புதன், 25 ஜூலை, 2018

கிறுஸ்துவின் கடைசி சபலம் 2

நாள் முழுதும் செய்த வேலையின் அயர்ச்சியில் மரத்தூள் படிந்த தேகத்துடன், ஆழ்ந்த சுவாசம் மீறிட படுக்கையில் வீழ்ந்தான். சிலந்தி வலையாய் உருமாறிய கரு நீல வெளியினுள் முடிச்சுகளுக்குள்ளிருந்து அகப்பட்டுத் துடிதுடிக்கிறது விடிவெள்ளியின் ஒளித்துணுக்கு, பாரம் அழுந்தும் அவன் தலைக்குப் பின்னிருந்து வேர் முண்டுகள் முளைப்பது போல கழுத்தினடியில் ஊறியது. ஆழ்ந்த உறக்கத்தில் மெல்லிய மூச்சுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக நீர்த்தும்பிகள் சலசலப்பது போல அந்த அறையினுள் குமுழியது.
மங்கிய வெளிச்சத்தினுள் செந்தாடிக்காரன். வியர்வை ஒட்டிய தேகம். சுருக்கங்கள் படர்ந்த நெற்றி. கங்கு தனக்குள் அமிழாமல் காற்று ஊடுருவ ஊடுருவப் புகை கக்கிக் கனல்வது போல எண்ணங்கள் கொத்திக் கொண்டிருந்தது. நிலையாமை இல்லாத பார்வையுடன் வெறித்துக் கொண்டிருந்தான். பிதற்றல் போகப் போகப் ரணம் உமிழும் சொற்களுடன் கீறிக் கொண்டிருந்தது. எதிலும் மையமற்ற வார்த்தைகளின் சுழல் அலைந்து அலைந்து முட்டிக் கொண்டே இருக்கும் கடல் நுரை போல, அடிபட்ட வன் மிருகம் போல தழலிட்டுக் கொழுந்தது.
“பிதாவே, எத்தனை நாட்கள்? இன்னும் எத்தனை காலம்?
முதுகில் முட்கள் கொண்ட பல்லிகள் தங்கள் பார்வையில் பெரும் சோகத்தைத் தேக்கிக் கொண்டிருக்கும். அதே மிருகம் ஊன் உண்ணும் பொழுது நோக்குகையில் அந்தக் கண்களின் பித்துப் பார்வை. அது மெல்ல மெல்ல லாவகமாய் உணவை முழுவதுமாய் விழுங்கத் தொடங்கும். சொற்களும் அடிப்படையில்  ஊரும் ஊன் மிருகங்கள் தான். அது அதற்கான பசியுடன் சுற்றிக் கொண்டும் பதுங்கிக் கொண்டும் நோக்கும். அதன் பலி கிடைக்கையில் அங்கு எந்த விதிகளும் செல்லுபடியாகாது. பெரும் சோகம் கனத்த வெறியாக உருக்கொள்ளும். பசியுடன் இந்த பாலை நிலத்தில் பதுங்கியிருக்கும் ஜீவ ராசிகள் எல்லாவற்றிலும் உறைந்திருப்பது அது. சொற்களின் கனத்த ஊற்று புரண்டு உருவாகிய வெளுத்த மணல்வெளியின் ரேகைகளிலெல்லாம் நினம் பிதுங்கி முயங்குகிறது.
தனக்குள் உருவாகிக் கொண்டிருக்கும் சொற்களைத் திரும்பத் திரும்பக் கடைவாயில் அதக்கிப் பிழிந்துக் காறி உமிழ்ந்தான். பசித்த மணல்வெளி நாகங்கள் போன்றது. உறிந்து கொண்டே இருக்கும் அதன் நாளங்களில் நெருப்பு ஜிவாலை எரிகிறது. அனல் விஷக் கண்களுடன் தன்னைத் தானே உற்று நோக்கி மேலும் மேலும் அதைப் பெருக்கி எரிக்கிறது.
இறைவன் அளித்த நிலம், இதனைக் கானான் என்றனர். தூரத்து விளக்கொளியின் நடுக்கத்துடன் மினுங்கும் நிலத்தின் எல்கை முடிவிலாத் தூரம் வரை கையளிக்கப்பட்டிருந்தது. தெற்கே இதுமியா. ஊர்ந்து கொண்டே இருக்கும் நிலம். அரவங்கள் தங்கள் பாதைகளைக் கண்டறியும் தோறும் அது விரிந்து கொண்டே இருக்கிறது. நிலங்கள் தங்கள் மனிதர்களைக் கண்டறியும் பொழுது அது காந்தச் சுழற்சியில் அதிறும் இரும்புத் துகள்கள் போல உருமாறத் தொடங்குகிறது. ஆனால் நிலம் மனிதனிடம் எப்பொழுதுமே இருப்பதில்லை. மனிதர்கள் உருவாக்கிக் கொண்டிருப்பது வெறும் எல்லைகள் தானே. ஆனால் பற்றிப்படரும் வேர் முண்டுகளில் ஒளிந்திருக்கும் ஆதி வெறி தனது எல்லைகளைத் தனக்குத் தானே உருவாக்கிக் கொள்ளும். இது கடவுளர்களின் நிலங்களுக்கும் பொருந்தும்.
மறு எல்லையில் கனத்து நொதித்துக் கிடக்கும் மரணக்கடல். அலைகளின்றி இரையெடுத்த கரு நாகம் போல சுருண்டு அயர்கிறது. மரணமும் கடலும் ஒன்றே தான். ஒவ்வொரு மரணமும் மிகவும் கரிப்புடனேயே நம்முள் உறைகிறது. அது நம் மரணம். நாக்குகள் இல்லாத உலகில் மரணம் மென் சுனை போல அடித் தட்டி முணங்கிக் கொண்டிருக்கும். ஆழமற்ற அதன் கரைகளில் பாசித் துணுக்குகளாய் அல்லாடுகிறது நிலமெனும் காட்சிப்பிழை. ஜெருசலேமின் மக்களின் நிலம். அது கட்டளைகளை நியமிக்கிறது. கட்டளைகள் மனிதர்களைக் களிமண் பிண்டமாய் உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன. கட்டளைகளின் பாதுகாப்பு நெடி அவர்களின் குதத்தில் நிரந்தரமாக பொதிக்கப்படுகிறது. அவர்கள் அமைதியுடனும் நிம்மதியற்றும் ஒன்றாக வாழ்கின்றனர். தத்தமது குதங்களை முகர்ந்து கொண்டு வாழ்வதின் ஊடாக அவர்கள் நிச்சயத் தன்மையெனும் பிண்டத்தை உருவாக்கி வணங்கினர்.
நகர் நடுவே வணிகச் சந்தையின் ஊடாக புனலெடுத்து வழிந்து ஊடுகிறது குருதி. ஆடுகளும் தீர்க்க தரிசிகளும் தான் பலிக்கு உகந்தவர்கள். அவர்களின் பலி இறைச்சியின் மென் சூட்டினைப் பிழிய பிழியக் கதைகளை உருவாக்கி விடலாம். கடவுளின் பாதத் தூளிகளில் நெளியும் இறைச்சித்  துணுக்குகளில் தூபங்கள் எரிகின்றன. மானுடம் நிலம் எனும் பெருங்கனவிலிருந்து தங்களது கடவுளர்களுக்கு படைக்கப்படும் ஓராயிரம் கனவுகளில் இந்த ரத்தத்தின் சிவப்பன்றி ஏதும் உகந்ததல்ல. சிவப்பினைப் படைப்பதன் வழி நாம் உருவாக்குகிறோம் ஒரு நித்தியத்துவத்தை. அழியாத ஒன்றின் மூலமாய் உருவாக்கிய சொற்களின் மந்திரம் இந்த செங்குருதியினால் கழுவப்படும் பொழுது மட்டுமே பூரணமாகிறது, நிலையற்ற வாழ்வின் பெருஞ்சுழற்சி. அதன் பின் அழுக்கு படிந்த சுமேரியா. கடையெல்லையில் வெம்மையும் பசுமையும் சூழந்த சிறு நிலம் கலீலி.

ஜோடான் நதிக்கரை. கண்ணாடிக் குழாய்கள் போல பெருக்கெடுக்கிறது நதி. ஆழமும் ஆழமின்மையும் நொதிக்கும் திரவக் குழி. கரைகளில் தழும்பிக் கொண்டிருக்கும் மணற் துகள். குவிமையமின்றி காட்சி பிளர்ந்தது. முன் பின்னற்ற காலவெளியில் துடுப்பின்றி அலைக்கழிந்தது. இங்கும் அங்குமாய் உருவாகின வெளிச்சக் கீற்றுகளும் இருளின் அடர்ந்த நிழல்களும். தவிப்புடன் ஒவ்வொரு முறை அந்த இளைஞன் மீட்க முயன்றபொழுது அவனது மூடிய இமைகளினுள்  தூண்டில் மீன்கள் போலத் துடிதுடித்தன விழிகள்.  

 The Last Temptation of Christ- Nikos Kazantzakis

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக