வெள்ளி, 27 டிசம்பர், 2019

அபி கவிதைகள் பற்றி


ஒரு தொடர் நிகழ்வு, அதன் புள்ளியிலிருந்து விலகி திடூமென என்னைப் பார் பார் என்றது. பழுத்த சருகுகள் அனிச்சமாய் உலவிக் கொண்டிருந்தது. அதன் திசைகள் எங்குமே வகுக்கப் பட்டிருக்கவில்லை. அல்லது எங்குமாய். அந்தி அதனை தன் சொந்த நிறத்தில் கொண்டிருந்தது. சருகுகளுக்கடியில் வாழ்தல் பற்றிய கேள்வி மெல்ல மெல்ல பிறாண்டத் தொடங்கியது. ஒன்றைப் பற்றிக் கொள்ளுதலும் அதிலிருந்து விலகுதலுமாய் ஒரே நேரத்தில் உணர்தல். பாதுகாப்பே தன்னுள்ளே கொண்டிருக்கும் விபரீதத்தை அதன் நிர்ணயமற்ற திசைகளை உணர்த்துதல் மூலமாய் கொஞ்சம் பிசுபிசுத்த தன்மையை உருவாக்கிக் கொண்டிருந்தது.

மொத்த பிரபஞ்சமும் அந்த உதிர்ந்த சருகுகளுக்கடியில் பொதிந்து கொண்டிருக்கிறது. அதன் நிழல் ஊடுருவும் அடிப்பரப்புகளிலிருந்து ஒளி தன்னை உறிஞ்சியும் பின் விடுவித்தும் கொண்டிருக்கக்கூடும். அமைதியற்றிருந்த யதார்த்தம் அதை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் பொழுது அதன் அடியில் போய் ஒளிந்து கொள்வதை விட வேறு என்ன சாத்தியம் இருந்து விடக் கூடும்.

ஒளி தன்னுள்ளேயே தன் இன்மையையும் கொண்டிருக்கிறது. அதனாலேயே அந்தியை நான் தேர்ந்தெடுக்கிறேன். அந்தி சாயைகளினால் தன்னைக் கட்டவிழ்க்கிறது. ஆனால் அது ஒரு ஊர்ந்து செல்லும் பறவை போல. இல்லையேல் உடலன்றி சிறகுகள் மட்டுமே கொண்ட பறவை.

அந்தியை சருகுகளுக்குள் சிறுதுண்டுகளாய் உருமாற்றிக் கொண்டிருக்கும் பொழுது அது தன் படபடத்தல் மூலமாய் தன் இருப்பை வெளிக்கிறது.

ஒளி இருள் தனக்குள் முணங்கத் தொடங்கியது.

அந்தி அடங்கும் பொழுது அதன் ஆசுவாசமற்ற அடிப்பொழுதுகளில் வெறுமனே தொற்றிக் கொள்கிறேன்.

"அருமையாய்க் கழிந்தது
சருகுகளடிப் பொழுது"

மாலை- சருகுகளடிப் பொழுது

சருகுகளினடியில்
புதையுண்டு
லேசாக மூச்சு முட்டிய
சுகம்.
எல்லாவற்றிலும் தொடப்பட்டு
எதையும் தொட இயலாதிருந்ததின்
மருட்சி,
வலிக்காமல்
தொற்றிக் கிடந்த துக்கம்
அறியாமையின் மீது
பதியப்பதிய
ஊர்ந்து திரிந்த பரவசம்,

பெயர் தெரியாத பறவைகளின்
அந்திப்படபடப்புகள்
உடம்பை ஊடுருவிப் போயிருக்கலாம்

சிறுமணிகளின்
இடையுறா ஒலியைப் போல
ஒரு கதகதப்பு
அஸ்தமனம் உதிர்ந்த சருகுகள்டயில்
படர்ந்திருக்கலாம்

எவரையும்
என்னையும்
நுழைய விடாதிருந்த
பிரக்ஞ்சயின் வெற்றிடம்
அந்தியின் தடவலில் இணங்கிக் கொள்ள

அருமையாகக் கழிந்தது
சருகுகளடிப் பொழுது.

வெள்ளி, 4 அக்டோபர், 2019

மொழியுயிரி 1

அது நிழல்களைத் தொந்தரவு செய்பனவாய் இருக்கின்றது. தன்னைத் தானே உண்ணும் மிருகம் கண்டேன். எனக்கு தெரியவில்லை. உணவும் மலமும் ஒன்றாவதைப் பற்றி அறிவாயா? நான் அறிகிறேன். உணர்கிறேன். உழல்கிறேன். அதுவன்றி இல்லாத பொழுது இறந்திருக்கக் கூடும். இல்லை அதுவுமில்லை. அதன் அலகில்லாமல் நான் எங்கும் நினைவு கொள்ளப் போவதுமில்லையே.

ஏன்? எதன் பொருட்டு நான் வாழ்கிறேன். இந்த இரு இரவுகளாய் ஒன்று பத்து பல்லாயிரம் கோடிகளாய், ஒரு வேளை அதற்கும் மேலாய் உள்ளும் புறமுமாய் ஓசையாய் இரைச்சலாய் காட்சியாய் படிமமாய் அதுவன்றி ஏதுமில்லாது, குவியக் குவிய நிரம்பி வழிந்து கொண்டே இருக்கும் அதன் பெருக்கோட்டத்தில் நான் நான் நான் என்று தேடிக் கொண்டிருந்தேன். இது உண்மையில் ஒரு பூதம் போல என் முன் வீற்றிருந்தது.

அதன் கேள்விகளுக்கான என் தவறான பதில்களுக்கெல்லாம் அதுவே தண்டனை விதித்தது. அதுவே காரணம் சொன்னது. அதுவே தலையாட்டியது. அதுவே ஆறுதலும் சொல்லிக் கொண்டது. அது நானாகவும் இருந்த பொழுது நான் ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். அது நானல்லாத பொழுது அதற்கு நான் அடிமையாக கற்றுக் கொள்ள முயன்றேன். அது தன்னைத் தானே உண்ணும் மிருகம். அதுவே உணவும் மலமும். ஆனால் வெளித்தோற்றத்திற்கு ஒரு கணவானைப் போல அது இருக்கக் கூடும். என் நிழல்களில் அது ஒண்டி வாழ்ந்தது. ஒட்டுண்ணிப் பிறவி என்று அதனை சபித்தேன். உண்மையில் அதனை உண்டு வாழ்பவனே நான். அதனாலேயே அதனிடம் இப்படிக் கேட்டேன். நீ! என்று நின்று கொள்வாய் என்று. பாதாள அறைகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் என் சாயைகளை நீங்கள் திருடி வந்தீர்கள். அவைகள் அங்கிருந்து பல்கிப் பெருகி வளர்ந்து இங்கு முழுவதுமாய் வியாபித்து விட்டது. ஆனால் அந்த அறைகள் அங்கேயே தான் இருக்கின்றன. அதனை உன்னால் அறியக் கூடும் என்று நம்புகிறேன்.

இங்கு நீ கேட்டுக் கொண்டிருக்கும் எதிரொலிகள் சாயைகள் மட்டுமே. நான் உன்னிடன் கெஞ்சிக் கேட்பது என்னை விடுவி என்று தான் என்று புதிர் போட்டது. நான் அதன் பாதையை அறிந்திருந்தேன். அதனாலேயே அங்கு செல்வதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறேன். அதற்கும் தெரியும் நான் தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பதனால் மட்டுமே வாழ்கிறேன் என்று.

சாயைகளின் உலகில் எதற்கும் தர்க்கம் தேவையில்லை. அங்கு பிரபஞ்சம் என்பதே கொஞ்சம் பெரிய சாயை மட்டுமே. அது அப்படி சொல்லவில்லை. திருப்பி வேறு மாதிரி அதனையே சொன்னது. நாம் பிண்ணிப் பிணைந்தவர்கள். நீ என்று சொல்லிக் கொள்வது வரையறை செய்வது எதனை வைத்து. நாங்கள் இல்லையேல் எதனை நீ பொருள் படுத்துவாய். நாங்கள் உங்களிடம் சன்னதம் வந்து அமைந்ததனால் மட்டுமே உங்களின் ஜீவிதம் தொடர்கிறது. இல்லையேல் நீங்கள் கட்டியமைக்க முற்படும் ஏதும் வாய்ப்பில்லை. அதன் அடித்தளங்கள் முதல் அனைத்தும் நாங்கள். எங்களின் ஊடுபாவாய் மட்டுமே நீங்கள் இருக்க இயலும். வேறு எதற்கும் உங்களுக்கு வாய்ப்பில்லை. இப்படி விளக்கக் கூட நாங்கள் வேண்டும் உங்களுக்கு.

ஆனால் அன்றொருவன் இருந்தான். அவன் அனைத்தையும் அவித்தான் என்று அவன் கதையை சொல்ல ஆரம்பித்தது.

அவனும் உன்னைப் போலவே இருந்தான். அவன் பாதைகளை கண்டு கொள்ள முயலவில்லை. அவன் பயணம் செய்பவனாய் மட்டும் இருந்தான். எங்கும் எங்களை அவன் அழைக்க மறுக்கவில்லை. எங்களை கதைகளாக உருமாற்றும் வித்தை அவனுக்கு தெரிந்திருந்தது. எங்களின் உலகிற்குள் அவன் ஒரு பாம்பினைப் போல இருந்தான். கவற்சியும் பயமும் ஒரு சேர எங்களைத் தொற்றிக் கொண்டிருந்தது. அவன் எங்களை அறிய விரும்பவில்லை. மாறாக ஒரு வித்தைக் காரனைப் போல எங்களைத் திருப்பித் திருப்பி போட்டுக் கொண்டிருந்தான்.

அவனிடம் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு விந்தையான பதில்களால் ஒரு மாயவலை போல அவனது சுழற்சியில் எங்களை ஆட்படுத்தினான். நாங்கள் கட்டுண்டு கிடக்கிறோம் என்ற உணர்வே வாராது எங்களை அடிமையாக்கி வைத்திருந்தான்.

நீ யார்? என்றால்
வெறும் பிம்பம் என்றான்.
அவனை நாங்கள் நேருக்கு நேராக பார்ப்பதை தவிர்த்தோம். ஆம். அது தற்கொலை போலவே தான். அங்கு எதுவுமில்லாதிருந்தது.

அவனின் பலவீனம் ஒன்றுதான் என்பதை பிற்பாடி அறிந்து கொண்டோம். ஆம். அவன் பற்றில்லாதிருப்பவன் என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்வதை அறிந்தோம். அதையே  அவனிடம் எதிரொலிக்கத் தொடங்கினோம். அவன் வீழ்ந்தான் என்று ஆரவாரம் கொண்டோம்.

இல்லை. அவன் பிம்பம் மட்டுமேயனாதாய் தன்னை நிகழ்த்திக் கொண்டிருந்தான். நாங்கள் அதனை அறிந்த பொழுது அவன் அங்கு இல்லை.

திரும்பவும் அதே கேள்வியை அவனிடம் நாங்கள் கேட்டோம்.

அவன் ஆம் என்றான்.

சாரைப்பாம்புகளைப் போல அவன் உடலெங்கும் ஊறினோம். அவன் ஆம்! ஆம்! என்றான். அப்பொழுது அவன் தன் மலத்துவாரத்தின் வழி ஆம்! ஆம்! என்று எங்களை வெளியேற்றிக் கொண்டிருந்தான்.

ஆம்! ஆம்! என்பது எங்களைத் தின்றது. பின் செரித்துக் கழித்தது.



புதன், 14 ஆகஸ்ட், 2019

உன் சமூகம் எனக்கு முன்பாகச் செல்லும்

ஒவ்வொரு முறை அவனை நினைக்கும் பொழுதும் இதைத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

அப்பா ஏன் அப்படி அவனை வைத்திருந்தார் என்று.

அவனை எப்பொழுதும் கடவுள் ஸ்தானத்தில் இருந்து அவர் இறக்கியதே இல்லை. ஆனால் அதனாலேயே அவனை என்னால் இன்னும் அதிகமாக புரிந்து கொள்ள முடிந்தது. அவன் என்றைக்குமே அதை விரும்பியிருக்க வாய்ப்பில்லையோ என்ற அய்யப்பாடும் உண்டு என்னிடம். அவன் உண்மையில் கடவுளாக விரும்பினான் என்றே நான் நினைக்கிறேன். அவன் மனிதனாக வாழவும் நினைத்தது தான் மிகத் தவறாகி விட்டது.

அப்பா ஏன் அப்படி எழுதி இருந்தார் என்று அப்பொழுது தான் புரிந்தது. அவரும் அதைத் தான் அவனிடம் எதிர்பார்த்திருந்தார். அவரது டைரியில் இந்த வசனம் எப்பொழுதும் இருக்கும்.

"என் சமூகம் உனக்கு முன்பாகவே செல்லும்"

இது கொஞ்சம் விட்டேத்தி தனமாக இருந்தாலும் இது அப்பாக்கும் தான் என்று தோன்றியது. அவனும் இந்த வசனத்தை தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டிருந்திருப்பான். ஏனென்றால் அவனது நம்பிக்கைகள் தவிடு பொடியாகிக் கொண்டிருக்கும் பொழுது அவன் அதனை ஒரு ஜபம் போல சொல்லிக் கொண்டிருக்கக் கூடும்.

இன்னொன்று
"மாட்டுத் தொழுவத்தில் பிறந்தாலும் மன்னரின் மணிமுடிகள் அவனது காலடியில் கிடந்தது"

இது அப்பாவின் வசனம். இது அப்பா தனக்காக எழுதிக் கொண்டது. அதனால் இதில் அவனின் பங்கு என்று ஒன்றுமில்லை. ஆனால் அவனும் அப்படித்தான் நினைத்திருப்பான், அதற்காகவே அப்பாவின் ஒரே தெய்வமாக அவன் இருந்திருக்கவும் கூடும்.

அவன் ஏன் சிலுவையில் கிடந்தான் என்று தோன்றும் பொழுது இந்த வசனம் தான் மனப்பாடம் போல என்னுள் உருண்டு கொண்டு வெளி வரும்.

"நீ எதைக் கொண்டு அளக்கிறாயோ அதைக் கொண்டே நீயும் அளக்கப்படுவாய்"

திடுக்கிட்டு எழுந்து அமர்ந்த பொழுது அப்பா நடந்ததை மிக விளக்கமாக என்னிடம் சொன்னார்.

அவன் இறக்கவே இல்லையாம். அது எல்லாம் சித்து விளையாட்டாம். Passion of christ படத்தை போட்டுக் காண்பித்து. பார் பார் என்று அங்கலாய்த்தார். எனக்கு விளங்கவில்லை. அப்பா ஒரு நூறு முறை இந்த படத்தை பார்திருக்கக் கூடும். ரத்த விளாறாய் அவன் கிடக்கும் பொழுது அப்பா மிக மும்முரமாய் ஜபம் சொல்லிக் கொள்வதை நான் அருகிருந்து பார்த்திருக்கிறேன். அப்பா யாருக்காகவும் எதற்காகவும் வேண்டிக் கொண்டதில்லை. அவரது வேண்டுதல்கள் எல்லாம் அவனைப் பற்றி மட்டுமே. அப்பா கனவு கண்டு கொண்டிருந்தார் அவன் தேவ மைந்தன் தேவ மைந்தன் என்று சதா சொல்லிக் கொண்டிருப்பார்.

ஆனால் ஒரு சள்ளைத்தனம் வேண்டுமென்றே செய்தேன். கலீல் கிப்ரானை அப்பாக்கு அறிமுகப் படுத்தினேன். அவர் முதலில் நம்பவில்லை. பின் அந்த ஏழு முறை அறையப்பட்டதை நினைத்து நினைத்து அப்பா என் மீது மிக இரங்கலானார். ஏன் இப்படி அவன் இருக்கிறான். ஏன் அவன் மேரியிடம் பேசவே இல்லை என்று மன்றாடினார்.

அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்து நான் அவரிடமே உண்மையை போட்டு உடைத்து விட்டேன். அது பௌர்ணமி தினமாக இருந்தது. இரவு முழுதும் தன்னந்தனியே குடித்துக் கொண்டே இருந்தார். அப்பா அப்படி இருந்து நான் பார்த்ததே இல்லை. அவர் ஜபிக்கவும் இல்லை என்பதை அறிந்தவுடன் நான் பயம் கொள்ள ஆரம்பித்தேன்.

நான் அதை சொல்லியிருக்கக் கூடாது தான்.

அதில் ஒரு தீர்வு இருந்தது போல தோன்றியது எனக்கு. அவன் இறந்து விட்டான் என சொல்லும் பொழுது இன்னும் ஆசுவாசமாக் இருந்தது. ஆனால் அப்பா அதை முழுக்க நம்பியே விட்டார். ஒரு வேளை அப்பா அப்படி நான் என்றேனும் சொல்வேன் என்று எதிர்பார்த்திருந்தாரோ என்னவோ.

ஆனால் அடுத்த ஞாயிற்றுக் கிழமை ஜபத்தில் அப்பா உருகிக் கொண்டிருந்தார். இரண்டு மணி நேரங்கள் கிட்டத்தட்ட முட்டிப் போட்ட படியே இருந்தார். பின் பாவமன்னிப்பு கூடத்தில் கலந்து கொண்டு அழுது கொண்டே வெளியே வந்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் அந்த வசனத்தை ஒரு முறை எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டிருந்தேன்.

அப்பா மெல்ல என் அருகே வந்து என் தோள்களைப் பற்றிய படியே கேட்டார். அந்த மூன்றாம் தினம் என்று என்று. நான் வெறுமனே அவரது கண்களைப் பார்த்தேன். அவர் நேற்று முழுதும் குடித்திருந்தார். அவரால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவர் ஏன் அதை எதிர்பார்த்தார். இல்லை அதனை சாக்காக கொண்டு இப்படி ஆகி விட்டாரா என்று எனக்கும் புரியவில்லை.

நான் அந்த டைரியின் முதல் வசனத்தை இப்பொழுது சொல்லிக் கொண்டேன். ஆம் .அது அப்படித்தான் நடந்து விட்டது போல.

அன்று இரவு என்னை அருகே அழைத்து கட்டிப் பிடித்துக் கொண்டு முத்தம் கொடுத்தார். நான் செய்வதறியாமல் திகைத்து பின் வெறுமனே சிரித்தேன். அவரது கண்களை உண்மையில் பார்ப்பதை தவிர்த்தேன்.

அப்பா என்னிடம் இப்படி கேட்டார்.

அவன் ஏன் இப்படி என்னிடம் நடந்து கொள்கிறான்.

நேற்று நம் வயல் வெளியைத் தாண்டிய கோயிலிலில் தன்னந்தனியே அவன் மட்டும் தொங்கிக் கொண்டிருந்தான். யாருமே இல்லை. துணைக்கிருந்தவர்கள் என்று நான் நினைத்த யாருமே ஏன் மேரி கூட அங்கு இல்லை. அவன் செத்துக் கிடந்தானா என்று நினைத்து அருகே சென்றேன். இன்னும் உயிர் இருந்தது. ஆனால அவன் என்னிடம் இவ்வாறாக சொன்னான். என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் நான் நம்பினேன்.

அதனால் தான் கேட்கிறேன். அவந் ஏன் என்னிடம் அவ்வாறு நடந்து கொண்டான். உனக்கு ஏதேனும் புரிகிறதா?

அவன் தன்னை இறந்தவன் என்றான். தான் காலாவதி ஆகி வெகு நாட்கள் ஆகிறது என்றும். இன்று உன்னிடம் பேசுவது உண்மையில் என் பழைய இருப்பிலிருந்து மிச்சம் வந்த சின்னஞ்சிறிய எச்சம் என்றும். அன்று மேரி என்னிடம் தோற்றுப் போனவன் நீ என்று சொல்லி சென்றாள் என்றும். என் அன்னை என்னைப் பார்த்து விட்டு, காறி உமிழ்ந்தாள் என்றும் நான் அதைப் பார்த்து விட்டே அந்த வசனத்தை திரும்பவும் நினைத்துக் கொண்டேன் என்றும் சொல்லிக் கொண்டான். உண்மையில் அவன் தனக்குள்ளேயே இதை சொல்ல நினைத்திருந்தான். என்னிடம் சொல்லும் பொழுதும் என் முகத்தை அவன் பார்க்கவே இல்லை. அவன் திரும்ப பள்ளி முழுதும் அதிர சத்தமாக கூவினான்.

"உன் சமூகம் எனக்கு முன்பாகச் செல்லும்"

அப்பாவிடம் நான் இவ்வறு சொன்னேன். அவன் உன்னை ஏமாற்ற நினைக்கிறான். அவனிடம் உன் பிரார்த்தனைகளை சொல்லிப் பார். ஒரு வேளை அவன் இதையே வேறு மாதிரி உன்னிடம் சொல்லக் கூடும்.

" பாவப்பட்டவர்களுக்கே சொர்க்க ராஜ்ஜியம்" என்று உன்னிடம் அவன் சொல்லக் கூடும்.


ஆம். அதுவும் ஒரு முறை நடந்தது. அது அப்பா தன் கழிவறை ஜபத்தில் இருக்கும் பொழுது. முக்கிக் கொண்டே அவர் அதை நினைத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கே தோன்றியது.

உண்மையில் அந்த மூன்றாவது நாளில் என்ன நடந்திருக்கும் என்று அப்பொழுது தான் எனக்கு புரிந்திருந்தது.



திங்கள், 12 ஆகஸ்ட், 2019

அபி கவிதைகள் பற்றி

"இங்கே படரும் இருளைச்
சிறிது சுண்டினால் கூட
என் மலை எனக்கு பதில் சைகை தரும்"

"என்னைச் சுற்றி நிரம்பும் காட்டுக் களிப்பு"

என் வாசற் படிகளிலிருந்து நகர்ந்து கொண்டிருந்தேன். பிறிதொரு நாளில் நோக்கிக் கொண்டிருக்கும் பொழுது திட திரவமற்றிருந்தேன். ஒளியும் இருளுமற்றிருந்தேன். கால்களுக்கடியில் குழைவாய் என் நிலம். சுற்றிலும் உயிர்த்துடிப்புகளின் அமைதி. சலனங்களிற்குள் புகுந்து துளிகளாய் உருமாறிக் கொண்டிருந்தேன். தவிரவும் இன்றிலிருந்து மட்டுமே முளைக்கும் தாவரங்களின் வேர்களைத் தொற்றிக் கொண்டு எனக்கான பசியினை ஆற்றிக் கொள்ள விளைகிறது. ஆம். மொழி அதன் அர்த்தப்பாடுகளை இழந்து விட்டிருந்தது. பொருள்கள் அதன் ஸ்தூல இருப்பினை களைந்து விட்டிருந்தது. என்னிடம் பகிர்ந்து கொள்ள ஏதுமே இல்லாத பொழுது வெறுமனே வாசற் படிகளில் வந்திருக்கிறேன். என் இருப்பு புகையாய் ஆகியது. எல்லாவற்றிலும் நான் ஆகியது. எல்லாமுமே நான் இன்றி ஆனது. ஊளையிடும் வானத்திலிருந்து இறங்கி வந்தது எனக்கான மேய்ச்சல் நிலம். தள்ளாடி தள்ளாடி உருள்கிறது மொழி. முயற்சியின்றியும் அமைதியின்றியும் அலைவுற்றுத் திரிந்து கொண்டிருந்த காலம், மிகப் பெரிய தடாகம் போல மையத்திலிருந்து விளிம்பை தன் முடிவற்ற அலைகளினால் விழுங்க விழுங்க, நிலங்கள் புரண்டு படுக்கத் தொடங்கின.

"அறிந்தவைகளின் மறுபுறங்கள் திரண்டு
மின்னி இழுத்து
வெறியோடு வருகின்றன
அல்ல அல்ல அல்ல என்று
பொழிந்து பிரவகிக்க
அழித்துத் துடைத்து எக்களிக்க
வருவது தெரிகிறது"

எடையிழந்திருந்தது அனைத்து சூழலும். பலூன்கள் போல ஆகியிருந்தது உண்மையில். சில சமயங்களில் தழல் போலவே பற்றிக் கொண்டது. அப்பொழுது எதனுடனும் இணைந்து கொள்கிறேன்.அவைகளும் என்னைப் போலவே உருமாறும் வரை விடுவதாய் இல்லை. சரியாக சொல்ல வேண்டுமெனில் வாசல்களிலும் ஜன்னல்களிலும் ஊடுருவிக் கொண்டிருக்கும் வெளி ஒன்றிலிருந்து அந்த எடையின்மை நீரினைப் போல வழிந்து நிறைந்தது. அப்பொழுது ஒன்றினுள் ஒன்றன் மேலாய் ஒன்றை ஏற்றிக் கொண்டு பிறிதொன்றாய் அதை ஆக்கி வைத்திருப்பேன். அந்தி மட்டுமே அதற்கு ஏதுவாயும் இருந்தது. அதன் பதுங்கு குழிகளுக்குள் காலாதீதமாய் சாம்பல் வண்ணம் நிறைந்து கிடந்தது. மற்ற நிறங்களுக்கில்லாத வசீகரம் இந்த நிறத்தில். இது எதுவுமில்லாத எதனையும் ஏற்றிக் கொள்கின்ற நிறம் போல. அந்தி அதன் எல்லையின்மையைத் தொட்டு உசுப்பி விடுகிறது. அதன் நிறம் பழுத்து இருளாகிறது. அங்கு கோடுகள் அதன் மஞ்சள் வண்ணத்தை அழித்துக் கொண்டே இருக்க ஊர்கள் ஊராகிக் கொண்டே இருப்பது. ஒரு பூரணமான தொடர் நிகழ்வு.

"பொழுதின் நினைவும்
நினைவின் பொழுதும்
இடைச்சுவர் தகர்ந்து
ஒன்றினுள் ஒன்றாகி
ஊர் ஆகின்றன"

ஊர் தன் மிகச்சிறிய புள்ளியில்"

வெளிச்சமும் இருளும். இந்த முரணிலிருந்து இது இரண்டும் முயங்கி விட்டிருந்த ஒன்றை அடைய எத்தனிப்பதே பிரயாசை. நடமாட்டங்களில்லாத தெருக்களில், கவிந்த நிழல் பரப்புகளில், நிதானமாய் கிளை பரப்பிக் கொண்டிருக்கும் வேர்களில், திட திரவமற்ற இருப்பாய் வியாபித்து உயர்ந்து நிற்கும் மலைகளில், கால்களுக்கடியில் பதுங்கிக் கொள்ள விளையும் தன்னிருப்புகளில், அலைந்து கொண்டே இருக்கும் எண்ணங்களின் நினைவுகளில், பால்யம் தீற்றி விடுபட்டிருந்த அறைகளுக்குள் மெல்லக் கவிந்து உருக்கொள்ளும் ஞாபகங்களினுள் திடூமென முரணற்ற ஒன்றைக் கண்டு திகைத்து உள் திரும்பிக் கொள்வதுமாய் பித்து பிடித்துக் கொண்டிருந்தது மொழி வழி.

"கனவு அன்று எனத் தோன்றினாலும்
கனவாகவே இருக்கலாம்"










புதன், 5 ஜூன், 2019

கஞ்சா


நீள் பட்டைக் கோடு. செந்தீற்றலாய் உருகி விழுந்து கொண்டிருந்தது. மஞ்சள் காவி வெண்மை பச்சை கருமை நீலம் குழைந்து குழைந்து ஓடியது. சுழல் நடுப்புள்ளியிலிருந்து வண்ணங்கள் முளைத்துக் கொண்டே இருந்தது.
“முன்பு ஒரு பயணத்தில் விண்மீன் உறங்கும் நேரத்தில்”
“முன்பு ஒரு பயணத்தில் விண்மீன் உறங்கும் நேரத்தில்”
தப்பித்துக் கொள்ள முனைவது போல, கடல் தன் பல்லாயிரம் கரங்களால் கரையைப் பற்றிக் கொள்ள முயன்று கொண்டே இருந்தது. அலைகளின் நகங்கள் பழுத்து ஒடிந்து கொண்டிருந்தது. செம்பழுப்புக் கோளம், பட்டைத் தீற்றல். வண்ணங்களின் ஒழுங்கு குலையக் குலைய உருகிய சுழல் பந்து, விசைந்து தலைக்கு மேலே குதித்து கால்களுக்கடியில் குப்புற விழுந்தது.
தன்னைச் சுற்றிய மோனம் அவிழ்ந்து பேரிரைச்சல். மெல்ல அடுத்த இழுப்பு, கழுத்துக்குள் புதைந்த கனத்த புகை உடலினுள் அமைதியற்று அலைந்து என் மார்பினுள் ஒரு தனித்த உயிர் போல துடிக்கத் தொடங்கியது.
புற்கள், எண்ணிலடங்கா தூரம் அதன் நுனியிலிருந்து முளைத்து நெளியும் பல வண்ணப் புழுக்கள். மஞ்சள் நிறப்புழுக்கள் நீர்த்தாரைகள் போல இண்டு இடுக்குகளெல்லாம் ஓடிக் கொண்டிருந்தது. இடுப்புக்கு கீழே ஒன்றுமே இல்லாதது போல, கால்களற்று மிதந்து கொண்டிரூந்தேன்.
மூர்க்கமாக ஒரு அடி, மூக்கிலிருந்து அடர்ந்து குருதி வழிந்தது. தலை குப்புறக் கிடந்ததில் முகமெல்லாம் சிவந்திருந்தது. மெல்ல அடுத்த இழுப்பு.
இந்த முறை, மணல் மேடுகளுக்குள்ளிருந்து சில் வண்டுகளைப் போல உருள் உருளாக உடல்கள். நிறங்களற்ற உடல்கள். இல்லை நிறமிருந்ததா? என்ன நிறம் என்று யூகிக்க முடியவில்லை. ஆண் பெண் ஆணிலி பெண்ணிலி என்று பிரித்தறிய முடியாத உடல்களின் பெருக்கு. நடுவே அதே வட்டச் சுழல். அது ஒரு மாபெரிய சக்கரம் போலவும், அதனுள்ளிருந்து இந்தப் பெருக்கு துளிர்த்து பெருத்துக் கொண்டே இருப்பது போலவும் இருந்தது.
தாகம் கருத்த உருவமாய் என் தலை மேல் ஏறி அமர முயற்சித்து, வழுகிக் கொண்டிருந்தது. அதன் பெரிய உடல் மிருக வாசனையுடன் முணகிக் கொண்டிருந்தது. ஒரு கரடியைப் போல ரோமங்களடர்ந்த அதன் உடலிலிருந்து பழுப்பு நாகங்கள் மொலுமொலுத்து என் உடலினுள் இறங்கிக் கொண்டிருந்தது.
கண்ணாடியைப் பார்க்கிறேன். என் முகம் பலூன் போல விரிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. வாஷ் பேசினில் வாய் மூக்கு கண்கள் காதுகள் எல்லாம் தனித்தனியே மிதக்கிறது. கழிவுப் போனியினுள்ளிருந்து எட்டிப் பார்த்தது என் குறி. சுற்றிலும் நான் சுவர்களிலிருந்தும் எட்டிப் பார்க்கின்றன நிறங்களற்ற உடல் பொதிகள்.
விளக்கை அணைக்க முயற்சிக்கிறேன். நீண்ட ட்யூப் லைட்டுகள் சுருங்கிச் சுருங்கி விந்துத் துணுக்குகளைப் போல உத்திரத்தில் சொட்டிக் கொண்டிருந்தது. குண்டு பல்புகள் விட்டில் பூச்சிகளாய் ஒளிர்ந்து ஒளிர்ந்து சிமிட்டிக் கொண்டே, மின் விசிறிகளுக்கிடையில் அரைபட்டுக் கொண்டிருந்தது. கால்களுக்கிடையில் சதுப்பு நிலமாய் ஆகியிருந்தது. புதையுண்ட பாதங்களில் நசிந்து உடைந்து, உடைந்த இடத்திலிருந்தே குத்தி உயர்ந்தது மரங்கள். மரங்களில் இலைகளுக்கு பதிலாய் கட்டுண்டு கிடந்தன சிறகுகள். மரங்களின் வேர் முண்டுகளில் சுருக்கிட்டு தலை கீழாய் தொங்கிக் கொண்டிருந்தன அதன் கூடுகள். நான் மண்ணுக்கடியிலிருந்து வான் நோக்கி உயர்ந்து கொண்டே இருக்கும் மரங்களைக் காண்கின்றேன். அதன் உள்ளறைகளின் இடைவெளிகளில் பற்றிப் படர்ந்து கொண்டிருந்தன முகில்கள். வானம் மாபெரும் கடல். அதன் அலை நுனிகளிலிருந்து பொழியும் வண்ணங்களின் மழையிலிருந்து, துளிகள் என் உடலெங்கும் நொதித்து உப்பு வீச்சத்துடன் உள்ளிறங்கியது. உப்பு வீச்சம் என் சொந்தக் குருதியாய் இருந்தது.
தாகம் அடங்கும் வரைக் குடித்துத் தீர்த்தேன். கண்கள் இருக்கும் பகுதியில் விதைகளும், அதிலிருந்து முளைத்த மரங்களுமாய் நிறையத் தொடங்கியது என் உடற் காடு. காட்டின் மேட்டு நிலத்திலிருந்து வெண் பட்டுத்திரை போல மஞ்சள் கோளம். நான் நான் என்று சொல்லிக் கொண்டு என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.
“விண்மீன் உறங்கும் நேரத்தில்”
“முன்பு ஒரு பயணத்தில்”
இப்பொழுது மேலும் ஒரு இழுப்பு.
கால்களுக்கடியில் பச்சை நிறம். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை பச்சைக் கடல்.
பச்சைப்புள்ளிகளிலிருந்து அந்த மலை நுனி தெரிந்தது. உச்சியில் தேங்கியிருந்த குட்டையின் உள்ளிருந்து எழுந்து வந்தான் அவன். தன்னை திகம்பரன் என்றான். சுற்றிலும் புல் பூண்டுகளற்ற மொட்டைப் பாறையின் மேற் தட்டுகளிலிருந்து குளிர் ஒரு மலைச்சுனை போலவே அவனைச் சுற்றி தழும்பிக் கொண்டிருந்தது. அம்மணம் காலங்களற்றதாய் அவனுள் நிறைந்திருந்தது.
மெல்ல என் காதுகளில் முணங்கினான்.
அம்மணமற்றதே நிரந்தரமானது
உடலன்றி ஏதும் தரப்படுவதில்லை
காலமற்றது உடல் ஒன்றே
சிறகுகளற்ற மரங்கள் எங்கும் முளைப்பதேயில்லை
கல் விளக்கின் ஒளியில் நான் மட்டுமே நின்று கொண்டிருந்தேன். தூரத்துப் பறவையின் கேவல். கூகையாக இருந்திருக்கக் கூடும். குட்டையினுள் அலைகளின் துடிப்புகளில் கரைப் பாசிகள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தது.
கரையான் புற்றுகளிலிருந்து நாகமுட்டைகள் பொரிந்து வெளிவந்தது. குஞ்சுகளின் கண்களில் உயிரின் நர நரப்புடன் மொலுமொலுத்து படர்ந்து மண் துகள்கள் படர உருண்டது. சுழல் தெரியத் தொடங்கியது.
அது மனித சஞ்சாரமற்ற நிலம். தலைக்கு மேலும் கீழும் நீல நதிகள் பாய்ந்தோடும் காடு. மரங்களின் சிறகுகள் வேரை இழுத்து இழுத்து உயர்ந்து கொண்டே இருந்தது. பாதாளங்களிலும் விண்ணிலும் மரமன்றி வேறு ஒன்றில்லாத படி நிறைந்து முழுங்கின.
“முன்பு ஒரு பயணத்தில்
விண்மீன் உறங்கும் நேரத்தில்”
கனவுகளற்ற வெளியில் இன்னும் பனி படர்ந்திருந்தது. கண்ணுக்கு தெரியாத நாட்களை அங்கு புதைத்து மூடி விட்டு திரும்பி பார்க்காமல் சென்று கொண்டிருக்கிறேன்.
என் கனவுகளின் உடைகளினால் உன் அம்மணத்தை மூடி விடுகிறேன்.
நீ நிரந்தரமானவனாகு!
நான் தேவனாக விரும்பவில்லை. என்னை விட்டு விடேன். நடுனடுங்கும் விரல் நுனிகள் பதற்றத்துடன் என் கழுத்தை தொற்றிக் கொண்டு பின் இறுக்க அணைத்துக் கொண்டது.
மதுக்கோப்பையில் அந்த கருங்க்சிவப்பு நிறத் திரவத்தை ஊற்றினேன். சோடா வேண்டாம் என்று மறுத்து விட்டார். தண்ணீர் பாதி டம்ளர் நிறைய ஊற்றி விட்டு சியர்ஸ் அடித்துக் கொண்டோம். மெல்ல உதட்டருகே கொண்டு சென்று முழுதுமாய் உறிஞ்சிக் கொண்டார்.
உன்னில் பாவம் செய்யாதவன் எவனோ அவனே முதல் கல்லடிக்கு தகுதியானவன் என்றார்.
ஆம்! ஆம்! என்று உள்ளூற நகைத்துக் கொண்டேன்.
நீ அங்கு தன்னந்தனியே தொங்கிக் கிடந்ததும் அதனால் தான் உனக்கு தெரிகிறதா?
நான் திரும்ப வரவேயில்லை என்று உனக்காகவாது தெரியுமா?
எனக்கு தெரியும். நீ உடல் கொண்டு வரவில்லை என்பது. ஆனால் நீ நிச்சயமாக் திரும்ப வந்திருந்தாய்.
என் அப்பா எப்பொழுதும் தன் டைரியின் முதற் பக்கத்தில் ஒன்றை மட்டுமே எழுதிக் கொள்வார். அவர் வரை அது சரியானதும் கூட.
மாட்டுத் தொழுவத்தில் பிறந்தாலும் மன்னரின் மணி முடிகள் அவன் காலடியில் கிடந்தன. ஏன்?
எளிமையும் அன்பிலுமாய்!
நீ அதை மட்டுமே கொண்டிருந்தாய். தேவாலயங்களில் மொத்த பகட்டிற்கும் உள்ளே நீ தன்னந்தனியே தொங்கிக் கிடப்பதை பார்க்கும் பொழுது நான் ஒன்றை மட்டுமே கடவுளை வேண்டிக் கொண்டிருந்தேன்.
ஏன்? இவனை மனிதனாய் பிறப்பித்தாய். நீ எவ்வளவு சுய நலமானவன். உன் பிள்ளையைக் கூட நீ அடகு வைத்து உன் சாம்ராஜ்யத்தை உருவாக்கும் வல்லமை படைத்தவனல்லவா!
அடுத்த ரவுண்ட் அடித்த பிறகே தெரிந்தது. அவன் மிக மிக நொடிந்து போயிருந்தான். எனக்கே எனக்கென்று இருந்தவளை நான் தவற விட்டு விட்டேன் என்றான்.
காதல் என்றும் அன்பு என்றும் சொல்லி பிதற்றினான்.
உண்மையில் இந்தப் பிதற்றல்கள் இன்றி நாம் மட்டும் எப்படி வாழ்ந்து விட முடியும்.
நீ தஸ்தாயெவ்ஸ்கியிடம் சென்றிருக்க வேண்டும். முன்பு சென்றது போலவே என்னிடம் தவறுதலாக வந்து விட்டாய்.
அவன் மட்டுமே உன்னை நன்கு அறிவான். ஆனால் அவன் மட்டும் என்ன சொல்லி விட்டான். குழந்தைகளின் ராஜ்ஜியம் தெய்வத்துடையது என்று சொல்லும் பொழுதே உடல் உடல் என்று தானே கூவிக் கொண்டிருந்தான்.
உன் பிணத்தை அவன் மிகவும் விரும்பியிருக்கக் கூடும்.
அதன் முன்னே மண்டியிட்டுக் கிடப்பது மட்டுமே தனக்கு விதித்ததாய் அவன் நம்பியிருந்தான்.
காதலை எப்பொழுதும் உன்னைப் போலவே புனிதத்தன்மை படுத்திக் கொண்டிருந்தான். அவன் உன் உண்மையான் விசுவாசியாய் இன்னும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்.
ஆனால் நான் அவன் பொருட்டும் உன் பொருட்டும் மன்னிப்புக் கேட்கிறேன்.
இதை மட்டுமே என்னால் உண்மையாக உன்னிலிருந்து கற்றுக் கொள்ள முடிந்தது.
உன்னை மனிதனாக்க மட்டுமே நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். என்னால் அது முடியுமென்றால் அன்று உன்னை தன்னந்தனியே விட்டுச்சென்ற சியோன் மலைக் குன்றின் உச்சியில் உன்னுடன் நானும் அமர்ந்து கொண்டிருப்பேன். உன் கோப்பையில் என் குருதித் துளியை உன்னைப் போலவே பகிர்ந்து நானும் உண்பேன்.
ஆனால் நடந்தது வேறென்னவோ?
மஞ்சள் நிறத்தை மட்டுமே தன் வாழ்வாக கொண்டவன் என் எதிரில் உன்னைப் போலவே வந்து நின்றான். சற்றே இறைஞ்சும் பாவத்துடன்.
கையில் இன்னும் உலராக் குருதியுடன் தன் சொந்தக் காதினை வைத்திருந்தான்.
எனக்கு தீ வேண்டும் என்றான். வானம் நோக்கி தழலும் மஞ்சள் தீ.