புதன், 6 மே, 2020

ஹிப்பி

கட்டுப்பாடின்மை ஒரே சமயம் தன் இரு புறங்களைக் கொண்டுள்ளது. முழுக்க முழுக்க பாவனையானதாகவும், குழந்தைத்தனமானதாகவும். மனிதர்களுக்குள் பெரும்பாலும் இந்த பாவனையின் அதன் பல்வேறு பிம்பங்களின் ஊடாக மட்டுமே சுதந்திரத்தனம் என்பது நிலை கொள்வதை மிக அணுக்கமாக என் மூலமே உணர்ந்திருக்கிறேன். இருப்பது போல ஆனால் இல்லை.  ஆனால் பழங்குடித் தன்மை அப்படி அல்ல. அது கொண்டாட்டத்திற்காக ஒன்றிலிருக்கும் ஆதி மிருகம். அதே சமயம் அதன் மூர்க்கமும் வன்மமும் கூடத்தான். பாலினம் கடந்த வன்மம். ஓஷோ அதைத் தவற விட்டிருந்தாரா? இல்லை அதை சிதறடித்து கலங்கடித்தார் என்று சொல்லலாம். எல்லாவற்றிலும் நம்பிக்கை இழக்கும் சமூகம் என்னவாகும். ஒன்று முழுக்க தன்மய நோக்குடன் அத்தனையும் நோக்கும் ஒரு சமூகம் உருவாகியிருக்குமோ. இரு உலகப் போர்களுக்குப் பின் முற்றிலும் அபத்தக் குழியில் விழத் துடிக்கும் இளைஞர்களின் தலைமுறையில் ஹிப்பித் தனம் பீடித்தது. அவர்கள் தன்னளவிலேயே கலகக் காரர்களாக இருக்க விரும்பினர். மதம் கடந்த பால் கடந்த உடல் கடந்த ஒரு சமூக அமைப்பை உருவாக்க எத்தனித்தனர்.

உண்மையில் போதை எப்பொழுது இயற்கையினுள் ஒன்றுகிறது என்ற கேள்வியே அபத்தமாக இருந்தது. மொத்த இயற்கையும் சற்று போதைத் தனத்துடன் தான் இருக்க முடியும். தர்க்க ஒழுங்கற்ற அதன் மர்மமே அதன் இயல்பு. மனிதன் அதிலிருந்து தப்ப விளைபவனாகவும் அதனுள்ளே மூழ்கி சாகக் கூடியனாகவும் இருக்கிறான். அது தான் அவன் பிரச்சனை. ஒரே நேரத்தில் அவன் அதனால் ஈர்க்கவும் அதை வெறுக்கவும் நினைக்கிறான். இந்த முரண்களுக்குள் தான் ஹிப்பியும் இருந்திருக்க முடியும். அவன் அதனை அள்ள அள்ள இன்னும் இன்னும் என்று அது நிறைந்து கொண்டிருந்தது.

கடலினுள் நான் இருக்கிறேன்
என்னுள் கடல் இருக்கிறது

போதையினுள் சுய போதமின்றி குதிக்கிறோம். பின் திரும்பவும் ஒரு மைதுனம் போல அதனைத் திரும்ப திரும்ப செய்யத் துடிக்கிறோம். கட்டற்று இருப்பது என்பது போதையன்றி வழியின்றி போகும் பொழுது நாம் முழுக்க தோற்கடிக்கப்பட்டிருப்போம்.

தன் தர்க்கங்களிற்குள் அதனை அகப்படுத்திக் கொள்ள அவன் கலையைப் படைத்தான். ஆனால் கலை இயற்கையை மறு உருவாக்கம் செய்வதன்றி வேறென்ன. அதன் ஒழுங்கற்ற ஒன்றே அதை அழகாக்குகிறது.

ஒழுங்கற்றது வடிவமற்றதாய் உள்ளது. 
பிரக்ஞைக்குள் அகப்படாது இருப்பதை கடவுள் ஆக்குகிறோம். மூலமாய் வடிவம் ஒழுங்கு அமைகிறது. பின் நிலைத்த தன்மையை அதற்கு அளிக்கிறோம். மாறாத ஒன்றாய் அதை ஆக்குகிறோம். கட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கும அதனுள் பீறிடக் காத்திருக்கும் எதிர் நிலைக் கடவுளர்களை உருவாக்குகிறோம். முரண் தனக்குள் சமநிலையை அடைகிறது.

ஆனால் எப்பொழுதும் நேர் எதிர் நிலைகளில் அது அப்படி அமைந்து விடுவதில்லை. ஒரு இரண்டுமற்ற நிலை மனிதர்களாகவே நாம் பெரும்பாலும் இருக்கிறோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக