புதன், 6 மே, 2020

அப்பாவின் டைரி


இரண்டு விதமான கவிதைகளை அறிந்திருந்தேன்.

வலியின் ரணமும், ரணத்தின் ஆசுவாசப்படுதலும்.

அப்பாவின் டைரியில் பெரும்பாலானவை பிரார்த்தனைகள். அதுவும் ஒரு மன்றாட்டு. அப்பாவின் கடவுளும் அப்பாவைப் போலவேதான். தன் அப்பாவிடம் மன்றாடிக் கொண்டிருந்தார். ஆனால் நான் திடுக்கிட்டது அதன் மத்தியில் செருகி வைத்திருந்த படம். நிர்வாணமான ஒரு கருத்த பெண், இன்னும் கருமையான விடைத்த முலைக் காம்புகளுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கவிதை இவ்வாறு தொடங்கியது.

உன் கனவினுள் மட்டுமே
நான் வாழ்கிறேன்
வலியினால் உருக்கொண்ட நிலம் என் உடல்
தன்னந்தனியினுள் அமிழ்ந்திருக்கிறது
அதன் கொடுக்குகள்
நான் இங்கிருக்கிறேன்
என் உடலினுள் மீள மீள அதை சுவீகரிக்கிறேன்
எல்லையின் இப்புறமும் அப்புறமும்
பல நூறு துண்டுகளாய் சதைத்து
உதிர்த்து வைக்கிறேன்

வலியினால் உருக்கொண்டது என் நிலம்
உன் கனவினுள் வாழ்கிறது என் வலி

தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது மலை. இரவுகளில் என் தனிமையுடன் அமர்ந்திருக்கின்றன. சொல்லொணா ஒன்றினை அவைகள் தன்னில் மடித்து வைத்திருக்கின்றன. நாற் புறமும் இருள் சூழ அமர்ந்திருக்கிறேன். கண்கள் பழக்கப்பட இயலாத இருள். ஒரு அடர் திரவம்.

இறைவா! அவனை மன்னித்து விடு.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக