திங்கள், 19 நவம்பர், 2018

கிறுஸ்துவின் கடைசி சபலம் 6

நீங்கா தண்டனைகளின் பெரும்பாரம் சுமக்க வாய்க்கப்பட்டவர்களே! சுமடுகளின் கனம் தலையழுந்துகிறதா? துதித்து மரணியுங்கள். மரணித்திருப்பது மட்டுமே உங்களுக்கு விதிக்கப்பட்டது. தன் உப்பின் துளியிலிருந்து உங்களைப் படைத்தான். கீழ்மையின் அடிமண்டிய பரப்பில் மிதக்கும் அமைதியில்லாத வேதனையின் குரல்களை அவனறிவான்.

நீங்கள் பிரார்த்திக்கிறீர்களா?

உண்மையை, நன்றியுணர்தலை தொட்டதுண்டா நீங்கள்? உங்களின் பாவங்களுக்காக இறக்கும் கடவுளை நோக்கியிருக்கிறீர்கள். உங்களின் முதுகுத்தோல் செதில் முளைத்திருப்பதை பார்க்கிறேன். இரைக்காக சதா காத்துக்கொண்டு உருண்டு கொண்டிருக்கும் பார்வையினுள் அதை நான் எப்பொழுதும் கண்டிருக்கிறேன்.

இன்னும் எத்தனை காலம். பிதாவே! இன்னும் எத்தனை காலம்! காலம்  எங்களை மலைப்பாம்பை போல  சுருட்டி விழுங்கிக் கொண்டிருக்கிறது. அண்ணாந்து வானத்தை நோக்கினான். விண்மீன்களின் அனந்தப் பெருவெளி. ஓராயிரம் விழிகளுடன் சொர்க்கத்தின் தூயமணிகள் கிணுங்க பூமியைப் பார்த்து சிமிட்டிக் கொண்டிருக்கிறது. காற்றின் தாள கதி மெல்ல மெல்ல உயர்ந்து குறுகிப் படர்ந்து ஒரு சிலந்தி வலை போல அவர்களைச் சுற்றிக் குமைந்தது. தூய வானின் கீழ் பலிக்காக காத்திருக்கும் இரைகளைப் போல அந்தர வெளியில் அவர்கள் அசைவின்றி நின்றிருந்தனர். பாலை மணற்துகள்கள் பதற்றமுற்ற முதியவனின் விரல்களைப் போல அவர்களி ஸ்பரிசம் தொட்டு தொட்டு இறைஞ்சியது.

செந்தாடிக்காரன் ஒவ்வொருவராய் தனித்தனியாய் பார்த்து சிரித்தான். ஏதோ விழுங்க இயலாத ஒன்றை மெல்ல மெல்லக் கரைத்து தனக்குள் இட்டது போல  பற்களும் ஈறுகளும் தெரிய வாய் பிளந்து சிரித்தான். ஆனால் சப்தம் ஏதும் வெளிப்படவில்லை.

கிறுக்கன்! கிறுக்கன்!
எல்லாம் இழந்தாகி விட்டது. அறிவு! உள்ளுணர்வு! புத்தி!
நம் தேவதூதனுக்காக அலையும் அனுமானிக்க வழியற்ற பாதையில் பயணம் செய்கிறோம் நாம்.

யாருமே இல்லை என்னுடன். மனைவியும் பிள்ளைகளும்...
தனியனாய் என்னை பலி கொடுப்பதாயினும் செய்வேன்.

அவர்களின் முன் எல்லாம் தெளிவாக இருந்தது. ஒரு சூட்சுமமான மையச்சரடுஅவர்களின்  ஒவ்வோர் இடைவெளிகளிலும் முடிச்சுகளை இட்டுக் கொண்டே இருந்தது.

இருளுக்குள் ஒளி நுழைந்து கொண்டிருந்தது. வானம் சடையடர்ந்த மயிர்க்கற்றைகளைப் போல வரையிட்டிருந்தது. ஆழமற்ற சேற்றுக் குழியினுள் கால்கள் புதையும் பொழுது உருவாகும் பதற்றமும் மெல்ல அடுத்த அடியில் நகக் கண்களில் கூர்மையாகும் அகமும் போல மென் குமிழியிட்டு ஒளி பழக்கப்பட்ட திசையில் ஒளிரத் தொடங்கியது.

அவன் தூரத்தை பார்த்துக் கொண்டிருந்தான். பழுத்திருக்கும் மண் அவன் ஞாபகங்களில் அலையிட்டது. காறி உமிழ்ந்தான். சருகுகளிடை ஊர்ந்து கொண்டிருந்த வீரியன் குஞ்சுகளின் மொலுமொலுப்பு. அவர்கள் நின்று கொண்டிருந்த மலைக்குன்றுகள் ஒரு பெரிய சுருக்குக் கயிறைப் போல அந்த கிராமத்தின் கழுத்தை சுற்றிப் படர்ந்திருந்தது. அந்த சின்னன்சிறு சரிவான பாதையின் வழியே பாதங்கள் நரனரக்க கூர் கற்களை மிதித்துக் கொண்டே ஓட்டனமும் நடையுமாய் நகர்ந்தான்.

உறக்கம், கடைசியாக ஒலி அடங்கிய நுனியிலிருந்து சொட்டத் தொடங்கியது. முகங்களின் பெருங்கடல். அலைகளின் வழியே அந்தரங்கமாய் விதிர்க்கும் உணர்ச்சிகளின் கூச்சல். கலங்கல் குளத்தில் அலையும் கரைப்பாசி. செம்மண் நீரில் மிதக்கும் சாம்பல் மரத்துண்டு. வடிவங்களின் வடிவின்மை. கானல் நீரின் பிரவாக வெளி. நிறங்களின் ஊசலாட்டம். கட்டமைப்புகள் சிதையச் சிதைய துண்டாடி உருளும் பாழ் நிலம். முண்டங்களின் குரல். சப்தமின்மையின் கவந்த வாய்.

இளைஞனின் இமைகள் முடிச்சிட்டுத் திணறின. கனவின் கடிய கார்வை செவியடைத்தது. நிழலின் ஆடி பிம்பங்களாய் உருகியோடின உருக்கள். ஜன்னல்கள் யாருடைய குரலையோ வாங்கிச் சிதறிச்சாத்தியது. இருள்! இருள்!

அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது.

-The Last Temptation of Christ -Nikos Kazantzakis

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக