வெள்ளி, 16 நவம்பர், 2018

இரவுகள்

சிறிதும் பெரிதுமாய் கூந்தல் இழைகளை சேமித்துக் கொண்டே இருக்கிறேன்
தலையணை இடைவெளிகளில் அனத்தும் கவுச்சியை ஒரு உருவமாக்கி கொள்ள முயல்கையில்
கால்களைச் சுற்றிப் படர்கிறது உன் நிழல்.
போர்த்திக் கொண்டிருந்த அடிப்பாவாடை நுனிகளில் ஈரம்,
கண்ணாடிப்பாட்டில்களுக்குள் அக்கப்பட்டு மிதக்கும் தலை பிரட்டைகளை வாரி வாரி உண்கிறது இரவு
மெல்ல தலை உயர்த்திப் பார்க்கிறேன்
நீ போர்வையாகிக் கொண்டிருந்தாய்,
பாதியில் எழுந்து சிறு நீர் கழித்தேன்.
ஏனோ அன்று நீயும் இதைப்போலவே அமர்ந்திருக்கையில்
உன்னிடம் பகிர்ந்த முத்தங்கள் வெண்ணிறக் கோளங்களாக தரையில் படர்கின்றன
நூறு நூறு நிலாக்கள் கூடிய பழுப்பு நிற வானம் கால்களுக்கடியில் உராயத் தொடங்கியது.
நீ போர்வையாகிக்
கொண்டிருந்தாய் இரவின் காரிருளினுள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக