புதன், 6 மே, 2020

இசை

இரு வானங்களுக்கிடையில் என்ன உண்டு 
மௌனம் என்றாய்
என் இசைக் கருவிகள் துருப்பிடித்திருந்தன
நீ வெறுமனே என் முன்னே அமர்ந்திருக்கிறாய்
உன் இருப்பில் 
நான் அமைதியற்றிருந்தேன்
இறுதியில் நீ அதனை செய்தாய்
சுக்கு நூறாகும் படி அனைத்தையும்
உடைத்தெறிந்தாய்
இரு மண் துகள்களுக்கிடையில் என்ன உண்டு
ஒரு வானம் என்றாய்
பின் ஒரு மௌனம் என்றாய்

- தாகூர்

பறத்தல் அல்லது பாடுதல்

நீ என்னைப் பாட அழைத்தாய்
குழந்தை அன்னை அறியாது மறைத்து வைத்திருக்கும் 
மிட்டாய்த் துணுக்கினைப் போல என் பாடல்களை வைத்திருந்தேன்
சங்கடங்களும் திருப்தியின்மையும்
ஒரு கூன் போல என் குறுக்கில் பொதியப் பட்டிருப்பதைப் பார்த்தாய்
எனக்கு நீலச்சிறகுகளை அளித்தாய்
நான் அறிவேன்
நான் அழிவற்றதைப் பாடுபவன்
உன் விரல் சுட்டிய திசையினில்
நான் பறக்கிறேன்
எல்லையற்று விரிந்த இந்த நீர்மையின் உப்பினைப் பருகுவேன்
நீ பறத்தல்
நான் என் சிறகுகள்

- தாகூர் 


வேணு

நீ என்னை முடிவற்றவனாய் ஆக்கினாய்
இவ்வுடைந்த வெற்றுப் பாத்திரத்தில் 
மீள மீள நிரம்பிக் கொண்டிருக்கிறது
உன் மழை
சின்னஞ்சிறிய என் துளைகளின் வழி முகிழ்க்கிறது உன் மூச்சின் பாடல் 
நீ! உன் ஸ்பரிசம் தொட்டு மீண்டதும்
அழிவற்றதாகிறது
என் உலகம்
என் கைகளுக்குள் அடைபடாத ஒன்றை எப்பொழுதும் பரிசளிக்கிறாய்
இன்னும் இன்னும் என்னுள் நிரம்புகிறாய்
நீ நிரம்ப நிரம்ப நான் நெகிழ்ந்து
கொண்டே இருக்கிறேன்
நீ என்னை முடிவற்றவனாய் ஆக்கினாய்!

தாகூர்

யூமா வாசுகி


இந்த அகால இரவின் சன்னல்களின் வழியேயே அறிகிறேன் உன்னை.  இருண்ட மழை நாளின் ஈசல்களாய் உன் முகம். என் உள்ளறையினுள் தனிமையில் அமர்ந்திருக்கிறேன். அவ்வப்பொழுது எரிந்தணையும் வெளிச்சத் துளிகளிலிருந்து வரைந்தெடுக்கிறேன், உன்னை வெறுப்பதற்கான நியாயங்களை. என் ஓவியத் திரையினுள் என்னவாயிற்று. ஒவ்வொரு முறை  என் வெளிச்சத்தைத் தேடி வரும் உன் முகத்தின் ஈசல்கள். அதைப் பற்றிக் கொள்கையிலேயே செத்து வீழும் உன் சிறகுகளின் கடைசித் துடிதுடிப்பு. ஆம். திரும்பத் திரும்ப என்னிலிருந்து உதிரும் வன்மத்தின் ஈரத் துணுக்குகளின் பல்லாயிரம் நிறங்களைச் சிதறடிக்கிறது உன் ஞாபக ஊற்று. என்னுள் சொல்லிக் கொள்வதும் உடைந்தழுவதும், மீற மீற முயற்சிப்பதும் தோற்று, உன்னுள் வந்து விழுகிறேன். உன் முகமல்லாத ஒன்று என் வெளிச்சத்தினுள் அணைவதில்லை. நீயல்லாத இந்த ஓவியத்தாள் வெளிச்சத்தின் கனத்த வெம்மையினுள் பொசுங்கிக் கொண்டிருக்கிறது. சன்னல்களை  இனி மூடப்போவதில்லை. நிறங்களின் ஈரம் உருகியோடுகிறது. இருண்ட மழை நாட்கள் முடியப் போவதே இல்லை.


அப்பாவின் டைரி


இரண்டு விதமான கவிதைகளை அறிந்திருந்தேன்.

வலியின் ரணமும், ரணத்தின் ஆசுவாசப்படுதலும்.

அப்பாவின் டைரியில் பெரும்பாலானவை பிரார்த்தனைகள். அதுவும் ஒரு மன்றாட்டு. அப்பாவின் கடவுளும் அப்பாவைப் போலவேதான். தன் அப்பாவிடம் மன்றாடிக் கொண்டிருந்தார். ஆனால் நான் திடுக்கிட்டது அதன் மத்தியில் செருகி வைத்திருந்த படம். நிர்வாணமான ஒரு கருத்த பெண், இன்னும் கருமையான விடைத்த முலைக் காம்புகளுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கவிதை இவ்வாறு தொடங்கியது.

உன் கனவினுள் மட்டுமே
நான் வாழ்கிறேன்
வலியினால் உருக்கொண்ட நிலம் என் உடல்
தன்னந்தனியினுள் அமிழ்ந்திருக்கிறது
அதன் கொடுக்குகள்
நான் இங்கிருக்கிறேன்
என் உடலினுள் மீள மீள அதை சுவீகரிக்கிறேன்
எல்லையின் இப்புறமும் அப்புறமும்
பல நூறு துண்டுகளாய் சதைத்து
உதிர்த்து வைக்கிறேன்

வலியினால் உருக்கொண்டது என் நிலம்
உன் கனவினுள் வாழ்கிறது என் வலி

தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது மலை. இரவுகளில் என் தனிமையுடன் அமர்ந்திருக்கின்றன. சொல்லொணா ஒன்றினை அவைகள் தன்னில் மடித்து வைத்திருக்கின்றன. நாற் புறமும் இருள் சூழ அமர்ந்திருக்கிறேன். கண்கள் பழக்கப்பட இயலாத இருள். ஒரு அடர் திரவம்.

இறைவா! அவனை மன்னித்து விடு.