புதன், 6 மே, 2020

யூமா வாசுகி


இந்த அகால இரவின் சன்னல்களின் வழியேயே அறிகிறேன் உன்னை.  இருண்ட மழை நாளின் ஈசல்களாய் உன் முகம். என் உள்ளறையினுள் தனிமையில் அமர்ந்திருக்கிறேன். அவ்வப்பொழுது எரிந்தணையும் வெளிச்சத் துளிகளிலிருந்து வரைந்தெடுக்கிறேன், உன்னை வெறுப்பதற்கான நியாயங்களை. என் ஓவியத் திரையினுள் என்னவாயிற்று. ஒவ்வொரு முறை  என் வெளிச்சத்தைத் தேடி வரும் உன் முகத்தின் ஈசல்கள். அதைப் பற்றிக் கொள்கையிலேயே செத்து வீழும் உன் சிறகுகளின் கடைசித் துடிதுடிப்பு. ஆம். திரும்பத் திரும்ப என்னிலிருந்து உதிரும் வன்மத்தின் ஈரத் துணுக்குகளின் பல்லாயிரம் நிறங்களைச் சிதறடிக்கிறது உன் ஞாபக ஊற்று. என்னுள் சொல்லிக் கொள்வதும் உடைந்தழுவதும், மீற மீற முயற்சிப்பதும் தோற்று, உன்னுள் வந்து விழுகிறேன். உன் முகமல்லாத ஒன்று என் வெளிச்சத்தினுள் அணைவதில்லை. நீயல்லாத இந்த ஓவியத்தாள் வெளிச்சத்தின் கனத்த வெம்மையினுள் பொசுங்கிக் கொண்டிருக்கிறது. சன்னல்களை  இனி மூடப்போவதில்லை. நிறங்களின் ஈரம் உருகியோடுகிறது. இருண்ட மழை நாட்கள் முடியப் போவதே இல்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக