செவ்வாய், 20 டிசம்பர், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -78

     

The Last Temptation of Christ - Nikos Kazantzakis

    திருமுழுக்கு ஜான் ஜீசஸை, உதடுகள் பொருத்தி ஆழ்ந்து முத்தமிட்டார். அவரின் வலுவானக் கரங்களுக்குள் ஜீசஸ் நடுங்கிக் கொண்டிருந்தான். எரி கங்கு போன்ற அவரின் தனல் ஜீசஸின் அகத்திற்குள் இறங்கியது. "இறுதியாக நான் என் ஆன்மாவை உமக்கு அளிக்கிறேன். நீயே அந்த ஒருவன் எனில், நான் எனக்கான இறுதிச்சொல்லுக்காகக் காத்திருக்கத் தலைப்படுகிறேன். அதே சமயம் இதுவே நாம் சந்திக்கும் கடைசித் தருணம் போல என் உள்ளுணர்வு துடிக்கிறது. ஆம்! இவ்வுலகில் நாம் சந்தித்துக் கொள்ளும் கடைசி சந்திப்பு இதுவாகவே இருக்கக் கூடும் என நான் நினைக்கிறேன்" சன்னதமெடுத்த அவரது கனத்தக் குரல் சூழலின் நிசப்தத்தைக் கிழித்துச் சென்றது. சொல், ஒரு ஆதி ஆயுதம் போல அவர்களுக்கு முன்னானப் பெரு நிலத்தைக் குத்திக் கிழித்து முன்னேறுவதை அவர்கள் இருவரும்  தன் ஆன்மாவின் நெருப்பினால் கேட்டுக் கொண்டிருந்தனர்.

    "ஆம்! நானும் கேட்கிறேன்" ஜீசஸ் மெல்லியக் குரலில் கூறினான். அவனது குரலின் மென்மை, ஒரு சேரக் குழைவும் தீவிரமும் கொண்டிருந்தது."அச்சொல்லை நான் எவ்வாறு அர்த்தப்படுத்திக் கொள்ள, தாழ்ச்சியுறுகிறேன் சகோதரரே! எம்மைப் பெலப்படுத்தும்"

        "உன் உணர்வுகளை மாற்றிக் கொள்ள முயற்சி செய்! இளைஞனே! உறுதியுடனும், திடத்துடனும் பயணப்படு. உன்னுடைய வாழ்வின் கனத்தை என்னால் அறியமுடிகிறது. உன்  புருவங்களிலிருந்து ரத்தம் வழிவதைப் பார்க்கிறேன். முட்களால் தருவிக்கப்பட்டக் கிரீடம் உன் தலையை அழுத்துகிறது. சகோதரா! வலி! வலி! என்று அதிரும் குரலினைக் கேட்கிறேன். தாங்கிக் கொள்! என் அன்பே! உன் முன்னே இருவேறு பாதைகள். ஒன்று மனிதனுக்கானது, அது பண்படுத்தப்பட்டச் சம நிலம். இன்னொன்று தேவனுக்கானது, கடினமானது. கூர்மையானக் கற்களும், வெட்டுப்பாறைகளும், பாளங்களையுமேப் பாதையாகக் கொண்டது. கடினத்தைத் தேர்ந்துகொள். அதுவே சத்தியத்தின் வழி. பயக்காதே! வழிப்பாதையின், சலனங்களினால் பாதிக்காது உனைக் காத்துக் கொள். ஒடுங்குவதும் பின்வாங்குவதுமல்ல, தைரியம்! அது மட்டுமே உனக்குக் காப்பு. அதுவே உன்னை பெலப்படுத்தும். அதுவே தேவனின் வாக்கும், சித்தமும் கூட. ஆனால் ஞாபகம் வைத்துக் கொள். இவ்விரு வழிகளுமே நம் தேவனின் பிள்ளைகள் தாம். ஆனால் தீயே மூத்தது. அதன் பிறகுதான் அன்பு பிறந்தது. அதனால் தீயைக் கைகொள். அது உன்னை வழி நடத்தும். உன் பாதையின் குரலுக்கு, தீயினால் பதிலுறு. நித்தியத்துவமான தேவகாரியம், உனக்குக் கை கொள்ள என் தந்தையிடம் மண்டியிடுகிறேன். முன்னேறு! என் சகோதரா! சத்தியம் உன்னைக் காக்கட்டும்."

    சூரியன் தலைக்கு மேலே சுழன்றெரிந்துக் கொண்டிருந்தது. விளிம்புகள் காண இயலாத, எல்லையற்றப் பாலைவனத்தின் நுனிகளிலிருந்து, கதிர்களின் பாட்டைகள், காற்றில் வளைந்து நெழியும் மணல் பரப்பில் பற்றி எரிந்தது. ஒரு சில யாத்ரீகர்கள் நதியை நோக்கி வந்து கொண்டிருந்தனர். பல நிறங்களிலான, நீண்டத் தலைப்பாகை அவர்கள் கீழை தேசத்தவர் என்று அறிவித்தது. தங்கள் கைகளிலும், கழுத்திலும் தாயத்துகள் அணிந்திருந்தனர். அது காட்டுப்பன்றியின், இல்லை ஏதோ ஒரு வனமிருகத்தின் பல்லாகவோ, இல்லைத் தாங்கள் அழித்தத் தங்களின் எதிரிகளின் கூர்ப்பல்லாகவோ இருக்கக்கூடும்,  கழுத்தில் அவர்களின் பெண் கடவுளர்களின் உருவச்சின்னங்கள் பொருத்திய, உலோகப்பட்டைகளை அணிந்திருந்த அவர்கள் எரிவே உடலாகக், கொடும் பார்வையுடன், மண்ணை வெறித்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தனர். திருமுழுக்கிட்டு ஞானம் அடைவதே நோக்கமாக துறவியின் இருப்பிடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். காடே உடலாகக் கொண்ட அவர்களின் வருகையைக் கண்டத் துறவி, தொலைவை நோக்கித் தன் கடும் குரலால் ஊளையிட்டார். அது காட்டின் சமிஞ்சை. அவர்களும் அக்குரலுக்கு எதிர்குரலாக, மிருகலயத்துடன் ஓலமிட்டனர். தங்களின் ஒட்டகங்களைத் தரையில் அமர்த்திவிட்டு அவர்கள் நதியை நோக்கி முன்னேறினர். கருணையற்ற பாலை மண்ணின் குரல் மீண்டும்  எழும்பத் தொடங்கியது. "வருந்து! தாழ்ச்சியுறு, தேவனின் வருகை அமைந்து விட்டது"

    அதே சமயம், ஜீசஸ் தன் துணைவர்கள் தூரத்தே, நதிக்கரையோரம் கால்கள் ஒடுக்கி அமைதியாக அமர்ந்திருப்பதைக் கண்டுகொண்டான். ஆனால் நதியின் ஒவ்வொரு சலனத்திற்கும் அவர்களின் அகம் அதிர்ந்து கொண்டிருந்தது. சரியாக முன்று பகல்களும் இரவுகளுமாக அவர்கள் தங்கள் குருவிற்காகத் தனித்துக் காத்திருக்கின்றனர். ஆனால் இன்னும் அவர் வருகையின் நிமித்தம் கூடத் தெரியவில்லை. திருமுழுக்கிடும் சடங்குகளும் இந்நாட்களில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்தக் காட்டுத்தனமானத் துறவி, மீள மீள அவனிடம் பேசிக் கொண்டே இருந்தார். இரவும் பகலுமாக ஊன் உறக்கமின்றி அவரின் சொல், அவனுள் செலுத்தப்பட்டது. குனிந்த தலையுடன் அச்சொல்லை ரத்தமும் சதையுமாகத் தன்னுள் உள்வாங்கிக் கொண்டிருந்தான். ஒரு  வல்லூறைப் போல, கூர்மையானப் பார்வையுடன் அவர், ஜீசஸை உலுக்கிக் கொண்டிருந்தார். ஆனால் ஏன், அவ்விருவரில் ஒருவர் மிகக் கடுமையாகவும், ஒருவர் துக்கித்தும் இருந்தனர். செந்தாடிக்காரன் ஆத்திரம் பொங்க, நதி ஒழுக்கில் கால்கள் சளசளக்க அங்கும் இங்கும் அலைந்தான். இரவு மெல்ல மெல்லக் கரையேறும் பொழுது அவன் ரகசியமாக அந்தக் குகைப் பிளவை நோக்கி சென்றான். அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை அறிந்து கொள்வது அவனுக்கு மிக முக்கியமாக இருந்தது. ஆனால் எப்படிக் கூர்ந்து நோக்கினாலும், அவர்கள் இருவரும் பேசும் முணுமுணுப்புகளைத் தவிர்த்து அவனால் எதனையும் கேட்டுணர முடியவில்லை. அங்கு தன்னைக் கலைத்தலும் அடுக்குதலும் போல, சொற்பிரவாகம் ஊற்றெடுத்து ஓடியது. பேச்சுகளின் அதிர்வுகள் கூட, நிசப்தத்தை ஊடுருவும் நீரலைகளின் மென் சலனம் போல அதிர்ந்தது.  அவனால் இன்னதென்று ஊகிக்க முடியாத ஒரு மர்மம் அச்சூழலை ஆக்கிரமித்திருந்ததை மட்டுமே அவனால் அறிய முடிந்தது. ஆனால் அவன் ஒன்றைக் கவனித்தான். அது ஒற்றைக் குரல். பல சமய்ம் அந்தக் காட்டு மனிதரின் குரலைத் தவிர்த்து வேறு ஒன்றுமே அங்கு நிகழாதது போலத் தோன்றியது. ஜீசஸ் தன்னால் இயன்றவரை, அவரின் சொல் எனும் தடாகத்திலிருந்து தனக்கானப் பாதையைத் தேர்ந்தெடுக்கும், சொல்லினை முக்கி எடுத்துக் கொண்டிருக்கிறான் என்று யூதாஸ் நினைத்துக்கொண்டான். அவன், அருகிருந்த பாறைப்பிளவினுள் அமர்ந்து கொண்டு வானத்தை வெறித்தான். இருளின் ஊடுபாவுகள். மெல்ல மெல்ல தன்னை இழைத்து இழைத்துக் கோர்ப்பத்தை அமைதியின்றிப் பார்த்தான். "எனக்கே என் மேல் வெறுப்பாக இருக்கிறது, வெட்கக்கேடு! என்னை வேண்டுமென்றே அவர்கள் தவிர்த்து விட்டு, இஸ்ரவேலத்தின் விடுதலையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் அந்த ஞானத்துறவி என்னிடமே,  தன் கோடாரியை அளித்து, இஸ்ரவேலத்தைக் காக்கும் பொறுப்பைக் கொடுத்திருக்க வேண்டும். அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவனும், பொருத்தமானவனும் என்னைத் தவிர யாருளர் இங்கு. என்னாலேயே இந்நிலத்தின் வலியை உள்ளூற உணரமுடிகிறது. நிச்சயமாக அந்தப் பாவப்பட்ட ஆட்டினால் அதை அறியக் கூட முடியாது. எந்த அவமான பாவமுமின்றி அவன் அனைவரையும் சகோதரர்கள் என்றல்லவா சொன்னான். நாசமாய்ப் போகட்டும். நம்மை வதைப்பவர்களும், நாமும் ஒன்றாம். இஸ்ரவேலத்தவர்களும், ரோமர்களும், கிரேக்கர்களும் ஓரு தாய்ப் பிள்ளைகளாம். பைத்தியக்காரன். சாத்தான் அவர்களை இரட்சிக்கட்டும்."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக