வெள்ளி, 27 டிசம்பர், 2019

போதி

"நான் உடலாகிறேன்
உடல் கொண்டு உன்னைத் தொடுகிறேன்
நான் உணர்வாகிறேன்
உணர்வைக் கொண்டு உன்னிடம் மன்றாடுகிறேன்
நான் மனமாகிறேன்
மனம் கொண்டு உன்னைப் பிரதிபலிக்க முயல்கிறேன்
நான் கருத்தாகிறேன்
அதனால் உன்னை மகா காயம் என்று சொல்லிக் கொண்டு திரிகிறேன்"

உறக்கம் ஒரு மென் பட்டுத் துணி போல காற்றில் அலையாடிக் கொண்டிருந்தது. இனிய உறக்கம். அது உறக்கம் மட்டுமேயானது. அதனால் அலைகளற்றது. கடல் கொண்டது. நிலமற்ற வெளியில் தவழ்வது.

கண்டன் அதை அறிந்திருந்தான். "அவன் நீயே அது" என்றான்.

தர்ம சக்கரம் சுழன்று கொண்டே இருந்தது.

நிலையாமை
சாரமின்மை
அனிச்சை

அது பொருளற்றிருந்ததை அவன் உணர்த்திக் கொண்டிருந்தான்.
ஒரு மண்டலம் அவனை அறிய. அவன் அறவாழி என்று சொல்லிக் கொள்ள சரணம் கூவுகிறேன். அவனிடம் கேட்க வேண்டிய கேள்விகளை இந்த பதினெட்டு வருடங்களில் மொத்தமாய் தொகுத்துக் கொண்டேன்.

முதல் கேள்வி
வாழ்வென்பது என்ன?'

அவன் மறு கேள்வி கேட்டான்

உடல் கொண்டு அறிவதா?
உயிர் கொண்டு அறிவதா?
அறிவதால் அறிவதா?

அவன் தொடர்ந்தான். உடல் ஒரு தொடர் நிகழ்வு. உயிர் ஒரு தொடர் நிகழ்வு. அறிவதும் ஒரு தொடர் நிகழ்வு.

ஆனால் தேடலற்ற ஒன்றில் நாம் அதை அறிவோம். அறிவதும் அதுவும் ஒன்றாய் ஆகிய பொழுதில் வெறுமனே இருப்பதைத் தவிர ஏது செய்வது.

நானே அதற்கு பதில் என்றான். பின் நானற்றதே அதுவும் என்றான். பின் இரண்டுமற்றதும் அதுவே என்றான்.


இரண்டாம் கேள்வி
நோக்கம் என்பது என்ன?

அப்படி எதுவுமில்லை என்றான்.

அதனை இவ்வாறு தொடர்ந்தான். தன்மை என்பதை உருவகித்துக் கொள்ள உன்னிடமும் என்னிடமும் உள்ளது சொல். சொல் எனும் மொழி. மொழி எனும் தொடர்பு. தொடர்பெனும் நிகழ்வு. அதனால் நோக்கம் என்பது அதன் தொடர்புறுத்தலன்றி நிலை நிற்க வழியில்லாதது. அதுவே ஒரு வழியாக வாய்ப்புமில்லாதது. தன்னைத் தானே குவித்துக் கொள்ள விளையும் ஒரு மனத்தின் பல்லாயிரம் பிம்பத் தோற்றங்களிலிருந்து தன்னை உருவாக்கிக் கொள்ள மனம் முயலும் ஒரு பிரதியன்றி வேறில்லை என்றான்.


மூன்றாம் கேள்வி
அறிய இயல்வது யாது?

அறிதல் என்பது இயல்வதால் அன்று. அது தருவிக்கப்பட்டது. அனைத்து உயிர்களுக்கும் அது அதுவாகி நிலைப்பது. அதனால் அறிவது. உன்னுடையதும் பிறிதொன்றும் எப்பொழுதும் ஒன்றல்ல. அதனால் அறிவதும் அத்தகையதே.

ஆனால் சந்தித்துக் கொள்ளும் புள்ளிகளில் அதனை நீ பரஸ்பரம் அறிந்திருக்கக் கூடும். அது நான் அறிந்தவை அல்ல.


நான்காம் கேள்வி
அது என்பது?

ஆம். நாம் அப்படியே உணர்கிறோம். அதன் மூலமே சொல்லைத் திரட்டினோம். அதனைக் கொண்டே அளக்கப்பட அறிந்திருக்கிறோம். அதனாலேயே மிகுதியாய் பயக்கிறோம். அதனால் அதன் காலடியில் நம் அனைத்தையும் சமர்பிக்க கடமைப் பட்டிருக்கிறோம் நம் மூதாதையர் வழி கொண்டு. அதனால் நான் அதனை இப்படி சொல்ல முயல்கிறேன்.

"அது நீயே"


ஐந்தாம் கேள்வி
மரணம் என்பது?

நிகழ்வின் தொடர்ச்சியில் நீ நின்று கொண்டிருக்கிறாய்!

நீ என்பது யார்?

சொல்? நீ யார்?

கை விடப்படும் முன் உன்னிடம் என நீ என சொல்லிக் கொண்டிருப்பது யார்?

அதிலிருந்தே நீ வரையறுக்கப்படுகிறாய்?

அதை நீ முழுமை என சொல்லிக் கொள்ள விருப்பப்படுகிறாய்?

அது இல்லாத பொழுது உன்னில் உருவாகும் விசனத்திலிருந்து உன் கர்மம் தொடரப் பணிக்கப்படுகிறது. அதனால் ஆசுவாசப்படு.

நீ என்பது ஒரு தொடர் நிகழ்வு.

அனைத்தையும் போல!


ஆறாம் கேள்வி
தூய்மை என நீ கொண்டது யாது?

அது விடுபடலன்றி அனைத்தையும் செரித்துக் கொள்வதை. அதனால் மட்டுமே அறிகிறேன் அது தூய்மையானது என்று. அதனாலேயே அது தனித்த இருப்பென்பதுமில்லை என்பதையும், தேடல் நின்ற பொழுதில் ஆல் வேர்கள் பற்றிப்படர்ந்த பெருங்காடெனும் ஒற்றை மரம் எனவும் சொல்லிக் கொண்டு தெரிவு கொள்ள முயல்கிறேன்.


ஏழாம் கேள்வி
காலம் என்பது?

அறிதலற்றது.


எட்டாம் கேள்வி?
உடல் என்பது நானா?

ஆம். அது நீ தான். அதனால் தான் உன்னிடம் உள்ளது. அதனாலேயே உன்னை விட்டு செல்வது கூட. அதுவும் நீ என்று அறிவாய்.


ஒன்பதாம் கேள்வி?
நிலையானதை நான் விளைகிறேன்?

அப்படியெனில். நீ அதனிடம் தான் அதைக் கேட்க முடியும். உன்னை நான் என்று நீ சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அது நீயற்ற ஒன்றாய் ஆகி விடுகிறது. அந்த நீயற்ற ஒன்றை ஒரு மெய்யிருப்பாய் உன்னிலிருந்தே நீ உருவேற்றுகிறாய். அதற்கு அனைத்தையும் தருவிக்கிறாய். உன் ரத்தமும் சதையும் கொண்டு அதற்கு உயிர் கொடுத்து, உணர்வுகள் ஏற்றி உன் எண்ணங்கள் அனைத்திற்கும் ஒரு பருப் பொருள் வடிவை உன் முன்னே கொண்டு உரு கொடுத்து விட்டாய். அதைக் கடவுள் என சொல். அதன் மீது உன் நம்பிக்கையை ஏற்று. அதனை உன் நிலையின்மையின் நிலையிருப்பாய் உருவகிப்பாயாக. அதனால் அதுவே நீ விளைவது. அதனிடம் நீ அனைத்தையும் அறிவாய். ஒன்றைத் தவிர. அது வெறும் வெளிச்சட்டகமாய் இருக்கும் பொழுது.


பத்தாம் கேள்வி?
அன்பென்பது?

அது தர்மமாகப் படுவது. விதி விலக்குகளற்றது. அதனால் அறிதலற்றது.

பதினொன்றாம் கேள்வி?
தர்மம் என்பது?

வெளி என்பதைக் கொண்டு அதனை சொல்ல முடியுமா என்று முயல்கிறேன். என் கடைசி நாட்களில் நான் அதனுள் தான் உழன்று கொண்டிருந்தேன். உண்மையில் என் வரையறைக்குள் என் அறிதலிற்குள் அது இல்லை என்பதை நான் நன்றாகவே அறிந்திருந்தேன். ஆனால் அதனை நான் இவ்வாறு கூறிக் கொண்டேன் பால்குன நதியில் அன்று தன்னந்தனிமையில் நிலவொளியின் பிரதிபலிப்பில் அதனை அறிந்து கொண்டேன். இருப்பற்றிருப்பதின் தோற்றத்தை ஒரு வெளிச்சம் மட்டுமேயாக நான் நினைத்துக் கொண்டேன். மனம் தன் ஆடி பிம்பங்களில் பத்தி விரித்துக் காட்டியது.

நான் அவர்களிடம் இவ்வாறு சொன்னேன்.

நிலையின்மையினால் உண்டாகிய முழுமையின் தரிசனத்தில் வெறுமனே கரைந்து கொள்ளுதல்.

ஆம். கடல் அலை ஏதுமற்றிருத்தல். இல்லையேல் அது இரண்டுமே ஒன்று தான் என்று உணர்தல். ஒன்றை ஒன்று சமணிட்டுக் கொள்ளும் இருமைகளையே நான் தர்மம் என்கிறேன்.

ஆம். அதுவே தர்மமாக இருக்க இயலும்.

பன்னிரெண்டாம் கேள்வி?
துயரம் என்பது

இருப்பின் பொருட்டு அதன் இல்லாமையிலிருந்து அதை வரையறை செய்ய விளைகிறேன்.

எதிரீடுகளுக்குள் அதனை பெருக்கிக் கொள்வதை மட்டுமே நான் என் சொந்த அனுபவத்திலிருந்து அறிந்தது. ஆனால் நித்தியம் என்பதன் கூறுகள் அதில் இல்லாமலில்லை. ஆம். ஒரு நிலையான நிச்சயத்துவம் என்று ஏதுமில்லை. அதனால் அதிர்வுகளினை ஏற்கும் பொழுது சமன் குலைவதும் இயல்பே.

அதனதன் இயல்புகளில் அதனை உள்வாங்கிக் கொள்ளுதல். மென்மேலும் அதன் அடிப்படையினை நோக்கி கூர்ந்து செல்லுதல். அங்கு ஏதும் அற்று இருக்கிறது.

ஆம். அதனை துயர் என்றும் சொல்லிக் கொள்ளலாம். நீ நான் நாம் இங்கு அறிதல் எனும் சொல்லைச் சொல்லிக் கொள்கிறோம். அது மனம் என்பதிலிருந்து தொடங்கியது. அதனுள்ளேயே அடங்குவதும் கூட.

பதின்மூன்றாம் கேள்வி
விவேகம் என்பது

காரண காரியங்களற்றிருப்பது. கட்டற்றதையும் கருணையையும் ஒரு சேர உணர்தல் அது.

பதினான்காம் கேள்வி
கருணை என்பது

உள்வாங்கிக் கொள்வது. அதனால் இலக்கு என்ற ஒன்று இல்லாதது. உணவும் மலமும் எங்கும் ஒன்றாயிருந்தது என்பதை அறிவாயா? அது ஒன்றின் வெவ்வேறு கூறுகள். ஆனால் ஒரு நுட்பமான வேறுபாடு. முன்னதின் காலம். அது வரையறுக்கப்படுவது நாம் வகுத்துக் கொண்டிருக்கும் காலத்தை சார்ந்து. அதனால் நாம் அது இவ்வாறு என்று நினைத்துக் கொள்கிறோம். இலக்கற்ற ஒன்றிடம் நாம் மன்றாட்டு செய்யலாம். ஆனால் அதன் எதிர்வினைகள் உன் உடன்பட்டு இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமுமில்லை. தன்மை மற்றமையை சார்ந்து அதில்லை.


பதினைந்தாம் கேள்வி
பொருள் என்பது

அப்படி நீ காட்சிப்படுத்துவதும் காண்பதும் நிலைத்தன்மையற்றது. ஒரு நீடித்த ஒழுக்கோடத்தின் ஒரு புள்ளியில் நீ அதைக் காண்கிறாய். மற்றொரு புள்ளியில் அது வேறொன்றாகவும்.

பதினாறாம் கேள்வி
தரிசனம் என்பது

அறிந்து கொண்டதை ஸ்தூலப்படுத்த முயல்வது. அது அதன் பல்லாயிரம் கரங்களுடனும் விழிகளுடனும் நம்மை நோக்கிக் கொண்டிருக்க உந்துவது. இன்னும் இன்னும் என்று பெரிதாகிக் கொண்டே செல்வது. அதனாலேயே வழித்தடம் உண்டானது. தனித்தன்மைகளை உருவாக்கிக் கொண்டோம். அதைப் பேணத் தொடங்கினோம். குழுவாகினோம்.

அது தன்னுள் பெருகிப் பெருகி ஒற்றைபெரும் பரப்பாய் ஆனது. ஒன்றை, ஒன்றே ஒன்றை அது தவர விட்டிருந்தது.

பெரிதாகும் தோறும் அது எப்பொழுது உதிர்ந்து விடுகிறது.

பாதையற்றிருப்பவனே பயணம் செய்யத் தகுதியானவன்.

பதினேழாம் கேள்வி
ஆசை என்பது

நான் என்பதிலிருந்தே அதைத் தொடங்கினேன். ஒரு வேட்டை மிருகம் போல அதைத் துரத்திச் சென்றேன். உடல் உணர்வு மனம் கருத்து என்ற சொற்களிற்குள், ஒவ்வொன்றிலும் அதை நான் அறிந்திருந்தேன். கட்டுப்பாடின்மை ஒரு சேரத் தருவது அது. சுதந்திரமும் நிலையின்மையும். தன்னைத் தானே உண்பது போல உண்டு கொண்டிருப்பதை, காலமற்ற வெளியினுள் கால்கள் கட்டுண்டு சீழ் பிடிக்க துர்நாற்றம் கப்ப, சொந்த மலத்தினுள் உருண்டு திளைப்பதை, இன்னும் இன்னும் என்று கண்கள் மிளிர என் முன்னே அது காத்திருப்பதை.

"உறக்கமற்றவனின் இரவுகள் மிக நீண்டவை"

இப்பொழுதும் உணர்கிறேன். விடுபடல் என்பது அர்த்தமற்ற ஒன்று. அப்படி ஏதும் உயிர்களுக்கு இல்லை. ஏற்றுக் கொள்ளுதல். தன் முன்னே பல்லாயிரம் ஆடி பிம்பங்களுக்குள் இன்னும் பலகோடிகளாய் பெருக்கி வைத்திருக்கும், இருப்புகளை அடையாளம் காண்கிறேன். ஒவ்வொன்றிலும் நான் என நான் சொல்லிக் கொள்வதை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இது ஒரு விளையாட்டு என்பதை அறிகிறேன். ஆம். அந்த சாயைகளற்ற நான் யார்? அப்படி ஒரு நான் என்பதே இல்லை. உண்மையில் நான் என்பதுமில்லைதானே.

"இருள் என்பதும் ஒளி என்பதும் ஒன்றுதான்" இரண்டும் ஒன்றின் இரு கூறுகள். ஒன்றை ஒன்று நிறைத்துக் கொள்பவை.

பதினெட்டாம் கேள்வி
நிர்வாணம்

மூப்பன். வெறுமனே படுத்துக் கிடக்கிறான். சங்கொலியும் முழவும் ஒரு சன்னமான மலைச்சுனை போல ஒலிந்து கொண்டிருந்தது. அவன் தன் கடைசித் தருணத்திலிருக்கிறான்.

பிள்ளைகளுக்குள் கொண்டாட்ட மன நிலை. எங்கும் கத்தலும் கூச்சலும் ஆட்டமுமாய்.

நடுவே தீ மூட்டி ஆடிக் கொண்டிருந்தனர்.

அவன் தன் கடைசிச் சொல்லை முடிக்க விரும்பவில்லை. அது ஒரு சொல்லாக இருக்க அவன் விரும்பவில்லை. தன் பிள்ளைகளை தான் வீற்றிருக்கும் மேட்டிலிருந்து கீழே பார்த்தான். முழக்கம் அவன் செவிகளை அடைத்து நிரம்பியது.

இருந்தும் சொல் எப்பொழுதும் மனிதனை விட்டுவிடுவதில்லை.

அவன் தன்னுள்ளே அதனை சொல்லிக் கொண்டிருக்கிறான். அது பெருகுகிறது நிரம்பி வழியத் துடிக்கிறது.

சயனிக்கிறான். அதனை சொல்லாக்காமல் விடுக்கிறான். அதனால் அவனே அது.

"மகா காயம்"




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக