புதன், 14 பிப்ரவரி, 2018

மாடத்தி

காட்டுக்குருவியைப்  போல கூடணைகிறது
இந்த இரவு.
இரையெடுக்கும் மலை நாகமாய் சுருண்டு மலங்குகிறது அதன் நிழல்.
ஆகாச நதி,
பரல் துள்ளத் துள்ள,
மதமதக்கிறது கழி ஓதம்.
நான் பூசிக் கொண்டிருக்கிறேன்,
இந்த கொழும் கரும்பசையை.
என் தெய்வத்திற்குள் உடல் புக்கிறேன்.
புடைத்த என் விழிகளில் ததும்பத் ததும்ப விரிகிறது அவள்.
சாபம் துளிர்க்கும் கொடும் முட்களால் தலைக்கிரீடம் சூட்டுகிறேன்.
யார்? யார்? எங்கு? எங்கு?
அவள் சொற்கள்
சொரியச் சொரிய விரிகிறது.
மதலைச் சளுவையாய்
நிலம் சொட்டச் சொட்ட ஏந்திக் கொள்கிறது விரிவான்.
காலம் சப்பிச் சப்பித் தீர்ந்த பின்
கிடைக்கல்லின் முன் பலிப்பிரசாதமாய்  எஞ்சுகிறது நான்.
நதிக் கரையின் இருமுனையிலும்
சிறகுள்ள இரு கைகளால் அள்ளி அள்ளி விழுங்குகிறாள்
அவள்.

செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

கன்னியாகுமரி

இந்த எரிச்சுனையின் கரையில்
கால நேரமின்றி
மழுங்கிக் கிடக்கிறது நான்.
உன் பாசி பூத்த படித்துறையில்
தேகம் தழுவிக் கரையாமல்
மீதமிருக்கும்
அழுக்கு நுரைகள்.
அந்தியின் கழுத்திறுக்கிய
தாம்புத் தடத்தில்
நீ வருடிச் சென்ற ரேகைகள்.
என் உச்சந்தலையில் நீ பதித்த கால்தடம்.
உன் பாவாடைத் தும்பை
நான் அதக்கிய
உமிழ் நீர் மழையுடன்
இருக்கிறது நீ.
சுற்றிலும் வற்றிய பாழ் குளத்து நடு மண்டபம்
என் தனிமை.
தெப்பத் திருவிழாவில்,
உன் பாதத்திற்கடியில் ஊறி நிரம்புகிறது நான்.
கால நேரமற்று.

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

மிக மிகத் தூய்மையானது!?!?

பக்கெட்டிற்குள் அகப்பட்ட
எலிக்குஞ்சைப் போல இருக்கிறது
என் காதல்.
நாள் முடிந்த பின்னிரவில்
ஆண்மையின் புகார்களிலிருந்து
மெல்ல மெல்ல மேலெழும்பும் அது,
தன்னை முழுக்கடிக்கும்
பெரிய குமிழிகளைத் தேடிச் சோர்கிறது.
ஒரு சமயம் இதன் பொருட்டு
நன்றியுணர்வோடு பெருவிரலை நக்கும்.
பின் வெறியுடன் முன்னம் பற்களால்
கவ்வி விழுங்கும்.
மிகத்தூய்மையானது என்ற ஒன்றை
நான்  இந்தக் காதலைக் கொண்டு
மீட்க நினைத்த
ஒரு மத்தியான வேளையில் மீன் முட்களைக் கரக்முரக்கென கடித்துக் கொண்டிருந்த
பூனையிடம் இதைப் பற்றி வினவினேன்.
அது தன் சிவந்த நாக்கினால் உடலை
அழுத்தி அழுத்தி நக்கத் தொடங்கியது.
ஒரு வேளை அதுதான் பதிலோ!

முடிவுறாதது

இந்த இசைக் கோர்வைக்குள் பதுங்கும் உன் முத்தங்கள்.
நினைவுக் கடலில் தவற விட்டு
ஒவ்வொரு அலைமீறலிலும்
விரல்களுக்குள் அகப்பட மறுக்கும்
உன் பிசுபிசுப்பு.
இந்த அந்தியின் நிறத்தில்
மெல்லத் தீற்றும் வான் மொழியில், வெண்ணுருவாய் என் கடலுக்குள் ஒலிக்கிறது
உன் குரல்.
முடிவுற்ற பின் அமையும் முடிவுறாத்தன்மையுடன் எஞ்சியிருக்கும்
இடைவிடாத முத்தச் சத்தம்.

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

அனைத்தும் உதிர்ந்த பின்

அனைத்தையும் உதிர்த்த ஒற்றை மரம்.
கைவிடப்பட்ட நகரின் வரைபடம் போல
நிலத்தில் கிடக்கிறது.
அந்த நகரில் வானம் தொலைத்த சிறகுகளின் வழிகள் இருந்தன.
பூமியைத்தேடும் தூவிகள் பிறாண்டிய புதைகுழிகளைப் பார்த்தேன்.
நடுமையமான இளைப்பாறும் பிரதேசத்தில்
இடைவிடாது கூவிக் கொண்டிருந்த
அந்த இணைப் பறவையையும்.
ஆனால் அதன் எல்லைகளை என்ன செய்வது.
இந்த இரவின் நிறத்தில்
அதன் நிழல்
கூட்டில் பசியுடன் அலைக்கழியும் குஞ்சுகளைப் போல குமைகின்றனவே.