புதன், 2 மார்ச், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -61

     

Author: Nikos Kazantzakis

     ஒரு நிமிடம் அமைதியாக நின்றிருந்தவன், திரும்பக் கத்தத் தொடங்கினான். "லூசிபர்! லூசிபர்" "நான் தான் லூசிபர்". அது முற்றத்தின் இருள்க் காற்றிலிருந்து விளக்கின் ஒளியை நோக்கி எதிரொலித்தது. அருட்தந்தையின் அறையில் இருந்த ஏழு நிலை விளக்கு எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு தன் மஞ்சள் நிற ஒளியை வாசலைத்தாண்டி நீட்டியது.

    குனிந்து தரையைப் பார்த்துக் குந்தியிருந்த முதியத்துறவி, உடனே அவன் வாயைப்பொத்தினார். 

    "பேசாமல் இரு" அவர் கண்டிப்பானக் குரலில் பதற்றத்துடன் சொன்னார்.

    "இல்லை! என்னால் முடியாது", மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சியுடன் கண்கள் வெளித்தள்ள இளைஞன் இருந்த இடத்திலிருந்து எம்பினான். இப்பொழுது தான் நான் என்னை வெளிப்படுத்துகிறேன். என்னால் பேசாமலிருக்க முடியாது. இனிமேல் என்னைத்தடுக்க முடியாது. நான் ஒரு பொய்யன். பாவனைகளைத் தூக்கிக் கொண்டு வாழ்பவன். என் நிழலைக் கண்டே பயப்படுகிறவன். நான் யாருக்கும் உண்மையாய் இருந்ததில்லை. கோழை. நான் ஒரு பெண்ணைக் கண்டால் நாணித் தலைகுனிந்து கொள்வேன். ஆனால் என் அகம் முழுதும் காமம் ததும்பி வெளியேறத் துடிக்கும். நான் கொள்ளையடிக்கவோ, கொலை செய்யவோ இல்லை என்பது, என்னால் முடியாது என்பதால் அல்ல, மாறாக நான் ஒரு பயந்தாங்கோழி என்பதால் தான். எனக்கு என் அன்னையை, அந்த நூற்றுவர்த் தலைவனை, ஏன் இந்தக் கடவுளையும் எதிர்த்துக் கலகம் செய்யவேண்டும் என்று தோன்றும். ஆனால் என்னால் செய்ய முடியாது. அதற்குண்டான தைரியம் என்னிடமில்லை. என்னுள்ளே உங்களால் பார்க்க முடிந்தால், வளைக்குள்ளே உயிருக்குப் பயந்து பதுங்கிக் கொள்ளும் ஒரு முயலைக் காணலாம். என்னுள் முழுக்க முழுக்க உண்மையில் உணர்வது இந்தப் பயம் மட்டுமே. என் அன்னையும் தந்தையும் கடவுளும் எல்லாம் அது தான்."

    முதியத்துறவி, ஜீசஸின் கைகளைப் பிடித்துத் தன் கைகளுக்குள் பொத்திக் கொண்டார். வலிப்பு வந்தது போல அவனது உடல் அதிர்ந்து கொண்டிருந்தது. கழுத்து நரம்புகள் புடைக்க, தோள் எலும்புகள் எம்பி, கண்கள் வெளித்தள்ளிய ஒரு விகாரத் தோற்றத்தில் தொடர்ந்து அவன் கதறிக் கொண்டிருந்தான்.

    "பயப்படாதே, என் அன்பு மகனே" அவனுக்குத் தைரியம் தரும் வகையில் துறவி அவனைப் பார்த்தார். நமக்குள் அதிகமான சாத்தான்கள் இருக்குமெனில், நாம் தேவதைகளினால் கூடிய விரைவில் ஆட்கொள்ளப்படும் வாய்ப்புகள் இருக்கிறது என்று அர்த்தம். வருத்தப்படுகின்ற குரல்களுக்கெல்லாம், ஒரு தேவதை செவி கூரும். சாத்தான்களின் வாதைகளே, மனிதனைத் தேவதையின் வழிக்கு இட்டுச் செல்கிறது. நீ! அவைகளால் வாதையுறுகிறாய்!பாவங்களின் கண்ணிகளில் அகப்பட்டு உழலும் மனிதனை, வலியை மட்டுமேக் குடித்துக் கொண்டு அதனுள் சகிக்க முடியாமல் நெழியும் மனித அகத்தை, தேவதைகள் கண்டு கொள்ளும். அவைகள் அதற்காகவே இறைவனால் படைக்கப்பட்டன. அதனால் நீ கவலை கொள்ளாதே! என்னை நம்பு! என்று சொல்லித் தேற்ற முயன்றார். "கடைசியாக ஒரே ஒரு கேள்வி, ஜீசஸ்!"

"நீ ஒரு பெண்ணுடன் படுத்திருக்கிறாயா"

"இல்லை! "அவன் மெதுவாக பதிலளித்தான்.

"அதை நீ விரும்பவுமில்லை, சரியா!"

    இளைஞனின் முகம் சிவந்திருந்தது. எதுவும் பேசவில்லை. ஆனால் அவனது தலை முதல் கால் வரைக் குருதி சூடாகக் கொப்பளித்துக் கொண்டிருந்தது.

    "நீ அதைச் செய்ய மாட்டாய், இல்லையா!" துறவி மறுபடியும் உசாவினார்.

    "நான் செய்வேன்". அவனுக்கு மட்டுமே கேட்கும் குரலில் மிக மெதுவாக இளைஞன் பதில் கூறினான்.

    சொன்ன மறுகணம் விடைத்துக் கொண்டிருந்த தன் உடலைக் குலுக்கி அழத் தொடங்கினான். "இல்லை! இல்லை! என்னால் அதனைச் செய்ய முடியாது" என்று அடித்தொண்டையிலிருந்து ஓலமிட்டான்.

"ஏன் கூடாது?"  

    இளமையின் வலிக்கு வேறு எந்த மருந்துமில்லை என்பதைத் தெளிவாகவேத் தன் அனுபவங்கள் வாயிலாக அறிந்து கொண்டிருந்த முதியத் துறவி, முகத்தில் எந்தவித உணர்ச்சியுமின்றி அவனைப் பார்த்துக் கேட்டார். நனவிலும், கனவிலும் பலப்பலப் பிம்பங்களின் ஊடாக பல்கிப் பெருகிய வலிகளின், தாபங்களின், உணர்ச்சிகளின் காலத்தைத் திரும்பவும் நினைவு கூர்ந்தார். எத்தனைச் சுருங்கிய சிறிய உலகத்தில் தான் அல்லாடிக் கொண்டிருக்கிறோம் என்று தன்னுள்ளேயும், தன் அழிக்க முடியாத உணர்ச்சிகளுக்குள்ளும் போராடிக் கொண்டிருந்தவர் அவர், தன் சாபங்களின் அகன்றக் கூரியப்  பற்கள் கொண்ட வாய்த் தன்னை விழுங்குவதற்காக, காலமற்றுக் காத்துக் கொண்டிருந்த சமயம். ஒரு புள்ளியில் தான் வெடித்துச் சிதறுவதே வழி என்று ஆனார். ஆனால் இப்போது அவருக்கு விளங்குகிறது, உலகம் மிகவும் பெரியது. தான், தன் மனைவி, பிள்ளைகள் என்று நான் என்னை நீட்டித்துக் கொள்கிறேன் என்று நினைத்துக் கொண்டார்.

    "அது எனக்குப் போதவில்லை" இளைஞன் இதுவரையுமில்லாத தீர்க்கமானக் குரலில் கூறினான். நான் அதைவிடப் பெரியதை வேண்டுபவன்.

    "உனக்குப் போதவில்லை" தன் புருவங்களை உயர்த்தி ஆச்சர்யத்துடன் துறவி அவனைப் பார்த்தார்.

"நல்லது, அப்படியென்றால் உனக்கு என்ன வேண்டும்!"

    "நிமிர்ந்த நடையுடன், பிட்டத்தைக் குலுக்கிக்கொண்டு மாக்தலேன் அவனை நோக்கி வருவதைக் காண்கிறான். திமிர்த்த முலை, அவளது மையிட்ட அழகானக் கண்கள், உதடுகள், ஒடுங்கி வடிவான நாடி, முகத்தில் அவள் வரைந்திருக்கும் அலங்காரங்கள் எல்லாம் அவன் காட்சியில் அலையிடுகிறது. அவள் புன்னகைக்கிறாள். செதுக்கியதுப்  போன்ற சீரான வெண் பற்கள், கதிரவனின் ஒளிர்வில் மின்னுகிறது. ஆனால் அவள் ஒரு படலமாகத் தன் முன் நெகிழ்கிறாள். அவளது உடல் மாறிக் கொண்டே இருக்கிறது. அவள் வெவ்வேறு உடல்கள் கொண்ட மனுசிகளாக உருமாறிக் கொண்டிருக்கிறாள். ஒன்றிலிருந்து துளிர்த்து பலப்பல உடலங்களாக முளைத்துக் கொண்டே இருக்கிறாள்.தன் முன்னே எல்லைகளற்றுக் கிடக்கும் கடலைக் காண்கிறான். அதன் சீற்றமான அலைகள் ஒவ்வொரு முறையும் கரையைப் பற்றித் தன் கை விரல்கள் உடைந்து நுரையாகிப் பின் கடலிற்கேத் திரும்புகிறது. அது ஒரு தொடர் நிகழ்வாக, நுரைகளின் குமிழ்ப் பெருக்கு ஒன்று கரைக்கும், கடலுக்குமிடையில் ஒரு வெண்ணிறக் கோடு வரைந்தது போலக் காட்சியளிக்கிறது. கடலின் நீர்மையெல்லாம் மாக்தலேன்கள். அவளின் அளவிட முடியா ஆகிருதிகள். அவள் தன் உடலிலிருந்து கிளைத்துப் பெருகி நீர்மமாய்க் கடல் முழுக்க வியாபித்து மிதக்கின்றாள். அவள் உடலின் பெருக்கின், ஒவ்வொரு அணுத்துகளின் உள்ளிருந்தும், ஆயிரமாயிரம் ஆண் பெண் உடல்கள், முட்டை ஓட்டினைப் பிரித்து குஞ்சு வெளிவருவதைப் போலப் பல்கிப் பெருகுகின்றன. வானத்தின் ஒளி. நிலைத்த மங்காதப் பேரொளி அவர்கள் ஒவ்வொருவர்களுக்குள்ளும் நுழைந்து பெருகுகிறது. கட்டுப்படுத்த முடியாத அவ்வுடலங்களின் பெருக்கு முகிழ்த்துக் கொண்டே இருக்கிறது. கடலின் நீர்மை என்பது உடலன்றி வேறு எதுவுமில்லாதது போல நிறைந்துப் பெருகுகிறது. ஆற்றல் மிக்க ஒளியாய் அதனை மேலிருந்துக் கண்ணுருகிறான், மேரியின் மகன். அவனே அவ்வொளியின் தீட்சண்யம். அவன் திரும்பத் திரும்ப அக்காட்சியின் நிழல்வெளியைத் தன் அகத்தினுள் நோண்டும் பொழுதும், தீட்சண்யமான அவ்வொளியை மட்டும் தான் அவனால் நினைவு கூர முடிந்தது.

    "என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்? துறவி கேட்டார். "ஏன் நீ பதிலளிக்க மறுக்கிறாய்?"

    "உங்களுக்கு கனவுகளில் நம்பிக்கையுண்டா" எனக்குண்டு. ஒருவகையில் அதை நம்பித்தான் நான் வாழ்கிறேன் என்று கூட வைத்துக் கொள்ளலாம்" நொடிநேரம் காற்றும் ஸ்தம்பித்து நின்ற நிசப்தமானக் கணத்தில் வெடித்துத் துளைப்பதைப் போல அவன் துறவியைப் பார்த்துக் கேட்டான். 

    ஓர் இரவு, என் கனவில், கண்ணுக்குத் தெரியாத என் எதிரிகள் என்னைப் பிடித்து ஒரு இலைகள் உதிர்ந்த மொட்டை சைப்ரஸ் மரத்தில் கட்டிவைத்தனர். நீண்ட சிவப்பு அம்புகள் என் தலை முதல் கால் வரை உடலின் ஒரு அங்கம் விடாமல் துளைத்திருந்தது. ரத்தம் ஒரு சுனை போல என்னைச்சுற்றிப் பெருகிக் குழுமியது. என் தலையில். முட்களால் செய்த கிரீடத்தை அழுத்தி இறுக்கியிருந்தனர். முட்களின் பிணைப்புகளுக்கிடையில் தீ உமிழும் ஒரு வார்த்தை, "புனித இறைப்பழியாளன்". ஆம்! நானே அந்தப் புனித இறைப்பழியாளன். அதனால் துறவி சிமியோன், நீங்கள் என்னிடம் எதுவும் கேட்காமல் இருப்பது நல்லது. இல்லையேல் நான் இறைவனைப் பழிக்கும் செயல்களில் ஈடுபடத் தொடங்கிவிடுவேன்.

    "நல்லது! தொடர்ந்து அவ்வழியிலேயே செல்! என் மகனே!" துறவி அமைதியாகப் பதிலளித்தார். திரும்பவும் அவனது கைகளை தன் கைகளுக்குள் பொத்திக் கொண்டார். "உன் இறை நிந்தனைச் செயல்களைச் செய்யத் தொடங்கு, அதன் மூலம் உன்னை விடுவித்துக்கொள்" என்றார்.

"என்னுள் இருக்கும் சாத்தான் உண்மையில் அழுகிறது. அதன் அழுகுரல் உனக்குக் கேட்கிறதா! மகனே! நீ ஒரு சாதாரண தச்சனின் மகனல்ல! நீ நமது அரசன் டேவிட்டின் மகன்! நீ வெறும் மனிதனுமல்ல! புனிதர் டேனியல் கூறியதைப் போலவே, நீ மனித குமாரன். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நீ ஒரு தேவகுமாரன்! ஆம்! தேவர்களுக்கெல்லாம் தேவன், தேவதேவன்!"

    தலை தாழ்த்தி நிலத்தைப் பார்த்து சொல்லிக் கொண்டிருந்தார் துறவி. அவரது உடல் நடுங்கிக் கீழே விழுந்து விடுவாரோ என்றுத் தோன்றியது. இளைஞனின் உதடுகள் அதிர்ந்து எச்சில் நுரைததது. தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த அவனது நாக்கு மேல் அண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. அவனால் இனிப் பேசமுடியாது. ஆனால் இன்னும் என்ன அவன் பேச வேண்டியிருந்தது. அவன் தான் சொல்லவேண்டிய அனைத்தையுமேக் கொட்டித் தீர்த்து விட்டானே. அவனது இதயத்திலிருந்த சொற்கள் அனைத்தும் வடிந்து காலியாகியிருந்தது. நடுங்கும் தன் கைகளை துறவியின் கைகளிற்குள்ளிருந்து வெளியே எடுத்தான். எழுந்து அவரைத் திரும்பிப் பார்த்தான். "இன்னும் என்னிடம் கேட்க கேள்விகளுண்டா" அவன் சற்றே உதட்டைச் சுழித்துச் சிரித்துக் கொண்டேக் கேட்டான். 

    "இல்லை! அதே உணர்ச்சியற்றத் துறவியின் குரல். அவர் தனது வலுவெல்லாம் இழந்து சோர்ந்திருந்தார். தளர்வாகத் தன் உடலை அசைத்துக் கொண்டு சம்மணமிட்டுத் தரையில் அமர்ந்திருந்தார். அவரது வாழ்நாளில் மனிதர்களின் வாயிலிருந்து எத்தனையோப் பேய்களின், பிசாசுகளின் குரல்களை அவர் வெளியேற்றியிருக்கிறார். உலகின் எந்த மூலையிலிருந்தும் வரும் பீடிக்கப்பட்ட ஜனங்களை அவர் தன் மந்திரங்களால், மருத்துவத்தால் குணமாக்கியிருக்கிறார். அந்த சாத்தான்கள் எல்லாம் மிகமிகச்சிறியது. நீரினால் உருவாகும் நோய்களும், கோபத்தால், வன்மத்தால், பகையால், ஆறாத சீற்றத்தால் மனிதர்களைப் பீடிக்கும் எளியப் பேய்கள், நோய்கள். ஆனால் இப்பொழுது, இம்மாதிரியான ஒரு சாத்தானிடம் அவர் எவ்வாறுச் சண்டையிடுவார்?

    வெளியே, இன்னும் ஜெகோவாவின் அடங்காத மூச்சு உட்புகுந்து வந்துவிட, சீற்றத்துடன் கதவை அறைந்து கொண்டிருக்கிறது. பீறிடும் காற்றைத்தவிர எந்த சத்தமுமில்லை. தூர தூரத்தில், கழுதைப்புலிகளின் ஊளையோ, காகங்களின் கரைதலோ எதுவுமே இல்லை. மண்ணில் இருந்த எல்லா உயிரினங்களும் பயந்து தங்கள் வளைகளினுள் பதுங்கி இருக்கின்றன. இறைவனின் கோபம் இன்னும் அடங்கவில்லை.

செவ்வாய், 1 மார்ச், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -60

     

Author: Nikos Kazantzakis

    முதியத் துறவி மூச்சை இழுத்துக் கொண்டு பேசத் தொடங்கினார். நானும் உன்னைப் போலத்தான். என்னுடைய இளமையில் உன்னைபோலவே துன்பங்களால் வேதனைப்பட்டேன். கடவுள் தன் அச்சுறுத்தும் கரங்களால், என்னைச் சோதனைக்குள்ளாக்கினார். நான் எதுவரை, எவ்வளவு காலம் தாக்குப் பிடிப்பேன் என்று பார்க்க நினைத்தார். எனக்கும் பலப்பல சபலங்கள் இருந்தன. ஆனால் அவை காட்டுமிராண்டித்தனமான முகங்களுடன் வரும் சபலங்கள் அல்ல. இனிமையும், மகிழ்வும் கொள்ள வைக்கும் அடக்கி வைக்கப்பட்ட சபலங்கள். நான் அதைக் கண்டே பயந்தேன். அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே இந்த மடாலயத்திற்கு வந்தேன்,  நீ செய்தது போலவே. ஆனால் கடவுளின் வழிகள் திசைகளற்றது. என்னைத் துரத்தி வந்த அவர், இங்கு சரியாக வந்து என்னைப் பிடித்துக் கொண்டார். ஒரு அழகான பெண்ணின் வடிவில். ஐயோ! அந்த சபலத்திற்கு முன் நான் வீழ்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. ஒரு வேளை கடவுளின் விருப்பமும் அதுவாகத்தான் இருந்ததா? ஒரு வேளை  அதற்காகத்தான் அவர் என்னை இவ்வளவு வேதனைகளுக்கும் உள்ளாக்கினாரா? ஆனால் அதன் பிறகு நான் அமைதியானேன். என்னைத்துரத்தியக் கடவுளும். நாங்கள் எங்களுக்குள் சமரசம் செய்து கொண்டோம். நாங்கள் இப்பொழுது நண்பர்கள் ஆகிவிட்டோம். அதே வழிதான் உனக்கும். நீயும் கடவுளுடன் சமரசம் செய்து கொள்வாய். குணப்படுவாய். 

    மேரியின் மகன் தலையைப் பக்கவாட்டில் அசைத்துக் கொண்டே முணுமுணுத்தான். "அவ்வளவு எளிதாக எனக்கது நிகழும் என்று தோன்றவில்லை." இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றனர். அவர்களின் சீரற்ற மூச்சொலிகள் இருளினுள் வெளித்தது.

    "எனக்கு எங்கிருந்து தொடங்க எனத் தெரியவில்லை" ஏதோ சொல்ல உந்தியவன், "நான் இன்னும் தொடங்கக் கூட இல்லை எனும் போது எனக்கு என் மேலேயேக் கேவலமும், வெறுப்புமாக இருக்கிறது."

    துறவியின் நிலையானக் கைகள் இன்னும் அவனது கால் மூட்டினைத்தான் தழுவிக் கொண்டிருந்தது. "எழும்பாதே!" அவர் கடுமையானக் குரலில் கட்டளையிட்டார். "எழும்பிச் செல்ல உந்தாதே!" கேவலமும் ஒரு சபலம் தான். அதை வெளிப்படுத்து! அமைதியாகவும், பொறுமையாகவும் நான் கேட்கும் கேள்விகளை உள்வாங்கிப் பதில் சொல். 

"நீ எதற்காக இந்த மடாலயத்திற்கு வந்தாய்"

"என்னைக் காப்பாற்றிக் கொள்ள"

"யாரிடமிருந்து? எதற்காக? உன்னைக் காப்பாற்ற வேண்டும்"

"கடவுளிடமிருந்து"

"கடவுளிடமிருந்தா!" துறவி அழும் குரலில் தழுதழுக்கக் கேட்டார்.

"அவர் என்னை வேட்டையாடிக் கொண்டிருக்கிறார். கூர்மையான உகிர்கள் கொண்ட பறவை போல என் தலைக்கு மேலே பறக்கிறார். தன் நகங்களைக் கொண்டு என் மண்டை ஓட்டை உடைத்து, உள்ளே உள்ள மூளையை, என் இதயத்தை, என் அந்தரங்க உறுப்புக்களைத் துளைத்துக் குதறுகிறார். என்னுள்ளிருந்து நிணம் தெறித்துச் சிதறுவதை போல உணர்கிறேன்."

"எங்கேயிருந்து"

"செங்குத்தானப் பாறைகளிலிருந்து"

"எந்தச் செங்குத்துப் பாறைகள்"

"அவனுடைய மலைமுகடிலிலிருக்கும்!, அப்போது எனக்கு எழுந்து கைகளை உயர்த்திக் கத்த வேண்டும் போலிருக்கும். நான் என்னக் கத்துவேன்?. என்னைத் தனியாக விடு! என்னிடம் பேச வேறு எந்த வார்த்தைகளுமிருந்ததில்லை! ஒரு தனித்த வழிதவறிய விலங்கு எங்கு செல்ல என்பதை அறியாமல்,  பாலைவனத்தின் பாழ் வெளியை நோக்கிக் கத்திக் கொண்டே இருக்குமே, அது போல நானும் வியாபித்திருக்கும் வானத்தை நோக்கிக் கத்துவேன். ஆனால் அவன் என் கதறலை, வலியை நிராகரித்தான். அவனிடமிருந்து எந்த சாத்தியமானப் பதில்களும் இதுவரை வந்ததில்லை. அதனால் நான் திரும்பத் திரும்ப அவனை விளிப்பேன், ஓ! நீ என் வாதைகளின் வேதனையை நிராகரிக்கிறாய் இல்லையா! அப்படியென்றால் நீ என்னை வெறுக்கும்படியானச் செயல்களை நான் செய்வேன்!. அதன் மூலம் என்னை உனக்குக் காட்டுவேன். அப்பொழுது என்னை நீ மறுதலிக்க முடியாமல், விட்டு அகல்வாய். என்னைத் தனியாக இருக்க விடுவாய். அதற்காகத் தான் நான் பலரும் செய்யத் துணியாத, எனக்குச் சாத்தியமான பாவங்களையெல்லாம் செய்யத் தொடங்கினேன்.

    "சாத்தியமான பாவங்களுக்குள்" துறவி இன்னும் விசும்பிக் கொண்டிருந்தார்.

    ஆனால் இளைஞனுக்கு அவரின் குரல் கேட்கவில்லை. அவன் தன் கோபத்திலும், வலியிலும் அடித்துச் செல்லப்பட்டான்.

    "எதற்காக அவன் என்னைத் தேர்ந்தெடுத்தான், என்னுடைய மார்பைக் கிழித்து அவன் பார்த்திருப்பானானால், அதில் எண்ணிலடங்கா அரவங்கள் மொலுமொலுத்துக் கொண்டிருப்பதைக் காண்பான். ஒன்றை ஒன்றுப் பிணைந்துக் கொண்டு ஒரு சுழிப்பாக, உடலப்பெருக்காக அவைகள் ஊறிக் கொண்டிருக்கும் என் அகத்தை, அதன் அளவேயற்றப் பாவங்களை. எல்லாவற்றிற்கும் மேலே...."

    வார்த்தைகள் தொண்டையில் அடைத்திருந்தது. அவனது தலை முடியிலிருந்து காதுகள் வழியே வியர்வை வழிந்தது.

"எல்லாவற்றிற்கும் மேலே" துறவி உணர்வற்றுக் கேட்டார்.

"மாக்தலேன்!" ஜீசஸ் தன் தலையை உயர்த்தி நிமிர்ந்துப் பார்த்தான்.

"மாக்தலேன்"

துறவியின் மிகம் சுருங்கி வெளிறியது.

    "அது என்னுடைய பிழை. என்னால் தான் அவள் இந்தப் பாதையில் சென்று விட்டாள். நான் தான் இந்த உடலின்பத்தின் வழிக்கு அவளை இழுத்துச் சென்றேன், நான் மிகச்சிறுவயதில் இருக்கும் பொழுதே. ஆம்! நான் அதை ஒத்துக் கொள்கிறேன். கேளுங்கள்! துறவியே! நான் சொல்வது உங்களைத் திகிலடையச் செய்யலாம்.  ஆனால் எனக்கு இதைச் சொல்வதைத்தவிர வேறு வழி தெரியவில்லை. எனக்கு அப்பொழுது மூன்று வயதிருக்கலாம். வீட்டில் யாரும் இல்லாத சமயம். நான் வாசற்படியில் தடுமாறிக் கீழே விழுந்து விட்டேன். என் கைகளை உயர்த்திப் படியில் அமர்ந்திருக்கும் மேரியை அழைத்தேன். நாங்கள் எதுவும் உடுத்தியிருக்கவில்லை. நாங்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு நிலத்தில் அம்மணமாகப் புரண்டோம். எங்கள் உடல்கள் தழுவிக் கொண்டன. எப்படியான மகிழ்வானத் தருணம் அது. ஒரு இன்பமயமானப்பாவம். அன்றிலிருந்து நான் அவளைத் தொலைத்துவிட்டேன். அவள் முற்றிலுமாகத் தொலைந்தே விட்டாள். அதன்பின் ஆணின்றி, ஆண் மகன்களின்றி அவளால் வாழ முடியாமல் போயிற்று." 

    அவன் முதியத்துறவியைப் பார்த்தான். ஆனால் அவர் தன் முழங்கால்களுக்கிடையில் தலையை மறைத்துக் கொண்டு நிலத்தைப் பார்த்து எதுவும் பேசாமல் விசும்பிக் கொண்டிருந்தார்.

    "அது முழுக்க முழுக்க என்னுடையத் தவறு! நான் தான்! நான் தான்! மேரியின் மகன், காயம் பட்ட பாலை விலங்கினைப் போலக் கதறினான். தன் கைகளால் மார்பில் குத்திக் கொண்டே இருந்தான்.

    "ஆனால் அது மட்டுமில்லை"  சிறிது நேரம் கழித்து அவன் தொடர்ந்தான். "துறவியே, என்னுடைய சிறு வயதிலேயே, விபச்சாரத்தின் துளி மட்டுமல்ல, ஆணவத்தின், அதிகாரத்தின் துளியும் என்னுள் இருந்தது. அந்த சாத்தான்கள் தான் என்னை வழி நடத்துகிறதோ என்னவோ! நான் சிறுவனாக இருக்கும் பொழுது, என்னால் நடக்க முடியாத சமயம். நான் வீட்டுச்சுவரை அணுகி அதன் வழியே செல்வதற்காகத் தவழ்ந்து கொண்டே செல்வேன். சுவற்றில் ஒட்டிக் கொண்டு நிற்கும் பொழுது நான்  கீழே விழாமலிருந்தேன். என் கால்களை பலமாக உணர்ந்தேன். கைகளை இருபுறமும் சுவரோடு சுவராக உயர்த்தி, நான் எனக்குள்ளேயேக் கத்துவேன், கடவுளே என்னைக் கடவுளாக்கு, கடவுளே என்னைக் கடவுளாக்கு என்று. பிறிதொரு நாளில் என் கை நிறைய திராட்சைக் கொத்தை வைத்துக் கொண்டு தோட்டத்தில் நின்று கொண்டிருந்தேன். வழியே சென்று கொண்டிருந்த ஒரு நாடோடிப் பெண், என்னருகே வந்துக் குந்தி, என் கைகளைப் பிடித்தாள். எனக்கு திராட்சைகள் கொடு, உன் எதிர்காலத்தை நான் சொல்கிறேன் என்றாள்.  நான் அவளுக்கு திராட்சைகள் கொடுத்தேன். அவள் கைகளை உயர்த்தி ரேகைகளை உற்றுப் பார்த்தாள். பார்த்தவள், ஓலமிட்டு அழத்தொடங்கினாள். "ஐயோ!, நான் சிலுவைகளையும்,நட்சத்திரங்களையும் அதில் காண்கிறேன் என்றாள். பிறகு புன்முறுவலுடன் என்னைப் பார்த்து, "நீ யூதர்களின் அரசன் ஆவாய்" என்று சொல்லியவள் திரும்பிபார்க்காமல் சென்று விட்டாள். ஒரு வித மூர்க்கத்துடன் அதை நான் நம்பினேன். இத்தனை காலம் நான் ஒழுங்கான மனநிலையில் இருந்ததேயில்லை. உங்களிடம் தான் இதனை முதன் முறையாகத் தெரிவிக்கிறேன் மாமா. என்னுடைய ஆன்மாவின் வழியே நான் இதனை உள்ளுணர்வாக உணர்கிறேனா, தெரியவில்லை. ஆனால் அந்த நாளிலிருந்து நான் தெளிவற்ற மனத்துடன் கொந்தளித்துக் கொண்டிருக்கிறேன்.

கிறுஸ்துவின் கடைசி சபலம் -59

    

Author: Nikos Kazantzakis

    எரியும் மணல் பரப்பில் தன் கால்களை ஆழ ஊன்றி அவர்கள் ஒன்றாகச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் தங்கள் நாசியையும், வாயையும் துணியை வைத்து அடைத்துக் கொள்ள முயற்சி செய்தனர். ஆனால் ஏற்கனவே மணல் துகள்கள் அவர்களின் தொண்டை வழியே மார்பு வரை சென்று அடைத்திருந்தது. காற்றின் அழுத்தம் தாழாமல் முன்னே சென்று கொண்டிருந்த மூத்தத் துறவி ஹுப்பாக்குக் நிலை தடுமாறினார். அவரது ஊன்றியக் காலை மணல் புதைவிலிருந்து அசைக்க முயற்சிக்க கீழேச் சரிந்து விழுந்தார். மணற் குழைவுகள் அடர்ந்து பார்வைக்கு எதுவுமே தென்படவில்லை. மற்றவர்கள் அவர்களைக் கவனிக்காமல் குருடர்கள் போலத் தத்தித் தத்தி முன்னே சென்று கொண்டிருந்தனர். பாலையின் கனத்த ஊளை மட்டும் நிதானமாகக் கேட்டுக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு தடவை அவர்கள் புதையும் கால்களை அழுத்தி வெளியேற்றும் பொழுது உருவாகும் கிரீச் சத்தம் தான் அவர்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கே தெரியப்படுத்தியது. கீழே விழுந்து கிடந்தத் துறவி, தொண்டை கிழியக் கதறினார். ஆனால் அனல் கொதிக்கும் நிலத்தின் அடங்காத காற்றின் ஒலியை மீறி எந்த சப்தமும் வெளிவரவில்லை.

    மகாசமுத்திரத்திலிருந்து முகிழ்க்கும் குழுமையானக் காற்று ஏன் ஜெகோவாவின் மூச்சாக இருக்கக் கூடாது, என்று நினைத்த மேரியின் மகன் தன் அருகில் வந்துகொண்டிருக்கும் துணைவனிடம் அதைக்கேட்க நினைத்து அடக்கிக் கொண்டான். ஜெகோவாவின் காற்று ஏன் இந்தப் பாழ் நிலத்தின் கிணறுகளை நிரப்பும் நீரினைத் தருவிக்கவில்லை? ஏன் நம் கடவுள் பசிய இலைகளையும், மனிதனின் கைவிடப்பட்ட நிலையினையும் நினைத்து இரங்கி அவனுக்கு அருளவில்லை. மாறாக தன் வலியக் கரங்களால், அவனைக் கிழித்துச் சிதறும் வேலையைத்தான் அவர் செய்கிறார். ஐயோ! ஒரு மனிதன், ஒரே ஒரு மனிதன் அவரைக் கண்டடைந்து, அவரிடம் சென்று அவரது கால்களில் விழுந்து மண்டியிட்டு அழுது, தன் பரிதாபகரமான நிலையினையும், வாதையினையும், இந்த நிலையற்றத் தன்மையினாலும், உன் வலுவான மாயக் கரங்களினாலும் தங்களின் வாழ்க்கை எப்படிச் சுழன்றடிக்கப்படுகிறது என்பதை விளக்க முடிந்திருந்தால், அவரின் எரிக்குழிக்குள் அவன் சாம்பலாகும் முன் அதற்கான வாய்ப்பு மனிதனுக்கு அழிக்கப்பட்டிருந்தால்! என்று தன்னைத்தானேக் கேட்டுக் கொண்டான்.

    யூதாஸ், அந்தத் தாழ்ந்த நிலைப்படிகள் கொண்ட, தனியான அறையில் தன் பட்டறையை அமைத்திருந்தான். வாய் கிழிய சிரித்துக் கொண்டேத் தன் அறையில் இருந்து இறுதிச் சடங்குகளின் நிகழ்வுகளையும்,  ஊர்வலமாக, அவர்கள் தங்கள் குருவைத் தூக்கிக்கொண்டு பாலைவன வெளியில் சுருட்டி மடங்கிச் சென்றுக் காணாமல் போவதையும் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தக் காட்சியை மீண்டும் தன் அகத்தில் ஓட விட்டவன், சரியாகத் தன் வேட்டை விலங்கை அதில் கண்டு கொண்டான். அவனது பெரியக் கருமையானக் கண்கள் மகிழ்ச்சியில் மின்னியது.

    "இஸ்ரவேலத்தின் கடவுள் மிகப்பெரியவர்" அவன் இதயப் பூர்வமாகப் பிரார்த்தித்தான். 

    "அவர் எவ்வளவு அழகாக எல்லாவற்றையும் கட்டமைக்கிறார். என்னுடையக் கத்தியின் கூர்முனைக்கு எதிரே சரியாக அந்தத் துரோகியை அவர் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்" என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

    தன் நீண்டு சிவந்தத்தாடியை நீவி விட்டுக் கொண்டே உள்ளே இருந்த ஒரு அறைக்கு சென்றான். இருண்டிருந்த அறையின் ஒரு மூலையில் இருந்தச் சிறிய அடுப்பில் கங்குகள் கனன்று கொண்டிருந்தன. குட்டை தாட்டையான, புனிதமும், கிறுக்கும் ஒருங்கே கொண்ட அத்துறவி, துருத்தியை வைத்து, கங்குகளை அடுப்பிற்குள் குத்திக் கொண்டிருந்தார்.

    உள்ளே வந்தக் கொல்லன், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கைகளை உயர்த்தினான். "வணக்கங்கள்! அருளாளர் ஜெரோபோம்!". அவன் நல்லமன நிலையில் இருந்தான். புன்சிரிப்புகள் வழிய வெளியை நோக்கினான். "இந்த வெறிக் காற்றுதான் கடவுளின் மூச்சா? எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. நான் கடவுளாக இருந்திருந்தாலும் இப்படித்தான், ஆத்திரம் தீர ஊதித் தள்ளியிருப்பேன்! நல்லது!" என்றான்.

    துறவி வெறுமனே சிரித்தார். "என்னால் இப்படி ஊதித்தள்ள முடியாது. நான் மிகக் களைப்பகவும், சோர்வாகவும் இருக்கிறேன்." துருத்தியை எடுத்து ஓரமாக வைத்தவர். ஒரு பருத்தித்துணியை எடுத்து நெற்றியிலும், கழுத்திலும் வழிந்த வியர்வையை ஒற்றித் துடைத்தார்.

    யூதாஸ் அவரை அணுகிக் கேட்டான். " எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா, நேற்று மடாலயத்திற்கு  ஒரு இளைஞன் வந்தானே! ஒல்லியான நீண்ட தேகமும், சிறிய அடர்கரு நிறத் தாடியும், வெற்றுக்கால்களும், அழுக்கடைந்த உடையும், தலையில் ரத்தம் தோய்ந்த துணியும் கட்டியிருந்த ஒரு அரைக்கிறுக்கன்!"

    "ஆம். நான் தான் அவனை முதலில் பார்த்தேன்" அவரது குரல் காற்றின் ஊடே அறையினுள் அலையாடியது. "ஆனால் கேள்! அவன் ஒன்றும் அரைக்கிறுக்கனில்லை, முழுப்பித்தன். தான் ஏதோ கனவு  கண்டதாகவும், அதற்காக நாசரேத்திலிருந்து இங்கு வந்திருப்பதாகவும் கூறினான். இருமுனைகள் கொண்ட ஒரு கூர் ஆயுதம் அவனை இங்கும் அங்கும் அலைக்கிறது. தெரியவில்லை! அவன் கொஞ்சம் தன்னை அமைதிப்படுத்த வேண்டும். என் அன்புக்குரிய யூதாஸ்"

    "அப்படியென்றால் சரி! ஒரு விஷயம், நீர் தானே இங்கே வரவேற்பாளர். யார் இங்கு வந்தாலும், அவர்களுக்கு அறை ஒதுக்கி, படுக்கை ஒருக்கம் செய்து, உணவும் தருவித்துக் கொடுப்பது நீர் தானே?"

    "ஆம்! அதில் எந்தக் குழப்பமுமில்லை. ஏனென்றால் வேறு எதற்கும் நான் லாயக்கற்றவன் என்று என்னை ஒதுக்கி விட்டார்கள். நான் இங்கு துணிகளைத் துவைப்பதும், சுத்தம் செய்வதும், வருகையாளர்களை வரவேற்பதும் தான் செய்து வருகிறேன்."

    நல்லது! அப்படியென்றால்,  ஒரு உதவி செய்யும். அவனுக்கு என்னுடைய அறையில் தயவு செய்து படுக்கை அமைத்துக் கொடும். எனக்கு இரவில் கொடுங்கனவுகள் வருகின்றன. எப்படி நான் உமக்கு விளக்குவேன்? என்னால் தனியாக உறங்க முடியவில்லை. சாத்தான் என்னுடைய கனவிற்குள் வந்து என்னை சபலப்படுத்துகிறான். எனக்குப் பயமாக இருக்கிறது. நான் நரகக்குழியினுள் தள்ளப்படுவது திண்ணம். யாராவது ஒரு மனிதன் என்னருகில் இருந்தால் போதும் நான் அமைதியடைந்து விடுவேன். தயவுசெய்து இந்த உதவியை எனக்கு செய்து தாரும். நான் உமக்கு அதற்காகப் பரிசு தருகிறேன். ஒரு பெரிய மற்றும் சிறிய அளவானக் கத்திரிக்கோல்களைத் தருகிறேன். உமது தாடியைத் திருத்திக்கொள்ளலாம். மற்ற துறவிகளுக்கும் நீ முடி வெட்டி விடலாம். ஓட்டகங்களுக்கும் கூட. அதன்பிறகு யாரும் உன்னை எதற்கும் லாயக்கற்றவன் என்று சொல்ல மாட்டார்கள். என்ன, நான் சொல்வது கேட்கிறதா?

"கத்திரிக் கோல்களைக் கொடு!"

    அவன் தன் பையினுள் துழாவி, ஒரு ஜோடிப் பெரிய கத்திரிகளை எடுத்து நீட்டினான். துறவி அதைப் பிடுங்கி, வெளிச்சத்தில் வைத்துப் பார்த்தார். அதை தன் விரல்களுக்கிடையில் வைத்து இயக்கினார். ம்ம்! நன்றாக இருக்கிறது என்று சொன்னவர் அதைத்திரும்பத் திரும்ப இயக்கினார்.

    "கடவுளே! நீயே பெரியவன்!, உனது படைப்புகள் எதுவும் சோரம் போவதில்லை" என்று சொல்லிக் கொண்டே முட்டாள்தனமாகச் சிரித்தார்.

    "ரொம்ப நல்லது" என்று கேலியாக அவரைப் பார்த்து சிரித்த யூதாஸ். அவரை அந்நிலையிலிருந்து உலுக்கி எழுப்பினான்.

    "இன்றிரவு நிச்சயம் நீ அவனுடன் இருப்பாய்" என்றவர் கைகளில் கத்திரிக்கோல்களை ஆட்டிக் கொண்டே சென்றுவிட்டார்.

    மற்றவர்கள் ஏற்கனவேத் திரும்ப வந்திருந்தனர். அவர்களால் வெகுதூரம் செல்ல முடியவில்லை. நகரக் கூட விடாமல் ஜெகோவாவின் மூச்சுக் காற்று அவர்களை நிலைகுலைத்தது. அவர்கள் பிணத்துடன், புழுதிவெளியில் போராடி அங்காங்கே கீழே விழுந்தனர். எப்படியோ ஒரு குழியினைக் கண்டறிந்து, பிணத்தை உருட்டித் தள்ளினர். பின் இறுதிப்பிரார்த்தனையை செய்வதற்காக அருட்தந்தை ஹுப்பாக்குக்கைத் தேடினர். ஆனால் அவர் அங்கே இல்லை. கத்தி அழைத்துப்பார்த்தனர். காற்றின் ஊளையன்றி எந்த எதிரொலிப்பும் வரவில்லை. நாசரேத்திலிருந்து வந்த முதிய துறவி, குழிக்கருகில் குனிந்து மண்டியிட்டுக் காலியான அந்த வெற்று உடலைப் பார்த்துக் கத்தினார், "நீயும் இதைப் போல ஒருப் புழுதிதான், அதனால் அந்த புழுதியிலே நீ போய் சேர்! உன்னுள் இருந்த ஆன்மா வெளியேறிவிட்டது. இனிமேல் நீ வெறும் தசைப்பிண்டம். இனிமேல் இப்பூமியில் உனக்கான செயல்கள் ஏதுமில்லை. புனித இறையாளரே! உனக்குக் கையளிக்கப்பட்ட செயல்களை, நீ செவ்வனே நிறைவாகச் செய்து முடித்துவிட்டாய். உன் உடலும் நிறைவாக அதைச் செய்ய உனக்கு உதவியது. ஆன்மாவே! இதுவரை இந்த உடல் வழியேப் புலன்களினால் பூமியில் அனுபவித்த சுக துக்கங்களிலிருந்து உன்னை விடுவித்து, சூரிய சந்திரர்களையும், கோளகங்களையும் தாண்டி நமது தந்தையின் நிலமான சொர்க்கத்தை அடைய, இறைவனின் திருநாமத்தின் வல்லமையால் அவரது அழிவே அற்ற பாதங்களில் மண்டியிட்டு அமர நாங்கள் பிரார்த்திக்கிறோம். இனி இந்த மனித உடல் நம் அருட்தந்தைக்கு தேவையில்லை. அதனால் இப்புழுதிக்குழியில் மண்ணோடு மண்ணாகக் அது கலக்கட்டும். "மண்ணிற்குள்ளதை மண்ணும், விண்ணிற்குள்ளதை விண்ணும் ஏற்றுக் கொள்ளட்டும்" என்று சொல்லி முடித்தார் முதிய துறவி. பின் அனைவரும் புனிதக் குறிகளை நெஞ்சிலும், உதட்டிலும், நெற்றியிலும் இட்டுக் கொண்டனர்.

    சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, பொதிப் பொதியாக மணற்காற்று பிரேதப் பொட்டலத்தை அப்பி மூடத் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக அது மணலின் குழிவினுள் முழுகிக் கொண்டிருந்தது. இன்னும் வேகமாகக் காற்றின் இழுப்புகள் அவர்களை அழுத்தின. புழுதியினுள் எதுவுமே கண்ணுக்குத் தெரியவில்லை. குத்துமதிப்பாக வந்தத் திசை நோக்கி அவர்கள் வேகமாகத் திரும்பிச் சென்றனர்.

    அவர்கள் மடாலயத்தின் உள் நுழைவை அடையும் பொழுதுதான் வெளியே மணலோடு மணலாக மூத்த அருளாளர் ஹீப்பாக்குக் கிடப்பதைப் பார்த்தனர். உடல் முழுதும் மண்ணில் படிந்து கிடக்க அவர் உள்ளே வர எத்தனித்து தவழ்ந்து வந்து கொண்டிருந்தார். அவரது கூக்குரல்கள் எதுவும் வெளிவராத வண்ணம் தொண்டையில் மணல் வாரி இறைத்திருந்தது. அவர்கள் அவரைத் தூக்கி வந்து மடாதிபதியின் அறைக்கருகில் இருத்தினர். ஒரு அழுக்கில்லாத ஈரத்துணியால் கைகள், வாய், கழுத்து, முகம் என்று ஒற்றித்துடைத்தார். வாசல் கதவுகளை அடைத்த பின்பும், எரியும் காற்றின் வீச்சமும், கட்டுப்படுத்தமுடியாத ஓலமும், இடைவெளிகள் வழியே பீறிட்டுத் தெறிக்கும் மணற் கச்சையும் இன்னும் அடங்கியபாடில்லை. ஜெகோவாவின் மூச்சின் சீற்றமும் எரிவும் உலகத்தையே அழிக்கும் வண்ணம் அறைந்து கொண்டிருந்தது.

    அவரைப் பார்த்த முதிய துறவி சிமியோனின் மூளையில், தீர்க்கதரிசிகளின் முடிவே இல்லாத பயணம், ஒவ்வொரு கோவில் கோவில்களாக, எல்லாம் வல்ல இறைவனை அணுக அவர்கள் அலைந்து திரியும்பொழுதும் இது போலவே அவனின் மூச்சின் வேகம் அவர்களை எரித்து சாம்பலாக்கியிருக்கும். அவர்களின் மூச்சும், உதடுகளும், கண்களும், எண்ணங்களும் எல்லாமே தீயின் ஜ்வாலைகளாக உருமாறித் தன்னையே ஒரு எரித்தழல் போல ஆக்கி அவனுக்கு முன்னே எரிய விட்டிருக்கும். ஆம்! கடவுள் ஒரு தீப்பற்றி எரியும் காற்று! மின்னிக் கொண்டே இருக்கும் அலகில்லா ஒளித்தணல், அது எனக்குப் புரிகிறது என்று அவர் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டார். அவனிடம் எந்தக் கனிவுமில்லை. மொட்டுகள் அவிழ்வது போன்ற பூப்படையும் எந்த மென்மையான ஒன்றும் அவனிடமில்லை. ஆனால் மனிதனின் மனமோ ஒரு மெலிந்த நரம்புகளோடும் பச்சை இலை. கடவுள் அதன் தண்டுகளை உடைத்து அதை சருகாக்குகிறார். நாம் என்ன செய்வது? எப்படி நடந்து கொண்டால் அவன் மகிழ்வான்? அவனுக்கு நாம் ஆடுகளைப் பலியிடும் பொழுது, அவன் கத்துகிறான் எனக்கு ஊன் பலித் தேவையில்லை. சங்கீதங்களைப் பாடு என்கிறான். நாம் நித்தியமான மொழியினால் அவனுக்கு சங்கீதங்களைப் பாட ஆரம்பித்தால், எனக்கு சொற்களின் ஜாலங்கள் வேண்டாம் என்று அலைக்கழிக்கிறான். எனது பசி! ஆடுகளின் பலியினாலோ, உங்களின் வார்த்தைகளின் குதப்பல்களாலோ அடங்காது. என் மகன்! என் ஒரே மகன்! அவன் தான் என் பசிய அடக்க வல்லான்!"

    கிழவர் சிமியோனின் எண்ணங்கள் குழைந்து சரிந்தது. மூச்சிறைக்க கைகளை நெஞ்சில் தாங்கிக் கொண்டு சற்று ஆசுவாசப்பட்டார். ஒரு பயங்கரக் கனவு போல இறைவனின் விருப்பம் அவருள் வந்து அவரை சோர்வுற வைத்தது. அவர் புனித அருட்தந்தை கிடத்தியிருந்த மூலையை, பொருளற்று நோக்கிக் கொண்டிருந்தார். உறக்கமில்லாமல் கழிந்த பொழுதுகளினால் எல்லாத் துறவிகளும் அயர்ந்து போய் இருந்தனர். அவர்கள் அவரவர் அறைகளுக்குச் சென்று படுக்கையில் வீழ்ந்தனர். சன்னமான மூச்சொலிகள் நிரம்பிப் பரவத் தொடங்கியது. நாற்பது தினங்கள் இறந்தவரின் இருப்பு, மடாலயத்தைச்சுற்றி நடமாடிக் கொண்டிருக்கும். தன் சீடர்களைக் கவனித்துக் கொண்டும், அவர்களுக்கு போதனைகள் சொல்லவும், கடிந்து கொள்ளவும் செய்யும் . நிச்சயமாக அவர்களின் கனவுகளின் வழியே தங்கள் புனிதத்தந்தையினை அவர்கள் காண்பார்கள். கிழவர் சுற்றும் முற்றும் பார்த்தார். எல்லோரும் சென்று விட்டனர். மரணித்தவரின் காலியான அறையை வெறித்தார். வாசலில் கட்டியிருந்த இரு நாய்களும், சுருண்டுப் படுத்துக் கிடந்தது. அதன் வயிற்றுப் பகுதியில் சுவாசம் ஏறி இறங்குவதுத் துல்லியமாகத் தெரிந்தது. மெல்லிய முணக்கங்களுடன், புழுதி படிந்த தேகத்தில் காற்றின் சில்லிடல் இன்னும் அடங்காததால், அதன் மயிர்க்கால்கள் குத்திட்டிருந்தது. வெளியே அதேக் காற்றின் ஆரவாரம். அது ஓங்கி ஓங்கிக் கதவை அறைந்து உள் நுழைய முயற்சித்துக் கொண்டிருந்தது.

    அவர் அந்த நாய்களுக்கு அருகிலேயே அப்படியே சாய்ந்து படுப்பதற்காகத் தலையை சாய்த்தவர். வெளியே மூலையில் மேரியின் மகன் அசைவற்றுத் தரையைப் பார்த்து நின்று கொண்டிருந்ததை விளக்கொளியின் அலைவில் கவனித்தார். உறக்கம் கலைந்து இமைகளை விரித்து மறுமுறை இருளைப் பார்த்தார். ஒரு தொந்தரவாக நினைத்துக் கொண்டவர், எதையும் காட்டிக் கொள்ளாமல் எழுந்து அவனருகில் சென்றார். அவர் தன்னை அழைப்பார் என்பதற்காக அவரைப் பார்த்தபடி அமைதியாக நின்று கொண்டிருந்தான் அந்த இளைஞன். முன்னே வந்தவன், உதடுகளைச் சுழித்து, கசப்பாக அவரைப் பார்த்து புன்னகைத்தான்.

    "உட்காரு, ஜீசஸ், நான் உன்னிடம் பேச நினைத்திருந்தேன்" அவர் சொன்னார்.

    "நான் கேட்கிறேன்" பதிலுரைத்தவன் அவருக்கு எதிரேக் குந்தி அமர்ந்தான். "நானும்  உங்களிடம் பேச வேண்டும் என்றிருந்தேன், மாமா".

    "நீ இங்கு என்ன தேடிக் கொண்டிருக்கிறாய்?, அங்கே உன் அம்மா கிராமம் முழுதும் உன்னைத் தேடி அலைந்து புலம்பிக் கொண்டிருக்கிறாள் தெரியுமா!"

    "அவள் என்னைத் தேடுகிறாள், நான் கடவுளைத் தேடுகிறேன்" நாங்கள் எப்பொழுதும் சந்திக்கப் போவதே இல்லை"

    "நீ இருதயமற்றவன். ஒரு மகனாக, நீ உன் தாய், தந்தையிடம் ஒரு போதும் அன்பு செலுத்தியதில்லை"

    "அது உண்மையில் மிகவும் நல்லது, என் இருதயம் ஒரு கனன்று கொண்டிருக்கும் கங்கு, யார் அதைத் தொடுகிறார்களோ, அவர்கள் எரிந்து விடுகிறார்கள்"

    "உனக்கு என்னதான் பிரச்சனை, எப்படி உன்னால் இப்படியெல்லாம் பேச முடிகிறது? என்ன உன்னுள் குறையாக இருக்கிறது? துறவி அவனைப் பார்த்துக் கேட்டார்.

    நிமிர்ந்து அவனைச் சரியாகப் பார்த்தார். கன்னங்கள் வழியே கண்ணீர்துளிகள் வழிய அவன் எதிரில் அமர்ந்திருந்தான். "ஏதோ விவரிக்க முடியாத வாதை, உன்னை விழுங்கிக் கொண்டிருக்கிறது என் அன்புக் குழந்தையே! என்னிடம் அதை வெளிப்படுத்தி, உன்னை அமைதிப்படுத்து. உன் ஆழத்தில் புதைந்திருக்கும் அந்த வலி----"

"ஒன்று?", இடைமறித்துப் பேச ஆரம்பித்தான் இளைஞன். ஒரு சுழிவானப் புன்னகை, அவன் முகம் முழுதும் தெறித்தது. 

"ஓன்றல்ல, பல"

    தன் இதயத்தைக் கிழித்துக் குருதி பீறிடுவதைப் போல, அவனது குரல் கிழவரைத் துளைத்தது. தன் நடுங்கும் கைகளால், அருகில் அமர்ந்திருந்த அவனின் முட்டிகளைத் தழுவி அவனைக் கொஞ்சம் தைரியப்படுத்த முயன்றார். 

    "நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன், ஜீசஸ்" அவர் கனிவானக் குரலில் சொன்னார். "உன்னுடைய வேதனைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவா. உன் அகத்திலிருந்து அதனை வெளியே எடுத்து வீசு. இருளிற்குள் அது பல்கிப் பெருகிறது. ஆனால் ஒளி! சிறிது ஒளி கூட அதனைக் கொல்லும். அதனால் பயப்படாதே! வெட்கப்படாதே! பேசு!"

    ஆனால் மேரியின் மகனால் அதனை எப்படி விளக்க, எங்கிருந்துத் தொடங்க என்ற எந்த யோசனையும் இல்லாமல் இருந்தது.

    வெளிப்படுத்த முடியாத எந்த ஒன்றைத்தன் இருதயத்தினுள் புதைத்து வைத்திருக்கிறான். அதிலிருந்து அவன் தன்னை உயிர்ப்பித்து வெளிவர உண்மையில் என்ன வழி இருக்கிறது. கண்ணாடிப்பாளம் போலக் கீறி, விரிசலாகியிருந்தது அவனது அகம். அதன் பலப்பல பிம்பங்களில் கடவுள், மாக்தலேன், ஏழு பாவங்கள், சிலுவைகள், அதில் அறைந்து, வதைக்கப்பட்டு இறந்தவர்கள் என எல்லோரும் பெருகி வழிந்தனர். அவர்களின் உடல், குரல், எண்ணங்கள், கடந்த கால நினைவுகள் எல்லாம் குழைந்து உருகியோடிக் கொண்டிருந்தது.

    தன் முன்னே ஸ்தம்பித்து அமர்ந்திருந்த இளைஞனை எழுப்புவது போல அவனது முழங்கால்களில் தட்டி, அவன் பெயரை மென்மையாகக் கூறினார், முதிய துறவி.

"உன்னால் முடியும் ஜீசஸ்" என் அன்பானவனே" உன்னால் முடியும்". திரும்பத் திரும்பத் துறவி மெல்லியக் குரலில் இறைஞ்சுவது போல அவனிடம் கூறினார்.

"இல்லை, மாமா" என்னால் முடியாது.

"உன்னைச் சூழ்ந்து பலப்பல சபலங்கள் இருக்கின்றனவா?" அவர் இன்னும் குரலைத் தாழ்த்தி அவனுக்கு மட்டுமே கேட்கும்படி கேட்டார்.

"ஆம்! நிறைய" ஒரு வித நடுக்கத்துடன் வெட்டு வந்தது போல, வாயைக் கோணிக் கொண்டு பதிலளித்தான்.

கிறுஸ்துவின் கடைசி சபலம் -58

     

Author: Nikos Kazantzakis

    திடீரென அவரது உடல் அதிர்வடைந்தது. உடலின் மொத்த எடையையும் வலுக் கொண்டு  ஊன்றித் தலையைத் தூக்கிப் பார்த்தார். கலங்கியிருந்த கண்கள் ஒரு குவியமின்றி அலைந்தன. வாய் திறந்திருந்தது. மூச்சை அழுத்தி இழுக்கும் சத்தம் கேட்டது. வெட்டு வந்தது போல இழுத்துக் கொண்டிருந்தது முகத் தசைகள். அறைவாசலில் அவரைப் பார்த்துக் கொண்டிருந்த மேரியின் மகன், தன் வலது கையை நெஞ்சிலும், உதடுகளிலும், நெற்றியிலும் வைத்து வணக்கம் தெரிவித்தான்.

அருட்தந்தையின் உதடுகள் அசைந்தன. 

    "நீ வந்துவிட்டாய்! நீ வந்து விட்டாய்!"  தனக்கு மட்டுமே கேட்கும் குரலில் முணுமுணுத்தார். அவருக்கு வாசலில் மங்கலான ஒரு உரு மட்டும்தான் தெரிந்தது. நகர முடியாது, பக்கவாட்டில் இழுத்துக் கொண்டிருந்தது உடல். ஆனால் விவரிக்க முடியாத ஆனந்தம் அவர் கண்களில் பனிந்தது. முகம் பொலிந்து ஒளிர்ந்தது, ஆனால் எல்லாமே ஒரே ஒரு ஒற்றைக்கணம் . பின்பு எல்லாம் தளர்ந்து வீழ்ந்தன. கண்ணிமைகள் மூடின. நாசியடைத்து மூச்சு நின்றது, திறந்த வாயிலிருந்து "ஹக்" ஹக்" என்று எதையோத் துப்புவது போல சப்தம் வந்தது. இரு கைகளும் மார்போடு ஒட்டிப் பிணைந்திருந்தது. உள்ளங்கைகள் உடலோடு அழுத்தமாக ஒட்டியிருந்தது. 

    அதே சமயம், முற்றத்திற்கு வெளியே இரு ஒட்டகங்கள் வந்து நின்றன. துறவிகள், அந்த முதியப் போதகர் கீழே இறங்க உதவி செய்து கொண்டிருந்தனர்.

    அவர் உயிருடன் இருக்கிறாரா? சொல்லுங்கள் தந்தையே, அவர் உயிருடன் இருக்கிறாரா!. ஜான் கவலை தோய்ந்த குரலில் விசனித்தான்.

    அவர் இன்னும் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார். அவரால் எல்லாவற்றையும் பார்க்கவும், உணரவும் முடிகிறது. ஆனால் பேச முடியவில்லை, அருளாளர் ஹப்பாக்கக் பதிலுரைத்தார்.

    முதியத்துறவி முற்றத்திலிருந்து வாதிலை நோக்கி சென்றார். அவரைத்தொடர்ந்து புதியவனும், பின் துறவிகளும் வந்துகொண்டிருந்தனர். கையில் மதிப்பு வாய்ந்த ஒரு பெட்டியை அவர் வைத்திருந்தார். அதில் நோயுற்றவர்களைக் குணப்படுத்துவதற்கான மருந்துகளும், மூலிகைகளும், மந்திரத் தாயத்துக்களும் இருந்தது. அவர் வருவதைப் பார்த்ததும் வாசலில் கட்டியிருந்த நாய்கள் தன் கவைக்கிடையில் வாலைச் சுருட்டிக் கொண்டுத் தலைத் தாழ்த்தி நிலத்தில் குத்திட்டிருந்தன. அவைகள் வாயைத் திறக்காமலேயே மூக்கினால் முணகும் ஒலி, ஒரு மனித விளி போலவே ஒலித்தது.

    முதிய துறவி, மற்றவர்களைப் பார்த்து "இல்லை" என்பது போலத் தலையைப் பக்கவாட்டில் அசைத்தார். மிகவும் தாமதமாகிவிட்டது. அவரால் இப்போது பேசமுடியாதே! என்று சொல்லிக்கொண்டவர். நேராக மடாதிபதியின் அறையை நோக்கி சென்றார். அங்கேக் கீழே ஈச்சம் பாயில் அவரது உடலைக் கிடத்தியிருந்தனர். முதியத் துறவி மண்டியிட்டு, தன் கைகளை நெஞ்சில் வைத்துப் பார்த்தார். பின் அவர் உதடுகளுக்கு அருகில் முத்தமிடுவது போல முகம் தாழ்த்தி மூச்சினைக் கூர்ந்தார்.

    நான் மிகவும் தாமதமாக வந்துவிட்டேன்! இனி செய்ய ஒன்றுமில்லை. "நீவீர், விண்ணுலகில் நிலை கொள்க! தந்தையே! என்று மேலே பார்த்துக் கைகளை உயர்த்தினார்.

    ஒட்டுமொத்தமாக அழுகைகளின் கூக்குரலில் அறை நிறைந்தது. துறவிகள் எல்லோரும் மண்டியிட்டு அவரது உடலை முத்தமிடத் தொடங்கினர். ஒவ்வொருத் துறவியும் அவரவர்களது சேவையின் அனுபவத்தின் படி அவரது உடலை முத்தத்திற்காகப் பிரித்துக் கொண்டனர். அருளாளர் ஹிப்பாக்கக், அவரது கண்களுக்கும், மற்றத்துறவிகள் அவரது நாடியிலும்,  இறுகிப்பிடித்திருந்த உள்ளங்கையிலும், புதியவன் அவரது கால்களிலும் முத்தங்களிட்டனர். ஒருவர் அவரது பெருமை மிகு புனிதக்கோலை எடுத்து வந்து அவருக்கு அருகில் வைத்து அவருடைய அருள்த்தன்மை கெடாமல் பார்த்துக் கொண்டார்.

    முதியத்துறவி அழவில்லை. அவரது கண்கள் ஆச்சர்யத்துடன் அருட்தந்தையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தது. தூயக் குழந்தைத்தனமான புன்னகை இன்னும் அவரது உதடுகளில் மிளிர்ந்தது. அவரது முகமே ஏதோ ஒரு அழியாத ஜோதியின் ஆட்கொள்ளலில் பொலிந்து ஜொலிப்பதை போல, மிளிர்வு. மறையாத சூரியன் இன்னும் அவரினுள் ஒளிர்கிறது. எங்கே அந்தச் சூரியன்.

    முதியதுறவி இன்னும் மரணித்த அவரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். துறவிகள் தங்களின் இறுதி அஞ்சலியை மண்டியிட்டு அவருக்கு செலுத்திக் கொண்டிருந்தனர். அவரது காலடியில் ஜான் அமர்ந்திருந்தான். வழக்கமாக அவரின் தளர்ந்த பாதங்களைப் பிடித்து விடுவதைப் போலவே, அவரின் பாதங்களைத் தன் விரல்களால் வருடினான். பின் முத்தமிட்டு அழுதான். முதியத்துறவியின் பார்வை ஒவ்வொருத்தர் முகங்களாக நகர்ந்து கொண்டிருந்தது. திடீரென அவர் அவனைக் கவனித்தார். அமைதியாக பின்னாலிருந்த மூலையில் அசைவற்று ஒரு நிழல் போல இருளில் நின்று கொண்டிருந்தான் மேரியின் மகன். கைகளை மார்புக்கு குறுக்கே இறுக்கி நிற்கும் அவனது முகத்திலிருந்து அதே குழந்தைத்தனமானத் தூய சிரிப்பும், அமைதியும் கிளர்ந்து அந்த அறை முழுதும் பரவியது.

    அடுத்த நாள், சூரியன் தன் வெம்மையான சென்னிறக் குழம்புகள் பொதிந்தக் கீற்றுக்களை பூமியை நோக்கி விடுவித்தது. பாலைவனம் எரிந்து கொண்டிருந்தது. அங்காங்கே மணல் புயல்கள் உருவாகிப் புழுதிப்படலம் வானம் வரை படர்ந்தது. கட்டவிழ்க்கப்பட்டக் காற்று நிலத்தின் தோலைக் குதறிக் கிழித்துப்  பெயர்த்தெடுத்தது.  மேகமற்ற வானத்திற்குக் கீழே புழுதியப்பியப் பழுப்பு நிற உலகம் ஒன்று புதிதாக உருவாகியிருந்தது. மடாலயத்தின் வாசலிலில் கட்டியிருந்த, கருப்பு நாய்கள் இரண்டும் உடலைச் சுருக்கித் தலையைக் கவட்டைக்குள் பொருத்திக் கண்களை மறைத்துக் கொண்டன, அதன் முகம் தவிர்த்து உடல் முழுதும் புழுதி மயிர்கள் குத்திட்டு வளர்ந்திருந்தன. ஒட்டகங்கள் நிலத்தில் குந்தித் தன் கண்களை மூடிக் கொண்டு அசைவற்று, அமைதியாக அமர்ந்திருந்தன. பார்க்கும் திசையெல்லாம் புழுதி மட்டுமே நிறமாக எல்லாம் உருமாறிக் கொண்டிருந்தது.

    அவர்கள் தங்கள் அருட்தந்தையின் உடலை நறுமணத் தைலங்களால் கழுவி, உடைகள் அணிவித்துப் பின், இறைவனின் அழிவற்ற இருப்பில் அவரது ஆன்மா நிலைத்திருக்கச் சடங்குகளும், பிரார்த்தனைகளும் செய்தனர். பின் தலை முதல் கால் வரை கனமானப் போர்வை போன்றத் துணியால் இறுக்கி மறைத்துப் பொட்டலம் போலக் கட்டினர். தாங்களும் உடலையும் முகத்தையும் ஒழுங்காக மூடிக் கொள்ளும் வகையில் உடுத்திக் கொண்டுத் தயாராகினர். ஒருவர் பின் ஒருவராகத் துறவிகள்,  மடாதிபதியின் உடலைத் தூக்கிக் கொண்டு ஒரு சங்கிலிப் போலப் பிணைந்து மெதுவாக அப்பாலைவன நிலத்தில் சென்று கொண்டிருந்தனர். தடுமாறும் பொழுதெல்லாம் மற்றவர்களின் உடல் எடையினால் சம நிலைப்படுத்திக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தனர். காற்றின் இழுப்பில் அவர்கள் சாய்வதும் பின் மீள்வதுமாய் இருந்தது. ஒரு பதாகை போல அவர்களின் தோள்களின் மேலே அவரின் உடல்ப் பொட்டலம் இருந்தது. பாலைவனம் கடலலையில் தோணி போல அலங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் தங்கள் குருமார்களைப் புதைக்கும் இடுகாடு இருக்கும், பாலைவனத்தின் கிழக்குப் பகுதி நோக்கி ஒரு பாம்பு போல நெழிந்து நெழிந்து சென்று கொண்டிருந்தனர்.

    இந்தப் பாலைப்புயலின் காற்று, நம் தந்தை ஜெகோவாவின் மூச்சு, ஜான் தனக்கு எதிரே வந்து கொண்டிருக்கும் மேரியின் மகனைப் பார்த்து முணுமுணுத்தான். இது எல்லாப் பசுமையையும் அழிக்கும், வசந்ததின் நிலம் எரிந்து வாடும். நம் வாய்களில் மணலை அள்ளி நிரப்பும். நாம் இந்தப் புனித எச்சத்தை அங்கே தூரத்தில் தெரியும் பள்ளத்தில் போட்டால் போதும். பாலையின் மணல் தானாக எல்லாப் பக்கத்திலும் இருந்து விழுந்து மூடிக் கொள்ளும்.

    அவர்கள் மடாலயத்தின் முற்றத்தைக் கடக்கும் கணம், தன் தோளில் சுத்தியலை வைத்துக் கொண்டு தூரத்தொலைவில் பனிப்படலம் போல புழுதிபடிந்து சீறிக் கொண்டு வேகமாக வீசும் காற்றையும், புழுதிப்புயலால் இருண்டுகிடக்கும் வானத்தையும் பார்த்து நிற்கும் செந்தாடிக்காரனைப் பார்த்தனர். புழுதி போர்த்திய வெளியில் தோன்றியும் மறைந்தும் தெரிந்தது அவன் ஆகிருதி. செபெதீயின் மகன்,  புழுதிப்படலத்தினுள், பாலைவன ஓநாய்ப் போல முன்னே, புழுதியுருவாய் அந்தக் கொல்லன் தெரிவதைப் பார்த்து நடுக்கத்துடன் தன் அருகில் வரும் இளைஞனின் கைகளைப் பற்றிக் கொண்டான்.

    அது யாராக இருக்கும்? நீ அவனைப் பார்த்தாயா? தன்மையானக் குரலில் ஜான் கேட்டான்.

    ஆனால் மேரியின் மகன் பதில் பேசவில்லை. கடவுள் தன் எல்லாச் செயல்களையும் கச்சிதமாகத் தனக்கு வேண்டியத் தருணத்தில் நிகழ்த்துகின்றார். பார்! என்னையும், யூதாசையும் ஒருங்கே உலகின் கடைசி மூலையான இப்பாலைவனத்திற்கு வரவழைத்திருக்கிறார். அப்படியென்றால் எல்லாம் சரிதான்! உன் விருப்பப்படி எல்லாம் நடந்தேறட்டும்! என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு சிரித்துக் கொண்டான்.

கிறுஸ்துவின் கடைசி சபலம் -57

Author: Nikos Kazantzakis

    அவனது தீவிரமான நடுங்கும் குரலைக் கேட்டத் துறவி பயந்தேவிட்டார். உண்மையில் கடவுளின் பெயரை, ஒரு மனிதனின் குரலில் இத்தனை ஆழமானக் கார்வையில் அவர் கேட்டதே இல்லை.

    சற்று தன்னை நிதானித்துக் கொண்டவரைப் பார்த்து தொடர்ந்து பேசிய, மேரியின் மகன், தான் மடாதிபதியைப் பார்க்க வந்திருக்கிறேன் என்றான். 

    "ஒரு வேளை நீ அவரைப் பார்க்கலாம். ஆனால் அவரால் உன்னைக் காண முடியாது. அவரிடம் உனக்கு வேண்டியது என்ன." என்று கேட்டார்.

    "எனக்குத் தெரியாது, நான் ஒரு கனவு கண்டேன்....அதற்காக நாசரேத்திலிருந்து வருகிறேன்."

"கனவா!", அரைப்பைத்தியக்காரத்துறவி நகைத்தார்.

    "ஆம்! அது ஒரு பயங்கரக் கனவு!, அருளாளரே! அந்தக் கனவிற்குப் பின் எனக்கு ஊன், உறக்கமில்லை. முற்றிலுமாக நிம்மதியிழந்து விட்டேன். நமது அருட்தந்தை ஒரு புனிதர். பறவைகளின் மொழியும், கனவுகளின் மொழியும் கடவுள் அவர்க்குக் கற்பித்திருக்கிறார் என்று அறிந்தேன். அவரால் எனக்கு விளக்கமளிக்க முடியும் என்று நம்பினேன். அதனால் இங்கு வந்தேன்"

    உண்மையில் அவன் இம்மடாலயத்தினுள் நுழையும் வரைக்கூட அவனுக்குத் தான் சிலுவையைச் செய்து முடித்த அன்று இரவில் கண்டக் கனவைப் பற்றிய விளக்கத்தைக் கேட்க வேண்டும் என்ற எண்ணமில்லை. ஒரு ஊன் மிருகத்தின் துரத்தல் போல, அக்கனவில், செந்தாடிக்காரன் முன்னே வர, அவனைத் தொடர்ந்து அவனது படைகளான குள்ளர்கள், கைகளில் வதைக்கும் ஆயுதங்களுடன் துரத்திக் கொண்டு வருகின்றனர். இப்பொழுது, மடாலயத்தின் முற்றத்தில் காலடி எடுத்து வைக்கும் பொழுது ஒரு ஒளி மினுக்கம் போல அக்கனவு அவன் அகத்தைக் கிழித்து வெளிவந்தது.

    "ஆம்! அதற்காகத்தான். கடவுள் எனக்கானப் பாதையைக் காண்பிப்பதற்காகத் தான் சரியானத் தருணத்தில் இந்த ஞாபகத்தை ஏற்படுத்தினார். இந்தப் புனிதர் என் கனவின், புதிரின் சிக்கல்களை நிச்சயமாக விடுவிப்பார்" என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

    நமது அருட்தந்தை இறந்து கொண்டிருக்கிறார். நீ மிகவும் தாமதமாக வந்திருக்கிறாய் சகோதரா! திரும்பப் போ! என்று அந்தத் துறவி சொல்லுற்றார்.

    என்னை இங்கே வரச்சொல்லிக் கட்டளையிட்டிருப்பவர் கடவுள். அவர் தன் பிள்ளைகளிடம் புரளிகள் கூறுவதில்லை! என்று மேரியின் மகன் சீற்றத்துடன் பதிலுரைத்தான்.

    துறவி கையை வாயில் பொத்திக் கொண்டு கேலியாக சிரித்தார். அவர் கடவுளுக்காக ஒரு நல்ல ஒப்பந்ததத்தை தன் வாழ்நாள் முழுதும் செய்து கொண்டிருக்கிறார், அதனால் அவருக்கு கடவுளிடம் எந்த நம்பிக்கையுமில்லை.

    "அவனே பெரியவன், இல்லையா! அவன் தன் மண்டையில் என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதையெல்லாம் செய்வான். அவனால் அநீதிகளை இழைக்க முடியவில்லையெனில், அவன் எப்படி சர்வ வல்லமை படைத்தவனாவான்!" என்று சிரிப்பை அடக்காமல் சொல்லிக் கொண்டிருந்தார் துறவி.

    அவர், இளைஞனின் முதுகில் மெதுவாகத் தன் கைகளால் அடித்தார். பாசாங்கற்ற அடியாக அது இருந்தாலும், துறவியின் கைகள் வலுவாகவும், மரத்தும் இருந்ததால், மேரியின் மகன் சற்றுத் தடுமாறினான்.

    நல்லது! கவலைப்பாடாதே! உள்ளே செல்! நான் தான் இங்கு வரவேற்பாளன் என்றார், துறவி.

    அங்கிருந்து துறவிகள் தங்கும் இடம் நோக்கி நகர்ந்தனர். முற்றத்தில் காற்று சற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. புழுதி கிளம்பியடித்து, அங்கே சிறிய புழுதிப்புயல் காற்றுடன் இணைந்து உருவாகியது. சூரிய ஒளியை மறைப்பது போல அது உருவாகிச் சுழற்றியடித்தது. சூழல் சற்று இருண்டத் தோற்றம் கொண்டது.

    வெளிமுற்றத்தின் நடுவில் ஒரு வறண்டக்கிணறு. சாதாரண சமயங்களில் கூட அதில் நீர் இருக்கும். ஆனால் இப்போது மண் மண்டிக் கிடக்கிறது. அதன் திண்டின் விளிம்பினில் இரு ஓணான்கள், அமைதியாக, அசைவற்று வெயிலை உடலில் ஏற்றிக் கொண்டிருந்தது.

    மடாதிபதியின் அறை திறந்தது. துறவி, இளைஞனின் கைகளைப் பிடித்துக் கொண்டு உள் நுழைந்தார். சற்றுப் பொறு! நம் சகோதரர்களிடம் நான் அனுமதி வாங்கிக் கொள்கிறேன். அதுவரை இங்கேயே நில்! என்று உள்ளே சென்றார்.

    அவன் தன் கைகளை மார்பிற்கு குறுக்காகக் கட்டிக் கொண்டு அமைதியுடன் நின்றிருந்தான். அருட்தந்தையைக் கிடத்தியிருக்கும் அறையின் வாசலில் இரு நாய்களும் கட்டப்பட்டிருந்தன. அது படிகளை முகர்ந்தும், அங்கும் இங்கும் நோட்டமிட்டுக் கொண்டு வாயைப் பிளந்து கொட்டாவி விட்டது. அதன் கூரியக் கோரைப்பல் வெளித்தெரிந்தது. பின் நின்ற இடத்திலேயேக் கால்களை மடக்கு, தலையைத் திருப்பி உடலில் அமர்த்திக் கண்கள் அயர்ந்தது.

    மடாதிபதியின் உடல், வாசலைப் பார்த்துக் கால்களை நீட்டிப் பாயில் கிடத்தப்பட்டிருந்தது. இருபுறமும் அவரது சீடத்துறவிகள், இரவெல்லாம் விழித்திருந்து அவரைக் கவனித்ததால்,  முற்றிலும் சோர்வுற்று, கண்கள் கிறங்க நின்று கொண்டிருந்தனர். நோய்வாய்ப்பட்டு நலிந்த அவரது உடல் வெளிச்சத்தில் தெளிவாகத் தெரிந்தது. திறந்திருந்த கண்களின் பார்வை வாசலை நோக்கி அலையாடியது. நிழலுருக்களாய் வெளிச்சம் அசையும் பொழுது முகம் கோணலாகி அதிர்வுற்றது. ஏழு நிலைகள் கொண்ட மெழுகு விளக்கில் மஞ்சள் ஒளி துடித்துக் கொண்டிருந்தது. அது அவரது தலைக்கு மேலே, ஒவ்வொரு உடல் அதிர்வுகளுக்கும் பதிலுரைப்பதைப் போல அசைந்து கொண்டிருந்தது. மன நிறைவற்றக் கலங்கலானக் கண்கள், கழுகின் அலகினைப் போல வளைந்திருந்த மூக்கு, நீலம் பாரித்த உதடுகள், தோள் வரை சரிந்து கிடந்த வெளுத்த நீண்ட நரை முடி, எலும்புகள் புடைத்த மார்பு என ஒரு அரைப்பிணம் போலத்தான் அவர் தரையில் கிடந்தார் துறவிகள் காய்ந்த ரோஜா இதழ்களை மண்ணால் செய்த தூபக்கல்லில் போட்டு எரித்து நறுமணப்புகையை அவரைச்சுற்றிப் பரப்பினர். அதன் புகைச்சுருள் அவரது உடலுக்கு மேலே சுருண்டு மேல்நோக்கிப் பறந்தது. நறுமணம் நாசிகளைத் துளைத்தும், அறையின் காற்றினை ஆக்கிரமித்தும் நிரம்பிக் கொண்டிருந்தது.

    உள்ளே வந்தத் துறவி, தான் எதற்காக வந்தோம் என்பதையே மறந்துத் தன் குருவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். 

    சூரியனின் நீண்ட ஒளிக்குழாய்கள் முற்றத்தைக் கடந்து, மடாதிபதியின் பாதங்களைத் தழிவித் தன் வெளிச்சத்தை அறையெங்கும் பரப்பிக் கொண்டிருந்தது. மேரியின் மகன் இன்னும் வெளியில்தான் காத்துக் கொண்டிருந்தான். நாய்கள் உசாவிக் கொள்ளும் முணகல் ஒலியும், தூரத்தில் தகரத்தை அறையும், இரும்புப்பட்டறையின் சத்தமும் தவிர்த்து எந்த ஒலிகளுமில்லை. 

    காத்திருந்து காத்திருந்து நாள் நகர்ந்து கொண்டே இருந்தது. அவர்கள் அவனது இருப்பையே மறந்து விட்டிருந்தனர். இரவு முழுதும் பனியின் சில்லிப்பில் பயணம் செய்து தளர்ந்து வந்தவனுக்கு, இங்கு இந்த உறைவிடத்தின் பாதையில் வெம்மை அளவாய் இருந்தது. சூரியனின் கதிர்கள் அவன் உடலைத் துளைக்கும் பொழுது அவனுக்கு சுகமாக இருந்தது.

    திடீரென அச்சூழலின் அமைதி நிலைகுலைந்தது. வெளியே கண்காணித்துக் கொண்டிருந்தத் துறவிக் கத்தும் சப்தம் பாறைகளுக்கிடையில் இருந்து வெளிவந்தது.

"அவர்கள் வருகிறார்கள்! அவர்கள் வருகிறார்கள்!"

    அருட்தந்தையின் அறையில் நின்று கொண்டிருந்த அத்தனைத் துறவிகளும் அவரைத் தனியே விட்டு விட்டு வெளியே ஓடினர்.

    உதறல் எடுத்தது போல, மேரியின் மகன் இரண்டு அடி எடுத்து முன்னே சென்றான். பின் கூச்சத்துடன் வாசலிலேயே நின்று உள்ளே எட்டிப் பார்த்தான். உள்ளே இருந்த அமைதி! மரணம், மரணமின்மைக்கிடையில் அலைந்து கொண்டிருந்தது. சூரிய ஒளியில் அவரின் வெளுத்தப்பாதங்கள் தெரிந்தன. ஒரு ஈச்சையின் ரீங்கரிப்பு உத்தரத்திலிருந்து கீழ் நோக்கிக் கேட்கிறது. அது விளக்கொளியால் ஈர்க்கப்பட்டு அதன் நிலைகளில் ஆடுகிறது. ஒன்றிலிருந்து ஒன்றாகச் சென்று தன் சிதைக்குழியை முயன்று தேடிக்கொண்டிருந்தது அது.