புதன், 21 நவம்பர், 2018

கிறுஸ்துவின் கடைசி சபலம் 8

அவனது கட்டிலைச் சுற்றி பல்லாயிரம் கால்களுடன் ஊறும் பூரானைப் போல ஒரு குரல் இல்லை ஒரு முணங்கல். சுவாசம் திணறத் திணற அடைபட்டு திமிறிய இளைப்பில், அது ஒரு மனித விளி போலவே இல்லை. பக்கத்து அறையில் இருந்த அவனது தந்தை. இளைப்பு நோயால் இரவு முழுமைக்கும் விடுபட்டு விடுபட்டு முணங்கிக் கொண்டிருந்தார். முடக்கு வாதத்தால் ஒடுங்கிய உடல், முதுகெங்கும் புண்கள். உறக்கமின்றி ரத்த சிவப்பாய்க் கன்றியிருந்தன கண்கள். வார்த்தைகளை கோர்க்க முயன்ற எத்தனிப்பில் சிதறிய மொழியாய் அவரது குரல் எதொரொலித்தது.வாயோரத்திலிருந்து வழிந்த எச்சிலை புறங்கையாய் துடைக்க எண்ணி இழுபட்டு முறுக்கினார். ஒரு ஒற்றைச்சொல்! ஒலிப்படலமாய் அறையின் சுவரெங்கும் சார்த்தியது,
பிதாவே! என் பிதாவே!

ஒற்றைச்சொல்லைத் திரும்பத் திரும்பத் திரட்டிக் கொண்டிருந்தார். நாள் முழுமைக்குமான பிரார்த்தனையாக அது இருந்தது.

இது என் தவறு! பெரும்பாவம்! பெரும்பாவம்!

இளைஞன் தன்னுள் ஆழ்ந்து அழுது கொண்டிருந்தான். இரவு இத்தனை அமைதியாக இருப்பது சூழலை இன்னும் கனத்தது. அந்த ஒற்றைச்சொல் மந்திர உச்சாடனை போல இவனது நாவிலும் நிலைத்தது.

அகன்ற கிணற்றின் சுவர்களில் முளைத்துக் கொண்டிருக்கும் தாவரங்களைப் போல உறக்கம். பாதி செதுக்கி வைத்திருந்த குறுக்கும் நெடுக்குமான கட்டைகளைத் தாண்டி வாசலில் நின்று கொண்டிருந்தான் செந்தாடிக் காரன். தழலிடும் புன்னகையுடன் அதை நோக்கினான். ஒரு முழு மனிதனை தொங்க வைக்க ஏதுவாக அது அமைக்கப்படிருப்பதை பார்வையாலேயே கணக்கிட்டுக் கொண்டு மெல்ல அவன் அருகில் நெருங்கினான்.

கனவுதான் கனவல்ல. வெளிச்சத்திலிருந்து இருள் நோக்கி செல்லும் நிலம். உறக்கம் துளை வண்டாக உரு மாறி அவனுள் குடைந்து குடைந்து மெல்ல முன்னேறிக் கொண்டிருந்தது.

சுவரை வெறுமனே பார்த்து வெறித்துக் கொண்டிருந்தான் இளைஞன். தலைக்கு மேலே வார்ப்பட்டை தொங்கிக் கொண்டிருந்தது. அதன் கூர்நுனிகளில் இன்னும் முழுதாய் காயாத ரத்தம் தோய்ந்திருந்தது. நிணத்தின் உப்பு நாற்றம் இன்னும் அடங்கியிருக்கவில்லை. வலி! உண்மையில் அதைப் போல ஆசுவாசப்பட என்ன இருக்கிறது. தனிமையினுள் அதை மட்டுமே துணைக்கு வைத்திருக்கிறேன். ஆம் அருகில் ஸ்தூலமான இன்னொரு உடல் போல அது எப்பொழுதும் என்னுடனேயே இருக்கிறது. மறுதலிக்க முடியாத ஒன்றை கூட்டாக வைத்திருப்பதன் மூலம் நான் என்ற ஒன்றிலிருந்து வெளிவந்து விடுகிறேன். என்னைச் சுற்றிக் குழுமும் அனைத்திலும் ஊதி ஊதி பெருக்கிக் கொள்ள என்னிடம் என் வலி உண்டு என்பது மட்டுமே இன்னும் ஒரு இரவைக் கடப்பதை சாத்தியமாக்குகிறது.

தன்னைத் தானே கொல்ல விரும்பும் உவகை! உடல் மட்டுமேயானது நம்முள் நிரம்புகையில் அதன் குறுகிய எல்லையினை, அதனுள் பதுங்கிக் கொள்ளும் பொழுது உருவாகும் போதையினுள் மெல்ல மெல்ல அமிழத் தொடங்கி விடலாம். அதன் பின்னான உறக்கத்தில் நான் எனும் உணர்வற்ற ஒன்றை உருவாக்கிக் கொள்வான். தன்னிலிருந்து மீள வேறு ஆது வழியும் அவன் அறிந்திருக்கவில்லை.

ஆனால் உறக்கம் அதனை மட்டும் கொண்டிருக்கவில்லை. சுயமற்ற ஒன்றினுள் முழுகியவுடன் வேறோரு திறப்பினுள் வந்து வீழ்வான். அங்கு கட்டுண்ட தனது உடலையே மறுபடியும் காண்பான். நெருங்க நெருங்க கை கால்கள் இழுபட தசைகள் முறுக்க கீழே விழுந்து துடித்துக் கொண்டிருப்பான். வாயில் நுரை தப்ப அரைபடுகையில் கட்டுப்பாடற்ற வன் கரங்களின் மத்தியில் நசுக்கப்பட்டுக் கொண்டிருப்பான். விழிப்பு தட்டியதும் தன்னிரு கைகாளலேயே தன் உடல் முழுமைக்கும் தொட்டுப்பார்த்துக் கொள்கையில், அந்த ஒற்றைச்சொல் எதிரொலிக்கத் தொடங்கும். பல்லாயிரம் குரல்களின் ஊடாக அதனைக் கோர்த்துக் கொண்டிருக்கும் சரடாய் இருள் அறையினுள் அங்கும் இங்குமாய் நகர்ந்து கொண்டிருக்கும்.

-The Last Temptation of Christ -Nikos Kazantzakis

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக