ஞாயிறு, 6 மார்ச், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் - 65

    

    அவளது புலம்பல்களைக் கேட்ட செபெதீ (அவரது லாபங்களில் யாரும் இடையிடாத வரை, அவர் அப்படி ஒன்றும் கெட்டவர் இல்லை), அவளை சமாதானப் படுத்துவதற்காக அறைக்குள் வந்தார். "இது அவனது இளமைத்துடுக்கு செலுத்தும் பாடு, மேரி", "அவனது வயதுதான் அவன் பிரச்சனை, கவலைப்படாதே", எல்லாம் சரியாகிடும். இளமை, ஒரு தூய்மையான மதுவினைப் போல, ஆனால் அதை நிதானமாக அருந்த வேண்டும், அப்பொழுதுதான் சரியான வழியில் அதற்கு எதிர்ப்பு காட்டாமல், சுமூகமாக நுகத்தில் இழுத்துக் கட்ட முடியும். அதன் பின் நாம் நடத்திச் செல்லும் பாதைக்கு அதுவும் பலப்ரயோகங்களின்றி வரும். உன் மகனும் சீக்கிரமே தன்னை நிதானித்துக் கொள்வான். என்னுடைய சொந்த மகனைப் பார், அவனும் இப்படித்தான். முன்னாடி இருந்தப் பித்து இப்போது சற்று தணிந்திருக்கிறது, தன்னுடைய இளமையில் நிதானிக்க முடிந்தவன், நிச்சயம் எங்கும் வழிதவற மாட்டான். என் பிள்ளை இப்பொழுது எவ்வளவோ பரவாயில்லை, இறைவனுக்குத்தான் அதன் அத்தனை பெருமையும் சேரும்"

    கேட்டுக் கொண்டிருந்த ஜானின் முகம் சற்று அசௌகரியமாய் மாறியது, ஆனால் அவன் எதுவும் பேச வாயெடுக்கவில்லை. உள்ளே சென்று ஒரு குவளையில் குளிர்ந்த நீரும், சிலப் பழுத்த அத்திப்பழங்களையும் விருந்தினருக்குக் கொடுப்பதற்காக எடுத்து வந்தான். இரு பெண்களும் எதிரெதிரே அமர்ந்து தங்களது கைகளைப் பிடித்துக் கொண்டு, கடவுளால் துடைத்தெறியப்பட்ட தத்தமது பிள்ளைகளை நினைத்து உள்ளூற விசும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் மூக்குறிஞ்சும் சத்தம் மட்டுமே கேட்டது. அவர்களின் அழுகைக் குரல் கேட்டுத் தேவையில்லாமல் இந்த ஆண்கள் வந்து சமாதானம் செய்கிறேன் பேர்வழி என்று, பெண்கள் மட்டுமே உணரும் வலியினை, அதனை இன்னொரு பெண்ணிடம் கடத்துவதால் கிடைக்கும் ஆசுவாசத்தை அவர்கள் இழக்க விரும்பவில்லை. அதனால் அமைதியாகத் தங்களின் வலிகளை அவர்கள் ஒருவருக்கொருவர் கடத்திக் கொண்டிருந்தனர்.

    "அவன் பிரார்த்தனைகளுக்குள் தன்னை முழுதுமாக மூழ்கடித்து இருக்கிறான். "உன் மகன் என்னிடம் சொன்னான், சலோமி!". அவன் தன்னைத் தீவிரமான ஒரு மன்றாட்டுதலுக்கு உட்படுத்தியிருப்பதாகவும், தன் கைகள் மற்றும் முட்டுக்கண்ணிகளைத் தரையில் ஊன்றி, ஒரு சுயவதை போல அவன் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறான் என்றும். அவன் தொடர்ந்து உணவு எடுத்துக் கொள்ளாததால், உடல் மெலிந்து உருகிக் கொண்டிருக்கிறது என்றும் ஜான் சொல்கிறான். அவனுக்குக் காற்றின் ஊடேச் சிறகுகள் தெரிகின்றன, அப்படியென்றால் தேவதைகளைப் பார்ப்பதற்காக அவன் தண்ணீர் கூடக் குடிக்காமல் தன்னை வதைப்படுத்திக் கொண்டிருக்கிறான். இந்தத் தீவிரமான நோய் அவனை எங்குக் கொண்டு போய் விடப்போகிறதோ, சலோமி! அவனது மாமா சிமியோனால் கூட அவனைக் குணப்படுத்த முடியவில்லை. என்ன செய்ய? உனக்குத் தான் தெரியுமே! எத்தனை பெரியப் பெரியப் பேய் பிசாசுகளையெல்லாம் அவர் ஓட்டியிருக்கிறார் என்று! எதற்காகக் கடவுள் என்னைப் பழிக்கிறார்? நான் அப்படி என்ன பாவம் செய்து விட்டேன்? சலோமி! என்னால் முடியவில்லை" என்று கூறியவள் தாள முடியாமல் சலோமியின் மடியில் தன் தலை புதைத்து விம்மி அழத் தொடங்கினாள்.

    ஜான் ஒரு பித்தளைக் குவளையில் தண்ணீரும், ஒரு தட்டில் ஐந்தாறு அத்திப்பழங்களையும் எடுத்துக் கொண்டு அவர்கள் முன் வந்தான். மேரியைப் பார்த்து அழாதீர்கள் என்று சொன்னவன் அவளது மடியில் தட்டினை வைத்தான். 

    ஜான் தொடர்ந்து அவர்களைப் பார்த்து பேசத்தொடங்கினான். "அவன் முகத்தில் அபரிவிதமான ஒரு ஒளித்தீற்றல் நிகழ்வதை, அப்புனித ஒளி கொஞ்சம் கொஞ்சமாக அவனை விழுங்குவதை, அவனைச் சுற்றிலும் அதன் சதகோடிக் கரங்கள் ஆக்கிரமித்து அவனுள் நுழைந்துப் பெருகுவதை, அச்சமயங்களில் விளக்க முடியாத பேருவகையிலும், தாளமுடியாத வலிப்பெருக்கிலும் அவனது முகம் உருமாறிக் கொண்டிருப்பதையும் அருகிலிருந்து சில சமயங்களில் நான் பார்த்திருக்கிறேன். அச்சுறுத்தும் வகையில் அதன் நாளங்கள் இருக்கும். சில சமயங்களில் ஒரு உயிருள்ள கொடிய விஷமுள்ள, கொடுக்குகள் கொண்ட அதன் கீற்றுகள் அவனுள் இறங்கி வெளியேறுவதைப் போலத் தோன்றும். நான் பயந்து வெளியே ஓடிவிடுவேன். ஆனால் அவன் தன்னை மறந்து முற்றிலுமானத் தியானத்தில் இருப்பான். எங்களின் அருட்தந்தை இறந்தபிறகு,  மூத்ததுறவி ஹப்பாக்குக் எல்லா இரவுகளிலும் அவனைக் கனவுகளில் கண்டார். அதில் இறந்த எங்களின் புனிதத் தந்தை உங்கள் மகனைக் கைப்பிடித்து, ஒவ்வொரு அறைகளாக அழைத்துச் செல்கிறார். எதுவும் பேசாமல், ஒவ்வொருத்தரையும் பார்த்து, அவனைச் சுட்டிக் காட்டிப்  புன்முறவலுடன் அடையாளம் காண்பிக்கிறார். பீதியில் கனவு கலைந்து, அருளாளர் ஹப்பாக்குக் அதிர்ச்சியில் படுக்கையிலிருந்து குதித்தெழுந்து வெளியே சென்று, ஒவ்வொரு துறவியாக எழுப்பினார். நாங்கள் எழுந்து ஒன்றாக கூடத்திற்கு வந்தோம். அரைத்தூக்கத்தில் கனவா நனவா என்று பிரித்தறிய முடியாத படி கண்களைக் கசக்கிக் கொண்டே அவர் முன் நின்றோம். அவர் தனக்கு வந்தக் கனவை எங்களுக்கு விளக்கினார். ஆனால் எங்களால் அதனைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. நமது புனிதத்தந்தை நம்மிடம் என்ன சொல்ல விளைகிறார்? எதற்காக அவர் புதிதாக நம் மடத்திற்கு வந்த விருந்தாளியைச் சுட்டிக் காட்டிச் சிரிக்கிறார், எல்லாமே ஒரு புதிர் போல இருந்தது. புனிதத்தந்தை இறந்து இன்னும் நாற்பது நாட்கள் கூட கடந்திருக்கவில்லை. நிச்சயமாக அவரது இருப்பு எங்களுக்குள் ஏதோ ஒன்றைக் கடத்த முயல்கிறது. அவர் சொல்லாமல் விட்ட ஒன்றினைப் பற்றிய சமிஞ்சைகள் தான் இது என்று நாங்கள் நினைத்துக் கொண்டோம். ஒரு நாளிற்கு முன்பு நான் மடாலயத்தை விட்டு வெளிவந்த நாளில், மடத்திலிருந்த எல்லாத் துறவிகளும் ஒட்டு மொத்தமாக, ஒரே சமயத்தில் தங்களின் உள்ளுணர்வினால் அடித்துச் செல்லப்பட்டனர். அனைவருக்குள்ளும் கனவின் புதிர் அவிழ்ந்தது போல ஒரு உறுதி ஏற்பட்டது. தங்களுக்குள் அவர்கள் உணர்ந்த அவ்வனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். அவர்களின் ஒவ்வொருக் கனவுகளும் விசித்திரமானதாகவும், சிக்கலானதாகவும், எதையோ குறிப்புகளால் சொல்ல முயல்வதாகவும் இருந்தது. 

    ஒரு கனவில் வண்ணத்துப்பூச்சிகளின் இறகுகள் மட்டும் உடலற்றுப் பறந்து போகின்றன. நிலத்திலிருந்து எம்பி எம்பி உயரே, வானில் நீல நிறத்தில் ஒளிரும் ஒரு விண்மீனை நோக்கித் தன் சிறகுகளைப் படபடத்துகின்றன. இரவின் மிளிர்வில் பூமியே ஒரு நீலப் பெருங்கடல் போலத் ததும்புகிறது. சிறகுகள் அலைகளாகின்றது. அது திரும்பத் திரும்ப ஓய்வின்றி கரையைப் பற்றிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறை அது கரைப் பற்றும் பொழுதும்,  நிலம் பிளன்று நகர்ந்து விடுகிறது. ஒவ்வொரு அலையும் பிளன்றிருக்கும் பள்ளத்தை நோக்கிப் பாய்கிறது. நிமிர்ந்து பார்க்கையில் நீல வெளி ஒரு பெரும் மழையாகப் பொழிகிறது. வண்ணத்து பூச்சிகள் நீர்மையாய், திரவத் துளிகளாய் தலை கீழாக, நிலத்தை நோக்கி தங்கள் சிறகுகள் மட்டுமேக் கொண்ட உடலைச் செலுத்தி, பூமியில் விதைகளாகின்றன. பின் விதைகள் வேர் விட்டு முளைத்து ஒரு சிலுவை மரமாய்த் துளிர்க்கிறது. 

    இன்னொருவர் கனவில், ஒரு பல்லியின் வால் துடிதுடிக்கிறது. ஒரு மயில் அதனைத் தன் அலகால் கவ்வுகிறது. அதன் வாயில் அது இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறது. அருகிலே இருந்த ஒரு ஆலிவ் மரப்பட்டையில், மரமொடு மரமாக அந்தப் பல்லி அசையாமல் தன் வாலைத் திங்கும் மயிலைப் பார்த்தபடி இருக்கிறது. சட்டெனப் பல்லி அங்கிருந்து குதித்துப் பறந்து மயிலின் கொண்டையினைத் தன் சவ்வுகளால் பற்றி உட்கார்ந்துக் கொள்கிறது. மயிலால் அதனை உணர முடிந்தாலும் அதை அகற்ற முடியவில்லை. அது பதற்றத்தில் அங்குமிங்கும் அலைகிறது. தலையை அசைத்துச் சுழற்றிப் பார்க்கிறது. ஒன்றும் முடியவில்லை. நிலத்தில் தரையோடுத் தரையாகக் குந்தி தன் தலையை ஒரு பாறையில் அறைகிறது. அதன் தலையும், பல்லியும் ஒரு சேரச் சிதறித் தெறிக்கின்றன. அதன் அலகிலிருந்த பல்லியின் வால் சற்றுத் தொலைவில் விழுந்து இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறது. 

    மற்றுமொருவர் கனவில், ஒரு ஒற்றைக் கடிஎறும்பு ஒரு முழு மனித உடலைத் தூக்கிக்கொண்டு அதன் சிதல் புற்றை நோக்கிச்செல்கிறது. புற்றின் குறுகிய வாய்ப்பகுதியை அடைந்ததும். தன் பற்களால் அந்த உடலைக் கடித்து உடைக்கிறது. அந்த உடல் ஒருக் கண்ணாடி போலப் பாளம் பாளமாக நொறுங்குகிறது. அதன் உதிரித்துகள்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் சேகரிப்பில் இடுகிறது. முழு உடலையும் இட்டு அது அயர்ந்து போய் நிற்கும் பொழுது, மழை பொழியத் தொடங்குகிறது. பெரும் மழை. வானம் இடிந்து விழுவது போல விழுந்து, அந்த சிதல் புற்றைக் கரைத்து ஒன்றுமில்லாமல் ஆக்குகிறது. அந்த ஒற்றை எறும்பு தன்னந்தனியாக அம்மனித உடலின் சேகரிப்பைப் பாதுகாக்க, பதைபதைக்க அக்குவியலைத் தூக்கிக் கொண்டு இங்கும் அங்கும் அலைகிறது. திடீரென தன் தலையின் பாரத்தில் அழுந்தும் மனித உடல் ஒரு செடியாகிறது. அதன் கிளைகள் பெருகி மரமாகிறது. உயர்ந்து எம்பி வானம் வரைத் தொட்டு நிற்கிறது. மழை நிற்கிறது. அது திரும்பவும் தூசித்துகள்களாகிறது. எறும்பு தான் நின்ற இடத்திலேயே அசையாமல் அதைத் தாங்கிக் கொண்டு காலமற்று நிற்கிறது. மழை பொழிவதும் அடங்குவதுமாய் அது ஒரு அலகிலா நாடகமாக நடந்து கொண்டே இருக்கிறது.

    என் கனவுகள் பற்றிய விளக்கங்களில் சற்றுப் பீடிகை இருக்கலாம். நான் என் ஞாபகங்களிலிருந்து, என்னால் முடிந்த வரை அதைச் சரியாக உங்களிடம் சொல்ல நினைத்தேன். ஆனால் எல்லோருக்கும்ம் தன் கனவுகளில் இருந்த புதிர்த்தன்மை, ஒரு வித அச்சத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. அவர்கள் தங்கள் கனவுகளில், வாழ்விற்கும், மரனத்திற்கும் இடையே, மனிதனின் உடல், ஆன்மா எனும் ஊசலாட்டத்தில் எதைப் பற்றிக் கொள்ள என்று குழம்பும் பொழுது பொறுமை! காத்திருப்பு! நம்பிக்கை! மன்றாட்டு! பிரார்த்தனை! வலிமை! அதிகாரம்! கருணை! அன்பு! வன்முறை! கலகம்! என்றுப் பல பல விளக்கங்களைச் சொல்லிக்கொண்டிருந்தனர். 

    ஆனால் அக்கனவுகளில் இருந்த பொதுத்தன்மை, எல்லோருமே அதனுள் உள்ளுறையாகப் புதிதாக வந்திருந்த இளைஞனை, தவிர்க்க முடியாத இருப்பாய் உணர்ந்தனர். அவனது இருப்பின் முகங்களே பலப்பல வித இயற்கை நிகழ்வுகளாய், உயிரினங்களாய், குழைந்து செல்லும் காட்சி வெளிகளாய் அவர்களுக்குத் தோன்றியது. அதற்கான விளக்கங்களைக் கூட அவனை முன்னிறுத்தியே, பலவிதமானக் கோணங்களில் அவர்கள் அணுகினர். அவர்களால் எதையும் உறுதியாக தெளிவு படுத்த முடியா விட்டாலும், மரணமடைந்த புனிதத்தந்தை, உங்கள்  மகனைத்தான் அடுத்த புனிதத்தந்தையாக்க விரும்புகிறார் என்று இக்கனவுகளின் வாயிலாக முடிவு செய்த அவர்கள், உணர்ச்சிப் பெருக்கில் அவன் கால்களில் விழுந்து வேண்டினர். கடவுளின் விருப்பம் , நீ இம்மாடலயத்தின் அருட்தந்தையாவதே எனச் சொல்லி அழுதனர். ஆனால் உங்கள் மகன் அதை முற்றிலுமாக மறுத்தான். 

    "இல்லை! இல்லை!. இது என்னுடைய வழி அல்ல! நான் இதற்குத் தகுதியற்றவன். நான் இங்கிருந்து போகிறேன்." சரியாக அந்த நாளின் மதியப் பொழுதில் நான் மடாலயத்தை விட்டு வெளியேறும் போது, அவனின் அழுகுரலைக் கேட்டேன்,  மற்ற துறவிகள் அவனை ஒரு அறையில் போட்டுப் பூட்டி வைத்திருந்தார்கள். அவன் தப்பிக்காமல் இருக்க வெளியே காவலுக்கு இரு துறவிகள் நின்றிருந்தார்கள். அறையினுள் இருந்து கேவிக் கொண்டிருந்தது அக்குரல். அவனது அழுகையும், மறுப்பும்."

    "வாழ்த்துக்கள், சகோதரியே! வாழ்த்துக்கள்", சலோமியின் வயதான முகத்தின் ரேகைகள் துடித்தன. " நீ ஒரு பேறுபெற்ற அன்னை, இறைவன் தன் கருணையையே உன் மகவாக கருவறையினுள் தருவித்திருக்கிறான், ஆனால் அதைப்பற்றி எதுவுமே நீ உணரவில்லை" சலோமியின் கண்கள் பணிந்தன.

    கடவுளால் விரும்பப்படும் அவ்வன்னை இதனைக் கேட்டுத் தலையை இல்லை என்பது போல ஆட்டினாள். இன்னும் விம்மிக் கொண்டிருந்த அவளது மனம் இதுவரை அவனுக்கு நிகழ்ந்த அனைத்தையும் நினைவுகளில் ஓட்டியது. அதன் தாங்க இயலாத தன்மையும்,  எதனாலும் ஆற்றுப்படுத்த முடியாத அதன் வலிகளையும், காயங்களையும் எண்ணி மருகிக் கொண்டே இருந்தாள்.

    "என் மகன் புனிதனாவதை நான் விரும்பவில்லை, அவனும் ஏனைய மனிதர்கள் போல திருமணம் செய்து எனக்கு பேரப்பிள்ளைகள் பெற்றுக்கொடுத்து சந்தோஷமாக வாழவேண்டும். அது தான் கடவுளின் வழி"

    "அது மனிதன் செல்லும் பாதை அம்மா, என்ன இருந்தாலும் அது வெறுத்து ஒதுக்க வேண்டிய ஒன்று." ஜான் தனது மெல்லியக் குரலால் மேரியை இடைமறித்தான். "உண்மையில் இப்பொழுது அவன் செல்கிறானே அதுதான் நிச்சயமாக கடவுளின் பாதை".

    பை நிறையத் திராட்சைகளைத் தூக்கிக் கொண்டு இரு இளைஞர்கள், தோட்டத்திலிருந்து வாசலைத்தாண்டி உள்ளே வந்து கொண்டிருந்தனர். அவர்கள் தங்களுக்குள் எதுவோ குசுகுசுத்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும், கேலி பேசிக் கொண்டும் வருவதை செபெதீயும், மற்றவர்களும் முற்றத்தில் இருந்துப் பார்க்கின்றனர்.

    "கெட்ட செய்தி, முதலாளி! அவர்கள் நகைப்பதை நிறுத்தாமல் கத்திக் கொண்டே வந்தார்கள். மாக்தலாவில் ஏதோ கலகம் போலத் தெரிகிறது. மக்கள் கற்களை வைத்துக் கொண்டு நம் தேவதையை வேட்டையாடத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

     "யாரை, எந்தத் தேவதையைச் சொல்கிறீர்கள், பையன்களா?" அங்கே மதுத்தொட்டியில் மிதித்து அசைந்து கொண்டிருந்த இளைஞர்கள் அதை நிறுத்திவிட்டுப், புரியாமல் அவர்களைப் பார்த்துக் கேட்டனர். "மாக்தலேனா?"

    "ஆமாம். மாக்தலேன் தான், நல்ல காலம் அவள் தப்பித்துவிட்டாள். கடவுளுக்கு நன்றி. கழுதை ஓட்டி வந்த இரு நாடோடிகள் மூலம் தான் இந்தச் செய்தி எங்களுக்கேத் தெரிய வந்தது. கொள்ளைக் கும்பலின் தலைவன் பராபஸ்ஸை உங்களுக்குத் தெரியும் அல்லவா!, பார்த்தாலே பயந்து நடுங்கும் தோற்றம் கொண்ட அந்த முரட்டுப் போக்கிரிப் பயல், அவன் நேற்று, சனிக்கிழமை, நாசரேத்திலிருந்து மாக்தலாவிற்கு தன் கொள்ளைக் கும்பலுடன் அவளை வேட்டையாடச் சென்றிருக்கிறான்.

    "இங்கே இன்னொருத்தனும் உங்களுக்காக இருக்கிறான்", செபெதீ ஆத்திரம் பொங்கக் கத்தினார். ஒரு கொள்ளை நோய் பீடித்தக் பேய்க்கிறுக்கன், அந்த புரட்சியாளச் சகோதரக் கும்பலைச் சேர்ந்தவன். இஸ்ரவேலத்தைக் காப்பாற்றப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டுத் திரிவானே, அவனும் அவனின் வளைந்த மிருக நெடி கொண்ட மூக்கும்,  நரகக் குழியில் அழுகி நொதிக்கட்டும் இந்த கேவலங்கெட்ட வேசைப் பயல்...ச்ச்சே!"

    "சரிதான்!" அவர்கள் பேச்சைத் தொடர்ந்தனர். அந்தக் கும்பல் அந்தியில் மாக்தலேனாவின் தொழில் நடக்கும் குடிலுக்குச் சென்றிருக்கிறது. அங்கு ஏற்கனவே கூடம் நிறைந்து ஆள்கூட்டம் இருந்திருக்கிறது. சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட அவள் அந்த நாளின் வேலையை சீக்கிரமே முடித்துவிட்டு அடுத்த நாளில் ஓய்வெடுப்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். ஆனால் இந்த வன்மம் பிடித்தப் பயலுக்குக் கொஞ்சம் கொழுப்பு அதிகம். விரைந்து முற்றத்திற்கு வந்தவன் தன் கையில் கத்தியை வைத்து பயமுறுத்தி, அங்கேக் காத்திருந்த வணிகக் கும்பலைத் தள்ளிக் கொண்டு உள்ளே போக எத்தனித்தான். வியாபாரிகள் கும்பலும் தங்களின் வாள்களை உருவிக் கொண்டு சண்டைக்குத் தயாராகி விட்டனர். இருந்தக் கூட்டத்தினர் அனைவருமே அவசர அவசரமாக எப்படியோ இந்த சனிக்கிழமை நாளை அனுபவித்துப் போவதற்காக பொறுமையற்றிருக்கின்றனர். இப்படி ஆளாளுக்கு முந்திக் கொள்ளக் கூட்டத்தில் களேபரமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டு அவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளத் தொடங்கினர். இருவர் காயம் பட்டுக் கீழே விழுந்தனர். ரத்தத்தைப் பார்த்ததும் வியாபாரிகள் பயந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தலை தெறிக்க வெளியே ஓடி விட்டனர். உள்ளே இருந்தப் பெண்ணைக் கண்டம் துண்டமாக வெட்டுவதற்குத் தயாராக, பராபஸ் தன் சூரிக் கத்தியைக் கையில் வைத்துக் கொண்டு, காலால் எட்டி மிதித்து, அவளிருந்த சிறிய அறைக்கதவை உடைத்துத் திறந்தான். ஆனால் அறையினுள் யாருமில்லை. அவள் தன்னை முழுக்க மறைத்து முக்காடிட்டுக் கொண்டு, யாருக்கும் தெரியாமல் பின்வாசல் வழியேத் தப்பி ஓடிவிட்டாள். மொத்தக் கிராமமும் அவளை வேட்டையாடத் தேடுகிறது. ஆனால் இரவு கவிந்து இருண்டு விட்டதால் அவளைத் தேட முடியவில்லை. விடிந்ததும் எல்லாத் திசைகளிலும் அவர்கள் சிதறி ஓடி மண்ணில் இருக்கும் அவளின் பாதத்தடங்களைப் பின் தொடர்ந்து அவள் போனத் திசையைக் கண்டு பிடித்தனர். அந்தப் காலடிச்சுவடுகள் கார்பெர்னம் இருந்த வழி நோக்கி இருந்தது. கதை போல அந்த இளைஞர்களில் ஒருவன் இதைச் சொல்லிக் கொண்டிருந்தான்.

    "என்ன ஒரு அதிஷ்டம்! ஐயோ! அவள் இங்கே வந்திருக்கிறாள்", நம் கார்பெர்னத்திற்கு. பிலிப் உற்சாகத்தில் குதித்தான். அவனது பெரிய உடலின் மார்புச் சதைகள் அங்குமிங்கும் குலுங்கியது. அவள் ஒருத்திதான் நம் சொர்க்கபுரியில் விடுபட்டுப் போனவள். ஆம், எப்படியான மாலைப் பொழுது அது! இன்றைக்கும் அழியாமல் ஞாபகம் இருக்கிறது. இப்பொழுது மட்டும் அந்தப் பேரழகியைக் காண முடிந்தால் போதும், என்ன இது! நான் அவளுக்காக ஏங்கத் தொடங்கி விட்டேனே!" பிலிப்பின் கிழிந்த வாயில் பற்கள் மின்னின.

    "அவளது சுனை ஓய்வு நாளில் கூடச் சுரந்து கொண்டிருக்கும், அவளுக்குப் புண்ணியம் உண்டாகட்டும்." சொல்லும் பொழுது  நாத்தனேலில் கன்னச் சதைகள் சிவந்திருந்தன. அவனின் திருத்தி வெட்டியத் தாடியில் தந்திரமானச் சிரிப்பு வெளித்தெரிந்தது. தான்  சவரம் செய்து, குளித்து, நன்கு உடுத்தி, நறுமணத்தைலம் பூசிக் கொண்டு சுத்தபத்தமாக அவளின் இல்லத்தை நோக்கி சென்ற ஒரு ரம்மியமான, சாயங்காலம் அவனது நினைவுகளில் அலையாடியது. தன்னைக் கைபிடித்து அவளை நோக்கி இழுத்துச் சென்றத் தன் சபலத்தை எண்ணினால் இன்றும் அவனால் புளங்காங்கிதம் அடையாமல் இருக்க முடியவில்லை. அவர்கள் மாக்தலாவில், மேரியின் இல்லத்திற்குச் சென்று அவளிற்காகக் காத்திருக்கும் வரிசையில் தங்களையும் ஒரு கண்ணிகளாக இணைத்துக் கொண்டனர்.  கடவுளுக்கு நன்றி! அது கூதிற்காலம் முடிந்துக் குளிர்காலம் முற்றிலுமாக ஆக்கிரமித்திருந்தப் பருவம். உண்மையில் பெரிதாகக் கூட்டமில்லை. நாத்தனேல் மட்டுமே மீதமிருந்தான் ஒரு ஓய்வு நாள் முடியும் வேளையில். அந்தப் பெரிய முற்றத்தில் தான் மட்டும் அமர்ந்திருந்து அழைப்பிற்காகக் காத்திருந்தான். திருப்தியாகவும் தன்னுள் குதூகலத்துடன் அவன் இருந்தான். "ஆம்! இது ஒரு மாபெரும் பாவம் தான்! ஆனால் ஒருவன் மாபெரும் பாவத்தைச் செய்யும் பொழுதும், கடவுளிடம் முழு நம்பிக்கைக் கொண்டு அதற்காக உள்ளிலிருந்து வருத்தப்பட்டானென்றால் கடவுள் அவனை மன்னிப்பார். அமைதியான, பாவப்பட்ட, துன்புறுத்தப்பட்ட, இன்னும் கல்யாணம் ஆகாத, நான் இத்தருணத்தில் என் வாழ்நாள் முழுதும் கூட அவளின் சிறிய அறைக் கதவை ஆசை தீரப் பார்த்துக் கொண்டு கிராமத்தின் கடைக்கோடி மூலையில் இருக்கும் அவளது இல்லத்தில் அமர்ந்திருக்கத் தயாராக இருந்தேன். வெளியே கிராமத்தான்கள் உரத்துப் பேசிச் செல்வதும், ஆடு மேய்ப்பவர்களின் கனமானக் காலடிச் சப்தமும், இங்கு நடக்கும் எதற்கும் தொடர்பின்றிப் பொருளற்றுக் கேட்டுக் கொண்டிருந்தது. என்ன மாதிரியானத் தருணம் அது! ஒரு முறை! ஒரே ஒரு முறையே ஒருத்தன் தன் வாழ்நாளில் அனுபவிக்க முடிந்த விலைமதிப்பில்லாத தருணத்தின் காலத்துளிகள் அவை. என்னுள் இருந்த எல்லாச் சங்கடங்களையும் ஒரு பொட்டலம் போல மடக்கி வெளியே எறிந்து விட்டு ஒரு ஆண் மகனாகக் காத்திருந்தக் கணம். அந்தப் பிரார்த்தனை நாளின் தித்திப்பான நொடிகளை இன்னும் கரைக்காமல், ஒரு இனிப்புப்பலகாரம் போல நக்கி நக்கி இன்புற்றுக் கொண்டிருக்கிறேன். அதுதான். நாம் சொன்னது போலக் கடவுள் மனிதனின் இந்தப் புனிதப் பிரச்சனையைப் பற்றிப் புரிந்து கொள்வார், மன்னிப்பார் என்ன!"

    எல்லாப் பிரசங்கங்களையும் அமைதியாகக் கேட்டு முடித்த முதிய செபெதீ! கைகளை உயர்த்திக் கத்தினார். "பிரச்சனைகள், பிரச்ச்னைகள்", என் வீட்டு முற்றத்தில் தான் இவர்கள் எல்லோரும் வரிசையாக வந்து தங்கள் பிரச்சனைகளைப் பேசி வம்பளந்து நேரத்தைக் கடத்துவார்கள். முதலில் புனிதர்கள், பின் விபச்சாரிகள் இல்லையேல் அழுது புலம்பும் மீனவர்கள், இப்போது இந்த பராபஸ். எங்கு போய் நான் முட்டிக் கொள்ள என்று எனக்கேத் தெரியவில்லை. அவர் மதுத்தொட்டியில் வெறுமனே நின்று கொண்டிருந்த இளைஞர்களைத் திரும்பிப் பார்த்து, என் அன்புப் பிள்ளைகளே, உங்கள் வேலையைக் கொஞ்சம் கவனித்தால் நல்லா இருக்கும், இந்த வீண் பேச்சுகள் நம் நேரத்தைத் தின்று கொண்டிருக்கிறது.

    வீட்டினுள் இருந்து இதனைக் கேட்டுக் கொண்டிருந்த சலோமியும், ஜோசப்பின் மனைவி மேரியும் , தங்களுக்குள் எதுவும் பேசாமல் திரும்பவும் தரையைப் பார்த்துக் குனிந்து அமர்ந்தனர். தன் சுத்தியலைத் தூக்கி எடுத்து வைத்து விட்டு, யூதாஸ் வாதிலை நோக்கிச் சென்றான். இது வரை அவர்கள் பேசிக் கொண்டிருந்தது, நடந்த நிகழ்வுகள் எல்லாவற்றையும் தன் மனதினுள் ஓட்டிக் கொண்டு வாயில் கதவின் அருகி நின்று ஏறிட்டான். ஒரு முறை திரும்பி முதிய செபெதீயை விழுங்குவதைப் போலக் குரூரமாகப் பார்த்தான். 

    வாசலிலிருந்து வெளியே, பலவிதக் குழப்படியான கூச்சல்கள். ஆண்களும் பெண்களும் கத்திக் கொண்டே புழுதி மண்டியப்பாதையில் ஓடுகின்றனர். புழுதி கிளம்பித் தெரு மங்கலாகத் தெரிகிறது. மது தயாரிக்கும் தொட்டியில் ஆண்கள் தங்கள் கால்களை அழுத்த ஊன்றிக் குதிக்க உந்துகின்றனர். "பிடி! அவளைப் பிடி! அவளைப் பிடி!" எனும் குரல்கள் வெளியிலிருந்து இப்பொழுது தெளிவாகக் கேட்கிறது. செபெதீ, திராட்சை மூடைகளைத் தூக்கி அளவையில் பார்த்து நிறுத்திக் குறித்துக் கொண்டிருக்கிறார். புழுதிப்படலத்தின் ஊடே ஒரு பெண் தன் உடைகள் தரையில் சரசரக்க, பதைபதைக்க நாக்கைக் கடித்துக் கொண்டே முற்றத்திற்குள் வந்து வீட்டிற்குள் புகுந்து விடுகிறாள். வீட்டின் உள்ளே திண்டில் கால்தடுக்கி சலோமியின் பாதங்களைத் தழுவித் தரையில் குப்புற விழுகிறாள்.

    "காப்பாற்றுங்கள், என்னைக் காப்பாற்றுங்கள், அவர்கள் என்னைத் துரத்துகிறார்கள்" அழுதுகொண்டே அப்பெண் இன்னும் எழுந்திருக்காமல் அவர்களை நிமிர்ந்து பார்த்து மருகுகிறாள்.

    "முதிய சலோமிக்கு அவள் யார் எனப் புரிந்தது, ஆனால் அவளை எழுப்ப முயற்சிக்கவில்லை. ஜீர வேகத்தில் ஜன்னல் கதவுகளை இழுத்துச் சாத்தினாள். தன் மகனைப் பார்த்து வேகமாகக் கதவை அடை என்று முடுக்கினாள்.

    "அப்படியே தரையில் குந்தி இரு, ம்ம்! முக்காடிட்டு உன்னை மறைத்துக் கொள். ம்ம்! சீக்கிரம்! இந்தா இந்தத் துணியை வைத்து மறைத்து, அந்த இருப்புப் பலகைக்குப் பின்னே போய் ஒளிந்து கொள். சலோமி பதைபதைப்புடன் கூறினாள்.

    ஜோசப்பின் மனைவி மேரி அவளைக் குனிந்து உற்று நோக்கினாள். வழிதவறிச் சென்ற அந்தப் பாவி மகளை, வருத்தத்துடனும், திகிலாகவும் பார்த்தாள். ஒழுக்கமாக வளர்க்கப்பட ஒரு பெண் எப்படி வழிதிரிந்து மானங்கெட்டு, மரியாதை இழந்து ஒரு அருவருப்பூட்டும் ஜந்து போல இன்று ஆகிவிட்டாள் என நினைத்து அவள் வேதனை உற்றாள். அதே நேரம் திரட்சியான ஒரு காட்டுமிருகம் போன்ற இந்தப் பெண்ணுடல், ஆண்களை எப்படி எளிதில் கவர்ந்துவிடுகிறது. அங்கங்களைக் காட்டும் அவளது உடுதுணியும், உயிருக்குப்பயந்து மாட்டிக் கொண்டிருக்கும் பொழுதும் சீண்டும் வனப்பும், முகத்தில் அழியாமல் இருக்கும் அலங்காரங்களும், விஷ உயிரினங்களுக்கே உரிய கொடுக்குகள், பற்கள் போன்று பயமும் ஈர்ப்பும் ஒருங்கே அவளிடம் இருக்கின்றன. ஆண்களும் விட்டில்கள் போல இவளின் எரிவில் விழுந்துவிடுகிறார்கள். தன் இருபது வயதில் இந்த மிருகம் என் மகனை,  ஒரு பேய் போல அல்லவா பிடித்து வைத்திருந்தது. ஆனால் மயிரிழையில் அவன் இவளிடமிருந்து தப்பி விட்டான். அவன் பெண்ணிடமிருந்து தப்பி விட்டான். ஆனால் கடவுளிடமிருந்து...நினைத்தவள் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள்.

    "ஏன் அழுகிறாய்? என் அன்பு மகளே!" முதிய சலோமி மாக்தலேனின் தலையில் தன் கைகளை ஆதுரத்துடன் வைத்து இரக்கமாகக் கேட்டாள்.

    "எனக்கு சாக விருப்பமில்லை அம்மா!, இந்த வாழ்க்கை எனக்கு அவ்வளவு பிடித்திருக்கிறது, நான் சாக மாட்டேன்" அவள் தன் உதடுகள் துடிக்க நடுக்கத்துடன் பதில் கூறினாள்.

    ஜோசப்பின் மனைவி மேரியும் அவளைப் பார்த்துக் கைகளை நீட்டினாள். உண்மையில் மாக்தலேனை அவள் வெறுத்தாலும், அவளைப்பார்த்து பரிதாபம் தான் வந்ததே தவிர அருவருப்பு தோன்றவில்லை. "பயப்படாதே, மேரி, கடவுள் உனக்குத் துணையிருப்பார். நீ சாக மாட்டாய்"

    "உங்களுக்கு எப்படித்தெரியும் மேரி?" ஒளிரும் கண்களுடன் மாக்தலேன் கேட்டாள்.

    "கடவுள் நமக்காக இன்னும் செவி கூர்ந்துக் காத்திருக்கிறார், வருத்தப்படுபவர்களை அவர் கைவிடுவதே இல்லை, கவலைப்படாதே", ஜீசஸின் அன்னை உறுதியாகக் கூறினாள்.

    அந்த மூன்று பெண்களும் ஒன்றாகத் தங்கள் வலிகளை, காயங்களை உணர்ந்து கொண்டு அமைதியாக இருந்தனர். "அவர்கள் வருகிறார்கள், இதோ இங்கே வந்து விட்டார்கள்" மேரி கமுக்கமானக் குரலில் தனக்குள் சொன்னாள். அவர்கள் தோட்டத்தைத் தாண்டி ஓட்டமும் நடையுமாகக் குதித்து வருகிறார்கள். முற்றத்தில் அமர்ந்திருந்த முதிய செபெதீயை அணுகி, வாசற்கதவிற்கருகில் ஒரு முரட்டு ஆசாமி சீற்றத்துடன் வருகிறான். அவன் உடல் முழுதும் வேர்வையில் நனைந்திருக்க, ஆவேசமாக உரக்கக் கத்தி வசை மாறி பொழிந்து கொண்டே அவருக்கருகில் வந்து நின்றான்.

    "ஹேய்! செபெதீ! நாங்கள் இஸ்ரவேலத்தின் கடவுளின் பெயரால், உன் அனுமதியின் தேவை இன்றி உள்ளே நுழைந்திருக்கிறோம்" மற்ற எல்லா ஒலிகளையும் அமிழ்த்தி, பராபஸின் குரல் மட்டுமே உயர்ந்துக் கேட்டது.

    அவன் சொல்லி முடிப்பதற்குள், அந்தக் கிழட்டு முதலாளி வாயைத்திறந்தார். "சாத்தியிருக்கும் அறைக்கதவை உதைத்துத் திற. உள்ளே போய் அந்த வேசை மகளின் முடியைப் பிடித்து என் வீட்டிலிருந்து வெளியே இழுத்து வா!"

    "வெளியே வா! வேசையே! வெளியே வா! பராபஸ் வசைபாடிக் கொண்டே அவளை இழுத்து வெளியே முற்றத்திற்கு வந்தான். அங்கே கூடி நின்ற மாக்தலாவின் மக்கள் ஏளனத்துடன், சிரித்துக் கொண்டே அவளைப் பார்த்தனர். பின் அதில் இருந்த இரு வலிய ஆண்கள் அவளைப் பிடித்துத் தூக்கினர். கூட்டத்தில் இருக்கும் ஆண்களின் வெறிகொள் பார்வை அவளைத் துளைத்தது. பாரபட்சம் பார்க்காமல் சிறுவர்களில் இருந்து பெரியக் கிழட்டு ஆண்கள் வரை அவளின் உடலைத் தொடுவதில், அதைக் கிழித்து நார் நாராக்குவதில் அத்தனை இச்சைக் கொண்டிருந்தனர். அவளைத் தூக்கியதும் அவளின் புட்டத்தை, மாரைப் பிடித்துக் கசக்கிப் பிதுக்குவதற்கு ஒரு கும்பல் குவிந்து ஓடியது. ஒரு பழைய, அழுகிய உபயோகிக்க முடியாத பொருளைக் கொண்டு போய் எரித்தழிப்பதைப் போல அவர்கள் அவளின் உடலை ஆரவாரத்துடன் ஊர்வலமாகத் தூக்கிக் கொண்டு சென்றனர். ஏரிக்கருகில் இருக்கும் சற்று ஆழமான பள்ளத்தில் அவர்கள்  அவளை இறக்கி விட்டனர். பள்ளத்தைச் சுற்றி மக்கள் சிதறி நாலாபுறமும் நின்றுத் தங்கள் மேலங்கிகளில் மறைத்து வைத்திருந்தக் கற்களைக் கைகளில் எடுத்துத் தயாராகினர். 

    இருக்கையிலிருந்து விரைவாக எழுந்த முதிய சலோமி, தன்னை இது நாள் வரைத் தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டிருக்கும் வலிகளால் உந்தப்பட்டு, தன் கணவனைத் திட்டுவதற்காக முற்றத்தை நோக்கி ஓடி வந்தாள்.

    "உம்மைப் பார்த்து உமக்கே வெட்கமாக இல்லையா!," அவள் வேகமாக, மூச்சிறைக்கக் கத்தத் தொடங்கினாள். உன்னை நம்பி உன் வீட்டிற்கு அடைக்கலம் தேடி வந்த பெண்ணை, உன் கண் முன்னாலேயே இந்த முரட்டுப் பயல்கள் உன் வீட்டிற்குள்ளேயே வந்து இழுத்துச் செல்வார்கள். நீயும் அதற்குத் துணை போகின்றாயே! என்ன மாதிரியான மனுஷனய்யா நீ! ச்ச்சீ! உனக்கு இரக்கம் என்பதே இல்லையா?"

    பின் அங்கே எந்த பாவமுமற்று நின்று கொண்டிருந்த தன் மகன் ஜேக்கப்பை, ஆத்திரமாகப் பார்த்தாள்.

    "நீ! நீயும் உன் அப்பனைப் போலத்தானே! உன்னைப் பார்த்தால் எனக்கே அவமானமாக இருக்கிறது. நீ என் வயிற்றில் தான் பிறந்தாயா என்று!" நேரடியாகப் பார்க்க முடியாமல் தலை குனிந்து நின்றிருந்தான் ஜேக்கப். "என்று தான் நீங்கள் திருந்தப் போகிறீர்களோ! இந்த வஞ்சக செயலிலிருந்து உங்களுக்குக் கிடைத்த  நற்பெயரைக் கடவுளிடம் போய்ப் பகிர்ந்து கொள்ளுங்கள் பாவிகளே! அதைச் செய்யுங்கள். உங்கள் விளைவுகளுக்கு பிராயச்சித்தம் தேடும் எண்ணம் இருந்தால், அந்த அபலைப் பெண்ணைக் கொல்லத் துடிக்கும் இந்தக் கிராமத்து மக்களிடமிருந்து காப்பாற்ற முயற்சி செய்யுங்கள். ஒரு பெண்ணை ஒரு ஒட்டு மொத்தக் கிராமமேக் கொல்லத் துடிக்கிறது. என்ன மாதிரியான ஜனங்கள் இவர்கள். ஏன் மனிதர்கள் நாம் இப்படிக் கீழ்மையான விலங்குகள் போல நடந்து கொள்கிறோம். சலோமியால் அதற்கு மேல் பேச முடியவில்லை. தொண்டைக் கமறி இருமினாள். மூக்கினை உறிஞ்சிக் கொண்டுக் கண்ணீர் வடிய, அவள், அவர்கள் இருவருக்கும் நடுவில் நடுங்கிக் கொண்டிருந்தாள்.

    "அமைதியாகுங்கள் அம்மா! நான் போகிறேன்" உலகில் தன் அன்னையின் சொல்லன்றி வேறு எதற்கும் அஞ்சாத ஜான் பதில் கூறினான். ஒவ்வொரு முறையும் அவள் கோபத்தில் அவனிடம் கத்தும் பொழுதெல்லாம் அவன் தன் பயத்தை விட்டொழித்து வெளிவந்துவிடுவான். ஏனெனில் அவளின் வார்த்தையை அவனால் அவ்வளவு எளிதில் தட்ட முடியாது. அது அவளின் குரல் மட்டும் அல்ல, அது காலங்காலமாக நம்மைத் தாங்கி நிற்கும் இந்த இஸ்ரவேல் பாலை மண்ணின் வலிமையான ஆதிப்பெண்ணின் வார்த்தை."

    "வாருங்கள்! போகலாம்! என்று தன்னுடன் நின்று கொண்டிருந்த பிலிப்பையும், நாத்தனேலையும் கைத்தூண்டி அழைத்தான் ஜேக்கப். பீப்பாய்களுக்கிடையில் யூதாசைத் தேடினான். ஆனால் அவன் முன்னமே அங்கிருந்து சென்று விட்டான்.

    "நானும் வருகிறேன்", செபெதீ எரிச்சலுடன் கூறினார். இங்கே இனிமேலும் தன் மனைவியுடன் நிற்கும் தைரியம் அவருக்கு இல்லை. குனிந்துத் தன் கோலை எடுத்துக் கொண்டு அவரும் அவர்களுடன் செல்லப் புறப்பட்டார். 

    "மாக்தலேன் அலறினாள். அவளது உடல் முழுதும் காயங்கள், கடித்தடங்கள், நகக் கீறல்கள். குழியினுள் அவள் அங்கும் இங்கும் ஓடுகிறாள். ஒரு வேட்டை விலங்கைப் பார்ப்பதைப்போல மகிழ்ச்சியும், களிப்புமாக சுற்றி மக்கள் கூட்டம் அவளைப் பார்க்கிறது. அவள் தன் கைகளால், தலையையும் முகத்தையும் மறைத்துக் கொண்டு ஓரிடத்தில் குந்தி அமர்கிறாள். திராட்சைத் தோட்டங்களில் அறுவடை செய்து கொண்டிருந்த இளைஞர்களும், இளம்பெண்களும், திராட்சை பாரங்களை ஏற்றி இறக்கும் திடமான ஆண் மகன்களும் தங்கள் வேலைகளை அப்படியே விட்டு விட்டு மாக்தலேனைப் பார்க்க ஒடினர். ஆண்களோ அவளின் பாதி வெளித்தெரியும் அரை நிர்வாண உடலை, ரத்தக் கோரையுடன்  பார்க்கும் ஒரு வித கிளுகிளுப்பான வாய்ப்பிற்காகவும், பெண்கள்,  அப்படி என்ன அவளிடம் ஈர்ப்பு இருக்கிறது, ஆண்களைக் கவரும் வகையில்  என்பதைக் கண்டறியவும், பல ஆண்களுடன் சல்லாபித்த அந்த அருவருப்பானவளை ஆசை தீர சபிப்பதற்காகவும் அங்கே வந்து கொண்டிருந்தனர்.

    பராபஸ் கூச்சலிட்டுக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து கையை உயர்த்தி அடங்கச் சொன்னான். தயாராக இருக்கும் மக்களைப் பார்த்து கல்லெறியச் சொல்வதற்கான ஆணையைப் பிறப்பிக்க முன்னே வந்து நின்றான். சரியாக அத்தருணத்தில் ஜேக்கப் அங்கு வந்தான். கொள்ளைக் காரக் கூட்டத்தின் தலைவனான பராபஸ்ஸை நோக்கி அவனைச் செல்ல விடாமல் பிலிப் அவன் கைகளை இறுக்கிப் பிடித்திருந்தான்.

    "எங்கே போகிறாய்? ஜேக்கப்!, நாம் எங்கே வந்து நிற்கிறோம் தெரிகிறதா? நாம் நால்வர் தான் இருக்கிறோம். அங்கே பார் மொத்தக் கிராமமும் நமக்கெதிரே வெறியுடன் நிற்கிறது. எதிர்த்தால் நமக்கு எந்த வாய்பப்பும் கிடைக்காது" பிலிப் பதற்றத்துடன் கூறினான்.

    ஆனால் தன் அன்னையின் கடுமையான வார்த்தைகளைத் தவிர எதுவும் அவன் காதுகளில் விழவில்லை. அவன் நிற்காமல் முன்னே சென்று கொண்டிருந்தான். "ஹேய்! பராபஸ்! கொலைகாரா! அவன் கத்தினான். நீ எங்கள் கிராமத்திற்கு வந்தது எங்கள் ஜனங்களைக் கொல்வதற்காகத்தானே? நல்லது! அப்படியென்றால் அந்தப் பெண்ணை விட்டுவிடு! அவளை என்ன செய்ய வேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்துக் கொள்கிறோம். மாக்தலா, மற்றும் கார்பெர்னத்தின் தலைக்கட்டுகள் அவளை விசாரணை செய்யட்டும். அவளது தந்தையான நாசரேத்தின் தூறவியும் வர வேண்டும். அது தான் நியதி!

    "என்னுடைய மகன் சொல்வது தான் சரி!" செபெதீ, இடைமறித்தார். அவரது கையிலிருந்தக் கோலை அழுத்தமாக மன்ணில் ஊன்றியிருந்தார். "அவன் சொல்வது தான் சரி, அது தான் நியதி" அவர் அவனுடைய வார்த்தைகளையே எதிரொலித்தார்.

    பராபஸ் தன் பெரிய முரட்டு உடலை முழுவதும் திருப்பி ஜேக்கப்பை நேருக்கு நேர் பார்த்து நின்றான். "நம் கிராமத்துத் தலைக்கட்டுகள்! இந்தக் கிழட்டுப்பயல்கள் எல்லாம் முடிவெடுக்கத் திராணியற்றவர்கள். இதோ இந்த செபெதீயும் அந்தக் கூட்டத்தில் தானே உண்டு. இவர்களையெல்லாம் நான் நம்ப மாட்டேன். எனக்கு என்னுடைய சொந்த நியதிகள் இருக்கிறது. அதை மீறத் தைரியம் உள்ள ஆண்பிள்ளைகள் முன்னே வாருங்கள். நமக்கெல்லாம் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் தான். நம் வலுவை நாம் மோதிப் பார்த்து முடிவெடுத்துக் கொள்வோம். என்ன கேட்கிறதா ஆண் பிள்ளைகளா!" என்று கூறித் தன் முஷ்டியை உயர்த்தி கைகளை முறுக்கி அவர்களைக் குத்துவதைப் போலக் காண்பித்து ஏளனமாகச் சிரித்தான்.

    கிராமத்து மக்கள் எல்லோரும் பராபஸ்ஸைச் சுற்றித் திரண்டனர். சிறுவர்கள் தங்கள் கைகளில் கவண்களையும், கல்லையும் வைத்துக்கொண்டு ஒரு படை போல குழியைச் சுற்றி நின்றுகொண்டிருந்தனர். அவர்களின் கொலை வெறி மிளிரும் கண்கள், சாவு! சாவு! செத்தொழி! என்று வசை பாடிக் கொண்டிருந்தது.

    பிலிப், நாத்தனேலைத் தூக்கிக் கொண்டு கூட்டத்தின் ஆரவாரத்திலிருந்து மெதுமெதுவாகப் பின் வாங்கினான். திரும்பி ஜேக்கப்பைப் பார்த்து "உனக்கு வேண்டுமானால் நீ போ! நாங்கள் இங்கேயே நிற்கிறோம். இது சுத்தப் பைத்தியக்காரத்தனம், எங்களை விட்டு விடு"

    "ச்ச்சீ! கோழைப் பிறவிகளா! கேவலமாக இருக்கிறது உங்களைத் துணைக்குக் கூட்டி வந்தது!

    "இல்லை! இல்லை! எங்களால் வர முடியாது! உனக்கு வேண்டுமானால் நீ போ!"

    "ஜேக்கப் அவனது தந்தையை ஒரு முறை பார்த்தான், ஆனால் அவர் அவன் கண்களைப் பார்த்தது இருமுவது போலப் பாவலா செய்து நெஞ்சைப் பிடித்துக் கொண்டார்.

"நான் கிழவனப்பா" அவர் சொன்னார்.

    "நல்லது! அதுதான் உமக்கும், உம் குடும்பத்திற்கும் நல்லது! எனக்கு எரிச்சல் வருவதற்கு முன் இங்கிருந்து ஓடிப் போய்விடுங்கள் முட்டாள் பயல்களா! என்று புருவங்களை உயர்த்திக் கைத்தூண்டிச் சொன்னான்.

    ஜான் தன் அம்மாவைத் தாங்கிக் கொண்டு அங்கே வந்து கொண்டிருந்தான். அவர்களுக்குப் பின்னே மேரி, ஜோசப்பின் மனைவி பின் தொடர்ந்தாள். இன்னும் அவள் அழுகையை நிறுத்தவில்லை. தாக்குண்டது போலத் தன் வாயைப் பொத்திக் கொண்டு விசும்பிக் கொண்டே வந்தாள். அவர்களது வருகையைப் பார்த்த ஜேக்கப், என்ன செய்வது என்று அறியாமல், கோபத்தில் கால்களால் நிலத்தில் மாறி மாறி மிதித்தும், ஓரிரு முறை நிலத்தில்  காறி உமிழவும் செய்தான். எதிரேத் தன் வெறிபிடித்த விவசாயக் கும்பலுடன் பராபஸ், அவர்களை அளக்கிறான். அவனுக்குப் பின்னே, முதிய சலோமி, எதுவும் பேசாமல், அந்தக் கொலைகார கூட்டத்தை அலட்சியத்துடன் பார்க்கிறாள்.

    "ம்ம்! தயாராகுங்கள்!" பராபஸ் கூட்டத்தைப் பார்த்துக் கட்டளையிட்டான். தன் மேலங்கியின், கைகளை மறைக்கும் துணியை மடித்து உருட்டிக் கல் எறிவதற்கு வாகாகக் குழியினைப் பார்த்தான்.

        "அவன் அவளைக் கொன்று விடுவான், அம்மா!" என்று அதிர்ச்சியில் சத்தம் போட்ட ஜான், தன் தாயினைத் தாங்கியிருந்த கைகளைத் தளர்த்தி ஜேக்கப்பை நோக்கிப் போக முயன்றான். சற்றுத் தடுமாறிய சலோமி அவனைப் பிடித்து நிறுத்தினாள்.

"பேசாமல் நில்! ஜான், நீ அங்கு இடைப்படாதே!" 

    திடீரென்று அங்கு தூரத் தொலைவில் இருவர் ஆரவாரமிட்டுக் கொண்டு வருகின்றனர். ஆனந்தக் கூச்சலிட்டு ஏரியின் விளிம்பிலிருந்து கூட்டத்தைக் கிழித்து உள்ளே நுழைகின்றனர்.

    மந்திரம் போல அவர்களின் குரலில் ஒரு சொல் திரும்பத் திரும்ப உச்சாடனம் ஆகிறது.

"ஓ! நம் இறைவன் வருகிறான்!" "நம் இறைவன் வருகிறான்"

    வெயிலில் குளித்து நனைந்து வரும் அந்த இளைஞனால் நிற்க முடியவில்லை. எதனாலோ ஆட்கொண்டது போல அவன் அங்கும் இங்கும் அலைந்து குதிக்கிறான். தன்னிலையற்ற அவன் வாயிலிருந்து அச்சொல் மட்டும் திரும்பத் திரும்ப அதிர்கிறது. அவன் கைகளைத் தலைக்கு மேலே ஆட்டி ஆட்டி நடனமிடுகிறான்.

"MARAN ATHA, MARAN ATHA", நம் இறைவன் வந்து கொண்டிருக்கிறான்" தொண்டைக் கிழிய மொத்தக் காதுகளுக்கும் கேட்கும்படிக் கத்திக் கொண்டிருந்தான்.

    "யார் வருகிறார்கள்" அவர்களின் வெறியாட்டு மொத்தக் கூட்டத்தையும் தொற்றிக் கொண்டது. அங்கு நின்றிருந்த மக்கள் அனைவருமே அழத் தொடங்கினர். தங்கள் கைகளை உயர்த்தி வானத்தைப் பார்த்துக் கதறினர். தங்களின் வெகு நாள் பிரார்த்தனைகளின் சொற்கள் அவர்களுக்குள் நாலாபுறமும் சிதறிக் குமைந்தது.

    "நமது இறைவன்" சொல்லிக் கொண்டே அந்த இளைஞன் பாலைவனத்தின் திசையை நோக்கிக் கை காட்டினான். "அதோ! நம் இறைவன்"

    எல்லோரும் அவன் கைசுட்டியத் திசையை நோக்கினர். கிரக நேரச் சூரியன் மறைவது போலத் திடீரென எங்கும் நிழல் பரவியது. வெக்கை கொஞ்சம் கொஞ்சமாகத் தன் கைகளைத் தாழ்த்தியது. ஏரிக்கரையின் மேடான பகுதியிலிருந்து, தொலைவில் ஒரு புள்ளியாய் அவர்களைப் பார்த்து வந்து கொண்டிருக்கிறான். முழுக்க வெண்மை நிற அங்கியை அணிந்திருந்த அவன், மடாலயத்திலிருந்து வரும் துறவியைப் போலத் தோன்றியது. ஏரிக்கரையின் அலைமடிப்புகளில், பாறைகளில் தொற்றிக்கொண்டிருக்கும் பாசிகளின் பலவண்ண நிற பேதத்தின் ஊடாக வெண்ணிறம் சூடிக் கொண்டு அந்த மனிதன் அவர்களை நோக்கி வருகிறான். அதிலிருக்கும் சிவப்பு நிறப்பாசிக் கொத்தைப் பறித்து முகர்ந்து பார்க்கிறான். சிலக் கடற்காகங்கள் கரையில் படர்ந்திருக்கும் கூழாங்கற்களில் தத்தித்தத்திச் வருகிறது. அது அவன் வருகையின் நிமித்தம் சற்று விலகி நின்று பார்க்கிறது. 

    முதிய சலோமி, தன்  நரை முடிததும்பும் தலையை உயர்த்தி வீசிக் கொண்டிருக்கும் காற்றை நுகர்கிறாள் 

    "யார் வருகிறார்?" அவள் தன்மகனைப் பார்த்துக் கேட்டாள். "காற்றில் சுகந்தத்தின் நறுமணம், ஏதோ ஒரு அபரிவிதமானத் தூய இருப்பினை அக்காற்றின் வழித் தான் உணர்வதாகச் சொல்கிறாள்.

    "என் இருதயம் வெடிப்பதற்குத் தயாரக இருக்கிறது, அம்மா" வருவது அவனாகத் தான் இருக்க வேண்டும். ஜான் கூறினான்.

"யார்?"

"ஸ்ஸ்ஸ்ஸ்.......,பேசாதே அம்மா!"

    "அவனுக்குப் பின்னால் வருகிறார்களே அவர்கள் யார்? ஒரு பெரும்படையையே அவன் கூட்டி வருவது போலல்லவா இருக்கிறது"

    "அவர்கள் பாவப்பட்டவர்கள் அம்மா!, திராட்சைத் தோட்டங்களில் இலைகளைப் பொறுக்கிப் பிழைக்கும் அடிமைகள், அவர்கள் ஒன்றும் சேனைகள் அல்ல, பயப்படாதே!"

    உண்மையில் அவனைப் பின் தொடர்ந்து இந்தக் கந்தல் துணி அணிந்து வரும் பாவப்பட்ட ஏழை ஜீவன்களின் திரள் தான் அவனின் பெரும்படை போல இருக்கிறது. திடீரென்று திரளாக வந்த ஆண்களும், பெண்களும், அவர்களின் குழந்தைகளும் அறுவடை நடக்கும் திரட்சைத் தோட்டங்களை நோக்கித் தங்கள் கூடைகளையும், பைகளையும் தூக்கிக்கொண்டு ஓடினர். அவர்கள் அன்றைய விளைச்சலுக்கானக் கூலியை, அந்தந்த நிலஉடைமையாளர்களிடமிருந்து வாங்குவதற்குத்தான் அவர்களுக்கு இத்தனை அவசரம்.  ஒவ்வொரு வருடமும், திராட்சை மற்றும் ஆலிவ் விளைச்சல் செழித்திருக்கும் அறுவடை சமயங்களில், கலீலியின் பாலை நிலத்திலிருந்து பஞ்சம் பிழைக்க வரும் இந்த பசித்த நாடோடி மக்கள் தான் தங்கள் முழு உழைப்பினையும் கொடுத்து முதலாளிகளுக்கு நல்ல செழிப்பான அறுவடை ஈட்டிக் கொடுக்கிறார்கள். அதற்குக் கூலியாக குறைந்த பட்சக் கோதுமை தானியங்கள். திராட்சைகள், ஆலிவ் பழங்களை வாங்கிக் கொண்டு தங்கள் பிழைப்பை ஓட்டுகிறார்கள். வருடா வருடம் விளைச்சலில் இத்தனை அளவை அவர்களுக்குக்  கூலியாக வழங்க வேண்டும் என்பது இஸ்ரவேலத்தில் எழுதப்படாத விதி.

    வெண்ணிற ஒளி போல வரும் அந்த மனிதன் ஓரிடத்தில் நின்று தூரத்தில் தெரியும் மக்கள் கூட்டத்தைப் பார்க்கின்றான். அந்தப் பெருங்கூட்டம் அவனுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. அவன் அதைப் பார்த்துப் பயப்படவும் செய்கிறான். "நான் திரும்பப் போய்விடுகிறேன்; திரும்பப் பாலைவனத்திற்கே போய்விடலாம், அதேப் பழையப் பிரச்சனை அவனை அலைக்கழிக்கிறது. இந்த மனிதர்களின் உலகில் என்னால் இருக்க முடியாது, நான் திரும்பவும் என் கடவுளின் பிரார்த்தனைகளின் உலகிற்குத் திரும்பி விடுகிறேன். திரும்பவும் அவனது விதி ஒரு சிக்கலானக் கயிற்றில் ஊசலாடுகிறது. "எந்த வழியில் நான் செல்ல வேண்டும். முன் நோக்கியா! இல்லை பின் நோக்கியா!"

    குழியினைச் சுற்றி நின்று கொண்டிருந்த அனைவருமே அசைவற்று அவனின் வருகையை எதிர் நோக்கி நிற்கின்றனர். ஜேக்கப்பும் பராபஸும் இன்னும் எதிரெதிரே ஒருவரை ஒருவர் வெறித்து, தங்கள் முஷ்டிகளை உயர்த்திப் பிடித்து தாக்குவதற்குத் தயாராக முன்னேறுகின்றனர். குழியினுள்ளிருக்கும் மாக்தலேன் தன் முகத்தை உயர்த்தித் திரளாய் நிற்கும் கூட்டத்தைப் பார்க்கிறாள். வாழ்வா? சாவா! எனும் இருமையினுள் சதா பந்தாடப்பட்டுக் கொண்டே இருக்கும் தன் விதியை எண்ணி நொந்து கொண்டும், அங்கிருந்து தப்பிக்க ஏதாவது வழி கிடைக்காதா என ஏங்கியும் சுற்றி சுற்றிப் பார்க்கிறாள். மக்களோ தங்களை மறந்து எங்கோ எதிலோ கருத்தூன்றி அசைவற்று நிற்பதைப் பார்த்துத் திகைத்துக் குழம்பியும், குழியிலிருந்து மேலேறிச் செல்ல எதாவது திண்டுபோல இருந்தால், குதித்து ஓடி விட வாய்ப்புண்டா என்ற யோசனையிலும் அங்கும் இங்கும் ஓடுகிறாள். எங்கும் அமைதி பற்றிக்கொண்டு இருக்கிறது. திடீரென அவள் ஒரு சிறிய மணல் திண்டில் கால் வைத்துக் குதித்து எம்பி எம்பிக் கத்துகிறாள், "காப்பாற்றுங்கள்!".

    வெள்ளை அங்கி அணிந்து வரும் மனிதனால் அக்குரலைக் கேட்க முடிகிறது. மிகவும் பரிசயமான அக்குரல் அவனைப் பிறள வைக்கிறது.

    "அது மாக்தலேன்" "மாக்தலேன்" அவளை நான் காப்பாற்ற வேண்டும்" அவன் தனக்குள் சொல்லிக் கொண்டே அக்குரலின் திசை நோக்கி ஓடி வருகிறான்.

    அவன் அந்த மக்கள் திரளை நோக்கி அருகே வந்து விட்டான். அவர்கள் அனைவரும் எதோ துஷ்ட மிருகம் பீடிக்கப்பட்டதைப் போல கோபாவேசத்துடன், உயிரை வதைத்துக் கொல்லும் வன்மம் மிகுந்த தீக்கண்களுடன் குழியினைச் சுற்றி நின்று கொண்டிருப்ப்பதைப் பார்க்கின்றான். அவர்களின் பலப்பல முகங்கள் அவனுள் ஊடாடுகிறது. அவன் ரத்தமும் சதையுமாகத் தன் முன் நிற்கும் மனிதத்திரள் ஒவ்வொன்றிற்காகவும், வருத்தமும் துக்கமும் படுகிறான். அவனால் தாங்கிக் கொள்ள முடியாத அன்பின் பிரவாகம் அவனுள் ஊற்றெடுக்கிறது. சற்று முன்பிருந்த உணர்ச்சிகள் முற்றிலுமாகக் குலைந்து தன்னைப் போலவே அம்மக்களையும் ஒரு பெரும் கனிவுடன் நோக்குகிறான். அது ஒரு செய்கையோ, பாவனையோ அல்ல. அவனால் அதனை யூகிக்க முடியவில்லை. அது அவனை மீறி அவனுள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதன் கட்டுப்பாடின்மையின் விசையே அவனை இழுத்துச் செல்கிறது. "இவர்கள், இந்த மனிதர்கள் ஒவ்வொருத்தரும் என் சகோதரர்கள். அவர்களுக்கு அது தெரியவில்லை, அதனாலேயே அவர்கள் துன்பப்படுகிறார்கள், பாவச்சழுக்குகளில் வீழ்கிறார்கள். ஆனால் நான் மிக மிக அணுக்கமாக இந்த ஒவ்வொரு மனித உயிரையும் என்னுள் உணர்கிறேன். ஒரு வேளை இம்மனிதர்கள் இதனை உண்மையாகத் தாங்களும்  உணர்ந்து விட்டால், அவர்கள் பரஸ்பரம் அன்பு கொள்வார்கள், கட்டிப் பிடித்து முத்தமிடடுவார்கள், அங்கு என்ன ஒரு இன்பமயமான ஒரு உலகம் உருவாகிடும்"

    கடைசியாக அவன் அங்கு வந்துசேர்ந்தான். கூட்டத்திற்கு அருகிலிருந்த சிறியப் பாறைக் குன்றத்தின் மேலேறி நின்று அவர்களை முழுதாகப் பார்த்தான். சொல்! ஒரு மகத்தான சொல்! அச்சொல்லின் ஒன்றின் பலதின் பல்லாயிரம் துளிகளின் ஒருத்துளியாக அவனுள்ளிருந்து துடித்துக் கொண்டிருந்தது அச்சொல். அவன் வாயைத்திறந்தான். அது தன்னைக் வெளிப்படுத்தியது.

"சகோதரர்களே!"

திகைத்துப் போன மக்கள்! வாயடைத்து நின்று கொண்டிருந்தனர்.

"சகோதரர்களே!" ஒரு பீறிடலாய், உடைப்பாய், திறப்பாய், பல்கிப்பெருகும் வித்துக்களாய் அச்சொல் மறுபடியும் வெளிப்பட்டது. 

"சகோதரர்களே! உங்களைக் கண்டதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்"

    "நல்லது, ஆனால் எங்களுக்கு உன்னைக் கண்டதில் எந்த மகிழ்ச்சியுமில்லை, வெறுப்புதான் தலைக்கேறுகிறது சிலுவைகள் செய்யும் துரோகியே". பராபஸ் குனிந்து ஒரு பெரிய உருளைக்கல்லை எடுத்துக் கொண்டு அவனைப் பார்த்து பதிலளித்தான்.

"என் மகனே!" உருகி வழியும் அழுகையுடன் மேரி ஜீசஸை அணுகி அவனைத்  தன் மாரோடு இழுத்து அணைத்துக் கொண்டாள். தன் மார்புச்சூட்டில் அவனைப் பொத்தி வைத்து சிரித்தாள், அழுதாள், விம்மினாள், ஏங்கி ஏங்கி மூச்சிறைத்தாள். தன்னுள் அப்படியே அவனைப் புகுத்த வாய்ப்பிருந்தால் அவள் அவனை அமிழ்த்திப் புதைத்திருப்பாள். ஆனால் அவனோ அவளிடம் எதுவும் பேசாமலவள் முகத்தைக் கூட ஏறிட்டுப் பார்க்காமல், இறுக்கிப்பிடித்திருந்த அவளின்  கைகளை விலக்கி பராபஸை நோக்கிச் சென்றான்.

    "பராபஸ்! என் சகோதரா! உன்னைப் பார்த்தது எனக்கு எவ்வளவு மகிழ்வளிக்கிறது தெரியுமா!. நான் பேரன்புடன் உங்களிடம் ஒரு செய்தியைச் சொல்ல வந்திருக்கிறேன்"

    "அருகில் வராதே" கடுமையானக் குரலில் சொன்னவன், நின்ற இடத்திலிருந்து சற்று விலகிப் பின்னால் குழியினுள் இருக்கும் மாக்தலேனை மற்றவர்களின் பார்வையிலிருந்து மறைக்கும் வண்ணம் நின்று கொண்டான். ஆனால் தன் அன்பிற்குரியவனின் குரல் அவளுக்குக் கேட்டது. அவனின் முகத்தைக் காணத் தன் ரத்தம் வழியும் முகத்துடன் குதித்துக் குதித்துப் பார்க்கிறாள்.

    "ஜீசஸ்", என்னைக் காப்பாற்று". அது வெறும் அபய விளி இல்லை. அவள் தான் நொதிக்கும் குழியிலிருந்து அவன் ஒருவனே தன்னை வெளியேற்றும் வழி அறிந்தவன் என்பதை தீர அறிவாள். பயத்தின் பொருட்டில்லாமல் தன்னை அவனிடம் ஒப்புவித்துவிடலாம் எனும் தூய அன்பின் குரல் அது.

    ஒரு அடி முன்னே எடுத்து வைத்து அவன் பள்ளத்தின் விளிம்பிலிருந்து கீழே பார்த்தான். மாக்தலேன் மேலே ஏறுவதற்காக, ஒரு பாறையைப் பற்றிக்கொண்டு கால்களால் உந்தித் தன் கையை உயர்த்திக் காட்டுகிறாள். அவளின் கைகள், அதன் விரல் நுனிகள் அவனுக்குத் தெரிகின்றன. அவன் குனிந்துத் தன் கைகளை அவளுக்காக நீட்டினான். அவ்விரல்கள் ஜீசஸின் விரல்களுடன் இறுக்கமாகப் பிணைந்து கொண்டது. அவன் அவ்ளைப் பிடித்து ஒரே உந்தில் தூக்கிப் பள்ளத்திற்கு வெளியே, மண்ணில் அமர்த்துகிறான். உடல் முழுதும் கொப்பளிக்கும் காயங்களின் வேதனையுடன் அவள் தன் உடுதுணியால் நெற்றியின் இடது ஓரத்தில் சொட்டும் ரத்ததத்தை அழுத்தித் துடைக்கிறாள். ரத்தமும் , மண்ணும், வியர்வையும் அவளின் உடையில் திட்டுத் திட்டுகளாக ஒட்டியிருந்தது.

    பராபஸ் சற்றும் தாமதிக்காமல் முன்னே வந்து தன் கால்களால், தரையில் அமர்ந்திருந்த அவளின் முதுகில் மிதித்து, தரையோடுத் தரையாக அவளைத் தேய்த்து அழுத்திக் கத்தினான். "இவள் எனக்குச் சொந்தமானவள்"! தன் கையிலிருந்த கனத்தக் கல்லை மேலே உயர்த்தி, "நான் இவளைக் கொல்வேன்". இவள் இறைவனுக்கானப் பிரார்த்தனை நாளை மாசுபடுத்தி விட்டாள். "பாவத்திற்குச் சம்பளம் மரணம்" 

    "மரணம்! மரணம்! கூடி நின்ற மக்கள் கூட்டம் ஒருமித்து ஊளையிட்டது. அவர்கள் கைகளில் கூர்மையான மற்றும் உருளைக் கற்கள் இருந்தன, பற்களைக் கடித்துக் கொண்டு ஆத்திரம் பொங்க அவர்கள் அலறினர். ஆனால் ஒரு குழப்பம். அவர்கள் கல்லை எறிய கைகளை உயர்த்தவில்லை. தங்களுக்கான ரட்சிப்பின் வழியை அது குலைத்துவிடுமோ என்ற பயமும் அவர்களிடம் இல்லாமல் இல்லை. ஆனால் ஒருவித கும்பல் மனப்பான்மையில் அவர்கள் ஒன்றாகக் கத்துகின்றனர். யாராவது ஒருவர் மாற்றிப் பேசினால் அவர்கள் ஒருவேளை அவர்களின் சொல்படி நடந்து கொள்வதற்கே வாய்ப்புகள் அதிகம். தங்களுக்குள் அவர்கள் வாதிட்டுக் கொண்டும், சிலபேர் இன்னுமே இந்த நிகழ்பவைகளுக்குச் சம்மந்தமில்லாதது போல, தங்களுக்குள் கேலியும், கிண்டலும் பேசிக் கொண்டும், மாக்தலேனைப் பரிகாசம் செய்து கொண்டும் இருந்தனர். உண்மையில் யாருக்கும் எதன் மீதும் பெரிய நம்பிக்கை ஏற்படவில்லை. ஆட்டுமந்தையினைப் போன்ற இந்த ஜனங்கள், ஒருவன் என்ன செய்கிறானோ அதனை மற்றவனும் பிரதி செய்தால் போதுமானது என்று நினைப்பவர்கள். உள்ளூறப் பயந்த பிறவிகள். உண்மையானக் கோபமோ, வெறுப்போ, அன்போ, கருணையோ, இரக்கமோ ஏதும் அவர்களிடமில்லை. அந்தந்த சூழ்நிலைகளே அவர்களிடம் அதன் குணாதீசியங்களைத் தீர்மானிக்கின்றன. புகை போல எழும்பி அடங்கும் இம்மக்கள் கூட்டம் தற்போது என்ன செய்வது என்பதை இன்னுமே தீர்மானிக்காமல் அங்கு நின்று சலம்பிக் கொண்டிருந்தது.

    "மரணம்!" செபெதீயும் கூட அழுது கொண்டேக் கத்தினார். ஆனால் அவருடையப் பார்வை புதிதாக அங்கே வேலை செய்ய வந்திருக்கும் ஏழை ஆண்கள் மற்றும் பெண்களின் கூட்டத்தை நோட்டமிட்டது. அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் புதியவர்கள் நிச்சயமாக நமக்கு மிகவும் உதவிகரமாக இருப்பார்கள். மிகக்குறைந்த கூலிக்கு நல்ல உழைப்பை அவர்களிடம் நாம் உறிஞ்சி விடலாம் என்று தனக்குள் இயல்பாகக் கணக்குகள் இட்டுக் கொண்டிருந்தார். 

    "ஆம்! மரணம்! மரணம்! அவர் தன் கையிலிருந்து கோலை உயர்த்தி ஆட்டி, அத்தருணத்தை ஆகோசித்தார்.

    ஜீசஸ், பரபாஸை மேலும் முன் நகராதபடி தடுத்து நிறுத்தினான். "பராபஸ்" சாந்தமாகவும், கவலையுடனும் அவன் விளித்தான். "கடவுளின் கட்டளைகளை நீ ஒரு முறையாவதுக் கீழ்படிந்து மீறாமல் நடந்து கொண்டிருக்கிறாயா?" உன்னுடைய வாழ்நாளில் ஒரு முறைக் கூட நீ திருடவோ, கொலை செய்யவோ, பிறன் மனை நோக்கவோ, இல்லை பொய்யோ சொல்லாமல் இருந்திருக்கிறாயா?"

    ஜீசஸ் நின்றிருந்த இடத்திலிருந்துத் திரும்பி ஊளையிட்டு ஆரவாரிக்கும் மக்கள் கும்பலைப் பார்த்தான். அங்கே  நின்று கொண்டிருந்த ஒவ்வொரு முகங்களையும் தனித்தனியே உற்றுக் கவனித்தான். அவனது துளைக்கும் பார்வை அவர்களை உள்ளீடற்றதைப் போலக் கடந்து செல்வதாக அவர்கள் உணர்ந்தனர். அவனின் கண்களைப் பார்க்கும் தைரியம் இல்லாமல் அவர்கள் குனிந்து நின்றனர். ஆனால் கைகளிலிருந்த கற்களை இன்னும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    "உங்களில் யார் பாவம் செய்யவில்லையோ, அவர்கள் முதலில் கல்லெறியுங்கள்!"

    அவர்கள் பின் வாங்கினர். கூர்மையான அவனின் தகிக்கும் பார்வை அவர்களின் ஞாபகங்களை, கடந்த காலத்தை, அவர்கள் மட்டுமே மறைத்து வைத்திருந்த அந்தரங்கமானத் தீய்மைகளைக் கிளர்த்திவிட்டது. தங்களுக்குள் சமாதானம் அடைந்துகொள்ளும் நற்செயல்கள் என்ன செய்தோம் என அகத்தினுள் துருவிக் கொள்ள, மேலும் மேலும் கீழ்மைகளின் நினைவுகள் மட்டுமே அதனுள் இருந்து வெளித்தெரிவதால் அவர்கள் நிலைகுலைந்தனர். இக்கேள்வியின் அர்த்தப்பாடு என்பது தங்களின் மொத்த வாழ்க்கையையே அடகு வைக்கச் சொல்கிறது என்பது அவர்களுக்குப் புரிந்தது. தீர்ப்பு நாளில் தான் எவ்வாறு இறைவனின் முன் ஒரு புழுவினைப் போல உழலப் போகிறோம் எனும் பலதரப்பட்ட எண்ணங்களின் சுழல்களில் அவர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் தன்னைப் போல மற்றவர்களின் செயல்களையும் சமமாக ஒப்பிட்டு அப்படி ஒன்றும் தான் பெரிய கீழ்மையினைச் செய்து விடவில்லை, நம் பாவங்களும், கீழ்மைகளும் மன்னிக்க முடிந்த குற்றங்களே, கருணை மிக்க இறைவன் நிச்சயமாகத் தங்களை மன்னிப்பான் என்று சமாதானமும் அடைந்தது. ஆனால் தம்மில் பாவம் செய்யாத ஒருத்தர் யார் இருக்கிறார். அவர்களுக்கு அக்கேள்வியின் அர்த்தம் புரிந்தும் அதன் அபத்தம் அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. அதனால் அவர்கள் எதிர்த்து எந்தக் குரலும் எழுப்பாமல் அமைதியாகப் பின் வாங்கினர். தன் கைகளிலிருந்தக் கற்களை அப்படியே நின்ற இடத்திலேயே கீழே போட்டனர்.

    நிலைமை தலைகீழாகிக் கை மீறிப் போவதை உணர்ந்த செபெதீ கூட்டத்தை நோக்கி ஆத்திரத்துடன் விரைந்தார். திரும்பவும் ஜீசஸ் அதே சாந்தமானக் குரலில் எந்த ஏற்ற இறக்கமுமற்று அவர்களை நோக்கிக் கேட்கிறான், அவனது பார்வை அங்கே நின்று கொண்டிருந்த ஒவ்வொருத்தரின் அகத்தைக் குத்தி உள்ளே செல்லும் கூர்மையுடனும், அனுதாபத்துடனும் இருந்தது.

"உங்களில் யார் எந்தப் பாவமும் செய்யவில்லையோ, அவர்கள் முதலில் கல்லெறியுங்கள்!"

"நான் இருக்கிறேன்" கூட்டத்தை முறித்து உள்ளே வந்தார் செபெதீ. பராபஸ் உன்னிடம் இருக்கும் கல்லை என்னிடம் கொடு. அப்பாவித்தனம் என்றும் பயமற்றதுஎன்று நான் நிரூபிக்க வேண்டும். அதனால் நான் முதலில் எறிகிறேன்"

    பராபஸ் சந்தோஷமாகக் கல்லை அவரிடம் கொடுக்க முன்னே அடி எடுத்து வைத்தான். செபெதீ கீழே குனிந்து மாக்தலேனைப் பார்த்து, தன் கையில் இருக்கும் உருளைக் கல்லை உருட்டிப் பார்த்து அதன் எடையைக் கணித்துக் கொண்டு, குறிவைத்து சரியாகத் தலையில் எறிவதற்காகத் தயாரானார். அவள் தரையில் கைகளால் உந்தித் தவழ்ந்து வந்து, நின்று கொண்டிருந்த ஜீசஸின் கால்களைப் பற்றிக் கொண்டு அவனுக்குப் பின்னே மறைந்து கொண்டாள். அவனைத் தொட்ட அந்தக் கணம் அவள் அமைதியானாள், அவளின் பயங்கள் பறந்து போயின. தன்னை யாராலும் கொல்ல முடியாது என அவள் தீர்மானமாக நம்பினாள். விசும்பலை நிறுத்திக் கொண்டு, தன் விரல்களினாள் தொட்டுக் கொண்டிருக்கும் ஜீசஸை, அவனின் மானசீகமான அணுக்கத்தை மேலும் மேலும் தன்னால் முடிந்த வரைப் பெருக்கிக் கொண்டாள்.

    சற்றுப் பெரிய உடல் கொண்ட வளர்த்தியான ஒரு நாடோடி, கூட்டத்திலிருந்துக் குதித்து செபெதீயை நோக்கி வந்தான்.

    "ஹேய்! செபெதீ!, கடவுள் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். தெரியுமல்லவா, உனக்கு. உன் கைகள் செயலிழந்துப் போய்விடும். கை உயர்த்துவதற்கு முன் நன்றாக யோசித்துக் கொள், உனக்குப் பயமாக இல்லை! 

"நீ எங்களைப் போன்ற ஏழைகளின் உழைப்பைச் சுரண்டி லாபம் பார்க்கவில்லை!"

"நீ பாவப்பட்டவர்களின் திராட்சைத் தோட்டத்தைக் குறைந்த விலைக்கு ஏலம் எடுத்து கொள்ளை லாபம் சம்பாதித்து உன் வயிற்றை ரொப்பிக் கொள்கிறாய், மாறாக அவர்களை அடிமைகளைப் போல நடத்தி, நீ கொடுப்பதை மட்டுமே அவர்கள் புகாரில்லாமல் வாங்கிச் செல்லும் சூழலை உருவாக்கி, அவர்களை உன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாய்"

"நீ இதுவரை இரவு நேரங்களில், எந்த விதவைப் பெண்கள் வீட்டிற்கும் சென்றதில்லையா என்ன?"

    கேட்டுக் கொண்டிருந்த அந்த வயதானப் பாவியின் கைகளில் இருந்தக் கல்லின் கனம் கூடிக் கொண்டே இருந்தது. தந்திரமான அவரது கண்களில் பயத்தின் ரேகைகள் தெரிய ஆரம்பித்தது. திடீரென உடைந்து அழ ஆரம்பித்தார். தன் கைகள் பலவீனமாகத் தொங்கியது, அதிலிருந்த கல் நழுவி அவரது கால்களில் விழுந்து நிலத்தைத் தழுவியது.

    அந்த நாடோடி குதூகலமாகக் கத்தத் தொடங்கினான். "அற்புதம்! இது அற்புதம்!. மாக்தலேன் பாவம்! அவள் ஒரு அப்பாவிப் பெண்!"

    பராபஸ்ஸிற்கு ஆத்திரம் பொங்கியது. தழும்புகள் கொண்ட அவனது அகோரமான முகம் வெறியில் சிவந்தது. விரைந்து மேரியின் மகனை நோக்கிச் சென்றவன், தன் வலுவானக் கையை உயர்த்தி ஜீசஸின் கன்னத்தில் அறைந்தான். ஆனால் உணர்ச்சிகள் எதுவுமே வெளிப்படாது ஜீசஸ் அமைதியாகத் தன் மறுகன்னத்தைக் காட்டினான்.

    "ம்ம்! இன்னொரு கன்னத்திலும் அறைந்து விடு, பராபஸ், என்னருமை சகோதரா!" ஜீசஸின் குரலில் கனிவு கூடியிருந்தது.

    பராபஸ்ஸின் ஓங்கியக் கை உணர்ச்சியற்று, ஒரு உயிரில்லாப் பொருள் போல தோள்களில் குலுங்கியது. அவனது கண்கள் ஜீசஸிந் முகத்தை நேருக்கு நேர் பார்த்தது. யாரிந்த மனிதன்?  ஒரு பிசாசா! மனிதனா! இல்லை சாத்தானா! அவன் குழப்பமடைந்தான். நிதானிக்க முடியாமல் சற்றுப் பின்னே நகர்ந்து நின்றான்.

    "இன்னொரு கன்னத்திலும் அறைந்து விடு, என் சகோதரா!" மேரியின் மகனின் கண்கள், பராபஸ்ஸை எந்த நோக்கமுமற்ற, களங்கமின்மையுடன் பார்த்தது.

    அச்சமயத்தில் யூதாஸ் அருகில் மறைந்து நின்றிருந்த ஒரு அத்திமரத்தின் நிழலில் இருந்து வெளியே வந்தான். வெகு நேரமாக அங்கே நின்று கொண்டு நடப்பதை நோட்டமிட்டுக் கொண்டிருந்தான் அவன். எல்லாவற்றையும் பார்த்திருந்தாலும் ஒரு சொல் கூடச்  சொல்லவில்லை. மாக்தலேனை கொலை செய்தாலும் இல்லா விட்டாலும் அதில் அவனுக்குப் பெரிய வேறுபாடில்லை. ஆனால் அந்த ஏழை நாடோடி, செபெதீயின் முகத்திரையைக் கிழித்து அவனின் பாவங்களைப் பட்டியலிட்டு மக்களின் முன் பிரகடனப் படுத்தியதை அவன் கவனமாகக் கேட்டான். அப்பொழுது மக்களின் முகங்களில் உருவாகிய எண்ணங்களின் அலைவோட்டத்தை அவன் புரிந்து கொள்வதற்காகத், தான் மறைந்து நின்றிருப்பதே சரியானது என்று அங்கேயே அசையாமல் நின்றிருந்தான். ஏரிக்கரையின் மேட்டுப்பகுதிலியிருந்து பாறைகளைப் பிடித்து உந்தி ஏறி வந்து கொண்டிருந்த ஜீசஸின் அந்த வெண்மை நிறத் தோற்றத்தைப் பார்த்ததும், யூதாஸின் மனத்தில் கட்டுப்படுத்த முடியாத ஒரு உணர்வுப்பெருக்கு உருவாகியது. அவனின் அகம் துடிக்கத் தொடங்கியது. எல்லா முறையும் என்னை இந்த மனிதன் ஆச்சரியப் படுத்தி, ஆட்கொண்டு விடுகிறான் என்று நினைத்தவன் அவன் இம்மனிதர்களுக்காக அப்படி என்ன செய்தியை வைத்திருக்கிறான் என்றும்,  ஒரு வேளை அவனது வார்த்தைகள்,  இஸ்ரவேலத்தின் ஒரே இறைவனின் சொல்லாகவும் இருக்கலாம் என்ற நம்பிக்கையில், அவனையேக்  கவனித்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் பேசத் தொடங்கியதும், அவனின் முதல் வார்த்தையான "சகோதரர்களே" என்பதைக் கேட்டதும் எல்லாமே அவனுக்குக் கசப்பாகி விட்டது. இவன் திருந்தவே இல்லை. இன்னும் தன் தலையில் முட்டாள்த்தனங்களைத் தான் தூக்கிக் கொண்டு இம்மக்களிடம் வந்திருக்கிறான் என்று அதிருப்தியடைந்தான். 

"இல்லை! இல்லை! நாமொன்றும் சகோதரரகள் இல்லை. இஸ்ரவேலத்தவர்களும், ரோமானியர்களும் சகோதரர்தளில்லை. ஏன் இஸ்ரவேலத்தவர்களேத் தங்கள் சகோதரத்துவத்தை அவர்களுக்குள் உணரவில்லையே! பைத்தியக்காரன்!"

    "நமது யூதத்தின் அரசக் குழு , ரோமானியர்களுக்குத் விலை போய்விட்டது. கிராமத் தலைவர்களான பெரியவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், இந்தக் கொடுங்கோலாட்சியைப் பாரபட்சமின்றி, வெட்கமில்லாமல் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். நாமெல்லாம் என்ன சகோதரர்களா! இல்லை! நீ மிகத் தவறாக இந்த மக்களின் முன் உன் வார்த்தையைத் தொடங்கி விட்டாய், தச்சனின் மகனே! கவனமாக இரு! இம்மக்கள் கூட்டத்தின் உண்மையான சுயரூபம் உனக்குத் தெரியாது. ஆனால் ஜீசஸ் தன்னை அறைவதற்கு இன்னொரு கன்னத்தையும் காட்டியவுடன், அவனைப் பற்றிய யூதாஸின் எண்ணங்கள் குழம்பிவிட்டது. என்ன இது! எந்தக் கோபமுமில்லாத இந்த முகம், இது ஒரு மனிதன் செய்வது அல்ல! ஆனால் அம்முகத்தில் எந்த மாறுதலுமில்லை. பயமில்லை! வெட்கமில்லை! கோபமில்லை! சாந்தம்! சாந்தம்! மறுதலிக்கவே முடியாத அவ்வுணர்வு மட்டுமே அதில் வெளிப்படுகிறது. அப்படி ஒரு உணர்வை அவனால் எதிர்கொள்ள முடியவில்லை. அவனுக்கு உண்மையில் ஜீசஸைப் பார்த்தால் பயமாக இருந்தது. "என்ன மாதிரியான மனிதன் இவன்?" அவன் தனக்குள்ளேயே கேள்விகளினுள் உழன்றான். ....இன்னொரு கன்னத்தையும் காட்டும் இவன் ஒரு தேவதை. ஒரு தேவதை மட்டும் தான் இப்படிச் செய்யும் இல்லையென்றால் ஒரு தெரு நாய்.

    சட்டென எம்பிக் குதித்து உள்ளே வந்த யூதாஸ், ஜீசஸை நோக்கித் திரும்பவும் கைகளை உயர்த்தி முன் செல்ல முயன்ற பராபஸ்ஸைத் தன் வலுவானக் கைகளால் முடக்கி இறுக்கினான்.

"அவனைத் தொடாதே! யூதாஸ் கத்தினான்.

"ம்ம்! உன் குடிலுக்குத் திரும்பப் போ!"

    பராபஸ் ஆச்சர்யம் தொனிக்க கண்கள் உயர்த்தி யூதாசை பார்த்தான். அவர்கள் ஒன்றாக வளர்ந்து வந்தவர்கள். அவர்களின் சகோதரக் குழுவில் அவர்களே இணைந்து திட்டம் தீட்டி ஊர் ஊராக, கிராமம் கிராமமாக, இஸ்ரவேலத்திற்கு எதிராக இருக்கும் துரோகிகளை நோட்டமிட்டுக் கண்டறிந்துக் கொன்றுக் குவித்திருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது என்னாயிற்றுத் தன் துணைவனுக்கு, என்று யோசித்து ஸ்தம்பித்து நின்றான் பராபஸ்.

"நீயா, யூதாஸ் இதைக்சொல்கிறாய்" அவன் முணுமுணுத்தான்.

"ஆம்! நான் தான் சொல்கிறேன், திரும்பிப் போ!"

    பராபஸ் இன்னமும் அசையாமல் நின்று கொண்டிருந்தான். தனது சகோதரர்கள்  குழுவில் அவனுக்குக் மேலே அவனுக்கு கட்டளைகள் இடுபவன் யூதாஸ். அதனால் அவன் வார்த்தைகளை பராபஸ்ஸால் எதிர்க்க முடியாது. அதே நேரம் தனது சுயமரியாதை அவனை அங்கிருந்து நகர விடாமல் பிடித்திருந்தது.

    "போ!" செந்தாடிக்காரன் மறுபடியும் குரலை உயர்த்தி அத்ரிந்தான்.

    கொலைகாரக் கும்பலின் தலைவன், தன் தலையைத் தாழ்த்தி அவன் சொல்லுக்கு அடிபணிவது போலத் தன் உடலைக் குறுக்கிக் கொண்டான். எதிரில் நின்றிருந்த மேரியின் மகனை, இரக்கமற்றுப் பல்லைக் கடித்துக் கொண்டுப்பார்த்து உறுமினான்.

    "நீ என்னிடமிருந்து தப்ப முடியாது, நாம் மறுபடியும் சந்திப்போம்" தன் முட்டியை இறுக்கி அவனைக் குத்துவதைப் போல நீட்டிச் சொன்னான் பராபஸ்.

    அவனது கொள்ளைக் கும்பலைப் பார்த்து அரைமனதுடன் கட்டளையிட்டான், "ம்ம்! நாம் போகலாம்!"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக