புதன், 9 மார்ச், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் - 67

     

Author: Nikos Kazantzakis

    ஜீசஸ் கூச்சலும், குழப்பமுமாக ஆரவாரமிட்டுக் கொண்டிருக்கும் கூட்டத்தைப் பார்த்து விரக்தியுடன், அவர்களை மட்டுப்படுத்துவதற்காகத் தன் கைகளை அசைத்தான். "நான் அப்படிச் சொல்லவில்லை" "நான் அப்படிச் சொல்லவில்லை" அவன் பதற்றத்துடன் கத்தினான். "சகோதரர்களே, நான் அன்பு செய்யச் சொன்னேன், ஒருவரையொருவர் நேசிக்கச் சொன்னேன்".

    ஆனால் பசியின் மூர்க்கம் அவர்களைத் தன்னிலை இழக்க வைத்திருந்தது. களிப்பும், ஆத்திரமும் மிகுந்து, அவர்கள் இதுநாள் வரைக் கட்டுப்படுத்தியிருந்த வன்மத்தை வெளிப்படுத்தும் சரியானத் தருணத்திலிருந்தார்கள். யார் பேச்சையும் அவர்கள் கேட்கும் மனநிலையிலில்லை.

    "ஆண்ட்ரூ சொன்னது சரியே! முதலில் நமக்குத் தேவை, நெருப்பு! பின் கோடாரி! அதற்கும் பின் தான் அன்பு" ஜீசஸ் எரிச்சலுடன் அவர்களைப் பார்த்தான். அருகிருந்த ஆண்ட்ரூ ஜீசஸ் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான். ஆனால் அவனது அகம் எண்ணங்களுக்குள் அலைந்து திரிந்தது. நிலையற்ற நோக்குடன் குனிந்து நிலத்தை வெறித்துக் கொண்டிருந்தவன் எந்த பதிலும் பேசவில்லை.  தனது ஆன்மகுரு,  அந்தத் தீ எரியும் பாலை நிலத்தில் நின்று பேசிய வார்த்தைகள் அவன் செவிகளுக்குள் சுழன்றன. அவரின் சொற்கள் கற்களைப் போல எங்களின் தலையை உடைத்து நொறுக்கியதை நினைத்தான். ஆனால் என் எதிரே நிற்கும்  இம்மனிதன் முற்றிலும் வேறுபட்டவன். இவனிடமிருந்து வெளிவரும் சொற்கள், உண்மையில் ரொட்டித்துண்டங்கள். அது ஜீவனின் நித்தியமானப் பசியினை உள்ளூற அறிந்தவை.  யாருடைய வழி சரியானது? எந்தப் பாதை உலகத்தின் இரட்சிப்பை நோக்கி நம்மை வழிநடத்தும். வலிமையா? அன்பா?".

    சிதறிக் கொண்டிருந்த அவனது மனத்தின் நிலைகொள்ளாமை, இந்தக் கேள்விகளின் உந்துதலால் இன்னும் அழுத்தம் கூடித் தெறிக்கத் தொடங்கியது. தாங்கமுடியாமல்  அவன் தன் கைகளால் உச்சந்தலையை இறுக்கிப்பிசைந்தான். அவனருகில் வந்த ஜீசஸ் தன் வெம்மையான உள்ளங்கைகளை அவனது தலையில் பதித்தான். அதன் நீண்ட மென்மையான விரல்களின் ஸ்பரிசம், ஒரு குடை போலக் குவிந்து அவனைத் தழுவி நிறைந்தது. எல்லையில்லாக் கருணையின், குளிர்ச்சி ஒரு சுனை போல அவனுள் இறங்கியது. ஆண்ட்ரூ அசையாமல் அக்கைகளினுள் கண்கள் மூடி அமர்ந்திருந்தான். விவரிக்கமுடியாத உணர்வினால் ஆட்கொள்ளப்பட்ட ஆண்ட்ரூ,  தையல் பிரிவதைப் போலத் தன் தலைபிரிந்து, மூளைக்குழியினுள், தித்திக்கும் அடர்த்தியானக் கூழ் போன்ற தேன் பாய்வதை உணர்ந்தான். அது மெல்ல மெல்ல அவன் கண்கள், நாசி, வாய், கழுத்து, இருதயம் என இறங்கித் தன் அந்தரங்க உறுப்புகளைத் தழுவிக் கிளைபிரிந்து இரு கால்களின் வழியாக உள்ளங்கால்களின், பாதங்களுக்குள் புகுந்து வேரிட்டு அமைந்தது. தாகம் கொண்ட மரம் ஒன்று தண்ணீரை வெறியுடன் உறிஞ்சிக் கொள்வதைப் போல உடலெங்கும் அவ்வின்பம் நிறைந்து பரவியது. தன் உடலும் ஆன்மாவும் ஒரு குளிர்ச்சுனையில் முங்கி எழுந்தது போல, இதுவரை தன்னுள் அடைந்திருந்த வியாகுலங்கள் எல்லாம் கரைந்து புத்துணர்ச்சியும், மகிழ்ச்சியும் அவனுள் பெருகியது. அங்கிருந்து விலகாமல் தாழ்ச்சியுடன் இருந்தவன்,  தன் தலையில் அமிழ்ந்திருக்கும் இக்கைகள் தன்னைவிட்டு என்றுமே அகலக்கூடாது என வேண்டிக் கொண்டான். இது வரைத் தான் பட்டக் கஷ்டங்களும், போராட்டங்களும் தூசித்துகள்கள் போல அவனை விட்டுப் பறந்தன. வாழ்விலே முதன்முறையாக, ஒரு குஞ்சுப்பறவை, தன் தாயின் மார்பினுள் புதைந்து லயித்திருக்குமே, அந்த உண்மையானப் பாதுகாப்பையும், உள்ளார்ந்த மனநிம்மதியையும் அடைந்ததைப் போல உணர்ந்தான்.

    சற்று தொலைவில், இதனைப் பார்த்துக் கொண்டிருந்த இணைபிரியாத நண்பர்களான பிலிப்பும், நாத்தனேலும் தங்களுக்குள், நடந்த நிகழ்வுகளைப் பற்றி வம்பளந்துக் கொண்டிருந்தனர்.

    "எனக்கு இவனைப் பிடித்திருக்கிறது" செருப்பு தைப்பவன் முதலில் ஆரம்பித்தான். இவனது வார்த்தைகள் தேன் போல அமிழ்தாய் இருக்கின்றன. அதை உண்மையிலேயே நம்பிக் கேட்டேன் என்றால், நான் என் வாயில் சப்புக் கொட்டிக் கொள்வேன் தெரியுமா!"

    "எனக்கு இவனைப் பிடிக்கவில்லை, இவன் பேசுவது ஒன்று, செயல் வேறு. பார்! இங்கு அன்பு! அன்பு! என்று சொல்கிறான், ஆனால் இவன் தான் கொல்வதற்குச் சிலுவைகளும் செய்து கொடுக்கிறான், இவன் நம்பிக்கைக்குரியவன் போல எனக்குத் தோன்றவில்லை", மேய்ப்பன் வெறுமனேக் கைகளைக் காற்றில் அசைத்தான்.

    "அது முடிந்து விட்டது, பிலிப்", இவன் அதனைக் கடந்து வந்துவிட்டான். சிலுவைகள் செய்த அந்த மனிதன் அல்ல நம் எதிரே நிற்பவன். இவன் அப்பாதையின் வழியேக் கடந்துத் தேவனின் வழியைச் சரியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறான் என்றே எனக்குத் தோன்றுகிறது".

    "நான் செயல்கள் வழியேதான் ஒருவனை நம்புகிறேன்" பிலிப் வலியுறுத்துவதைப் போலச் சொன்னான். "என் ஆடுகளுக்கு சொறி வருகிறது என்று வைத்துக்கொள், இவன் அவைகளை ஆசிர்வதித்து, தன் வீரியமிக்கச் சொற்களால் அது வராமல் தடுக்கவோ, இல்லை குணப்படுத்தவோ செய்ய வேண்டும். அப்பொழுது நான் இவனை நம்பிக் கொள்கிறேன். இல்லையெனில், இவன் தன் பாசாங்குகளைக் கொண்டு மற்றவர்களிடம் போய்த் தன் கருணை மொழியால் பேசி மயக்கட்டும். எனக்கென்ன வந்தது!, எதுக்கு நீ இப்படி தலையை ஆட்டி இல்லை என்கிறாய்? சரி! போகட்டும்! இந்தப் பையன் நம் உலகை இரட்சிக்க வந்திருக்கிறான் என்றே வைத்துக் கொள்வோம், ஏன் அவன் என் ஆடுகளிடமிருந்து தன் இரட்சணிய யாத்திரையைத் தொடங்கி விடக்கூடாது."

    இரவு தொடங்கியிருந்தது. ஏரியின் நீரலைகளில் இருளின் நெளிவுகள் இறங்கி அதன் நிறமிகள் குலைகின்றன. திராட்சைத் தோட்டங்களின் இருளிற்குள் படர்ந்திருந்த மீதப் பழங்கள், இருட்டின் பல்லாயிரம் குமிழ்க்கண்கள் போல கொத்துக் கொத்தாய் அடர்ந்திருந்தது. டேவிட்டின் சேனையான விண்மீன் கூட்டங்கள் வானை ஆக்கிரமிக்கின்றன. வடக்கே துருவ நட்சத்திரம் எழுந்து பிரகாசமாகிறது. காற்றின் குளிர்ச்சி கூடிக்கொண்டு வருகிறது. நிற்கும் மனிதர்கள் அனைத்தும் நிழலுருக்களாக மாறிக் கொண்டிருந்தனர்.

    ஜீசஸ் சோர்வாகத் தன் மூட்டுகளை விடுவித்துக் காலை நீட்டிக் கொண்டு அமர்ந்தான். பசி, அவனது கண்களில் தெளிவாகவேத் தெரிந்தது. அவன் தனிமையில் இருக்க விரும்பினான். கூட்டம் மெதுமெதுவாக மலையை விட்டு கழன்று கொண்டிருந்தது. ஆண்களும், பெண்களும் தங்களின் குடிலை நோக்கித் திரும்பிச் செல்கின்றனர். அங்கே அவர்களுக்காக அவர்களின் குழந்தைகள் காத்திருக்கிறார்கள். எல்லாம் பழைய நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. மக்கள் தங்கள் பழைய வலிகளைத் தழுவிக் கொண்டுத் திரும்பவும் உறங்கப் போவார்கள். ஒரு ஒளி வீச்சம் மட்டுமேயாக அந்த நாளின் நிகழ்வுகள் அவர்களுக்குள் மிணுங்கி மறைந்துவிடும். எப்பொழுதுமுள்ள நிரந்தரச் சுழலில் கண்ணிகள் பொருத்தப்பட்டு, அவர்களின் தினசரித் தேவைகளின் சக்கரங்கள் சுழலத் தொடங்கிவிடும். தனித்தனியாகவும், ஜோடிகளாகவும் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மலைவிட்டு இறங்கினர். ஆரவாரங்கள் அடங்கி, முற்றிலுமான அமைதி. காலங்காலமானத் தங்களின் புலம்பல்களின், வேண்டுதல்களின், விசும்பல்களின் சொற்கள் அவ்வெற்று நிலத்தில் புழுதியாய் வீசிக்கொண்டிருந்தது

தன் மனச்சோர்வைத் தள்ளி வைத்து, ஜீசஸ் தான் அமர்ந்திருந்த பாறையிலிருந்து இறங்கிக் கீழே வந்து நின்றான். யாருமே அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை. யாருமே அவனைக் கைப்பிடித்து அவனுக்கு விடைபெறுதல்கள் சொல்லவில்லை. தான் பசித்திருக்கிறேனா, இந்த இரவில் நான் எங்கே போய்த் தங்குவேன்? யாரும் எதுவும் கேட்கவில்லை. அவனுக்கு எதிரே பூமி இருண்டு கொண்டிருந்தது. விரைந்து போகும் காலடிச் சப்தங்கள், திரும்பத் திரும்ப அந்தத் தப்படிகளைக் கேட்டான். பின் எல்லாம் நிசப்தமானது. சுற்றி முற்றிப் பார்த்தான். இருள் தவிர யாரும், எதுவுமில்லை. மக்கள் திரள் முற்றிலுமாக மறைந்திருந்தது. அவன் தலை உயர்த்தி வானைப் பார்த்தான். தலைக்கு மேலே விண்மீன்களும், காலுக்கு கீழேப் புழுதியையும் தவிர்த்து வேறொன்றுமில்லை. தனக்குள் பசியையும், களைப்பையும் மட்டுமே உணர்ந்தான். எங்கே போவது? எந்த வீட்டின் கதவுகளைத் தட்டுவது? கால்கள் நடுங்க அப்படியேத் தரையில் சுருண்டுப் படுத்துக் கொண்டான். ஏதோ பழிச்சொல்லால் தாக்குண்டது போல வேதனையுடன் முணகினான். "நரிகள் கூட இந்நேரம் தன் குகைகளுக்குள் அண்டிக் கொண்டிருக்கும், எனக்கு அதுவுமில்லை". இருளின் குளிர் கூடுகிறது, காற்றின் வேகம் அதிகரிக்கிறது. அவன் தன் தேகத்தைத் தானே கட்டிக் கொண்டுத் தரையில் விரைத்துக் கிடந்தான்.

    ஏதோ ஒரு மனித சஞ்சலம். இருளினுள் மென்மையாக அழுதுகொண்டிருக்கும் ஒரு பெண்ணின் இருப்பைத் தன் முதுகுக்குப் பின்னால் உணர்ந்தான். அமைதியாகத் தலையைத் திருப்பிப் பார்க்கையில், அவள் மெல்லத் தரையில் கால்கள் பாவித்து ஊர்ந்து அவனை நோக்கி வந்தாள். அருகில் வந்ததும் தன் விரிந்த கேசத்தால் அவனின் பாதங்களை வருடினாள். தூர தூரங்கள் பயணித்த அப்பாதங்கள் வெடிப்பெடுத்து பாளங்களாக இருந்தது. அவளின் பிரத்யேகமான உடல் மணம், அவளின் இருப்பை அவனுக்கு உணர்த்தியது.

    "மாக்தலேன்! என் சகோதரியே!" என்று அழைத்தவன் தன் வெம்மையானச் சிவந்தக் கைகளால் அவள் தலையைத் தொட்டான். பின் அவளின்  தலைமுடியை நெற்றியிலிருந்து தொடங்கி பின் நோக்கி, ஒரு குழந்தையை அன்புடன் வருடுவது போல விரல்களால் அளைந்தான். "மாக்தலேன், என் சகோதரியே, நீ உன் இல்லத்திற்குத் திரும்பச் செல், உனக்கு இனி பாவங்கள் இல்லை."

    "ஜீசஸ், ஜீசஸ்!" வார்த்தைகள் அவளினுள் தடுமாறின. அவள் அவனின் கால்களைத் தூக்கித் தன் மடியில் இருத்தி முத்தமிட்டாள். "நான் சாகும் வரை உங்களின் நிழலாகப் பின் தொடர வேண்டுகிறேன் அன்பே! அன்பு என்றால் என்ன என்று எனக்குப் புரிந்தது, என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் தேவனே!"

    "உன் இல்லத்திற்குத் திரும்பப் போ!" ஜீசஸ் மறுபடியும் கூறினான். சரியானத் தருணத்தில் நான் உன்னைத் திரும்ப அழைப்பேன்"

    "நான் உனக்காக என் உயிரையும் கொடுக்கச் சித்தமாக இருக்கிறேன், என் குழந்தையே!"

    "பொறுமையிழக்காதே!, மாக்தலேன். அதற்கான நேரம் வரும். இன்னும் அது வரவில்லை.  உன்னை நான் அந்த சரியான நேரத்தில் அழைப்பேன்."

    அவள் அவனின் வார்த்தைகளை மறுதலிக்க எண்ணினாள், ஆனால் வலுவான அவனின் குரல் திரும்பவும் அவளை விரட்டியது. "போ".

    மாக்தலேன் எழுந்து தன் கண்களைத்துடைத்துக் கொண்டு அமைதியாக மலையை விட்டு கீழிறங்கத் தொடங்கினாள். அவளின் மெல்லியக் காலடிச்சப்தம் மறையும் வரை அதைக் கூர்ந்துக் கேட்டுக் கொண்டிருந்தான். பின் எல்லாம் மறைந்து பொருளற்ற இரவின் குழறல்களும், பூச்சிகளின் ரீங்காரங்களும் மட்டுமேயாக அந்தமலை ஜீசஸுடன் தனித்து விடப்பட்டது. சிறிது நேரம் நிலைத்திருந்த அவளின் வாசத்தையும், குளிர்க்காற்றின் பீறிடல் அழித்துத் துடைத்து விட்டிருந்தது.

    மேரியின் மகன் திரும்பவும் தன் தனிமையில் ஆழ்ந்தான். வானத்தின் கருமை நிறத்தை உட்கிரகித்து, நிழல் வெளிகளும், பிம்பங்களும் பூமியில் திட்டுத்திட்டாய்ப் பரவியிருந்தது. ஏரியின் நீரலைகள் அலையிடும் ஒலி இன்னும் தெளிவாகக் கேட்கிறது. நட்சத்திரங்களின் ஒளித்துணுக்குகள் வானத்தின் இடைவெளிகளின் வழி ஒளிர்கிறது. வானம் பலகோடித்துளைகள் கொண்ட சல்லாத்துணி போலவும், அதன் பின்புறம், அழியாத ஒளியினைக் கொண்ட ஒரு மாபெரும் வெளிச்சக் கோளம் , நிற்காமல் சுழன்று கொண்டிருப்பதைப் போலவும் தோன்றியது. ஜீசஸ் அந்த ஒளிர்வுகளினுள் இருந்து தனக்கு  எதாவது கேட்கிறதா என்று கவனித்தான். அவன் தன் செவிகளைக் கூர்மையாக்கிக் கொண்டு இன்னும் இன்னும் ஆழமாக அவ்வொளியினைத் தன்னுள் ஏற்றிக் கொண்டுப் பார்க்கிறான். ஆனால் ஏதுமில்லை. அவன் அந்த ஏதுமில்லாத ஒன்றிடம் ஒரு கேள்வி கேட்க முயல்கிறான். "தேவனே! நீர் என்னில் மகிழ்கிறீர்களா?" ஆனால் அவனுக்குக் கேட்கத் துணிவில்லை. இன்னும் நிறையக் கேள்விகள் கேட்பதற்கு அவனிடம் இருந்தன. ஆனால் அவன் எதையும் கேட்கத் துணியவில்லை. திடீரெனத் தன்னை அமிழ்த்துவது போல இதுவரை இல்லாதிருந்த ஒரு அடர் நிசப்தத்தை அச்சமயம் உணர்ந்தான். நிச்சயமாகக் கடவுள் என் மேல் அதிருப்தி அடைந்திருப்பார். அவனது தலை முதல் கால் வரை அதிர்ந்து கொண்டிருந்தன. ஆனால் நான் ஏன் என்னைக் குற்றம் சொல்ல வேண்டும்.  நான் எத்தனை முறை உன்னிடம் சொன்னேன். என்னால் பேச முடியாது ! என்னை விட்டு விடு! என்று. ஆனால் நீயே என்னைத் திரும்பத் திரும்ப உந்தித் தள்ளினாய். சிலசமயம் சிரித்தாய். சில சமயம் கோப வெறியில் கத்தினாய்; ஆனால் என்ன நடந்தது. என்னை அடுத்த மடாதிபதியாக ஆக்க இந்தத் துறவிகள் உறுதி பூண்டு, நான் தப்பித்துவிடாதவாறு அறையினுள் பூட்டி அடைத்து வைத்தனர். ஆனால் இன்று அதிகாலையில் என்ன நடந்தது. என்னை இங்கிருந்து வெளியேற்ற நீதான் அந்தச் சிறியக் கதவுகள் கொண்ட ரகசிய வழியை எனக்குக் காண்பித்தாய். பயந்துப் பின்வாங்கிய என்னை உன் கொடூரமானக் கூர் உகிர்களால் மூளைக் குழியினுள் பிறாண்டி, என்னைத் தப்பித்து ஓடக் கட்டளையிட்டாய். பின் இங்கே வரவழைத்து இந்த மகத்தான மனிதகுலத்திற்கு முன்னால் என்னை நிற்க வைத்தாய். "பேசு, பேசு!" என்று உந்தினாய். அந்தத் தருணத்திலும் நான் வாயை இறுக்கமூடி, என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக  நின்றேன். நீ கத்தினாய்! ஆனால் நான் பேசவில்லை. கடைசியில் பொறுமையிழந்து, நீ என்னைப் பிடித்து உலுக்கி உன் வார்த்தைகளால் என்னுள்  முடுக்கி,  என் வாயைத் திறக்க வைத்தாய். நான் இல்லை! நீ தான்! நீ தான் என்னைப் பேச வைத்தாய். உன்னுடைய வலிமையினால், உன் வார்த்தைகளால் என்னைக் காற்றினில் அலையும் சருகினைப் போல அலைக்கழித்தாய். நீ என்னில் தருவித்த அச்சொற்கள், ஒரு நெருப்பு போலக் கனலவில்லை, இதற்கு முந்தையத் தீர்க்கதரிசனங்களின் வழிகளிலிருந்து முற்றிலுமான ஒரு புது வழியினைப் பற்றி அதில் நீ அறிவித்தாய். அது அமிழ்தின், இனிப்பின், சுகந்தத்தின், மகிழ்வின், வற்றாத ஊற்றானப் பேரன்பின் பாதை. இறுதியாக நான் அதனைப் பேசினேன். ஆனால் என்னுள்ளம் பற்றி எரிந்தது, அச்சொற்கள் என்னை அழத் தூண்டின. அந்த ஒவ்வொரு கணத்திலும் நான் உன் சொற்களை மறுதலித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் என்னால் தடுக்க முடியவில்லை. நெருப்பே கடவுள்! தீர்க்கதரிசி யோவானின் சொற்படி தேவன் நெருப்பு வடிவானவன். மானுடத்தை எரித்து சுத்தப்படுத்துவதே சரியான வழி. அநீதியும், ஒழுக்கமின்மையும், வஞ்சகமும் கொண்டு இந்த பூமியை சூறையாடும் மானுடத்தை எரிப்பதை விட எது சிறந்த வழியாக இருக்கும். மானுடனே உன்னால் எங்கும் ஒளிந்து கொள்ள முடியாது. அவன் வந்து கொண்டிருக்கிறான். இதைத்தான், இதைத்தானே என் இருதயம் உரைப்பதற்காகக் கொளுந்து விட்டு எரிந்தது. ஆனால் நீ என் உதடுகளின் வழியே இம்மக்களுக்குக் கையளிக்க விளைவது தேன்!. ஆம்! நான் அழுது புலம்பியதற்குப் பதிலாக, உன்னிடமிருந்து வந்த சொல்லோ "அன்பு, அன்பு!"

"தேவனே! ஓ! என் தேவனே! என்னால் இனிமேலும் உன்னுடன் போராட முடியாது. நான் உன்னிடம் சரணடைகிறேன். உன் விருப்பமே நடக்கும். நீயே என் வழி! நீயே என் கதி!" ஜீசஸ் தனக்குள் உண்டாகியச் சொற்களின் குவியலைப் பொட்டலமாக்கித் தனக்குள்ளேயே எரித்து அழித்தான்.

    இதைச் சொல்லி முடித்ததும், அவன் எதிலிருந்தோ விடுபட்டதைப் போல உணர்ந்தான். தலையைக் கீழே மார்பை நோக்கித் தொங்க விட்டுக் கொண்டு மெதுவாக இழுத்து சுவாசித்தான். பார்ப்பதற்கு உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு சின்னஞ்சிறியப் பறவையைப் போல இருந்தது அவனது செய்கை. அப்படியே உட்கார்ந்த இடத்திலேயே கண்களை மூடி உறங்கிப் போனான். உச்சிவானில் நிலவு பிரகாசிக்கிறது அதன் வெண் ஒளியின் தண்மை அவனை அணைத்துப் போர்த்தியிருந்தது. உறங்கிக்கொண்டிருந்தவனின் இடது புறம், அவனின் நிழல், ஒளியின் அலைவுகளுக்கு ஏற்ப நெகிழ்கிறது. சற்றே அசைகிறது. நிழலினுள் அவன் தன் மேலங்கியினுள் இருந்து, ஒரு விதையைத் துழாவி எடுக்கிறான். அதனை மண்ணில் விதைத்து, நீரிட்டு வளரவிடுகிறான். சிறிது நேரத்தில் அவ்விதை பூமியைப் பிளந்து எம்பி, இலைத் துளிர்க்கிறது, கிளைகள் நாற்புறமும் விரிகின்றன, செடி, மரமாகிறது. கிளை நுனிகளிலெல்லாம் பழுத்துத் தொங்குகின்றன பல நூறு சிவப்பு ஆப்பிள் பழங்கள்...அவன் சற்றே அசைந்து திரும்பிப் படுத்தான். நிழல் மரங்கள் எல்லாம் காற்றில் கரைந்து தூசுத்துகள்களாகி, புழுதிபடலங்களாய் நிலம் விட்டு அகன்றது.

    சரளைக் கற்களை மிதித்து முன்னே வரும் காலடிச்சப்தம். ஜீசஸ் உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்து பார்த்தான். எதிரே ஒரு மனிதன் இருளினுள்ளிருந்து ஒளியை நோக்கி வந்து கொண்டிருந்தான். இனியும் நான் என் தனிமையைக் கட்டிக் கொண்டு அழவேண்டியதில்லை என நினைத்துக் கொண்டு சற்று ஆசுவாசமானான். அமைதியாக, எதுவும் பேசாமல் அம்மனிதனை வரவேற்கும் தொனியில் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

    அந்த இரவு வருகையாளன் நேராக அவன் முன் வந்து மண்டியிட்டான். "நீ பசியுடன் இருப்பாய் என்று தெரியும். நான் உனக்காக ரொட்டியும், தேனும், மீனும் கொண்டு வந்திருக்கிறேன்" 

"நீ யார்? சகோதரனே?"

"ஜோனாவின் மகன் ஆண்ட்ரூ"

    "எல்லோரும் என்னை இப்படியேக் கைவிட்டு சென்று விட்டனர். ஆமாம்! நான் மிகுந்த பசியுடன் இருந்தேன். எப்படி இது நடந்தது? எப்படி உனக்குத் தெரியும் சகோதரா? நான் இங்கேத் தனியாக, பசியோடு இருக்கிறேன் என்று. நீ எனக்காக உணவு எடுத்து வந்திருக்கிறாய். எல்லாத் தயவுகளும் கடவுளினால் நிகழும். அவனின் அன்பானச் சொற்களைத் தவிர நான் வேறு எதையும் கேட்க விரும்பவில்லை."

    "நான் அதையும் கூறத்தான் வந்திருக்கிறேன்" ஆண்ட்ரூ பதில் கூறினான். இருள் அவனுக்குக் கொஞ்சம் தைரியத்தைக் கொடுத்தது. அவனது நடுங்கும் கரங்களையோ, கன்னங்களிலிருந்து வழியும் வெம்மையானக் கண்ணீரையோ, ஜீசஸ் கவனிக்கவில்லை.

    "ஆம்! அது தான் முதலில், அந்தக் கருணை மிகுந்த இறைவனின் வார்த்தை" ஜீசஸ் அவனது கைகளைத் தன் கைகளுக்குள் ஒரு குஞ்சுப்பறவையைப் பொத்துவதைப் போலப் பொத்திக் கொண்டு கண்கள் விரிய, ஈறு தெரியப் புன்னகை செய்தான்.

"தேவதேவனே! என் அன்பான ஆசிரியனே!", என்று ஒரு மந்திரம் போல ரகசியமாக ஜீசஸுன் காதுகளில் கிசுகிசுத்து, சட்டென்றுக் குனிந்து, அவன் பாதங்களில் முத்தமிட்டான் ஆண்ட்ரூ.

செவ்வாய், 8 மார்ச், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் - 66

    
Author: Nikos Kazantzakis

    சென்னிற வட்டப் பொட்டாய்ச் சூரியன் கீழிறங்கி வானத்தின் அடித்தளத்தை நோக்கி நகர்கிறது . நோய் பீடித்த நாளில் காற்றின் அனத்தம் கூட இன்னும் குறைந்த பாடில்லை. கடல் நாரைகள் பாறைக்குன்றங்களில் சிறகொடுக்கி, தன் கூரிய நீளமான அலகினை நீர்ப்பரப்பிற்குச் சற்று மேலே வைத்துக் கொண்டு, அசைவற்று இரைக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. அவைகளுக்கு அன்றைக்கான பசி இன்னும் அடங்கவில்லை. ஜென்னசரேட் ஏரியின் நீரலைகள் சிவப்பாகவும், நீலமாகவும் மாறி மாறி அலையிடுகின்றன.

    கலீலியிலிருந்து வந்த பாவப்பட்ட வேலைக் கூலிகள் தாங்கள் செய்யவேண்டிய வேலைகளையும் மறந்துவிட்டு அவனிடம் எதையோ வேண்டுவது போலக் காத்து நிற்கின்றனர். எதற்காக காத்து நிற்கின்றனர்? அவர்களுக்கே அது தெரியவில்லை. பசியையும், அம்மணத்தையும் மட்டுமே இதுவரை வாழ்க்கையில் பெற்று வந்த இம்மக்கள், சிறிதளவாயினும்  எஞ்சியத் தானியங்களையும், திராட்சைகளும் நாள் முழுமைக்குமானக் கூலியாக இந்தத் தந்திரமான நில உடைமையாளர்களிடமிருந்து பெறுவதற்கே தினம் தினம் போராட வேண்டியிருக்கிறது. இந்த மாதிரியான சமயத்தில் எஞ்சியிருக்கும் வேலையையும்  அப்படியே விட்டு விட்டு காந்தம் போல இவர்கள் மேரியின் மகனால் கவரப்பட்டு இங்கே அசைவின்றி நிற்கின்றனர். காலை முதல் ஒவ்வொரு திராட்சைத் தோட்டங்களாக அவர்கள் சென்று கொண்டிருந்தாலும், அவர்களின் கூடைகள் காலியாகவே இருந்தது. அதே போல அறுவடை நிலங்களின், ஒவ்வொரு வயல்களாகச் சென்று இரந்தும் ,கெஞ்சியும் அவர்களது பையில் ஒரு பொட்டு தானியம் கூட இதுவரை விழவில்லை. அந்தியாகிவிட்டது. தங்கள் கூடாரங்களில் காத்திருக்கும் அவர்களின் பிள்ளைகள், இப்பொழுது பசியில் வாடி, வாய்திறந்துக் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கும். ஆனால் என்ன நிகழ்ந்தது?  திடீரென்று அவர்களின் பைகளும், கூடைகளும் இப்போது எப்படி நிரம்பின? என்று அவர்களுக்குப் புரியவில்லை. தங்கள் உள்ளுணர்வினால் முன்னே நிற்கும் வெள்ளை அங்கி அணிந்த மனிதனை விட்டு அகல முடியாமல் அவர்கள் நிலைத்து நின்றனர். 

    அவர்கள் காத்திருக்கின்றனர்? ஆனால் எதற்காக? அவர்களுக்கே அது தெரியவில்லை.

    மேரியின் மகனின் பார்வை அந்த ஏழை மக்களை நோக்கி இருந்தது. அவனும் காத்திருக்கிறான். தன் முன்னே நிற்கும் இந்த ஆன்மாக்கள் எல்லாம் தன்னுள் இருந்து வெளிவந்ததாகவே அவன் உணர்ந்தான். தான் பிறர் எனும் இருமை மறைந்து அவர்களின் வலி, துக்கம், ஏக்கம் எல்லாம் தமக்குள்ளும் அது போலவத் துளிர்ப்பது போல அவனுக்குத் தோன்றியது. "என்னிடம் என்ன வேண்டுகிறார்கள்?, என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமே இல்லையே? என்னால் என்ன இவர்களுக்கு அளிக்க முடியும்?." அவன் அவர்களைப் பார்க்கிறான். இன்னும் இன்னும் எனத் தன்னுள் அவர்களை, அவர்களின் எண்ணங்களை, வேண்டுதல்களை, பிரார்த்தனைகளை என்று அதனுள் சென்று கொண்டே இருக்கிறான். செல்லச் செல்ல அவன் தன் தைரியத்தை இழக்கிறான். ஆனால் அவனின் பயமும், கோழைத்தனமும் இப்பொழுது அவனை வெட்கப்பட வைத்தது. "தன் கால்களைப் பற்றிக் கொண்டிருக்கும் மாக்தலேன்  என்ன ஆவாள்?" சுற்றி அவனை மட்டுமே நோக்கிக் கொண்டிருக்கும் மக்கள் திரளின் கண்கள், அவனின் வார்த்தைகளைக் கேட்க ஏங்கி நிற்கின்றன. ஆற்றுப்படுத்த முடியாத இந்த ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், காத்திருப்புகள். என்னால் இவர்களை இப்படி விட்டு விட்டுப் போக முடியாது. அவன் தனக்குள்ளேயே வாதிடுவதும், குழம்புவதுமாய் இருந்தான். "போவதா? எங்கே போவது? எல்லாப் பக்கங்களிலும் கடவுள் இருக்கிறார். அவரது கருணையே இங்கே இந்தப் பாவப்பட்ட மக்களின் முன்பு என்னை இன்று நிறுத்தியிருக்கிறது. இல்லை அவரின் வலிமை! அழிவேயற்ற அவரின் சக்திதான் என்னை உந்தி இங்கே வரவழைத்திருக்கிறது. மறுதலிக்க முடியாத இறைவனின் நாமத்தால் நான் சத்தியம் செய்கிறேன். இந்த பூமியே என் வீடு. நான் எங்கு சென்றும் தப்பிக்க விரும்பவில்லை. இந்த மண்ணே என் உடல். என்னால் வேறு எங்கும் போகமுடியாது. இந்த மனிதர்களின் உள்ளம்  தான் நான் மண்டியிட்டுப் பிரார்த்திக்கும் பாலை நிலம். எனக்கு வேறெந்தப் பிரார்த்தனைக் கூடமும் தேவையில்லை."

    "இறைவா! நீயே பெரியவன்! உனது விருப்பமே நிறைவேறும்." விதிர்விதிர்க்க அவன் தனக்குள் முணகினான். பின் தலை குனிந்து தன் நெற்றி நிலத்தில் பட வீழ்ந்துத் தன்னை நிலத்திற்கு அர்ப்பணித்தான். "இறைவா! உன் கருணையின் வழியில் என்னை செலுத்துகிறேன்!"  "நீயே என் வழி!! நீயே என் கதி!"

    ஒரு முதியவர் அந்த ஏழை நாடோடிக் கூட்டத்திலிருந்து எழுந்து மேரியின் மகனைப் பார்த்துப் பேசினார், "ஜீசஸ்! நாங்கள் பசித்திருக்கிறோம். ஆனால் நாங்கள் உன்னிடமிருந்து ரொட்டிகளைப் பெற வரவில்லை. நீயும் எங்களைப் போவே ஏதுமற்றவன். உன் வாயைத் திறந்து இறைவனின் கருணை மிகு வார்த்தைகளை எங்களுக்கு அளி! நாங்கள் அச்சொற்களால் திருப்திப்படுகிறோம்."

    "மேரியின் மகனே, அநீதியின் வலுத்த கயிறுகளால் எங்களின் குரல் வளைகள் நெருக்கப்படுகின்றன. நீ சொன்னாயே! எங்களுக்கான கனிவு மிகு செய்தி ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறேன் என்று! அச்செய்தியை எங்களுக்கு அறிவி! எங்களுக்கு உன் சொற்களால் நீதி வழங்கு!" ஒரு துணிச்சலான இளைஞன் அவனைப் பார்த்துக் கதறினான்.

    மேரியின் மகன் மக்களைப் பார்த்தான். பசியின், சுதந்திரத்தின் குரல்கள் அவனைச் சூழ்ந்திருக்கின்றன. அவர்களின் ஏக்கங்களின் வீரியம் அவனை அடித்துச் சென்றது. இத்தனை வருடங்களாக இந்தக் குரலைக் கேட்கத் தான் அவன் காத்துக் கொண்டிருந்தான். அது இப்பொழுது மிகச்சரியானத் தருணத்தில் அவனை அழைக்கிறது. அகமும் புறமும் அவனை உந்தித்தள்ளுகிறது. தன் கைகளை இருபக்கமும் உயர்த்தி அம்மக்களைத் தன் நீண்டக் கூர்மையானப் பார்வையுடன் தீர்க்கமாக நோக்கினான்.

"சகோதரர்களே! வாருங்கள்... போகலாம்!"

    இந்தத் தருணம், இந்த அழைப்பு! இதற்காகத் தான் அவர்களும் காலங்காலமாகக் காத்திருந்தனர். அவர்கள் தங்கள் கைகளை உயர்த்தி ஆரவாரித்தனர், சிலர் அழுதனர், சிலர் வெறி கொள்ளக் கத்தினர், 

"ஆம்! நாம் போகலாம்! எல்லாம் வல்ல இறைவனின் பெயரால்!"

    மேரியின் மகன் முன்னே செல்ல அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் இணைந்து ஒரே உடல் போலச் செல்லத் தொடங்கினர். ஏரியினருகில் ஒரு சிறிய மலைக்குன்றம் இருக்கிறது.  குட்டைப் புதர்களும், சைப்ரஸ் மரங்களும் அடர்ந்த அக்குன்று வெயில் சுட்டெரிக்கும் இப்பருவத்திலும் தன் பசுமையை முற்றிலுமாக இழக்காமல் வெளிர் பச்சை நிறத்திலிருந்தது. நாள் முழுதும் இறைந்த வெம்மையினால் இன்னும் சூடு அடங்காத பாறைத்துண்டங்களிலும், சரளைக் கற்களிலும் அவர்கள்  தங்களின் வெற்றுக் கால்கள் பதித்து ஒருவர் பின் ஒருவராகச் சென்று கொண்டிருந்தனர். அந்தியின் செம்மஞ்சள் நிற ஒளி வானில் அசையாது குத்தி நிற்கிறது கதிரவன். மென் குளிர்மையும், ஈரப்பதமும் படரத் தொடங்கின. வரிசையாக அடர்ந்திருந்த தைல மரத்திலிருந்து, கார வீச்சமும் மணமும்  குன்றினைச் சுற்றி நிறைந்து வீசுகிறது. குன்றின் உச்சியில் சிதிலமடைந்த கட்டிடத் தொகுதிகளும், உடைந்த களிமண் கற்களின் அடுக்குகளும், தூண்களும்  தெரிந்தன, அது ஏதோ தொன்மையான தெய்வ வழிபாட்டிடத்தின் மீதமிருந்த எச்சங்களாக இருக்கும் என்று அவர்கள் நினைத்துக் கொண்டனர். இரவு மீன்பிடிக்குத் தனியாகத் தன் படகுடன் செல்லும் பொழுது, இந்தச் சிதில இடத்தின் வெளித்திண்டில், அமர்ந்திருக்கும் வெள்ளை உருவத்தைத் தான் அடிக்கடி இரவுகளில் காண்பதாக ஒரு மீனவன் சொன்னான். அதன் அழுகை சத்தத்தைக் கூட நமது முதிய ஜோனா கேட்டிருக்கிறார் என்றான். தன்னிலையற்று, தங்களை எதுவோ வலுவாக உந்தி விளிப்பதைப் போல, அவர்கள் ஒரே குடும்பமாக மலை உச்சியை நோக்கி ஜீசஸிற்குப் பின்னால் அணிவகுத்துச் சென்றனர்.

    முதிய சலோமித் தன் மகனைப் பார்த்து, "என்னை உன் கைகளைல் தாங்கிக் கொள், நாமும் அங்கே செல்வோம்" என்றாள். அவள் மேரியின் கைகளை விடவில்லை. "அழாதே மேரி!" "உன் மகன் சாதாரணன் அல்ல, அவன் முகத்தில் ஒளிரும் தீர்க்கத்தை நீ பார்த்தாய் அல்லவா!"

    "எனக்கு யாரும் மகனில்லை, எனக்கு யாரும் மகனில்லை" மேரி வலிப்பு வந்தது போல உதடுகளைச் சுழித்துக் கொண்டு வெறுப்புடன் அழுது கொண்டேக் கத்தினாள். அதோ அவனோடு போகிறார்களே அந்தப் பாவப்பட்ட கூட்டத்திற்குத்தான் அவன் மகன். எனக்கில்லை.எனக்கு யாருமில்லை! இல்லை! இல்லை!" அவள் தன் புலம்பல்களுடனும் மலையேறத் தொட்ங்கினாள். உறுதியாகவே அவளது சித்தத்தில் உறைத்து விட்டது. தன் மகன் தன்னை முழுமையாகக் கைவிட்டு விட்டான் என்பது. அத்திகைப்பிலிருந்து அவளால் இன்னும் வெளிவர முடியவில்லை. அவனைத் தொட்டுத் தழுவி அணைத்துக் கொண்டிருக்கும் பொழுதும், அவன் எப்படியும் தன்னுடன் வந்து விடுவான் என்று அவள் நம்பிக் கொண்டிருந்தாள். ஆனால் அவனது பார்வையோ பொருளற்று, உணர்ச்சிகளுமற்றிருந்தது. "நான் தான் உனது அம்மா" என்று அவள் சொல்லும் பொழுது கூட அவன் அவளைத் தெரிந்தது போலக் காண்பிக்கவே இல்லை. உண்மையிலேயே அவன் மறந்து விட்டானா இல்லை நடிக்கிறானா என்று அவளால் அச்சமயம் யூகிக்க முடியவில்லை. சட்டெனத் தன் கைகளை விலக்கித் தள்ளி விட்டுப் போனானே! அந்த விலகல் அவள் இனி காலம் முழுதும் அனுபவிக்கப்போவது என்று இப்போதுவரை அவள் அறிந்திருக்கவில்லை.

    கூட்டத்தோடு கூட்டமாகத் தன் மனைவியும் மலையை நோக்கிச் செல்வதை, முதிய செபெதீ பார்த்தார். அவர் தலையில் அடித்துக் கொண்டே எரிச்சலாக, அருகிலிருந்தத் தன் மகன் ஜேக்கப்பையும், அவனின் இரு துணைவன்களான பிலிப் மற்றும் நாத்தனேலையும் பார்த்தார். அவர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டு செல்லும் அக்கூட்டத்தினைப் பார்த்துக் கொண்டிருந்தனர். "பிச்சைக்காரக்கும்பல், பட்டினியில் கிடக்கும் பசித்த ஓநாய்கள்! எக்கேடாவது கெட்டுப் போகட்டும். நாமும் அவர்களுடன் ஊளையிடுவோம், இல்லையேல் இவர்கள் நம் ஆடுகளையும், நம்மையும் சேர்த்தே விழுங்கி விடுவார்கள். நாமும் அவர்களின் பின்னால் அவர்களைத் தொடர்ந்து போவோம். ஆனால் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள், காற்றில் சொற்களால் ஜால வித்தை காட்டும் மேரியின் மகன், அவன் இந்தப் பஞ்சப் பயல்களிடம் பேசும் பொழுது நாம் நம் எதிர்ப்பைக் காட்ட வேண்டும். புரிந்ததா! அந்தப் பயல்! அவனின் கை இவர்களுக்கு முன் உயர்ந்திட விடக்கூடாது. நன்றாக உங்களின் வெறுப்பை பட்டைத் தீட்டிக் கொள்ளுங்கள். நாம் சேர்ந்து அங்கே போகலாம். ம்ம்! வாருங்கள்!" செபெதீ கடுமையாகக் கூறிக் கொண்டு தன் குழுவுடன் மேலே ஏற முனைந்தார்.

    ஒரு நொண்டிக் கழுதையைப் போலத் தன் கம்பை நிலத்தில் ஊன்றித் தடுமாறி அவர்களுடன் அவர் முன்னே சென்று கொண்டிருந்தார்.

    ஜோனாவின் இரு மகன்களும் அங்கே பின்னால் கூட்டத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். பீட்டர் தன் அண்ணன் ஆண்ட்ரூவைக் கவனமாகக் கைகளில் பிடித்துத் தாங்கிக் கொண்டு, அமைதியாகவும், அவனுக்கு உறுத்தாத மென்மையானக்குரலோடும் பேசிக் கொண்டு வந்தான். ஆனால் தொட்டால் பற்றிக் கொள்வது போன்றக் கனலும் சீற்றமிகு கண்களால் ஆண்ட்ரூ மலையேறிச் செல்லும் மனிதத்திரளைக் கண்டான். முன்னே அவர்களை வழி நடத்திச் செல்லும் வெள்ளை அங்கி உடுத்திய மனிதன் ஒரு புள்ளியாக அவனுக்குத் தெரிந்தான். மொத்தத்தில் என்ன நிகழ்கிறது என்று புரியாமல் அவன் நிலைகுலைந்துக் குழம்பிப் போயிருந்தான்.

    "யார் அவர்கள், எங்கே போகிறார்கள்?" பீட்டர் யூதாசைப் பார்த்துக் கேட்டான். அவன் இன்னும் எந்த முடிவும் எடுக்க முடியாமல் மலை அடிவாரத்தில் நின்று கொண்டிருந்தான்.

"மேரியின் மகன்" செந்தாடிக்காரன் பதிலுரைத்தான்.

"அவனுக்குப் பின்னால் படை போலச் செல்கிறார்களே, அந்த மக்கள்?"

    "திராட்சைத் தோட்டங்களிலும், வயல் வெளிகளிலும் அறுவடைக் காலங்களில் கூலிக்கு வேலைக்கு வருவார்களே அந்த பாவப்பட்ட ஏழைகளின் கூட்டம்தான் அது. அவன் அந்த மலை உச்சிக்குப் போய் அவர்களிடம் தன் செய்தியை உரைப்பான் என்று நினைக்கிறேன்."

    "அவன் என்ன பேசுவான்?, ஒரு ஜோடிக் கழுதைக்கு வைக்கோல் பிரித்து ஒழுங்காகத் தீவனம் வைக்கக் கூடத் தெரியாத சின்னப்பயல் அவன், என்ன பேசிக் கிழிக்கப் போகிறான்" பீட்டர் ஏளனமாகச் சிரித்தான்.

    யூதாஸ் தன் தோள்களை அலட்சியமாக அசைத்துக் கொண்டான். "பார்ப்போம் அவன் அப்படி என்ன பேசுகிறான் என்று" சொன்னவன், அவனும் அந்தக் குன்றினை ஏற ஆயத்தமானான்.

    வியர்க்க விறுவிறுக்கத் தலையில் திராட்சைப் பழங்கள் நிறைந்தக் கூடையைத் தூக்கிக் கொண்டு இரு கரிய நிற வலுவானப் பெண்கள், தோட்டத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தனர். பார்ப்பதற்கு பொறாமை கொள்ளும் வகையில் திடமான உடற்கட்டு அவர்களுக்கு. வெறுமனே அன்றைய நாளில் எஞ்சியிருக்கும் நேரத்தைக் கடப்பதற்காக, ஊர்வலம் செல்லும் திசை நோக்கி, அம்மக்களைத் தோழமையுடன் அணுகி,  அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்கள்.

    முதிய ஜோனா, தோள்களில் தன் வலையுடன், அவனது குடிலை நோக்கி மெதுவாக ஏரியிலிருந்து வந்து கொண்டிருந்தார். பசியுடன் , சீக்கிரமேக் குடிலுக்குச் செல்லும் அவசரத்தில் இருந்தார் அவர். மலைக்குன்றில் ஏறிக் கொண்டிருக்கும் தன் மகன்களையும், கும்பல் கும்பல்களாகச் செல்லும் மக்கள் கூட்டத்தையும் பார்த்தவர், நடையை நிறுத்தித் தன் மீன் போன்றக் கண்களால் தூரத்தை வெறித்தார். அவர் எதைப்பற்றியும் நினைக்கவில்லை. யாரிடமும் எதுவும் கேட்கவில்லை. யாராவது செத்துப் போனார்களா?, யாருக்காவது கல்யாணமா? இல்லை எதற்காக இத்தனை மனிதர்கள் விரைவாக மலை ஏறிப் போகிறார்கள்? என்ற எந்தக் கேள்விகளும் அவரிடமில்லை. வெறுமனே அவர் நிமிர்ந்து அங்கே நிகழ்வதற்கு ஒரு சாட்சியம் போலத் தன வாயைத் திறந்து கொண்டுப் பார்த்தார்.

    "வா! மீனவத் தீர்க்கதரிசியே, வா! போகலாம்!" எதிரே வந்து கொண்டிருந்த செபெதீ அவரை அழைத்தார். "அங்கே விருந்து நடக்கிறது! நம் மேரி மாக்தலேனிற்குத் திருமணம் நடக்கப் போகிறது என்று நினைக்கிறேன். நீயும் வா! அங்கு வந்து களிப்புற்றிரு!" செபெதீயின் வழக்கமானக் கிண்டல் பேச்சு.

    ஜோனா தன் தடித்த வாயைத் திறந்து பேச முயன்றார். ஆனால் எதுவும் பேசாது தன் தோள்களில் இருந்த வலையை இழுத்து சரிசெய்து கொண்டு, கனத்தக் காலடிகளுடன் அங்கிருந்து நகர்ந்தார். குறிப்பிட்ட நேர இடைவெளிக்குப் பின்பு அவர் தன் குடிலைச் சரியாக அடைந்திருக்கும் பொழுது, பேறுகால வலி போல அவருள் உழன்று கொண்டிருந்த சொல், சட்டெனப் பிரிந்து வெளிவந்தது. "நரகத்திற்குப் போ! முட்டாள் செபெதீ!" தன் கண்களை விரித்துச் சத்தமாகச் சிரித்துக் கொண்டே சொன்னவர், கதவைத் திறந்து உள்ளே சென்றார்.

    செபெதீயும், அவருக்குத் துணையாக வந்தவர்களும் மலை உச்சியினை அடையும் பொழுது, ஜீசஸ், அங்கிருந்த உயரமானப் பாறையின் மேல் சம்மணமிட்டு அவர்களைப் பார்த்து அமர்ந்திருந்தான். அவன் இன்னும் வாய் திறக்கவில்லை. அவன் அனைவரும் வந்துவிட்டனரா என்று அவர்களுக்காகக் காத்திருந்தான். ஆண்கள் நிலத்தில் சம்மணமிட்டும், பெண்கள் அவர்களுக்குப் பின்னே நின்று கொண்டுமிருந்தனர். அந்த பாவப்பட்ட உழைக்கும் வர்க்கம் மொத்தமும் அவனுக்கு முன்னே அவனைப் பார்த்துக் காத்திருந்தது. அந்தி பொலிந்து இருள் வெளிவருவதற்கானத் தருணம். சூரியன் மறைகிறது. ஆனால் வடக்கே,  தொலைவில் ஹெப்ரான் மலைக்குப் பின் புறம் அதன் கரங்களின் விரல் நுனிகள் இன்னும் தெரிந்து கொண்டிருக்கிறது. வானத்தின் சாம்பல் வெளிச்சம். விண்மீன்களின் ஒளிர்வு தொடங்கிக் கூடுகிறது. நிலவின் கீற்றுகள் அப்பொழுதுதான் தன் மூடிதிறந்து நிலமெங்கும் நறுமணம் கிளர்த்த முயல்கிறது.  மக்களின் சின்னச் சின்ன சலசலப்புகள் இன்னும் அடங்கவில்லை. இன்னும் மலைக்குன்றத்தின் உச்சியில் ஒளி  முற்றிலுமாக அகலவில்லை. கீழே கோட்டு வெளிச்சமாக, நீரலைகளின் அடர்வு நீல நிறமாக மாறிக் கூடி வருகிறது.

    ஜீசஸ் தன் கைகளை, மார்புக்குக் குறுக்கே கட்டி, வானத்தை நோக்கிகிறான். ஒளிக்கும் இருளுக்கும் நடக்கும் போராட்டம், தன் தலைக்கு மேல் தொடர்ந்து கொண்டிருப்பதை உற்று நோக்குகிறான். மெதுவாகக் கீழேக் குனிந்து, தன் எதிரே இருக்கும் மக்களின் முகங்களைத் தனித்தனியேப் பார்க்கிறான். பசியில் வாடியிருந்த அந்த முகங்கள், சுருங்கியும், கவலை தோய்ந்தும் இருந்தும் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன், பொறுமையின்றி இருக்கிறது. 

    அருகில் வலதுபுறம், அவனைக் குற்றம் சாட்டும் தொனியிலிருந்த ஒரு ஜோடிக் கடுமையானக் கண்கள். பழி வாங்கத் துடிக்கும் அதன் மிருக லயிப்பு.

    அங்கே செபெதீ மற்றும் அவர் கூட வரும் மற்றவர்களையும் கண்டவுடன் , ஜீசஸ், தன் வாயைத் திறந்து வரவேற்றான். "வாருங்கள்".
அனைவரும் சற்று முன்னே வந்து என்னைச் சுற்றி அமர்ந்து கொள்ளுங்கள். என் குரல் அத்தனை வலிமையானதல்ல. நான் உங்களிடம் பேச விளைகிறேன்."

    செபெதீ, ஊரின் பெரிய மனிதன் மற்றும் முதலாளியாகையால் அவனை முன்னே இருக்கும் ஒரு சிறியக் கல்லின் மேல் அமரும் வகையில் அனைவரும் இடம் விட்டு ஒதுங்கினர். அவனுக்கான உரிமை மற்றும் மரியாதையின் பெயரில், அவனுக்கு வலப்புறம் அவனது இரு மகன்களையும், இடப்புறம் பிலிப், மற்றும் நாத்தனேலும் அமர்ந்தனர். சலோமியும், ஜோசப்பின் மனைவி மேரியும் பின்னே பெண்களின் கூட்டத்தில் நிற்கின்றனர். இன்னொரு மேரி, மேரி மாக்தலேன் ஜீசஸின் காலடியில் தலைகுனிந்து அமர்ந்திருக்கிறாள். அவளது தலைமுடி அவனது பாதங்களைத் தழுவிக் கிடக்கிறது. அவளின் மூச்சின் வெம்மை, ஜீசஸின் விரல்களைத் தழுவுகிறது. அங்கு நடப்பதை பார்ப்பதற்கு ஏதுவாக, சற்று மேடான நிலத்தில்,  காற்றில் அசைந்தாடும் தேவதாரு மரத்தின் அடியில் தனியனாக யூதாஸ் நிற்கிறான். அம்மரத்தின் கூர்மையானக் கிளைகளின் ஊடே அவனது கத்தி போன்ற நீலக் கண்கள், மேரியின் மகனை விட்டு அகலவில்லை.

    ஜீசஸ் தனக்குள்ளேத் தைரியம் வரவழைக்கப் போராடிக் கொண்டிருந்தான். அமர்ந்திருந்தவனின் கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தது. "பல வருடங்களாக இந்தத் தருணத்தை எதிர்கொள்வதைத் தான் பயத்துடன் எதிர்பார்த்திருந்தேன். இதோ அது நிகழப் போகிறது. இறுதியில் கடவுளின் விருப்பம் நிகழ்கிறது. என்னைப் பிடித்து இங்கேத் தள்ளிக் கொண்டு வந்திருக்கும் அவரின் வலுமிகு கைகளை இன்னும் உணர்கிறேன். என் வழியே அவரின் வார்த்தைகளைச் சொல்ல நினைக்கும் அவரின் பிரயாசைகளை நான் நினைத்தால் மட்டும் தடுத்துவிட முடியுமா என்ன!. இதோ என் முன்னே என் மக்கள் திரண்டிருக்கின்றனர். ஆனால் நான் என்ன பேசப் போகிறேன். இந்த நொடி வரை எனக்குள் எந்த எண்ணங்களும் இல்லை." அவன் தன்னுள் அலசிக் கொண்டிருந்தான். அவனது எண்ணங்களின் அலைவுகளில் இது வரை அவனுக்கு நடந்த கொஞ்சமே கொஞ்சம் மகிழ்ச்சியான விஷயங்களும், கடவுளிடம் மல்லுக்கு நின்று அவன் வாங்கிக் கொண்டப் பல துக்ககரமான சம்பவங்களும் தோன்றி மறைந்தன. தன் தனிமையுடன் அவன் சுற்றித் திரிந்த பொழுது கண்ட மலைகள், பறவைகள், பூக்கள், ஒரு ஆட்டிடையன் தன் தோள்களில் தன் செல்ல ஆட்டுக்குட்டியைத் தூக்கிக் கொண்டு ஆனந்தமாக குடிலுக்குத் திரும்புகிறான், மீனவர்கள் தங்கள் விரிந்த அகலமான வலையை இழுத்து நீரினுள் படர்க்க வீசுகிறார்கள், ஒரு விவசாயி விதைகளைக் கிளர்த்திய மண்ணில் தூவுகிறான், தானியங்கள் செழித்து நிற்கும் அறுவடை வயல்கள், கதிரடிக்கும் தளம், மக்கள் மாறி மாறி கோதுமைப் புற்களைக் கட்டி அடித்துத் தொலிக்கிறார்கள்.  அதை மூடைகளாக சேகரிக்கிறார்கள். மூடைகளைப் பாரங்களாக கட்டித் தங்கள் கழுதைகளை ஓட்டிக் கொண்டு, அன்றைய நாளின் சேகரிப்புகளுடன் வீடு திரும்புகிறார்கள், வானமும் பூமியும் மாறி மாறி இரு ஜன்னல் கதவுகள் போல திறந்து மூடுகின்றன. கால்களுக்கு கீழும் தலைக்கு மேலும் ஏதுமற்றிருப்பதைப் போல ஒரு நொடி நேரத் தயக்கம். அனைத்துக் காட்சிப்புலமும் ஒரு திரவ மிணுக்கம் போல அவனுள்  முங்கித் தெளிகிறது. இறைவனால் நிகழ்த்தப்படும் அத்தனை அற்புதங்களும் அவன் கண் முன் வந்து போகின்றன. ஆனால் அவன் தன் சொல்லின் வார்த்தையை அதில் எங்கே போய்த் தேட என்று விசனித்தான். அவனுக்குத் தோன்றிய அனைத்தையும் வெளிப்படுத்தியேத் தீர வேண்டும் என்ற உறுதி அவனை உந்தித்தள்ளுகிறது. ஆற்றுப்படுத்த முடியாத இதயத்துடன் என் முன்னே இருக்கும் இம்மனிதர்களைத் தேற்ற விளையும் வார்த்தைகள் எப்படி இருக்க வேண்டும். ஒரு சரியான முடிவை அவனால் எடுக்க முடியவில்லை. சொற்களின் திரள் அவனை விழுங்கித் துப்பியது. 

    தன் முன்னே திறந்துக் கிடக்கும் இவ்வுலகம் கடவுளின் அழகான, தேவதைக் கதையில்லாமல் வேறென்ன. ராட்சசர்களும், இளவரசிகளும் பயணிக்கும் கதை. என் பாட்டி, குழந்தைப்பருவத்தில்  அழுகையிலிருந்து என்னைத் தேற்றுவதற்காகச் சொல்வாளே! அது போன்ற ஒரு கதை! ஆம்! கடவுள் சொர்க்கத்தின் விளிம்பிலிருந்து தன் விரல் நீட்டி மனிதனிடம் கடத்திவிட்ட, மனிதனுக்காக அவன் இயற்றிய ஒரு தேவதைக்கதை.

    அவன் புன்சிரிப்புடன் அவர்களைப் பார்த்து தன் இரு கைகளையும் சிறகுகளைப் போல உயர்த்தினான்.

    "சகோதரர்களே!" இன்னும் அவனது குரல் நிலைபெறாது நடுங்கிக் கொண்டு இருந்தது. "சகோதரர்களே! நான் உங்களுக்குக் கதை சொல்லப் போகிறேன். ஆம்! ஒரு நீதிக்கதை! என்னை மன்னியுங்கள்! நான் படிக்காதவன். எந்த மேதைமையும் என்னிடம் கிடையாது. உங்களைப் போலவே ஒரு பாவப்பட்டவன். என் இதயத்தில் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. ஆனால் என் அறிவால் அதனை உங்களுக்கு விளக்க இயலவில்லை. நான் என்னுள் எந்த எதிர்பார்ப்பும், எண்ணங்களுமின்றி உங்கள் முன் வாயைத் திறக்க முயற்சி செய்கிறேன். என் வார்த்தைகளால் அதை  நான் சொல்ல விளையும் பொழுது அது என்னுள் கதைகளாகவே வெளிவருகிறது. மன்னியுங்கள்! என் சகோதரர்களே!. நான் உங்களிடம் நீதிக் கதைகளின் மூலம் உரையாட விரும்புகிறேன்.

    "நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம், மேரியின் மகனே! மக்கள் திரள் ஒட்டுமொத்தமாகக் கத்தின. "நாங்கள் கேட்கிறோம்!"

திரும்பவும் ஜீசஸ் தன் வாயைத் திறந்தான்.

    "விதைப்பவன் நிலத்தில் விதைகளை விதைக்கிறான். சில விதைகள் பாதைகளில் விழுகின்றன, பறவைகள் அதைக் கொத்தித் தின்கின்றன. சிலக் கற்களின் மேலே விழுகின்றன. அது முளைப்பதற்கான மண் கிடைக்காமல் காய்ந்து வீணாகின்றன. மற்றும் சிலக் கூரிய முட்களில் விழுகின்றன. முட்கள் வளர்ந்து, விதைகளுக்கு சுவாசமோ, வெளிச்சமோக் கிட்டாமல் அழிந்து விடுகின்றன. கடைசியாக வெகுச்சிலவே, நல்ல வளமான மண்ணில் விதைகின்றன. பின் அது வேர்பிடித்து முளைத்துப் பயிராகின்றன. பயிர் செழித்து வளர்ந்துப் பால் பிடித்துக் கனிந்து நெல்லாகித், தானிய மணிகளாகி, மனிதகுலத்திற்கே உணவாகின்றன. நம்மில் கேட்கக் காதுள்ளவர்கள் எவரோ,  அவர்கள் இதைக் கேட்கட்டும்".

    யாரும் பேச வாயெடுக்கவில்லை. திகைப்பும் , குழப்பமுமாக அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தனர். முதிய செபெதீ சண்டை போட வேண்டும் என்ற ஒரே முனைப்புடன் தன் ஏறுக்கு மாறானக் கேள்விகளை கேட்க முயன்றார்.

    "மன்னிக்கவும்!", எனக்குப் புரியவில்லை. எனக்குக் காதுகளும், செவித்திறனும் மிகத் தெளிவாகவே இருக்கிறது. கடவுளுக்கு நன்றி! உன்னுடையக் கதையை நான் தெளிவாகவேக் கேட்டேன். ஆனால் எனக்குப் புரியவில்லை. இதன் மூலம் நீ என்ன சொல்ல விளைகிறாய்? இன்னும் கொஞ்சம் சரியாகச் சிக்கலின்றி உன்னால் விளக்க முடியுமா?" கிண்டலாகச் சிரித்துக் கொண்டவர், பெருமையாகத் தன் வெண்ணிறத் தாடியைத் தடவிக் கொண்டு சுற்றும் முற்றும் உருவாகும் சலசலப்பைக் கவனித்தார்.

    "அல்லது, நான் நினைப்பது போல நீதான் அந்த விதை விதைப்பவனா?"

    "ஆமாம்!" ஜீசஸ் அவரை வினயமாகப் பார்த்தான். "நானே விதைப்பவன்"

    "அந்தக் கடவுள் நம்மைக் காக்கட்டும்!" முதியவர் அலட்சியபாவத்தில் கூச்சலிட்டார். தன் கைக்கோலைத் தரையில் இடித்துக் கொண்டு சரியாக அமர்ந்தார். " ம்ம்! நிச்சயமாகநாங்கள் கற்களும், முட்களும்தான். பின் எங்கே விதைக்கப் போகிறாய் இளைஞனே!"

    "உங்களிடம் தான்" மேரியின் மகனின் சொற்கள், தணிவுடன் குழைவாக எதிராளியை அணுகியது. 

    ஆண்ட்ரூ மிகுந்தப் பதற்றத்துடன், தன் செவிகளைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறான். ஜீசஸைப் பார்த்ததும் அவனின் இதயம் பதற்றத்துடன், ஒரு காதலியைப் பார்ப்பதைப் போலத் தாறுமாறாகத் துடித்தது. இதே போன்ற ஒரு அனுபவத்தைத் தான் அந்த ஜோர்டான் நதிக்கரையில் அவனது ஆன்மீகக் கடைத்தேற்றுதலை மாற்றி அமைத்த ஞானஸ்நானம் செய்பவரான- யோவனைப் பார்த்த பொழுதும் உணர்ந்தான். பிரார்த்தனைகளினாலும், விழிப்புகளாலும், உண்ணா நோன்புகளினாலும் உடலை வருத்தி, சூரியன் தின்று மிச்சமிருந்த நலிந்த உடலில் இடைக் கச்சையாக மிருகங்களின் தோலை உடுத்திக் கொண்டு நின்ற அம்மனிதனின் ஆளை விழுங்கும் காட்டு மிருகத்தின் ஒளிர்க்கண்கள்,  அந்த எரியும் இரு தீக்கங்குகளை இப்பொழுது தன் நினைவில் இருத்தினான். அவரின் குரல்வளையிலிருந்து ஒரு சன்னதமாய், ஏதோ ஒரு தொல் மூதாதையின் விளியாகக் கேட்ட அச்சொல் அவன் காதுகளில் அடர்ந்தது. "வருந்து, வருந்து!" அந்தக் குரலின் ஒவ்வொரு அதிர்வலைகளுக்கும், ஜோர்டான் நதி எழுந்தடங்கியது. வணிகர்களின் கூண்டு வண்டிகளும், ஒட்டகங்களும், அங்கிருந்து நகரமுடியாமல் நின்ற அந்தக் காட்சி இன்றும் அப்படியே ஒரு ஓவியம் போல அவனுள் காட்சியளித்தது.

    ஆனால் இங்கு என் முன்னே நிற்கும் இன்னொரு மனிதனோ, கனிவாகச் சிரிக்கிறான், அவனது குரலோ அமைதியும், நடுக்கமும் கொள்கிறது, பார்க்க ஒர் பொம்மைப் பறவையைப் போல இருக்கிறான். முதன் முதலாக தன் கீச்சிடலை வெளிப்படுத்த முயன்றுப் போராடிக் கொண்டிருக்கிறான், பாவம்! ஆனால் இவன் கண்கள், எரிவதற்குப் பதிலாக என்னைக் குளிர்விக்கிறது. ஒரு மயில் இறகினைப் போல வருடுகிறது. ஆண்ட்ரூவின் சிறகுகள் கொண்ட இருதயம் இருவருக்குள்ளும் அனாயசமாகப் பறந்துப் பாய்ந்து தடுமாறுகிறது

    ஜான் மெதுமெதுவாகத் தன் தந்தையிடமிருந்து விலகி ஜீசஸை நோக்கிச் சென்றான். செபெதீ அவனைக் கவனிக்கும் பொழுது அவன் ஜீசஸூக்கு அருகில் சென்று அவன் காலடியிலேயே உட்கார்ந்துக் கொண்டான். அது செபெதீக்கு மேலும் ஆத்திரம் வர வைத்தது. "இந்தப் பயலுக்குப் பிடித்த பித்து இன்னும் இறங்கவில்லை. ஏற்கனவே வலுவற்று நோஞ்சானாக இருக்கிறான். இதில் தவறானத் தீர்க்கதரிசிகளைத் தேர்ந்துத் தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக் கொள்கிறான். "செபெதீ கோபத்துடன் தன் மகனைப் பார்த்துத் திட்டினார்" வருடத்தின் ஒவ்வொரு நாளும் இம்மாதிரி புதிதாய் முளைத்து வருபவர்கள், என்னவோ இந்த உலகத்தையே தன் தோள்களில் தாங்குவது போலப் பாவலா செய்கிறார்கள்; ஆனால் இந்த ஒவ்வொருப் போக்கிரிப் பயல்களுக்கும் மண்டையில் என்னதான் இருக்கிறதோ?  கடவுளுக்குத்தான் வெளிச்சம்! ஏதோ தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தில் நேராக வந்து நிலஉடைமையாளர்களை, பாதிரிமார்களை, அரசர்களைத் தொல்லைபடுத்துவதற்கு வேண்டிய எல்லா செயல்களையும் செய்கிறார்கள். ஸ்திரமானதாகவும், மக்களுக்குப் பயன்படும் வகையிலும் உலகில் என்னவெல்லாம் நல்ல தன்மைகள் இருக்கிறதோ அதையெல்லாம் உடைத்து சுக்குநூறாக்குவதே தங்கள் கொள்கையாக கடைப்பிடிக்கிறார்கள். ஆஹ்! அடுத்தது என்ன? இதோ இங்கே எளிமையின் ஸ்வரூபமாக மேரியின் மகன்! இன்னும் இளமையும், மென்மையுமாக இருக்கும் இந்தப்பயலின் தலையைத் திருகி விட்டால்தான் என்ன! அப்படியாவது திருந்துவார்களா! தெரியவில்லை" செபெதீ தனக்குள்ளேயே அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்.

    தனக்குச் சாதகமானச் சூழல் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள, மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சுற்றும் முற்றும் பார்க்கிறார் செபெதீ. தன்னருகில் இருக்கும் மகன் ஜேக்கப்ப்  ஆத்திரத்திலா இல்லை வருத்தத்திலா என்று அறுதியிட்டுக் கூற முடியாத பாவத்தில் மேரியின் மகனைப் பார்க்கிறான். இப்பொழுது பின்னாடி மனைவியைத் திரும்பிப் பார்க்கிறார். இன்னும் அழுகையை நிறுத்தாமல் கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பயத்துடன் நடுங்கிக் கொண்டிருக்கும் அவள், எதிரே பட்டினியால் அனுதினமும் போராடிக் கொண்டிருக்கும் பசி மட்டுமே கொண்ட மெலிந்த மனிதர்களைக் காண்கிறாள். அவர்கள் மேரியின் மகனை, அவனது சொற்களை ஊன்றிக் கவனித்து நிற்கிறார்கள். பக்தியும், நம்பிக்கையும் ஒருசேர, அங்கே நிற்கும் பசித்த மானிடர்களைப் பார்ப்பதற்கு, தன் அன்னையை எதிர் நோக்கி, வாயைத் திறந்து உணவிற்காகக் கூக்குரல் இட்டுக் கொண்டே இருக்கும் குஞ்சுப் பறவைகள் போல அவளுக்குத் தோன்றியது.

    "ஒரு கொள்ளை நோய் பீடித்துக் கொண்டதைப் போலல்லவா இந்தப் பிச்சைகாரப் பயல்கள் நிற்கிறார்கள்!" அவர் தலையில் அடித்துக் கொண்டு தன் மகனின் தோள்களைப் பற்றி சாய்ந்து கொண்டார். "நான் வாயைத் திறக்காமல் இருப்பதே நல்லது. இல்லையென்றால் என்னை நானே பிரச்சனைக்குள் தள்ளிவிடுவேன்".

    ஒரு சாந்தமான, மனதை உருக்கும் குரல் ஜீசஸின் காலடியிலிருந்து கேட்டது. செபெதீயின் இளைய மகன் நிமிர்ந்து தன் குருவின் முகத்தைப் பார்த்து பேசத் தொடங்கினான். சுற்றியிருந்த மக்கள் கூட்டம் அக்குரலைக் கேட்டு சற்று எழுந்து அமர்ந்தது.

    "நீங்களே விதைப்பவர்! நாங்களோ கற்களும், முட்களும், வளமான நிலங்களும் ஆவோம். ஆனால் நீங்கள் விதைக்கப் போகும் விதை! அது என்ன?"

    அவனின் குழப்பமான,  சிறுவனைப் போன்ற முகம் ஜ்வாலையுறுகிறது. பாதாம் போன்ற சிறியக் கருமையானக் கண்கள், துயரத்துடன் ஜீசஸை நோக்குகின்றன. சதைப்பற்றுள்ள அவனின் வெளுத்த தேகம், காற்றில் அசையும், செடியைப் போல நடுங்குகிறது. ஜீசஸ் சொல்லும் பதிலைக் கொண்டே தன் இனிமேலான வாழ்க்கையின் பாதை அமையப் போகிறது  என்ற உள்ளுணர்வுடனும், திடத்துடனும், பொறுமையாக ஊன்றிக் காத்துக் கொண்டிருக்கிறான்.

    ஜீசஸ் குனிந்து அக்குரலின் விளியைத் தன்னுள் உள்வாங்கிக் கொண்டு, அசையாது அமர்ந்திருந்தான். தன் இருதயத்தில் ஒரு சரியான சொல்லை, அவன் துழாவிக் கொண்டிருந்தான். காலாதீதமான, அழியாத, எளிமையான ஒரு சொல்! தனக்குள் போராடிக் கொண்டிருந்த அவனின் முகம் முழுதும் வியர்வை  படிந்து நாடியிலிருந்து சொட்டுகிறது.

    "என்ன விதையை நீங்கள் விதைப்பதற்காக வைத்திருக்கிறீர்கள்?" செபெதீயின் மகனின் படபடத்தும் குரல் திரும்பவும் அவனைத் துளைக்கிறது.

    அவன் சொல்லிமுடிக்கும் முன், ஜீசஸ் தன் உடலை இடம் வலமாக அசைத்துக் கொண்டே, அச்சொல் தன்னுள்ளிருந்து முளைப்பதைப் போல தன் கைகளை இருபுறமும் வானை நோக்கி உயர்த்தி முன்னே மக்களைப்பார்த்தான்.

"அன்பு", "ஒருவரையொருவர் நேசியுங்கள்" ஒரு தீர்க்கமானக் குரல் அவனது அடித்தொண்டையிலிருந்து அதிர்வுகளுடன் வெளிவந்தது.
"ஒருவரையொருவர் நேசியுங்கள்!"

    சொல்லி முடித்ததும், அவன் தனக்குள் முற்றிலுமாகக் காலியானதைப் போல உணர்ந்தான். அமர்ந்திருந்த இடத்திலிருந்து சரிந்து விழப் பார்த்தவன் சற்று நிதானித்துக் கொண்டு, தன்னுள் இருக்கும் சொற்கள் அனைத்தும் தீர்ந்ததைப் போல சோர்வாக நிலத்தைப் பார்த்தான்.

    மக்கள் ஒருவருக்கொருவர் கிசுகிசுத்துக் கொண்டு, சலசலப்புடன் எழுந்தனர். பலர் இல்லை என்பதைப் போலத் தலையை அசைத்தனர். சிலர் தங்களுக்குள் கிண்டல் செய்வதைப் போலச் சிரித்துக் கொண்டு அங்கிருந்து போக எத்தனித்தனர்.

    "அந்தப் பையன் என்ன சொன்னான்?" கூட்டத்தில் இருந்தக் கேட்கும் திறன் மந்தமானக் கிழவர் தன்னருகில் நின்றிருந்தவனிடம் கேட்கிறார்.

"அது நாம் ஒருவரை இருவர் நேசிக்க வேண்டுமாம்"

    "சாத்தியமற்றது!" கோபமாக அந்தக் கிழவர் கத்தினார். பட்டினியிலும், பசியிலும் கிடக்கும் ஒரு மனிதன், வயிறு நிரம்பத் தின்று திருப்தியாக இருப்பவனை எப்படி நேசிக்க முடியும். அநீதியினால் பாதிக்கப்பட்ட ஜனங்கள், தங்களை ஒடுக்குபவர்களை எப்படி நேசிப்பார்கள். இது சாத்தியமற்றது. வாருங்கள் நாம் திரும்பப் போகலாம்"

    "ம்ம்! தச்சனின் மகனே!, இதைச் சொல்வதற்காகத் தான் நீ எங்களை இங்கு அழைத்து வந்தாயா? இந்த வியக்கத்தக்க, அற்புதமான செய்தியைத்தான் நீ எங்களுக்காகக் கொண்டு வந்திருக்கிறாய்! அப்படியென்றால் நீ அந்த ரோமானியர்களையும் நேசிக்கச் சொல்கிறாய்! அதாவது உன்னைப் போலவே!, நாங்கள் அவர்களின் முன்னே சென்று எங்கள் கழுத்தை நீட்டித் தெரிவிக்க வேண்டும், என் அன்பு சகோதரர்களே! தயவுசெய்து எங்கள் தலையை அறுத்துத் கொள்ளும் என்று" அருகிலிருந்த தேவதாரு மரத்தில் சாய்ந்து நிற்கும் யூதாஸ், ஆத்திரத்தில் தன் சிவந்தத் தாடியைத் தடவிக் கொண்டே முணுமுணுத்தான்.

    கூச்சல்கள், வசை மொழிகள், அலறல்கள், முறைக்கும் தீப்பற்றியப் பார்வைகள். தனக்குள் அனிச்சையாக உருவாகும் கசப்பை விழுங்கிக் கொண்டு ஜீசஸ் அங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் எல்லாவற்றையும் பார்க்கிறான். தன் முழு சக்தியினாலும் உந்தி, அங்கிருந்து விலகிச் செல்ல எத்தனிப்பவர்களை, பலமாக அழைக்கும் தொனியில் கத்தினான்.

   "ஓருவரையொருவர் நேசியுங்கள்!" ஒருவரையொருவர் நேசியுங்கள்!" உறுதியான ஒரு மன்றாட்டு அவன் குரலில் வெளிப்பட்டது. 
"அன்பே இறைவன்! நானும் அவனை ஒரு கொடூரமானக் காட்டுமிராண்டி என்றும், அவன் தொடுகையினால் தான் மலைகளெல்லாம் தீப்பிடித்து எரிகின்றன. மனிதர்கள் சாகிறார்கள் என்றும் எண்ணியிருந்தேன். அவனிடமிருந்து  தப்பிப்பதற்காக மடாலயத்திற்குப் போய் என்னை மறைத்துக் கொண்டேன். என் முகத்தை தரையில் புதைத்து என் பிரார்த்தனைகளின் ஊடே அவனின் விளிக்காகக் காத்திருந்தேன். இதோ அவன் வந்துவிட்டான். எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஒரு மின்னல் வெட்டு போல அவன் எனக்குள் புகுந்தான். ஒரு நாள் விடியலில், அவன் வந்தான், காலையின் குளிர் இளந்தென்றலாக, "எழுக! என் மகனே! நானும் எழுகிறேன் உன் வழியே! நான் வந்துவிட்டேன். இதோ நான் இங்கிருக்கிறேன்!"

    அவன் கைகளை மார்புக்கு குறுக்காகக் கட்டிக் கொண்டு, தன் இடுப்பு வரைக் குனிந்து அவர்களை அழைக்கும் வண்ணம், அவர்கள் முன்னே அமர்ந்திருந்தான்.

    "கடவுள் விடியலின் குளிர்ந்த தென்றலா!" வலிச்சம் காட்டுவது போல செபெதீ உதட்டைச் சுழித்து ஜீசஸைப் பார்த்துக் கேலி செய்தார். "நரகத்திற்கு போ! போலியே!" என்று தன் கையிலிருந்த கம்பை எடுத்து அந்தரத்தில் சுழற்றியவர். தொண்டை அடைக்க இருமி, கபத்தைத் தரையில் காறி உமிழ்ந்தார்.

    மேரியின் மகன் கீழிறங்கி வந்து அவர்களுடன் அமர்ந்து கொண்டான். அவன் தான் பேசுவதற்காகத் தன்னை  உந்திக் கொண்டிருந்தான். அவர்கள் ஒவ்வொருத்தர் முகங்களையும் அமைதியாக உற்று நோக்கி, வார்த்தைகளின்றி மன்றாடினான். அங்கிருந்து எழுந்து மக்கள் கூட்டத்தின் ஊடே நடந்து முன்னும் பின்னும் சென்றான். அது ஒரு மேய்ப்பன் தன் ஆடுகளைக் கட்டுப்பாட்டுடன் வழி நடத்துவது போல இருந்தது. 

    மறுபடியும் தன் கைகளை வான் நோக்கி உயர்த்தினான். பரலோகத்தின் சொற்களைத் தன்னுள் உறிஞ்சிக் கொள்வதைப் போல அவன் கைவிரல்கள் நடுங்கின.

    "அவன் நம் தந்தை!" ஆம்! ஆற்றுப்படுத்த முடியாத வலியினையும், துக்கத்தையும், குணப்படுத்தமுடியாத புண்களின் வாதைகளையும் அவன் நமக்கு இவ்வுலகத்தில் அளிக்கிறான் எனில். கவலையுறுங்கள்! துன்பப்படுங்கள்!  நாம் நம் வலியினையும், துக்கத்தையும், பசியினையும் எந்த அளவுக்கு வருத்தப்பட்டு சகித்துக் கொள்கிறோமோ, அதே அளவுக்கு, ஆம்! என் சகோதரர்களே! அதே அளவுக்கு. உலகின் அனைத்துத் துன்பங்களின் பாரங்களை வருத்தப்பட்டு சுமக்கிறவர்களே! உங்களின் பரலோக ராஜ்ஜியத்தில் உங்களை மகிழ்வினாலும், இன்பத்தினாலும் மிகுதியாக நம் தேவன் நிறைக்கப் பண்ணுவான்! ஆகையால் பெலப்படுக!".

"நீதிக்கான பசியும், தாகமும் கொண்டவர்கள் பாக்கியவான்கள்"

    "நீதி மட்டும் எங்களுக்குப் போதாது", கூட்டத்தில் பசியில் வாடி நிற்கும் ஒரு இளைஞன் இடை மறித்துக் கத்தினான். "எங்களுக்கு ரொட்டியும் வேண்டும்!"

    "ஆம்! ரொட்டியும் கூடத்தான்!", "ரொட்டியும் தான்...நீதிக்காக பசியும் தாகமும் கொண்டவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் நம் தேவனால் திருப்திபடுவர்" ஜீசஸ் மூச்சிறைத்தான். துக்கப்படுபவர்கள் பாக்கியவான்கள். தேவன் அவர்களை சுகப்படுத்துவான். பாவப்பட்டவர்கள், சாந்தமுடையவர்கள், அநீதி இழைக்கப்பட்டவர்களே, இது உங்களுக்காக, ஏழைகளே, அநீதியினால் உழைபவர்களே, அமைதியுடன் அனைத்தையும் ஏற்றுக் கொள்பவர்களே, உங்களுக்கானதே நம் தேவனின் பரலோக ராஜ்ஜியம்!"

    திராட்சைகள் நிறைந்த கூடைகளை தலையில் சுமந்து கொண்டு நிற்கும் அந்த இருக் கரியப் பெண்களும், ஒருத்தரை ஒருத்தர் அமைதியுடன் பார்த்தனர். அவர்கள் தங்களுக்குள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அவர்களின் பார்வை ஒரு புள்ளியில் சந்தித்துக் கொண்டன. அவர்கள் தங்கள் கூடைகளை இறக்கினர். திராட்சைக் கொத்துக்களை கைகளில் எடுத்துக்கொண்டு வலப்புறமும், இடப்புறமும், பசியோடு அமர்ந்திருக்கும் மக்களுக்கு வினியோகம் செய்யத் தொடங்கினர். ஜீசஸின் கால்களைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறாள் மாக்தலேன், தலையை உயர்த்தி மக்களுக்கு தன் முகத்தைக் காட்டும் தைரியம் இன்னும் அவளுக்கு வரவில்லை. மிக ரகசியமாகத் தன் ஆசிரியனின் கால்களை கேசத்தால் வருடிக் கொண்டே முத்தமிடுகிறாள். அவளது சுவாசத்தின் வெம்மையும் கண்ணீரும், அவன் கால்களின் புழுதியில் படிந்து ஒரு சிதறலான நீர்க்கோலமிடுகிறது.

    ஜேக்கப் பொறுமையிழந்திருந்தான். சகிக்கமுடியாமல் எழுந்தவன், திரும்பிப்பார்க்காமல் அங்கிருந்து நகர்ந்தான். ஆண்ட்ரூ வெறி பிடித்தது போலத் தன் சிவந்தப்பித்துக் கண்களுடன்,  தன் தம்பியின் பிடியிலிருந்து விலக்கிக் கொண்டு ஜீசஸுக்கு அருகில் வந்து அமர்ந்தான். யூதேயாவின் ஜோர்டான் நதிக்கரையிலிருந்து நான் இங்கு வந்திருக்கிறேன். அவனது குரல் மிருகத் தன்மையுடன் கடுமையாக இருந்தது. "அங்கே ஒரு தீர்க்கதரிசி இவ்வாறு தன்னைப் பிரகடனப்படுத்துகிறார்: "மனிதர்கள் வைக்கோல் பதர்கள். நான் நெருப்பு!, நான் அதற்கு தீ வைக்கிறேன். நான் பூமியை எரித்து சுத்தப்படுத்த வந்திருக்கிறேன். தீயினால் ஆன்மாவைக் கழுவித் தூய்மையாக்குவதன் மூலம் நம் மெசியா முன்னே வரும் பாதையினைச் செப்பனிடுகிறேன் என்கிறார். ஆனால் தச்சனின் மகனே! நீயோ அன்பைப் போதிக்கிறாய்! சுற்றிப் பார்! உனக்கு முன்னால் இருக்கும் இந்த மனிதர்களை!  எல்லோருமே ஒவ்வொருவகையில்  பொய்யர்கள், கொலைகாரர்கள், வழிப்பறி செய்பவர்கள், கொள்ளையர்கள், நேர்மையற்றவர்கள். இதோ ஏழைகளும், பணக்காரர்களும். ஒருபுறம் ஒடுக்கப்படுபவர்கள், மறுபுறம் அவர்களை ஒடுக்குபவர்கள். உன் முன்னே அமர்ந்து பவ்யமாக உன் வார்த்தைகளைப் பிரதியெடுப்பவன், நீதியை இயற்றி மக்களை வழி நடத்தும் அரசன், எல்லோரும்! எல்லோரும் அவரவர் வழியில் தீங்கு செய்பவர்கள்தான்! 

    ஆம்! நானும் கூடப் பாவிதான்! ஒரு பொய்யன், நேர்மையற்றவன். அதோ இருக்கிறானே என் தம்பி பீட்டரையும் , தன் பெருத்த தொப்பையைச் சுமந்து கொண்டு நிற்கிறானே கிழட்டு செபெதீ  அவனையும் சேர்த்துதான் சொல்கிறேன். அவன் உன் "அன்பு" என்ற வார்த்தையைக் பிடித்துக் கொண்டு தன் படகுகளையும், அடிமைகளையும் தந்திரமாக எப்படிப் பயன்படுத்தலாம் என்றும், எப்படித் தன் திராட்சை மதுக்கூடத்திலிருந்து மக்களுக்கு வினியோகிக்க வேண்டிய பங்குகளைத் திருடலாம் என்றும் கணக்கு போட்டுக் கொண்டிருப்பான்"

    தன்னைப் பற்றிய கடுஞ்சொற்களைக் கேட்டதும், முதிய செபெதீ ஆத்திரத்துடன் ஆவனை நோக்கி ஓடிவந்தார். கழுத்து நரம்புகள் புடைக்க, ஆண்ட்ரூவைப் பார்த்து வசை பொழிந்து கொண்டு ஆவேசமாகத் தன் கையிலிருக்கும் கம்பைக் கொண்டு அவனை அடிக்கப் பாய்ந்தார். ஆனால் சலோமி சரியான நேரத்தில் அவரைத் தடுத்து நிறுத்தி அம்ர்த்தினாள்.

    "அவமானமாக இருக்கிறது உங்களைப் பார்த்தால், வயதாகியும் உங்களின் சின்னத்தனங்களை நீங்கள் திருத்தவே இல்லை. வாருங்கள் நாம் நம் வீட்டிற்குப் போகலாம்"  சலோமி அவசரமாகத் திரும்பினாள்.

"வெற்றுக்காலுடன், காலணிகள் வாங்கக் கூட வழியில்லாமல் நிற்கும் பிச்சைக்காரப் பயல்களா! ஒருத்தனும் கையேந்திக் கொண்டு இரந்து என் வீட்டுப் பக்கம் வந்துவிடாதீர்கள்" செபெதீ தன் குரலை உயர்த்தி அனைவரும் கேட்கும்படிக் கத்தினார். சற்றே மூச்சிறைக்க, சுவாசத்தை உள்வாங்கிக் கொண்டு, மேரியின் மகனைப் பார்த்து தொடர்ந்தார். "அப்புறம், நீ! தச்சனே! உன் மெசியாக் கதைகளை வைத்துக் கொண்டு, இந்த விளையாட்டையெல்லாம் என்னிடம் காண்பிக்காதே! ஏன் சொல்கிறேன் என்றால், இதன் பாதிப்பை இனிமேலும் நீ புரிந்துகொள்வாயோ! தெரியவில்லை, பாவம்! உன்னிடம் சொல்லி மட்டும் என்ன செய்ய, கிறுக்குப்பயல்! நீயும் மற்றவர்களைப் போல சிலுவையில் அறையப்படுவது தான் நடக்கப் போகிறது. அதுதான் உன் பிரச்சனைகளை நீ மறப்பதற்கு இருக்கும் ஒரே வழி. ஆனால் அதற்காக நீயல்ல!  நானே வருந்துகிறேன், நீ இதிலிருந்து தப்பிப்பாய் என்று எனக்குத் தோன்றவில்லை. உன் துரதிஷ்டம் பிடித்த தாய் உன்னைத் தன் ஒரே மகனாய்ப் பெற்றதுதான் அவள் வாழ்க்கையில் செய்த ஒரே பாவம். 

    எதிரே கற்குவியலுக்கு மேலே  ஒரு பொட்டலம் போலத் தன் முகம் தரையில் உராயச் சரிந்து கிடக்கும் மேரியைக் கைத்தூண்டிக் காண்பித்து செபெதீ பேசிக் கொண்டிருந்தார்.

    ஆனால் அந்தக் கிழவரின் கோபம் இன்னும் அடங்கவில்லை. தன் கைக்கோலால் தரையில் ஊன்றி அழுத்திச் சத்தம் போட்டார், "அன்பு ! என்று அனைவருக்கும் முன்னே நின்று சொல்லும் இந்தக் கிறுக்கன்! நாமெல்லாம் சகோதரர்கள்! அதனால் என் வீட்டில் புகுந்து, உங்களுக்கு வேண்டிய, உங்களால் முடிந்த எல்லா பொருட்களையும் அள்ளிச் செல்லுங்கள் என்று அபத்தமாக ஏதாவது உளறுவான் போலிருக்கிறது. அன்பு! என்னால் என் எதிரியை நேசிக்க முடியுமா? இல்லை என் முற்றத்திற்கு வெளியேக் கூலிக்காக கையேந்தி , என் வாசல் கதவிற்கு வெளியே நின்று இரந்து பிழைக்கும் இந்தப் பிச்சைக்காரக் கூட்டத்தை என்னால் நேசிக்க முடியுமா? அன்பு! இந்த அற்பப் பயல் சொல்வானாம், இந்த மாட்டுமூளைக் காரர்கள் கேட்பார்களாம். பஞ்சப்பராரிகள். அதனால்தான் நான் எப்போதும் ரோமானியர்களிடம் என்னுடைய நன்றியுறுதல்களைத் தெரிவிக்கிறேன். அவர்கள் வெளியாட்களாக நம்மை ஆட்சி செய்தாலும், எல்லாவற்றையும் அதனதன் வரிசையில் சரியாக வைத்திருக்கிறார்கள்.

    செபெதீயின் பேச்சு சுற்றி நின்ற பாவப்பட்டக் கூட்டத்திற்குச் சினத்தை ஏற்படுத்தியது. அவர்கள் ஒருமித்து மறுத்துக் கூச்சலிட்டுக் கொண்டு செபெதீயை நோக்கி வந்தனர். யூதாஸ் அதுவரை காத்திருந்து, தேவதாரு மர நிழலடியிலிருந்து வெளியேக் குதித்து அவர்கள் முன் வந்து நின்றான். முதிய சலோமி அவனைக் கண்டதும் பயத்துடன் நடுங்கத் தொடங்கினாள். அவள் தன் கணவனின் வாயைப் பொத்திக் கொண்டு அங்கிருந்து திரும்பிச் செல்ல ஆயத்தமானாள். ஆனால் அவர்களை மிரட்டும் படியாகக்  கூட்டம் முன்னேறி வந்து கொண்டிருந்தது.

    "அவரின் பேச்சினைக் கேட்காதீர்கள்! மக்களே! ஆத்திரத்தில் அவர் தலைகால் புரியாமல் உளறுகிறார். உண்மையில் அவர் வேறு எதையோ சொல்ல நினைத்து, கோபம் தலைக்கேறிப் பொருளின்றி பிதற்றுகிறார்"

    அவள் செபெதீயைப் பார்த்து கண்டிப்பானக் குரலில் கட்டளையிட்டாள். "வாருங்கள்! நாம் சீக்கிரம் இங்கிருந்து போய்விடலாம்" என்று அவசரப்படுத்தினாள்.

    அவள், ஜீசஸீன் காலடியில் அமைதியாகவும்,மகிழ்ச்சியுடனும் அமர்ந்திருக்கும் தன் இளையமகனை நேருக்கு நேர் பார்த்து தலையசைத்துக் கண்களாலேயே வரும்படி அழைத்தாள். 

"வந்துவிடு! என் மகனே!, இருளத் தொடங்கிவிட்டது"

    "நான் இவருடன் இருக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன் அம்மா!" அவன் உறுதியாகப் பதிலளித்தான்.

    கீழே விழுந்து கிடந்த மேரி, உடனடியாகத் தன் கால்கள் தடுமாற எழுந்து நின்றாள். கண்ணீரை அழுத்தித் துடைத்துக் கொண்டு, தன் மகனைத் தன்னோடு வீட்டிற்கு அழைத்துப் போகும் நோக்குடன் ஓட்டமும் நடையுமாக அவனை நோக்கிப் போனாள். 

    அந்தப் பரிதாபகரமானப் பெண் உள்ளூரப் பயந்திருந்தாள். ஒருபக்கம் அன்பு எனும் சொல்லினால் ஆட்பட்டு அவனைப் பின்தொடரக் காத்திருக்கும் பாவப்பட்ட ஏழை மக்கள், மறுபக்கம் அச்சுறுத்தும் வகையில், தன் மகனைப் பார்த்து சாபங்களைப் பொழியும், கிராமத்தின் பணக்கார முதியவர். அவள் தான் என்ன செய்ய என்று தெரியாமல் நடுநடுங்க முன்னே சென்றாள்.

    "நான் உங்களிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன், கடவுளின் பெயரால் அவன் சொல்வதைக் கேட்காதீர்கள், திரளில் நிற்கும் ஒவ்வொருத்தராக மாறி மாறி அவள் கதறிக் கொண்டே சொல்கிறாள்.
"அவனுக்கு நோய் பீடித்திருக்கிறது, அவன் ஒரு நோயாளி" அவனை விட்டு விடுங்கள்!"

    உதறல் எடுத்தது போல விரைத்த கைகளை மடக்காமல் நடந்து அவனை நோக்கி பக்கத்தில் வந்தாள். அவன் தன் கைகளை மார்பிற்கு குறுக்கே கட்டிக் கொண்டு அமைதியாக கீழே தூரத்தில் வெளிக்கும் ஏரியின் அலைச்சுழிகளை கண்ணடைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான். "வா! என் மகனே!" வா! நாம் ஒன்றாகச் சேர்ந்து நம் வீட்டிற்குப் போய்விடலாம்" அவளது குரல் இறைஞ்சி, மென்மையாக அவனை அழைக்கிறது.

    அவன் அக்குரலின் முகத்தைத் திரும்பி ஆச்சர்யத்துடன் பார்த்தான். இவள் யாராக இருக்கும் என்ற துணுக்குறல் அவனது பார்வையில் இருந்தது.

    "வா! என் அன்பு மகனே!" மேரி திரும்பவும் அவனைத் தன் கனிவானக் கண்களுடன் ஆழமாகப் பார்த்தாள். ஆனால் அவனது கண்கள்! பார்வை! நோக்கு! அது புரிந்து கொள்ள முடியாததாக இருந்தது.  "ஏன் இப்படி என்னைப் பார்க்கிறாய் ஜீசஸ்? என்னைத் தெரியவில்லையா? நான் உனது அம்மா! வா! அங்கே நாசரேத்தில் உனக்காக உன் சகோதரர்களும்,  உன் வயதான அப்பாவும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்."

    மகன் தலையைப் பலமாக ஆட்டினான். "யார் அம்மா, எந்த சகோதரர்கள்? என் அம்மாவும் சகோதரர்களும் இதோ இங்கே இருக்கிறார்கள்!"

    அவன் தன் கைகளை நீட்டி முன்னே நிற்கும் ஏழை பாழைகளை, அவர்களின் மனைவிகளை, முதியப் பெண்களைச் சுட்டினான். செந்தாடிக்காரன்-யூதாஸ் திரும்பவும் தேவதாரு மரத்தில் அப்படியே  சாய்ந்து நின்று கொண்டு, எதுவும் பேசாமல் ஆத்திரம் பொங்க அவனைப் பார்க்கிறான்.

    பின் ஜீசஸ்  தன் கைகளை மேலே உயர்த்தி தலை நிமிர்ந்து வானத்தைப் பார்த்து கூறினான். "என் தந்தை அதோ அங்கே இருக்கிறார், கடவுள்தான் என் தந்தை "

    "இந்த மொத்த உலகத்திலும் என்ன விட அதிகமாகத் துன்பப்படும் அன்னை யாராவது இருக்க முடியுமா? எனக்கிருந்தது ஒரே ஒரு மகன், ஆனால் அவனும் இன்று...." மேரியின் கண்கள் காய்ந்திருந்தது. சுரப்பதற்கு அவளினுள் நீரில்லை. சுருங்கிய அவளின் முகத்தில் நெற்றிச்சுருக்கங்கள் அடர்ந்து இன்னும் ஆழமாகக் கிழவித் தோற்றம் கொண்டிருந்தாள். நீண்டக் கூர்மையான மூக்கு சிவந்து வீங்கியிருந்தது. முழங்காலில் இருந்தக் காயத்தில் ஈக்கள்கள் மொய்க்கின்றன. அவள் அதைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. மூக்கை உறிஞ்சுக் கொண்டும் விசும்பிக் கொண்டும் அவள் அசைவற்று, பார்வை நிலத்தில் குத்திட நிற்கிறாள். உணர்ச்சிகளேயற்ற முகம். நாட்பட்ட நோயில் உழன்று, அதிலிருந்து குணமடைய வாய்ப்பே இல்லாத போது, ஒருவர் அதனுள் அப்படியே அமிழ்ந்துவிடுவர். சிலசமயம் தன் வாழ்க்கையையே அந்த நோயின்றி வாழ முடியாத வாய்ப்புகளும் உண்டு. மேரி அம்மாதிரியான விளிம்பில் நின்று கொண்டிருந்தாள்.

    சற்றுத் தொலைவில் இதனைப் பார்த்துக் கொண்டிருந்த சலோமி, தன் கணவனை விட்டு விட்டு அவளை நோக்கி ஓடி வந்து, அவளைத் தன்பால் அணைத்துக் கொள்ளக் கைகளை நீட்டினாள். ஆனால் அவள் நீட்டியக் கைகளைத் தட்டிவிட்டுத் தன் மகனிடம் திரும்பவும் சென்றாள்.

    "நீ வரமாட்டாய் இல்லையா?" அந்த அம்மா தன் இதயம் பிளப்பதைப் போல, வலியுடன் அவனைப் பார்த்தாள். "இதுவே கடைசி முறையாக நான் உன்னை அழைக்கிறேன், வா! வந்துவிடு!" 

    சொன்னவள் அங்கேயே அவன் முன் நின்று கொண்டிருந்தாள். அவள் மகன் இன்னும் அமைதியாகவே இருந்தான். தன் முகத்தை அவளிடமிருந்து விலக்கிக் கொண்டு ஏரியையே பார்த்துக் கொண்டிருக்கிறான்.

"உன் அம்மாவின் பழிச்சொல்லிற்கு கூட நீ அஞ்சமாட்டாயா?"

    "நான் எதற்கும் பயப்படுவதில்லை" அவன் முகத்தைத் திருப்பாமல் பதிலளித்தான். "நான் யாரைப் பார்த்தும் பயப்படுவதில்லை, கடவுளைத்தவிர! அவனது குரல் நிலைத்து ஒலித்தது.

    மேரியின் முகம் மூர்க்கமானது. அவள் தன் கை முஷ்டியை வானை நோக்கி உயர்த்தி, தன் வாயைத் திறக்கிறாள். உள்ளத்தில் கனலும் அவளின் சாபம் வெளிவருவதற்கு முன்,  சலோமி அவளின் உதடுகளைப் பொத்திக் கையைத் தாழ்த்தி விடுகிறாள். 

    "வேண்டாம்! வேண்டாம்! நான் சொல்வதைக் கேள்!. அவள், மேரியின் இடுப்பில் கைகளால் பற்றிக் கொண்டு, கால் நகங்கள் தரையில் உராய இழுத்துச் செல்கிறாள். வா! என் அன்பு மகளே! மேரி! வா! நாம் போய்விடலாம். நான் உன்னிடம் சில விஷயங்களைப் பேச வேண்டி இருக்கிறது. சலோமி அவளைத் தேற்றப் பாடுபட்டாள்.

    அந்த இரு பெண்களும் குன்றின் உச்சியிலிருந்து கார்பெர்னத்தைப் பார்த்தனர். கீழே பாதையில், சரளைக்கற்களை அழுத்தமாக மிதித்துக் கொண்டும், தன் கையிலிருந்த கம்பால் பாதை வளைவில் செறிவாய் வளர்ந்திருக்கும் முட்செடிகளைக் கொத்திக் கொண்டும், மெதுவாக சென்று கொண்டிருந்தார் செபெதீ.

    "என் இப்படி அழுகிறாய்? மேரி! என் மகளே! நீ அவர்களைப் பார்க்கவில்லையா? "

    மேரி தன் கண்களைத் துடைத்துக் கொண்டு ஆச்சரியமாக அவளைப் பார்த்தாள். "எதை? யாரை?" 

    "அவன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவன் பின்னே படபடத்துக் கொண்டிருந்ததே அந்த நீலச் சிறகுகள். பல்லாயிரம் நீலச் சிறகுகள் ஒன்று கூடி அவன் பின்னே பறந்தனவே, நான் பார்த்தேன் மேரி! நான் சத்தியமாகச் சொல்கிறேன். அவனுக்குப் பின்னே தேவதைகளின் பெரும் படையே பாதுகாவலாக இருக்கிறது"

    மேரி விரக்தியுடன் தலை அசைத்தாள். "நான் எதையும் பார்க்கவில்லை. என் கண்ணுக்கு எந்த சிறகுகளும் தெரியவில்லை. ஆம்! எதுவும் தெரியவில்லை. தெரிந்தாலும் இந்த தேவதைகள் எனக்கு என்ன செய்துவிடப் போகின்றன, சலோமி! நான் வேண்டுபவனவற்றை இத்தேவதைகளால் தரமுடியாது. நான் வேண்டுவது என் குழந்தை, அவன் மூலம் எனக்கு பேரக்குழந்தைகள் வேண்டும். நான் இந்த தேவதைகளைச் சபிக்கிறேன்"

    ஆனால் முதிய சலோமியின் கண்கள் இன்னும் அச்சிறகுகளால் நிறைந்திருந்தது. அவள் தன் கைகளால் மேரியின் நெஞ்சைத் தழுவி, அருகில் சென்று பெரிய ஒரு ரகசியத்தைச் சொல்வதைப் போல மென்மையாகக் கிசுகிசுத்தாள். "நீ ஆசிர்வதிக்கப்பட்டவள், மேரி,  உன் கருவறையில் கனிந்த கனியும் ஆசிர்வதிக்கப்பட்டது".

    ஆனால் மேரி எங்கோ அப்பால் இருந்தாள். அவளது நினைவுகள், தன் மகனின் பால்யத்திற்குள் அலைபாய்ந்தது. அது அவனுடனான ஸ்பரிசங்கள்,  முலைப்பாலூட்டியது, தன் கையால் உணவு ஊட்டி விட்டது,  அவனின் அடிபட்டக்காயத்திற்கு மருந்திட்டது,  அவனைக் குளிப்பாட்டி, நறுமணத் தைலம் பூசிவிட்டது, "அவன் என் சொல்லுக்கடங்கியவன். அம்மா பிள்ளையவன். ஆனால் இன்று அவனை நான் தொலைத்துவிட்டேன்". அடக்க மாட்டாமல் அவள் மீண்டும் வீறிட அழத் தொடங்கினாள்.

    ஜீசஸைச் சுற்றி நின்ற வெறிகொண்ட மக்கள் தங்கள் கம்புகளைக் காற்றில் வீசிக் கூச்சலிட்டனர். ஏதோ திறக்கமுடியாத பூட்டின் சாவி கைக்குக் கிடைத்ததைப் போல ஆரவாரமிட்டுக் கத்தினர். தாங்கள் வைத்திருந்தக் காலிக் கூடைகளை வானை நோக்கி எறிந்து நடனமிட்டனர். குழப்பமும் சலசலப்புமாகச் சூழல் இருண்டு கொண்டிருந்தது.

    "மரணம்! மரணம்! இந்தப் பணக்காரக் கூட்டங்களுக்கு மரணம்! கட்டுப்படுத்த முடியாததாக அது மாறிக் கொண்டிருந்தது. நீ சரியாகப் பேசினாய், மேரியின் மகனே! செல்வச் செழிப்பானவர்களுக்கு மரணம்!".

    "எங்களை முன் நடத்திச் செல்! நாம் செபெதீயின் வீட்டை எரித்து சாம்பலாக்குவோம்" 

    "இல்லை! எரிக்க வேண்டாம்!", மற்றவர்கள் மறுத்தனர். வீட்டின் களஞ்சிய சேகரிப்பை உடைத்துத் தேவையான கோதுமை, ஆலிவ் பழங்கள், எண்ணெய், திராட்சை மது மற்றும் அலமாரிகளில் வைத்திருக்கும் விலை உயர்ந்தத் துணிகளையும், கருவூலப் பெட்டகத்தில் பத்திரமாக வைத்திருக்கும் வெள்ளிக்காசுகளையும் கொள்ளையடித்து, நமக்குள் பங்கிட்டுக் கொள்வோம்! ஆம்! செல்வச் செழிப்பானவர்களுக்கு மரணம்!"

ஞாயிறு, 6 மார்ச், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் - 65

    

    அவளது புலம்பல்களைக் கேட்ட செபெதீ (அவரது லாபங்களில் யாரும் இடையிடாத வரை, அவர் அப்படி ஒன்றும் கெட்டவர் இல்லை), அவளை சமாதானப் படுத்துவதற்காக அறைக்குள் வந்தார். "இது அவனது இளமைத்துடுக்கு செலுத்தும் பாடு, மேரி", "அவனது வயதுதான் அவன் பிரச்சனை, கவலைப்படாதே", எல்லாம் சரியாகிடும். இளமை, ஒரு தூய்மையான மதுவினைப் போல, ஆனால் அதை நிதானமாக அருந்த வேண்டும், அப்பொழுதுதான் சரியான வழியில் அதற்கு எதிர்ப்பு காட்டாமல், சுமூகமாக நுகத்தில் இழுத்துக் கட்ட முடியும். அதன் பின் நாம் நடத்திச் செல்லும் பாதைக்கு அதுவும் பலப்ரயோகங்களின்றி வரும். உன் மகனும் சீக்கிரமே தன்னை நிதானித்துக் கொள்வான். என்னுடைய சொந்த மகனைப் பார், அவனும் இப்படித்தான். முன்னாடி இருந்தப் பித்து இப்போது சற்று தணிந்திருக்கிறது, தன்னுடைய இளமையில் நிதானிக்க முடிந்தவன், நிச்சயம் எங்கும் வழிதவற மாட்டான். என் பிள்ளை இப்பொழுது எவ்வளவோ பரவாயில்லை, இறைவனுக்குத்தான் அதன் அத்தனை பெருமையும் சேரும்"

    கேட்டுக் கொண்டிருந்த ஜானின் முகம் சற்று அசௌகரியமாய் மாறியது, ஆனால் அவன் எதுவும் பேச வாயெடுக்கவில்லை. உள்ளே சென்று ஒரு குவளையில் குளிர்ந்த நீரும், சிலப் பழுத்த அத்திப்பழங்களையும் விருந்தினருக்குக் கொடுப்பதற்காக எடுத்து வந்தான். இரு பெண்களும் எதிரெதிரே அமர்ந்து தங்களது கைகளைப் பிடித்துக் கொண்டு, கடவுளால் துடைத்தெறியப்பட்ட தத்தமது பிள்ளைகளை நினைத்து உள்ளூற விசும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் மூக்குறிஞ்சும் சத்தம் மட்டுமே கேட்டது. அவர்களின் அழுகைக் குரல் கேட்டுத் தேவையில்லாமல் இந்த ஆண்கள் வந்து சமாதானம் செய்கிறேன் பேர்வழி என்று, பெண்கள் மட்டுமே உணரும் வலியினை, அதனை இன்னொரு பெண்ணிடம் கடத்துவதால் கிடைக்கும் ஆசுவாசத்தை அவர்கள் இழக்க விரும்பவில்லை. அதனால் அமைதியாகத் தங்களின் வலிகளை அவர்கள் ஒருவருக்கொருவர் கடத்திக் கொண்டிருந்தனர்.

    "அவன் பிரார்த்தனைகளுக்குள் தன்னை முழுதுமாக மூழ்கடித்து இருக்கிறான். "உன் மகன் என்னிடம் சொன்னான், சலோமி!". அவன் தன்னைத் தீவிரமான ஒரு மன்றாட்டுதலுக்கு உட்படுத்தியிருப்பதாகவும், தன் கைகள் மற்றும் முட்டுக்கண்ணிகளைத் தரையில் ஊன்றி, ஒரு சுயவதை போல அவன் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறான் என்றும். அவன் தொடர்ந்து உணவு எடுத்துக் கொள்ளாததால், உடல் மெலிந்து உருகிக் கொண்டிருக்கிறது என்றும் ஜான் சொல்கிறான். அவனுக்குக் காற்றின் ஊடேச் சிறகுகள் தெரிகின்றன, அப்படியென்றால் தேவதைகளைப் பார்ப்பதற்காக அவன் தண்ணீர் கூடக் குடிக்காமல் தன்னை வதைப்படுத்திக் கொண்டிருக்கிறான். இந்தத் தீவிரமான நோய் அவனை எங்குக் கொண்டு போய் விடப்போகிறதோ, சலோமி! அவனது மாமா சிமியோனால் கூட அவனைக் குணப்படுத்த முடியவில்லை. என்ன செய்ய? உனக்குத் தான் தெரியுமே! எத்தனை பெரியப் பெரியப் பேய் பிசாசுகளையெல்லாம் அவர் ஓட்டியிருக்கிறார் என்று! எதற்காகக் கடவுள் என்னைப் பழிக்கிறார்? நான் அப்படி என்ன பாவம் செய்து விட்டேன்? சலோமி! என்னால் முடியவில்லை" என்று கூறியவள் தாள முடியாமல் சலோமியின் மடியில் தன் தலை புதைத்து விம்மி அழத் தொடங்கினாள்.

    ஜான் ஒரு பித்தளைக் குவளையில் தண்ணீரும், ஒரு தட்டில் ஐந்தாறு அத்திப்பழங்களையும் எடுத்துக் கொண்டு அவர்கள் முன் வந்தான். மேரியைப் பார்த்து அழாதீர்கள் என்று சொன்னவன் அவளது மடியில் தட்டினை வைத்தான். 

    ஜான் தொடர்ந்து அவர்களைப் பார்த்து பேசத்தொடங்கினான். "அவன் முகத்தில் அபரிவிதமான ஒரு ஒளித்தீற்றல் நிகழ்வதை, அப்புனித ஒளி கொஞ்சம் கொஞ்சமாக அவனை விழுங்குவதை, அவனைச் சுற்றிலும் அதன் சதகோடிக் கரங்கள் ஆக்கிரமித்து அவனுள் நுழைந்துப் பெருகுவதை, அச்சமயங்களில் விளக்க முடியாத பேருவகையிலும், தாளமுடியாத வலிப்பெருக்கிலும் அவனது முகம் உருமாறிக் கொண்டிருப்பதையும் அருகிலிருந்து சில சமயங்களில் நான் பார்த்திருக்கிறேன். அச்சுறுத்தும் வகையில் அதன் நாளங்கள் இருக்கும். சில சமயங்களில் ஒரு உயிருள்ள கொடிய விஷமுள்ள, கொடுக்குகள் கொண்ட அதன் கீற்றுகள் அவனுள் இறங்கி வெளியேறுவதைப் போலத் தோன்றும். நான் பயந்து வெளியே ஓடிவிடுவேன். ஆனால் அவன் தன்னை மறந்து முற்றிலுமானத் தியானத்தில் இருப்பான். எங்களின் அருட்தந்தை இறந்தபிறகு,  மூத்ததுறவி ஹப்பாக்குக் எல்லா இரவுகளிலும் அவனைக் கனவுகளில் கண்டார். அதில் இறந்த எங்களின் புனிதத் தந்தை உங்கள் மகனைக் கைப்பிடித்து, ஒவ்வொரு அறைகளாக அழைத்துச் செல்கிறார். எதுவும் பேசாமல், ஒவ்வொருத்தரையும் பார்த்து, அவனைச் சுட்டிக் காட்டிப்  புன்முறவலுடன் அடையாளம் காண்பிக்கிறார். பீதியில் கனவு கலைந்து, அருளாளர் ஹப்பாக்குக் அதிர்ச்சியில் படுக்கையிலிருந்து குதித்தெழுந்து வெளியே சென்று, ஒவ்வொரு துறவியாக எழுப்பினார். நாங்கள் எழுந்து ஒன்றாக கூடத்திற்கு வந்தோம். அரைத்தூக்கத்தில் கனவா நனவா என்று பிரித்தறிய முடியாத படி கண்களைக் கசக்கிக் கொண்டே அவர் முன் நின்றோம். அவர் தனக்கு வந்தக் கனவை எங்களுக்கு விளக்கினார். ஆனால் எங்களால் அதனைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. நமது புனிதத்தந்தை நம்மிடம் என்ன சொல்ல விளைகிறார்? எதற்காக அவர் புதிதாக நம் மடத்திற்கு வந்த விருந்தாளியைச் சுட்டிக் காட்டிச் சிரிக்கிறார், எல்லாமே ஒரு புதிர் போல இருந்தது. புனிதத்தந்தை இறந்து இன்னும் நாற்பது நாட்கள் கூட கடந்திருக்கவில்லை. நிச்சயமாக அவரது இருப்பு எங்களுக்குள் ஏதோ ஒன்றைக் கடத்த முயல்கிறது. அவர் சொல்லாமல் விட்ட ஒன்றினைப் பற்றிய சமிஞ்சைகள் தான் இது என்று நாங்கள் நினைத்துக் கொண்டோம். ஒரு நாளிற்கு முன்பு நான் மடாலயத்தை விட்டு வெளிவந்த நாளில், மடத்திலிருந்த எல்லாத் துறவிகளும் ஒட்டு மொத்தமாக, ஒரே சமயத்தில் தங்களின் உள்ளுணர்வினால் அடித்துச் செல்லப்பட்டனர். அனைவருக்குள்ளும் கனவின் புதிர் அவிழ்ந்தது போல ஒரு உறுதி ஏற்பட்டது. தங்களுக்குள் அவர்கள் உணர்ந்த அவ்வனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். அவர்களின் ஒவ்வொருக் கனவுகளும் விசித்திரமானதாகவும், சிக்கலானதாகவும், எதையோ குறிப்புகளால் சொல்ல முயல்வதாகவும் இருந்தது. 

    ஒரு கனவில் வண்ணத்துப்பூச்சிகளின் இறகுகள் மட்டும் உடலற்றுப் பறந்து போகின்றன. நிலத்திலிருந்து எம்பி எம்பி உயரே, வானில் நீல நிறத்தில் ஒளிரும் ஒரு விண்மீனை நோக்கித் தன் சிறகுகளைப் படபடத்துகின்றன. இரவின் மிளிர்வில் பூமியே ஒரு நீலப் பெருங்கடல் போலத் ததும்புகிறது. சிறகுகள் அலைகளாகின்றது. அது திரும்பத் திரும்ப ஓய்வின்றி கரையைப் பற்றிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறை அது கரைப் பற்றும் பொழுதும்,  நிலம் பிளன்று நகர்ந்து விடுகிறது. ஒவ்வொரு அலையும் பிளன்றிருக்கும் பள்ளத்தை நோக்கிப் பாய்கிறது. நிமிர்ந்து பார்க்கையில் நீல வெளி ஒரு பெரும் மழையாகப் பொழிகிறது. வண்ணத்து பூச்சிகள் நீர்மையாய், திரவத் துளிகளாய் தலை கீழாக, நிலத்தை நோக்கி தங்கள் சிறகுகள் மட்டுமேக் கொண்ட உடலைச் செலுத்தி, பூமியில் விதைகளாகின்றன. பின் விதைகள் வேர் விட்டு முளைத்து ஒரு சிலுவை மரமாய்த் துளிர்க்கிறது. 

    இன்னொருவர் கனவில், ஒரு பல்லியின் வால் துடிதுடிக்கிறது. ஒரு மயில் அதனைத் தன் அலகால் கவ்வுகிறது. அதன் வாயில் அது இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறது. அருகிலே இருந்த ஒரு ஆலிவ் மரப்பட்டையில், மரமொடு மரமாக அந்தப் பல்லி அசையாமல் தன் வாலைத் திங்கும் மயிலைப் பார்த்தபடி இருக்கிறது. சட்டெனப் பல்லி அங்கிருந்து குதித்துப் பறந்து மயிலின் கொண்டையினைத் தன் சவ்வுகளால் பற்றி உட்கார்ந்துக் கொள்கிறது. மயிலால் அதனை உணர முடிந்தாலும் அதை அகற்ற முடியவில்லை. அது பதற்றத்தில் அங்குமிங்கும் அலைகிறது. தலையை அசைத்துச் சுழற்றிப் பார்க்கிறது. ஒன்றும் முடியவில்லை. நிலத்தில் தரையோடுத் தரையாகக் குந்தி தன் தலையை ஒரு பாறையில் அறைகிறது. அதன் தலையும், பல்லியும் ஒரு சேரச் சிதறித் தெறிக்கின்றன. அதன் அலகிலிருந்த பல்லியின் வால் சற்றுத் தொலைவில் விழுந்து இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறது. 

    மற்றுமொருவர் கனவில், ஒரு ஒற்றைக் கடிஎறும்பு ஒரு முழு மனித உடலைத் தூக்கிக்கொண்டு அதன் சிதல் புற்றை நோக்கிச்செல்கிறது. புற்றின் குறுகிய வாய்ப்பகுதியை அடைந்ததும். தன் பற்களால் அந்த உடலைக் கடித்து உடைக்கிறது. அந்த உடல் ஒருக் கண்ணாடி போலப் பாளம் பாளமாக நொறுங்குகிறது. அதன் உதிரித்துகள்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் சேகரிப்பில் இடுகிறது. முழு உடலையும் இட்டு அது அயர்ந்து போய் நிற்கும் பொழுது, மழை பொழியத் தொடங்குகிறது. பெரும் மழை. வானம் இடிந்து விழுவது போல விழுந்து, அந்த சிதல் புற்றைக் கரைத்து ஒன்றுமில்லாமல் ஆக்குகிறது. அந்த ஒற்றை எறும்பு தன்னந்தனியாக அம்மனித உடலின் சேகரிப்பைப் பாதுகாக்க, பதைபதைக்க அக்குவியலைத் தூக்கிக் கொண்டு இங்கும் அங்கும் அலைகிறது. திடீரென தன் தலையின் பாரத்தில் அழுந்தும் மனித உடல் ஒரு செடியாகிறது. அதன் கிளைகள் பெருகி மரமாகிறது. உயர்ந்து எம்பி வானம் வரைத் தொட்டு நிற்கிறது. மழை நிற்கிறது. அது திரும்பவும் தூசித்துகள்களாகிறது. எறும்பு தான் நின்ற இடத்திலேயே அசையாமல் அதைத் தாங்கிக் கொண்டு காலமற்று நிற்கிறது. மழை பொழிவதும் அடங்குவதுமாய் அது ஒரு அலகிலா நாடகமாக நடந்து கொண்டே இருக்கிறது.

    என் கனவுகள் பற்றிய விளக்கங்களில் சற்றுப் பீடிகை இருக்கலாம். நான் என் ஞாபகங்களிலிருந்து, என்னால் முடிந்த வரை அதைச் சரியாக உங்களிடம் சொல்ல நினைத்தேன். ஆனால் எல்லோருக்கும்ம் தன் கனவுகளில் இருந்த புதிர்த்தன்மை, ஒரு வித அச்சத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. அவர்கள் தங்கள் கனவுகளில், வாழ்விற்கும், மரனத்திற்கும் இடையே, மனிதனின் உடல், ஆன்மா எனும் ஊசலாட்டத்தில் எதைப் பற்றிக் கொள்ள என்று குழம்பும் பொழுது பொறுமை! காத்திருப்பு! நம்பிக்கை! மன்றாட்டு! பிரார்த்தனை! வலிமை! அதிகாரம்! கருணை! அன்பு! வன்முறை! கலகம்! என்றுப் பல பல விளக்கங்களைச் சொல்லிக்கொண்டிருந்தனர். 

    ஆனால் அக்கனவுகளில் இருந்த பொதுத்தன்மை, எல்லோருமே அதனுள் உள்ளுறையாகப் புதிதாக வந்திருந்த இளைஞனை, தவிர்க்க முடியாத இருப்பாய் உணர்ந்தனர். அவனது இருப்பின் முகங்களே பலப்பல வித இயற்கை நிகழ்வுகளாய், உயிரினங்களாய், குழைந்து செல்லும் காட்சி வெளிகளாய் அவர்களுக்குத் தோன்றியது. அதற்கான விளக்கங்களைக் கூட அவனை முன்னிறுத்தியே, பலவிதமானக் கோணங்களில் அவர்கள் அணுகினர். அவர்களால் எதையும் உறுதியாக தெளிவு படுத்த முடியா விட்டாலும், மரணமடைந்த புனிதத்தந்தை, உங்கள்  மகனைத்தான் அடுத்த புனிதத்தந்தையாக்க விரும்புகிறார் என்று இக்கனவுகளின் வாயிலாக முடிவு செய்த அவர்கள், உணர்ச்சிப் பெருக்கில் அவன் கால்களில் விழுந்து வேண்டினர். கடவுளின் விருப்பம் , நீ இம்மாடலயத்தின் அருட்தந்தையாவதே எனச் சொல்லி அழுதனர். ஆனால் உங்கள் மகன் அதை முற்றிலுமாக மறுத்தான். 

    "இல்லை! இல்லை!. இது என்னுடைய வழி அல்ல! நான் இதற்குத் தகுதியற்றவன். நான் இங்கிருந்து போகிறேன்." சரியாக அந்த நாளின் மதியப் பொழுதில் நான் மடாலயத்தை விட்டு வெளியேறும் போது, அவனின் அழுகுரலைக் கேட்டேன்,  மற்ற துறவிகள் அவனை ஒரு அறையில் போட்டுப் பூட்டி வைத்திருந்தார்கள். அவன் தப்பிக்காமல் இருக்க வெளியே காவலுக்கு இரு துறவிகள் நின்றிருந்தார்கள். அறையினுள் இருந்து கேவிக் கொண்டிருந்தது அக்குரல். அவனது அழுகையும், மறுப்பும்."

    "வாழ்த்துக்கள், சகோதரியே! வாழ்த்துக்கள்", சலோமியின் வயதான முகத்தின் ரேகைகள் துடித்தன. " நீ ஒரு பேறுபெற்ற அன்னை, இறைவன் தன் கருணையையே உன் மகவாக கருவறையினுள் தருவித்திருக்கிறான், ஆனால் அதைப்பற்றி எதுவுமே நீ உணரவில்லை" சலோமியின் கண்கள் பணிந்தன.

    கடவுளால் விரும்பப்படும் அவ்வன்னை இதனைக் கேட்டுத் தலையை இல்லை என்பது போல ஆட்டினாள். இன்னும் விம்மிக் கொண்டிருந்த அவளது மனம் இதுவரை அவனுக்கு நிகழ்ந்த அனைத்தையும் நினைவுகளில் ஓட்டியது. அதன் தாங்க இயலாத தன்மையும்,  எதனாலும் ஆற்றுப்படுத்த முடியாத அதன் வலிகளையும், காயங்களையும் எண்ணி மருகிக் கொண்டே இருந்தாள்.

    "என் மகன் புனிதனாவதை நான் விரும்பவில்லை, அவனும் ஏனைய மனிதர்கள் போல திருமணம் செய்து எனக்கு பேரப்பிள்ளைகள் பெற்றுக்கொடுத்து சந்தோஷமாக வாழவேண்டும். அது தான் கடவுளின் வழி"

    "அது மனிதன் செல்லும் பாதை அம்மா, என்ன இருந்தாலும் அது வெறுத்து ஒதுக்க வேண்டிய ஒன்று." ஜான் தனது மெல்லியக் குரலால் மேரியை இடைமறித்தான். "உண்மையில் இப்பொழுது அவன் செல்கிறானே அதுதான் நிச்சயமாக கடவுளின் பாதை".

    பை நிறையத் திராட்சைகளைத் தூக்கிக் கொண்டு இரு இளைஞர்கள், தோட்டத்திலிருந்து வாசலைத்தாண்டி உள்ளே வந்து கொண்டிருந்தனர். அவர்கள் தங்களுக்குள் எதுவோ குசுகுசுத்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும், கேலி பேசிக் கொண்டும் வருவதை செபெதீயும், மற்றவர்களும் முற்றத்தில் இருந்துப் பார்க்கின்றனர்.

    "கெட்ட செய்தி, முதலாளி! அவர்கள் நகைப்பதை நிறுத்தாமல் கத்திக் கொண்டே வந்தார்கள். மாக்தலாவில் ஏதோ கலகம் போலத் தெரிகிறது. மக்கள் கற்களை வைத்துக் கொண்டு நம் தேவதையை வேட்டையாடத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

     "யாரை, எந்தத் தேவதையைச் சொல்கிறீர்கள், பையன்களா?" அங்கே மதுத்தொட்டியில் மிதித்து அசைந்து கொண்டிருந்த இளைஞர்கள் அதை நிறுத்திவிட்டுப், புரியாமல் அவர்களைப் பார்த்துக் கேட்டனர். "மாக்தலேனா?"

    "ஆமாம். மாக்தலேன் தான், நல்ல காலம் அவள் தப்பித்துவிட்டாள். கடவுளுக்கு நன்றி. கழுதை ஓட்டி வந்த இரு நாடோடிகள் மூலம் தான் இந்தச் செய்தி எங்களுக்கேத் தெரிய வந்தது. கொள்ளைக் கும்பலின் தலைவன் பராபஸ்ஸை உங்களுக்குத் தெரியும் அல்லவா!, பார்த்தாலே பயந்து நடுங்கும் தோற்றம் கொண்ட அந்த முரட்டுப் போக்கிரிப் பயல், அவன் நேற்று, சனிக்கிழமை, நாசரேத்திலிருந்து மாக்தலாவிற்கு தன் கொள்ளைக் கும்பலுடன் அவளை வேட்டையாடச் சென்றிருக்கிறான்.

    "இங்கே இன்னொருத்தனும் உங்களுக்காக இருக்கிறான்", செபெதீ ஆத்திரம் பொங்கக் கத்தினார். ஒரு கொள்ளை நோய் பீடித்தக் பேய்க்கிறுக்கன், அந்த புரட்சியாளச் சகோதரக் கும்பலைச் சேர்ந்தவன். இஸ்ரவேலத்தைக் காப்பாற்றப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டுத் திரிவானே, அவனும் அவனின் வளைந்த மிருக நெடி கொண்ட மூக்கும்,  நரகக் குழியில் அழுகி நொதிக்கட்டும் இந்த கேவலங்கெட்ட வேசைப் பயல்...ச்ச்சே!"

    "சரிதான்!" அவர்கள் பேச்சைத் தொடர்ந்தனர். அந்தக் கும்பல் அந்தியில் மாக்தலேனாவின் தொழில் நடக்கும் குடிலுக்குச் சென்றிருக்கிறது. அங்கு ஏற்கனவே கூடம் நிறைந்து ஆள்கூட்டம் இருந்திருக்கிறது. சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட அவள் அந்த நாளின் வேலையை சீக்கிரமே முடித்துவிட்டு அடுத்த நாளில் ஓய்வெடுப்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். ஆனால் இந்த வன்மம் பிடித்தப் பயலுக்குக் கொஞ்சம் கொழுப்பு அதிகம். விரைந்து முற்றத்திற்கு வந்தவன் தன் கையில் கத்தியை வைத்து பயமுறுத்தி, அங்கேக் காத்திருந்த வணிகக் கும்பலைத் தள்ளிக் கொண்டு உள்ளே போக எத்தனித்தான். வியாபாரிகள் கும்பலும் தங்களின் வாள்களை உருவிக் கொண்டு சண்டைக்குத் தயாராகி விட்டனர். இருந்தக் கூட்டத்தினர் அனைவருமே அவசர அவசரமாக எப்படியோ இந்த சனிக்கிழமை நாளை அனுபவித்துப் போவதற்காக பொறுமையற்றிருக்கின்றனர். இப்படி ஆளாளுக்கு முந்திக் கொள்ளக் கூட்டத்தில் களேபரமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டு அவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளத் தொடங்கினர். இருவர் காயம் பட்டுக் கீழே விழுந்தனர். ரத்தத்தைப் பார்த்ததும் வியாபாரிகள் பயந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தலை தெறிக்க வெளியே ஓடி விட்டனர். உள்ளே இருந்தப் பெண்ணைக் கண்டம் துண்டமாக வெட்டுவதற்குத் தயாராக, பராபஸ் தன் சூரிக் கத்தியைக் கையில் வைத்துக் கொண்டு, காலால் எட்டி மிதித்து, அவளிருந்த சிறிய அறைக்கதவை உடைத்துத் திறந்தான். ஆனால் அறையினுள் யாருமில்லை. அவள் தன்னை முழுக்க மறைத்து முக்காடிட்டுக் கொண்டு, யாருக்கும் தெரியாமல் பின்வாசல் வழியேத் தப்பி ஓடிவிட்டாள். மொத்தக் கிராமமும் அவளை வேட்டையாடத் தேடுகிறது. ஆனால் இரவு கவிந்து இருண்டு விட்டதால் அவளைத் தேட முடியவில்லை. விடிந்ததும் எல்லாத் திசைகளிலும் அவர்கள் சிதறி ஓடி மண்ணில் இருக்கும் அவளின் பாதத்தடங்களைப் பின் தொடர்ந்து அவள் போனத் திசையைக் கண்டு பிடித்தனர். அந்தப் காலடிச்சுவடுகள் கார்பெர்னம் இருந்த வழி நோக்கி இருந்தது. கதை போல அந்த இளைஞர்களில் ஒருவன் இதைச் சொல்லிக் கொண்டிருந்தான்.

    "என்ன ஒரு அதிஷ்டம்! ஐயோ! அவள் இங்கே வந்திருக்கிறாள்", நம் கார்பெர்னத்திற்கு. பிலிப் உற்சாகத்தில் குதித்தான். அவனது பெரிய உடலின் மார்புச் சதைகள் அங்குமிங்கும் குலுங்கியது. அவள் ஒருத்திதான் நம் சொர்க்கபுரியில் விடுபட்டுப் போனவள். ஆம், எப்படியான மாலைப் பொழுது அது! இன்றைக்கும் அழியாமல் ஞாபகம் இருக்கிறது. இப்பொழுது மட்டும் அந்தப் பேரழகியைக் காண முடிந்தால் போதும், என்ன இது! நான் அவளுக்காக ஏங்கத் தொடங்கி விட்டேனே!" பிலிப்பின் கிழிந்த வாயில் பற்கள் மின்னின.

    "அவளது சுனை ஓய்வு நாளில் கூடச் சுரந்து கொண்டிருக்கும், அவளுக்குப் புண்ணியம் உண்டாகட்டும்." சொல்லும் பொழுது  நாத்தனேலில் கன்னச் சதைகள் சிவந்திருந்தன. அவனின் திருத்தி வெட்டியத் தாடியில் தந்திரமானச் சிரிப்பு வெளித்தெரிந்தது. தான்  சவரம் செய்து, குளித்து, நன்கு உடுத்தி, நறுமணத்தைலம் பூசிக் கொண்டு சுத்தபத்தமாக அவளின் இல்லத்தை நோக்கி சென்ற ஒரு ரம்மியமான, சாயங்காலம் அவனது நினைவுகளில் அலையாடியது. தன்னைக் கைபிடித்து அவளை நோக்கி இழுத்துச் சென்றத் தன் சபலத்தை எண்ணினால் இன்றும் அவனால் புளங்காங்கிதம் அடையாமல் இருக்க முடியவில்லை. அவர்கள் மாக்தலாவில், மேரியின் இல்லத்திற்குச் சென்று அவளிற்காகக் காத்திருக்கும் வரிசையில் தங்களையும் ஒரு கண்ணிகளாக இணைத்துக் கொண்டனர்.  கடவுளுக்கு நன்றி! அது கூதிற்காலம் முடிந்துக் குளிர்காலம் முற்றிலுமாக ஆக்கிரமித்திருந்தப் பருவம். உண்மையில் பெரிதாகக் கூட்டமில்லை. நாத்தனேல் மட்டுமே மீதமிருந்தான் ஒரு ஓய்வு நாள் முடியும் வேளையில். அந்தப் பெரிய முற்றத்தில் தான் மட்டும் அமர்ந்திருந்து அழைப்பிற்காகக் காத்திருந்தான். திருப்தியாகவும் தன்னுள் குதூகலத்துடன் அவன் இருந்தான். "ஆம்! இது ஒரு மாபெரும் பாவம் தான்! ஆனால் ஒருவன் மாபெரும் பாவத்தைச் செய்யும் பொழுதும், கடவுளிடம் முழு நம்பிக்கைக் கொண்டு அதற்காக உள்ளிலிருந்து வருத்தப்பட்டானென்றால் கடவுள் அவனை மன்னிப்பார். அமைதியான, பாவப்பட்ட, துன்புறுத்தப்பட்ட, இன்னும் கல்யாணம் ஆகாத, நான் இத்தருணத்தில் என் வாழ்நாள் முழுதும் கூட அவளின் சிறிய அறைக் கதவை ஆசை தீரப் பார்த்துக் கொண்டு கிராமத்தின் கடைக்கோடி மூலையில் இருக்கும் அவளது இல்லத்தில் அமர்ந்திருக்கத் தயாராக இருந்தேன். வெளியே கிராமத்தான்கள் உரத்துப் பேசிச் செல்வதும், ஆடு மேய்ப்பவர்களின் கனமானக் காலடிச் சப்தமும், இங்கு நடக்கும் எதற்கும் தொடர்பின்றிப் பொருளற்றுக் கேட்டுக் கொண்டிருந்தது. என்ன மாதிரியானத் தருணம் அது! ஒரு முறை! ஒரே ஒரு முறையே ஒருத்தன் தன் வாழ்நாளில் அனுபவிக்க முடிந்த விலைமதிப்பில்லாத தருணத்தின் காலத்துளிகள் அவை. என்னுள் இருந்த எல்லாச் சங்கடங்களையும் ஒரு பொட்டலம் போல மடக்கி வெளியே எறிந்து விட்டு ஒரு ஆண் மகனாகக் காத்திருந்தக் கணம். அந்தப் பிரார்த்தனை நாளின் தித்திப்பான நொடிகளை இன்னும் கரைக்காமல், ஒரு இனிப்புப்பலகாரம் போல நக்கி நக்கி இன்புற்றுக் கொண்டிருக்கிறேன். அதுதான். நாம் சொன்னது போலக் கடவுள் மனிதனின் இந்தப் புனிதப் பிரச்சனையைப் பற்றிப் புரிந்து கொள்வார், மன்னிப்பார் என்ன!"

    எல்லாப் பிரசங்கங்களையும் அமைதியாகக் கேட்டு முடித்த முதிய செபெதீ! கைகளை உயர்த்திக் கத்தினார். "பிரச்சனைகள், பிரச்ச்னைகள்", என் வீட்டு முற்றத்தில் தான் இவர்கள் எல்லோரும் வரிசையாக வந்து தங்கள் பிரச்சனைகளைப் பேசி வம்பளந்து நேரத்தைக் கடத்துவார்கள். முதலில் புனிதர்கள், பின் விபச்சாரிகள் இல்லையேல் அழுது புலம்பும் மீனவர்கள், இப்போது இந்த பராபஸ். எங்கு போய் நான் முட்டிக் கொள்ள என்று எனக்கேத் தெரியவில்லை. அவர் மதுத்தொட்டியில் வெறுமனே நின்று கொண்டிருந்த இளைஞர்களைத் திரும்பிப் பார்த்து, என் அன்புப் பிள்ளைகளே, உங்கள் வேலையைக் கொஞ்சம் கவனித்தால் நல்லா இருக்கும், இந்த வீண் பேச்சுகள் நம் நேரத்தைத் தின்று கொண்டிருக்கிறது.

    வீட்டினுள் இருந்து இதனைக் கேட்டுக் கொண்டிருந்த சலோமியும், ஜோசப்பின் மனைவி மேரியும் , தங்களுக்குள் எதுவும் பேசாமல் திரும்பவும் தரையைப் பார்த்துக் குனிந்து அமர்ந்தனர். தன் சுத்தியலைத் தூக்கி எடுத்து வைத்து விட்டு, யூதாஸ் வாதிலை நோக்கிச் சென்றான். இது வரை அவர்கள் பேசிக் கொண்டிருந்தது, நடந்த நிகழ்வுகள் எல்லாவற்றையும் தன் மனதினுள் ஓட்டிக் கொண்டு வாயில் கதவின் அருகி நின்று ஏறிட்டான். ஒரு முறை திரும்பி முதிய செபெதீயை விழுங்குவதைப் போலக் குரூரமாகப் பார்த்தான். 

    வாசலிலிருந்து வெளியே, பலவிதக் குழப்படியான கூச்சல்கள். ஆண்களும் பெண்களும் கத்திக் கொண்டே புழுதி மண்டியப்பாதையில் ஓடுகின்றனர். புழுதி கிளம்பித் தெரு மங்கலாகத் தெரிகிறது. மது தயாரிக்கும் தொட்டியில் ஆண்கள் தங்கள் கால்களை அழுத்த ஊன்றிக் குதிக்க உந்துகின்றனர். "பிடி! அவளைப் பிடி! அவளைப் பிடி!" எனும் குரல்கள் வெளியிலிருந்து இப்பொழுது தெளிவாகக் கேட்கிறது. செபெதீ, திராட்சை மூடைகளைத் தூக்கி அளவையில் பார்த்து நிறுத்திக் குறித்துக் கொண்டிருக்கிறார். புழுதிப்படலத்தின் ஊடே ஒரு பெண் தன் உடைகள் தரையில் சரசரக்க, பதைபதைக்க நாக்கைக் கடித்துக் கொண்டே முற்றத்திற்குள் வந்து வீட்டிற்குள் புகுந்து விடுகிறாள். வீட்டின் உள்ளே திண்டில் கால்தடுக்கி சலோமியின் பாதங்களைத் தழுவித் தரையில் குப்புற விழுகிறாள்.

    "காப்பாற்றுங்கள், என்னைக் காப்பாற்றுங்கள், அவர்கள் என்னைத் துரத்துகிறார்கள்" அழுதுகொண்டே அப்பெண் இன்னும் எழுந்திருக்காமல் அவர்களை நிமிர்ந்து பார்த்து மருகுகிறாள்.

    "முதிய சலோமிக்கு அவள் யார் எனப் புரிந்தது, ஆனால் அவளை எழுப்ப முயற்சிக்கவில்லை. ஜீர வேகத்தில் ஜன்னல் கதவுகளை இழுத்துச் சாத்தினாள். தன் மகனைப் பார்த்து வேகமாகக் கதவை அடை என்று முடுக்கினாள்.

    "அப்படியே தரையில் குந்தி இரு, ம்ம்! முக்காடிட்டு உன்னை மறைத்துக் கொள். ம்ம்! சீக்கிரம்! இந்தா இந்தத் துணியை வைத்து மறைத்து, அந்த இருப்புப் பலகைக்குப் பின்னே போய் ஒளிந்து கொள். சலோமி பதைபதைப்புடன் கூறினாள்.

    ஜோசப்பின் மனைவி மேரி அவளைக் குனிந்து உற்று நோக்கினாள். வழிதவறிச் சென்ற அந்தப் பாவி மகளை, வருத்தத்துடனும், திகிலாகவும் பார்த்தாள். ஒழுக்கமாக வளர்க்கப்பட ஒரு பெண் எப்படி வழிதிரிந்து மானங்கெட்டு, மரியாதை இழந்து ஒரு அருவருப்பூட்டும் ஜந்து போல இன்று ஆகிவிட்டாள் என நினைத்து அவள் வேதனை உற்றாள். அதே நேரம் திரட்சியான ஒரு காட்டுமிருகம் போன்ற இந்தப் பெண்ணுடல், ஆண்களை எப்படி எளிதில் கவர்ந்துவிடுகிறது. அங்கங்களைக் காட்டும் அவளது உடுதுணியும், உயிருக்குப்பயந்து மாட்டிக் கொண்டிருக்கும் பொழுதும் சீண்டும் வனப்பும், முகத்தில் அழியாமல் இருக்கும் அலங்காரங்களும், விஷ உயிரினங்களுக்கே உரிய கொடுக்குகள், பற்கள் போன்று பயமும் ஈர்ப்பும் ஒருங்கே அவளிடம் இருக்கின்றன. ஆண்களும் விட்டில்கள் போல இவளின் எரிவில் விழுந்துவிடுகிறார்கள். தன் இருபது வயதில் இந்த மிருகம் என் மகனை,  ஒரு பேய் போல அல்லவா பிடித்து வைத்திருந்தது. ஆனால் மயிரிழையில் அவன் இவளிடமிருந்து தப்பி விட்டான். அவன் பெண்ணிடமிருந்து தப்பி விட்டான். ஆனால் கடவுளிடமிருந்து...நினைத்தவள் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள்.

    "ஏன் அழுகிறாய்? என் அன்பு மகளே!" முதிய சலோமி மாக்தலேனின் தலையில் தன் கைகளை ஆதுரத்துடன் வைத்து இரக்கமாகக் கேட்டாள்.

    "எனக்கு சாக விருப்பமில்லை அம்மா!, இந்த வாழ்க்கை எனக்கு அவ்வளவு பிடித்திருக்கிறது, நான் சாக மாட்டேன்" அவள் தன் உதடுகள் துடிக்க நடுக்கத்துடன் பதில் கூறினாள்.

    ஜோசப்பின் மனைவி மேரியும் அவளைப் பார்த்துக் கைகளை நீட்டினாள். உண்மையில் மாக்தலேனை அவள் வெறுத்தாலும், அவளைப்பார்த்து பரிதாபம் தான் வந்ததே தவிர அருவருப்பு தோன்றவில்லை. "பயப்படாதே, மேரி, கடவுள் உனக்குத் துணையிருப்பார். நீ சாக மாட்டாய்"

    "உங்களுக்கு எப்படித்தெரியும் மேரி?" ஒளிரும் கண்களுடன் மாக்தலேன் கேட்டாள்.

    "கடவுள் நமக்காக இன்னும் செவி கூர்ந்துக் காத்திருக்கிறார், வருத்தப்படுபவர்களை அவர் கைவிடுவதே இல்லை, கவலைப்படாதே", ஜீசஸின் அன்னை உறுதியாகக் கூறினாள்.

    அந்த மூன்று பெண்களும் ஒன்றாகத் தங்கள் வலிகளை, காயங்களை உணர்ந்து கொண்டு அமைதியாக இருந்தனர். "அவர்கள் வருகிறார்கள், இதோ இங்கே வந்து விட்டார்கள்" மேரி கமுக்கமானக் குரலில் தனக்குள் சொன்னாள். அவர்கள் தோட்டத்தைத் தாண்டி ஓட்டமும் நடையுமாகக் குதித்து வருகிறார்கள். முற்றத்தில் அமர்ந்திருந்த முதிய செபெதீயை அணுகி, வாசற்கதவிற்கருகில் ஒரு முரட்டு ஆசாமி சீற்றத்துடன் வருகிறான். அவன் உடல் முழுதும் வேர்வையில் நனைந்திருக்க, ஆவேசமாக உரக்கக் கத்தி வசை மாறி பொழிந்து கொண்டே அவருக்கருகில் வந்து நின்றான்.

    "ஹேய்! செபெதீ! நாங்கள் இஸ்ரவேலத்தின் கடவுளின் பெயரால், உன் அனுமதியின் தேவை இன்றி உள்ளே நுழைந்திருக்கிறோம்" மற்ற எல்லா ஒலிகளையும் அமிழ்த்தி, பராபஸின் குரல் மட்டுமே உயர்ந்துக் கேட்டது.

    அவன் சொல்லி முடிப்பதற்குள், அந்தக் கிழட்டு முதலாளி வாயைத்திறந்தார். "சாத்தியிருக்கும் அறைக்கதவை உதைத்துத் திற. உள்ளே போய் அந்த வேசை மகளின் முடியைப் பிடித்து என் வீட்டிலிருந்து வெளியே இழுத்து வா!"

    "வெளியே வா! வேசையே! வெளியே வா! பராபஸ் வசைபாடிக் கொண்டே அவளை இழுத்து வெளியே முற்றத்திற்கு வந்தான். அங்கே கூடி நின்ற மாக்தலாவின் மக்கள் ஏளனத்துடன், சிரித்துக் கொண்டே அவளைப் பார்த்தனர். பின் அதில் இருந்த இரு வலிய ஆண்கள் அவளைப் பிடித்துத் தூக்கினர். கூட்டத்தில் இருக்கும் ஆண்களின் வெறிகொள் பார்வை அவளைத் துளைத்தது. பாரபட்சம் பார்க்காமல் சிறுவர்களில் இருந்து பெரியக் கிழட்டு ஆண்கள் வரை அவளின் உடலைத் தொடுவதில், அதைக் கிழித்து நார் நாராக்குவதில் அத்தனை இச்சைக் கொண்டிருந்தனர். அவளைத் தூக்கியதும் அவளின் புட்டத்தை, மாரைப் பிடித்துக் கசக்கிப் பிதுக்குவதற்கு ஒரு கும்பல் குவிந்து ஓடியது. ஒரு பழைய, அழுகிய உபயோகிக்க முடியாத பொருளைக் கொண்டு போய் எரித்தழிப்பதைப் போல அவர்கள் அவளின் உடலை ஆரவாரத்துடன் ஊர்வலமாகத் தூக்கிக் கொண்டு சென்றனர். ஏரிக்கருகில் இருக்கும் சற்று ஆழமான பள்ளத்தில் அவர்கள்  அவளை இறக்கி விட்டனர். பள்ளத்தைச் சுற்றி மக்கள் சிதறி நாலாபுறமும் நின்றுத் தங்கள் மேலங்கிகளில் மறைத்து வைத்திருந்தக் கற்களைக் கைகளில் எடுத்துத் தயாராகினர். 

    இருக்கையிலிருந்து விரைவாக எழுந்த முதிய சலோமி, தன்னை இது நாள் வரைத் தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டிருக்கும் வலிகளால் உந்தப்பட்டு, தன் கணவனைத் திட்டுவதற்காக முற்றத்தை நோக்கி ஓடி வந்தாள்.

    "உம்மைப் பார்த்து உமக்கே வெட்கமாக இல்லையா!," அவள் வேகமாக, மூச்சிறைக்கக் கத்தத் தொடங்கினாள். உன்னை நம்பி உன் வீட்டிற்கு அடைக்கலம் தேடி வந்த பெண்ணை, உன் கண் முன்னாலேயே இந்த முரட்டுப் பயல்கள் உன் வீட்டிற்குள்ளேயே வந்து இழுத்துச் செல்வார்கள். நீயும் அதற்குத் துணை போகின்றாயே! என்ன மாதிரியான மனுஷனய்யா நீ! ச்ச்சீ! உனக்கு இரக்கம் என்பதே இல்லையா?"

    பின் அங்கே எந்த பாவமுமற்று நின்று கொண்டிருந்த தன் மகன் ஜேக்கப்பை, ஆத்திரமாகப் பார்த்தாள்.

    "நீ! நீயும் உன் அப்பனைப் போலத்தானே! உன்னைப் பார்த்தால் எனக்கே அவமானமாக இருக்கிறது. நீ என் வயிற்றில் தான் பிறந்தாயா என்று!" நேரடியாகப் பார்க்க முடியாமல் தலை குனிந்து நின்றிருந்தான் ஜேக்கப். "என்று தான் நீங்கள் திருந்தப் போகிறீர்களோ! இந்த வஞ்சக செயலிலிருந்து உங்களுக்குக் கிடைத்த  நற்பெயரைக் கடவுளிடம் போய்ப் பகிர்ந்து கொள்ளுங்கள் பாவிகளே! அதைச் செய்யுங்கள். உங்கள் விளைவுகளுக்கு பிராயச்சித்தம் தேடும் எண்ணம் இருந்தால், அந்த அபலைப் பெண்ணைக் கொல்லத் துடிக்கும் இந்தக் கிராமத்து மக்களிடமிருந்து காப்பாற்ற முயற்சி செய்யுங்கள். ஒரு பெண்ணை ஒரு ஒட்டு மொத்தக் கிராமமேக் கொல்லத் துடிக்கிறது. என்ன மாதிரியான ஜனங்கள் இவர்கள். ஏன் மனிதர்கள் நாம் இப்படிக் கீழ்மையான விலங்குகள் போல நடந்து கொள்கிறோம். சலோமியால் அதற்கு மேல் பேச முடியவில்லை. தொண்டைக் கமறி இருமினாள். மூக்கினை உறிஞ்சிக் கொண்டுக் கண்ணீர் வடிய, அவள், அவர்கள் இருவருக்கும் நடுவில் நடுங்கிக் கொண்டிருந்தாள்.

    "அமைதியாகுங்கள் அம்மா! நான் போகிறேன்" உலகில் தன் அன்னையின் சொல்லன்றி வேறு எதற்கும் அஞ்சாத ஜான் பதில் கூறினான். ஒவ்வொரு முறையும் அவள் கோபத்தில் அவனிடம் கத்தும் பொழுதெல்லாம் அவன் தன் பயத்தை விட்டொழித்து வெளிவந்துவிடுவான். ஏனெனில் அவளின் வார்த்தையை அவனால் அவ்வளவு எளிதில் தட்ட முடியாது. அது அவளின் குரல் மட்டும் அல்ல, அது காலங்காலமாக நம்மைத் தாங்கி நிற்கும் இந்த இஸ்ரவேல் பாலை மண்ணின் வலிமையான ஆதிப்பெண்ணின் வார்த்தை."

    "வாருங்கள்! போகலாம்! என்று தன்னுடன் நின்று கொண்டிருந்த பிலிப்பையும், நாத்தனேலையும் கைத்தூண்டி அழைத்தான் ஜேக்கப். பீப்பாய்களுக்கிடையில் யூதாசைத் தேடினான். ஆனால் அவன் முன்னமே அங்கிருந்து சென்று விட்டான்.

    "நானும் வருகிறேன்", செபெதீ எரிச்சலுடன் கூறினார். இங்கே இனிமேலும் தன் மனைவியுடன் நிற்கும் தைரியம் அவருக்கு இல்லை. குனிந்துத் தன் கோலை எடுத்துக் கொண்டு அவரும் அவர்களுடன் செல்லப் புறப்பட்டார். 

    "மாக்தலேன் அலறினாள். அவளது உடல் முழுதும் காயங்கள், கடித்தடங்கள், நகக் கீறல்கள். குழியினுள் அவள் அங்கும் இங்கும் ஓடுகிறாள். ஒரு வேட்டை விலங்கைப் பார்ப்பதைப்போல மகிழ்ச்சியும், களிப்புமாக சுற்றி மக்கள் கூட்டம் அவளைப் பார்க்கிறது. அவள் தன் கைகளால், தலையையும் முகத்தையும் மறைத்துக் கொண்டு ஓரிடத்தில் குந்தி அமர்கிறாள். திராட்சைத் தோட்டங்களில் அறுவடை செய்து கொண்டிருந்த இளைஞர்களும், இளம்பெண்களும், திராட்சை பாரங்களை ஏற்றி இறக்கும் திடமான ஆண் மகன்களும் தங்கள் வேலைகளை அப்படியே விட்டு விட்டு மாக்தலேனைப் பார்க்க ஒடினர். ஆண்களோ அவளின் பாதி வெளித்தெரியும் அரை நிர்வாண உடலை, ரத்தக் கோரையுடன்  பார்க்கும் ஒரு வித கிளுகிளுப்பான வாய்ப்பிற்காகவும், பெண்கள்,  அப்படி என்ன அவளிடம் ஈர்ப்பு இருக்கிறது, ஆண்களைக் கவரும் வகையில்  என்பதைக் கண்டறியவும், பல ஆண்களுடன் சல்லாபித்த அந்த அருவருப்பானவளை ஆசை தீர சபிப்பதற்காகவும் அங்கே வந்து கொண்டிருந்தனர்.

    பராபஸ் கூச்சலிட்டுக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து கையை உயர்த்தி அடங்கச் சொன்னான். தயாராக இருக்கும் மக்களைப் பார்த்து கல்லெறியச் சொல்வதற்கான ஆணையைப் பிறப்பிக்க முன்னே வந்து நின்றான். சரியாக அத்தருணத்தில் ஜேக்கப் அங்கு வந்தான். கொள்ளைக் காரக் கூட்டத்தின் தலைவனான பராபஸ்ஸை நோக்கி அவனைச் செல்ல விடாமல் பிலிப் அவன் கைகளை இறுக்கிப் பிடித்திருந்தான்.

    "எங்கே போகிறாய்? ஜேக்கப்!, நாம் எங்கே வந்து நிற்கிறோம் தெரிகிறதா? நாம் நால்வர் தான் இருக்கிறோம். அங்கே பார் மொத்தக் கிராமமும் நமக்கெதிரே வெறியுடன் நிற்கிறது. எதிர்த்தால் நமக்கு எந்த வாய்பப்பும் கிடைக்காது" பிலிப் பதற்றத்துடன் கூறினான்.

    ஆனால் தன் அன்னையின் கடுமையான வார்த்தைகளைத் தவிர எதுவும் அவன் காதுகளில் விழவில்லை. அவன் நிற்காமல் முன்னே சென்று கொண்டிருந்தான். "ஹேய்! பராபஸ்! கொலைகாரா! அவன் கத்தினான். நீ எங்கள் கிராமத்திற்கு வந்தது எங்கள் ஜனங்களைக் கொல்வதற்காகத்தானே? நல்லது! அப்படியென்றால் அந்தப் பெண்ணை விட்டுவிடு! அவளை என்ன செய்ய வேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்துக் கொள்கிறோம். மாக்தலா, மற்றும் கார்பெர்னத்தின் தலைக்கட்டுகள் அவளை விசாரணை செய்யட்டும். அவளது தந்தையான நாசரேத்தின் தூறவியும் வர வேண்டும். அது தான் நியதி!

    "என்னுடைய மகன் சொல்வது தான் சரி!" செபெதீ, இடைமறித்தார். அவரது கையிலிருந்தக் கோலை அழுத்தமாக மன்ணில் ஊன்றியிருந்தார். "அவன் சொல்வது தான் சரி, அது தான் நியதி" அவர் அவனுடைய வார்த்தைகளையே எதிரொலித்தார்.

    பராபஸ் தன் பெரிய முரட்டு உடலை முழுவதும் திருப்பி ஜேக்கப்பை நேருக்கு நேர் பார்த்து நின்றான். "நம் கிராமத்துத் தலைக்கட்டுகள்! இந்தக் கிழட்டுப்பயல்கள் எல்லாம் முடிவெடுக்கத் திராணியற்றவர்கள். இதோ இந்த செபெதீயும் அந்தக் கூட்டத்தில் தானே உண்டு. இவர்களையெல்லாம் நான் நம்ப மாட்டேன். எனக்கு என்னுடைய சொந்த நியதிகள் இருக்கிறது. அதை மீறத் தைரியம் உள்ள ஆண்பிள்ளைகள் முன்னே வாருங்கள். நமக்கெல்லாம் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் தான். நம் வலுவை நாம் மோதிப் பார்த்து முடிவெடுத்துக் கொள்வோம். என்ன கேட்கிறதா ஆண் பிள்ளைகளா!" என்று கூறித் தன் முஷ்டியை உயர்த்தி கைகளை முறுக்கி அவர்களைக் குத்துவதைப் போலக் காண்பித்து ஏளனமாகச் சிரித்தான்.

    கிராமத்து மக்கள் எல்லோரும் பராபஸ்ஸைச் சுற்றித் திரண்டனர். சிறுவர்கள் தங்கள் கைகளில் கவண்களையும், கல்லையும் வைத்துக்கொண்டு ஒரு படை போல குழியைச் சுற்றி நின்றுகொண்டிருந்தனர். அவர்களின் கொலை வெறி மிளிரும் கண்கள், சாவு! சாவு! செத்தொழி! என்று வசை பாடிக் கொண்டிருந்தது.

    பிலிப், நாத்தனேலைத் தூக்கிக் கொண்டு கூட்டத்தின் ஆரவாரத்திலிருந்து மெதுமெதுவாகப் பின் வாங்கினான். திரும்பி ஜேக்கப்பைப் பார்த்து "உனக்கு வேண்டுமானால் நீ போ! நாங்கள் இங்கேயே நிற்கிறோம். இது சுத்தப் பைத்தியக்காரத்தனம், எங்களை விட்டு விடு"

    "ச்ச்சீ! கோழைப் பிறவிகளா! கேவலமாக இருக்கிறது உங்களைத் துணைக்குக் கூட்டி வந்தது!

    "இல்லை! இல்லை! எங்களால் வர முடியாது! உனக்கு வேண்டுமானால் நீ போ!"

    "ஜேக்கப் அவனது தந்தையை ஒரு முறை பார்த்தான், ஆனால் அவர் அவன் கண்களைப் பார்த்தது இருமுவது போலப் பாவலா செய்து நெஞ்சைப் பிடித்துக் கொண்டார்.

"நான் கிழவனப்பா" அவர் சொன்னார்.

    "நல்லது! அதுதான் உமக்கும், உம் குடும்பத்திற்கும் நல்லது! எனக்கு எரிச்சல் வருவதற்கு முன் இங்கிருந்து ஓடிப் போய்விடுங்கள் முட்டாள் பயல்களா! என்று புருவங்களை உயர்த்திக் கைத்தூண்டிச் சொன்னான்.

    ஜான் தன் அம்மாவைத் தாங்கிக் கொண்டு அங்கே வந்து கொண்டிருந்தான். அவர்களுக்குப் பின்னே மேரி, ஜோசப்பின் மனைவி பின் தொடர்ந்தாள். இன்னும் அவள் அழுகையை நிறுத்தவில்லை. தாக்குண்டது போலத் தன் வாயைப் பொத்திக் கொண்டு விசும்பிக் கொண்டே வந்தாள். அவர்களது வருகையைப் பார்த்த ஜேக்கப், என்ன செய்வது என்று அறியாமல், கோபத்தில் கால்களால் நிலத்தில் மாறி மாறி மிதித்தும், ஓரிரு முறை நிலத்தில்  காறி உமிழவும் செய்தான். எதிரேத் தன் வெறிபிடித்த விவசாயக் கும்பலுடன் பராபஸ், அவர்களை அளக்கிறான். அவனுக்குப் பின்னே, முதிய சலோமி, எதுவும் பேசாமல், அந்தக் கொலைகார கூட்டத்தை அலட்சியத்துடன் பார்க்கிறாள்.

    "ம்ம்! தயாராகுங்கள்!" பராபஸ் கூட்டத்தைப் பார்த்துக் கட்டளையிட்டான். தன் மேலங்கியின், கைகளை மறைக்கும் துணியை மடித்து உருட்டிக் கல் எறிவதற்கு வாகாகக் குழியினைப் பார்த்தான்.

        "அவன் அவளைக் கொன்று விடுவான், அம்மா!" என்று அதிர்ச்சியில் சத்தம் போட்ட ஜான், தன் தாயினைத் தாங்கியிருந்த கைகளைத் தளர்த்தி ஜேக்கப்பை நோக்கிப் போக முயன்றான். சற்றுத் தடுமாறிய சலோமி அவனைப் பிடித்து நிறுத்தினாள்.

"பேசாமல் நில்! ஜான், நீ அங்கு இடைப்படாதே!" 

    திடீரென்று அங்கு தூரத் தொலைவில் இருவர் ஆரவாரமிட்டுக் கொண்டு வருகின்றனர். ஆனந்தக் கூச்சலிட்டு ஏரியின் விளிம்பிலிருந்து கூட்டத்தைக் கிழித்து உள்ளே நுழைகின்றனர்.

    மந்திரம் போல அவர்களின் குரலில் ஒரு சொல் திரும்பத் திரும்ப உச்சாடனம் ஆகிறது.

"ஓ! நம் இறைவன் வருகிறான்!" "நம் இறைவன் வருகிறான்"

    வெயிலில் குளித்து நனைந்து வரும் அந்த இளைஞனால் நிற்க முடியவில்லை. எதனாலோ ஆட்கொண்டது போல அவன் அங்கும் இங்கும் அலைந்து குதிக்கிறான். தன்னிலையற்ற அவன் வாயிலிருந்து அச்சொல் மட்டும் திரும்பத் திரும்ப அதிர்கிறது. அவன் கைகளைத் தலைக்கு மேலே ஆட்டி ஆட்டி நடனமிடுகிறான்.

"MARAN ATHA, MARAN ATHA", நம் இறைவன் வந்து கொண்டிருக்கிறான்" தொண்டைக் கிழிய மொத்தக் காதுகளுக்கும் கேட்கும்படிக் கத்திக் கொண்டிருந்தான்.

    "யார் வருகிறார்கள்" அவர்களின் வெறியாட்டு மொத்தக் கூட்டத்தையும் தொற்றிக் கொண்டது. அங்கு நின்றிருந்த மக்கள் அனைவருமே அழத் தொடங்கினர். தங்கள் கைகளை உயர்த்தி வானத்தைப் பார்த்துக் கதறினர். தங்களின் வெகு நாள் பிரார்த்தனைகளின் சொற்கள் அவர்களுக்குள் நாலாபுறமும் சிதறிக் குமைந்தது.

    "நமது இறைவன்" சொல்லிக் கொண்டே அந்த இளைஞன் பாலைவனத்தின் திசையை நோக்கிக் கை காட்டினான். "அதோ! நம் இறைவன்"

    எல்லோரும் அவன் கைசுட்டியத் திசையை நோக்கினர். கிரக நேரச் சூரியன் மறைவது போலத் திடீரென எங்கும் நிழல் பரவியது. வெக்கை கொஞ்சம் கொஞ்சமாகத் தன் கைகளைத் தாழ்த்தியது. ஏரிக்கரையின் மேடான பகுதியிலிருந்து, தொலைவில் ஒரு புள்ளியாய் அவர்களைப் பார்த்து வந்து கொண்டிருக்கிறான். முழுக்க வெண்மை நிற அங்கியை அணிந்திருந்த அவன், மடாலயத்திலிருந்து வரும் துறவியைப் போலத் தோன்றியது. ஏரிக்கரையின் அலைமடிப்புகளில், பாறைகளில் தொற்றிக்கொண்டிருக்கும் பாசிகளின் பலவண்ண நிற பேதத்தின் ஊடாக வெண்ணிறம் சூடிக் கொண்டு அந்த மனிதன் அவர்களை நோக்கி வருகிறான். அதிலிருக்கும் சிவப்பு நிறப்பாசிக் கொத்தைப் பறித்து முகர்ந்து பார்க்கிறான். சிலக் கடற்காகங்கள் கரையில் படர்ந்திருக்கும் கூழாங்கற்களில் தத்தித்தத்திச் வருகிறது. அது அவன் வருகையின் நிமித்தம் சற்று விலகி நின்று பார்க்கிறது. 

    முதிய சலோமி, தன்  நரை முடிததும்பும் தலையை உயர்த்தி வீசிக் கொண்டிருக்கும் காற்றை நுகர்கிறாள் 

    "யார் வருகிறார்?" அவள் தன்மகனைப் பார்த்துக் கேட்டாள். "காற்றில் சுகந்தத்தின் நறுமணம், ஏதோ ஒரு அபரிவிதமானத் தூய இருப்பினை அக்காற்றின் வழித் தான் உணர்வதாகச் சொல்கிறாள்.

    "என் இருதயம் வெடிப்பதற்குத் தயாரக இருக்கிறது, அம்மா" வருவது அவனாகத் தான் இருக்க வேண்டும். ஜான் கூறினான்.

"யார்?"

"ஸ்ஸ்ஸ்ஸ்.......,பேசாதே அம்மா!"

    "அவனுக்குப் பின்னால் வருகிறார்களே அவர்கள் யார்? ஒரு பெரும்படையையே அவன் கூட்டி வருவது போலல்லவா இருக்கிறது"

    "அவர்கள் பாவப்பட்டவர்கள் அம்மா!, திராட்சைத் தோட்டங்களில் இலைகளைப் பொறுக்கிப் பிழைக்கும் அடிமைகள், அவர்கள் ஒன்றும் சேனைகள் அல்ல, பயப்படாதே!"

    உண்மையில் அவனைப் பின் தொடர்ந்து இந்தக் கந்தல் துணி அணிந்து வரும் பாவப்பட்ட ஏழை ஜீவன்களின் திரள் தான் அவனின் பெரும்படை போல இருக்கிறது. திடீரென்று திரளாக வந்த ஆண்களும், பெண்களும், அவர்களின் குழந்தைகளும் அறுவடை நடக்கும் திரட்சைத் தோட்டங்களை நோக்கித் தங்கள் கூடைகளையும், பைகளையும் தூக்கிக்கொண்டு ஓடினர். அவர்கள் அன்றைய விளைச்சலுக்கானக் கூலியை, அந்தந்த நிலஉடைமையாளர்களிடமிருந்து வாங்குவதற்குத்தான் அவர்களுக்கு இத்தனை அவசரம்.  ஒவ்வொரு வருடமும், திராட்சை மற்றும் ஆலிவ் விளைச்சல் செழித்திருக்கும் அறுவடை சமயங்களில், கலீலியின் பாலை நிலத்திலிருந்து பஞ்சம் பிழைக்க வரும் இந்த பசித்த நாடோடி மக்கள் தான் தங்கள் முழு உழைப்பினையும் கொடுத்து முதலாளிகளுக்கு நல்ல செழிப்பான அறுவடை ஈட்டிக் கொடுக்கிறார்கள். அதற்குக் கூலியாக குறைந்த பட்சக் கோதுமை தானியங்கள். திராட்சைகள், ஆலிவ் பழங்களை வாங்கிக் கொண்டு தங்கள் பிழைப்பை ஓட்டுகிறார்கள். வருடா வருடம் விளைச்சலில் இத்தனை அளவை அவர்களுக்குக்  கூலியாக வழங்க வேண்டும் என்பது இஸ்ரவேலத்தில் எழுதப்படாத விதி.

    வெண்ணிற ஒளி போல வரும் அந்த மனிதன் ஓரிடத்தில் நின்று தூரத்தில் தெரியும் மக்கள் கூட்டத்தைப் பார்க்கின்றான். அந்தப் பெருங்கூட்டம் அவனுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. அவன் அதைப் பார்த்துப் பயப்படவும் செய்கிறான். "நான் திரும்பப் போய்விடுகிறேன்; திரும்பப் பாலைவனத்திற்கே போய்விடலாம், அதேப் பழையப் பிரச்சனை அவனை அலைக்கழிக்கிறது. இந்த மனிதர்களின் உலகில் என்னால் இருக்க முடியாது, நான் திரும்பவும் என் கடவுளின் பிரார்த்தனைகளின் உலகிற்குத் திரும்பி விடுகிறேன். திரும்பவும் அவனது விதி ஒரு சிக்கலானக் கயிற்றில் ஊசலாடுகிறது. "எந்த வழியில் நான் செல்ல வேண்டும். முன் நோக்கியா! இல்லை பின் நோக்கியா!"

    குழியினைச் சுற்றி நின்று கொண்டிருந்த அனைவருமே அசைவற்று அவனின் வருகையை எதிர் நோக்கி நிற்கின்றனர். ஜேக்கப்பும் பராபஸும் இன்னும் எதிரெதிரே ஒருவரை ஒருவர் வெறித்து, தங்கள் முஷ்டிகளை உயர்த்திப் பிடித்து தாக்குவதற்குத் தயாராக முன்னேறுகின்றனர். குழியினுள்ளிருக்கும் மாக்தலேன் தன் முகத்தை உயர்த்தித் திரளாய் நிற்கும் கூட்டத்தைப் பார்க்கிறாள். வாழ்வா? சாவா! எனும் இருமையினுள் சதா பந்தாடப்பட்டுக் கொண்டே இருக்கும் தன் விதியை எண்ணி நொந்து கொண்டும், அங்கிருந்து தப்பிக்க ஏதாவது வழி கிடைக்காதா என ஏங்கியும் சுற்றி சுற்றிப் பார்க்கிறாள். மக்களோ தங்களை மறந்து எங்கோ எதிலோ கருத்தூன்றி அசைவற்று நிற்பதைப் பார்த்துத் திகைத்துக் குழம்பியும், குழியிலிருந்து மேலேறிச் செல்ல எதாவது திண்டுபோல இருந்தால், குதித்து ஓடி விட வாய்ப்புண்டா என்ற யோசனையிலும் அங்கும் இங்கும் ஓடுகிறாள். எங்கும் அமைதி பற்றிக்கொண்டு இருக்கிறது. திடீரென அவள் ஒரு சிறிய மணல் திண்டில் கால் வைத்துக் குதித்து எம்பி எம்பிக் கத்துகிறாள், "காப்பாற்றுங்கள்!".

    வெள்ளை அங்கி அணிந்து வரும் மனிதனால் அக்குரலைக் கேட்க முடிகிறது. மிகவும் பரிசயமான அக்குரல் அவனைப் பிறள வைக்கிறது.

    "அது மாக்தலேன்" "மாக்தலேன்" அவளை நான் காப்பாற்ற வேண்டும்" அவன் தனக்குள் சொல்லிக் கொண்டே அக்குரலின் திசை நோக்கி ஓடி வருகிறான்.

    அவன் அந்த மக்கள் திரளை நோக்கி அருகே வந்து விட்டான். அவர்கள் அனைவரும் எதோ துஷ்ட மிருகம் பீடிக்கப்பட்டதைப் போல கோபாவேசத்துடன், உயிரை வதைத்துக் கொல்லும் வன்மம் மிகுந்த தீக்கண்களுடன் குழியினைச் சுற்றி நின்று கொண்டிருப்ப்பதைப் பார்க்கின்றான். அவர்களின் பலப்பல முகங்கள் அவனுள் ஊடாடுகிறது. அவன் ரத்தமும் சதையுமாகத் தன் முன் நிற்கும் மனிதத்திரள் ஒவ்வொன்றிற்காகவும், வருத்தமும் துக்கமும் படுகிறான். அவனால் தாங்கிக் கொள்ள முடியாத அன்பின் பிரவாகம் அவனுள் ஊற்றெடுக்கிறது. சற்று முன்பிருந்த உணர்ச்சிகள் முற்றிலுமாகக் குலைந்து தன்னைப் போலவே அம்மக்களையும் ஒரு பெரும் கனிவுடன் நோக்குகிறான். அது ஒரு செய்கையோ, பாவனையோ அல்ல. அவனால் அதனை யூகிக்க முடியவில்லை. அது அவனை மீறி அவனுள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதன் கட்டுப்பாடின்மையின் விசையே அவனை இழுத்துச் செல்கிறது. "இவர்கள், இந்த மனிதர்கள் ஒவ்வொருத்தரும் என் சகோதரர்கள். அவர்களுக்கு அது தெரியவில்லை, அதனாலேயே அவர்கள் துன்பப்படுகிறார்கள், பாவச்சழுக்குகளில் வீழ்கிறார்கள். ஆனால் நான் மிக மிக அணுக்கமாக இந்த ஒவ்வொரு மனித உயிரையும் என்னுள் உணர்கிறேன். ஒரு வேளை இம்மனிதர்கள் இதனை உண்மையாகத் தாங்களும்  உணர்ந்து விட்டால், அவர்கள் பரஸ்பரம் அன்பு கொள்வார்கள், கட்டிப் பிடித்து முத்தமிடடுவார்கள், அங்கு என்ன ஒரு இன்பமயமான ஒரு உலகம் உருவாகிடும்"

    கடைசியாக அவன் அங்கு வந்துசேர்ந்தான். கூட்டத்திற்கு அருகிலிருந்த சிறியப் பாறைக் குன்றத்தின் மேலேறி நின்று அவர்களை முழுதாகப் பார்த்தான். சொல்! ஒரு மகத்தான சொல்! அச்சொல்லின் ஒன்றின் பலதின் பல்லாயிரம் துளிகளின் ஒருத்துளியாக அவனுள்ளிருந்து துடித்துக் கொண்டிருந்தது அச்சொல். அவன் வாயைத்திறந்தான். அது தன்னைக் வெளிப்படுத்தியது.

"சகோதரர்களே!"

திகைத்துப் போன மக்கள்! வாயடைத்து நின்று கொண்டிருந்தனர்.

"சகோதரர்களே!" ஒரு பீறிடலாய், உடைப்பாய், திறப்பாய், பல்கிப்பெருகும் வித்துக்களாய் அச்சொல் மறுபடியும் வெளிப்பட்டது. 

"சகோதரர்களே! உங்களைக் கண்டதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்"

    "நல்லது, ஆனால் எங்களுக்கு உன்னைக் கண்டதில் எந்த மகிழ்ச்சியுமில்லை, வெறுப்புதான் தலைக்கேறுகிறது சிலுவைகள் செய்யும் துரோகியே". பராபஸ் குனிந்து ஒரு பெரிய உருளைக்கல்லை எடுத்துக் கொண்டு அவனைப் பார்த்து பதிலளித்தான்.

"என் மகனே!" உருகி வழியும் அழுகையுடன் மேரி ஜீசஸை அணுகி அவனைத்  தன் மாரோடு இழுத்து அணைத்துக் கொண்டாள். தன் மார்புச்சூட்டில் அவனைப் பொத்தி வைத்து சிரித்தாள், அழுதாள், விம்மினாள், ஏங்கி ஏங்கி மூச்சிறைத்தாள். தன்னுள் அப்படியே அவனைப் புகுத்த வாய்ப்பிருந்தால் அவள் அவனை அமிழ்த்திப் புதைத்திருப்பாள். ஆனால் அவனோ அவளிடம் எதுவும் பேசாமலவள் முகத்தைக் கூட ஏறிட்டுப் பார்க்காமல், இறுக்கிப்பிடித்திருந்த அவளின்  கைகளை விலக்கி பராபஸை நோக்கிச் சென்றான்.

    "பராபஸ்! என் சகோதரா! உன்னைப் பார்த்தது எனக்கு எவ்வளவு மகிழ்வளிக்கிறது தெரியுமா!. நான் பேரன்புடன் உங்களிடம் ஒரு செய்தியைச் சொல்ல வந்திருக்கிறேன்"

    "அருகில் வராதே" கடுமையானக் குரலில் சொன்னவன், நின்ற இடத்திலிருந்து சற்று விலகிப் பின்னால் குழியினுள் இருக்கும் மாக்தலேனை மற்றவர்களின் பார்வையிலிருந்து மறைக்கும் வண்ணம் நின்று கொண்டான். ஆனால் தன் அன்பிற்குரியவனின் குரல் அவளுக்குக் கேட்டது. அவனின் முகத்தைக் காணத் தன் ரத்தம் வழியும் முகத்துடன் குதித்துக் குதித்துப் பார்க்கிறாள்.

    "ஜீசஸ்", என்னைக் காப்பாற்று". அது வெறும் அபய விளி இல்லை. அவள் தான் நொதிக்கும் குழியிலிருந்து அவன் ஒருவனே தன்னை வெளியேற்றும் வழி அறிந்தவன் என்பதை தீர அறிவாள். பயத்தின் பொருட்டில்லாமல் தன்னை அவனிடம் ஒப்புவித்துவிடலாம் எனும் தூய அன்பின் குரல் அது.

    ஒரு அடி முன்னே எடுத்து வைத்து அவன் பள்ளத்தின் விளிம்பிலிருந்து கீழே பார்த்தான். மாக்தலேன் மேலே ஏறுவதற்காக, ஒரு பாறையைப் பற்றிக்கொண்டு கால்களால் உந்தித் தன் கையை உயர்த்திக் காட்டுகிறாள். அவளின் கைகள், அதன் விரல் நுனிகள் அவனுக்குத் தெரிகின்றன. அவன் குனிந்துத் தன் கைகளை அவளுக்காக நீட்டினான். அவ்விரல்கள் ஜீசஸின் விரல்களுடன் இறுக்கமாகப் பிணைந்து கொண்டது. அவன் அவ்ளைப் பிடித்து ஒரே உந்தில் தூக்கிப் பள்ளத்திற்கு வெளியே, மண்ணில் அமர்த்துகிறான். உடல் முழுதும் கொப்பளிக்கும் காயங்களின் வேதனையுடன் அவள் தன் உடுதுணியால் நெற்றியின் இடது ஓரத்தில் சொட்டும் ரத்ததத்தை அழுத்தித் துடைக்கிறாள். ரத்தமும் , மண்ணும், வியர்வையும் அவளின் உடையில் திட்டுத் திட்டுகளாக ஒட்டியிருந்தது.

    பராபஸ் சற்றும் தாமதிக்காமல் முன்னே வந்து தன் கால்களால், தரையில் அமர்ந்திருந்த அவளின் முதுகில் மிதித்து, தரையோடுத் தரையாக அவளைத் தேய்த்து அழுத்திக் கத்தினான். "இவள் எனக்குச் சொந்தமானவள்"! தன் கையிலிருந்த கனத்தக் கல்லை மேலே உயர்த்தி, "நான் இவளைக் கொல்வேன்". இவள் இறைவனுக்கானப் பிரார்த்தனை நாளை மாசுபடுத்தி விட்டாள். "பாவத்திற்குச் சம்பளம் மரணம்" 

    "மரணம்! மரணம்! கூடி நின்ற மக்கள் கூட்டம் ஒருமித்து ஊளையிட்டது. அவர்கள் கைகளில் கூர்மையான மற்றும் உருளைக் கற்கள் இருந்தன, பற்களைக் கடித்துக் கொண்டு ஆத்திரம் பொங்க அவர்கள் அலறினர். ஆனால் ஒரு குழப்பம். அவர்கள் கல்லை எறிய கைகளை உயர்த்தவில்லை. தங்களுக்கான ரட்சிப்பின் வழியை அது குலைத்துவிடுமோ என்ற பயமும் அவர்களிடம் இல்லாமல் இல்லை. ஆனால் ஒருவித கும்பல் மனப்பான்மையில் அவர்கள் ஒன்றாகக் கத்துகின்றனர். யாராவது ஒருவர் மாற்றிப் பேசினால் அவர்கள் ஒருவேளை அவர்களின் சொல்படி நடந்து கொள்வதற்கே வாய்ப்புகள் அதிகம். தங்களுக்குள் அவர்கள் வாதிட்டுக் கொண்டும், சிலபேர் இன்னுமே இந்த நிகழ்பவைகளுக்குச் சம்மந்தமில்லாதது போல, தங்களுக்குள் கேலியும், கிண்டலும் பேசிக் கொண்டும், மாக்தலேனைப் பரிகாசம் செய்து கொண்டும் இருந்தனர். உண்மையில் யாருக்கும் எதன் மீதும் பெரிய நம்பிக்கை ஏற்படவில்லை. ஆட்டுமந்தையினைப் போன்ற இந்த ஜனங்கள், ஒருவன் என்ன செய்கிறானோ அதனை மற்றவனும் பிரதி செய்தால் போதுமானது என்று நினைப்பவர்கள். உள்ளூறப் பயந்த பிறவிகள். உண்மையானக் கோபமோ, வெறுப்போ, அன்போ, கருணையோ, இரக்கமோ ஏதும் அவர்களிடமில்லை. அந்தந்த சூழ்நிலைகளே அவர்களிடம் அதன் குணாதீசியங்களைத் தீர்மானிக்கின்றன. புகை போல எழும்பி அடங்கும் இம்மக்கள் கூட்டம் தற்போது என்ன செய்வது என்பதை இன்னுமே தீர்மானிக்காமல் அங்கு நின்று சலம்பிக் கொண்டிருந்தது.

    "மரணம்!" செபெதீயும் கூட அழுது கொண்டேக் கத்தினார். ஆனால் அவருடையப் பார்வை புதிதாக அங்கே வேலை செய்ய வந்திருக்கும் ஏழை ஆண்கள் மற்றும் பெண்களின் கூட்டத்தை நோட்டமிட்டது. அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் புதியவர்கள் நிச்சயமாக நமக்கு மிகவும் உதவிகரமாக இருப்பார்கள். மிகக்குறைந்த கூலிக்கு நல்ல உழைப்பை அவர்களிடம் நாம் உறிஞ்சி விடலாம் என்று தனக்குள் இயல்பாகக் கணக்குகள் இட்டுக் கொண்டிருந்தார். 

    "ஆம்! மரணம்! மரணம்! அவர் தன் கையிலிருந்து கோலை உயர்த்தி ஆட்டி, அத்தருணத்தை ஆகோசித்தார்.

    ஜீசஸ், பரபாஸை மேலும் முன் நகராதபடி தடுத்து நிறுத்தினான். "பராபஸ்" சாந்தமாகவும், கவலையுடனும் அவன் விளித்தான். "கடவுளின் கட்டளைகளை நீ ஒரு முறையாவதுக் கீழ்படிந்து மீறாமல் நடந்து கொண்டிருக்கிறாயா?" உன்னுடைய வாழ்நாளில் ஒரு முறைக் கூட நீ திருடவோ, கொலை செய்யவோ, பிறன் மனை நோக்கவோ, இல்லை பொய்யோ சொல்லாமல் இருந்திருக்கிறாயா?"

    ஜீசஸ் நின்றிருந்த இடத்திலிருந்துத் திரும்பி ஊளையிட்டு ஆரவாரிக்கும் மக்கள் கும்பலைப் பார்த்தான். அங்கே  நின்று கொண்டிருந்த ஒவ்வொரு முகங்களையும் தனித்தனியே உற்றுக் கவனித்தான். அவனது துளைக்கும் பார்வை அவர்களை உள்ளீடற்றதைப் போலக் கடந்து செல்வதாக அவர்கள் உணர்ந்தனர். அவனின் கண்களைப் பார்க்கும் தைரியம் இல்லாமல் அவர்கள் குனிந்து நின்றனர். ஆனால் கைகளிலிருந்த கற்களை இன்னும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    "உங்களில் யார் பாவம் செய்யவில்லையோ, அவர்கள் முதலில் கல்லெறியுங்கள்!"

    அவர்கள் பின் வாங்கினர். கூர்மையான அவனின் தகிக்கும் பார்வை அவர்களின் ஞாபகங்களை, கடந்த காலத்தை, அவர்கள் மட்டுமே மறைத்து வைத்திருந்த அந்தரங்கமானத் தீய்மைகளைக் கிளர்த்திவிட்டது. தங்களுக்குள் சமாதானம் அடைந்துகொள்ளும் நற்செயல்கள் என்ன செய்தோம் என அகத்தினுள் துருவிக் கொள்ள, மேலும் மேலும் கீழ்மைகளின் நினைவுகள் மட்டுமே அதனுள் இருந்து வெளித்தெரிவதால் அவர்கள் நிலைகுலைந்தனர். இக்கேள்வியின் அர்த்தப்பாடு என்பது தங்களின் மொத்த வாழ்க்கையையே அடகு வைக்கச் சொல்கிறது என்பது அவர்களுக்குப் புரிந்தது. தீர்ப்பு நாளில் தான் எவ்வாறு இறைவனின் முன் ஒரு புழுவினைப் போல உழலப் போகிறோம் எனும் பலதரப்பட்ட எண்ணங்களின் சுழல்களில் அவர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் தன்னைப் போல மற்றவர்களின் செயல்களையும் சமமாக ஒப்பிட்டு அப்படி ஒன்றும் தான் பெரிய கீழ்மையினைச் செய்து விடவில்லை, நம் பாவங்களும், கீழ்மைகளும் மன்னிக்க முடிந்த குற்றங்களே, கருணை மிக்க இறைவன் நிச்சயமாகத் தங்களை மன்னிப்பான் என்று சமாதானமும் அடைந்தது. ஆனால் தம்மில் பாவம் செய்யாத ஒருத்தர் யார் இருக்கிறார். அவர்களுக்கு அக்கேள்வியின் அர்த்தம் புரிந்தும் அதன் அபத்தம் அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. அதனால் அவர்கள் எதிர்த்து எந்தக் குரலும் எழுப்பாமல் அமைதியாகப் பின் வாங்கினர். தன் கைகளிலிருந்தக் கற்களை அப்படியே நின்ற இடத்திலேயே கீழே போட்டனர்.

    நிலைமை தலைகீழாகிக் கை மீறிப் போவதை உணர்ந்த செபெதீ கூட்டத்தை நோக்கி ஆத்திரத்துடன் விரைந்தார். திரும்பவும் ஜீசஸ் அதே சாந்தமானக் குரலில் எந்த ஏற்ற இறக்கமுமற்று அவர்களை நோக்கிக் கேட்கிறான், அவனது பார்வை அங்கே நின்று கொண்டிருந்த ஒவ்வொருத்தரின் அகத்தைக் குத்தி உள்ளே செல்லும் கூர்மையுடனும், அனுதாபத்துடனும் இருந்தது.

"உங்களில் யார் எந்தப் பாவமும் செய்யவில்லையோ, அவர்கள் முதலில் கல்லெறியுங்கள்!"

"நான் இருக்கிறேன்" கூட்டத்தை முறித்து உள்ளே வந்தார் செபெதீ. பராபஸ் உன்னிடம் இருக்கும் கல்லை என்னிடம் கொடு. அப்பாவித்தனம் என்றும் பயமற்றதுஎன்று நான் நிரூபிக்க வேண்டும். அதனால் நான் முதலில் எறிகிறேன்"

    பராபஸ் சந்தோஷமாகக் கல்லை அவரிடம் கொடுக்க முன்னே அடி எடுத்து வைத்தான். செபெதீ கீழே குனிந்து மாக்தலேனைப் பார்த்து, தன் கையில் இருக்கும் உருளைக் கல்லை உருட்டிப் பார்த்து அதன் எடையைக் கணித்துக் கொண்டு, குறிவைத்து சரியாகத் தலையில் எறிவதற்காகத் தயாரானார். அவள் தரையில் கைகளால் உந்தித் தவழ்ந்து வந்து, நின்று கொண்டிருந்த ஜீசஸின் கால்களைப் பற்றிக் கொண்டு அவனுக்குப் பின்னே மறைந்து கொண்டாள். அவனைத் தொட்ட அந்தக் கணம் அவள் அமைதியானாள், அவளின் பயங்கள் பறந்து போயின. தன்னை யாராலும் கொல்ல முடியாது என அவள் தீர்மானமாக நம்பினாள். விசும்பலை நிறுத்திக் கொண்டு, தன் விரல்களினாள் தொட்டுக் கொண்டிருக்கும் ஜீசஸை, அவனின் மானசீகமான அணுக்கத்தை மேலும் மேலும் தன்னால் முடிந்த வரைப் பெருக்கிக் கொண்டாள்.

    சற்றுப் பெரிய உடல் கொண்ட வளர்த்தியான ஒரு நாடோடி, கூட்டத்திலிருந்துக் குதித்து செபெதீயை நோக்கி வந்தான்.

    "ஹேய்! செபெதீ!, கடவுள் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். தெரியுமல்லவா, உனக்கு. உன் கைகள் செயலிழந்துப் போய்விடும். கை உயர்த்துவதற்கு முன் நன்றாக யோசித்துக் கொள், உனக்குப் பயமாக இல்லை! 

"நீ எங்களைப் போன்ற ஏழைகளின் உழைப்பைச் சுரண்டி லாபம் பார்க்கவில்லை!"

"நீ பாவப்பட்டவர்களின் திராட்சைத் தோட்டத்தைக் குறைந்த விலைக்கு ஏலம் எடுத்து கொள்ளை லாபம் சம்பாதித்து உன் வயிற்றை ரொப்பிக் கொள்கிறாய், மாறாக அவர்களை அடிமைகளைப் போல நடத்தி, நீ கொடுப்பதை மட்டுமே அவர்கள் புகாரில்லாமல் வாங்கிச் செல்லும் சூழலை உருவாக்கி, அவர்களை உன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாய்"

"நீ இதுவரை இரவு நேரங்களில், எந்த விதவைப் பெண்கள் வீட்டிற்கும் சென்றதில்லையா என்ன?"

    கேட்டுக் கொண்டிருந்த அந்த வயதானப் பாவியின் கைகளில் இருந்தக் கல்லின் கனம் கூடிக் கொண்டே இருந்தது. தந்திரமான அவரது கண்களில் பயத்தின் ரேகைகள் தெரிய ஆரம்பித்தது. திடீரென உடைந்து அழ ஆரம்பித்தார். தன் கைகள் பலவீனமாகத் தொங்கியது, அதிலிருந்த கல் நழுவி அவரது கால்களில் விழுந்து நிலத்தைத் தழுவியது.

    அந்த நாடோடி குதூகலமாகக் கத்தத் தொடங்கினான். "அற்புதம்! இது அற்புதம்!. மாக்தலேன் பாவம்! அவள் ஒரு அப்பாவிப் பெண்!"

    பராபஸ்ஸிற்கு ஆத்திரம் பொங்கியது. தழும்புகள் கொண்ட அவனது அகோரமான முகம் வெறியில் சிவந்தது. விரைந்து மேரியின் மகனை நோக்கிச் சென்றவன், தன் வலுவானக் கையை உயர்த்தி ஜீசஸின் கன்னத்தில் அறைந்தான். ஆனால் உணர்ச்சிகள் எதுவுமே வெளிப்படாது ஜீசஸ் அமைதியாகத் தன் மறுகன்னத்தைக் காட்டினான்.

    "ம்ம்! இன்னொரு கன்னத்திலும் அறைந்து விடு, பராபஸ், என்னருமை சகோதரா!" ஜீசஸின் குரலில் கனிவு கூடியிருந்தது.

    பராபஸ்ஸின் ஓங்கியக் கை உணர்ச்சியற்று, ஒரு உயிரில்லாப் பொருள் போல தோள்களில் குலுங்கியது. அவனது கண்கள் ஜீசஸிந் முகத்தை நேருக்கு நேர் பார்த்தது. யாரிந்த மனிதன்?  ஒரு பிசாசா! மனிதனா! இல்லை சாத்தானா! அவன் குழப்பமடைந்தான். நிதானிக்க முடியாமல் சற்றுப் பின்னே நகர்ந்து நின்றான்.

    "இன்னொரு கன்னத்திலும் அறைந்து விடு, என் சகோதரா!" மேரியின் மகனின் கண்கள், பராபஸ்ஸை எந்த நோக்கமுமற்ற, களங்கமின்மையுடன் பார்த்தது.

    அச்சமயத்தில் யூதாஸ் அருகில் மறைந்து நின்றிருந்த ஒரு அத்திமரத்தின் நிழலில் இருந்து வெளியே வந்தான். வெகு நேரமாக அங்கே நின்று கொண்டு நடப்பதை நோட்டமிட்டுக் கொண்டிருந்தான் அவன். எல்லாவற்றையும் பார்த்திருந்தாலும் ஒரு சொல் கூடச்  சொல்லவில்லை. மாக்தலேனை கொலை செய்தாலும் இல்லா விட்டாலும் அதில் அவனுக்குப் பெரிய வேறுபாடில்லை. ஆனால் அந்த ஏழை நாடோடி, செபெதீயின் முகத்திரையைக் கிழித்து அவனின் பாவங்களைப் பட்டியலிட்டு மக்களின் முன் பிரகடனப் படுத்தியதை அவன் கவனமாகக் கேட்டான். அப்பொழுது மக்களின் முகங்களில் உருவாகிய எண்ணங்களின் அலைவோட்டத்தை அவன் புரிந்து கொள்வதற்காகத், தான் மறைந்து நின்றிருப்பதே சரியானது என்று அங்கேயே அசையாமல் நின்றிருந்தான். ஏரிக்கரையின் மேட்டுப்பகுதிலியிருந்து பாறைகளைப் பிடித்து உந்தி ஏறி வந்து கொண்டிருந்த ஜீசஸின் அந்த வெண்மை நிறத் தோற்றத்தைப் பார்த்ததும், யூதாஸின் மனத்தில் கட்டுப்படுத்த முடியாத ஒரு உணர்வுப்பெருக்கு உருவாகியது. அவனின் அகம் துடிக்கத் தொடங்கியது. எல்லா முறையும் என்னை இந்த மனிதன் ஆச்சரியப் படுத்தி, ஆட்கொண்டு விடுகிறான் என்று நினைத்தவன் அவன் இம்மனிதர்களுக்காக அப்படி என்ன செய்தியை வைத்திருக்கிறான் என்றும்,  ஒரு வேளை அவனது வார்த்தைகள்,  இஸ்ரவேலத்தின் ஒரே இறைவனின் சொல்லாகவும் இருக்கலாம் என்ற நம்பிக்கையில், அவனையேக்  கவனித்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் பேசத் தொடங்கியதும், அவனின் முதல் வார்த்தையான "சகோதரர்களே" என்பதைக் கேட்டதும் எல்லாமே அவனுக்குக் கசப்பாகி விட்டது. இவன் திருந்தவே இல்லை. இன்னும் தன் தலையில் முட்டாள்த்தனங்களைத் தான் தூக்கிக் கொண்டு இம்மக்களிடம் வந்திருக்கிறான் என்று அதிருப்தியடைந்தான். 

"இல்லை! இல்லை! நாமொன்றும் சகோதரரகள் இல்லை. இஸ்ரவேலத்தவர்களும், ரோமானியர்களும் சகோதரர்தளில்லை. ஏன் இஸ்ரவேலத்தவர்களேத் தங்கள் சகோதரத்துவத்தை அவர்களுக்குள் உணரவில்லையே! பைத்தியக்காரன்!"

    "நமது யூதத்தின் அரசக் குழு , ரோமானியர்களுக்குத் விலை போய்விட்டது. கிராமத் தலைவர்களான பெரியவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், இந்தக் கொடுங்கோலாட்சியைப் பாரபட்சமின்றி, வெட்கமில்லாமல் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். நாமெல்லாம் என்ன சகோதரர்களா! இல்லை! நீ மிகத் தவறாக இந்த மக்களின் முன் உன் வார்த்தையைத் தொடங்கி விட்டாய், தச்சனின் மகனே! கவனமாக இரு! இம்மக்கள் கூட்டத்தின் உண்மையான சுயரூபம் உனக்குத் தெரியாது. ஆனால் ஜீசஸ் தன்னை அறைவதற்கு இன்னொரு கன்னத்தையும் காட்டியவுடன், அவனைப் பற்றிய யூதாஸின் எண்ணங்கள் குழம்பிவிட்டது. என்ன இது! எந்தக் கோபமுமில்லாத இந்த முகம், இது ஒரு மனிதன் செய்வது அல்ல! ஆனால் அம்முகத்தில் எந்த மாறுதலுமில்லை. பயமில்லை! வெட்கமில்லை! கோபமில்லை! சாந்தம்! சாந்தம்! மறுதலிக்கவே முடியாத அவ்வுணர்வு மட்டுமே அதில் வெளிப்படுகிறது. அப்படி ஒரு உணர்வை அவனால் எதிர்கொள்ள முடியவில்லை. அவனுக்கு உண்மையில் ஜீசஸைப் பார்த்தால் பயமாக இருந்தது. "என்ன மாதிரியான மனிதன் இவன்?" அவன் தனக்குள்ளேயே கேள்விகளினுள் உழன்றான். ....இன்னொரு கன்னத்தையும் காட்டும் இவன் ஒரு தேவதை. ஒரு தேவதை மட்டும் தான் இப்படிச் செய்யும் இல்லையென்றால் ஒரு தெரு நாய்.

    சட்டென எம்பிக் குதித்து உள்ளே வந்த யூதாஸ், ஜீசஸை நோக்கித் திரும்பவும் கைகளை உயர்த்தி முன் செல்ல முயன்ற பராபஸ்ஸைத் தன் வலுவானக் கைகளால் முடக்கி இறுக்கினான்.

"அவனைத் தொடாதே! யூதாஸ் கத்தினான்.

"ம்ம்! உன் குடிலுக்குத் திரும்பப் போ!"

    பராபஸ் ஆச்சர்யம் தொனிக்க கண்கள் உயர்த்தி யூதாசை பார்த்தான். அவர்கள் ஒன்றாக வளர்ந்து வந்தவர்கள். அவர்களின் சகோதரக் குழுவில் அவர்களே இணைந்து திட்டம் தீட்டி ஊர் ஊராக, கிராமம் கிராமமாக, இஸ்ரவேலத்திற்கு எதிராக இருக்கும் துரோகிகளை நோட்டமிட்டுக் கண்டறிந்துக் கொன்றுக் குவித்திருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது என்னாயிற்றுத் தன் துணைவனுக்கு, என்று யோசித்து ஸ்தம்பித்து நின்றான் பராபஸ்.

"நீயா, யூதாஸ் இதைக்சொல்கிறாய்" அவன் முணுமுணுத்தான்.

"ஆம்! நான் தான் சொல்கிறேன், திரும்பிப் போ!"

    பராபஸ் இன்னமும் அசையாமல் நின்று கொண்டிருந்தான். தனது சகோதரர்கள்  குழுவில் அவனுக்குக் மேலே அவனுக்கு கட்டளைகள் இடுபவன் யூதாஸ். அதனால் அவன் வார்த்தைகளை பராபஸ்ஸால் எதிர்க்க முடியாது. அதே நேரம் தனது சுயமரியாதை அவனை அங்கிருந்து நகர விடாமல் பிடித்திருந்தது.

    "போ!" செந்தாடிக்காரன் மறுபடியும் குரலை உயர்த்தி அத்ரிந்தான்.

    கொலைகாரக் கும்பலின் தலைவன், தன் தலையைத் தாழ்த்தி அவன் சொல்லுக்கு அடிபணிவது போலத் தன் உடலைக் குறுக்கிக் கொண்டான். எதிரில் நின்றிருந்த மேரியின் மகனை, இரக்கமற்றுப் பல்லைக் கடித்துக் கொண்டுப்பார்த்து உறுமினான்.

    "நீ என்னிடமிருந்து தப்ப முடியாது, நாம் மறுபடியும் சந்திப்போம்" தன் முட்டியை இறுக்கி அவனைக் குத்துவதைப் போல நீட்டிச் சொன்னான் பராபஸ்.

    அவனது கொள்ளைக் கும்பலைப் பார்த்து அரைமனதுடன் கட்டளையிட்டான், "ம்ம்! நாம் போகலாம்!"