புதன், 14 பிப்ரவரி, 2018

மாடத்தி

காட்டுக்குருவியைப்  போல கூடணைகிறது
இந்த இரவு.
இரையெடுக்கும் மலை நாகமாய் சுருண்டு மலங்குகிறது அதன் நிழல்.
ஆகாச நதி,
பரல் துள்ளத் துள்ள,
மதமதக்கிறது கழி ஓதம்.
நான் பூசிக் கொண்டிருக்கிறேன்,
இந்த கொழும் கரும்பசையை.
என் தெய்வத்திற்குள் உடல் புக்கிறேன்.
புடைத்த என் விழிகளில் ததும்பத் ததும்ப விரிகிறது அவள்.
சாபம் துளிர்க்கும் கொடும் முட்களால் தலைக்கிரீடம் சூட்டுகிறேன்.
யார்? யார்? எங்கு? எங்கு?
அவள் சொற்கள்
சொரியச் சொரிய விரிகிறது.
மதலைச் சளுவையாய்
நிலம் சொட்டச் சொட்ட ஏந்திக் கொள்கிறது விரிவான்.
காலம் சப்பிச் சப்பித் தீர்ந்த பின்
கிடைக்கல்லின் முன் பலிப்பிரசாதமாய்  எஞ்சுகிறது நான்.
நதிக் கரையின் இருமுனையிலும்
சிறகுள்ள இரு கைகளால் அள்ளி அள்ளி விழுங்குகிறாள்
அவள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக