சனி, 24 நவம்பர், 2018

கிறுஸ்துவின் கடைசி சபலம் 9

அறை முழுதும் வியாபித்திருந்த உள்ளீடற்ற தன்மை.

முடியவில்லை! முடியவில்லை! வேண்டாம்!

ஒரு படலமாய் காட்சிகள் உருளத் தொடங்கின. நினைவின் பொந்துகளிலிருந்து மெல்லப் பத்தி உயர்த்தியது நிகழ்வுகள். நெசவு ஓடத்தைப் போல முன்னும் பின்னும் நகர்ந்தது காலம்.

ஒரு திருமண நாளாக அது இருந்திருக்கக் கூடும். காலைப் பொழுதின் ஒளியின் பச்சை அரும்புகள் தளிர்த்த சைப்ரஸ் மரங்கள், பெண்டுலம் போல அசைந்தாடிக் கொண்டிருந்தது. ஈச்ச மரங்களில் குருவிகளின் கீச்சிடல். பல்லாயிரம் சிறகடிப்புகள் தலைக்கு மேலே. பனி படர்த்திய மேகங்களின் இடைவெளியினுள்ளிருந்து ஒளி மஞ்சள் பிரகாசத்துடன், துலக்கமற்ற ஒளியினூடாக அவர்கள் அந்த தோட்டத்தினுள் நின்று கொண்டிருந்தனர். விசேஷ நாளுக்கே உரிய குதூகலம் ததும்பும் முகத்துடன் அவர்கள் தங்களுக்குள் உரையாடிக் கொண்டும் வரவேற்றுக் கொண்டும், விசாரித்துக் கொண்டும் இருந்தனர்.

ஜோசப் மிகுந்த மகிழ்ச்சியுடன் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்றுக் கொண்டிருந்தார். வைன் மற்றும் மாவினால் செய்யப்பட்ட இனிப்பு பலகாரம் எல்லோருக்கும் பரிமாறப்பட்டிருந்தது. ஒவ்வொருவரையும் தனித்தனியே அருகில் சென்று அணைத்து ஜோசப் உரையாடிக் கொண்டிருந்தார்.

ஏன்? ஏன்? அது நிகழ்ந்தது?
கேவிக் கேவி எழும் அழுகை...
நான்! நான்! நான்! என்று பிதற்றிக் கொண்டே இருந்தான் இளைஞன்.

தனது தந்தைக்கருகில் பிரமை பிடித்தவன் போல நின்று கொண்டிருந்தான் அவன். அவரைத் தூக்க கூட முயற்சிக்காமல் வெறுமனே வெறித்தான். தலை குப்பற அவன் முன்னே கைகால்கள் முறுக்கிக் கிடக்கும் ஜோசப்பின் நிலை குத்திய விழி அவனை சந்தித்து ஸ்தம்பித்து நின்றது. மெல்ல அவரை மடியில் இருத்தி கன்னங்களை தடவிக் கொடுத்தாள், செவுளில்  இரு முறை அறைந்து அவரை பெயர் சொல்லி விளித்தாள், அவனின் தாய் மரியம்.

நானும் அவரது நகல் தான் ஒரு வகையில்.  ஆம்! பயம்! அதிலிருந்து தப்பிக்கவும் அதனுள் சிக்கி அலைக்கழியவும் தானே நானும் செய்து கொண்டிருக்கிறேன் அவரைப் போலவே. தன்னால் ஆழம் காண முடியாத, மறுமுனை எங்கோ பிணைக்கப்பட்டு கட்டுண்டு கிடக்கும் வன விலங்கைப் போல.

என்னால் என்ன செய்ய முடிந்தது?

இவர்கள் அனைவருக்கும் நான் அளிப்பது ஒரு நுகத்துடியைத் தான். அவர்களை விட்டு காலத்துக்கும் அகலாத பாரத்தை நான் அளித்துக் கொண்டிருக்கிறேன்.

என் தந்தை? மக்தலேனா? இவர்கள் ஏன் என் வாழ்வினுள் வந்து சிதைந்து கொண்டிருக்கின்றனர்?

உனது சொந்தத் தேடலுக்கு பலியிடப்பட்டவர்களா அவர்கள்?

சொந்தக் காயங்களை  தன் நாவினாலேயே நக்கி நக்கி  ஆசுவாசப்பட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு இரவிலும் அது நீண்டு கொண்டே இருக்கிறது, என்னைச் சுற்றி நானே உருவாக்குகிறேன் இந்த பாழ் குழியை. அதனுள் அடியாழமேயற்ற சூனியத்துனுள் விழுந்து கொண்டே இருப்பதையே என் கனவுகளிலும் நனவிலும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

ஒரு பிரார்த்தனை போதும் என்னை மீட்டெடுக்க. சுயமிழந்து விடுதல். உன் பெரும் மழையின் ஒற்றைத் துளியாவது. உன் வானத்தில் இலக்கற்ற சிறகுகளாவ்து! உன் பூமியில் மறுதலிக்க முடியா விதையாவது! உன்னிலிருந்து முளைத்துக் கொண்டே இருப்பது. ஆனால்! ஆனால்! நான் நான்! எங்கும் முளைக்கப் போவதில்லை.

ஒற்றைச்சொல்! தந்தையின் நாவிலிருந்து வழுகி வழுகி தரையெங்கும் நசுனசுத்தது.

தன்னை ஒவ்வொரு அணுவாகப் பிளந்து கொள்வதைப் போல, கூர்மையான உகிர்களால் அந்தக் குரல் அவனிடத்தில் இறைஞ்சிக் கொண்டிருந்தது. அண்டை வீட்டிலிருந்து மெல்ல முன் நகர்ந்து கொண்டிருந்தது ஒரு ஒற்றை விளி.

மரங்களும் தளிர்களும் புல் பூண்டுகளும் நிலமெங்கும்  ஆகாயத்தின் ஈரத்தை உறிஞ்சி காலையை எழுப்பியது. சந்தடிகளில் மனிதர்களின் நெடி. ஒளித்துளிகள் விண்ணின் நாவாய் தன் கிரகணத்தின் வெண் சிவப்பால் நேற்றையதின் அழுக்குகளை ஒற்றியெடுத்துக் கொண்டிருந்தது.

அவன் தன் முன்னே வெறிக்கும் பழுப்பு நிறச்சுவரை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

தெருக்கள் வழமையாய் ஓடத் தொடங்கியது. ஒரு மீறலின் ஓலம். பித்து மொழியில் அவனை சூழ்ந்து குழுமியது.

நீ மரந்து விட்டாயா? ஓ! இஸ்ரவேலின் தெய்வமே! இன்னும் எத்தனை காலம்? இந்த ஏழைகளை நீ ஏமாற்றி விட்டாயா?

தழும்பும் நீரலைகளைப் போன்ற கேவலுடன் தயக்கமுற்று அந்தக் குரல் அந்தர வெளியில் நடுங்கிக் கொண்டிருந்தது.

முன் நெற்றி தரையில் வீழ அவர் பரிதவித்தார். தேவனே! எம்மை ஏற்றுக் கொள்ளும்! ஆற்றாமையின் ஏக்கத்தின் பலவீனத்தின் அலைவுகளுடன் ததும்பிக் கொண்டிருந்தது அந்த பிரார்த்தனை.

இளைஞன் தன்னுள் அழுந்துவது போல சுவரை ஓங்கி அறைந்தான். உள்ளங்கையின் அடிப்பாகம் கன்றிச் சிவந்தது.

தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான்...ஆம்! பிரார்த்தனைகள். மறுமையைத் தேடிக் கொண்டிருக்கும் அனல் கங்குகள். பற்றிக் கொள்ள விழையும் தழல் நுனிகள். இவையல்ல! இவையல்ல! நான் தேடுவது. குளக்கரையின் நுனிகளில் எந்த இலக்குமின்றி அலைந்து கொண்டிருக்கும் பாசிகளைப் போல இருக்கின்றன எனது தேடல்களும் பிரார்த்தனைகளும்.

தொய்ந்து ஊசலாடும் ஆடைகள், தோளிலிருந்து நழுவி தொங்கியது. வெளிரியிருந்த அவனது உடலில், புஜங்களும் உள்ளங்கைகளும், மணிக்கட்டை நரம்புகளும் சற்றே புடைத்திருந்தன. அனிச்சையாய் ஆடைகளை இழுத்துக் கொண்டே அவரது காலடிகளில் தளர்வுற்று வீழ்ந்தான், தாகம் கொண்ட வனமிருகம் தடாகத்தினுள் தலை முக்கிக் கொள்வது போல.

உள்ளொடுங்கிய வாதை மீதிறும் பதற்றம் தொக்கிய மிரட்சி ஒரு நிலைத்த பாவமாய் அவன் முகத்தில் இருந்தது. கன்னங்களில் தாடையில் அடர் சுருள் தாடி. சற்றே நீண்ட வளைவில்லாத மூக்கு. வரியோடிய உதடுகள் பிரிகையில் பழுப்பு நிறப் பற்கள் தெரிய சிரித்தான். தகிக்கும் விழிகள், சொப்பனங்களின் நீள் வட்டத்தை சதா சுற்றிச் குழன்று கொண்டே இருக்கும் போதைத்தன்மையைக் கூட்டியது.

தொலைவின் அப்பால் பல்லாயிரம் நிழல்களின் அடர்சுழல்.

-The Last Temptation of Christ -Nikos Kazantzakis

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக