திங்கள், 4 பிப்ரவரி, 2019

கிறுஸ்துவின் கடைசி சபலம் 11


நகர் முழுதும் அறிவித்துக் கொண்டிருந்தான் அந்த நிமித்தோன். செல்லும் இடமெல்லாம் மக்கள் கூடி நின்று சலசலத்துக் கொண்டிருந்தனர். செந்தாடிக்காரன் அறை ஜன்னல் வழியே கவனித்துக் கொண்டிருந்தான்.

பெருமைப்படு. உன் சகோதரனுக்காக!

எரிச்சலுடன் கால்களை நிலத்தில் மாறி மாறி அறைந்தான்.

உன் சகோதரன் சைமனை விரோதியாக்கியதற்காக பெருமைப்படு தோழனே!

இளைஞன் கிழ் நோக்கி குத்திட்டிருந்தான். திடுக்கென்று விதிர்த்துக் கொண்டு அழுதான்.

அழுகையுடன் பேசத் தொடங்கினான்.

என்னுடையது தான். எல்லாம் என்னுடைய பிழை தான். அவன் துரத்தப்பட்டது என்னால் தான். என்னைக்  காரணமாய்க் கொண்டே அம்மா அவனை வெளியே அனுப்பினாள். நான்! நான் மட்டுமே தண்டிக்கப்பட வேண்டியவன்.

அலட்சியமாய் நமட்டுச் சிரிப்புடன் இளைஞனை பார்த்தான் அவன்.

ஒன்றே ஒன்று தான் என்னிடம் உள்ளது சகோதரா! என் வாழ்வு. அதை நான் சமர்ப்பிக்கிறேன். அதற்கான முழு உரிமையும் எனக்குண்டு என நான் நம்புகிறேன்.

அது வரை இருந்த அசைவின்மை மெல்ல நகர்ந்தது. அது ஒரு ஸ்தூல வடிவெடுத்து எடுத்து சுழலத் தொடங்கியது. ஒளி உயிருள்ள பொருள் போல தனக்குள் தானே முணங்கிக் கொண்டிருப்பது போல அறையெங்கும் அலையாடியது. அதற்கும் இளைஞனின் அழுகைக்கும் ஒத்திசைவு ஆனது போல மெல்ல சுருங்கி விரிந்து துண்டாகி நீண்டு கொண்டிருந்தது.

உன்னுடைய வாழ்வு?
அதை வைத்து யாருக்காக சூதாடுகிறாய்?
உன் சகோதரனின் கழுத்துடையும் தளைகளை உன் வாழ்வினைக் கொண்டு உருவாக்குகிறாயா?
சொல்! ஏன் நிலத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாய். என்னைப் பார்த்து சொல். நீ கூறும் இந்த வாழ்விற்கு என்ன அர்த்தம்?

ஓன்றுமில்லை!

கேட்காதே! சகோதரா. என்னிடம் எதைப்பற்றியும் கேட்காதே!

மெல்ல அருகமர்ந்த செந்தாடிக் காரன், அவனது கண்களையே உற்று நோக்கினான். சலனத்துடன் துடிதுடித்துக் கொண்டிருந்த வண்ணத்துப்பூச்சி இறகுகளைத் தான் அவனால் எண்ண முடிந்தது. ஆம்! ஏன் இத்தனை பரிதவிப்பு. ஆழ்ந்த மௌனத்துடன் பெரு மூச்சிட்டான். பின் மெல்ல நகர்ந்து வெளியே செல்ல எத்தனித்தான்.

நகரெங்கும் மக்கள் ஆரவாரத்துடன் கூச்சலிட்டும், பேசிக் கொண்டும் இருந்தனர். அறிவிப்பினைப் பற்றி மட்டுமே அனைவரது பேச்சும் இருந்தது.சக மனிதனின் மரணத்தை அருகிருந்து பார்ப்பதைப் பற்றிய எண்ணம் அவர்களிடம் இருந்திருக்கக் கூடுமோ என்பதை ஊகித்தறிய முடியவில்லை. ஆனால் எல்லோருமே கிளர்ச்சி நிலையில் இருந்தனர். தண்டனைப் பற்றியதன்றி வேடிக்கை பார்க்கும் மனோ நிலைக்கு எல்லோறூம் இருக்கின்றனரோ என்று யோசிக்கத் தோன்றியது.


கிராமத்திற்கு நேர் எதிரே அந்த மலைக்குன்று இருந்தது. குத்துச்செடிகளும் கூரிய முட்கள் அடர்ந்த விஷச்செடிகளும் அதிகமும் அடர்ந்த வழிப்பாதை. அலையலையாய் அனல் படர்ந்த வெளிர் சாம்பல் மலை.


உன் கனவினுள் மட்டுமே நான் வாழ்கிறேன்
வலியினால் உருக்கொண்ட நிலம் என் உடல்
தன்னந்தனியினுள் அமிழ்ந்திருக்கும் வலியின் நீள் கொடுக்குகள்.
உனக்குள்ளிருந்து ஒலிக்கிறது
சாசுவதத்தின் நீள் வட்டச்சுழல் அதிர்வுகள்.
நான் இங்கிருக்கிறேன்
என்னுடன் அமர்ந்திருக்கிறது அது
என் உடலினுள் மீள மீள அதனை நான் சுவீகரிக்கிறேன்
அதன் நீர்மையினுள் காலாதீதமாய்
வீங்கிக் கிடக்கிறது தனிமைப் பிணம்
வா!
வா!
நாளையும் அதன் மறு நாளும்
இன்றிலிருந்து ஆரம்பிக்கிறது அதன் தனிமைக் கோடு
எல்லையின் 'இப்புறமும் அப்புறமும்
பல நூறு துண்டுகளாய் சதைத்து உதிர்த்து வைத்துக் கொண்டிருக்கிறேன்
வலி என்பதிலிருந்து உன்னைத் தொடர்கிறேன்
வலி என்பதிலிருந்து உன்னை அழைக்கிறேன்
வலி என்பதிலிருந்து உன்னை வெறுக்கிறேன்
வலி என்பதிலிருந்து உன்னை அடைகிறேன்
வலி என்பதிலிருந்து உன்னை கடக்கிறேன்
வலி
வலி
வலி
வலியினால் உருக்கொண்டது என் நிலம்
உன் கனவினுள் வாழ்கிறது என் வலி


எந்த உணர்ச்சியுமின்றி அவனை உற்று நோக்கினான் செந்தாடிக்காரன். பின் வெளியே சென்றான்.

வெளிர்ந்து அடர்ந்த உதிரம் உறிஞ்சும் அட்டைப் பூச்சியைப் போல அந்த நிலம் காட்சியளித்தது. மக்கள் தங்கள் இறுதிப் பிரார்த்தனைகளை அங்கு ஒரு ஆரவாரத்துடன் கூச்சலிட்டனர். அது பாம்புகள் மொலுமொலுப்பதைப் போல சூழலில் அடர்ந்தது.

மந்தையை வழி நடத்தும் கிழவன் சிமியோன். வளைந்த முதுகு. தோல் சுருங்கி திமிறும் நெஞ்செலும்புகள். குழி விழுந்த பொக்கை கன்னங்கள். பழுத்து சிவந்த புரையோடிய கண்கள். புடதியில் மட்டும் உதிராது தொங்கிக் கொண்டிருக்கும் வெண் மயிர். முட்ச்சிட்ட புருவங்கள். வரியோடிச் சுருங்கிய முன் நெற்றி. உள்ளொடுங்கிய மார்பு புடைத்து துருத்தும் தோள். காற்றிலாடும் சிறு செடியைப் போல அலையாடும் உடல். சூனியக் கிழவனின் கைகளில் சிலுவை முத்திரை.

மக்கள் அனைவரது கைகளிலும் உருளைக் கற்கள். தங்களுக்குள் பய பக்தியுடனும் அமைதியுடனும் அவர்கள் எதிர்பார்த்து நின்றிருந்தனர்.

நின்று கொண்டிருந்த மக்களை யூதாஸ் பார்த்தான். எதிரெதிர் காந்தத் துண்டங்களுக்கிடையில் நகரும் உலோகக் குண்டைப் போல ஊசலாடியது அகம்.

இன்று! இன்று! நாளையல்ல!
இன்றே! தேவனின் அற்புதம் நிகழும் நாள்.

வெறியுடனும் இளைஞனின் இல்லத்தை நோக்கி முதற் கல்லை எறிந்தாள் அவள்.

சிலுவைகள் செய்யும் இழிமகனே! செத்தொழி!

வசைகளால், நொதிக்கும் சளிப்படலம் போல தெரு உருமாறியது. எதிரில் நின்றிருந்த அனைவரும் கத்தினர். கற்கள் பெருகி பெருகி பெரும் பாறாங்கல்லாய் அந்த வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. செந்தாடிக்காரன் கதவை இழுத்து மூடினான்.

இளைஞன் மெல்ல நகர்ந்து தன் சிலுவை முன் குந்தி அமர்ந்தான். சுத்தியலை எடுத்து வேலையை தொடங்கினான். வெளி அவனை அணுகவே இல்லை.

மரத்துண்டுகளை உளி பிளப்பது போல காலமும் பிளந்து நகர்ந்தது.

செந்தாடிக்காரன் அவனை தவிப்புடன் மீண்டும் பார்த்தான். அவனிடமிருந்து சுத்தியலைப் பிடுங்கி, சிலுவையை தன் தலைக்கு மேல் தூக்கி சுவற்றில் எறிந்தான்.

நீ இதைக் கொடுக்கப் போகிறாயா?
ஆமாம்.
உனக்கு கூசவில்லை?
இல்லை.
தரையில் காறித் துப்பினான் செந்தாடிக்காரன்.

அங்கும் இங்குமாய் பரபரத்து தேடி வாய்ச்சியை எடுத்தான் இளைஞன்.

செந்தாடிக்காரனை நோக்கி மன்றாடினான்.

விட்டுவிடு! நண்பா! என்னை விட்டு விடு!
என் வழியில் நான் செல்கிறேன்.

எந்த வழி?
பெரு மூச்சுடன் அமர்ந்தன் செந்தாடிக்காரன்.

இத்தனை நாட்களில் என் நண்பனுக்கு என்னவாயிற்று?
ஏன் இப்படி இருக்கிறாய்?

கடவுள்! என சொல்ல முயன்று அடிச் சிரிப்புடன் தன்னை அடக்கிக் கொண்டான் இளைஞன்.

விடு நண்பா! நான் எனக்குள்ளேயே போராடிக் கொண்டிருக்கிறேன்.

ஏன்?

தெரியவில்லை.

யூதாஸ் பொறுமையிழந்திருந்தான். அசையாது நின்றிருந்த இளைஞனை உற்றுப் பார்த்தான். அவனது பார்வை உலகைக் கடந்திருந்தது. அவிழ்க்கவே இயலாத இருள்.

பார்வைக்கு எட்டிய தொலைவு வரை இருள். அப்பால் பள்ளத்தாக்கு. மலையுச்சியின் மோனம். காற்றின் உள்ளீடற்ற கமகங்கள். முகில்களின் மர்ம நகர்வு. ஒளி பின்னிய நிழல் உச்சிப்பாறையில் தெளிந்து அலைந்தது. அதனுள் அவன் வீசியெறிந்த சிலுவை ஒளியிலிருந்து இருளை நோக்கிக் கொண்டிருந்தது.

பார்வையை விலக்கினான் யூதாஸ்.

உன்னால்...நீ! நீ! பேச முற்பட்டு திக்கித்தான்.

சதுக்கத்தில் ஊன்றி நிற்கும் தனித்த மரத் தூண் போல மரத்து நின்றான்.

இளைஞனின் கண்கள் இறுக்க மூடியிருந்தது. அதில் தெளிவாக அந்த ஒற்றை மனிதனை அவன் அறிந்திருந்தான். அது கால காலமாய் அவனைத் துரத்திக் கொண்டிருக்கும் முகம்.





















வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

நெடி

அவள் வியர்வையை உள்ளங்கைக்குள் பொத்தி வைத்திருக்கிறேன்.
அது கவிதைக்கே உண்டான கனவுகளை தோசைக் கல்லில் மாறி மாறி திரும்பிக் கொண்டிருந்தது.
மெல்ல கதவடைத்து விட்டு கனவுகளின் தாக்கோலைக் கொண்டு அதனை நறுக்கினேன்.
அறையெங்கும் வியாபிக்கும் நறுமணம்,
பலூன் பழங்களாக மிதந்தது.
கடைசியாக பசியுடன் அருந்திக் கொண்டிருந்த மதுக் கோப்பையில்,
சொட்டிக் கொண்டிருந்தன மழைத்துளிகள்.
தேங்கல் நதியின் பாசிப் படலங்களின் பிசுபிசுப்புடன் இருந்தது உள்ளங்கை.
அரவமின்றி உள் நுழைந்தது கதகதப்பு.
கனவுகள் தோசை மணத்துடன் பற்றி எரிய
உள்ளங்கைகைகளைக் கொண்டு நாசி அடைத்துக் கொள்கிறேன்.
வெளியெங்கும் உன் நெடியுடன் நனைத்துக் கொண்டிருக்கிறது மழை.

ஞாயிறு, 27 ஜனவரி, 2019

மொழி

வார்த்தைகளாலும் கவிதைகளாலும் ஆன ஒன்று வனாந்தரங்களில் தனித்து உலவிக் கொண்டிருந்தது.
தூரத்து மலைகளின் துணுக்குகளில்,
அணைந்தெரியும் கங்குப் பொதிகளில் தேங்கியிருந்தது
நாள் பட்ட பழைய மொழி.
சொல்லற்ற பிரதேசத்துப் புதை குழிகளில் இருந்து
தோண்டி எடுக்கப்பட்ட பிணக் குவியல்களில் அழுகிக் கொண்டிருந்தன கதைகள்.
அன்று முழுமையாக படர்ந்த இருள் வெளியிலிருந்து பிதுங்கி வெளி வந்தன ஒளிப் புழுக்கள்.
மெல்ல மெல்ல பற்றிக் கொண்டு எழுந்தது வானம்.
வார்த்தைகளாலும் கவிதைகளாலும் ஆன ஒன்று சொல்லிலிருந்தும் மொழியிலிருந்தும் திருகல் ஆணி போல கழன்று விழத் தொடங்கியது.
அது பெரும் மழைக் காட்டில் தன்னுடன் தான் மட்டுமே தனித்திருந்தது...
கதைகள் ஊறத் தொடங்கியதும் மிச்ச பிணங்கள் ஏரிந்தன கூட்டாக...

திங்கள், 3 டிசம்பர், 2018

நட்சத்திரங்கள் உதிர்ந்து கொண்டிருந்த வானம்

இன்னும் அலைந்து கொண்டிருக்கிறான் எங்கோடி கண்டன்.
நட்சத்திரங்கள் உதிர்ந்து கொண்டிருந்த வானில் இருந்து அமைந்தது ஜோதி. கருப்பனிடம் உள்ள பிணக்கில் சிறிது போட்டிருந்தான் போல.
குழலை எடுத்து தாகம் தீர ஊதத் தொடங்கினான்.
கருத்த வனம் அவனை மத்தகத்தில் இருத்தியது.
மெல்ல ஊன் பலியின் ரத்த வெள்ளம் சுனையெடுத்து கொதிந்தது
நட்சத்திரங்கள் உதிர்ந்து கொண்ட வானம் மழையை இரையெடுத்து நெளிந்தது.
ஊன் ஊன் ஊன்.
கால்களினடியில் நொதித்துக் கொண்டிருந்த கள்ளின் ஊற்றிலிருந்து முளைத்தெழுந்தான் கருப்பன்.
இருவரின் கோப்பைகளுக்கு நடுவில் வந்தமர்ந்தது  ஏதுமற்ற கருத்த வானம்.

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

கிறுஸ்துவின் கடைசி சபலம் 10

அவர்கள் தான்! அவர்கள் தான்!

கதவு இறுக்க மூடி அடைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்டான். குளம்பொலிகள் மிக அணுக்கமாய் நகர்ந்து கொண்டிருந்தன. நீர்மையினுள் கொதி குமிழியிடுவதைப் போல இருளும் ஓலியும் குலைந்த சமனற்ற ஒன்று அவனைச் சூழ்வதை. முகங்கள் மாறிக் கொண்டே இருக்கும் எண்ணற்ற ஆடிப்பிம்பங்களினுள் நிலைக்கும் தீற்றலான ஒன்று. ஆம்! ஆம்! மரப்பட்டைகளினுள்ளிருந்து பிசின் உமிழ்வது போல, அது மெல்ல மெல்ல பொள்ளிக் கொண்டிருந்தது.

அன்று புழுவைப் போல நெளிந்து கொண்டிருந்தேன். பலவீனமான என்னிடமிருந்து அவர்கள் அதைத் தான் எதிர் பார்த்திருக்கக் கூடும். எப்பொழுதும் எப்பொழுதும் சுற்றியிருக்கும் பார்வைகளில் முழுக்க நிர்வாணப்பட்டிருப்பதை நான் உணர்கிறேன். சிறு வயதிலிருந்தே எந்த களியிலும் எவருடனும் இணையாமலேயே தனிக்கப்பட்டிருந்தேன். பின்பான சமயத்தில் பொருக்குகளை உடைத்துப் பிய்க்கும் வதையில் ஆசுவாசப்பட்டுக் கொள்வேன்

இன்னும் என்னை அவன் தொடர்ந்து கொண்டிருக்கிறான். நெருக்கமாக நகரும் இந்த சப்த அலைகள் அந்த வருகையத் தான சலனிக்கின்றன.

கதவு உந்தி இழுபட்டது. வெளியிலிருந்து யாரோ அல்லது எதுவோ முழு வலுவுடன் அதை மோதியது. தாழ்ப்பாள் உடைந்து சிதறியது. அலையும் கதவுகளின் இடைவெளி வழியே அவன் தெரிந்தான். செந்தழல் சுருட்டை முடியும் நீள் தாடியும் கொண்ட மனிதன். வேட்டை மிருகம் போல இளைஞனை நோக்கிக் கொண்டிருந்தான் வெளியிலிருந்து.

மெல்ல் அறையினுள் நுழைந்தவன்.  அறையெங்கும் சிதறிக்கிடந்த பொருள்களை ஒவ்வொன்றாக நோக்கினான். அறை முற்றிலுமாக உலகினிலிருந்து தனித்து விடப்பட்டிருந்தது. வெளியின் ஜன நடமாட்டம், பல்லாயிரம்  புழுக்கள் ஒரு சேர நெளிவது போல நகர்ந்து கொண்டிருந்தது வீதியெங்கும்.

முக்கில் கிடந்த இருப்பு பலகையில் அமர்ந்து உத்தரத்தில் தொங்கும் சிலந்தி வலைகளை மையமின்றி வெறித்துக் கொண்டிருந்தான்.
நிசப்தம் பல்லிடுக்கில் மாட்டிக் கொண்ட உணவுத்துணுக்கு போல தென்னியது.

நீ தயாராகி விட்டாயா?

செந்தாடிக் காரன் மெல்ல அவனின் மணிக் கட்டுகளை அழுத்தி பழுப்பு நிற பற்கள் தெரிய அருகமர்ந்தான்.

நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

வெளியிலிருந்து நீண்ட பட்டைக் குழாயாய் ஒளி அறையினுள் குமிழ்ந்தது. பாதி இருளினுள் அவனது முகம், பாதி ஒளிர்ந்தது. வலியினால் இம்சித்துக் கொண்டே இருக்கும், ஏக்கங்களால் தீய்ந்து கொண்டே இருக்கும் ஒரு பாதி. மற்றொன்று அடர்ந்து கனத்த தோல். அசைவின்றி அமிழ்ந்து கிடக்கும் உலோகத்துண்டு. ஒன்றில் ஒன்று முரணிட்டு குலைந்து குவிந்து முயங்கி அளைந்து கொண்டிருந்தது.

நீ தயாராகி விட்டாயா?

முரசரைந்து வந்து கொண்டிருந்தது  ரோமன்படைவீரர்களின் அணிவகுப்பு!

இன்று! இன்று! இஸ்ரவேலின் தெய்வமே! நாளையல்ல!
இன்று! இன்று மட்டுமே!

தன்னுள் நடுங்கிக் கொண்டிருந்த இளைஞனை உலுக்கிக் கேட்டான். ஆம்! நீ தயாராகி விட்டாயா?

இல்லை! வேண்டாம். நீ அதை செய்யக் கூடாது. நீ அதை தூக்கி வராதே!

மக்கள் அனைவரும் சதுக்கத்தில் குழுமியிருந்தனர்.

செந்தாடிக் காரன் இளைஞனை கூர்ந்து நோக்கினான். அறையின் ஓரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த சிலுவையைக் கீழே சரித்து உடைக்க முயன்றான். காறி உமிழ்ந்தான். நீ! நீ! நீ!

அவன் வருகையை நீ அறிகிறாயா? அந்த வெற்றிக் கூச்சல் உனக்கு கேடகவில்லையா? அது அறிவிக்கப்பட்டு விட்டது. உனது மாமா, அந்த போதகரிடம் போய்க் கேள்.

உனது போதகர், நேற்று பிரார்த்தனைக் கூட்டத்தில் முறையிட்டார்.

ஏன், நமது ரட்சகன் வரவில்லை. அவன் வரப்போவதுமில்லை. நாம் நம் காலம் முழுமைக்கும் பாவங்களில் புதைந்துழன்று வழியின்றி பரிதவித்து பின்னும் பின்னும் அதன் கனத்த கண்ணிகளில் கொளுத்தப்பட்டு, நம் நம்பிக்கைகளெல்லாம் பிடுங்கப்பட்டு அம்மணமாய் தொங்க விடப்படுவோம். எதிர்காலத்தின் நிச்சயமின்மையால் நம் பார்வைகள் குருடாக்கப்படும். சொற்களின் பலனின்றி செவிடாக்கப்படுவோம். முடிவிலி தொலைவு வரை கடவுளர்களுடன் சண்டையிட்டு பலியாவதே நமக்கு விதிக்கப்பட்ட ஊழ்.

ஆம்! அது உண்மையும் கூட. நமக்கு கடவுளர்கள் போதாது. கழுத்து கவ்வத் துடிக்கும் அதன் கூரிய பற்களை நான் தினமும் காண்பவன். நாம் மோதியே ஆக வேண்டும். காலம் அனைத்தையுன் நிர்ணயிக்கட்டும்.

நீ எங்கிருக்கிறாய்? என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்? கனவுக் கண்களுடன் இமைக்கும் இளைஞனை உலுக்கினான் செந்தாடிக்காரன்.

இன்றே! இன்றே! அவன் நாதியற்று தொங்கப்போகிறான்.  என்ன செய்வது. ஒருவேளை அவன் தானா? நாம் தேடிக் கொண்டிருக்கும் ஒருவன். நம் ரட்சகன்.  இஸ்ரவேலைக் காக்கும் தேவமைந்தன். எந்த உதவிகளும் கிடைக்கும் வழியின்றி வலியில் துடிதுடிக்க சாகப் போகிறானா? தன்னை வெளிப்படுத்தும் சிறுகணம் கூட அறியப்படாமல் பிணமாகப் போகிறானா? துருவேறிய ஆணிகளினுள் அவன் கைகால்கள் அறையப்படும் பொழுது, முழுக்க முழுக்க மனிதனாய் வதைபட்டு வெற்றுக்கூடாய் ஆன பிறகு. என்ன நிகழ்ந்து விட முடியும்.

செந்தாடிக்காரன் பேசுவது பெரும்பாலும் தனக்குள்ளேயே தான். எதிராளி ஒரு வெற்று சுவர். தன்னுள் தர்கித்து ஒரு சுழல் போல அவனது குரல் அறையெங்கும் அலையெழுப்பிக் கொண்டிருந்தது.

இல்லை! இல்லை!

அவனை காப்பாற்றியாக வேண்டும். அவனை மீட்கும் பொருட்டு எதிர்ப்பவர்கள் அத்தனை பேரையும் கொல்லலாம்.  நாம் அவனைக் காப்பாற்றியாக வேண்டும். அதிசயங்கள் நிகழும். நம்பிக்கையின் மீது நம்பிக்கை கொள்வோம். நாங்கள் சாக விடமாட்டோம். டேவிட்டின் ஒளி பொருந்திய முடி அவன் தலையினை அலங்கரிக்கும். அவனே விண்ணிற்கும் மண்ணிற்கும் அரசன்.

நீ கேட்கவில்லையா? தச்சன் மகனே?

எதிரே பழுத்த சுவரைப் பிளந்து அறையப்பட்டிருந்த களிம்பேறிய ஆணியில் குத்திட்டு நின்றது இளைஞனின் கண்கள். அதன் முனையின் வட்டச்சுழியில் நிலைத்திருந்தது அது. அடுத்த அறையிலிருந்து கிழவரின் வலி பொருந்திய சொல் அடித்தொண்டையிலிருந்து விம்மி உடைந்து சிதறி அரையெங்கும் உதிர்ந்தது.

எதிரெதிர் கூர் நுனிகள். எதிரொலிக்கும் பள்ளத்தாக்குகள். அசைய மறுக்கும் குத்துப்பாறைகள்.  சுழன்று கொண்டே இருக்கும் நீள் வட்டச்சுருள்கள்.

மனிதன்! மனிதன்! எல்லாம் போலி! போலி!

நமது ரட்சகன் இந்த வழியில் வரப் போவதில்லை. சுவரை வெறித்துக் கொண்டே நடுங்கும் குரலில் இளைஞன் பேச ஆரம்பித்தான்.

ஆம்! என்றுமே இங்கு வரப்போவதுமில்லை.

தேவனோ மனிதனோ யாருமே வரப்போவதில்லை. நாம் பூனையின் கூர் நகங்களுக்குள் பந்தாடப்படும் சுண்டெலி போல மரணத்திற்கிடையில் நித்தியமாய் அகப்பட்டுக் கொள்வோம். எந்த மணி மகுடமும் அரசாண்மையும் அவனுக்கு கிடைக்காது. அம்மணமாய் அவன் சிலுவையில் தன்னந்தனியே அறையப்படுவான். காலத்தினுள் கரைந்தொழிவது ஒன்றே அவனுக்கு சாத்தியப்படும். கொதிக்கும் குத்துப்பாறைகளுக்கிடையில் தனித்த பிணமாய் அவன் எஞ்சுவான். எந்த தேவனும் அவனுக்காக வந்திறங்கப் போவதில்லை.

உனக்கெப்படி தெரியும்? யார் சொன்னார்கள்?

பதிலேதுமின்றி ஜீர வேகத்தில் எழுந்தான். பகலின் வெளிச்சம் அறையின் அந்தரங்கங்களை ஊடுருவிப் பரவியது. கையில் உளி, சுத்தியல் மற்றும் ஆணிகளை எடுத்துக் கொண்டு கீழே கிடந்த சிலுவையினை அணுகினான்.

உனக்கு வெட்கமாக இல்லை. எல்லோரும் எல்லா தச்சர்களும், நாசரேத்திலும் கனாவிலும் கப்ரேனிலும் ஒதுக்கிய கீழ்மைச் செயலை நீ செய்து கொண்டிருக்கிறாய்.

இளைஞனைப் பிடித்திழுத்து சுவரோடு சுவராக பதித்து, ஓங்கி அறைந்தான்.

நீ ஒரு சுய நலமி என்றான். ஆனால் அவனது கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தான். ஏன்? ஏன்? அது மிகுந்த தன்னிரக்கத்தை உண்டு பண்ணியது.

பசித்த மிருகத்தின் மூச்சினைப் போல, பாலைக் காற்றின் அலைச்சல்.  காய்ந்த முட் பரப்பாய் சாம்பல் வான். உள்ளும் புறமுமாய் பூச்சிகளின் மென் உராய்தல். மரங்களின் பருத்த அடித்தண்டை ரம்பத்தினால் கீறுவது போல, அந்தக் குரல் அன்னகரின் வீடுகளின் சுவர்களைப் பிளந்தது. செந்தாடிக் காரன் மெல்ல கதவினருகில் வந்து கவனித்தான்.  பெரும் மக்கள் திரள். அவர்களின் அழுகை, விம்மல், எல்லாம் குழம்பி துண்டிக்கப்பட்ட இசைக்கருவியின் ஒற்றை நரம்பைப் போல ஓலமிட்டது.

மக்களே! ஆப்ரகாமின் உதிரத் துளிகளே! ஈசாக்கின் வழி வந்தவர்களே! ஜேகோபின் பிள்ளைகளே!

கேளுங்கள்!

மாட்சிமை பொருந்திய நம் பேரரசின் கட்டளை என்னவென்றால், நமது வீழ்ச்சியடையா செங்கோல் ஏந்திய மாமன்னரின் ஆணை. அவரை எதிர்த்த கலகக்காரனுக்கான தண்டனையை நிறைவேற்றப் போகிறோம்.  நாட்டின் துரோகியை சிலுவையில் அறைந்து கொல்லும் தண்டனையை நாட்டு மக்கள் அனைவரும் காணவேண்டுமென்பது அரச கட்டளை!

-The Last Temptation of Christ -Nikos Kazantzakis