சனி, 10 ஏப்ரல், 2021

 பால்யத்திற்கு மட்டும் தெரிந்தவர்களின் மரணம்

நம் பால்யத்தையும் அதன் மூலம் நாம் காத்துக் கொள்ளும் காலத்தையும் குலைத்து விடுகிறது. திரும்பப் போக இயலாத அதன் ஊடு பாதைகளின் தடங்கள் அனைத்தும் மறந்து ஸ்தம்பித்து இன்று இப்பொழுது எனும் தண்டனைக்குள் போய் மாய்த்துக் கொள்ள வேண்டியதான். என் சொந்த தாய் மாமா, சித்தப்பா, மகாராச மாமா, இப்போது சக்கோட்டை கிருஷ்ண மாமா.
மாமா மார்களின் மரணங்கள் நம்முள் அதீத பதைபதைப்பை உருவாக்குவது ஏன்?
தெரியவில்லை. ஆனால் கண்ணியில் கோர்த்துக் கொள்வதைப் போல அவர்கள் ஒரே மாலையில் அமைகிறார்கள். தோற்றுப் போவதை வேண்டியே வரித்துக் கொண்டவர்கள். இருமைக்குள் நிச்சயம் அடங்காதவர்கள். வாழ்க்கை என்பதை சின்னஞ்சிறியதற்குள் அறிந்தவர்கள். ஒழுகினசேரி தவிர வேறு எல்லை ஒன்றையும் அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதோ இந்த ஊர் மக்கிக் கொண்டிருக்கிறது. இதன் வண்ணங்கள் முற்றாக வெளிர்ந்து விடும் தருணத்தை நோக்கி. இன்னும் கற்பகம் மாமா சந்தையிலிருந்து பை தூக்கிக் கொண்டு வருகிறார். பகவதி ஸ்டோர்ஸில் இன்னும் ஒரு பொடியன் மடக்கு வாங்க காத்திருக்கிறான். மகேஷ் சலூனில் இப்பவும் பெஞ்சில் ராணி புக் நடுப்பக்கம் பார்க்கலாம். அழகேசன் கடையில் பழ சர்பத்திற்காக அழுகிய பழங்கள் அவன் மிக்சிக்கு அடித்தட்டில் இருக்கும். நாடார் கடை செந்துளுவம் பழுத்து தொங்கும். பாய் கடையில் சமோசா காய்ந்து கொண்டே இருக்கும். செல்வம் டீஸ்டால் திண்டில் பாதி விழுங்கிய மிச்சம் day and night சிந்திக் கொண்டிருக்கலாம். பிகே பிள்ளை ஆசை மிட்டாய் ஸ்டாக் வைத்திருப்பார். குழுவக்குடி மாடனுக்கு வெள்ளிப்படையல் உண்டு. லூஸ் மேரி டி சர்ட் விற்கிறாள். தண்டவாளம் இருபுறமும் நிரம்ப மலத்தால் வழியும். பழையாற்று எதிர்க்கரையை பார்த்து இசக்கி இன்றும் சமிஞ்சை செய்வாள்.
மாமா மார்கள் வாழ்வது காலாதீதமான ஒரு ஒழுகினசேரியில்.
அங்கு நிறைய நிறைய பால்யத்தின் தீராத கனவுகளின் காலம் எப்பொழுதும் இருக்கும்.
மாமாக்களும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக