒடிந்து ஒருபக்கமாகச் சரிந்துக் கிடக்கும் கழுத்தினில் கொத்தான வளையங்கள் இறுக்கிச் சீழும் ரத்தமும் படிந்து, சூரிய ஒளியினில் பளபளப்பதை ஜீசஸ் பார்த்தான்.  

    "பலி!" நடுக்கத்துடன் ஜீசஸ் பின் வாங்கினான். "மக்களின் பாவங்களைச் சுமந்து வந்தப் புனிதப் பலிகடா. கிராமங்களையும், மலைகளையும், புல்வெளிகளையும், கற்பாறைக் குன்றங்களையும் தாண்டி இறுதியாக இந்த வெட்டை நிலத்திற்கு வந்து உயிரை விட்டிருக்கிறது." வளையங்கள் இறுகி அதன் தலை வீங்கியிருந்தது. நாக்கு, ஊர்வன போல நகர்வதைக் கவனித்தான். அதனடியிலிருந்து எறும்புக் கூட்டம் ஒன்று, கொஞ்சம் கொஞ்சமாக அதனைப் பிய்த்துக் கொண்டிருந்தது.  

    சட்டென அருகே இருந்த மணல் மேட்டில், தன் கைகளாலேயே முடிந்த வரைக் குழி தோண்டினான். பின் அந்த செத்த உடலை அப்படியேத் தூக்கி குழிக்குள் இட்டு மண்ணள்ளி நிரப்பினான். கைகளில் இருந்த பிசுபிசுப்பை மணல் பரப்பில் பதித்துத் துடைத்துக் கொண்டான். ஆனால் துர் நாற்றத்தின் வீச்சம் அவன் உடல் முழுதும் தொற்றிக் கொண்டது. நாசியில் அதன் நெடியை அவனால் மறுதலிக்க முடியவில்லை.

    "என் சகோதரா,  எந்தத் தீங்குமற்றத் தூய மிருகமே! மனிதன்! தந்திரமிக்கவன். அனைத்திற்கும் மாற்று உபாயங்களை வகுத்து வைத்திருக்கும் கோழை. உன்னைப் பலியாக்கித் தங்களின் பாவங்களைக் கரைக்க நினைக்கும் ஈனன். அமைதியுறு!. உன் ஆன்மா நித்தியத்தின் இருப்பிற்குள் சாந்தியடைய என் தந்தையைப் பிரார்த்திக்கிறேன். தங்களின் பாவங்களுக்குப் பிராயச்சித்தம் தேடாது என் தந்தையின் கூடாரத்திற்குள் வருவிக்கப்படும் அவர்கள் மறுமையில் அவர் சினத்திற்கு ஆளாவார்கள். உன் தூய்மையின் பரிசுத்தம் உன்னைக் காக்கும். என் அன்பின் சகோதரனே! அமைதியுடன் விடைபெறு! ஆமென்!"

    முன்னே நடக்க எத்தனித்தவன்,  நின்று கலக்கத்துடன் தன் கைகளை  வான் உயர்த்தி அழைத்தான். " நிச்சயம் நாம் திரும்ப சந்திப்போம்!"

    காகங்கள் வெறிக் கூச்சலிட்டன. பல்லாயிரம் சிறகுகளின் படபடத்தல். "அருமையானத் தங்களின் உணவு பறிபோய் விட்டதை அவைகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவனைப் பின்தொடர்ந்து கூட்டமாகப் பறந்து வந்தன. எப்படி, தங்களுக்குக் கிடைத்த, அருளப்பட்ட உணவை இம்மனிதன், உண்ண விடாமல் தடுக்கலாம். அழுகிய உடல்களைத் தின்று வாழத்தானே எங்களை இந்தக் கடவுள் படைத்திருக்கிறான். இப்பொழுது என்ன கேடாகி விட்டது இம்மனிதனுக்கு. எங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட நிலத்தில் எங்களின் உரிமைகளைப் பறிக்க இவனுக்கு யார் கொடுத்தார்கள் அதிகாரம்? கண்டிப்பாக இவன் இதற்கான விலையைத் தந்து தான் தீர வேண்டும். நாங்கள் விடுவதாக இல்லை!" காகங்களின் கரைதல் அவனுள் எண்ணங்களாக விரிந்தன.

    இறுதியாக இரவு அணைத்தது. ஒரு பெரிய வட்ட வடிவிலான, மண் பாறையின் மேல் அவன் தளர்ச்சியுடன் அமர்ந்தான். "இனி மேல் என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது!" தனக்குக் கட்டளையிடும் யாரிடமோ சொல்வதைப் போன்றத் தொனியில் கூறினான். "இங்கு எனக்கான அரணை அமைத்துக் கொண்டு நான் விழிப்பில் அமரப்போகிறேன். எது வருமோ வரட்டும்!" இருள் சுருள் சுருளாக விரிந்துப் பாளம் பாளமாக, வானிலிருந்து மண்ணிற்கு உடைந்தும் நெழிந்தும், அடர்த்தியாகப் பரவிக் கொண்டிருந்தது. நாலாபுறமும் சுவர் போல கருமை எழும்பியது. குளிரின் வீரியம் கூடியது. காற்றின் சில்லிடல். அலறும் அதன் குரல், சட்டெனச் சன்னமாக ஒலித்துப் பின் உயர்ந்தது. ஒலி மேடு பள்ளங்கள் வழியாக அவனைச் சுற்றிக் குழுமியது. வானம் பெரிய மூடுதிரையாக வளைந்து கிடந்தது. இருளின் உயிர்த்தன்மை, அனக்கங்களாக, கூச்சலாக, ஓலங்களாக, நெடிகளாக, அடரும் மூட்டமாக அவன் முன்னேப் போக்குக் காட்டியது. பற்கள் கெட்டிக்கத் தொடங்கின. தன் வெண்ணிற மேலங்கியைக் கிளர்த்தி இறுக்கமாகச் சுற்றிக் கொண்டான். பகல் முழுதுமான அயர்ச்சியினால் தன்னையறியாமலேயே அவனது கண்கள் சொக்கின. கண்களை மூடியதும் பயம் ஒரு பூச்சியினைப் போல அவனைத் தொற்றிக் கொண்டது. தன்னைச் சுற்றி உலவும் இருள், அதன் பலவிதமான ஊளைகள்,  காற்றின் பம்முதல், எல்லாம் எந்நேரமும் தன்னைத் தாக்கிக் கொல்லப் போகும் வன் மிருகம் போல, அவன் அயர்ந்து வீழும் நொடிக்காகக் காத்திருப்பதைப் போல அவனுக்குத் தோன்றியது. சட்டென வானத்தைப் பார்த்தான். வெண் ஒளி மினுக்கம்.  அது பல்லாயிரம் விழிகள். இல்லை! பலப்பல மின்மினிப் பூச்சிகள். தேவனின் விரல் நகங்கள். அவனது உடல் முழுதும் ஜொலிக்கும், ஆபரணங்களின் மினுமினுத்தல்கள். தன் கற்பனையின் மொழியால், தன்னைத் தானே ஆசுவாசப்படுத்த முயன்றான். விண்மீன்களின் அசைவு, விண்ணுலகத்தின் அணுக்கத்தை அவனுக்கு ஸ்தூலமாகத் தெரிவித்தன. தேவனின் மணி முடியில், ஆறு ஒளிச்சிறகுகளாக ஒளிர்க்கும், சங்கீதங்களின் தாளத்தை அவனுக்கு நினைவு படுத்தின. ஆனால் அது வெகுதூரத்திலிருந்து ஒரு மெல்லியக் குரலாக அவனிடம் வந்தது. அவனால் அதன் முணங்கல் ஒலியை மட்டுமே அருகிருத்த முடிந்தது. அவனது அகம் முழுதும் பரவிய ஒளியின் வழியை மட்டுமே பற்றுக் கோடாகப் பிடித்துக் கொண்டிருந்தான். பசியும், தளர்ச்சியும், வாதையும் அவனை விட்டு விலகியது. அவனே அம்மாபெரும் இருள் வெளியின் கலங்கரை விளக்கம் போலத் தனக்குள் நினைத்தான். இறைவனை நோக்கியப் மன்றாட்டுதலின் கீர்த்தனைகளை தன்னுள்ளிருந்து பாட முயன்றான். அது தன்னை, தன் ஆன்மாவை, இருதயத்தைப் பிழிந்து சாறினை எடுப்பதைப் போல, சொற்களை, மொழியைத் தொடுத்து துதியை வருவிக்கும் பிரயத்தனமாக இருந்தது. தான் செய்கின்ற ஒவ்வொரு செயல்களும், கவனிக்கப்படுகிறது என்று நம்பினான். பணிவுடன், எளிமையான உடைகளுடன் நிற்கும் தேவதைச் சிறுமிகள் ஆதுரத்துடன் தன்னை நோக்கிக் கொண்டிருக்கின்றனர். அவனுள் இருக்கும் பதற்றமும் பயமும் மெல்ல மெல்ல விலகியது. சிறகுகள் ஒடுக்கித் தன்னைப் போர்த்திக் கொண்டு கண் அயரும், சின்னஞ்சிறு குருவியினைப் போல அவனும் உறங்கத் தொடங்கினான். சிறகடிப்புகள் கலைந்து ஒலியின் மோனம் நீக்கமுற நிறைந்திருந்தது.

    இரவின் குரல்கள் கலைந்தன. அவன் விழிக்கையில், இருள் துணுக்குகள் கூட மறைந்து, வானம் வெளிச்சம் உமிழத் தொடங்கியிருந்தது. கிழக்கிலிருந்து உயரும் மஞ்சள் கோளகம், ஆயிரம் தீக்கனல்களாய் ஒளியையும், வெம்மையையும் எல்லைகளின்றி விரித்தது. மண்ணிற்கு மேலே தழல் பூக்கும் மஞ்சளின் பாட்டையைப் பாறையின் மேலிருந்து உட்கிரகித்துக் கொண்டிருந்தவன், அதனைத் தந்தையின் உடல், ஸ்பரிசம், தொடுகை, அணைப்பு என்று பலவாறாக எண்ணி, அள்ளிப் பூசித் தன் உறக்கத்தைக் கலைத்தான். கண்களைச் சுருக்கி உறுத்தும் ஒளியினை கசக்கித் துடைத்தான். "தந்தையே! ஒரு தானியமணி போல இம்மண்ணில் கிடக்கிறேன், என்னை நீ அறிகிறாயா?, ஒரு விதையினைப் போல இம்மண்ணைப் பற்றிக் கொண்டிருக்கும் என் மூச்சினையும், குரலையும் கேட்கிறாயா? உன்னை விரும்பும், உன் சொல்லுக்காகக் காத்திருக்கும் உன் மகனை உன்னால் அடையாளம் காண முடிகிறதா? எந்த ஆயுதங்களும் என்னிடமில்லை. அன்பு எனும் ஒற்றைப் பிடிமானத்தைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டு உன் முன்னே அடிபணிகிறேன்.  நான் அறிவேன்! இது ஒரு போர்! என்னை நீ தேர்ந்தெடுப்பதற்கானத் தெரிவு! இங்கே நான் என் கைகளுக்குள் குஞ்சுப் பறவையைப் போலப் பாதுகாப்புடன் வைத்திருப்பது, என் பரிசுத்தமான அன்பு. அதனைக் கொண்டே நான் போரிட வந்துள்ளேன். தயை புரி தந்தையே!"

    தன்னுடன் ஜோர்டானிலிருந்துக் கொண்டு வந்திருந்த, கோரைப்புல்லினைக் கொண்டு, தான் அமர்ந்திருந்தப் பாறையைச் சுற்றி மண்ணில் வட்டமாக எல்கை வரைந்தான். 

    " நான் இந்த எல்லையினை விட்டு வெளிவர மாட்டேன்" சுற்றிலும் இருக்கும் வெட்ட வெளி முழுதும் கேட்கும் படி சத்தமாகக் கூறினான். அது அவனை எந்நேரமும் பற்றிக் கொள்ளக் காத்திருக்கும் காட்சிக்குப் புலனாகா சக்திகள் அறிந்துகொள்ளட்டும் என்பதைப் போல இருந்தது. "என் தந்தையின் சொல் என்னை அணுகாதவரை, நான் இதோ இங்கு வரைந்திருக்கும் தளத்தின் எல்லையை விட்டு நகரமாட்டேன். அவரது குரல் எனக்குத் தெளிவாகக் கேட்க வேண்டும். எப்பொழுதும் நிகழ்வதைப் போல, ஒரு தெளிவற்ற முணங்கலாக, ரகசியமாக, மின்னல் வெட்டாக, இடியின் குரலாக, பலப்பல சமிஞ்சைகளாக, வலியாக, பீடித்தலாக இல்லாது ஒரு தெளிவான மனிதக்குரலாக அவர் என் முன் வந்தாக வேண்டும். வந்து, அவர் என்னிடம் என்ன வேண்டுகிறார், என்னை என்ன செய்யச் சொல்கிறார், நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குத் தெளிவாக உரைக்கவேண்டும். அதுவரை இந்தத் தளத்தை விட்டு ஓரடி கூட நகரமாட்டேன். எதுவாயினும் சரி. அவரது கட்டளையை ஏற்பேன். மரணமானாலும், வாழ்வானாலும். அவரது விருப்பம். அவர் என்னை என்ன செய்ய முயல்கிறாரோ அதற்கு என் உடல், பொருள் ஆவி அனைத்தையும் காணிக்கையாக்குகிறேன்....என் தந்தையின் பெயரால்!, ஆமென்!"

    சூரியனுக்கு முன்னே முகத்தைக் காட்டிக் கொண்டு, எல்லையற்று விரியும் பாலையின் மணல் வெளியைத் தன் எல்லையினுள் அமர்ந்திருந்துப் பார்த்தான். கண்களை மூடியதும் எண்ணங்கள் ஓட்டமெடுத்தன. நாசரேத்திலுருந்துத் தொடங்கி, மாக்தலா, கார்பெர்னம், ஜேக்கப்பின் குடில், பின் ஜோர்டான் நதி என்று விலகி விலகி இறுதியாகத் தன் முன்னே வரிசைக்கிரமமாக அணிவகுக்கும் போர்வரிசையினை சூட்சுமமாக அவனுள் புலர்த்தியது. அவன் போர்புரிவதற்குத் தயாரானான்.

    நேராக நிமிர்ந்து, இறுக்கத்துடன் அமர்ந்திருந்தவனின் இமைகள் மூடியிருந்தன. அவன் தன்னுள் மூழ்கியிருந்தான். ஒலிகளின் கார்வை அவனுள்  கூடிக் கொண்டிருந்தது. ஆர்ப்பரிக்கும் நீர்மையின் பெருக்கோட்டம், கோரைப்புற்கள் கிலுங்கிக் கிலுங்கிக் கிழிகிறது, மனித விளி, புலம்பல்கள், ஓலங்கள்.....ஜோர்டான் நதியின் அலைப்பெருக்கு, கரைத் தொட்டு மீள்கையிலெல்லாம், வீறிட்டெழும் அழுகை, தூரத் தொலைவில் நடுக்கத்துடன் அதிர்ந்து கொண்டிருக்கும் நம்பிக்கையின் விதைப்பாடுகள், சீற்றத்தின் எழுச்சியால் கொஞ்சம் கொஞ்சமாகக் கரையக் காத்திருந்தது. ....அந்தக் காட்டு மனிதனுடன் மூன்று நீள் இரவுகளைக் கடத்திய ஞாபகங்கள் தான் அவனது மனதில் முதலில் வந்திறங்கியது. தன் எல்லாவிதமானத் தந்திரங்களுடனும், கவசத்துடனும் அவைகள், பாலைவெளிக்குள் அவனைக் குறிவைத்து ஊடுருவிக் கொண்டிருப்பதை அத்துறவி சரியாகவேக் கணித்திருந்தார்.

    அவருடன் இருந்த முதல் நாள் இரவு, ஒரு ராட்சச வெட்டுக் கிளி,  பழுத்த சாம்பல் நிறமான அதன் உருளையானக் வெறிக்கண்கள்,  படபடத்தும் அதன் வலுவானச் சிறகுகள், அதன் வெண்மையான அடிவயிற்றில் ஏதோ மந்திரச் சொல், பச்சையாகப் பொறித்திருந்தது. அதன் மூச்சின் கனம், சாக்கடலின் நெடியை ஒத்திருந்தது. வாயிலிருந்து வழியும் பசை நீர்மத்தை ஜீசஸின் மேல் உமிழ்ந்தது, அவன் நகர வாய்ப்பளிக்காமல் நேரடியாகத் தன் கூர்மையான உகிர்களால் அவன் தலையை அழுத்திப் பற்றியது. காற்றின் விசை, அதன் சிறகடிப்புகளால் கூடிக் கூடி அவன் பொடிந்து தூளாகி விடுவதைப் போல உணர்ந்தான். தன் உறுதியான மெலிந்தக் கைகளை, ஜெருசலேமின் இருள் பாதையை நோக்கி உயர்த்தி, அவர் ஜீசஸை நோக்கி வினவினார்.

"பார்! அங்கு நீ என்ன காண்கிறாய்?"

" எனக்கு எதுவும் தெரியவில்லை?"              

    "தெரியவில்லையா? பார்! உன் முன்னே தெரிவது ஜெருசலேம். புனித நகரம். நம் தந்தையின் கூடாரம். அங்கு அந்த வேசி உனக்குத் தெரிகிறாளா? ரோமானியர்களின்  கொழுத்த மடியில் அமர்ந்து கொண்டு, தன் தேகத்தால் அவர்களைக் கிளுகிளுப்பூட்டி, உறவு கொள்ளும் விலைமகள்.  நம் தந்தை அழுதுகொண்டிருக்கிறார். "எனக்கு வேண்டாம். இவள் தான் என் மனைவி என்றால் நிச்சயமாக எனக்கு இவள் வேண்டாம்!." நான் என் தந்தையின் காலடியில் அமர்ந்திருக்கும் காவல் நாய். அப்புனித நகரின் சதுக்கங்களிலும், தெருக்களிலும், ஆட்கள் கூடும் சந்தைகளிலும், மாடகோபுரங்களுக்கும் முன்னே சென்று அவளைப் பார்த்து வெறியேறக் குரைக்கிறேன். "இழிபிறப்பே! விட்டகன்று செல்! என் தந்தையின் நிலத்தை விட்டு ஓடிவிடு என்று". வானளவு உயர்ந்த, நான்கு மாபெரும் கோட்டை வாயில்கள் வழி அவளை அடையலாம். வாயிலின் முதலில் அமர்ந்திருப்பது பசி, பின் அச்சம், மூன்றாவதாக ஆநீதி, நான்காவது வடதிசை நோக்கித் திறந்திருப்பது இழிவு. அவளது தெருக்களுக்குள் முன்னும் பின்னும், இடமும் வலமுமாக எல்லா இண்டு இடுக்குகளுக்குள்ளும் செல்கிறேன். அவளது குடிகளை அணுகி சோதித்துப் பார்க்கிறேன். அவர்களது முகங்கள் கனத்தும், கொழுத்தும், வீங்கியும் இருந்த விகாரத் தோற்றத்தைப் பார். இவ்வுலகம் எப்போது அழியும் என்று தெரியுமா? மூவாயிரம் பேருக்கான உணவை, மூன்று பேர் மட்டுமே உண்டு செழித்து வாழ்வர். மற்றவர்கள் உண்ண ஏதுமின்றி, சொந்த மலத்தைத் தின்று, வயிறு வெடித்துச் சாவர். பார்! இம்மக்களின் அருளற்ற முகங்களை. பயம் மட்டுமே நீக்கமுறப் பீடித்து வெளிறிப் போயிருக்கிறது. சதா நடுங்கிக் கொண்டிருக்கும் அவர்களின் மூச்சின் அனத்தம் கேட்கிறதா? இவர்கள் நம் தேவனின் பிரார்த்தனைக்கூடங்களில் கூட, பெண்களுடன் சல்லாபிக்கின்றனர். மிகவும் நேர்மையானவன் என்று சொல்லிக்கொள்பவன் கூட, ரகசியமாக அவளின் மாமிசத்தின் ருசி அறிந்தவனே!"

    "பார்!...அவர்கள் மாளிகைகளின் வேர்களைப் பிடுங்கி எறிவதற்கே நான் வந்திருக்கிறேன். பார்! ராஜா என்று சொல்லிக் கொள்பவன், தன் சகோதரனின் மனைவியை, நிர்வாணப்படுத்திப் புணர்கிறான். நம் வேதங்களும், தீர்க்கதரிசன நூல்களும் என்ன கூறுகின்றன? எவன் ஒருவன் தன் சகோதரன் மனைவியை நிர்வாணப் படுத்துகிறானோ? அவன் சாவான். இந்தக் கேடுகெட்ட அரசன், சாக வேண்டியவன் தானே? ஒரு துறவியாக இதையே நான் கூற விளைகிறேன், ஆம்! நம் தந்தையின் நாள் வந்துவிட்டது. இவ்வுலகம் பொடிந்து தூள் தூளாகும் பார்!"

    ஒரு முழு நாளும், அக்காட்டுத்துறவியின் கனத்த ஆக்ரோஷமானச் சொற்கள், அவனை முழுக்கடித்திருந்தது. பசி, அச்சம், அநீதி, இழிவு எனும் நான்கு வாயில்கள் வழியாக, உள்ளும் புறமும் ஜெருசலேம் எனும் புனித நகரத்தில் பயணித்தான். வேசியின் நகரம், ரத்தத்தாலும், மாமிசத்தாலும் வேட்கையினாலும் நிறைந்திருந்தது. தேவனின் கோபம் வானின் மேகங்களை இருள் வெளியால் நிரப்பியது. செங்கனல் பொதிந்தக் கனத்தக் காற்று, தீக்கனல்களால் கீழிருக்கும் கீழ்மைகளை, ஒட்டுமொத்தமாக எரிக்கக் காத்துக் கொண்டிருந்தது.

    இரண்டாம் நாள் அவர், ஏதோ தன்னை உலுக்கி உந்துவதைப் போலச் சன்னதமெடுத்துக் கைகளை மேல் நோக்கி உயர்த்தினார். நாணல் புல்லைப் போல உயர்த்தியிருந்தக் கைகள் தங்களுக்குள் பிணைந்து சேர்ந்தும் அதிர்ந்து கொண்டிருந்தது. அது விண்ணிற்கும் மண்ணிற்குமாக ஏறி இறங்கியது. இரண்டையும் இணைப்பதும், மறுதலிப்பதுமான ஒன்றிடம் மன்றாடியது. சொல் எதுவும் எழுப்பவில்லை. ஆனால் சுற்றிலும் அதிர்வுகளின் தேற்றம். வானம் பொசுங்கும் நெடி. அது வெம்மையைத் திரட்டுகிறது. மண், அதனை உள்வாங்கித் தன் தேகமெங்கும் பரப்பி வெளிக்கிறது.

"காலம்! வெளி!"

"கவனி! நீ என்ன கேட்கிறாய்?"

"தெரியவில்லை!"

    "அவளது குரல், அந்த வேசை மகளின் குரைப்பொலி. கொஞ்சம் கூட வெட்கமின்றி, விண்ணுலகில் நம் தந்தையின் இருப்பிடத்தின் வாசலில் நின்று அவள் குரைப்பது உனக்குக் கேட்கவில்லையா? நீ வருகையில் அங்கு  ஜெருசலேமில் அதனைக் கவனித்திருப்பாயே, அங்கு கோவிலைச் சுற்றித் திரியும், பலவிதமானப் பூசாரிகளை. பொய்யர்களை, வீணர்களை. மந்திரம் சொல்லி அலறும் கீழ்ப்படி நிலையிலுள்ள பூசாரிகள், இறைவனிடம் நேரடியாகப் பேசி அற்புதங்கள் நிகழ்த்துவதாக, மக்களை ஏமாற்றிப் பணம் பிடுங்கும் மேல் நிலைப் பூசாரிகள், எழுத்தும், சொல்லும் அறிந்து வைத்திருந்து, வழிபாட்டினை மக்களுக்கு எடுத்தியம்பும், பொய்கள் கூறி அவர்களின் நம்பிக்கைகளைக் காசாக்கும் பூசாரிகள், சடங்குகள் செய்யும் பரிசேயர்கள் என ஒரு பெரும் கூட்டம் வாசலில், வியாபாரம் செய்து கொண்டிருக்கிறது. இவ்வுலகத்தின் ஆட்டங்களும், துடுக்குத்தனங்களும் வெகு நாட்கள் செல்லாது. தாங்கிக் கொண்டிருக்கும் கண்ணிகள் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து கொண்டிருக்கின்றன. அவனது பொறுமையின் கணங்கள் முடிகின்றன. அவன் எழுவான். தனக்கு முன்னே ஆத்திரமும், பின்னே தீ, வாதைமற்றும் பைத்தியம் எனும் மூன்று பேய்களுடன் அவன் வருகிறான். பெரும் பெரும் மலைகளை மிதித்து ஒரு காட்டாற்றினைப் போல அவன் இப்பூமிக்கு இறங்குவான். இக்கோவில் நகரம் சாம்பலாகும், இந்த இழிந்த பூசாரிகள் சாம்பலாவார்கள். இவர்களின் மாந்திரீகமும், அதன் லட்சிணைகளும் சாம்பலாகும், இப்பாதிரிமார்களின், பட்டுப் பீதாம்பரங்களும், தங்கக் கிரீடங்களும் எரிந்து சாம்பலாகும். அழிவற்றது! அழிவற்றது! என சதா துதித்துக் கொண்டிருக்கும், தங்க முலாம் பூசிய இந்த நீண்டுயர்ந்த கோவில் கோபுரங்கள் எரிந்தழியும். அனைத்தும் எரிந்து மட்கி சாம்பல் துகள்களாய் மீளும். ஜெருசலேம்! ஜெருசலேம்! நீ எங்கிருக்கிறாய், என் அருமை வேசி மகளே? என் கைவிளக்கினைப் பிடித்துக் கொண்டு, தேவனின் இருள்முடுக்குகளினுள் செல்கிறேன், அங்கு அனைத்தும் புழுதிப்படலமாக, மண்ணோடு மண்ணாகக் கரைந்து போயிருக்கும். என் கத்தலுக்கு, எதிரிடையாக காகங்கள் அங்காங்கு கரைந்து, கூட்டாக அழுகிய மீந்த உடல்களைத் தின்று கொண்டிருக்கும். நிணம் காயாத எலும்புகளும், மண்டை ஓடுகளும் என் முழங்கால் அளவு குவிந்து கிடக்கும். என்னையறியாது நான் அழுது கொண்டிருப்பேன். நான் என் கால்களால் விலக்கி முன்னே செல்கிறேன். கீழே குனிந்து சற்று நீண்ட ஒரு ஒற்றை எலும்பை எடுத்து, குழலாக்கி என் தந்தையின் மாட்சிமையைப் பாடத் தொடங்கினேன். அச்சங்கீதத்தின் இசைவு பெருகிப் பெருகி என்னைச் சுற்றிய நிலம் மொத்தமும் பரவசத்தில் நடனமாடிக் கொண்டிருந்தது.

    அந்த நாள் முழுதும், இருளடைந்திருந்தது. ஒளியும் கூட இருளைக் கூடியிருந்தது. அடங்காத அத்துறவியின் சிரிப்பொலி. ஜீசஸ் அவர் காலடிகளில் கிடந்து அழுது கொண்டிருந்தான். தீ! வாதை! கிறுக்கு! எனும் பேய்களின் பிடியில், பிணக்குவியல்களாய் நிரம்பி இருக்கும் மண்ணில் புழுக்களும், பூச்சிகளும், மாமிச உண்ணிகளும், மனித உடல்களை, மூர்க்கமாக உண்டு செரித்தன. 

    "வேண்டாம்! வேண்டாம்! ஏன்? நமது இரட்சிப்பின் நாள், அன்பின், கருணையின், களிப்பின் நாளாக இருக்கவில்லை, அதற்கான சிறு தொடுகையைக் கூடவா, நம் தந்தை நமக்கு அருளவில்லை!" ஜீசஸ் பொறுக்க முடியாது, கைகளால் தரையில் அறைந்தான்.

    துறவியின் பார்வை வான் நோக்கியிருந்தது. விண்மீன்களின் பரிசுத்த ஒளி. வானிற்கும் மண்ணிற்குமான இடைவெளி கூடிக் கூடிச் செல்வதைப் போல மயக்கு. ஊளை, சிறகடிப்புகள், கனைப்புகள், பூச்சிகளின் நிலையற்ற அரவம், காற்றின் ஜில்லிப்பு, பகல் முழுதும், எரிந்து வெந்த மண் திரும்பக் குளிர்ந்துத் தன்னைப் புதுப்பிக்கையில் உருவாகும் வாசனை எனப் பாலை நிலத்தின் அனைத்தும் உயிர்த்தன்மை கூடியிருந்தது. ஜோர்டான் நீரோட்டத்தின் நெகிழ்வு, நாணல் வெளிகள் அசைந்து அசைந்து, அந்த நீர்மையைச் உட்கிரகித்துஅத்துவான வெளியை நோக்கித் தெளிக்கும் துமி, காற்றினுள் நுழைந்து அதன் குளிர்ச்சியை தூரதூரத்திற்குப் பரப்பிக் கொண்டிருந்தது. 

    " நீ நம் மூதாதையர்களின் தீர்க்கதரிசனத்தை அறிந்தவன் தானே! நமது மீட்பர்களின் வருகை தீயாலானது. அவன் முதலில் நம் உடல்களை அழிப்பான். நாம் வெந்து சாவோம். விதைப்பதற்கு முன்னானப் பண்படுத்துதல் அது. நம் நிலங்கள் அனைத்தும் நெருப்பிட்டுக் கரியாகும். களைகளும் முட்புதர்களும் வேரோடுப் பிடுங்கி எரியப்படும். இந்தப் பொய்யையும், இழிவையும், அநீதியையும் வேறெப்படித் துடைக்க முடியும். பொய்யர்களை, வீணர்களை, மனிதத்தன்மையற்று நடந்துகொள்பவர்களை அழிக்காமல் எப்படி இந்தப் பூமியை சுத்தமாக்க முடியும். பயக்காதே! கவலையுறாதே! இது சுத்தமாக்கப் படவேண்டும். புதிய விதை, பரிசுத்தமான அந்நிலத்தில் முளைக்கப் பண்ணுவோம்!"

    இரண்டாவது இரவும் கடந்தது. ஜீசஸ் வாய் திறக்கவில்லை. மூன்றாவது இரவு அருளப்படட்டும். அந்த நாளில் தன் கேள்விக்கானத் தீர்வு கிடைக்கும் என்று அவன் நம்பினான்.

    மூன்றாவது இரவு, துறவி ஒரு பாறைக் குன்றத்தில் சம்மணமிட்டு மோனத்தில் அமர்ந்திருந்தார். வெறுமனே எதிரே அமர்ந்திருந்த ஜீசஸை நோக்கினார். அவனது உடல் முழுதும் பார்வையால் துளைத்தார். பின் தலையை அசைத்துக் கொண்டு வேதனையுடன் உள்முகமானார். அவரது ஆழந்த சுவாசத்தைத் தவிர்த்து அங்கு எந்த அனக்கமுமில்லை. நட்சத்திரங்கள் முளைத்துக் கொண்டிருந்தன. வானம் ஒரு மாபெரும் நதி போல நகர்ந்து கொண்டிருந்தது. பூமியின் ஒளியினால் அதன் நீர்மை மின்னி மறைவதே, நட்சத்திரத் திவலைகளாக மினுங்கியது. துறவியின் கண்கள் நிலைத்திருந்தது. அது வானின் சமிஞ்சைகளுக்குப் பதில் சொல்வதைப் போல வெவ்வேறு நிறம் மாறி பளபளத்தது. வெளிச்சம் நீள் அலகினைக் கொண்டப் பறவையினைப் போல மெல்ல சிறகுகள் ஒடுக்கி அவர்களைச் சுற்றி அமர்ந்தது. ஒளிரும் அவரது நெற்றி, சுருக்கங்கள் அடர்ந்து தீர்க்கமாகியது. இறுதியில் வானம் ஒளி கூடி, இருள் திட்டுத்திட்டுக்களாய்க் கரைந்து மறையத் தொடங்கியது. விடியலின் சுகந்தம் நிலத்தில் பரவியது. அவர் ஜீசஸின் கைகளை இறுக்கப் பிடித்துக் கொண்டு, அவன் பதற்றமுறும் கண்களை ஆழமாக நோக்கினார். சட்டெனக் கசப்புடன் தலை திருப்பினார். " நாணல் வெளியினுள் இருந்து நீ என்னை நோக்கி வருவதைப் பார்த்த அந்தக் கணம், என் அகம் ஒரு இளங்கன்றினைப் போல என்ன செய்ய என்று அறியாது துள்ளிக் குதித்தது. சிவந்த தலை முடி கொண்ட மேய்ப்பன், டேவிட்டை, சாமுவேல் பார்த்த அதே தருணம். அவன் எவ்வாறு உணர்ந்திருப்பான்? இதே போலத் தான் அவனது இருதயமும் துடித்ததா? ஆனால் தெரியவில்லை. இது என்ன? என்ன மாதிரியான உணர்வு என்று என்னால் விளக்க இயலவில்லை. ஆனால் இந்த இருதயம் ஒரு சதைப்பிண்டம். அது சதையையே நேசிக்கும். எனக்கு அதில் எந்த நம்பிக்கையுமில்லை. உன்னை முதல் முதல் பார்த்ததிலிருந்து உணர்கிறேன். நேற்று இரவும் அதுவே தோன்றியது. உன்னை ஆழமாக நான் சோதிக்கும் பொழுதெல்லாம், உன் கைகளைக் காணும் பொழுதெல்லாம் அது ஒரு தச்சனின் கைகளைப் போல இல்லை. ஒரு மீட்பனின் கைகளைப் போலவும் இல்லை.  மிருதுவும், உவகையும் அக்கைகளில் பொங்கி வழிகின்றன. அது பிள்ளையை அரவணைக்கும் தாயின் கைகளைப் போல, பாதுகாப்பும், கருணையும் மிக்கது. எப்படி இக்கைகளால் இந்த வலுவானக் கோடாரியைப் பிடிக்க முடியும். உன் கண்கள், அது ஒரு மீட்பனின் கண்கள் அல்ல. அது ஏன் இப்படி அல்லாடுகிறது. அதன் பதற்றம், அலைவுகள், அது பரிவுடன் என்னைப் பார்க்கிறது. அக்கண்கள் உண்மையில் என் அமைதியைக் குலைக்கிறது. ஒரு மானுடக் கண்கள் போலவே அது இல்லை. என்னால் உண்மையில் என்ன செய்ய என்று முடிவெடுக்க முடியவில்லை. தந்தையே! உன்னுடைய வழிகள் குழம்பியும், இருண்டும் இருக்கிறது.  ஒரு மென்மையானக் குஞ்சுப் பறவை, அநீதிக்கு எதிராக இவ்வுலகை, நெருப்பிலிடப் போகிறதா? நான் சதா வானத்தை உற்று நோக்கியிருந்தேன். ஒரு மின்னல் வெட்டாக, இடி முழக்கமாக, ஒரு கழுகினைப் போல இல்லையேல் ஒரு காகத்தைப் போல அல்லாது, ஒரு வெளிர்ந்த குஞ்சுப் பறவையினைக் கொண்டு நீ உன் வார்த்தைகளை எனக்களித்தாய்! கேள்வி கேட்பதாலோ, எதிர்ப்பதாலோ என்ன பயன்? உனக்கென்ன விருப்பமோ அதை நீ செய்யப் போகிறாய்?" அவர் தன் கைகளை விரித்து ஜீசஸைத் தன் உடலுடன் இறுக்கி வைத்துக் கொண்டார். அவனது நெற்றியிலும், இரு தோள்களிலும் முத்தமிட்டார். " நீயே அந்த ஒருவன் எனில், நான் காத்திருக்கிறேன். நீ நான் எதிர்பார்த்த வடிவத்தில் வரவில்லை. நான் இக்கோடாரியைத் தூக்கிக் கொண்டு நிற்பதன் பயன் என்ன? அல்லது அன்பின் பொருட்டே தேவன் இக்கோடாரியை எனக்களித்தானா? தெரியவில்லை. என்னால் முடிவெடுக்க முடியவில்லை." அவரது குரல் நடுங்கியது. "ஓரு வேளை என்ன நிகழப்போகிறது என்பதற்கான தீர்வை அறியாது நான் மரணிக்கலாம். ஆனால் நான் எனக்கு என் தந்தை வழங்கியதை சரிவரச் செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன். அதனை விரும்பியே செய்தேன்" அவர் ஜீசஸின் இருகைகளையும் பிடித்துக் கொண்டு ஆதுரத்துடன் பார்த்தார். பாரங்கள் மொத்தமும் இறங்கியிருந்தது. "போய் வா! பாலையில் உன் சொந்தத் தனிமையுடன் கடவுளை அணுகு. உனக்கான சொல்லை உள்வாங்கிக்கொள். ஆனால் இவ்வுலகத்தை தனித்து விட்டு விடாது சீக்கிரம் திரும்ப வா! இறைவனின் ஆணையுடன்!"

    ஜீசஸ் கண்களைத் திறந்தான். ஆனால் உள்முகமாக. ஜோர்டான் நதியின் நீள்வட்ட அலைகள் குமுழியிட்டு அவன் காணும் காட்சிப்படலத்தை நெகிழ்த்தியது. துறவியின் கடுமையானப் பார்வை அகலாது, அப்படியே அவரது உடல் மடிந்து கரைந்தது. மணலில் வரைந்தக் கிறுக்கல்கள், அலைப்பெருக்கில் கரைந்தழிவதைப் போல, அவன் முன் இருந்த வெளி மறைந்தது. சன்னதம் பூண்ட மனித உடல்கள், ஒட்டகங்கள் என்று எல்லாமும் உடைந்து உருகுவது வரை அவன் கண்கள் அகலாது, ஒரு மாயவெளியைக் காண்பதைப் போலத் தன் சொந்தக் காட்சிப்பிழையை அமைதியாக நோக்கிக் கொண்டிருந்தான். எல்லாம் மறைந்த பின், மண்ணும் காற்றும், வெம்மை மிகு ஒளியும் மட்டும் நீக்கமுற நிறைந்திருந்தது. பசி தலைக்கேறி சற்று மயக்கமுற்றிருந்தான். அவனது வயிறு இழித்துப் பிடித்துக் கொண்டது. நினைவுகள், எண்ணங்கள், தேவனின் சொல் என அனைத்தும் மறைந்து பசி எனும் உணர்வு, ஒரு தீயைப் போல அவனது உடலைப் பற்றியது. "எனக்குப் பசிக்கிறது!" தன் முன்னே இருந்தச் சிறிய பாறையிடம் முறையிடுவதைப் போலச் சொன்னான். தன் நீண்ட பயணத்தில், தான் உண்ட அத்தனை உணவுகளின் மணமும், சுவையும் அவனைக் கிளர்த்தியது. வரும் வழியில், தனக்கு உணவளித்த மூதாட்டியின் நரம்போடியச் சிறியக் கைகளை நினைத்தான். ரொட்டியின் மணம் நாசி நிரப்பியது. புளிப்பின், இனிப்பின் களிப்பு.  நாக்கினால் உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டான். ஊற வைத்த் ஆலிவ் பழங்கள்,  ஜென்னசரேட் நதிக்கரையில், துடிக்க துடிக்கப் பிடித்து சுட்டெடுத்துத் தனக்குத் தந்த சுவை குன்றா மீன்களின் ருசி, நுரைத்துப் பொங்கும் திராட்சை ரசத்தின் இனிய நறுமணம், மாதுளையின், பேரிச்சையின் அடி நாக்கில் தொற்றிக் கொள்ளும் இனிப்பு என, சுவைகளின் ரீங்காரம் அவனைச் சுழற்றியது. பசி எனும் ஒற்றை உணர்வைத் தவிர எதுவுமின்றி, கூசும் கண்களைச் சுருக்கி தூரத்தே வெறித்தான். அவனுள் குமையும் நெடிகள் இன்னும் பசியைக் கூட்டியது. ரத்தமும், மாமிசமும் எலும்பும் கொண்ட தன் சொந்த உடலைத் தவிர, பசிக்கு உணவாக ஏதுமற்ற நிலம், திக்கற்ற வானம். இரண்டிற்குமிடையில் ஓடிக் கொண்டிருக்கும் அந்தர நதியில், பசி எனும் சொல், ஒன்றாய் பலதாய், விரிந்து விரிந்துக் காணும் அனைத்தையும் விழுங்கி விடும் ஆக்ரோஷத்துடன் குமிழியிடுகிறது.

    தொண்டை எரிந்து அடைத்தது. மெல்ல வலியுடன் தன் உமிழ்நீரை வீச்சமான மணற்துகளுடன் விழுங்கிக் கொண்டான். உலகில் ஓடும் அனைத்து ஆறுகளின் நீரையும் குடித்தாலும் தீராத தாகம். வானிலிருந்து இறங்கி, பாறைகளையும், குன்றுகளையும், மணல் மேடுகளையும், பள்ளங்களையும் தாண்டி, இஸ்ரவேலத்தின் நரம்புகளின் வழி நிறைந்து, பல்வேறு கிளைகள் கிளைத்து இறுதியில் சாக்கடலில் கரைகிறது, இந்நிலத்தின் நீர். கிளம்பும் முன் ஜோர்டான் நதியில் கை நிறைய அள்ளிக் குடித்தபின் இங்கு வரும் வரை அவன் ஏதும் அருந்தியிருக்கவில்லை.பசியும் தாகமும் இணைந்து அவன் நாக்கை கசப்பாக்கியது. வெளிச்சத்தில் கலங்கிய கண்களைக் கசக்கித் துடைத்தான். சற்றே தொலைவில், பழுத்து நெழியும் வெயிலினுள் இருந்து இரு கருப்பு நிற முயல்கள் தத்தித் தத்தி அவன் அருகே வந்தது. இரு கைகளையும் பின்னால் பிடிமானமாக வைத்துக் கொண்டு சாய்ந்து அமர்ந்திருந்த அவன் கால்கள் வழி, இரு தோள்களிலும் பற்றி ஏறிக்கொண்டது. ஒன்று தண்ணீரைப் போலக் குழுமையாகவும், மற்றொன்று ரொட்டியினைப் போல மிதமான சூட்டுடன், புளிப்பு மணத்துடன் இருந்தது. சட்டென நிமிர்ந்து அமர்ந்தவன், வெறியுடன் அவைகளைப் பிடிக்க முயல்கையில், அது காற்றில் புகையாகக் கரைந்து மறைந்தது.

    அவன் கண்களை மூடிக் கொண்டான். பசி, தாகம் எனத் தன்னுள் உருளும் வலிகளின் பிடிமானங்களைத் தளர்த்த முயன்றான். தன்னிடம் போக்கு காட்டிக் கொண்டிருந்த மனத்தைப் பிடித்து இருத்தினான். அதன் சிதறிச் செல்ல முயலும் சொல்லை அடக்கி, ஒற்றைச் சொல்லாக்க முயன்றான். எண்ணங்கள் போதமற்றுக் குழுமியிருந்த வெளி சட்டென ஒற்றைச் சொல்லைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தது. மந்திரம் போல அச்சொல்லையேத் திரும்பத் திரும்ப முனகினான். சொல்லின் கூர்மை கூடக் கூட, உணர்வுகள் சுருங்கி, உடல் முழுதும் அதனைப் பிரதிபலித்து அதனுள் அடங்கியது. "மீட்பின் சொல்! தேவன் எனக்கருளிய ஒற்றைச் சொல்! அவன் சர்வ வல்லமை படைத்தவன் அல்லவா! ஏன்! அவன் அதனை நிகழ்த்தவில்லை. மானுடர்களின் இருதயத்தில் தன் தொடுகையால், இந்த மலர்ச்சியை அற்புதமாக அவனால் செய்திருக்க முடியுமே?. ஒரு தாவரத்தின் வெற்றுத் தண்டுகள் இலை துளிர்ப்பதைப் போல, ஒரு மாபெரும் புல்வெளி பச்சையே உடலாகப் பூத்துக் குலுங்குவதைப் போல, முட்களிலிருந்து பூவை மலரவைப்பதைப் போல, எளிதான காரியம். ஏன்? மனிதனின் ஆழத்திலிருந்து, வேர் பிடித்து ஒரு பரிசுத்தமான மலர்ச்சியை அவரால் தோற்றுவிக்க முடியாதா, என்ன?"



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக