ஞாயிறு, 18 மார்ச், 2018

நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்

துயில் கலைந்த பின்
என் கனவிற்குள் நடந்து கொண்டிருக்கிறேன்.
கனவின் பகலிற்குள் நுழைய நுழைய
கரை நிறைத்த எச்சில் நதி.
நடுவில் தனித்த திட்டாய் மிதக்கிறது கட்டில்.
மணல் பரப்பிற்குள் பதுக்கி வைத்திருந்த
ஊற்றுக்கண்ணிலிருந்து
புடைத்துக் கிளம்புகிறது, கானல் ஓடை.
நான் பகலில் இருக்கிறேன்.
நண்பகல் சூரியனின்
வெளிச்சக் கோடுகளுக்கிடையில்
ஈரம் உறிஞ்சுகிறேன்.
தெப்பமான படுக்கையினடிச் சதுப்பில்
ஊறிக் கொண்டிருக்கின்றன,
நேற்று நீ கைத்தவறுதலாய் விட்டுச்சென்ற ரகசியங்கள்.
வெகு தூரம் நடந்த பின் தான் தெரிந்தது,
நேற்று உன் முத்தத்தின் உப்பை அள்ளி உருவாக்கிய
ஈச்சம்பழ விதைகள் உலர்ந்து கொண்டிருப்பதை.
நான் இரவிற்குள் புகும் முன் வீச்சம் இழந்திருந்தன.
இன்னும் ஒன்று ஒன்றே ஒன்று தந்து விடேன்.
இரவு இன்னும் முடிந்து விடவில்லை.
சதைத் திரட்சியுடன் நதியினடியில் முழுகிக் கிடக்கின்றன,
பெரும் பெரும் ஈச்சங்காடுகளும்,
உப்பு மலைகளும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக