ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

தீ

நீயே தீ,
இந்தக் கானல் நதிக்கரையில் ஊற்றெடுக்கிறது
உன் உள் பாதங்களின் உப்பு வியர்வை.
உன் முத்தங்களின் வேனல் கட்டிகளை
ஒரு தேசாந்திரியின் தோள் பையாய்  தூக்கி சுமக்கிறேன்.
வழியில் தென்படும் படுகைகளிலெல்லாம் செவ்வரியோட்டம்.
ஒருக்கழித்துக் கிடந்த உன் தேகத்தடம்.
அப்பால் மொட்டைப்பாறையின் உச்சந்தலையில்
நீ கடித்த பற்தடத்தின் எரி.
தேங்கி வழியும் அந்தியின் கடைசி நொடித் தணல்.
படித்துறையில் ஈரம் சொட்டச் சொட்ட
சிந்திச் செல்கிறாய்.
துவட்டியதும் அறை முழுதும் வியாபித்து விரிகிறாய்.
புழுக்கம் வியர்த்த அடிக்கழுத்தில்
துளித்துளியாய் உருண்டோடுகிறாய்.
வெம்மை மிகுந்த இரவில்,
சாளரங்களில் அடங்காத இந்நதியின் ஓலம்.
உனைக் கவிதைக்குள் ஆற்றுப்படுத்த நினைத்தது எத்தனைப் பிழை.
உன் கடித்தடத்தை ஏந்திக் கொள்ள ஒரு மொட்டைப்பாறையாயினும் ஆகி இருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக