ஞாயிறு, 29 ஜூலை, 2018

கிறிஸ்துவின் கடைசி சபலம் 3

வானம் வெளுத்திருந்தது. ரத்த நாளம் போல வெண் மலைப் பாறைகளுக்கிடையில் பீறிட்டு சாடியது நதி. பெரிதும் சிறிதுமாய் சரளைக்கற்கள் பரந்த கரை. முட்டி அளவு ஆழத்தில் அவர்கள் முழுக்க அம்மணமாய் நின்றிருந்தனர். தேன் கூட்டின் ரீங்கரிப்பு போல மந்திர ஜபம் அத்துவான வெளியில் இறைந்தது. தலைவிரி கோலமாய் பெண்கள் கூச்சலிட்டு அழுதனர். ஆண்களும் பெண்களும் முழுக்க நிர்வாணமாய் அந்த நதியினுள் அமிழ்ந்திருப்பது ஒரு சேரக் கவர்ச்சியும் அச்சமும் தொற்றியது. கரையில் இருந்து பழுத்த மணற்துகள் காற்றின் கீறலில் சீறிட்டு அவர்களின் உடல் எங்கும் படிந்தது. ஒவ்வொரு மந்திர ஒலிக்கும் ஒரு சூழல் நதியினுள் உருவாகிக் கலைந்தது.

பெரிய அங்கியுடன் கனத்து நுரைக்கும் வெண்தாடியும் பின் வழுக்கைத் தலையும் பாலைக்கே உரிய நீண்ட முக ரேகைகளுடன் ஒரூ வயதானவன் அவர்கள் நடுவில் நின்றான். ஒவ்வொருவர் தலையிலும் நதியின் செந்நீரைத் தெளித்து பைத்தியக் களையில் வானை நோக்கி பிதற்றி அழுதான். சூழல் வலுத்துக் கொண்டே இருந்தது. செந்நிற நதி ஒரு குழம்பாய் கொப்புளங்களாய் நொதிக்கத் தொடங்கியது. மணல் காற்று ஒரு கணத்த போர்வையாய் சூழ்ந்து மூடியது.

கலங்கி வடிந்த பின் அடிமண்டிய ஆனால் ஆழம் மிகுந்த சேற்றுக் குழியாய் குழைந்தன எண்ணங்கள். கனவினைத் தொகுக்க முயல சாரமற்ற காட்சிப் பிம்பமாய் நினைவினில் அலையாடியது. கண்களை இறுக்க மூடி தனக்குள்ளேயே முணங்கிக் கொண்டிருந்தான். பாலைக்குள் இருள் தாவர உண்ணியைப் போல கதவிடுக்குவழி அசை போட்டுக் கொண்டிருந்தது.

இரு வெற்றுப் பாளங்களுக்கிடையில்
முளைத்தெழுகிறது ஒரு அனிச்சை சொல்
தலை கீழாய் படம் விரிக்கின்றன நடசத்திரங்கள்
 உள் நுழைகின்றன ஒளி நாக்குகள்
வெளிச்சத்தின் தீ
ஒரு அனிச்சை சொல்
மந்திரமாவது எப்போது
தாழ்ந்து உயர்கிறது
கனவின் நிலம்
இரு வெற்றிடங்களுக்குள்
இடைவிடாது நிரம்புகிறது...
அது...

வெளிச்சம் புண்ணிலிருந்து பிதுங்கி வழியும் பழுத்த கோழையாய் அடர்ந்தது. பின் அதுவே மந்திரம் படிந்த பல் வேறு குரல்களில் அறையெங்கும் வளையம் வளையமாய் நெளியத் தொடங்கியது. கனவு நிலம் நீரில் மிதக்கும் பிம்பம் போலத் தடமழிந்தது.

தியிட்ட சிதல் புற்றில் இருந்து கிளர்ந்தெளும் கரையான் கூடடத்தை போல நாலா புறமும் சிதறித் தெறித்தது மனித உடல்கள். அவன் முதுகுக்கு பின் குத்திட்டு காத்திருந்தது கட்டுண்ட மிருகத்தின் வெறிப்பார்வை. வெகு தொலைவில் ஒளியை ஊடுருவிக் கொண்டே நகர்ந்து வரும் பல நூறு உருவங்கள். புள்ளிகள் பெர்தாகிக் கொண்டே வட்ட வடிவம் கொண்டது. அதன் நிழல்களின் மொத்தையான கருமை வெளிச்சத்தினுள் இருந்து வெளிவர, சுருண்டு புரளும் வீரியன் குட்டிகள் போல ஒளி மொலுமொலுத்தது. நெருங்க நெருங்க முரணான அங்கங்கள் கொண்ட விகார ரூபங்களாய் அந்த குள்ள மனிதர்கள் வந்து கொண்டிருந்தனர். அடித்து சப்பிய முகங்களும் இழுபடும் நார்த்தாடிகளும் கொண்ட குள்ளர்கள் வசைகளால் சபித்துக் கொண்டே இவனை நோக்கி வெறி பிடித்தார் போல் ஓடி வந்தனர்.

இரும்பாலான கூர் ஊசிகள் கொளுத்தப்பட்ட வார்ப்பட்டை, கத்திகள்,கோடாரிகள், கொக்கிகள், துருவேறியா நீள் ஆணிகளுடன் மரணத்தின் அறைக் கூவலுடன் அவர்கள் நெருங்கினர். கனவிற்குள்ளும், அதிலிருந்து வெளியேறி நினைவிற்குள்ளும் தாவிக் கொண்டே இருக்கும் பிரங்ஜை. தூசுப்படலம் போல திரையினுள் காட்சிகள் மாறி மாறிக் கலைந்தது.

மாட்சிமை பொருந்திய மகுடத்தை அவர்களில் ஒரு மாறுகண் குள்ளன் தன்னிடம் இறுக்கப் பற்றிக் கொண்டிருந்தான். தரையில் சதைக் கோளங்களாய் அமிழ்ந்து கிடக்கும் மூன்று குள்ள உடல்கள். செந்தாடிக்காரனின் கைகளில் பெரிய அகன்ற மனிதத் தலை, கண்கள் பிதுங்க ஊசலாடிக் கொண்டிருந்தது. முடிக்கற்றையை இறுக்கி பிடித்து வைத்திருக்கும் அவனது புடைத்த நரம்புகளில் குருதி சேற்றுக்குழம்பல் போல சிந்தியது. அவந்து இடுப்பில் இருந்த உடைவாளில் படிந்திருந்த நிணத் துணுக்குகளை மெல்ல தனது வார்க் கச்சையால் துடைத்துக் கொண்டே எதையும் நிலையாக பாராது அங்குமிங்கும் நோட்டமிட்டான்.

அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் நம்பவில்லை. நம்பிக்கையற்றவர்கள் கொன்றழிக்கப்பட வேண்டியவர்கள். கடவுளின் ராஜ்ஜியத்தில் நம்பிக்கை கொள்வோம். அவர்கள் உயிரின் பயனில்லாதவர்கள்.நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. வலிமை பொருந்திய செம்பட்டை மயிரடர்ந்த புஜங்களை உயர்த்தி தொண்டை நாளங்கள் புடைக்க தனது படையினரைப் பார்த்து கர்ஜித்தான்.உங்களின் முன்ணே பரந்து விரிந்து கிடக்கும் இந்த வெற்று நிலத்தை பாருங்கள். அவன் இங்குதான் இருக்கிறான்.

தலைவா! எங்களால் எதையுமே காண முடியவில்லை. இருள் மட்டுமே நிரம்பிக் கிடக்கும் இந்த பிரதேசத்தில் அவனை எவ்வாறு கண்டறிவோம்?

நம்பிக்கையில்லாதவனுக்கு எதுவும் தெரிவதில்லை. அவன் விழிகளிருந்தும் குருடனே!

வெட்ட வெளியில் மர்மமாய் தூவிக் கொண்டிருக்கும் பனிப்படலத்தின் கீழே அவன் கைகளைத் தூண்டிக் காட்டினான். இரையெடுத்த மலைப்பாம்பின் நிசப்தத்துடன் ஒரு நீல ஏரி. உறங்காது உற்றுப்பார்க்கும் ஒட்டக விழியினைப் போல இருளினுள் ஒளிர்ந்தது. சூழ்ந்திருக்கும் வெளி ஜில்லிட்டு சலசலத்தது. பேரிச்சையின் நிழற்தாங்கலில் வெண்மை ததும்பும் சின்னஞ்சிறிய குடில்கள். பளிங்கின் மிருதுவாய்க் குழாங்கற்கள் அந்தக் கரை நிலம் முழுக்க பொதிபொதியாய் கிடந்துருண்டது. கரை மருங்கிலும் சாய்ந்து பரத்தும் வயல் வெளி. காய்ந்த புல் வெளி சூழ்ந்த அந்த பெரும் நிலப்பரப்பை சுட்டிக் காட்டினான். அவன் அங்கு தான் உள்ளான்.

விடியலின் பேரமைதி. மெல்ல மெல்ல சாரைப் பாம்புகளைப் போல விடியல் அக்கிராமத்தினுள் மென் முணுமுணுப்புடன் இருளைச் சுருட்டிக் கொண்டிருந்தது. முழுவதுமாக வெளிச்சம் படராது அங்கும் இங்குமாய் வானின் நீலம் ஊன் மிருகங்களின் மேற் தோல் புள்ளிகள் போல படர்ந்தது. வெளிச்சங்கள் கோடுகளாக ஆவதில்லை. அது புள்ளிகளிலிருந்து பல சுருள்களாய் உருண்டு வியாபிக்கத் தொடங்குகிறது. அதனால் அது தன் நிலையற்ற தன்மையுடன் ஒளிரத் தொடங்கியதும் இருளுக்குள்ளிருந்து உருப்பெறும் நிலம் தனக்கென எந்த எல்லையும் வடிவமும் பெற இயலாது. நாம் காணும் வடிவும் ஒளியன்றி வேறில்லை. ஒளி மட்டுமே வடிவினைத் தருகிறது பின் எடுத்துக் கொள்கிறது. ஒட்டிப் பிறந்த ரெட்டை உயிரினங்கள் போல அது மானுடர்களிடம் போக்கு காட்டுகிறது. ஆனால் ஆதியில் இருளே இருந்திருக்கும். அதற்கு வடிவங்கள் ஒரு பொருட்டல்ல. வடவற்ற ஒன்றை மனிதன் அறிய இயலாது. அதனால் எளிதில் ஏற்றுக் கொள்கிறான். ஒளி உருவாக்குகின்ற வடிவங்கள் அவனை காலத்திற்கு அப்பாற்பட்டு வழி நடத்துவதாக உருவாக்கிக் கொள்வது வெறும் மாய எண்ணமே. ஒளி உருவாக்குவது நாம் காண எண்ணிய வடிவை மட்டுமே ஆதலால் நாம் இருளைப் பூசிக் கொள்ளலாம். இருள் நமக்கு வழிகாட்டும். திசை திருப்பாது. ஒளியினூடாக உருவாக்கும் நிலம் அதன் தனித்தன்மையை இழந்து உருமாறிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

இருளுக்குள்ளிருந்து ஊற்றெடுப்பது போல ஒளி எல்லையை விரித்து பீறிட்டது. உறக்கம் தலைக்கு மேலே ஒரு மென் சுனையாய் ஓடிக் கொண்டிருந்தது. இரவின் கருமை பூசிய மென் படலம் அறையைச் சுற்றி இன்னும் பதுங்கியிருந்தது. மெல்ல கோதம்பு மணிகளின் இறைச்சி நிறம். செந்தாடிக் காரனின் மணிக்கட்டை நரம்புகளின் பச்சைக் குருதி நிறம். நூற்சரடில் தொங்கி அலையும் உலோகக் குண்டாய் கனவிலிருந்து உருவெளி வடிவாய் நிறங்கள் உருகி வழிந்தது.

கனவு அல்ல எனவும் கனவுதான் எனவும் தொலவற்றதும் அருகிருப்பதுமாய் ஒரு மாபெரும் கரிய நிழற் தோற்றம் அவனைச் சுற்றி மெல்ல மெல்ல குழுமிக் கொண்டே இருந்தது. அனைத்தையும் தொட்டு விட முயன்று எதுவும் மீளாத மருட்சியில் கண்களைக் கசக்கிக் கொண்டே எழுந்திட உந்தினான். முக்கி முணகி எழ முயல கனவு கண்ணாடிப்பரப்பு போல அவனையே பூதாகரமாய் உருப்பெருக்கிக் காட்டியது. பின் பல்வேறு உருவங்களிலான உடல்களாலான செதில் வெளியாய் சிதறிச் சிதறிக் கலைந்தது.

கனவு! ஆம். வெறும் கனவு. கனவாக மட்டும் இருந்து விட்டுப் போகட்டும். கண்களை மூடிக் கொள்கையில் திரும்பவும் பெரும் பெரும் சங்கிலிகளால் இறுக்க கட்டிய தன்னைச் சுற்றி அசைய முடியாத வண்ணம் சுவர்கள் எழுப்பப்பட்டது போல அந்த கனவு அவனை உட்கொள்ளத் தொடங்கியது.

The Last temptation of Christ-Nikos Kazantzakis.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக