புதன், 5 ஜூன், 2019

கஞ்சா


நீள் பட்டைக் கோடு. செந்தீற்றலாய் உருகி விழுந்து கொண்டிருந்தது. மஞ்சள் காவி வெண்மை பச்சை கருமை நீலம் குழைந்து குழைந்து ஓடியது. சுழல் நடுப்புள்ளியிலிருந்து வண்ணங்கள் முளைத்துக் கொண்டே இருந்தது.
“முன்பு ஒரு பயணத்தில் விண்மீன் உறங்கும் நேரத்தில்”
“முன்பு ஒரு பயணத்தில் விண்மீன் உறங்கும் நேரத்தில்”
தப்பித்துக் கொள்ள முனைவது போல, கடல் தன் பல்லாயிரம் கரங்களால் கரையைப் பற்றிக் கொள்ள முயன்று கொண்டே இருந்தது. அலைகளின் நகங்கள் பழுத்து ஒடிந்து கொண்டிருந்தது. செம்பழுப்புக் கோளம், பட்டைத் தீற்றல். வண்ணங்களின் ஒழுங்கு குலையக் குலைய உருகிய சுழல் பந்து, விசைந்து தலைக்கு மேலே குதித்து கால்களுக்கடியில் குப்புற விழுந்தது.
தன்னைச் சுற்றிய மோனம் அவிழ்ந்து பேரிரைச்சல். மெல்ல அடுத்த இழுப்பு, கழுத்துக்குள் புதைந்த கனத்த புகை உடலினுள் அமைதியற்று அலைந்து என் மார்பினுள் ஒரு தனித்த உயிர் போல துடிக்கத் தொடங்கியது.
புற்கள், எண்ணிலடங்கா தூரம் அதன் நுனியிலிருந்து முளைத்து நெளியும் பல வண்ணப் புழுக்கள். மஞ்சள் நிறப்புழுக்கள் நீர்த்தாரைகள் போல இண்டு இடுக்குகளெல்லாம் ஓடிக் கொண்டிருந்தது. இடுப்புக்கு கீழே ஒன்றுமே இல்லாதது போல, கால்களற்று மிதந்து கொண்டிரூந்தேன்.
மூர்க்கமாக ஒரு அடி, மூக்கிலிருந்து அடர்ந்து குருதி வழிந்தது. தலை குப்புறக் கிடந்ததில் முகமெல்லாம் சிவந்திருந்தது. மெல்ல அடுத்த இழுப்பு.
இந்த முறை, மணல் மேடுகளுக்குள்ளிருந்து சில் வண்டுகளைப் போல உருள் உருளாக உடல்கள். நிறங்களற்ற உடல்கள். இல்லை நிறமிருந்ததா? என்ன நிறம் என்று யூகிக்க முடியவில்லை. ஆண் பெண் ஆணிலி பெண்ணிலி என்று பிரித்தறிய முடியாத உடல்களின் பெருக்கு. நடுவே அதே வட்டச் சுழல். அது ஒரு மாபெரிய சக்கரம் போலவும், அதனுள்ளிருந்து இந்தப் பெருக்கு துளிர்த்து பெருத்துக் கொண்டே இருப்பது போலவும் இருந்தது.
தாகம் கருத்த உருவமாய் என் தலை மேல் ஏறி அமர முயற்சித்து, வழுகிக் கொண்டிருந்தது. அதன் பெரிய உடல் மிருக வாசனையுடன் முணகிக் கொண்டிருந்தது. ஒரு கரடியைப் போல ரோமங்களடர்ந்த அதன் உடலிலிருந்து பழுப்பு நாகங்கள் மொலுமொலுத்து என் உடலினுள் இறங்கிக் கொண்டிருந்தது.
கண்ணாடியைப் பார்க்கிறேன். என் முகம் பலூன் போல விரிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. வாஷ் பேசினில் வாய் மூக்கு கண்கள் காதுகள் எல்லாம் தனித்தனியே மிதக்கிறது. கழிவுப் போனியினுள்ளிருந்து எட்டிப் பார்த்தது என் குறி. சுற்றிலும் நான் சுவர்களிலிருந்தும் எட்டிப் பார்க்கின்றன நிறங்களற்ற உடல் பொதிகள்.
விளக்கை அணைக்க முயற்சிக்கிறேன். நீண்ட ட்யூப் லைட்டுகள் சுருங்கிச் சுருங்கி விந்துத் துணுக்குகளைப் போல உத்திரத்தில் சொட்டிக் கொண்டிருந்தது. குண்டு பல்புகள் விட்டில் பூச்சிகளாய் ஒளிர்ந்து ஒளிர்ந்து சிமிட்டிக் கொண்டே, மின் விசிறிகளுக்கிடையில் அரைபட்டுக் கொண்டிருந்தது. கால்களுக்கிடையில் சதுப்பு நிலமாய் ஆகியிருந்தது. புதையுண்ட பாதங்களில் நசிந்து உடைந்து, உடைந்த இடத்திலிருந்தே குத்தி உயர்ந்தது மரங்கள். மரங்களில் இலைகளுக்கு பதிலாய் கட்டுண்டு கிடந்தன சிறகுகள். மரங்களின் வேர் முண்டுகளில் சுருக்கிட்டு தலை கீழாய் தொங்கிக் கொண்டிருந்தன அதன் கூடுகள். நான் மண்ணுக்கடியிலிருந்து வான் நோக்கி உயர்ந்து கொண்டே இருக்கும் மரங்களைக் காண்கின்றேன். அதன் உள்ளறைகளின் இடைவெளிகளில் பற்றிப் படர்ந்து கொண்டிருந்தன முகில்கள். வானம் மாபெரும் கடல். அதன் அலை நுனிகளிலிருந்து பொழியும் வண்ணங்களின் மழையிலிருந்து, துளிகள் என் உடலெங்கும் நொதித்து உப்பு வீச்சத்துடன் உள்ளிறங்கியது. உப்பு வீச்சம் என் சொந்தக் குருதியாய் இருந்தது.
தாகம் அடங்கும் வரைக் குடித்துத் தீர்த்தேன். கண்கள் இருக்கும் பகுதியில் விதைகளும், அதிலிருந்து முளைத்த மரங்களுமாய் நிறையத் தொடங்கியது என் உடற் காடு. காட்டின் மேட்டு நிலத்திலிருந்து வெண் பட்டுத்திரை போல மஞ்சள் கோளம். நான் நான் என்று சொல்லிக் கொண்டு என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.
“விண்மீன் உறங்கும் நேரத்தில்”
“முன்பு ஒரு பயணத்தில்”
இப்பொழுது மேலும் ஒரு இழுப்பு.
கால்களுக்கடியில் பச்சை நிறம். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை பச்சைக் கடல்.
பச்சைப்புள்ளிகளிலிருந்து அந்த மலை நுனி தெரிந்தது. உச்சியில் தேங்கியிருந்த குட்டையின் உள்ளிருந்து எழுந்து வந்தான் அவன். தன்னை திகம்பரன் என்றான். சுற்றிலும் புல் பூண்டுகளற்ற மொட்டைப் பாறையின் மேற் தட்டுகளிலிருந்து குளிர் ஒரு மலைச்சுனை போலவே அவனைச் சுற்றி தழும்பிக் கொண்டிருந்தது. அம்மணம் காலங்களற்றதாய் அவனுள் நிறைந்திருந்தது.
மெல்ல என் காதுகளில் முணங்கினான்.
அம்மணமற்றதே நிரந்தரமானது
உடலன்றி ஏதும் தரப்படுவதில்லை
காலமற்றது உடல் ஒன்றே
சிறகுகளற்ற மரங்கள் எங்கும் முளைப்பதேயில்லை
கல் விளக்கின் ஒளியில் நான் மட்டுமே நின்று கொண்டிருந்தேன். தூரத்துப் பறவையின் கேவல். கூகையாக இருந்திருக்கக் கூடும். குட்டையினுள் அலைகளின் துடிப்புகளில் கரைப் பாசிகள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தது.
கரையான் புற்றுகளிலிருந்து நாகமுட்டைகள் பொரிந்து வெளிவந்தது. குஞ்சுகளின் கண்களில் உயிரின் நர நரப்புடன் மொலுமொலுத்து படர்ந்து மண் துகள்கள் படர உருண்டது. சுழல் தெரியத் தொடங்கியது.
அது மனித சஞ்சாரமற்ற நிலம். தலைக்கு மேலும் கீழும் நீல நதிகள் பாய்ந்தோடும் காடு. மரங்களின் சிறகுகள் வேரை இழுத்து இழுத்து உயர்ந்து கொண்டே இருந்தது. பாதாளங்களிலும் விண்ணிலும் மரமன்றி வேறு ஒன்றில்லாத படி நிறைந்து முழுங்கின.
“முன்பு ஒரு பயணத்தில்
விண்மீன் உறங்கும் நேரத்தில்”
கனவுகளற்ற வெளியில் இன்னும் பனி படர்ந்திருந்தது. கண்ணுக்கு தெரியாத நாட்களை அங்கு புதைத்து மூடி விட்டு திரும்பி பார்க்காமல் சென்று கொண்டிருக்கிறேன்.
என் கனவுகளின் உடைகளினால் உன் அம்மணத்தை மூடி விடுகிறேன்.
நீ நிரந்தரமானவனாகு!
நான் தேவனாக விரும்பவில்லை. என்னை விட்டு விடேன். நடுனடுங்கும் விரல் நுனிகள் பதற்றத்துடன் என் கழுத்தை தொற்றிக் கொண்டு பின் இறுக்க அணைத்துக் கொண்டது.
மதுக்கோப்பையில் அந்த கருங்க்சிவப்பு நிறத் திரவத்தை ஊற்றினேன். சோடா வேண்டாம் என்று மறுத்து விட்டார். தண்ணீர் பாதி டம்ளர் நிறைய ஊற்றி விட்டு சியர்ஸ் அடித்துக் கொண்டோம். மெல்ல உதட்டருகே கொண்டு சென்று முழுதுமாய் உறிஞ்சிக் கொண்டார்.
உன்னில் பாவம் செய்யாதவன் எவனோ அவனே முதல் கல்லடிக்கு தகுதியானவன் என்றார்.
ஆம்! ஆம்! என்று உள்ளூற நகைத்துக் கொண்டேன்.
நீ அங்கு தன்னந்தனியே தொங்கிக் கிடந்ததும் அதனால் தான் உனக்கு தெரிகிறதா?
நான் திரும்ப வரவேயில்லை என்று உனக்காகவாது தெரியுமா?
எனக்கு தெரியும். நீ உடல் கொண்டு வரவில்லை என்பது. ஆனால் நீ நிச்சயமாக் திரும்ப வந்திருந்தாய்.
என் அப்பா எப்பொழுதும் தன் டைரியின் முதற் பக்கத்தில் ஒன்றை மட்டுமே எழுதிக் கொள்வார். அவர் வரை அது சரியானதும் கூட.
மாட்டுத் தொழுவத்தில் பிறந்தாலும் மன்னரின் மணி முடிகள் அவன் காலடியில் கிடந்தன. ஏன்?
எளிமையும் அன்பிலுமாய்!
நீ அதை மட்டுமே கொண்டிருந்தாய். தேவாலயங்களில் மொத்த பகட்டிற்கும் உள்ளே நீ தன்னந்தனியே தொங்கிக் கிடப்பதை பார்க்கும் பொழுது நான் ஒன்றை மட்டுமே கடவுளை வேண்டிக் கொண்டிருந்தேன்.
ஏன்? இவனை மனிதனாய் பிறப்பித்தாய். நீ எவ்வளவு சுய நலமானவன். உன் பிள்ளையைக் கூட நீ அடகு வைத்து உன் சாம்ராஜ்யத்தை உருவாக்கும் வல்லமை படைத்தவனல்லவா!
அடுத்த ரவுண்ட் அடித்த பிறகே தெரிந்தது. அவன் மிக மிக நொடிந்து போயிருந்தான். எனக்கே எனக்கென்று இருந்தவளை நான் தவற விட்டு விட்டேன் என்றான்.
காதல் என்றும் அன்பு என்றும் சொல்லி பிதற்றினான்.
உண்மையில் இந்தப் பிதற்றல்கள் இன்றி நாம் மட்டும் எப்படி வாழ்ந்து விட முடியும்.
நீ தஸ்தாயெவ்ஸ்கியிடம் சென்றிருக்க வேண்டும். முன்பு சென்றது போலவே என்னிடம் தவறுதலாக வந்து விட்டாய்.
அவன் மட்டுமே உன்னை நன்கு அறிவான். ஆனால் அவன் மட்டும் என்ன சொல்லி விட்டான். குழந்தைகளின் ராஜ்ஜியம் தெய்வத்துடையது என்று சொல்லும் பொழுதே உடல் உடல் என்று தானே கூவிக் கொண்டிருந்தான்.
உன் பிணத்தை அவன் மிகவும் விரும்பியிருக்கக் கூடும்.
அதன் முன்னே மண்டியிட்டுக் கிடப்பது மட்டுமே தனக்கு விதித்ததாய் அவன் நம்பியிருந்தான்.
காதலை எப்பொழுதும் உன்னைப் போலவே புனிதத்தன்மை படுத்திக் கொண்டிருந்தான். அவன் உன் உண்மையான் விசுவாசியாய் இன்னும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்.
ஆனால் நான் அவன் பொருட்டும் உன் பொருட்டும் மன்னிப்புக் கேட்கிறேன்.
இதை மட்டுமே என்னால் உண்மையாக உன்னிலிருந்து கற்றுக் கொள்ள முடிந்தது.
உன்னை மனிதனாக்க மட்டுமே நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். என்னால் அது முடியுமென்றால் அன்று உன்னை தன்னந்தனியே விட்டுச்சென்ற சியோன் மலைக் குன்றின் உச்சியில் உன்னுடன் நானும் அமர்ந்து கொண்டிருப்பேன். உன் கோப்பையில் என் குருதித் துளியை உன்னைப் போலவே பகிர்ந்து நானும் உண்பேன்.
ஆனால் நடந்தது வேறென்னவோ?
மஞ்சள் நிறத்தை மட்டுமே தன் வாழ்வாக கொண்டவன் என் எதிரில் உன்னைப் போலவே வந்து நின்றான். சற்றே இறைஞ்சும் பாவத்துடன்.
கையில் இன்னும் உலராக் குருதியுடன் தன் சொந்தக் காதினை வைத்திருந்தான்.
எனக்கு தீ வேண்டும் என்றான். வானம் நோக்கி தழலும் மஞ்சள் தீ.

வெள்ளி, 24 மே, 2019

மாக்தலேனா

நான் தனியனாகவே சென்று கொண்டிருந்தேன். முன்னும் பின்னும் மனிதர்கள் இருந்தார்களா? நிச்சயமாக சொல்லத் தெரியவில்லை. சைப்ரஸ் மரங்களுக்கிடையிலிருந்து ஒளி மென் படலம் போல என்னைச் சுற்றிப் படர்ந்து கொண்டிருந்தது. எப்பொழுதும் என்னுடனான அழைக்கழிப்பின் எண்ணங்கள் அந்தகாரத்தில் மிதந்து மிதந்து சொற்களாக திரண்டு ஓயாது மந்திரம் போல என் செவிகளுக்குள் ரீங்காரமிட்டது. ஆம். நான் ஓயாது உச்சரித்துக் கொண்டிருந்ததும் அதைத்தான்.
என்னை மன்னித்து விடு!

ஒரு தனித்த கார்வை, மெல்ல கமகங்கள் சுழலத் தொடங்கியது. மேகங்கள் இரவிற்குள்ளிருந்து முனகியது. பல்லாயிரம் கண்களுடன் வானம் நோக்கிக் கொண்டிருந்தது. நீர்க்குமிழிகள் முழுகியிடுவது போல, இருள் சலனமிட்டு அதிர அதிர மேய்ப்பனின் குழல் ஓசை மூட்டமாய் சூழ்ந்து மாமழை போல நனைக்கத் தொடங்கியது. வண்ணங்கள் இடம் பெயர்ந்தன. தனிமையே தன்னைத் தான் என பல்லாயிரம் ஓசைகளால் அனைத்திலும் தொட்டுப் படர்ந்து மறைந்தது. எங்கும் நனைதலே அன்றி ஒன்றுமே இல்லாமலாகியது. தன் இருப்பின் ஒரு பகுதியிலிருந்து அவன் அனைத்தையும் நோக்கினான். குழலை இரண்டாய் மூன்றாய் சுக்கு நூறாய் உடைத்தான்.  கண்ணியிழந்த ஒலிச்சங்கிலிகள், சில்லுகளாய் நொறுங்கிக் கொண்டே இருந்தது. காலமற்ற பெரு வெளியினுள் கடைசியாய் சொட்டிய மழை நீரின் துளி பொதிந்த ஒற்றை விதையை மட்டும் அவன் தன் உள்ளங்கைகளுக்குள் பொத்திக் கொண்டு அழுது கொண்டே சொன்னான்.
என்னை மன்னித்து விடு!

விதிர்த்தெழுந்த பொழுது அதே சொல், அதே குரல், அவிழ்க்கவே முடியாத முகக் கவசம் போல.

சொர்க்கத்திற்கு செல்லும் கதவு, வெண்மையும் கருமையும் இரண்டறக் கலந்த சர்ப்பங்கள் வாயிற் காவலில் நின்று கொண்டிருந்தது.

உன்னால் உடலை இழக்க முடியுமெனில் வா இங்கு.

உன்னால் மாமிசத்தை தின்ன முடியுமெனில் வா இங்கு.

உன்னால் இரவை விழுங்கி விட முடியுமேனில் வா இங்கு

உன்னால் சாவை மறுதலிக்க முடியுமெனில் வா இங்கு.

நீ வாதையை அருந்துவாய். அதன் பொருட்டு நீ என்னிடம் வருகிறாய்.

எப்பொழுதும் என்னிடம் இருந்து கிடைக்கப் பெறா மன்னிப்பை நீ வேண்டுகிறாய்.

என் உடலினை தாண்டி செல்ல உன்னால் முடிந்தால், என் யோனியினுள் முகம் புதை. என் முலைகளுக்குள் நீ அதை பெற வாய்ப்புண்டு.

ஆனால் நீ உடல் மட்டுமே ஆனவன். என் அறையினுள் கால்கள் கட்டுண்டு ஊறும் முள் ஓணானுக்கும் உணக்கும் என்ன பெரிய வித்தியாசம் கண்டு விட்டாய்.

பார். உனக்கு முன்னும் பின்னும் மனிதர்கள் உள்ளனர். அவர்கள் உடலிலிருந்தே நீ அந்த இசையினை அறிந்தாய். அது துண்டு துண்டாய் உடைந்த பிறகும், அதன் அதிர்வுகளினால் என்னுள் அவர்களை நிறைக்கிறேன்.

நீ அவர்களில் ஒருவன் அல்ல. உனக்கு என் உடல் வேண்டாம். உன் உடல் வேண்டாம்.

ஆம். நீ மரணத்தை மறுதலிக்க விரும்புகிறாய். ஆனால் நீ மனிதன். எளிய மனிதன்.

போ. என் கூடாரத்தில் உனக்கு இடமில்லை.

அவன் உள்ளங்கைகளுக்குள் துடித்துக் கொண்டிருந்தது சொல் எனும் விதை.

என்னை மன்னித்து விடு.

நான் மண்ணாலனவள். மண்ணின் மூலமே அனைத்தையும் அறிகிறேன். நீ என்னை அறிய வேண்டுமானால் உடல் கொண்டு வா. மண். மண்ணால் மட்டுமே நான் ஆணை அறிவேன். என்னில் முழுதும் பிசுபிசுத்து நொதித்துக் கொண்டிருப்பது மண் மட்டுமே.

என் தவறுதான். என்னை மன்னித்து விடேன்.

நீயும் உன் கடவுளையும் தூக்கிக் கொண்டு செல் கோழையே. நீ என்னிடம் ஏதனை எதிர் பார்க்கிறாய். உன்னால் என் உதடுகள் பொருத்தி முத்தமிட முடியுமா?

உன்னை உன் மன்னிப்பினால் கடைத்தேற்ற முயல்கிறேன் நான்.
ஆம் உன் கடவுளர்கள் இதற்கு முன் இதே அறையில் தான் என்னுடன் பொருந்திக் கொண்டிருந்தனர். உனக்கு தெரியுமா நீ உன் சதையை தூக்கிக் கொண்டு திரிகிறாய். உன் கடவுள் உன்னிடம் ஏழு சாத்தான்களைப் பற்றி சொல்லிக் கொண்டு என் கூடாரத்தில் கால் கடுக்க நின்று கொண்டிருப்பதை நான் தினமும் தான் காண்கிறேன்.

இல்லை. இல்லை. அது ஏழு புண்கள். காயங்கள்.

இத்தனை பேர் என்னைப் புணர்ந்து கொண்டிருந்தனர். என் நிர்வாணத்தின் ஒவ்வொரு சதை அசைவையும் நீ பார்த்துக் கொண்டிருந்தாய். உன்னால் என்னைக் கடந்து விட முடியும் இந்த மண்ணைக் கடந்து விட முடியும் என்று நினைக்கிறாயா.

உன்னை என் கடவுளின் பெயரால், நான் அழைத்து செல்வேன் மேரி.

பெண்ணை பயக்கிறாயே. பெற்றாள்  மகள். நித்தியத்தில் அன்னை. ஆனால் உன்னைப் போல பேடிக்கல்ல.

நீ என்னை கடைத்தேற்றுவாய் என்றால் புணர். என் உடலுடன் இணைந்து கொள். என் பிள்ளைகளை கொடு. ஒரு மனிதனாய் ஆணாய் என்னைக் கூட்டிச் செல்.
இல்லையேல் விட்டொழி. கடைசி வரை இத்தனை பேர் என்னுடன் புணர்ந்து கொண்டிருந்ததை தனியனாய் பார்த்துக் கொண்டிருந்ததாயே. உன் கடவுளின் பெயரால் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறாய் கோழையே.

நான் ஒரு சுயநலமி மேரி. என்னை மன்னித்து விட்டேன் என்று சொல்.

இல்லை அய்யா. உனக்கு தர என்னிடம் ஒன்றுமே இல்லை. என் உடலைத் தவிர.

நான் செல்ல வேண்டும் மேரி.

செல். உன் எல்லைகளின் தூரம் வரை செல் துறவியே. என் பொருட்டு உன்னிடம் ஒன்றுமில்லை.

கனத்த குரலில் வெளியை நோக்கி இறைஞ்சினாள். வேறு யாரும் ஆண் மகன் உள்ளேர்களா.

நடுநடுங்கும் விரல்களினால் அவளின் காலைப் பற்றினான் தச்சன் மகன்

செவ்வாய், 30 ஏப்ரல், 2019

இணை

வெகு தூரத்தில் தூர்ந்து கொண்டிருக்கும்
வான வெளியில்
தன்னந்தனியே உன்னை நோக்கிக் கொண்டிருக்கிறேன்.
வற்றிப் போன  மண் தடம் அறிந்திருந்தது,
நீர் உறைந்த வழித் தடத்தினை.
விரல் இடைவெளிகளில் இறுக்க முடியாத வெற்றிடம்.
முன்னும் பின்னுமாக சுழன்று கொண்டே இருக்கும் கடிகார முட்களில்,
முடிச்சிட்டுக் கொண்டிருக்கிறேன்.
சுருக்குகள் தாடை எலும்பினை நொறுக்கும் கண நேரம்
என்னிடம் சொல்லிக் கொள்கிறேன்,
உன்னை நான் நோக்கிக் கொண்டிருக்கிறேன்,
வெகு தூரத்தில் தன்னந்தனியே.
வெகு தூரம்
வெகு காலம்
வெகு நேரம்
என் வெற்றிடங்களில் முளைத்துக் கொண்டிருக்கின்றன
காளான்கள்.
தலைக்கு மேலும் கீழுமாய்
உன் உப்பு நதியில்,
அலைக்கழிந்து
மிதந்து கொண்டிருக்கிறது
என் நாள் பட்ட பழைய உடல்.

வெள்ளி, 26 ஏப்ரல், 2019

ஒற்றை மதம்

கனவுலக வாசியிடமிருந்து வருகின்ற துர் நாற்றம்
மஞ்சள் வண்ணம் பூசிக்கொண்டு வலம் வருகிறது.
கிழக்கும் மேற்குமற்ற வான வெளியில் நிலவு தோணி போல அசைந்து கொண்டுருக்கிறது.
கால்களுக்கு கீழே அரைந்து அரைந்து நெழிகின்றன கனவுகள்.
முகங்கள் கலைந்து கொண்டே இருக்கும் பிம்ப வெளியில் நான் அவனைக் கண்டேன்.
தன்னை பரிசுத்த ஆவி என்று அழைத்துக் கொண்டான்.
தெளிவற்ற இரவின் சாலை வெளியில் சடைப் பின்னலுடன் அவள் எதிர் வந்தாள்.
நடுக்காட்டின் இசக்கி என்றாள்.
காலை 3 மணியில் பிரார்த்தனை கடிகார முள்ளினுள் ஒலித்தது.
என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும் என்று விதிர்த்து அடங்கியது.
தெரு முக்கில் இருந்து தன்னைத் தானே எதிர்த்து குறைத்துக் கொண்டிருந்தது கருப்பு நாய்.
மஞ்சள் வண்ணத்துடன் கோயில் மணி நாசி நிரம்பி வழிந்தது.
அத்துவான வெளியில் சிறகடிப்புகள் வானைத் தேடிக் கொண்டே
உதிர்ந்து வீழ்கின்றன.

ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

கனவு

இரு பிளந்த மலைகுன்றுகளுக்கிடையில்
கனவுகளை வாழ்க்கையாக கொள்ள நினைத்தவனின்
சடலம் கேடபாரற்று கிடக்கிறது.
தினம் தினம் அவன் பலி பீடத்தில் பல வண்ணங்களில் கனவுகள் கழுத்து ஒடித்து அவியாக்கப்பட்டன.
என் சாம்பல் நிறக் கனவு மலத்துவாரம் வழியே வெளித் தள்ளப்பட்டுக் கொண்டிருந்த நடு நிசியில்,
வெடி மருந்தினைப் போல படுக்கையைச் சுற்றிப் படர்ந்து கிடந்த சிவந்த கனவினையும்,
அக்குளுக்குள் இருந்து புழு போல நெளியும் பிங்க் வண்ணக் கனவினையும்,
யாருக்கும் தெரியாது என் பிறப்புறுப்புக்கிடையில் பதுங்கி இருந்த வெண்ணிறக் கனவினையும்,
ஒரு மடக்கில் பொதிந்து அவனிடம் சென்றேன்.
அவன் முன் பொதியிலிருந்து அவை சர்ப்பங்களாய் விரிந்தன.
அகன்ற வாய் திறந்து என்னை ஒட்டு மொத்தமாய் விழுங்கின.
இரு பிளந்த மலைகுன்றுகளுக்கிடையில்
 கனவுகளை வாழ்க்கையாக கொள்ள நினைத்தவனின்
சடலம்
தன்னந்தனியே
கேடபாரற்று கிடக்கிறது.