புதன், 6 மே, 2020

ஹிப்பி

கட்டுப்பாடின்மை ஒரே சமயம் தன் இரு புறங்களைக் கொண்டுள்ளது. முழுக்க முழுக்க பாவனையானதாகவும், குழந்தைத்தனமானதாகவும். மனிதர்களுக்குள் பெரும்பாலும் இந்த பாவனையின் அதன் பல்வேறு பிம்பங்களின் ஊடாக மட்டுமே சுதந்திரத்தனம் என்பது நிலை கொள்வதை மிக அணுக்கமாக என் மூலமே உணர்ந்திருக்கிறேன். இருப்பது போல ஆனால் இல்லை.  ஆனால் பழங்குடித் தன்மை அப்படி அல்ல. அது கொண்டாட்டத்திற்காக ஒன்றிலிருக்கும் ஆதி மிருகம். அதே சமயம் அதன் மூர்க்கமும் வன்மமும் கூடத்தான். பாலினம் கடந்த வன்மம். ஓஷோ அதைத் தவற விட்டிருந்தாரா? இல்லை அதை சிதறடித்து கலங்கடித்தார் என்று சொல்லலாம். எல்லாவற்றிலும் நம்பிக்கை இழக்கும் சமூகம் என்னவாகும். ஒன்று முழுக்க தன்மய நோக்குடன் அத்தனையும் நோக்கும் ஒரு சமூகம் உருவாகியிருக்குமோ. இரு உலகப் போர்களுக்குப் பின் முற்றிலும் அபத்தக் குழியில் விழத் துடிக்கும் இளைஞர்களின் தலைமுறையில் ஹிப்பித் தனம் பீடித்தது. அவர்கள் தன்னளவிலேயே கலகக் காரர்களாக இருக்க விரும்பினர். மதம் கடந்த பால் கடந்த உடல் கடந்த ஒரு சமூக அமைப்பை உருவாக்க எத்தனித்தனர்.

உண்மையில் போதை எப்பொழுது இயற்கையினுள் ஒன்றுகிறது என்ற கேள்வியே அபத்தமாக இருந்தது. மொத்த இயற்கையும் சற்று போதைத் தனத்துடன் தான் இருக்க முடியும். தர்க்க ஒழுங்கற்ற அதன் மர்மமே அதன் இயல்பு. மனிதன் அதிலிருந்து தப்ப விளைபவனாகவும் அதனுள்ளே மூழ்கி சாகக் கூடியனாகவும் இருக்கிறான். அது தான் அவன் பிரச்சனை. ஒரே நேரத்தில் அவன் அதனால் ஈர்க்கவும் அதை வெறுக்கவும் நினைக்கிறான். இந்த முரண்களுக்குள் தான் ஹிப்பியும் இருந்திருக்க முடியும். அவன் அதனை அள்ள அள்ள இன்னும் இன்னும் என்று அது நிறைந்து கொண்டிருந்தது.

கடலினுள் நான் இருக்கிறேன்
என்னுள் கடல் இருக்கிறது

போதையினுள் சுய போதமின்றி குதிக்கிறோம். பின் திரும்பவும் ஒரு மைதுனம் போல அதனைத் திரும்ப திரும்ப செய்யத் துடிக்கிறோம். கட்டற்று இருப்பது என்பது போதையன்றி வழியின்றி போகும் பொழுது நாம் முழுக்க தோற்கடிக்கப்பட்டிருப்போம்.

தன் தர்க்கங்களிற்குள் அதனை அகப்படுத்திக் கொள்ள அவன் கலையைப் படைத்தான். ஆனால் கலை இயற்கையை மறு உருவாக்கம் செய்வதன்றி வேறென்ன. அதன் ஒழுங்கற்ற ஒன்றே அதை அழகாக்குகிறது.

ஒழுங்கற்றது வடிவமற்றதாய் உள்ளது. 
பிரக்ஞைக்குள் அகப்படாது இருப்பதை கடவுள் ஆக்குகிறோம். மூலமாய் வடிவம் ஒழுங்கு அமைகிறது. பின் நிலைத்த தன்மையை அதற்கு அளிக்கிறோம். மாறாத ஒன்றாய் அதை ஆக்குகிறோம். கட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கும அதனுள் பீறிடக் காத்திருக்கும் எதிர் நிலைக் கடவுளர்களை உருவாக்குகிறோம். முரண் தனக்குள் சமநிலையை அடைகிறது.

ஆனால் எப்பொழுதும் நேர் எதிர் நிலைகளில் அது அப்படி அமைந்து விடுவதில்லை. ஒரு இரண்டுமற்ற நிலை மனிதர்களாகவே நாம் பெரும்பாலும் இருக்கிறோம். 

கனவு

கனவு மொழியாவதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். வெவ்வேறு தளங்களுக்குள்புகுந்து வெளிவருதல். கால இடமற்ற வெளி ஒன்று ஸ்தூலமாக உருவாகிக் கொண்டிருக்கும் பொழுதே இல்லாமல் ஆவதும். காலம் என்ற அளவை உடலால் பிளவுறுதல். உடல் வலி மட்டுமே ஆனதாய் அந்த வலியினால் உருவாகும் மொழி கொண்டதாய் ஆகி விடுதல். 

மரணம் நித்தியத்துவத்துடன் அலையாடியது. மரணம் பற்றி நான் இவ்வாறு நினைத்துக் கொண்டேன்.

"கடல் அலையினில் அலைக்கழியும் மதுக்குப்பி போல"

துரத்திக் கொண்டிருக்கும் ஒன்று திடுமென்று நின்றது. அருகில் அன்போடு அழைத்தது. அதன் சொற்கள் அழைத்துச் சென்ற தூரம் ஒளி கொண்டிருந்தது. ஒளி என்பது நிலையற்றதாய் இருந்தது. சிறிது துளிர் போதும். இருள் வந்து அணைந்து கொள்ளும். பின் இருள் மட்டுமே ஆனது.  இருள் தன் பிரத்யேகமான காட்சியினை ஒளிர்த்தது. 


சனி, 8 பிப்ரவரி, 2020

உப்புக் கவிதைகள்

நடு நிசியின்கடலை நான் அறிவேன்
அலைகளுக்குள் உருவாகிக் கொண்டிருக்கும்
மலைக்குவடுகளில் மழை பெய்கிறது
நீர்மை நீரினுள் கலந்த பின் அமைதியற்றிருந்தது
எம்பி நிற்கும் பாறை களினுள் தேங்கி இருக்கிறேன்
நீ சரிவிலிருந்து வீழ்கிறாய்
நொதிக்கும் உன் பெருக்கினுள் நான் கையடிக்கிறேன்
நுரை தள்ளித் ததும்பும் கறையினில் அலை உன்னைப் போலில்லை
நடு நிசியின் கடலை நான் அறிவேன்
அது உன்னைப் போலவே தூங்கிக் கொண்டிருக்கிறது

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

உப்பு

நான் ஒரு கட்டற்ற ஒன்றினை வைத்திருக்கிறேன்
அது உப்பாலானது
நேற்று அதனிடம் இப்படி சொன்னேன்
உன் குமிழிகளின் மூலமே என் உயிர் நிலைக்கிறது. நீ விடைத்தெழும் ஒவ்வொரு நொடியிலும் உன்னுடன் உப்பாகி விடுவது மட்டுமே நான் விரும்புவது. அது நீயாவதும் கூட. இந்த மிகப்பெரிய நீ உன் அலைகளைக் கொண்டு என்னை உடைத்துக் கொண்டிருக்கும் பொழுதே சாவதானமாக அங்கே அமர்ந்திருக்கிறாய். கடல் தன் பன்னிலடங்கா கரங்களால் என்னைத் தழுவிக் கொண்டிருக்கிறது. பாசி பீடித்த என் தோலினுள் அறைந்து அறைந்து நக்குகிறாய். நான் உப்பால் ஆனவன் உன்னைப் போலவே.

என்னை இன்னொரு முறையும் முத்தமிடு.

வெள்ளி, 10 ஜனவரி, 2020

அவளை வணங்குவோம்- அம்புதாயனத்துக் காளி- பிரபு கங்காதரன்




ஊருக்கு நடுவில் மலந்து கிடக்கிறாள் வண்டி மலச்சி. தெருவை நிறைத்துக் கிடக்கிறது அவள் உடல். அவள் அருகில் சின்னச் செப்பு சிலையாய் அமைந்திருக்கிறான் முத்து வைரவன். மிகச்சிறிய உடல். குன்றாக் காமத்திற்கு அருகில் வெறித்துக் கொண்டிருக்கும் உடல். தின்ன இயலா மாபெரும் புல் வெளியை அளைந்து கொண்டிருக்கும் எருமை போலக் காமம் கொப்பளித்துக் கொண்டிருக்கிறது.

அதை வணங்குவோம். வேறு வழியில்லை இச்சிறிய உடல்களுக்கு.
ஆனால் அது மாபெரும் வெளியாய் உருவாகும் தருணம் உண்டு. அது உடல் தன் ஸ்தூலத் தன்மையைக் கலைத்து எல்லாவற்றிலும் கலந்து தோற்றம் கொள்வது. தின்னத் தின்ன திகட்டாதது. அங்கு எங்கும் எதிலும் அவள் உடலாக ஆவதும். அவள் உடல் எல்லாமாமும் ஆவதும்.

மூணு சீட்டுக் காரனைப் போல மொழி அமைந்து விடும் பொழுது இந்தக் கலைதல் உருவாகி விடுகிறது. இந்த ஒற்றைக் கட்டிலில் தன்னந்தனியே வெறுமனே அமர்ந்திருக்கும் பொழுது வெளியை ஜன்னல் வழி நோக்குகிறேன். பாலையின் இம்மழைக் காலம், வானம், காற்று அண்ணாந்து நோக்க சிதறிக் கொண்டிருக்கும் கரு நீலப் பெருவெளி, சலசலத்து தூத்திக் கொண்டிருக்கும் மழை, உள்ளுள் பிரவாகமெடுக்கும் காமத்தை அதக்கி அதக்கி உருண்டையாக்கிக் கொண்டிருக்கிறேன். அது மெல்ல காட்சி ரூபமெடுக்கிறது. என் முன் அதன் அந்தர வெளியில் அவள், அவள் உடல், நீர், காற்று, மண், மணம், சுவை, ஸ்தூலமாய் நிற்கும் அனைத்தும் உடல் மட்டுமே கொண்டதாய் உருவாவதை தவிர்க்க இயலவில்லை. அவள் மட்டுமே ஆனதான லோகம் இது.

அவளை ஸ்பரிசித்த நொடிகளை எண்ணிப் பார்க்கிறேன். நாக்கு எனும் உறுப்பு கண்டறிந்த எண்ணிலடங்கா சுவைகளை அவள் உடல் எனக்கு தந்திருந்தது. உடல் கொண்டு மட்டும் அறிய இயலா மாய நதி என் மீது படர்ந்து நான் அடிக் கூழாங்கல்லாய் ஆகி விட, அவள் உடல் என்னை மூழ்கடித்து நகர்ந்து கொண்டிருந்தது.

அந்த நிலம் எப்படி இருந்தது?

மரங்களால், செடிகளால், கொடிகளால், புதர்களால் பச்சை சூழ்ந்தது. அங்கு அவள், எதுவும் அவள் வாசனை.

காலம் தனக்கேயான தனித்தன்மைகளுடன் அவளை வாரி வாரி இறைத்தது. காரையார் அணையின் பானதீர்த்தத்தின் அடியில் பத்து நிமிடங்களுக்கு மேல் நிற்பவன் இறந்து போவான். வேறு வழியில்லை.

கார்காலம் - ஆவணி, புரட்டாசி
கூதிர்காலம் - ஐப்பசி, கார்த்திகை
முன் பனிக்காலம் - மார்கழி, தை
பின் பனிக்காலம் - மாசி, பங்குனி
இளவேனிற்காலம் - சித்திரை, வைகாசி
முது வேனிற்காலம் - ஆனி, ஆடி

இக்காலங்களின் பிரத்யேக குணமும் மணமும் சுவையும் அந்தரங்கமாய் மொழியாவது. மொழி மூலம் அதைத் தொட்டு தொட்டு உவப்பது. அக்காலங்களின் மொட்டவிழும் பூக்களின், காய்களின், கனிகளின் அத்துணை ரகசியங்களும் மெல்ல மெல்ல உன் உடலாய் உருக்கொள்வது.

ஆம். நான் உன் உடலைக் கண்டேன். தொட்டேன். முகிழ்த்தேன். சுவைத்தேன். விழுங்கினேன். விக்கலெடுத்தே செத்தேன். விழுங்க விழுங்க இன்னும் இன்னும் என்று என் உடல் முழுக்க நீயானாய். நானும் நீயானாய். ஒரு சரணாகதி. அது மட்டுமே வாய்த்த வெறும் ஆணுடல் நான். அதன் குறைபாடுகளுடன் உன்னிடம் வந்தேன். நீ அத்தனையும் தந்தாய் மழையைப் போல.

"நிதம்ப மயிர் நாற்றம்"

"களி மண் வெட்ப்புகளுக்குள் வயல் நண்டு ஊடுறுவுவது"

" ஊழித் தாண்டவத்தில் எரியும் பெருவனம்"

"கோடை வனத்தின் மக்கிய வாசனை"

"ஆம்பல் குளத்தி களி மண் வாசம்"

"நொச்சியின் கிறங்கடிக்கும் மணம்"

"காயும் ஈர வெம்பின் வாசம்"

"மார்கழியின் பரங்கிக் கனிகள்"

"அளவிற் பெரிய பௌர்ணமியை தனித்துக் கடப்பது"

"நீலம் பாரித்த கழுத்தில் பூக்கும் விஷக் காமம்"

"
மீனூறும் வாசம் ஒத்த உன் முதல் திரவம்"

"பாம்புக்கு நீர் கொண்டு போகும் நத்தை"

"உன் பின்னங்கழுத்தெங்கும் பொங்கும் தாழம்பூ"

"வெள்ளப் பெருக்கெடுப்பில் கரையும் பாசி மணம்"

"பனியில் ஊறிக் கிடக்கும் நெல்"

"குறுவை நன்னீரின் வாசம்"

"இலுப்பை மரங்களுக்கடியில் அந்தியில் வீசும் மணம்"

"எருக்கம் பூ பிசுபிசுப்பு"

"கோடை மழையின் மண் வாசம்"

"இள நுங்கின் மணம்"

"தீதலை பூத்த கரிய அல்குல்"

"சிறியா நங்கையின் மணம்"

"சக்கரை வள்ளி அவிக்கும் மணம்"

"விதைப்பு வயலின் கருவைப் பிசின் வியர்வை"

"இளவெயில் சூடு"

"வயலெலி விழுங்கிய சாரைப்பாம்பின் ஊறல்"

"சித்திரை வெயில் ஒத்த உன் அல்குல்"

"நுணா மரப்பூக்களின் நறுமணம்"

"நறை வழியும் இடும்ப மரம்"

"கொடுக்கா புளியின் துவர்ப்பும் புளிப்பும்"

"மிக நீண்ட பயணத்தின் கட்டுச்சோறு வாசனை"

"தின்னத் திகட்டா கிழுவைத் தளை"

"கிழட்டு புளியமர வேர் நிறம்"

"நறும் பச்சைக் களி மண்"

"எரியும் கருப்பங்காடு"

இது ஒவ்வொன்றும் அவள் அவள் உடல் அவள் காமம்.




காலங்களின் மாறாத தன்மையினுள் முயங்கும் உடல்கள். பெண் உடல் ஆண் மனத்தில் எப்படியெல்லாம் உருக்கொள்கிறது. அவளே இப்பிரபஞ்ச லீலையாகி விடுகிறாள். விட்டில் பூச்சிகள் போல ஆண் அவ்வைணையா சோதியில் கலக்கத் துடித்து சாகிறது. ஒரு வகையில் அதுதான் அவனுக்கான கடைத்தேற்றம் போல.



உண்மையில் காளியின் மகா உடலைத் திரும்பத் திரும்பக் கடக்க முயலும் ஒரு  எளிய ஆணின் பிதற்றல் போல பித்தாகி விட்டது. அதே நேரம் காளியைப் புணர்ந்ததாலேயே சிவனாகி விடும் பித்து வாய்த்து விடுகிறது.

நம் மரபின் சாக்த மரபின் கண்ணி இது. உடல் எனும் ஒற்றை பெரும் பரப்பில் அள்ளி அள்ளி இட்டும் நிரம்பா பிலத்தினுள் காலாதீதமாய் சொட்டிக் கொண்டிருக்கிறது ஆணின் சுக்கிலம்.


வணங்குவது என்பது அவளை புணர்வைதைத் தவிர வேறென்ன.

அதனால் அவளை வணங்குவோம்.