புதன், 16 பிப்ரவரி, 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -16

    


    மாடுமேய்ப்பவர்கள் பாதையை விட்டு விலகி நின்றனர். கற்களைக் கைகளில் வைத்திருந்தவர்களில் சிலர் அதை கீழே எறிந்தனர். சிலர் அந்த இளைஞனைக் குறி வைத்து எறியத் தொடங்கினர். கவண்களுடன் தயாராக இருந்த சிறுவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தங்களுக்குள் குசுகுசுத்துக் கொண்டிருந்தனர். சிலக் கற்கள் அவன் மேலே பட்டாலும் காயம் ஏதும் உண்டாகவில்லை. ஆனால் இளைஞன் சற்றே தடுமாறினான். கயிற்றினால் முதுகில் இறுக்கியிருந்த சிலுவை வழுக்கி விடாமல் இன்னும் இறுக்கமாக தன் இரு கைகளால் கெட்டியாகப் பிடித்து கயிற்றை வயிற்றில் தன் உடம்பைச்சுற்றி வளையம் போல இறுக்கிக் கொண்டான். அவனது நெற்றி வியர்வை, நாசியிலும், கண்களிலும் வழிந்து எரிச்சலடைய வைத்தது. சிவந்துக் கன்றியிருந்த வலது உள்ளங்கையினால் முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டான். மலை முகட்டில் பசியுடன் வெறிக்கும் நாயின் குரைப்பொலி. தூரத்தில் ஆலிவ் மரங்களின் இலைகளை பல நூறு வெட்டுக்கிளிகள், நரநரவென்று கடிக்கும் சப்தம் மக்களின் சலசலப்பிற்குள்ளும் கேட்டது. அம்மனிதக் கூட்டத்தில் ஒருத்தி மட்டும், தன் ஊதா நிறத் தலைக்குட்டையினால் வாயைப் பொத்திக் கொண்டு, ஒரு சரிவுப்பாதையில் இருக்கும் பாறைக்குன்றில் அமர்ந்து வெம்பி அழுது கொண்டிருந்தாள்.

    இவனை எனக்குத் தெரியும். மேரியின் மகன். இமைக்க மறந்து, திறந்த வாய் மூடாது அந்த இளைஞனைக் கண்டார் பீட்டர். கானாவில் பீட்டரின் வீட்டிற்கு எதிரில் தான் மேரியின் குடும்பமும் இருந்தது. அவளது பெற்றோர்களான ஜோயாச்சிம்மும், அன்னாவும், பீட்டரின் பெற்றோருடன் நீண்ட கால நட்பில் இருந்தனர். யாரிடமும் அதிர்ந்து பேசாத, அணுதினமும் பிரார்த்தித்தும், இறைவனைத் தவிர வேறு எந்த எண்ணங்களுமற்ற அந்த முதியப்புனிதத் தம்பதிகளின் வீட்டிற்கு ஒரு நாள் அந்தக்கடவுளே ஒரு பிச்சைக்காரனைப் போல வந்தார். அக்கம்பக்கத்திலிருந்த அனைவருமே அதனை அறிந்திருந்தனர். பூமியே அதிரும் வண்ணம் அந்த நாள் நிகழ்ந்தது. அன்றிலிருந்து சரியாக ஒன்பது மாதங்கள் கழிந்து, தன்னுடைய அறுபது வயதில் அந்த மூதாட்டி ஒரு அழகான மகவாக மேரியைப் பெற்றெடுத்தாள்.

    அப்பொழுது பீட்டருக்கு சரியாக ஒரு ஐந்து வயதிருக்கலாம். மொத்தக் கிராமமும் மகிழ்ச்சியில் குதூகலித்தனர். ஆண்களும் பெண்களுமாய் அக்குழந்தையின் இனிய வருகையை வரவேற்றுக் களித்தனர். பாலும், மாவும், பேரிச்சையும், தேனும், சிறுபிள்ளைக்கான உடைகளும் என எல்லோரும் அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தனர். பீட்டரின் தாய் தான் அவளின் முதல் தாதியாக, மேரியைக் கையில் ஏந்தி, வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பிட்டுக் குளிப்பாட்டி, தைலமிட்டுக் கவனித்துக் கொண்டாள். இன்னும் தன் கண்களை விட்டு அகலாத அந்த நாளின் குழந்தை மேரி. அவளின் மகன் இதோ என் முன் பாவத்தின் சிலுவையைச் சுமந்து கொண்டு செல்கின்றானே என்று புலம்பினார். கடந்து செல்லும் ஒவ்வொருவரும் காறி உமிழ்வதையும், கற்களை எறிந்து அவனை விரட்டுவதையும் பார்க்க பார்க்க, பீட்டரால் தாங்க முடியவில்லை.

ஏன்! இப்படி ஒரு துரதிஷ்டமான விதி அவனுக்கு! என்று நொந்து கொள்ள மட்டும்தான் முடிந்தது.

    இஸ்ரவேலின் இறைவன் அவனைத் தான் தேர்ந்தெடுக்கிறான். மேரியின் புதல்வன். அவன் செய்கின்ற சிலுவைகளில் தீர்க்கதரிசிகள் அறையப்பட்டு சாக வேண்டும் என்பது தான் அவனுக்கிட்ட கடைத்தேற்றல் போல. சர்வவல்லமை பொருந்தியவனே! என்னை விடுத்து அவனைத் தேர்ந்தெடுத்தாய்! இல்லையேல் பாவத்தின் கனத்த சுமையினை என் தோள்களில் பதித்துக் கொண்டு நானல்லவா சென்றிருக்கவேண்டும். ஒரு வித நன்றியுணர்வுடனும், தளர்ச்சியுடனும் சென்று கொண்டிருக்கும் இளைஞனைப் பார்த்தான் பீட்டர்.

    சலசலப்புகளுப்பு மத்தியில், மூச்சிறைக்க தச்சன் மகன் சற்று நேரம் நின்று கொண்டிருந்தான்.

    என்னால் முடியவில்லை. நான் சோர்கிறேன். இளைஞன் வாய்க்குள்ளேயே முனுமுனுத்தான். சற்றே சாய்ந்துத் தன்னை சமப்படுத்திக் கொள்ள ஏதாவது பாறையையோ, இல்லை யாரோ முன்னால் இருப்பார்கள் என நினைத்து தலையைத் தூக்கிப்பார்த்தான். ஆனால் தங்கள் முஷ்டிகளை உயர்த்தி கற்களை எறிய நிற்கும் வெறித்த திரளைத்தான் அவனால் காணமுடிந்தது. தனது இருதயம் மட்டுமே அணுக்கித்துக் கேட்கும் சிறகடிப்புகளை நினைத்து பிரயாசைப்பட்டுக் கொண்டான். ஒரு வேளை இப்பொழுதாவது அக்கடவுள் என்னை நினைத்து வருந்தி தன் தேவதைகளின் பரிவாரத்தை பூமியை நோக்கி அனுப்பிவிட்டாரோ என்று கூட மயக்கு தோன்றியது. சற்றே தலை நிமிர்ந்து வானைப் பார்த்தான். கரிய சிறகுகளின் படபடப்பு. காகங்களின் கரைதல் தூரத்து விளியாய் அவன் செவிப்பறைகளில் அறைந்தது.  கோபத்தில் பற்களைக் கடித்துக் கொண்டு, பெருமூச்சு விட்டான். பின் கால்களை சரிப்படுத்திக் கொண்டு முன் நோக்கி செல்ல எத்தனிக்கும் தொனியில் கூர்மையான கற்களை மிதித்தான். நிலை தடுமாறி சரிந்து விடும் கணத்தில் பீட்டர் அவனருகே ஓடிச்சென்று அவன் தோள்களைத் தாங்கினான். முதுகுக்குப் பின்னே கனத்துக் கொண்டிருந்த சிலுவையினைத் தன் சொந்தக் கைகளால் தாங்கி அவனை நிமிர்த்தினான்.

    நான் உதவுகிறேன். நீ முற்றிலுமாக வலுவிழ்ந்து விட்டாய். அமைதியுறு. பீட்டர் இளைஞனை வாஞ்சையோடு நோக்கி, சிலுவையைத் தன் தோளில் ஏற்றிக் கொண்டான்.

    இளைஞன் இறைக்கும் மூச்சினை சமன் செய்ய முயற்சித்துக் கொண்டே வெறுமனே அந்த மீனவனை நோக்கினான். ஆனால் அவனால் அச்சூழலையோ, முகங்களையோ அறிந்து கொள்ள முடியவில்லை. திடீரென பாரங்கள் இறங்கி விட்டது போலத் தான் மட்டும் தனித்து விட்டப் பாதையில், தனக்கேயான உலகின் கனவுகளின் ஊடாகத் தான் மிதப்பதைப் போலவும், தன் முதுகுக்குப் பின்னே ஒரு ஜோடி சிறகுகளின் அனாயசப் படபடத்தலால் விண்ணிற்கு பறந்து செல்வதைப் போலவும் நினைத்தான். முகத்தில் படிந்திருந்த வியர்வையையும், ரத்தத்தையும் அழுத்தித் துடைத்துவிட்டு, தீர்க்கமான தன் காலடிகளை வைத்து பீட்டரைத் தொடர்ந்து முன் ஏகினான். 

    தீப்பிடித்தது போல அனல்காற்று சூழலை நிரப்பியிருந்தது. மலை உச்சியில், கற்களும் பாறைகளும் கனலும் வெளியில், சிலுவை நாட்டுவதற்கான குழியைத் தோண்டிக் கொண்டிருந்தனர் அடிமைகள். அவர்களின் நாய்கள் பசியுடன் வெக்கையில் துவண்டு நின்று கொண்டிருந்தது. வியர்வை வடிந்து உடல் முழுதும் தொப்பலாக நனைய, அவ்வடிமைகள் எல்லைகள் வகுத்து கச்சிதமாக ஒரு பள்ளத்தை உருவாக்கிக் கொண்டிருந்தனர். குத்துப்பாறைகளில் கடப்பாறைகள்  அறைந்து விழுவது,  அக்குன்றில், கரியத்தணலினுள் சதா புகைந்து கொண்டே இருக்கும் மர்மத்தின் ஒலியை எழுப்பியது. சற்று திகைத்த நொடி எல்லாம் தலைகீழாக்கமாகி, அவர்களின் புலன்கள் தடுமாற்றமடைந்தன. கடவுள்-மனிதன், உண்மை-பொய், சிலுவை-சிறகுகள், நல்லத்தன்மை-முட்டாள்தனம் என்று இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் உருவாகிய புகை மூட்டத்திற்கு மேலே மேகங்களற்ற நீலம் வியாபிக்கும் வானத்தில் கருஞ்சாம்பல் நிறத் திட்டுகளாய் அங்காங்கே இருள் மண்டியிருந்தது.

    மேரியைப் பார்த்ததும் சில நல்லிதயம் படைத்த பெண்கள் பரிதாபப்பட்டு அழுதனர். முன்னே வெற்றுக்காலுடன், மேலாடை எதுவும் அணியாது செல்லும் தன் மகனை, நாள்பட்ட வேதனையால் மெலிந்த அவன் உடலை, கன்ன எலும்புகள் துருத்திய, தீர்க்கமான அவன் முகத்தைக் கண்டாள். மலை உச்சிக்கு வெகு அருகில் அவர்கள் வந்து விட்டனர். அவனருகே சிலுவையைச்சுமந்து வரும் பீட்டரையும் அடையாளம் கண்டாள். அக்கடைசி தருணத்திலும் ஏதாவது வழி இருக்கும் என்றும், அவர்களைத் தடுத்து விடலாம் என்றும் பதைபதைக்க ஓடினாள். ஆனால் காலம் கடந்து விட்டது. ரோமின் படை முழக்கம், பறையறைந்து கொண்டே வீரர்கள் வந்து கொண்டிருந்தனர்.  சற்று உயரமான ஒரு மலைக் குன்றில் ஏறி மலை உச்சியை நோக்கினாள். அங்கு தண்டனைக்குரிய எல்லா ஆயத்தங்களும் ஒருங்கு பெற்றுத் தயாராக இருப்பதைக் கண்ணுற்றாள். கவசங்களால் தங்கள் உடல் முழுதும் மறைத்திருக்கும் வீரர்கள், நல்ல திடகாத்திரமான அவர்களின் குதிரைகள். அதன் காலடியில் மண்டியிட்டுக் கதறும் யூத நிலம்.

    தண்டனைக்குரிய அந்தப் புரட்சியாளன் முன்னே வந்து கொண்டிருந்தான். அவனின் இரு கைகளின் மணிக்கட்டுகள் பின்புறமாக இறுக்கி கட்டப்பட்டிருந்தது. அணிந்திருந்த உடை கந்தலாய்க் கிழிந்தும், குருதி தோய்ந்து கருஞ்சிவப்பாகவும் இருந்தது. தோள் வரைப் புரண்டிருந்த செஞ்சாம்பல் நிறக்கேசத்தில் தூசும், மண்ணும் அப்பியிருந்தது.  எந்த அசைவற்று இமைக்காமல் தன் எதிரே நிற்கும் இளைஞனை வெறித்தான்.

    அவனைக் கண்டதும் ஊர் மக்கள் அனைவரும் பெருங்கூச்சலிட்டனர். ஆனால் அவர்களால் அவனை அனுமானிக்கவோ இல்லை அணுகவோ தைரியம் வரவில்லை. மூர்க்கம் நிறைந்த அவனது பார்வையும், அழுந்திப்பதிந்துத் திறவாது சுருக்கங்கள் மேவிய வாயினையும் பார்த்து, அவனுள் என்ன மறைந்திருக்கிறது. ஏதோ பயங்கரமான, ஒப்புமை அற்ற மர்மம் பொதிந்த ஒன்று அவன் அகத்துள் சதா அலைக்கழிப்பதாக உணர்ந்தனர். அது புனிதத்தன்மையா இல்லை சாத்தானா! யார் அறிவார்? அவனைத் தைரியப்படுத்துவதற்காக, வெற்றியின், போரின் பாடலைப் பாட முயற்சித்தார் முதிய போதகர். ஆனால் எந்தச் சொல்லும் அவரிடமிருந்து  எழவில்லை. அதுவொன்றும் அவனுக்குத் தேவைப்படவுமில்லை. தைரியத்தின் நிலையினைக் கூட கடந்துவிட்ட அவனின் எந்தக்கலக்கமுமின்றி எது வந்தாலும் எதிர்கொள்ளும் வகையில் நிமிர்ந்து நின்று கொண்டிருந்த தோற்றம், கட்டுப்படுதலற்ற முழுமையான சுதந்திரத்தைத் தன் கட்டுப்போட்ட கைகளுனுள் பத்திரமாக வைத்திருப்பதைப் போல இருந்தது. சுற்றிக் குழுமியிருந்தவர்கள் எந்த அசைவுமற்று அமைதியாக நின்றனர்.

    அவனைத் தன்  குதிரையின் சேணத்தின் வார்ப்பட்டையில் கட்டி இழுத்துவந்தான் அப்படைத்தலைவன். கிழக்குச்சூரியனின் கூர்மையான வெம்மைக்கதிர்கள் பட்டுப்பட்டு அவனது தோல் கடினப்பட்டிருந்தது. தனக்கு நினைவு தெரிந்த காலம் முதல் அவன் யூதர்களை வெறுத்துக் கொண்டிருக்கிறான். பத்து வருடங்களில் எத்தனை யூதர்களை சிலுவையில் அறைந்து கொன்றிருக்கிறான். அடுத்த பத்து வருடங்களில் தண்டனையாளர்களின் வாயினுள் கற்களையும், மண்ணையும் திணித்து அடக்கி ஒடுக்கியிருப்பான். ஆனால் அனைத்தும் வீண். ஒருவனைக் கழுவேற்றினால் வரிசையாகத் தங்களைப் பலி கொடுக்க இவர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். ரோமர்களின் ஏதோ பழங்கால அரசனின் மாட்சிமை பொருந்திய பாடலை அச்சமயம் முனுமுனுத்தான். அவர்களுக்கு பயமில்லை. எதைக்கண்டும், மரணத்தைக் கண்டும் அவர்கள் எப்பொழுதும் பயப்பதில்லை.  மனிதக் குருதியைக் குடிக்கும் அவர்களின் தெய்வங்களின் ஆசி அவர்களின் ஆண் குழந்தைகளின் ரத்தத்தில் உரைந்திருக்கிறது. மனித ஊனைத் திங்கும் பத்துகொம்புள்ள மிருகங்கள் அவர்கள். அவர்களுக்கேயான நீதியின் படி அவர்கள் அனைத்தையும் நிகழ்த்தினர். அப்படித்தான் இப்படைகள் இச்சனங்களை அடிபணிய வைத்தன. மரணத்திற்கு அஞ்சாமை என்பது சாவைக் கடப்பது. சாவற்றவனை யார் தான் வெல்ல முடியும்.

    கடிவாளத்தை இறுக்கிக் குதிரையை நிறுத்தி, சுற்றிக் கும்பலாக நின்ற ஜனங்களை அலட்சிய பாவத்துடன் பார்த்தான். ஒளியிழந்த நொய்ந்த முகங்களும், வீக்கமடைந்து பீளை படிந்த கண்களும், அழுக்குத் தாடிகளும், தூசி படிந்த சாம்பல் நிறத் தலைகளும். வெறுப்பு மேலிடக் காறி உமிழ்ந்தான். இங்கிருந்து  ரோமிற்கு போக முடிந்தால், எப்படி இருக்கும்! இந்த தூசு படிந்த நிலத்தை விட்டு அகல முடிந்தால், அங்கு உடல் முழுக்க நனைத்து திருப்தியான நறுமணக் குளியலையும், அழகான தூயப் பெண்களையும், அரங்குகளையும், கேளிக்கை சதுக்கங்களையும் தவற விடுகிறேனே! இந்த நாற்றம் பீடித்த கிழக்கின் நிலம்! இந்த அவமானகரமான யூதர்கள்!

    ரோமானிய அடிமைகள், சிலுவையை நாட்டிப்பார்த்து குழியின் அளவு சரியாக இருக்கிறதா என்று கவனித்தனர். குழியின் ஓரத்தில் இருக்கும் மணல் பரப்பை இன்னும் ஆழமாக வெட்டித்திருத்தினர். மேரியின் மைந்தன் ஒரு சிறியப் பாறையில் அமர்ந்து அதனைப் பார்த்தான். பின் தான் செய்த சிலுவையினைப் பார்த்தான். இது போன்ற சிலுவைகளில் எத்தனை உயிர்கள் எடுக்கப்படிருக்கும். உயிரற்ற எத்தனைஉடல்கள் வலி என்ற ஒன்றை மட்டும் இறுதிமூச்சாக விட்டு மாண்டிருக்கும். ஒரு இருண்டக் குகையினுள் செல்வதைப் போல அவனது எண்ணங்கள் தாறுமாறாக சென்று கொண்டிருந்தது. அலைகள் ததும்புவது போல இளிக்கும் மானுடர்களின் மண்டை ஓடுகளின் பெருங்கடல் அவன் முன்னே கொந்தளித்துக் கொண்டிருந்தது. மீட்க முடியா அதன் அலைச்சுவடுகள் அவனது பாதங்களைப் பற்றிக் கொள்ள விழையும் தொனியில் உள் வெளித்தது. அருகிலிருந்த பீட்டர் அவனை இரு முறை விளித்தார். ஆனால் அவனின் பிரஞ்சையில் கரு நீல அலைகடலின் ஓலங்கள், கூக்குரல்களின் மறுதலிக்க முடியாத அலைக்கழிப்புகள்.

    படைத்தலைவன் தலை அசைத்ததும், புரட்சியாளனின் கட்டுகள் அவிழ்க்கப்பட்டது. கந்தல் உடையும் உடலிலிருந்து  உறிஞ்சப்பட்டு அம்மணமாக நின்றிருந்த அவனை நோக்கி ஆதுரத்துடன் கைகள் நீட்டி மாக்தலேனா ஓடி வந்தாள். பதைக்கும் அவளது விழிகளை நோக்கி அவன் கையசைத்துத் தடுத்தான். ஒரு நிமிடம், கால்கள் தளர்வுற்று நின்ற இடத்திலேயே மூச்சிரைக்க உட்கார்ந்து கொண்டாள். ஒரு முதிய பெண்மணி, திடூமென அழுந்தி வெளித்தள்ளிய காற்று வெளியில் உந்தி அவன் முன் வந்தாள். தன் கைகளிலே அவனைத் தாங்கிக் கொண்டு கலங்கிய விழிகளுடன் அவன் கேசத்தை வருடி நீண்ட நேரம் அவனது கைகளில் முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். தன் நெஞ்சுக்குழியினுள் அவனைப் புதைத்து மன்றாடுவதைப் போல வெளுத்த வானை உற்றுப்பார்த்தாள். எந்த மாற்றமுமில்லை. எழுந்து திரும்பிப் பாராமல் அவள் முன்னர் எங்கு நின்றாளோ, அதே இடத்தில் அசைவின்றி அமைதியாகச் சென்று வெறுமனே அவனைப் பார்த்தாள்.



செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -15

    


கூட்டத்தின் கவனத்தைக் கலைக்கும் வண்ணம், முதியதுறவி திரும்பவும் கத்தினார். அனைவரும் அவளை விடுத்து துறவியின் சொற்களைக் கூர்ந்தனர். கடவுள் மட்டும் அவளைப் பார்க்கட்டும். அது ஒன்றே போதும். அவர் மட்டுமே அவளை முற்றிலுமாக அறிந்தவராக இருப்பார் என்று முதியவர் தனக்குள் சொல்லிக் கொண்டார்.

    கண்களைத் திறங்கள் குழந்தைகளே! சொர்க்கத்தின் ஊடுவழிகள் தென்படுகின்றன. அதன் வாசல் திறக்கும் சப்தத்தை நான் உணர்கிறேன்.  பாருங்கள்! நம் காவல் தேவதைகளை, வானெங்கும் சிவப்பும், நீலமுமாக படபடக்கும் பல்லாயிரம் சிறகடிப்புகளின் வழியே அவர்கள் நம்மை அணுகுகின்றனர். தயாராகுங்கள்! செந்தாடிக்காரனின் தோள்களில் கழுத்திழுபடக் கதறினார் முதியவர்.

    வானம் சென்னிறமாக ஒளிர்ந்தது. சூரியக் கதிர்களின்  சதகோடிக் கரங்களின் வீச்சில் அவர்கள் அண்ணாந்து நோக்கிக் கொண்டிருந்தனர். பராபஸ் தன் கோடாரியைத் தலைக்கு மேல் உயர்த்தி கோஷமிட்டான். இன்று! இன்று! நாளையல்ல!. கூட்டம் முழுதும் அச்சொல் மந்திரம் போலத் தொற்றிக் கொண்டது. அனைவரும் ஒரு சேரக் கத்திக் கொண்டே இரும்புக்கதவுகளை அணுகினர். உள்ளிருந்து கதவினைத் திறந்தனர் இரு குதிரை வீரர்கள். அவர்கள் முழுக்கவசமிட்டிருந்தனர். கவச நெற்றியில் ரோம் பேரரசின் கழுகு, சூரிய ஒளியில் ஒளிர்ந்தது. குதிரைகளின் பலத்த காலடிச்சத்தம் அதிர நிலத்தில் தங்களது குத்தீட்டிகளால் அறைந்து கொண்டே அவர்கள் முன் நோக்கி சென்றனர். தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆணையுடன் கற்கள் சிதறிய மலைப்பாதையை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தனர்.

    அந்த வெற்றுமலைக்குன்றுகளில் கற்களைத் தவிர எதுவுமே முளைப்பதில்லை. அங்கங்கு சில குத்துச்செடிகளும், முட்புதர்களும் மண்டிக் கிடக்கிரது. சிதறிப் பாளம் பாளமாய்க் கிடக்கும் இக்கற்குவியல்களில், ஏதேனும் ஒரு கல்லை நம் கைகளில் எடுக்கும் பொழுதும் அழியாது அதில் உறைந்திருக்கும்  ரத்தத்தின் வீச்சத்தை நுகர முடியும். எபிரேயர்கள் காலங்காலமாக இந்த ரோமானியர்களை எதிர்த்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். எத்தனையோ புரட்சியாளர்களின் உடல்கள் எந்த நம்பிக்கைகளுமின்றி  வலி! வலி! என்று கதறிக் கொண்டே மரணத்தை எதிர்நோக்கியிருந்திருக்கிறது. இரவில் பிணத்தின் கால்களைக் கவ்விக் கொண்டு சண்டையிடும் நரிகளும், அடுத்த நாளின் பகல் பொழுதுகளில் காகங்களும், வல்லூறுகளும் செதில் செதிலாய் அவ்வுடலை, கண்களைப் பிய்த்து திங்கும் கோரமும் ஒரு சங்கிலித்தொடர் போல நடந்து கொண்டேதான் இருக்கிறது. 

    மக்கள் கூட்டம் மலைஅடிவாரத்தில் நின்று கொண்டிருந்தது. நடந்து வந்த இளைப்பில் அவர்கள் சற்று ஆசுவாசப்பட்டனர். இன்னும் சிலுவை அங்கு வந்து சேரவில்லை. மலை முகடில் இரு ரோமானியர்கள் சுத்தியல் மற்றும் ஆணிகளுடன் ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். படை வீரர்கள் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தனர். கிராமத்து நாய்கள் சில, அன்றைய இரை கிடைக்காது, அலைந்தும் முகர்ந்தும் கற்குன்றுகளுக்கிடையே தனது சிவந்தநாக்கில் எச்சில் வழிய வெறித்துக் கொண்டிருந்தது. நண்பகல் வெளிச்சமும் வெக்கையும் அவர்களை எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது. பெண்கள் தங்கள் அக்குள் வியர்வையை தலை முக்காட்டால் துடைத்துக் கொண்டனர். ஆண்கள் கழுத்தையும் தாடியையும் கைகளாலும், தங்கள் உடுதுணிகளாலும் துடைத்து விட்டனர். வானத்திற்கு கீழே மொத்த மலையும் வெந்து உருகிக் கொண்டிருந்தது.

    ஜென்னேசரெட் ஏரிக்கரையிலிருந்து வந்திருந்த மீனவக்குழு, ஒரு வித ஆர்வத்துடன் கண்கள் விரிய, அங்கு நிகழ்வதைக் கண்டு கொண்டிருந்தனர். நீதியற்ற இந்த பாகன்களின் அரசால், புரட்சியாளன் சிலுவையில் அறையப்படும் பொழுது, நிச்சயமாக அற்புதம் நிகழும் என்று அவர்கள் உண்மையிலேயே நம்பினர். அவன் தன் கந்தலாகிப்போன உடையினை எறிந்து வான் ஏகுவான். தேவதைகளின் கனத்த சிறகுகளினுள் ஒரு குழந்தையைப் போல அவன் பாதுகாப்பாக அமர்ந்து கொள்வான். கோபம் கொள்ளும் அத்தேவதைகள், ரோமானியர்களை ஒட்டு மொத்தமாக அழித்துவிடும் என்று தங்களுக்குள் கிசுகிசுத்தும், சலம்பிக் கொண்டுமிருந்தனர். முந்தைய இரவு, கொண்டு வந்திருந்த அத்தனை மீன்களும் விற்றுத் தீர்ந்ததினால், இரவு முழுக்க மகிழ்ச்சியாகக் குடித்து கும்மாளமிட்டனர். விடிந்து பகலின் கூரிய வெளிச்சத்தை உணர்ந்த பின் தான் தேவனின் சொல்லை அவர்கள் நினைவு கூர்ந்தனர். பாதி உறக்கத்திலும், விழிப்புலுமாக அவசர அவசரமாக அங்கு நிகழப் போகும் அற்புதத்தைக் கண்டு விடும் பதைபதைப்பில் அவர்கள் நின்று கொண்டிருந்தனர்.

    வெகுநேரம் காத்திருந்து அவர்கள் சோர்வடைந்திருந்தனர். படைகளின் ஈட்டிகள் மண்ணில் அதிரும் சப்தத்தை மட்டுமே இப்பொழுது வேண்டி, அதன் வருகையை எதிர்நோக்கி தங்களுக்குள் புலம்பினர்.

    அமைதியற்றிருந்த மீனவர் கூட்டத்தில் இருந்த சற்றே வயதான ஒருவர் இளையவர்களைப் பார்த்து திரும்பிச்செல்லும் தொனியில் கைகளை அசைத்தார். எப்படியும் ஐம்பதிற்கு மேல் வயதிருக்கும். சுருங்கிய பூனைக்கண்களும், சுருள் சுருளாய் செம்பட்டைத்தாடியும், சிப்பியோடு போல விரிந்து ஒடுங்கிய முகமும் கொண்ட அவர் தன்னிச்சையாக முன்னே நின்று கொண்டிருக்கும் பெருங்கூட்டத்தைப் பார்த்தார். பின் செபெதேயின் மகனை நோக்கி, 

"புரட்சியாளன் அமைதியாக சாகட்டும். எந்த அதிசயமும் இங்கு நிகழப் போவதில்லை. குறித்துக் கொள்! சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப் போவதில்லை. நம் கடவுளின் கோபம் என்றென்றும் அடங்காதிருக்கிறது. ஆம்! மனிதன் தனக்கிட்ட நீதியிலிருந்து வழுவிப் பாவத்தின் கீழான வழிகளில் அல்லவா சென்று கொண்டிருக்கிறான்" என்றார்.

    உன்னுடைய முட்டாள் தனத்திற்கு முடிவே இல்லையா பீட்டர்!  சற்றே பெரிய வெறிக்கும் கண்களுடன் இளித்துக் கொண்டே கேட்டான் அவரது அருகில் நின்றிருந்தவன். அவனது நீண்டு ஒடுங்கிய முகத்தின் நாடியில் முட்கள் போல சாம்பல் தாடியும், கொடுக்கு போன்ற மூக்கும், உள் நோக்கிக் குவிந்திருந்த உதடுகள் ஒரு கோடிழுத்தது போல இருந்தது. 

"மன்னித்துக் கொள் நண்பா! உன் நரை முடிகளின் எண்ணிகைக்குத் தோதான அறிவைக் கடவுள் உனக்குத் தரவில்லை போல. பொறி துளிர்ப்பது போல கணத்தில் எரிந்தடங்கி விடுகிறாய். நீதானே! எங்கள் ஒவ்வொருத்தராய் முதலில் அணுகி, ஒரு பைத்தியக்காரன் போல இச்செய்தியைச் கொன்னாய்? அற்புதங்கள் என்பது மனித வாழ்வில் எப்போதாவது ஒரு முறை தான் நிகழும். அதை நாம் தவற விட்டுவிடக் கூடாது என்று. நாம் நாசரேத் நகருக்கு செல்வோம். உடனே! உடனே! என்றுக் கூவி கூவி எங்களை முடுக்கினாய். இப்பொழுது எல்லாம் தலைகீழாகி விட்டது இல்லையா! நாங்கள் திரும்பிச்செல்ல வேண்டும் என்ன? நீ இப்படி விரைவு கொள்ள வேண்டிய அவசியமில்லை நண்பா! சற்றுப் பொறு."

    இதனைக் கேட்டுக் கொண்டிருந்த இரு மீனவர்கள் பற்கள் தெரிய சிரித்தனர். அருகே இருந்த ஆடு மேய்ப்பவன் தன் துரட்டிக்கோலைத் தூக்கி சற்றுக் கடுமையுடன் சொன்னான், ஜேக்கப் அவனை விட்டுவிடு. ஏன்? இந்தக் கூட்டத்தில் சிறந்தவனும் அவனை விட சரியான திசையைக்காட்டுபவனும் வேறு யாரேனும் உண்டா? 

    சரிதான் பிலிப். அனைவரும் ஒருமித்துக் கூவினர். நல்லுள்ளம் கொண்டவன் அவன். ஆத்திரத்தில் விடைத்துக் கொண்டிருந்த பீட்டர், சற்று சமாதானமானார். அவர்கள் தாங்கள் என்ன விரும்புகிறார்களோ சொல்லிக் கொள்ளட்டும். ஆம்! நான் ஒரு திசைகாட்டியாகவே என் வாழ் நாள் முழுதும் இருந்திருக்கிறேன். திசையற்ற பாதைகளில் என்னுடைய பிரார்த்தனைகளின் வழியே முடிவற்றதாக என் உள்ளம் ஏங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அச்சத்தினால் அல்ல, என்னுடைய தேடலின் மன்றாட்டு எப்பொழுதும் சரியான வழியை நாடுவது மட்டுமேயானதாக இருக்கிறது என்று கைகளைத் தன் நெஞ்சில் குவித்து அழுத்திக் கொண்டார்.

    அழுது விடுவது போன்ற பாவத்துடன் நின்று கொண்டிருந்த பீட்டரைப் பார்த்ததும் ஜேக்கப், சூழலை மடைமாற்றும் விதமாக அவனது சகோதரன் ஆண்ட்ரூவைப் பற்றிக் கேட்டான். இன்னும் அவன் ஜோர்டானின் பாலை நிலத்தில் தான் சுற்றிக் கொண்டிருக்கிறானா? என்று.

    ஆம்! அங்கு தான் இருக்கிறான். துறவியாக ஞானஸ்நானம் செய்து கொண்டான். அவனது குருவைப் போல, பாலையின் வெட்டுக்கிளிகளையும், காட்டுத்தேனையும் மட்டும் தான் உணவாகக் கொள்கிறான். ஒருவேளை நான் ஒரு பொய்யனா! கடவுளுக்குத்தான் தெரியும். ஆனால் நான் பந்தயம் செய்கிறேன், வேண்டுமென்றால் பார், சீக்கிரமே அவன் நம் கிராமங்களிற்குள் வந்து நம் பாவப்பட்ட ஜனங்களை அணுகி, தன் மார்க்கத்தை போதிக்கும் விதமாய் அலறுவான்! ஜெபம் செய்! ஜெபம் செய்! சொர்க்கத்தின் ராஜ்ஜியம் வெகு தொலைவில் இல்லை! என்று மற்றவர்கள் என்ன இதுவரை செய்து கொண்டிருந்தார்களோ அதே நம்பிக்கையை இவனும் விதைப்பான்.

என்ன மாதிரியான சொர்க்கம், என்ன மாதிரியான ராஜ்ஜியத்தில் நாம் உழல்கிறோம். சத்தியமாக எனக்குத் தெரியவில்லை. கீழ்மைகளினுள் புழுக்கள் போல நெழியும் நம்மிடம் இந்த நம்பிக்கைகளை வைத்து யாரை ஏமாற்றுகிறார்கள்?

ஜேக்கப் நான் உன்னிடம் தான் கேட்கிறேன்!

    ஜேக்கப், ஒரு வித அலட்சியமான புன்னகையுடன் தன் தலையை அசைத்துக் கொண்டான். சுருங்கிய நெற்றியின் அடர்ந்த புருவத்தில் முடிச்சுகளிட்டன. 

    என் சகோதரன் ஜானுக்கும், அதே தானே நிகழ்ந்தது. ஏதோ அவன் ஒரு மீனவப் பிறப்பே இல்லை என்பது போல ஜென்னசரேட்டில் இருக்கும் மடாலயத்த்திற்கு சென்று துறவியாகி விட்டான். நான் என் கிழட்டுத்தனிமையைக் குடித்துக் கொண்டும் அவன் விட்டுச்சென்ற படகுகளைப் பாதுகாத்துக் கொண்டும் வாழ விதிக்கபட்டிருக்கிறேன்.

    என்ன குறையாகிவிட்டது. இவர்களுக்கு? 

    எதை இழந்தனர் ஆசிர்வதிக்கப்பட்டவர்களான இவர்கள்?

     பூத்துக்குலுங்கும் இளமையின் ஒளிர்வில் இறைவன் அவர்களுக்கு அனைத்தையுமே அளித்திருந்தானே? 

    ஆனால் உள்ளூறக் குறுகுறுப்புடனும், அறிந்து கொள்ளும் ஆவலுடனும் இதனைக் கேட்டான் அந்த ஆட்டிடையன் பிலிப்.

    இளமை! உடல் அதற்கே உண்டான வழிகளைத் தானே கையாளும். இரவு முழுதும் புரண்டு கொண்டே இருக்கும் அவனைப் பார்க்கும் பொழுது என்ன சொல்வதென்றே தெரியவில்லை என்றான் ஜேக்கப்.

பிலிப், ஏன் அவன் ஒரு பெண்ணை மணக்கவில்லை? நிச்சயமாக உங்கள் சொந்ததிலேயே மணமாகாத இளம்பெண்கள் இருக்கிறார்களே! என்றான்.

அவன் எந்தப் பெண்ணையும் மணக்கப்போவதில்லையாம்.

பிறகு,

இறைவனின் சொர்க்க ராஜ்ஜியம்! -ஆம்! ஆண்ட்ரூவினைப் போலவே!

    அவர்கள் அடக்க முடியாமால் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தனர்.

    அதுவும் சரிதானே! அதன் பிறகு வாழ்நாள் முழுதும் அவன் கவலையில்லாமல் சந்தோஷமாக வாழலாமே! விஷமத்தனமாக தன் கைகளை ஒருமாதிரியாக பிணைத்துக் கொண்டு அங்கலாய்த்தார் ஒரு முதிய மீனவர்.

    பீட்டர் ஏதோ சொல்ல நினைத்து நிதானித்து வாயை மூடிக் கொண்டான். தூரத்தில் அழுகுகுரல்களின் மெல்லிய இரைச்சல் காற்றில் அலையாடியது. 

    சிலுவை செய்பவன்! சிலுவை செய்பவன்! அவன் வருகிறான் பார்!

    குழப்பத்துடன் தூரத்தை வெறித்த அவர்களின் பார்வையில், தூசு அப்பிய மணல் படலத்தின் ஊடாக, எடை தாங்காது தடுமாறும் கால்களை சீராக்க முனைந்து, தீர்க்கமான அழுத்தத்துடன், மூச்சிரைக்க ஒவ்வொரு அடியாக மேலேறி வந்து கொண்டிருந்தான தச்சன் மகன்.

    சிலுவை செய்பவன்! சிலுவை செய்பவன்! துரோகி! மொத்த மக்கள் திரளும் வெறிக் கூச்சலிட்டது.

    மலையுச்சியில் நின்று இதனைக் கவனித்த ரோமானியர்கள். குழி தோண்டுவதற்கு ஆயத்தமானார்கள். கடப்பாறை, மண்வெட்டி சகிதம் மூன்று பேர் அளவைகள் மாறாமல் நிலத்தைக் குதறினர். அருகிலிருந்த சிறியப்பாறையின் மேல் கூர்மையான உலோக ஆணிகள், உச்சிப்பகல் வெளிச்சத்தில் மின்னியது. நன்றாக பட்டை தீட்டப்பட்ட அந்த ஆணியின் கூர் நுனிகள் சரியாக இறங்கும் வண்ணம், வளைவுகளின்றியும், நீளமாகவும் இருந்தது.

    ஆண்களும் பெண்களும் தங்களின் கைகளைக் கோர்த்துக் கொண்டு மனிதச்சங்கிலி போல நின்றனர். எப்படியாவது அவனை நிறுத்த வேண்டும் எனும் முனைப்புடனும், அவசரத்துடனும் அவர்கள் அவனது வழியை அடைக்க உந்தினர். மாக்தலேனா கூட்டத்தை முறித்துக் கொண்டு வழிப்பாதையில் நின்று அவனை, மேரியின் புதல்வனை நோக்கினாள். தாங்கவொண்ணாது தனது நெஞ்சில் கைவைத்துக் கொண்டு விம்மினாள். தாங்கள் குழந்தைகளாக இருந்த பால்யத்தின் அழியா நினைவுகளால் ஆட்பட்டு, அவர்களின் எந்தக் கவலைகளுமில்லாத விளையாட்டுப் பொழுதுகளை அசை போட்டாள். முதல் முறையாக தங்களின் உடல்களை, அதன் ஆழ்ந்த கசப்பான உண்மையை உணர்ந்தாள். ஆண் என்றும் பெண் என்றும். ஆனால் முழுக்க முழுக்க எப்பொழுதும் ஓருடலாய்த் தான் அவர்கள் இருந்தனர், இருக்கின்றனர். இன்று இரக்கமேயற்ற காலத்தினால் துண்டங்களாய் ஆகிவிட்டது போல உணரும் அவர்களின் அகம் திரும்பவும் இணைந்து ஒன்றாகி விடும் ஏக்கத்துடன் துடிதுடித்தது.

    ஒன்றை ஒன்று நிறைத்துக் கொள்ளும் பேருவகையினைத் தான் அவனை அந்த திருவிழா நாளில் கனாவில் காணும் பொழுது அறிந்தேன். என்னுடைய வெற்றிடங்களுக்குள் நிரம்பி வழியும் ஆண் மகன். காலங்காலமாக நாங்கள் எப்பொழுதுமே பிரியாதிருந்தோம் என்று அந்த கணத்தில் நம்பினேன். சிவந்த தளிர் ரோஜாவினை ஏந்திக் கொண்டு எனக்காக நின்று கொண்டிருந்த அவனது ஆதுரம் மிகுந்த தேவதைக் கண்களை இன்றும் நினைக்கையில் சின்னஞ்சிறு பொறிகளாக நெஞ்சினுள் அவன் பொழிகிறான். அகோரப்பசியுடன் ஒன்றை ஒன்று திங்கத் துடிக்கும் இரு காட்டுமிருகத்தினைப் போலத்தான் நாங்கள் இருந்தோமா! 

    ஆனால் நாங்கள் பிரிந்தோம். திரும்பிக் கூட பார்க்க முடியாத தொலைவிற்கு. யாருடைய விதி! எதனுடைய கைகள்! இரக்கமற்ற கடவுளின் அத்துவான வெளியில் இரு உயிர்களுக்கு மட்டும் முடிவேயுறாத தண்டனைகளின் விலங்குகள் பதிக்கப்பட்டுவிட்டன.

    அவன் மாக்தலேனைக் கடக்கும் கணத்தில் அவளது சுருள் கேசத்தின் சின்னஞ்சிறிய அலை சிவந்து வீங்கிய அவனது  தோள்களைத் தழுவியது. கலங்கியக் கண்களுடன் வெறியேறக் கத்தத் தொடங்கினாள். சிலுவை-செய்பவன்! சிலுவை-செய்பவன்! துரோகி!. தொண்டை இழுபட, கழுத்து நரம்புகள் புடைக்க திரும்பத் திரும்பத் தன் குரலை உயர்த்தி அவ்வெற்று மலைக்குன்றுகள் முழுக்க சிதறித் தூளாகும் படிக் கதறினாள்.

    தலை குனிந்து சென்று கொண்டிருந்த அந்த இளைஞன், அசைவற்று நிற்கும் காலத்தின், துளியின், மீச்சிறு கணத்தில் அவளை ஏறிட்டான். வலிப்பு வந்தவன் போல, உதடுகளைச் சுழித்துக் கொண்டான். கசந்த அடிநாக்கின் எச்சிலை விழுங்கிக் கொண்டு, திரும்பவும் நிலத்தைப் பார்த்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு நகர முயன்றான்.

    என்னவென்று அறுதியிட முடியாத ஒரு தவிப்புடன், மாக்தலேன் ஸ்தம்பித்து நின்றாள். அவனின் அச்சுழிப்பு மெல்ல மெல்ல வலியாக! பயமாக! காலாதீதமான ஒரு நிறைவற்ற  அணுக்கப்புன்னகையாக அவளுள் நிறைந்தது.

    இன்னும் இளைஞனின் அருகில் நின்றிருந்த அவள், தழுதழுக்கும் குரலில், அவனிடம் வேண்டினாள்.

    நாணமில்லையா உனக்கு! ஏன்! இப்படித் தாழ்ந்து கீழ்மையின் குழியினுள் வீழ்கின்றாய்?

    அவனது உதடுகள் பிரிந்து அவளை ஆதுரத்துடனும், தப்பிக்கும் பாவத்துடனும் நோக்கியது. 

    அவள் கத்தினாள்! பைத்தியக்காரா! இது நிச்சயம் கடவுள் இல்லை! சாத்தான்! சாத்தான்!

    மக்கள் கூட்டம் வழியெங்கும் சூழ்ந்து அவனது பாதையைத் தடுத்து அரணிட்டது. ஒரு முதியவர் தனது ஊன்று கோலினால் அவனை அடிக்கப் பாய்ந்தார். தாபோர் மலையிலிருந்து வந்திருந்த இரு மாடு மேய்ப்பவர்கள், அற்புதங்கள் நிகழப்போகும் கணத்தில் கடவுளின் முன் இம்மனிதன் எப்படி வீழப்போகிறான் பார்! என்று தங்களுக்குள் அங்கலாய்த்துக் கொண்டனர். பராபஸ் தன் வெட்டுக் கோடாரியை கைகளுக்குள் சுழற்றிக் கொண்டே அங்கும் இங்கும் அலைந்தான். செந்தாடிக்காரனின் தோள்களின் மேல் நின்று இது அத்தனையையும் கவனித்துக் கண்டிருந்த முதியபோதகர் அப்பொழுதுதான் வரப் போகும் அபாயத்தை உணர்ந்து கீழிறங்கி தன் மருமகனைக் காக்கும் பொருட்டு அவனை நோக்கி ஓடினார்.

    நிறுத்துங்கள்! அவர் கூட்டத்தைப் பார்த்து தன் அதீதக் குரலில் கத்தத் தொடங்கினார். தெய்வத்தின் வழியில் தடையிடாதீர்கள். எது நிகழவேண்டுமோ அது நிகழந்தே தீரும். பாவச்செயலில் அகப்பட்டுக் கொள்ளாதீர்கள் என் பிள்ளைகளே!. தண்டனைக்கான கூர் ஆணிகளை எடுத்துக் கொண்டு அவர்கள் தயாராகட்டும். தேவதூதனின் வருகையை அறிவிக்கப்பண்ணட்டும். பயக்காதீர்கள்! நம்பிக்கைக் கொள்ளுங்கள்! கடவுளின் நியதி அது! நம் எலும்புகளின் மஜ்ஜைகளின் ஆழம் வரை இதன் கூர் ஆயுதங்கள் பதியாமல் அது நிகழாது. ஆம்! இறுதி எல்லை வரை, ஆழ் பள்ளத்தின் விளிம்பு வரை மனிதன் செல்லாது அவனுக்கு மீட்சியேது! அதனால் பொறுமை கொள்ளுங்கள்! அற்புதத்தின் தருணத்தை எதிர்நோக்கி அமைதியுடன் காத்திருப்பது ஒன்றே நம் இறைவன் நமக்கிட்ட வழி.



கிறுஸ்துவின் கடைசி சபலம் - 14

  


  தன்னிலை மறந்து அவர்கள் அனைவரும் உரக்க பாடிக் கொண்டிருந்தனர். ஆனால் அனைவரின் மனதிற்குள்ளும் ஏதோ போதாமை உந்திக் கொண்டிருந்தது. சிதறடிப்போம் என்று ஒவ்வொரு முறை வெறியெழக் கத்தும் பொழுதும் தங்களின் தேசம் எப்படி துண்டுகளாக்கப்பட்டு அதிகாரம் தலையெழுந்தது என்று அவர்கள் வேதனையுற்றனர். அவர்களின் ஒரே எதிரியான ரோமப்பேரரசின் மகத்தான கழுகுகள் பதித்த ஸ்தூபம் நாசரேத் நகரின் நடுமையத்தில் பிரஸ்தாபிக்கப்பட்ட நாளினை எண்ணினர். நகர் மையத்திலேயே வலுவாகக் கட்டியெழுப்பப்பட்ட அவர்களின் கோட்டையின் மண் நிறம், அதன் நாற்புறமும் அவர்களின் அழியா முத்திரை பதிந்த  பறக்கும் இரு சிறகுகள் பதிந்த மஞ்சள் நிறக்கழுகுகளின் கூர் அலகுகளை, பாரபட்சமற்ற சென்னிறக்கண்களை, கட்டற்ற ஒற்றைப்படையான அதிகாரத்தின் திளைப்பில் மூழ்கிக் கிடக்கும் அந்த பிசாசுகளின் கோட்டைதான் அவர்கள் அனைவரின் நினைவிலும் நிலைத்திருந்தது.

    அந்த உயரமான கோட்டைச்சுவர்களுக்கு கீழே, ரோம் பேரரசின் நூற்றுவர் தலைவன் நின்று கொண்டிருக்கிறான். அவர்களை அழிக்கும் ரத்த வெறியுடன் தன் படையுடன் நிற்கிறான் ஒரு புரட்சிவீரன்.  அவனது படைக்கு கீழே குதிரைகளும், நாய்களும், ஒட்டகங்களும், அடிமைகளும் நிறுத்தபட்டிருக்கின்றன.  அதற்கும் கீழே அடியாழமற்ற ஒரு வறண்ட கிணறு. காற்றில், அவ்வீரனின் சென்னிறத் தலைமுடி ஒரு அனல் போலச் சுழல்கிறது. நாள்பட்ட பித்தேறியக்கண்களைச் சுற்றிப் படலமாய் கருமை அண்டியிருக்கிறது. 

    அதிகாரத்தின் தலைகள் கொய்யப்படும். அதன் கோட்டை, கொத்தளங்கள், படைகள் அனைத்தும் கண் சிமிட்டும் நொடியில் நொறுங்கி மண்ணாகும். கடவுளுக்கான வழி என்பது அழிக்கமுடியாத நீதி. அதிகாரத்தின்  எல்லாத் தவறான அடித்தளங்களுக்கடியிலும், வஞ்சிக்கப்பட்டவர்களின் அணையாத வெம்மை புதைக்கப்பட்டிருக்கிறது என்று அவர்கள் நம்பினர்.

    மக்காபீசின் குலவழியின் கடைசி வழித்தோன்றலான அக்கலகக் காரனுக்கு,  இஸ்ரவேலின் தெய்வம்,  வழி வழியாக புனித அழியா விதையாக  சார்புகளற்ற நீதியை மட்டுமே அளித்திருந்தது. ஓர் இரவு ஏரோது , யூதர்களின் நிலத்தில், ரோமின் ஆட்சிப்பொறுப்பில் இருந்த அந்தக் கிழட்டு மன்னன்,  சதுக்கத்தில் தீப்பந்தங்கள் போல உயிரோடு எரிந்து புகையாய் சாம்பலாய் ஆகும் நாற்பது இளைஞர்களைக் கண்கள் இமைக்காது தணலாக அவர்கள் அங்கும் இங்கும் உயிர் வழிய ஓடிக் கொண்டிருப்பதை, கதறுவதை, வெறித்த நகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். ஏன்? யூதர்களின் ஆலயத்தில், ரோமின் குலச்சின்னமான கழுகுகள் பதித்திருந்த பீடத்தை அவர்கள் இழுத்து உடைத்தனர் என்பது தான் குற்றம்.

    ஆனால் ஒருவன்! அவர்களை வழி நடத்திய அந்த நாற்பத்தியொன்றாவது ஆள் மட்டும் தப்பிவிட்டான். கடவுளுக்குத்தான் தெரியும் அவன் எப்படிப் பிழைத்தான் என்று. மக்காபீஸ் குலத்தின் கடைசி எஞ்சிய ஒருத்தனான அந்த இளைஞன் தன் நண்பர்கள் எரிந்து புகைமண்டலமாக ஆனதை நினைத்து வேதனையுற்றான். சுருக்கங்கள் அடர்ந்த அவனது நெற்றியிலிருந்து வியர்வைத் துளிகள் காதுமடல்கள் வழி வழிந்து கொண்டிருந்தது. பெருங்குழப்பத்திலும், வெறியிலும் அலைக்கழிந்து கொண்டிருந்தன அவனது தீர்க்கமானக் கண்கள்.

காலங்கள் கடந்தன. ஒரு நாடோடி போல அவன் மலைக்குன்றுகளில் அலைந்து கொண்டிருந்தான். கடவுள் நம் மக்களுக்காக தருவித்த இந்நிலத்தை மீட்பது ஒன்றுதான் அவனது பிரார்த்தனையும், லட்சியமுமாக இருந்தது. 

"இறைவா! நீயே வழி!

உன் சொல்லே வாக்கு!

எனக்கு அளிக்கப்பட்ட உன் சொல்லின் வழியே என்னை நடத்துகிறேன். எங்கள் பூமியின் மண்ணிற்கு, யாரும் எந்த வரியும் இட முடியாது. எதையும் சிறுமைப்படுத்துவதல்ல, நம் இஸ்ரவேலின் தெய்வத்தின் நியதியினால் நாம் விடுதலை அடைவதுதான் நமக்கான ஒரே நோக்கம். மாபெரும் பலிபீடங்களில் இடைவிடாது மாடுகளின், ஆடுகளின் ரத்தங்களால் நனைத்து நம் வேண்டுதல்களுக்கு செவி கூரும் எந்த தெய்வமும் எங்களுக்கு தேவையில்லை. 

    எங்களின் இறைவன் ஒருவனே! அவன் இஸ்ரவேலின் தெய்வம்!

    இந்நிலத்தின் ஒட்டுமொத்த மரங்களிலிருந்தும், பூத்துக் குலுங்கிக் கனிந்திருக்கும் ஒருவன், மெசியா!

    ஆனால் இறைவனின் கரங்களிலிருந்து அவன் ஏதோ ஒரு தருணத்தில் நழுவி விட்டான். ரோம் படையினர்களிடம் மாட்டிக் கொண்டான். இந்தச் செய்தி நாசரேத் ஊரின் எல்லா இண்டு இடுக்குகளிலும் பரவியது. மக்கள் ஒருவர் விட்டு ஒருவராக, ஜென்னசரெட் ஏரியிலிருக்கும் மீனவர்கள் மூலமாக, நாசரேத்திலிருந்த இளைஞர்கள், பெரியவர்கள், குழந்தைகள் அனைவரும் அதனை அறிந்திருந்தனர். அங்கு வந்த வழிப்போக்கர்களுக்கு கூட அந்த செய்தி தெரிந்திருந்தது. எல்லோரும் மீண்டும் மீண்டும் தங்களுக்குள்ளேயே சொல்லிக் கொண்டனர், அந்த புரட்சிக்காரனை சிலுவையில் அறையப்போகிறார்கள். எல்லாக் குற்றங்களுக்கும் தண்டனையாக, அரசனின் நிமித்தோன் தெருத்தெருவாக அறிவித்துக் கொண்டு சென்றான். ஆனால் மக்களிடம் வேறு விதமான நாள்பட்ட ஆவல் எழுந்தது என்பது தான் உண்மை. அது ஒரு ஆவல் கூட அல்ல, ஒரு ஏக்கம், தவிப்பு, மன்றாட்டு, பிரார்த்தனை. ஒரு சமயம் வருத்தம்  கொண்டவர்கள் மறுசமயம் அந்நாளை எதிர்பார்த்து இருந்தார்கள். அவர்களின் தேவனின் அற்புதம் நிகழும் நாள் என எண்ணி ஏங்கினர். நீளமான பேரீச்சை மரக் கிளைகளைக் கைகளில் ஏந்திக் கொண்டு தங்களின் மீட்பரின் வருகையினை எதிர் நோக்கும் தருணமிது என்று அவர்கள் நம்பினர்.

    செந்தாடிக்காரனின் தோள்களில் நின்று கொண்டு அந்த முதிய போதகர் தூரத்தே வெறித்துக் கத்தத் தொடங்கினார். அங்கு ரோமின் படைகள் தண்டனையை நிறைவேற்ற வந்து கொண்டிருந்தது. 

    அவன் வருகிறான்! ஆம்! அவன் வருகிறான்! அந்த வறண்டக் கிணற்றினருகில் நிற்பது நம் மெசியா! அவன் நமக்காகக் காத்திருக்கிறான். எல்லாத் தடைகளையும் உடைத்து நம்மை விடுவித்து நமக்கான நம் மண்ணிற்கான சுதந்திரத்தை வழங்க வந்து கொண்டிருக்கிறான். முதிய போதகர் கூச்சலிட்டு முழங்கினார்.

    ஆம்! நம் கடவுளின் பெயரால்! எனத் தன் கையிலிருந்த கோடாரியை உயர்த்தி ஒரு கான்மிருகத்தின் கேவல் போல பராபஸ் கதறினான்.

    மக்கள் அனைவரும் ஒரு விதக் கிளர்ச்சியில் கத்தினர். தங்கள் இடுப்பு வார்ப்பட்டைகளில், உடைகளினுள் சொருகி வைத்திருந்த கத்தியினை ஆண்கள் இன்னொருமுறை சரிபார்த்துக் கொண்டனர். சிறுவர்கள் கையில் கவண்களுடன் தயாராக இருந்தனர். ரோமப்படையினரை நோக்கி பராபஸ் முன்செல்ல அவர்கள் அவனைத் தொடர்ந்தனர். கண்கள் கூசும் வானின் ஒளியினுள் யாரும் அந்த சிறிய மூடுபல்லக்கு  அவர்களை நோக்கி வருவதைக் கவனிக்கவில்லை. சற்று நின்ற அதனின் உள்ளிருந்து மெல்லத் தன் கால்களை வெளியே வைத்து மக்கள் எல்லோரையும் பார்த்து நின்றாள் மாக்தலேனா. மிகவும் வெளிறியிருந்தது அவளின் முகம். தவிர்க்கவே முடியாத ஒன்றிடம் தன்னை ஒப்புவிக்கும் தாவர உண்ணியின் கட்டக்கடைசியான மரண பாவனை அவளது கண்களில் அப்பியிருந்தது. பலியிடப்போகும் அந்த மனிதனை எண்ணிய அவளது நெஞ்சம் விம்மித் துடித்தது. சற்று இறங்கி நின்ற அவள், இவ்வுலகில் மனிதனால் தர முடிந்த ஆகச்சிறந்த இனிமையையும், மகிழ்வையும் அவனுக்கு தன்னால் அளிக்க முடியாத இரவினை எண்ணி எண்ணி மூர்ச்சையுற்றாள்.

    ஒரு மூர்க்கமான நிலையில் தன்னை இந்த தேசத்தின் விடுதலைக்காக அவன் அர்ப்பணித்திருந்தான். ஒரு முழு இரவும் மாக்தலேனிற்கு எதிரிலேயெ இருந்தும் அவனது கண்களும் உள்ளமும் அவளை சிறிதி கூட நோக்கவில்லை. ஒரு கனவுலகவாதியாக, லட்சிய வாதியாக அந்தப் புனித ஜெருசலேம் மண்ணை அவன் தன் அகத்தில் நிலைத்திருந்தான். அதற்கான சத்தியத்தில் அவன் வழுவவேயில்லை. தன் தலை முடியைத் திருத்தவில்லை, எந்தப் பெண்ணையும் ஏன் மதுவைக் கூடத் தொடாது முழு மூச்சாக இந்த லட்சியப்பாதையில் செல்ல சத்தியம் செய்து கொண்டிருந்தான். அப்புனித நகரம், அதன் ஏழு மாபெரும் கோட்டை வாயில்கள், அதற்கு காவலாக ஏழு தேவதைகள், இந்நிலத்தின் மைந்தர்களான எழுபத்து ஏழு பேர்கள் என அனைத்தும் அதன் காலடியில் இருப்பதாய் தனக்குள் தானே நினைத்து மகிழ்ந்திருந்தான்.

    ஜெருசலேம் எனும் தாயின் குளிர்ந்த முலைகளில் முகம் புதைத்துக் கொள்வதன் மூலம் அவன் அனைத்தையும் மறந்திருந்தான். வாழ்வோ! சாவோ! அவனது உலகம் அதனைக் கடந்ததாய் இருந்தது. தன் உள்ளங்கைகளை உற்று நோக்கித் திரும்பத் திரும்ப அவன் எண்ணியது, இஸ்ரவேலின் கடவுளை! கத்தரிக்கப்படாத நீண்ட கேசத்தைக் கொண்ட, மதுவோ, பெண்களோ தீண்டாத உடல் கொண்ட தெய்வம். என்னைப் போலவே! முழு இரவும் ஒரு குழந்தையினைப் போலக் கைகளில் ஜெருசலேமைத் தாங்கிக் கொண்டிருப்பதாய் நினைத்தான். தன் கைகளுள் உருளும் இந்நகரம். இறைவனின் ராஜ்ஜியம். சொர்க்கத்தின் ராஜ்ஜியம். மண்ணும் மனிதர்களாலும் நிரம்பிய தேவனின் ராஜ்ஜியம். குளிரில் வெம்மையையும், வெய்யிலில் தண்மையையும் ஒருங்கே கொண்ட நிலமாய் அது இருக்கும் என்று தன்னுள் பெருமை பட்டுக்கொண்டான்.

    படைமுகாமிலிருந்து வெளியே வந்த தன் சொந்த மகளைக் கண்ணுற்றார் முதியதுறவி. தன் வாழ்விற்கான பெரும் அவமானத்தின் ரூபமாய் அவள் இருந்தாள். வெறுமனே தன் முகத்தைத் திருப்பிக் கொண்டார். ஒரு புனிதனைக் காண ஏன் இந்த வேசை வருகிறாள். தவிர்க்கவே முடியாத வலியின் நகங்கள் அவிழ்க்க முடியாதபடி பற்றிக் கொண்டிருக்கும் அவளின் வழியினை நினைத்து தன்னையே நொந்து கொண்டார். ஏன்? அவள் இப்படியானாள் என்று இன்று வரைத் தெளிவாக அவருக்கு தெரிந்திருக்கவில்லை. ஏன்? அவமானத்தினுள் நெளிந்து கொண்டே இருக்க வேண்டிய, குணப்படுத்த முடியாத வலியினைத் தன்னுள் செலுத்திக் கொள்கிற வாழ்வினைத் தேர்ந்தாள் என்றும் தெரியாது வெறுமனே வானை நோக்கி வெறித்தார்.

    ஒரு நாள் கானாவின் கோவில் திருவிழாவிற்கு சென்று அழுது கொண்டே திரும்பவந்தவள், நான் தற்கொலை செய்ய வேண்டும் என்று பிதற்றினாள். தன் உடலெங்கும் ரணம் ரணமாக்கி முற்றிலுமான வலியின் சாசுவதத்தில் நான் மரணமடைய வேண்டும். அது ஒன்று தான் என்னைத் திருப்திபடுத்தும் என்று ஓலமிட்டாள். பின் வெறி கொண்டு சிரித்தாள். தன் நாடியில் வண்ணங்களால் குறி வரைந்து கொண்டாள். போட்டிருந்த அணிகலன்களை அவிழ்த்தெறிந்தாள். அங்கிருந்து வெளியே சென்றவள், சந்தைப்பகுதியின் நாற்சந்தியில் தன் கடையை விரித்தாள். வணிகர்கள் கூடும் இடத்தில் தன் உடலைப் பாளம் பாளமாகப் பிரித்து வைத்துக் கூவி அழைத்தாள்.

    கூட்டத்தை நோக்கி எந்த அச்சமுமின்றி அவள் விரைந்தாள். முகப்பூச்சுகளையும், அலங்காரங்களையும் களைந்து விட்டிருந்தாள். ஒரு முழு நாளின் நீண்ட இரவும் உறங்காது அவனைப் பார்த்துக் கொண்டே இருந்த அவளது கண்கள் சிவந்து தடித்திருந்தது. சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த தன் தந்தையினைப் பார்த்தாள். இன்னும் இன்னும் தன்னால் நலிந்து கொண்டே இருக்கும் அவரின் முகத்தைக் காண சகிக்காது திரும்பிக் கொண்டாள். ஒரு கசந்த இளிப்பை தனக்காக மட்டும் இளித்துக் கொண்டாள். கலங்கிய கண்களுடன் தன்னைத், தன் உடலை உற்று நோக்கினாள். ஏழு சாத்தான்களால் பீடிக்கப்பட்ட சரீரம். கடவுளையும், மனிதர்களையும் கைவிட்டு அவள் வெகு தொலைவில் வந்து விட்டிருந்தாள். உடல் மட்டுமேயான் உலகில் தன் உடலும் இன்னொரு உடலும் , அதன் விம்மலும், தேக்கமும், வலிகளும், உழலல்களும் தவிர்த்து அவளிடம் ஏதொன்றுமில்லை.  ஆனால் ஏழு சாத்தான்களல்ல மீள மீளத் தன் இருதயத்தில் ஏழு கூர்க்கத்திகளினால் குத்தியும் பிளந்தும் கொண்டிருந்தாள்.

திங்கள், 14 பிப்ரவரி, 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் - 13

    


    கூட்டத்தில் இருந்த வயதான ஒருத்தி மேரியைக் கண்டதும் கோபத்துடன் சபித்தாள். அருகே நின்று கொண்டிருந்த அவளின் உறவினர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டு காறி உமிழ்ந்து சென்றனர். சிலுவையை செய்தவனின் தாயைத் தொடுவதும் கூடப் பாவம் எனத் தன் பாவடையை ஒதுக்கிப் பிடித்துக் கொண்டு சென்றாள் புதிதாய்த் திருமணமான பெண்ஒருத்தி. நிற்க முடியாது நடுங்கிக் கொண்டிருந்த மேரி என்ன செய்வதென்றறியாது விதிர்விதிர்த்தாள். தன் ஊதாநிறக் கைக்குட்டையினால் முடிந்த வரை முகத்தை மறைத்துக் கொண்டாள். அவளுடைய பாதாம் போன்றக் குழிந்த கண்கள் மட்டுமே வெளித் தெரியும் அளவுக்கு தன்னை மறைத்திருந்தாள். 

    எப்படியாவது இந்தக் கூட்டத்தினை விட்டு மறைந்து விட வேண்டும் என்ற அவசரத்தில் ஓட்டமும் நடையுமாக, குத்துப்பாறைகளையும், சரளைக்கற்களையும் மிதித்துத் தடுமாறி நகர்ந்தாள். கூட்டத்தினர் அவளைப்பார்த்த நொடி தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டிருந்ததை கலங்கிய கண்களுடன் பார்த்துக் கொண்டே சென்றாள். அடக்க முடியாது கைக் கட்டையைக் கடித்துக் கொண்டே எங்காவது மறைவான இடத்திற்கு சென்றுவிட எத்தனித்தாள். உள்ளம் விம்மி விம்மித் தன் மகனுக்காக ஏங்கியது. தன் மகனின் நிலையைக் காண சகியாது இருந்தும் வேறு வழியுமின்றி, எப்படியாவது அவனைத் தடுத்து விடும் ஒரு வாய்ப்பாவது கிடைக்காதா என்று நினைத்தவள், அங்கும் இங்கும் அலை பாய அவன் எங்கிருப்பான் என்று பதைபதைத்தாள்.

    அங்கிருந்து நகர்ந்தவள் ஆண்கள் இருந்த கூட்டத்தின் பின் பக்கமாய் மறைந்து நின்று கொண்டாள். உள்ளங்கையால் வாயைப் பொத்திக் கொண்டவளின் பழுப்பு நிறக் கண்கள் மட்டுமே தெரிந்தது. அவளின் உறவினர்களால் எப்படியும் தன்னைக் கண்டறிய முடியாது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவள் மெல்ல அமைதியாகி அங்கேயே கால்கள் நடுங்க நின்று கொண்டிருந்தாள்.

    படைகள் வேகமாக வந்து கொண்டிருந்தன. பிடிபட்ட கலகக்காரனுக்கானத் தண்டனையை நிறைவேற்றும் நிமித்தம் கூட்டத்தினைத் தள்ளி நகர்ந்து முன் சென்று கொண்டிருந்தனர். மேரி தன்னை முழுதுமாக மறைத்துக் கொண்டு அவர்களின் அருகில் நின்று கொண்டிருந்தாள். ஆறாத காயத்தினுள் மீண்டும் மீண்டும் அடிபட்டுக் கொண்டே இருக்கும் உணர்வுடன் முகத்தினைக் கோணலாகவும் பற்களைக் கடித்துக் கொண்டும் கூட்டத்தை நோக்கி அந்தத் துறவிக் கத்திப் பேசத்தொடங்கினார். மேரி கூர்ந்து அவரின் சொல்லைக் கவனித்தாள்.

    "என் குழந்தைகளே பயப்படாதீர்கள். நம்பிக்கை கொள்ளுங்கள் இஸ்ரவேலின் மக்களே! ரோமில் கங்குகள் கனலத் தொடங்கிவிட்டன. கடவுள் அதை எரித்து சாம்பலாக்குவார். நினைவு கொள்ளுங்கள்! நம் மக்காபியர்கள் எங்கனம் க்ரீக் ராஜ்ஜியத்தை ஓட விட்டர்கள். இவர்களும் அது போலவே நம்மை விட்டுப் பயந்து தெறித்து ஓடுவார்கள். நம் படைகளுக்கு ஒரே தலைவனே! அவனே நம் தெய்வம்."

    முதிய துறவி தன்னிலையை முற்றிலுமாக இழந்திருந்தார். கனத்த அந்த பெரிய மனிதனின் தோள்களில் சன்னதம் வந்தது போல அசைந்து ஆடிக் கொண்டும், துள்ளிக் கொண்டும் இருந்தார். நாட்பட்ட பட்டினி நோன்புகளினால் முற்றிலுமாகவே நசிந்திருந்த அவரது உடல் மாபெரும் நம்பிக்கைகளினாலேயே இன்னும் அழியாமல் இருந்தது. எந்த வலுவுமற்ற அவருக்கு மாறாக மிகுந்த வலுவுடன் இருந்த அம்மனிதனின் தோள்களில் ஒரு பதாகை போல அவர் அங்கும் இங்கும் அசைந்து கொண்டிருந்தார்.

   சுற்றி நின்றவர்கள் அவனைப்பார்த்து, பராபஸ்! அவர் கீழே விழப் போகிறார் என்று கத்தினர்.

    பராபஸ் எந்தத் தயக்கமுமின்றி ஒரு குழந்தையைத் தூக்கிப் போட்டு விளையாடும் தொணியில் அவரைத் தன் தோள்களில் குலுக்கிக் கொண்டிருந்தான்.

    கூட்டம் முழுதும் காட்டுத்தீ பற்றுவது போல அவரின் முழக்கம் பற்றிக் கொண்டிருந்தது. அவர்கள் அனைவரின் வேட்கையிலும் இருந்த தெய்வத்தின் சொல் அங்கு ஒன்றாகிப்படர்ந்தது. வானுக்கும் பூமிக்குமாக அவர்களின் ஏக்கங்களின் குரல்கள் வழிந்துருகியது. ஒட்டுமொத்த உலகமும் பாம்பு தோலுரிப்பதைப் போல தன்னைத்தானே உரித்துக் கொண்டு புத்தப்புதியதாய் உருவாகி விடும். தேவதைகளின், மாட்சிமையின் அழிவற்ற ஒளியின் பிழம்புகளால் அனைத்தும் நிறைந்து ததும்பும்.

    இன்றே! நாளையல்ல! யூதாஸின் சொல் மந்திரம் போல அவர்களினுள் முழங்கியது. பராபஸின் தோள்களிலிருந்த அம்முதியத் துறவியைப் பற்றி இழுத்து கீழே தள்ளி மறுபடியும் அச்சொல்லை ஒரு தீக்கணல் போலவே முழங்கினான். முதியவர் தன்னைத் தானே கொளுத்திக் கொள்வதைப் போல சுழன்றார். வெற்றியின் பாடலை அவர்களின் ஒட்டுமொத்த முழக்கத்தையும் தாண்டும் வகையில் சத்தமாகப் பாடத் தொடங்கினார். 

"எங்கள் கடவுளின் பெயரால் சிதறடிக்கிறேன், எங்களின் தேசத்தைப் பீடித்துக் கொண்டிருப்பவர்களை 

எங்கள் கடவுளின் பெயரால் சிதறடிக்கிறேன், எங்களின் தேசத்தை அச்சுறுத்தி சுற்றி வளைத்துக் கொண்டிருப்பவர்களை

எங்கள் கடவுளின் பெயரால் சிதறடிக்கிறேன், குளவிகளைப்போல எங்களைச் சூழ்ந்து கொட்டிக் கொண்டிருப்பவர்களை"

கிறுஸ்துவின் கடைசி சபலம் - 12

    


 ஒரு வித படபடப்படனும் வேகத்துடனும் அவன் சிலுவையை செதுக்கிக் கொண்டிருந்தான். அவனின் தோற்றத்தைக் கண்ட அவனது அன்னை என்ன செய்வதென்றறியாது தன் வெளுத்த கன்னங்களில் கை விரல் நகங்கள் பதிய வெறித்து  நோக்கினாள்.

    திரும்பத் திரும்பத் தன் பிரஞ்சையில் மகனின் நினைவுகள் அலைவுறுவதை நினைத்தாள். ஊன் உறக்கமின்றி வெறுமனே பல தினங்கள் இந்த வானைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான். கனவுகளில் சதா அலைக்கழிந்து கொண்டும், இரவும் பகலும் அனாதரவின்றி கிடக்கும் இந்த வெற்று மணற்பரப்பில் கால்கள் ஓய ஓய அலைந்து கொண்டும் இருக்கிறான். எங்கோ எதனுடையதோ கைகளினுள் அகப்பட்டுக்கொண்டு மீள்வதற்காக தத்தளித்துக் கொண்டே இருக்கும் உறக்கமற்ற அந்தக் கண்களைத் திரும்பவும் நினைவு கூர்ந்தாள்.

    என்று இந்த சிலுவையைச் செய்வதற்கான உத்தரவு வந்ததோ, ஒளியுமிழும் அவனது தீர்க்கக் கண்களில் பித்து பற்றிக் கொண்டது. ஒரு கிறுக்கன் போலத் தன் உடலும் ஆன்மாவும் தோய அதை உருவாக்குவதில் முற்றிலுமாக அவன் உழன்றிருந்தான்.

    கானா நிலத்திற்குள் திரும்பவும் செல்வதற்கோ, திருவிழாக்கள் இல்லை கூடுகைகளுக்கோ போக அவன் விரும்பவில்லை. பிரார்த்தனைக்காகக் கூட ஆலயத்திற்கு அவன் சென்று வெகு நாட்கள் ஆகியிருந்தது. அறையினுள் தனக்குள் தானே பிதற்றும், வெறிக்கூச்சலிடும், சண்டையிடும் அவனது குரலைக் கேட்கும் அவனின் தாய், தன் மகன் ஏதோ பிசாசின் பிடியிலோ இல்லை சாத்தானின் கைகளிலோ அகப்பட்டுக் கொண்டிருப்பானோ என்று அஞ்சினாள்.

    "யாரையெல்லாமோ காப்பாற்றினீர்கள். என் பிள்ளையை மட்டும் ஏன் கை விட்டீர்" என்று தனது சகோதரன் அந்த முதியத்துறவியின் கால்களைப் பிடித்து மன்றாடினாள் அவள்.

    மேரி!

    இந்த வேதனைகளும், வதைகளும் பிசாசினாலோ சாத்தானினாலோ அல்ல. இது கடவுள். நான் இதில் செய்ய ஒன்றுமில்லை என்றார்.

    அப்படியென்றால் என்னதான் வழி? 

    நிராதரவற்ற அந்தத் தாயின் கலங்கிய கண்களில் தீர்க்கம் ஒளிர்ந்தது.

    எதற்காக அவனைக் கடவுள் இப்படி வதைக்க வேண்டும்?

    முதியவர் எதுவும் சொல்ல முடியாது வெறுமனே பெருமூச்சு விட்டார்.

    எதற்காக? திரும்பத் திரும்ப அவள் பிதற்றினாள்.

    ஏனென்றால் உனது மகன் கடவுளுக்கானவன். 

    மேரி அமைதியின்றி விசனத்துடன் முதியவரை நோக்கினாள்.

    இது கடவுளின் நியதி! என்ற அவரது சிடுக்கான நெற்றியில் முடிச்சுகளிட்டன. கண்களைத் திறக்காமல் அவளை போகச் சொல்லும் நோக்குடன் தலையை அசைத்தார்.

    எதுவுமே செய்ய இயலாது காலம் மட்டும் நகர்ந்து கொண்டிருந்தது. நகர்த்தவே முடியாத பாறை போல சோர்வு அவளது கால்களில் கொழுத்தியிடப்பட்டிருந்தது. 

    அவனது அறைக்கதவின் அருகே சென்ற அவள் திகைத்து அசைவற்று நின்றாள். அவனின் முன் நெற்றியிலிருந்து குருதிக்குமிழ் வழிந்து கொண்டிருந்தது.

    திரும்பத் திரும்ப விம்மி அடங்கிய மூச்சு, அவளது நெஞ்சுக் கூட்டினுள் குமைந்து பீறிட வழி தேடியது. யாருக்காகவுமின்றி தனக்காகவே. விதியின் கூர் நகங்களினால் செதில் செதிலாய்க் கிழிந்து கிடக்கும், தன் கணவனையும், மகனையும் நினைத்துக் கண்ணீர் துளிகள் பெருகி வழிந்தன. அடித்தொண்டையிலிருந்து கேவல் ஒலி முணகி முணகி ஒரு குழறலாய் ஒலித்தது.

    ஒரு தாயாக, மனைவியாக எந்த இன்பத்தையும், பெருமையையும் அவள் அறிந்திருக்கவில்லை. தன் திருமணத்திற்கு முன்பே விதவையானவள். குழந்தை பெற்றுக் கொள்ளாமலேயே தாயுமானவள். இப்பொழுது நரை கூடி முதுமையும் அடைந்து விட்டாள்.

    அதிகாலையின் காற்று மெல்ல மெல்ல அறைகளினுள் நுழைந்து அனைத்தையும் தொட்டு முகர்ந்து வெளியேறியது. கடவுளுக்கு வேண்டிய மொத்தக் கண்ணீரையும்  அவள் வடித்து உலர்ந்திருந்தாள். இன்னும் எஞ்சியிருந்த விம்மலும் ஒரு நீர்க்குமிழ் போல உடைந்து வெளியேறியது. மகனுக்காகவோ, கணவனுக்காகவோ அன்றி தொலைந்து போன தன் வாழ்வினை நினைத்தே திரும்பத் திரும்பத் தவித்து அழுதாள்.

    சட்டென எழுந்த இளைஞன் தனது தாயை வெறுப்புடன் நோக்கினான். தனது உடுதுணியின் ஓரத்தினால் காயத்தை ஒற்றிக் கொண்டும், அவளின் பார்வையில் இருந்த என்றைக்குமே மன்னிக்க முடியாத தன்மையினைப் பார்த்துக் கொண்டும் கசப்பு மேலிட உதடுகளைச் சுழித்து காறி உமிழ்ந்தான்.

    எந்த வகையிலும் ஆற்றுப்படுத்த முடியாது நலிந்திருக்கும் அவளின் நாள்பட்ட கெஞ்சல்கள் தான் அவனது காதுகளில் மீண்டும் ஒலித்தது.

    ஒழுங்காக சாப்பிடு! வேலை செய்! கல்யாணம் செய்து கொள்!

    "ஜீசஸ், இந்த அதிகாலை நேரத்தில் இங்கு யாருடன் திரும்பவும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறாய்" என்று சிறிது கண்டிப்புடன் கேட்டாள்.

    எதுவும் பேசாது உதடுகளைக் கடித்துக் கொண்டான். பாலையின் ஒளியும், வெக்கையும், தூசு நிரம்பிய காற்றும் அறையினுள் குழுமியது. வியர்வையுடன் ரத்தத்தை வழித்து எறிந்தான். தோள்களைத் திரும்பவும் சரிசெய்து கொண்டு சிலுவையை நாட்ட எத்தனித்தான்.

    தோள்பட்டை வரை நீண்டிருந்த தன் கூந்தலை அள்ளி முடிச்சிட்டு தலைக்குட்டையினுள் பொதித்தாள். மெல்ல அறையினுள் நுழைந்தாள். சிறிது வெளிச்சத்தில் தன் மகனை நடுக்கமுறப் பார்த்தாள்.

    எப்படி? இடைவிடாது இவன் மாறிக் கொண்டே இருக்கிறான். தண்ணீரைப் போல. ஒவ்வொரு நாளும் புதியவனாகி விடுகிறான். அறுதியிட முடியாத ஒளிர்வு அவனது முகத்திலிருந்தது. அவனின் முகம், கண்கள், வாய், சிறிதே வளர்ந்திருக்கும் தாடி. ஏன் விழுங்கத்துடிக்கும் இந்த மாயப் பொலிவு?

    எந்த வித சலனமுமின்றி அமைதியாக நின்று கொண்டிருந்தான். தீப்பற்றிக் கொள்ளும் ஜ்வாலைக் கண்கள். உண்மையில் நீ யார்? என் மகனா? என்றே கேட்க நினைத்தாள். வெளிவராது அவளினுள் துடித்துக் கொண்டிருந்தது அந்தக் கேள்வி. ஜீசஸ்! என்று மட்டுமே விளிக்க முடிந்தது.

    அவன் எதையுமே பொருட்படுத்தாது, சிலுவையை முதுகில் ஏற்றிக் கொண்டு கதவைத் திறந்து வெளியேறினான்.

    மலைச்சரிவைத் தொடும் வரைத் தன் மகனையே வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கு சிறகுகள் உந்தி உந்தி வான் நோக்கிப் பறக்கத் துடிக்கும் ஒரு தனித்த பறவையைத் தான் அவள் கண்டாள்.

    நான் என்ன செய்வேன் கடவுளே! உண்மையில் யாரிவன்? யாரின் புதல்வன்! கணத்திற்கு கணம் மாறிக் கொண்டே இருக்கும் இவன், யாரைப் போலவுமில்லை. ஆனால் நிச்சயமாக சொல்வேன்,  அவன் ஒருவனல்ல. பலப்பல முகங்களாய் தன்னுள் திரளும் அவனை வாழ்நாள் முழுதுமாய்ப் பீடித்திருக்கும் கொடுக்குகள் எப்பொழுதும் விலகாதிருப்பதை நினைத்துத் தன்னையே நொந்து கொண்டாள்.

    அந்தக் கனவின் நாளை அவள் திரும்பவும் நினைக்கும் பொழுது அது முற்றுப் பெறாமலேயே இருந்தது. பிராகாசமான அந்த ஒளிர் நட்சத்திரம். கிணற்றருகே இருந்த முற்றத்தில் அமர்ந்து தன் பிள்ளையை மார்போடு அணைத்துக் கொண்டு சற்றே அயர்ந்திருந்தாள். ஒரு துளியோ! கணமோ! நொடிப்பொழுதோ! தெரியவில்லை. அந்த ஒளியினைக் கண்டாள். பல்லாயிரம் சிறகுகள் கொண்ட தேவதையின் கைகளிலிருந்து  பால் நிற ஒளி மெல்ல மெல்லக் கனன்று பூமியெங்கும் வியாபிக்கத் தொடங்கியது.

    இருளடைந்த பாதைகளின் வளைவுகளுக்குள் நெழிந்து ஊர்ந்து வந்த அது அவளது பாதங்களைத் தழுவியது.

    இவ்வொளி எங்கிருந்து தொடங்கியது. எதற்காக இத்தனை தூரம் கடந்து வந்து என் பாதங்களுக்கடியில் இறைஞ்சுகிறது. ஒரு விதத் தயக்கத்துடன் விதிர்த்தாள். எதிரில் பொன் மஞ்சள் ஒளிச்சுடர் வழி அம்மூன்று குதிரை வீரர்களும் வந்து கொண்டிருந்தனர்.

    அவளுக்கு எதிரே நின்ற அவர்கள் வானை நோக்கினர். பால் நிற ஒளியுடன் நட்சத்திரம் இன்னும் வானில் நிலைத்திருந்தது. அவர்கள் தத்தமது குதிரைகளை முன் நோக்கி முடுக்கினர். இப்பொழுது அவர்களது முகங்களை அவள் தெளிவாகப் பார்த்தாள். நடுவே நின்றவன் வெண்ணிறமாகவும், மூவரில் மிக இளையவனாகவும் இருந்தான். நாடியில் தூவல் போல மயிர் அரும்பியிருந்தது. வலப்புறம் நின்றவன் மஞ்சள் நிறமாகவும், கருத்த சரியாக வெட்டித்திருத்திய தாடியுடனும், சற்றே சாய்வானப் பார்வையும் கொண்டிருந்தான். இடப்புறம் நின்றவன் கருப்பாகவும், வெளுத்த தலைமுடியும், காதுகளில் வளையங்களும் அணிந்திருந்தான். தன் வெள்ளைப்பற்கள் தெரிய அவன் அவளைப் பார்த்தான்.

    இவர்களைப் பார்த்ததும் திகைத்துப் போன அவள், குழந்தைக்கு அசௌகரியம் ஏற்படா வண்ணம் தன் உடுதுணியால் அவனை மூடி மறைத்துக் கொண்டாள். குதிரை வீரர்கள் ஒவ்வொருவராக மெதுவாக இறங்கி அவள் முன் மண்டியிட்டனர்.

    முதலில் அணுகிய வெண்ணிற வீரனைக் கண்டதும், குழந்தை தாயின் மடியிலிருந்து இறங்கி அவளின் கால்களில் தன் பிஞ்சுப்பாதங்களை மெல்ல ஊன்றி நின்றது. வீரன் தன் மணி முடியைக் கழற்றி அதன் பாதங்களில் பணிவன்புடன் வைத்தான். பின் வந்த கருப்பு வீரன், தன் கை நிறைய வைத்திருந்த வைர, வைடூரியங்களை, மரகதங்களை, மாணிக்கங்களை குழந்தையின் தலைக்கு மேலே பக்தியுடன் பொழிந்தான். கடைசியாக வந்த மஞ்சள் நிற வீரன், தன் கையில் வைத்திருந்த மயில் தோகைக் கற்றையை விளையாடுவதற்காகக் குழந்தையின் காலடியில் சமர்ப்பித்தான்.

    குழந்தையோ அவர்கள் மூவரையும் பார்த்து கண்கள் விரியக் கோழை வடிய சிரித்ததே தவிர அவர்கள் அளித்ததைத் தொடக் கூட இல்லை.

    வீரர்கள் திடீரென அங்கிருந்து மறைந்தனர். பின் ஒரு இளம் மேய்ப்பன் அவளிடம் வந்தான். செம்மறித்தோல் ஆடை உடுத்தியிருந்த அவன் கைகளில் கிண்ணம் நிறையப் பால் இருந்தது. பாலைக் கண்டதும் குழந்தை வீறிட்டது. தலை குனிந்து அந்தக் கிண்ணத்தை முகர்ந்து பாலினைப் பருகத்தொடங்கியது. எங்கே திடூமென அவன்ன் சென்று விடுவானோ என்ற அச்சத்திலும் பதற்றத்திலும் வேகமாக உறிஞ்சியது.

    கனவின் நினைவுகளிலிருந்து மீண்ட அவள் நீண்டு கிடந்த பாதையைத் தன் வீட்டின் வாசலிலிருந்து பார்த்தாள். எத்தனை நம்பிக்கைகளில் என் பிள்ளையை இவர்கள் உழலவைத்தனர். என்னென்ன தரிசனங்களைக் கூறிக் கொண்டு எங்களைச்சுற்றித் திரிந்தனர் இந்தத் துறவிகள். வேதங்களையும், நூல்களையும், தரவுகளையும் புரட்டி, என் குழந்தையின் உடலெங்கும் அந்த அடையாளங்களைத் தேடினர்.

    ஆனால் எல்லா நம்பிக்கைகளும் முற்றிலுமாகக் கருகி விட்டன. என் மகன் நரகத்தின் பாதையை அல்லவாத் தேர்ந்தெடுத்து விட்டான். மீள மீள மனிதன் மாத்திரமே செல்ல முடிந்த வழியல்லவா அவன் கடப்பது.

    தன் தலை முக்காட்டை சரிப்படுத்திக் கொண்டு, அவளும் தன் மகனின் காலடித் தடத்தைத் தொடர்ந்து மலைப்பாதையை நோக்கி சென்றாள். அங்கு சிலுவையில் அறையப் போகும் வதைப்படலத்தை காண்பது மட்டுமே அவளது ஒரே வழியாக இருந்தது.

    வேகமாக நடந்து எப்படியாவது முன்னே செல்லும் கூட்டத்தினுள் சென்று விட முயன்றாள். முன்னே பெண்களின் பேச்சுகளும், மூச்சிரைப்புகளையும் கேட்டாள். தன்னைக் கடந்து வெறுங்காலுடன் செல்லும் ஆண்களை, அவர்களின் அழுக்கு உடையினுள் மறைத்து வைத்திருக்கும் கத்தியினை, தூரத்தில் மெதுவாக வரும் முதிய கிழவனை, ஊனமுற்றவர்களை, குருடர்களையும் கண்டாள்.

    மலைப்பாதையின் சரளைக்கற்களின் நரநரப்பில் மிதிபட்டு மிதிபட்டு காற்றில் அப்பிய தூசியையும், ஏதோ ஊகிக்க முடியாத துர்நாற்றத்தையும் உணர்ந்தாள். சூரியனுக்கு கீழே எல்லாமே எரிந்து வெந்து கொண்டிருந்தது.