ஞாயிறு, 27 ஜனவரி, 2019

மொழி

வார்த்தைகளாலும் கவிதைகளாலும் ஆன ஒன்று வனாந்தரங்களில் தனித்து உலவிக் கொண்டிருந்தது.
தூரத்து மலைகளின் துணுக்குகளில்,
அணைந்தெரியும் கங்குப் பொதிகளில் தேங்கியிருந்தது
நாள் பட்ட பழைய மொழி.
சொல்லற்ற பிரதேசத்துப் புதை குழிகளில் இருந்து
தோண்டி எடுக்கப்பட்ட பிணக் குவியல்களில் அழுகிக் கொண்டிருந்தன கதைகள்.
அன்று முழுமையாக படர்ந்த இருள் வெளியிலிருந்து பிதுங்கி வெளி வந்தன ஒளிப் புழுக்கள்.
மெல்ல மெல்ல பற்றிக் கொண்டு எழுந்தது வானம்.
வார்த்தைகளாலும் கவிதைகளாலும் ஆன ஒன்று சொல்லிலிருந்தும் மொழியிலிருந்தும் திருகல் ஆணி போல கழன்று விழத் தொடங்கியது.
அது பெரும் மழைக் காட்டில் தன்னுடன் தான் மட்டுமே தனித்திருந்தது...
கதைகள் ஊறத் தொடங்கியதும் மிச்ச பிணங்கள் ஏரிந்தன கூட்டாக...

திங்கள், 3 டிசம்பர், 2018

நட்சத்திரங்கள் உதிர்ந்து கொண்டிருந்த வானம்

இன்னும் அலைந்து கொண்டிருக்கிறான் எங்கோடி கண்டன்.
நட்சத்திரங்கள் உதிர்ந்து கொண்டிருந்த வானில் இருந்து அமைந்தது ஜோதி. கருப்பனிடம் உள்ள பிணக்கில் சிறிது போட்டிருந்தான் போல.
குழலை எடுத்து தாகம் தீர ஊதத் தொடங்கினான்.
கருத்த வனம் அவனை மத்தகத்தில் இருத்தியது.
மெல்ல ஊன் பலியின் ரத்த வெள்ளம் சுனையெடுத்து கொதிந்தது
நட்சத்திரங்கள் உதிர்ந்து கொண்ட வானம் மழையை இரையெடுத்து நெளிந்தது.
ஊன் ஊன் ஊன்.
கால்களினடியில் நொதித்துக் கொண்டிருந்த கள்ளின் ஊற்றிலிருந்து முளைத்தெழுந்தான் கருப்பன்.
இருவரின் கோப்பைகளுக்கு நடுவில் வந்தமர்ந்தது  ஏதுமற்ற கருத்த வானம்.

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

கிறுஸ்துவின் கடைசி சபலம் 10

அவர்கள் தான்! அவர்கள் தான்!

கதவு இறுக்க மூடி அடைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்டான். குளம்பொலிகள் மிக அணுக்கமாய் நகர்ந்து கொண்டிருந்தன. நீர்மையினுள் கொதி குமிழியிடுவதைப் போல இருளும் ஓலியும் குலைந்த சமனற்ற ஒன்று அவனைச் சூழ்வதை. முகங்கள் மாறிக் கொண்டே இருக்கும் எண்ணற்ற ஆடிப்பிம்பங்களினுள் நிலைக்கும் தீற்றலான ஒன்று. ஆம்! ஆம்! மரப்பட்டைகளினுள்ளிருந்து பிசின் உமிழ்வது போல, அது மெல்ல மெல்ல பொள்ளிக் கொண்டிருந்தது.

அன்று புழுவைப் போல நெளிந்து கொண்டிருந்தேன். பலவீனமான என்னிடமிருந்து அவர்கள் அதைத் தான் எதிர் பார்த்திருக்கக் கூடும். எப்பொழுதும் எப்பொழுதும் சுற்றியிருக்கும் பார்வைகளில் முழுக்க நிர்வாணப்பட்டிருப்பதை நான் உணர்கிறேன். சிறு வயதிலிருந்தே எந்த களியிலும் எவருடனும் இணையாமலேயே தனிக்கப்பட்டிருந்தேன். பின்பான சமயத்தில் பொருக்குகளை உடைத்துப் பிய்க்கும் வதையில் ஆசுவாசப்பட்டுக் கொள்வேன்

இன்னும் என்னை அவன் தொடர்ந்து கொண்டிருக்கிறான். நெருக்கமாக நகரும் இந்த சப்த அலைகள் அந்த வருகையத் தான சலனிக்கின்றன.

கதவு உந்தி இழுபட்டது. வெளியிலிருந்து யாரோ அல்லது எதுவோ முழு வலுவுடன் அதை மோதியது. தாழ்ப்பாள் உடைந்து சிதறியது. அலையும் கதவுகளின் இடைவெளி வழியே அவன் தெரிந்தான். செந்தழல் சுருட்டை முடியும் நீள் தாடியும் கொண்ட மனிதன். வேட்டை மிருகம் போல இளைஞனை நோக்கிக் கொண்டிருந்தான் வெளியிலிருந்து.

மெல்ல் அறையினுள் நுழைந்தவன்.  அறையெங்கும் சிதறிக்கிடந்த பொருள்களை ஒவ்வொன்றாக நோக்கினான். அறை முற்றிலுமாக உலகினிலிருந்து தனித்து விடப்பட்டிருந்தது. வெளியின் ஜன நடமாட்டம், பல்லாயிரம்  புழுக்கள் ஒரு சேர நெளிவது போல நகர்ந்து கொண்டிருந்தது வீதியெங்கும்.

முக்கில் கிடந்த இருப்பு பலகையில் அமர்ந்து உத்தரத்தில் தொங்கும் சிலந்தி வலைகளை மையமின்றி வெறித்துக் கொண்டிருந்தான்.
நிசப்தம் பல்லிடுக்கில் மாட்டிக் கொண்ட உணவுத்துணுக்கு போல தென்னியது.

நீ தயாராகி விட்டாயா?

செந்தாடிக் காரன் மெல்ல அவனின் மணிக் கட்டுகளை அழுத்தி பழுப்பு நிற பற்கள் தெரிய அருகமர்ந்தான்.

நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

வெளியிலிருந்து நீண்ட பட்டைக் குழாயாய் ஒளி அறையினுள் குமிழ்ந்தது. பாதி இருளினுள் அவனது முகம், பாதி ஒளிர்ந்தது. வலியினால் இம்சித்துக் கொண்டே இருக்கும், ஏக்கங்களால் தீய்ந்து கொண்டே இருக்கும் ஒரு பாதி. மற்றொன்று அடர்ந்து கனத்த தோல். அசைவின்றி அமிழ்ந்து கிடக்கும் உலோகத்துண்டு. ஒன்றில் ஒன்று முரணிட்டு குலைந்து குவிந்து முயங்கி அளைந்து கொண்டிருந்தது.

நீ தயாராகி விட்டாயா?

முரசரைந்து வந்து கொண்டிருந்தது  ரோமன்படைவீரர்களின் அணிவகுப்பு!

இன்று! இன்று! இஸ்ரவேலின் தெய்வமே! நாளையல்ல!
இன்று! இன்று மட்டுமே!

தன்னுள் நடுங்கிக் கொண்டிருந்த இளைஞனை உலுக்கிக் கேட்டான். ஆம்! நீ தயாராகி விட்டாயா?

இல்லை! வேண்டாம். நீ அதை செய்யக் கூடாது. நீ அதை தூக்கி வராதே!

மக்கள் அனைவரும் சதுக்கத்தில் குழுமியிருந்தனர்.

செந்தாடிக் காரன் இளைஞனை கூர்ந்து நோக்கினான். அறையின் ஓரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த சிலுவையைக் கீழே சரித்து உடைக்க முயன்றான். காறி உமிழ்ந்தான். நீ! நீ! நீ!

அவன் வருகையை நீ அறிகிறாயா? அந்த வெற்றிக் கூச்சல் உனக்கு கேடகவில்லையா? அது அறிவிக்கப்பட்டு விட்டது. உனது மாமா, அந்த போதகரிடம் போய்க் கேள்.

உனது போதகர், நேற்று பிரார்த்தனைக் கூட்டத்தில் முறையிட்டார்.

ஏன், நமது ரட்சகன் வரவில்லை. அவன் வரப்போவதுமில்லை. நாம் நம் காலம் முழுமைக்கும் பாவங்களில் புதைந்துழன்று வழியின்றி பரிதவித்து பின்னும் பின்னும் அதன் கனத்த கண்ணிகளில் கொளுத்தப்பட்டு, நம் நம்பிக்கைகளெல்லாம் பிடுங்கப்பட்டு அம்மணமாய் தொங்க விடப்படுவோம். எதிர்காலத்தின் நிச்சயமின்மையால் நம் பார்வைகள் குருடாக்கப்படும். சொற்களின் பலனின்றி செவிடாக்கப்படுவோம். முடிவிலி தொலைவு வரை கடவுளர்களுடன் சண்டையிட்டு பலியாவதே நமக்கு விதிக்கப்பட்ட ஊழ்.

ஆம்! அது உண்மையும் கூட. நமக்கு கடவுளர்கள் போதாது. கழுத்து கவ்வத் துடிக்கும் அதன் கூரிய பற்களை நான் தினமும் காண்பவன். நாம் மோதியே ஆக வேண்டும். காலம் அனைத்தையுன் நிர்ணயிக்கட்டும்.

நீ எங்கிருக்கிறாய்? என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்? கனவுக் கண்களுடன் இமைக்கும் இளைஞனை உலுக்கினான் செந்தாடிக்காரன்.

இன்றே! இன்றே! அவன் நாதியற்று தொங்கப்போகிறான்.  என்ன செய்வது. ஒருவேளை அவன் தானா? நாம் தேடிக் கொண்டிருக்கும் ஒருவன். நம் ரட்சகன்.  இஸ்ரவேலைக் காக்கும் தேவமைந்தன். எந்த உதவிகளும் கிடைக்கும் வழியின்றி வலியில் துடிதுடிக்க சாகப் போகிறானா? தன்னை வெளிப்படுத்தும் சிறுகணம் கூட அறியப்படாமல் பிணமாகப் போகிறானா? துருவேறிய ஆணிகளினுள் அவன் கைகால்கள் அறையப்படும் பொழுது, முழுக்க முழுக்க மனிதனாய் வதைபட்டு வெற்றுக்கூடாய் ஆன பிறகு. என்ன நிகழ்ந்து விட முடியும்.

செந்தாடிக்காரன் பேசுவது பெரும்பாலும் தனக்குள்ளேயே தான். எதிராளி ஒரு வெற்று சுவர். தன்னுள் தர்கித்து ஒரு சுழல் போல அவனது குரல் அறையெங்கும் அலையெழுப்பிக் கொண்டிருந்தது.

இல்லை! இல்லை!

அவனை காப்பாற்றியாக வேண்டும். அவனை மீட்கும் பொருட்டு எதிர்ப்பவர்கள் அத்தனை பேரையும் கொல்லலாம்.  நாம் அவனைக் காப்பாற்றியாக வேண்டும். அதிசயங்கள் நிகழும். நம்பிக்கையின் மீது நம்பிக்கை கொள்வோம். நாங்கள் சாக விடமாட்டோம். டேவிட்டின் ஒளி பொருந்திய முடி அவன் தலையினை அலங்கரிக்கும். அவனே விண்ணிற்கும் மண்ணிற்கும் அரசன்.

நீ கேட்கவில்லையா? தச்சன் மகனே?

எதிரே பழுத்த சுவரைப் பிளந்து அறையப்பட்டிருந்த களிம்பேறிய ஆணியில் குத்திட்டு நின்றது இளைஞனின் கண்கள். அதன் முனையின் வட்டச்சுழியில் நிலைத்திருந்தது அது. அடுத்த அறையிலிருந்து கிழவரின் வலி பொருந்திய சொல் அடித்தொண்டையிலிருந்து விம்மி உடைந்து சிதறி அரையெங்கும் உதிர்ந்தது.

எதிரெதிர் கூர் நுனிகள். எதிரொலிக்கும் பள்ளத்தாக்குகள். அசைய மறுக்கும் குத்துப்பாறைகள்.  சுழன்று கொண்டே இருக்கும் நீள் வட்டச்சுருள்கள்.

மனிதன்! மனிதன்! எல்லாம் போலி! போலி!

நமது ரட்சகன் இந்த வழியில் வரப் போவதில்லை. சுவரை வெறித்துக் கொண்டே நடுங்கும் குரலில் இளைஞன் பேச ஆரம்பித்தான்.

ஆம்! என்றுமே இங்கு வரப்போவதுமில்லை.

தேவனோ மனிதனோ யாருமே வரப்போவதில்லை. நாம் பூனையின் கூர் நகங்களுக்குள் பந்தாடப்படும் சுண்டெலி போல மரணத்திற்கிடையில் நித்தியமாய் அகப்பட்டுக் கொள்வோம். எந்த மணி மகுடமும் அரசாண்மையும் அவனுக்கு கிடைக்காது. அம்மணமாய் அவன் சிலுவையில் தன்னந்தனியே அறையப்படுவான். காலத்தினுள் கரைந்தொழிவது ஒன்றே அவனுக்கு சாத்தியப்படும். கொதிக்கும் குத்துப்பாறைகளுக்கிடையில் தனித்த பிணமாய் அவன் எஞ்சுவான். எந்த தேவனும் அவனுக்காக வந்திறங்கப் போவதில்லை.

உனக்கெப்படி தெரியும்? யார் சொன்னார்கள்?

பதிலேதுமின்றி ஜீர வேகத்தில் எழுந்தான். பகலின் வெளிச்சம் அறையின் அந்தரங்கங்களை ஊடுருவிப் பரவியது. கையில் உளி, சுத்தியல் மற்றும் ஆணிகளை எடுத்துக் கொண்டு கீழே கிடந்த சிலுவையினை அணுகினான்.

உனக்கு வெட்கமாக இல்லை. எல்லோரும் எல்லா தச்சர்களும், நாசரேத்திலும் கனாவிலும் கப்ரேனிலும் ஒதுக்கிய கீழ்மைச் செயலை நீ செய்து கொண்டிருக்கிறாய்.

இளைஞனைப் பிடித்திழுத்து சுவரோடு சுவராக பதித்து, ஓங்கி அறைந்தான்.

நீ ஒரு சுய நலமி என்றான். ஆனால் அவனது கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தான். ஏன்? ஏன்? அது மிகுந்த தன்னிரக்கத்தை உண்டு பண்ணியது.

பசித்த மிருகத்தின் மூச்சினைப் போல, பாலைக் காற்றின் அலைச்சல்.  காய்ந்த முட் பரப்பாய் சாம்பல் வான். உள்ளும் புறமுமாய் பூச்சிகளின் மென் உராய்தல். மரங்களின் பருத்த அடித்தண்டை ரம்பத்தினால் கீறுவது போல, அந்தக் குரல் அன்னகரின் வீடுகளின் சுவர்களைப் பிளந்தது. செந்தாடிக் காரன் மெல்ல கதவினருகில் வந்து கவனித்தான்.  பெரும் மக்கள் திரள். அவர்களின் அழுகை, விம்மல், எல்லாம் குழம்பி துண்டிக்கப்பட்ட இசைக்கருவியின் ஒற்றை நரம்பைப் போல ஓலமிட்டது.

மக்களே! ஆப்ரகாமின் உதிரத் துளிகளே! ஈசாக்கின் வழி வந்தவர்களே! ஜேகோபின் பிள்ளைகளே!

கேளுங்கள்!

மாட்சிமை பொருந்திய நம் பேரரசின் கட்டளை என்னவென்றால், நமது வீழ்ச்சியடையா செங்கோல் ஏந்திய மாமன்னரின் ஆணை. அவரை எதிர்த்த கலகக்காரனுக்கான தண்டனையை நிறைவேற்றப் போகிறோம்.  நாட்டின் துரோகியை சிலுவையில் அறைந்து கொல்லும் தண்டனையை நாட்டு மக்கள் அனைவரும் காணவேண்டுமென்பது அரச கட்டளை!

-The Last Temptation of Christ -Nikos Kazantzakis


சனி, 24 நவம்பர், 2018

கிறுஸ்துவின் கடைசி சபலம் 9

அறை முழுதும் வியாபித்திருந்த உள்ளீடற்ற தன்மை.

முடியவில்லை! முடியவில்லை! வேண்டாம்!

ஒரு படலமாய் காட்சிகள் உருளத் தொடங்கின. நினைவின் பொந்துகளிலிருந்து மெல்லப் பத்தி உயர்த்தியது நிகழ்வுகள். நெசவு ஓடத்தைப் போல முன்னும் பின்னும் நகர்ந்தது காலம்.

ஒரு திருமண நாளாக அது இருந்திருக்கக் கூடும். காலைப் பொழுதின் ஒளியின் பச்சை அரும்புகள் தளிர்த்த சைப்ரஸ் மரங்கள், பெண்டுலம் போல அசைந்தாடிக் கொண்டிருந்தது. ஈச்ச மரங்களில் குருவிகளின் கீச்சிடல். பல்லாயிரம் சிறகடிப்புகள் தலைக்கு மேலே. பனி படர்த்திய மேகங்களின் இடைவெளியினுள்ளிருந்து ஒளி மஞ்சள் பிரகாசத்துடன், துலக்கமற்ற ஒளியினூடாக அவர்கள் அந்த தோட்டத்தினுள் நின்று கொண்டிருந்தனர். விசேஷ நாளுக்கே உரிய குதூகலம் ததும்பும் முகத்துடன் அவர்கள் தங்களுக்குள் உரையாடிக் கொண்டும் வரவேற்றுக் கொண்டும், விசாரித்துக் கொண்டும் இருந்தனர்.

ஜோசப் மிகுந்த மகிழ்ச்சியுடன் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்றுக் கொண்டிருந்தார். வைன் மற்றும் மாவினால் செய்யப்பட்ட இனிப்பு பலகாரம் எல்லோருக்கும் பரிமாறப்பட்டிருந்தது. ஒவ்வொருவரையும் தனித்தனியே அருகில் சென்று அணைத்து ஜோசப் உரையாடிக் கொண்டிருந்தார்.

ஏன்? ஏன்? அது நிகழ்ந்தது?
கேவிக் கேவி எழும் அழுகை...
நான்! நான்! நான்! என்று பிதற்றிக் கொண்டே இருந்தான் இளைஞன்.

தனது தந்தைக்கருகில் பிரமை பிடித்தவன் போல நின்று கொண்டிருந்தான் அவன். அவரைத் தூக்க கூட முயற்சிக்காமல் வெறுமனே வெறித்தான். தலை குப்பற அவன் முன்னே கைகால்கள் முறுக்கிக் கிடக்கும் ஜோசப்பின் நிலை குத்திய விழி அவனை சந்தித்து ஸ்தம்பித்து நின்றது. மெல்ல அவரை மடியில் இருத்தி கன்னங்களை தடவிக் கொடுத்தாள், செவுளில்  இரு முறை அறைந்து அவரை பெயர் சொல்லி விளித்தாள், அவனின் தாய் மரியம்.

நானும் அவரது நகல் தான் ஒரு வகையில்.  ஆம்! பயம்! அதிலிருந்து தப்பிக்கவும் அதனுள் சிக்கி அலைக்கழியவும் தானே நானும் செய்து கொண்டிருக்கிறேன் அவரைப் போலவே. தன்னால் ஆழம் காண முடியாத, மறுமுனை எங்கோ பிணைக்கப்பட்டு கட்டுண்டு கிடக்கும் வன விலங்கைப் போல.

என்னால் என்ன செய்ய முடிந்தது?

இவர்கள் அனைவருக்கும் நான் அளிப்பது ஒரு நுகத்துடியைத் தான். அவர்களை விட்டு காலத்துக்கும் அகலாத பாரத்தை நான் அளித்துக் கொண்டிருக்கிறேன்.

என் தந்தை? மக்தலேனா? இவர்கள் ஏன் என் வாழ்வினுள் வந்து சிதைந்து கொண்டிருக்கின்றனர்?

உனது சொந்தத் தேடலுக்கு பலியிடப்பட்டவர்களா அவர்கள்?

சொந்தக் காயங்களை  தன் நாவினாலேயே நக்கி நக்கி  ஆசுவாசப்பட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு இரவிலும் அது நீண்டு கொண்டே இருக்கிறது, என்னைச் சுற்றி நானே உருவாக்குகிறேன் இந்த பாழ் குழியை. அதனுள் அடியாழமேயற்ற சூனியத்துனுள் விழுந்து கொண்டே இருப்பதையே என் கனவுகளிலும் நனவிலும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

ஒரு பிரார்த்தனை போதும் என்னை மீட்டெடுக்க. சுயமிழந்து விடுதல். உன் பெரும் மழையின் ஒற்றைத் துளியாவது. உன் வானத்தில் இலக்கற்ற சிறகுகளாவ்து! உன் பூமியில் மறுதலிக்க முடியா விதையாவது! உன்னிலிருந்து முளைத்துக் கொண்டே இருப்பது. ஆனால்! ஆனால்! நான் நான்! எங்கும் முளைக்கப் போவதில்லை.

ஒற்றைச்சொல்! தந்தையின் நாவிலிருந்து வழுகி வழுகி தரையெங்கும் நசுனசுத்தது.

தன்னை ஒவ்வொரு அணுவாகப் பிளந்து கொள்வதைப் போல, கூர்மையான உகிர்களால் அந்தக் குரல் அவனிடத்தில் இறைஞ்சிக் கொண்டிருந்தது. அண்டை வீட்டிலிருந்து மெல்ல முன் நகர்ந்து கொண்டிருந்தது ஒரு ஒற்றை விளி.

மரங்களும் தளிர்களும் புல் பூண்டுகளும் நிலமெங்கும்  ஆகாயத்தின் ஈரத்தை உறிஞ்சி காலையை எழுப்பியது. சந்தடிகளில் மனிதர்களின் நெடி. ஒளித்துளிகள் விண்ணின் நாவாய் தன் கிரகணத்தின் வெண் சிவப்பால் நேற்றையதின் அழுக்குகளை ஒற்றியெடுத்துக் கொண்டிருந்தது.

அவன் தன் முன்னே வெறிக்கும் பழுப்பு நிறச்சுவரை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

தெருக்கள் வழமையாய் ஓடத் தொடங்கியது. ஒரு மீறலின் ஓலம். பித்து மொழியில் அவனை சூழ்ந்து குழுமியது.

நீ மரந்து விட்டாயா? ஓ! இஸ்ரவேலின் தெய்வமே! இன்னும் எத்தனை காலம்? இந்த ஏழைகளை நீ ஏமாற்றி விட்டாயா?

தழும்பும் நீரலைகளைப் போன்ற கேவலுடன் தயக்கமுற்று அந்தக் குரல் அந்தர வெளியில் நடுங்கிக் கொண்டிருந்தது.

முன் நெற்றி தரையில் வீழ அவர் பரிதவித்தார். தேவனே! எம்மை ஏற்றுக் கொள்ளும்! ஆற்றாமையின் ஏக்கத்தின் பலவீனத்தின் அலைவுகளுடன் ததும்பிக் கொண்டிருந்தது அந்த பிரார்த்தனை.

இளைஞன் தன்னுள் அழுந்துவது போல சுவரை ஓங்கி அறைந்தான். உள்ளங்கையின் அடிப்பாகம் கன்றிச் சிவந்தது.

தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான்...ஆம்! பிரார்த்தனைகள். மறுமையைத் தேடிக் கொண்டிருக்கும் அனல் கங்குகள். பற்றிக் கொள்ள விழையும் தழல் நுனிகள். இவையல்ல! இவையல்ல! நான் தேடுவது. குளக்கரையின் நுனிகளில் எந்த இலக்குமின்றி அலைந்து கொண்டிருக்கும் பாசிகளைப் போல இருக்கின்றன எனது தேடல்களும் பிரார்த்தனைகளும்.

தொய்ந்து ஊசலாடும் ஆடைகள், தோளிலிருந்து நழுவி தொங்கியது. வெளிரியிருந்த அவனது உடலில், புஜங்களும் உள்ளங்கைகளும், மணிக்கட்டை நரம்புகளும் சற்றே புடைத்திருந்தன. அனிச்சையாய் ஆடைகளை இழுத்துக் கொண்டே அவரது காலடிகளில் தளர்வுற்று வீழ்ந்தான், தாகம் கொண்ட வனமிருகம் தடாகத்தினுள் தலை முக்கிக் கொள்வது போல.

உள்ளொடுங்கிய வாதை மீதிறும் பதற்றம் தொக்கிய மிரட்சி ஒரு நிலைத்த பாவமாய் அவன் முகத்தில் இருந்தது. கன்னங்களில் தாடையில் அடர் சுருள் தாடி. சற்றே நீண்ட வளைவில்லாத மூக்கு. வரியோடிய உதடுகள் பிரிகையில் பழுப்பு நிறப் பற்கள் தெரிய சிரித்தான். தகிக்கும் விழிகள், சொப்பனங்களின் நீள் வட்டத்தை சதா சுற்றிச் குழன்று கொண்டே இருக்கும் போதைத்தன்மையைக் கூட்டியது.

தொலைவின் அப்பால் பல்லாயிரம் நிழல்களின் அடர்சுழல்.

-The Last Temptation of Christ -Nikos Kazantzakis

புதன், 21 நவம்பர், 2018

கிறுஸ்துவின் கடைசி சபலம் 8

அவனது கட்டிலைச் சுற்றி பல்லாயிரம் கால்களுடன் ஊறும் பூரானைப் போல ஒரு குரல் இல்லை ஒரு முணங்கல். சுவாசம் திணறத் திணற அடைபட்டு திமிறிய இளைப்பில், அது ஒரு மனித விளி போலவே இல்லை. பக்கத்து அறையில் இருந்த அவனது தந்தை. இளைப்பு நோயால் இரவு முழுமைக்கும் விடுபட்டு விடுபட்டு முணங்கிக் கொண்டிருந்தார். முடக்கு வாதத்தால் ஒடுங்கிய உடல், முதுகெங்கும் புண்கள். உறக்கமின்றி ரத்த சிவப்பாய்க் கன்றியிருந்தன கண்கள். வார்த்தைகளை கோர்க்க முயன்ற எத்தனிப்பில் சிதறிய மொழியாய் அவரது குரல் எதொரொலித்தது.வாயோரத்திலிருந்து வழிந்த எச்சிலை புறங்கையாய் துடைக்க எண்ணி இழுபட்டு முறுக்கினார். ஒரு ஒற்றைச்சொல்! ஒலிப்படலமாய் அறையின் சுவரெங்கும் சார்த்தியது,
பிதாவே! என் பிதாவே!

ஒற்றைச்சொல்லைத் திரும்பத் திரும்பத் திரட்டிக் கொண்டிருந்தார். நாள் முழுமைக்குமான பிரார்த்தனையாக அது இருந்தது.

இது என் தவறு! பெரும்பாவம்! பெரும்பாவம்!

இளைஞன் தன்னுள் ஆழ்ந்து அழுது கொண்டிருந்தான். இரவு இத்தனை அமைதியாக இருப்பது சூழலை இன்னும் கனத்தது. அந்த ஒற்றைச்சொல் மந்திர உச்சாடனை போல இவனது நாவிலும் நிலைத்தது.

அகன்ற கிணற்றின் சுவர்களில் முளைத்துக் கொண்டிருக்கும் தாவரங்களைப் போல உறக்கம். பாதி செதுக்கி வைத்திருந்த குறுக்கும் நெடுக்குமான கட்டைகளைத் தாண்டி வாசலில் நின்று கொண்டிருந்தான் செந்தாடிக் காரன். தழலிடும் புன்னகையுடன் அதை நோக்கினான். ஒரு முழு மனிதனை தொங்க வைக்க ஏதுவாக அது அமைக்கப்படிருப்பதை பார்வையாலேயே கணக்கிட்டுக் கொண்டு மெல்ல அவன் அருகில் நெருங்கினான்.

கனவுதான் கனவல்ல. வெளிச்சத்திலிருந்து இருள் நோக்கி செல்லும் நிலம். உறக்கம் துளை வண்டாக உரு மாறி அவனுள் குடைந்து குடைந்து மெல்ல முன்னேறிக் கொண்டிருந்தது.

சுவரை வெறுமனே பார்த்து வெறித்துக் கொண்டிருந்தான் இளைஞன். தலைக்கு மேலே வார்ப்பட்டை தொங்கிக் கொண்டிருந்தது. அதன் கூர்நுனிகளில் இன்னும் முழுதாய் காயாத ரத்தம் தோய்ந்திருந்தது. நிணத்தின் உப்பு நாற்றம் இன்னும் அடங்கியிருக்கவில்லை. வலி! உண்மையில் அதைப் போல ஆசுவாசப்பட என்ன இருக்கிறது. தனிமையினுள் அதை மட்டுமே துணைக்கு வைத்திருக்கிறேன். ஆம் அருகில் ஸ்தூலமான இன்னொரு உடல் போல அது எப்பொழுதும் என்னுடனேயே இருக்கிறது. மறுதலிக்க முடியாத ஒன்றை கூட்டாக வைத்திருப்பதன் மூலம் நான் என்ற ஒன்றிலிருந்து வெளிவந்து விடுகிறேன். என்னைச் சுற்றிக் குழுமும் அனைத்திலும் ஊதி ஊதி பெருக்கிக் கொள்ள என்னிடம் என் வலி உண்டு என்பது மட்டுமே இன்னும் ஒரு இரவைக் கடப்பதை சாத்தியமாக்குகிறது.

தன்னைத் தானே கொல்ல விரும்பும் உவகை! உடல் மட்டுமேயானது நம்முள் நிரம்புகையில் அதன் குறுகிய எல்லையினை, அதனுள் பதுங்கிக் கொள்ளும் பொழுது உருவாகும் போதையினுள் மெல்ல மெல்ல அமிழத் தொடங்கி விடலாம். அதன் பின்னான உறக்கத்தில் நான் எனும் உணர்வற்ற ஒன்றை உருவாக்கிக் கொள்வான். தன்னிலிருந்து மீள வேறு ஆது வழியும் அவன் அறிந்திருக்கவில்லை.

ஆனால் உறக்கம் அதனை மட்டும் கொண்டிருக்கவில்லை. சுயமற்ற ஒன்றினுள் முழுகியவுடன் வேறோரு திறப்பினுள் வந்து வீழ்வான். அங்கு கட்டுண்ட தனது உடலையே மறுபடியும் காண்பான். நெருங்க நெருங்க கை கால்கள் இழுபட தசைகள் முறுக்க கீழே விழுந்து துடித்துக் கொண்டிருப்பான். வாயில் நுரை தப்ப அரைபடுகையில் கட்டுப்பாடற்ற வன் கரங்களின் மத்தியில் நசுக்கப்பட்டுக் கொண்டிருப்பான். விழிப்பு தட்டியதும் தன்னிரு கைகாளலேயே தன் உடல் முழுமைக்கும் தொட்டுப்பார்த்துக் கொள்கையில், அந்த ஒற்றைச்சொல் எதிரொலிக்கத் தொடங்கும். பல்லாயிரம் குரல்களின் ஊடாக அதனைக் கோர்த்துக் கொண்டிருக்கும் சரடாய் இருள் அறையினுள் அங்கும் இங்குமாய் நகர்ந்து கொண்டிருக்கும்.

-The Last Temptation of Christ -Nikos Kazantzakis