வெள்ளி, 24 மே, 2019

மாக்தலேனா

நான் தனியனாகவே சென்று கொண்டிருந்தேன். முன்னும் பின்னும் மனிதர்கள் இருந்தார்களா? நிச்சயமாக சொல்லத் தெரியவில்லை. சைப்ரஸ் மரங்களுக்கிடையிலிருந்து ஒளி மென் படலம் போல என்னைச் சுற்றிப் படர்ந்து கொண்டிருந்தது. எப்பொழுதும் என்னுடனான அழைக்கழிப்பின் எண்ணங்கள் அந்தகாரத்தில் மிதந்து மிதந்து சொற்களாக திரண்டு ஓயாது மந்திரம் போல என் செவிகளுக்குள் ரீங்காரமிட்டது. ஆம். நான் ஓயாது உச்சரித்துக் கொண்டிருந்ததும் அதைத்தான்.
என்னை மன்னித்து விடு!

ஒரு தனித்த கார்வை, மெல்ல கமகங்கள் சுழலத் தொடங்கியது. மேகங்கள் இரவிற்குள்ளிருந்து முனகியது. பல்லாயிரம் கண்களுடன் வானம் நோக்கிக் கொண்டிருந்தது. நீர்க்குமிழிகள் முழுகியிடுவது போல, இருள் சலனமிட்டு அதிர அதிர மேய்ப்பனின் குழல் ஓசை மூட்டமாய் சூழ்ந்து மாமழை போல நனைக்கத் தொடங்கியது. வண்ணங்கள் இடம் பெயர்ந்தன. தனிமையே தன்னைத் தான் என பல்லாயிரம் ஓசைகளால் அனைத்திலும் தொட்டுப் படர்ந்து மறைந்தது. எங்கும் நனைதலே அன்றி ஒன்றுமே இல்லாமலாகியது. தன் இருப்பின் ஒரு பகுதியிலிருந்து அவன் அனைத்தையும் நோக்கினான். குழலை இரண்டாய் மூன்றாய் சுக்கு நூறாய் உடைத்தான்.  கண்ணியிழந்த ஒலிச்சங்கிலிகள், சில்லுகளாய் நொறுங்கிக் கொண்டே இருந்தது. காலமற்ற பெரு வெளியினுள் கடைசியாய் சொட்டிய மழை நீரின் துளி பொதிந்த ஒற்றை விதையை மட்டும் அவன் தன் உள்ளங்கைகளுக்குள் பொத்திக் கொண்டு அழுது கொண்டே சொன்னான்.
என்னை மன்னித்து விடு!

விதிர்த்தெழுந்த பொழுது அதே சொல், அதே குரல், அவிழ்க்கவே முடியாத முகக் கவசம் போல.

சொர்க்கத்திற்கு செல்லும் கதவு, வெண்மையும் கருமையும் இரண்டறக் கலந்த சர்ப்பங்கள் வாயிற் காவலில் நின்று கொண்டிருந்தது.

உன்னால் உடலை இழக்க முடியுமெனில் வா இங்கு.

உன்னால் மாமிசத்தை தின்ன முடியுமெனில் வா இங்கு.

உன்னால் இரவை விழுங்கி விட முடியுமேனில் வா இங்கு

உன்னால் சாவை மறுதலிக்க முடியுமெனில் வா இங்கு.

நீ வாதையை அருந்துவாய். அதன் பொருட்டு நீ என்னிடம் வருகிறாய்.

எப்பொழுதும் என்னிடம் இருந்து கிடைக்கப் பெறா மன்னிப்பை நீ வேண்டுகிறாய்.

என் உடலினை தாண்டி செல்ல உன்னால் முடிந்தால், என் யோனியினுள் முகம் புதை. என் முலைகளுக்குள் நீ அதை பெற வாய்ப்புண்டு.

ஆனால் நீ உடல் மட்டுமே ஆனவன். என் அறையினுள் கால்கள் கட்டுண்டு ஊறும் முள் ஓணானுக்கும் உணக்கும் என்ன பெரிய வித்தியாசம் கண்டு விட்டாய்.

பார். உனக்கு முன்னும் பின்னும் மனிதர்கள் உள்ளனர். அவர்கள் உடலிலிருந்தே நீ அந்த இசையினை அறிந்தாய். அது துண்டு துண்டாய் உடைந்த பிறகும், அதன் அதிர்வுகளினால் என்னுள் அவர்களை நிறைக்கிறேன்.

நீ அவர்களில் ஒருவன் அல்ல. உனக்கு என் உடல் வேண்டாம். உன் உடல் வேண்டாம்.

ஆம். நீ மரணத்தை மறுதலிக்க விரும்புகிறாய். ஆனால் நீ மனிதன். எளிய மனிதன்.

போ. என் கூடாரத்தில் உனக்கு இடமில்லை.

அவன் உள்ளங்கைகளுக்குள் துடித்துக் கொண்டிருந்தது சொல் எனும் விதை.

என்னை மன்னித்து விடு.

நான் மண்ணாலனவள். மண்ணின் மூலமே அனைத்தையும் அறிகிறேன். நீ என்னை அறிய வேண்டுமானால் உடல் கொண்டு வா. மண். மண்ணால் மட்டுமே நான் ஆணை அறிவேன். என்னில் முழுதும் பிசுபிசுத்து நொதித்துக் கொண்டிருப்பது மண் மட்டுமே.

என் தவறுதான். என்னை மன்னித்து விடேன்.

நீயும் உன் கடவுளையும் தூக்கிக் கொண்டு செல் கோழையே. நீ என்னிடம் ஏதனை எதிர் பார்க்கிறாய். உன்னால் என் உதடுகள் பொருத்தி முத்தமிட முடியுமா?

உன்னை உன் மன்னிப்பினால் கடைத்தேற்ற முயல்கிறேன் நான்.
ஆம் உன் கடவுளர்கள் இதற்கு முன் இதே அறையில் தான் என்னுடன் பொருந்திக் கொண்டிருந்தனர். உனக்கு தெரியுமா நீ உன் சதையை தூக்கிக் கொண்டு திரிகிறாய். உன் கடவுள் உன்னிடம் ஏழு சாத்தான்களைப் பற்றி சொல்லிக் கொண்டு என் கூடாரத்தில் கால் கடுக்க நின்று கொண்டிருப்பதை நான் தினமும் தான் காண்கிறேன்.

இல்லை. இல்லை. அது ஏழு புண்கள். காயங்கள்.

இத்தனை பேர் என்னைப் புணர்ந்து கொண்டிருந்தனர். என் நிர்வாணத்தின் ஒவ்வொரு சதை அசைவையும் நீ பார்த்துக் கொண்டிருந்தாய். உன்னால் என்னைக் கடந்து விட முடியும் இந்த மண்ணைக் கடந்து விட முடியும் என்று நினைக்கிறாயா.

உன்னை என் கடவுளின் பெயரால், நான் அழைத்து செல்வேன் மேரி.

பெண்ணை பயக்கிறாயே. பெற்றாள்  மகள். நித்தியத்தில் அன்னை. ஆனால் உன்னைப் போல பேடிக்கல்ல.

நீ என்னை கடைத்தேற்றுவாய் என்றால் புணர். என் உடலுடன் இணைந்து கொள். என் பிள்ளைகளை கொடு. ஒரு மனிதனாய் ஆணாய் என்னைக் கூட்டிச் செல்.
இல்லையேல் விட்டொழி. கடைசி வரை இத்தனை பேர் என்னுடன் புணர்ந்து கொண்டிருந்ததை தனியனாய் பார்த்துக் கொண்டிருந்ததாயே. உன் கடவுளின் பெயரால் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறாய் கோழையே.

நான் ஒரு சுயநலமி மேரி. என்னை மன்னித்து விட்டேன் என்று சொல்.

இல்லை அய்யா. உனக்கு தர என்னிடம் ஒன்றுமே இல்லை. என் உடலைத் தவிர.

நான் செல்ல வேண்டும் மேரி.

செல். உன் எல்லைகளின் தூரம் வரை செல் துறவியே. என் பொருட்டு உன்னிடம் ஒன்றுமில்லை.

கனத்த குரலில் வெளியை நோக்கி இறைஞ்சினாள். வேறு யாரும் ஆண் மகன் உள்ளேர்களா.

நடுநடுங்கும் விரல்களினால் அவளின் காலைப் பற்றினான் தச்சன் மகன்

செவ்வாய், 30 ஏப்ரல், 2019

இணை

வெகு தூரத்தில் தூர்ந்து கொண்டிருக்கும்
வான வெளியில்
தன்னந்தனியே உன்னை நோக்கிக் கொண்டிருக்கிறேன்.
வற்றிப் போன  மண் தடம் அறிந்திருந்தது,
நீர் உறைந்த வழித் தடத்தினை.
விரல் இடைவெளிகளில் இறுக்க முடியாத வெற்றிடம்.
முன்னும் பின்னுமாக சுழன்று கொண்டே இருக்கும் கடிகார முட்களில்,
முடிச்சிட்டுக் கொண்டிருக்கிறேன்.
சுருக்குகள் தாடை எலும்பினை நொறுக்கும் கண நேரம்
என்னிடம் சொல்லிக் கொள்கிறேன்,
உன்னை நான் நோக்கிக் கொண்டிருக்கிறேன்,
வெகு தூரத்தில் தன்னந்தனியே.
வெகு தூரம்
வெகு காலம்
வெகு நேரம்
என் வெற்றிடங்களில் முளைத்துக் கொண்டிருக்கின்றன
காளான்கள்.
தலைக்கு மேலும் கீழுமாய்
உன் உப்பு நதியில்,
அலைக்கழிந்து
மிதந்து கொண்டிருக்கிறது
என் நாள் பட்ட பழைய உடல்.

வெள்ளி, 26 ஏப்ரல், 2019

ஒற்றை மதம்

கனவுலக வாசியிடமிருந்து வருகின்ற துர் நாற்றம்
மஞ்சள் வண்ணம் பூசிக்கொண்டு வலம் வருகிறது.
கிழக்கும் மேற்குமற்ற வான வெளியில் நிலவு தோணி போல அசைந்து கொண்டுருக்கிறது.
கால்களுக்கு கீழே அரைந்து அரைந்து நெழிகின்றன கனவுகள்.
முகங்கள் கலைந்து கொண்டே இருக்கும் பிம்ப வெளியில் நான் அவனைக் கண்டேன்.
தன்னை பரிசுத்த ஆவி என்று அழைத்துக் கொண்டான்.
தெளிவற்ற இரவின் சாலை வெளியில் சடைப் பின்னலுடன் அவள் எதிர் வந்தாள்.
நடுக்காட்டின் இசக்கி என்றாள்.
காலை 3 மணியில் பிரார்த்தனை கடிகார முள்ளினுள் ஒலித்தது.
என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும் என்று விதிர்த்து அடங்கியது.
தெரு முக்கில் இருந்து தன்னைத் தானே எதிர்த்து குறைத்துக் கொண்டிருந்தது கருப்பு நாய்.
மஞ்சள் வண்ணத்துடன் கோயில் மணி நாசி நிரம்பி வழிந்தது.
அத்துவான வெளியில் சிறகடிப்புகள் வானைத் தேடிக் கொண்டே
உதிர்ந்து வீழ்கின்றன.

ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

கனவு

இரு பிளந்த மலைகுன்றுகளுக்கிடையில்
கனவுகளை வாழ்க்கையாக கொள்ள நினைத்தவனின்
சடலம் கேடபாரற்று கிடக்கிறது.
தினம் தினம் அவன் பலி பீடத்தில் பல வண்ணங்களில் கனவுகள் கழுத்து ஒடித்து அவியாக்கப்பட்டன.
என் சாம்பல் நிறக் கனவு மலத்துவாரம் வழியே வெளித் தள்ளப்பட்டுக் கொண்டிருந்த நடு நிசியில்,
வெடி மருந்தினைப் போல படுக்கையைச் சுற்றிப் படர்ந்து கிடந்த சிவந்த கனவினையும்,
அக்குளுக்குள் இருந்து புழு போல நெளியும் பிங்க் வண்ணக் கனவினையும்,
யாருக்கும் தெரியாது என் பிறப்புறுப்புக்கிடையில் பதுங்கி இருந்த வெண்ணிறக் கனவினையும்,
ஒரு மடக்கில் பொதிந்து அவனிடம் சென்றேன்.
அவன் முன் பொதியிலிருந்து அவை சர்ப்பங்களாய் விரிந்தன.
அகன்ற வாய் திறந்து என்னை ஒட்டு மொத்தமாய் விழுங்கின.
இரு பிளந்த மலைகுன்றுகளுக்கிடையில்
 கனவுகளை வாழ்க்கையாக கொள்ள நினைத்தவனின்
சடலம்
தன்னந்தனியே
கேடபாரற்று கிடக்கிறது.

திங்கள், 4 பிப்ரவரி, 2019

கிறுஸ்துவின் கடைசி சபலம் 11


நகர் முழுதும் அறிவித்துக் கொண்டிருந்தான் அந்த நிமித்தோன். செல்லும் இடமெல்லாம் மக்கள் கூடி நின்று சலசலத்துக் கொண்டிருந்தனர். செந்தாடிக்காரன் அறை ஜன்னல் வழியே கவனித்துக் கொண்டிருந்தான்.

பெருமைப்படு. உன் சகோதரனுக்காக!

எரிச்சலுடன் கால்களை நிலத்தில் மாறி மாறி அறைந்தான்.

உன் சகோதரன் சைமனை விரோதியாக்கியதற்காக பெருமைப்படு தோழனே!

இளைஞன் கிழ் நோக்கி குத்திட்டிருந்தான். திடுக்கென்று விதிர்த்துக் கொண்டு அழுதான்.

அழுகையுடன் பேசத் தொடங்கினான்.

என்னுடையது தான். எல்லாம் என்னுடைய பிழை தான். அவன் துரத்தப்பட்டது என்னால் தான். என்னைக்  காரணமாய்க் கொண்டே அம்மா அவனை வெளியே அனுப்பினாள். நான்! நான் மட்டுமே தண்டிக்கப்பட வேண்டியவன்.

அலட்சியமாய் நமட்டுச் சிரிப்புடன் இளைஞனை பார்த்தான் அவன்.

ஒன்றே ஒன்று தான் என்னிடம் உள்ளது சகோதரா! என் வாழ்வு. அதை நான் சமர்ப்பிக்கிறேன். அதற்கான முழு உரிமையும் எனக்குண்டு என நான் நம்புகிறேன்.

அது வரை இருந்த அசைவின்மை மெல்ல நகர்ந்தது. அது ஒரு ஸ்தூல வடிவெடுத்து எடுத்து சுழலத் தொடங்கியது. ஒளி உயிருள்ள பொருள் போல தனக்குள் தானே முணங்கிக் கொண்டிருப்பது போல அறையெங்கும் அலையாடியது. அதற்கும் இளைஞனின் அழுகைக்கும் ஒத்திசைவு ஆனது போல மெல்ல சுருங்கி விரிந்து துண்டாகி நீண்டு கொண்டிருந்தது.

உன்னுடைய வாழ்வு?
அதை வைத்து யாருக்காக சூதாடுகிறாய்?
உன் சகோதரனின் கழுத்துடையும் தளைகளை உன் வாழ்வினைக் கொண்டு உருவாக்குகிறாயா?
சொல்! ஏன் நிலத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாய். என்னைப் பார்த்து சொல். நீ கூறும் இந்த வாழ்விற்கு என்ன அர்த்தம்?

ஓன்றுமில்லை!

கேட்காதே! சகோதரா. என்னிடம் எதைப்பற்றியும் கேட்காதே!

மெல்ல அருகமர்ந்த செந்தாடிக் காரன், அவனது கண்களையே உற்று நோக்கினான். சலனத்துடன் துடிதுடித்துக் கொண்டிருந்த வண்ணத்துப்பூச்சி இறகுகளைத் தான் அவனால் எண்ண முடிந்தது. ஆம்! ஏன் இத்தனை பரிதவிப்பு. ஆழ்ந்த மௌனத்துடன் பெரு மூச்சிட்டான். பின் மெல்ல நகர்ந்து வெளியே செல்ல எத்தனித்தான்.

நகரெங்கும் மக்கள் ஆரவாரத்துடன் கூச்சலிட்டும், பேசிக் கொண்டும் இருந்தனர். அறிவிப்பினைப் பற்றி மட்டுமே அனைவரது பேச்சும் இருந்தது.சக மனிதனின் மரணத்தை அருகிருந்து பார்ப்பதைப் பற்றிய எண்ணம் அவர்களிடம் இருந்திருக்கக் கூடுமோ என்பதை ஊகித்தறிய முடியவில்லை. ஆனால் எல்லோருமே கிளர்ச்சி நிலையில் இருந்தனர். தண்டனைப் பற்றியதன்றி வேடிக்கை பார்க்கும் மனோ நிலைக்கு எல்லோறூம் இருக்கின்றனரோ என்று யோசிக்கத் தோன்றியது.


கிராமத்திற்கு நேர் எதிரே அந்த மலைக்குன்று இருந்தது. குத்துச்செடிகளும் கூரிய முட்கள் அடர்ந்த விஷச்செடிகளும் அதிகமும் அடர்ந்த வழிப்பாதை. அலையலையாய் அனல் படர்ந்த வெளிர் சாம்பல் மலை.


உன் கனவினுள் மட்டுமே நான் வாழ்கிறேன்
வலியினால் உருக்கொண்ட நிலம் என் உடல்
தன்னந்தனியினுள் அமிழ்ந்திருக்கும் வலியின் நீள் கொடுக்குகள்.
உனக்குள்ளிருந்து ஒலிக்கிறது
சாசுவதத்தின் நீள் வட்டச்சுழல் அதிர்வுகள்.
நான் இங்கிருக்கிறேன்
என்னுடன் அமர்ந்திருக்கிறது அது
என் உடலினுள் மீள மீள அதனை நான் சுவீகரிக்கிறேன்
அதன் நீர்மையினுள் காலாதீதமாய்
வீங்கிக் கிடக்கிறது தனிமைப் பிணம்
வா!
வா!
நாளையும் அதன் மறு நாளும்
இன்றிலிருந்து ஆரம்பிக்கிறது அதன் தனிமைக் கோடு
எல்லையின் 'இப்புறமும் அப்புறமும்
பல நூறு துண்டுகளாய் சதைத்து உதிர்த்து வைத்துக் கொண்டிருக்கிறேன்
வலி என்பதிலிருந்து உன்னைத் தொடர்கிறேன்
வலி என்பதிலிருந்து உன்னை அழைக்கிறேன்
வலி என்பதிலிருந்து உன்னை வெறுக்கிறேன்
வலி என்பதிலிருந்து உன்னை அடைகிறேன்
வலி என்பதிலிருந்து உன்னை கடக்கிறேன்
வலி
வலி
வலி
வலியினால் உருக்கொண்டது என் நிலம்
உன் கனவினுள் வாழ்கிறது என் வலி


எந்த உணர்ச்சியுமின்றி அவனை உற்று நோக்கினான் செந்தாடிக்காரன். பின் வெளியே சென்றான்.

வெளிர்ந்து அடர்ந்த உதிரம் உறிஞ்சும் அட்டைப் பூச்சியைப் போல அந்த நிலம் காட்சியளித்தது. மக்கள் தங்கள் இறுதிப் பிரார்த்தனைகளை அங்கு ஒரு ஆரவாரத்துடன் கூச்சலிட்டனர். அது பாம்புகள் மொலுமொலுப்பதைப் போல சூழலில் அடர்ந்தது.

மந்தையை வழி நடத்தும் கிழவன் சிமியோன். வளைந்த முதுகு. தோல் சுருங்கி திமிறும் நெஞ்செலும்புகள். குழி விழுந்த பொக்கை கன்னங்கள். பழுத்து சிவந்த புரையோடிய கண்கள். புடதியில் மட்டும் உதிராது தொங்கிக் கொண்டிருக்கும் வெண் மயிர். முட்ச்சிட்ட புருவங்கள். வரியோடிச் சுருங்கிய முன் நெற்றி. உள்ளொடுங்கிய மார்பு புடைத்து துருத்தும் தோள். காற்றிலாடும் சிறு செடியைப் போல அலையாடும் உடல். சூனியக் கிழவனின் கைகளில் சிலுவை முத்திரை.

மக்கள் அனைவரது கைகளிலும் உருளைக் கற்கள். தங்களுக்குள் பய பக்தியுடனும் அமைதியுடனும் அவர்கள் எதிர்பார்த்து நின்றிருந்தனர்.

நின்று கொண்டிருந்த மக்களை யூதாஸ் பார்த்தான். எதிரெதிர் காந்தத் துண்டங்களுக்கிடையில் நகரும் உலோகக் குண்டைப் போல ஊசலாடியது அகம்.

இன்று! இன்று! நாளையல்ல!
இன்றே! தேவனின் அற்புதம் நிகழும் நாள்.

வெறியுடனும் இளைஞனின் இல்லத்தை நோக்கி முதற் கல்லை எறிந்தாள் அவள்.

சிலுவைகள் செய்யும் இழிமகனே! செத்தொழி!

வசைகளால், நொதிக்கும் சளிப்படலம் போல தெரு உருமாறியது. எதிரில் நின்றிருந்த அனைவரும் கத்தினர். கற்கள் பெருகி பெருகி பெரும் பாறாங்கல்லாய் அந்த வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. செந்தாடிக்காரன் கதவை இழுத்து மூடினான்.

இளைஞன் மெல்ல நகர்ந்து தன் சிலுவை முன் குந்தி அமர்ந்தான். சுத்தியலை எடுத்து வேலையை தொடங்கினான். வெளி அவனை அணுகவே இல்லை.

மரத்துண்டுகளை உளி பிளப்பது போல காலமும் பிளந்து நகர்ந்தது.

செந்தாடிக்காரன் அவனை தவிப்புடன் மீண்டும் பார்த்தான். அவனிடமிருந்து சுத்தியலைப் பிடுங்கி, சிலுவையை தன் தலைக்கு மேல் தூக்கி சுவற்றில் எறிந்தான்.

நீ இதைக் கொடுக்கப் போகிறாயா?
ஆமாம்.
உனக்கு கூசவில்லை?
இல்லை.
தரையில் காறித் துப்பினான் செந்தாடிக்காரன்.

அங்கும் இங்குமாய் பரபரத்து தேடி வாய்ச்சியை எடுத்தான் இளைஞன்.

செந்தாடிக்காரனை நோக்கி மன்றாடினான்.

விட்டுவிடு! நண்பா! என்னை விட்டு விடு!
என் வழியில் நான் செல்கிறேன்.

எந்த வழி?
பெரு மூச்சுடன் அமர்ந்தன் செந்தாடிக்காரன்.

இத்தனை நாட்களில் என் நண்பனுக்கு என்னவாயிற்று?
ஏன் இப்படி இருக்கிறாய்?

கடவுள்! என சொல்ல முயன்று அடிச் சிரிப்புடன் தன்னை அடக்கிக் கொண்டான் இளைஞன்.

விடு நண்பா! நான் எனக்குள்ளேயே போராடிக் கொண்டிருக்கிறேன்.

ஏன்?

தெரியவில்லை.

யூதாஸ் பொறுமையிழந்திருந்தான். அசையாது நின்றிருந்த இளைஞனை உற்றுப் பார்த்தான். அவனது பார்வை உலகைக் கடந்திருந்தது. அவிழ்க்கவே இயலாத இருள்.

பார்வைக்கு எட்டிய தொலைவு வரை இருள். அப்பால் பள்ளத்தாக்கு. மலையுச்சியின் மோனம். காற்றின் உள்ளீடற்ற கமகங்கள். முகில்களின் மர்ம நகர்வு. ஒளி பின்னிய நிழல் உச்சிப்பாறையில் தெளிந்து அலைந்தது. அதனுள் அவன் வீசியெறிந்த சிலுவை ஒளியிலிருந்து இருளை நோக்கிக் கொண்டிருந்தது.

பார்வையை விலக்கினான் யூதாஸ்.

உன்னால்...நீ! நீ! பேச முற்பட்டு திக்கித்தான்.

சதுக்கத்தில் ஊன்றி நிற்கும் தனித்த மரத் தூண் போல மரத்து நின்றான்.

இளைஞனின் கண்கள் இறுக்க மூடியிருந்தது. அதில் தெளிவாக அந்த ஒற்றை மனிதனை அவன் அறிந்திருந்தான். அது கால காலமாய் அவனைத் துரத்திக் கொண்டிருக்கும் முகம்.