வியாழன், 11 ஜனவரி, 2018

அக்கா

கண்ணாடி, தலை வாழை இலையில், பாளையங்கோட்டன் பழங்கள், வெற்றிலை, பாக்கு. பழத்தில் குத்தி நின்ற ஊதுபத்திப் புகை. ஸ்டூலுக்கடியில் கம்யூட்டர் சாம்பிராணி. கண்ணாடிக்குப் பின் சுவரின் மேல்வட்டமாக சிவப்புச் சாந்தும் கீழே நேர்க்கோடாய் குங்குமும். சாத்தியிருந்த சம்மங்கி மாலையும். தாம்பாளத்திற்கருகில் எவர்சில்வர் குவளை நிரம்ப சுண்டக்காச்சிய பால்.
என்னாச்சு…என்னாச்சு மக்கா!
குசுகுசுவென்று சித்திகள் தங்களுக்குள் பேசிப் பூரித்துக் கொண்டனர். எட்டி! நல்ல நேரமாக்கும். வளர்பிறை. தேவிக்க நாள். வெள்ளிக்கிழமை.
அக்கா, வயித்தை இறுகப்பிடித்து அழுது கொண்டிருந்தாள்.
தலைக்கு தண்ணி ஊத்தும் நாளிலும் எனக்குப் புரியவில்லை. யாரும் விளக்கவுமில்லை.
அவள் என்னைப் போலவே இருப்பாள். உருவத்திலும் வடிவிலும். ஆண் பெண் என்ற வித்தியாசம் தவிர்த்து. என்னைவிட இரண்டு வயது மூத்தவள்.
தோல் கிழிந்து சிவந்த முட்டியில் எச்சில் துப்பித் தடவினாள். காந்தல். கண்களை இறுக்கிக் கொண்டேன்.
எங்கப்போ, ரெத்தம் வருகு. அக்காவ மன்னிச்சிரு மக்கா. தெரியாம செஞ்சுட்டேன். கண்ணீர் மேலிருந்து என் மூக்கிற்கு மேலே துளித்துளியாய் விழுந்தது.
எனக்கு வலிக்கலட்டி. உண்மைலயே வலிக்கல. நாக்கைத் துருத்தி வலிச்சம் காட்டினேன்.
போலே. நாயே! பன்னி!
கண்ணாடியின் முன் முட்டுக்கன்னி போட்டு அழுது கொண்டிருந்தாள் அம்மா. அவளைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் அவளது அக்குள் வாடையைத் தான் அறிகிறேன். இங்கும் இருக்கிறாளா? சூட்சுமமாக அவளது உடலின் வியர்வையை, மதர்த்துக் கிளம்பும் அவளது உள்ளாடைகளின் நறுமணம் சாம்பிராணிப்புகை வழி என் அணுக்களில் நிரம்புகிறது. புண்ணில் ஈக்கள் போல அகத்தில் அரித்துக் கொண்டிருக்கிறாள்.
இது சரியில்ல கேட்டியா. இனிமேல் இது செய்யக்கூடாது. அம்மைக்கு மேல சத்தியம் செய்.
நான் நரம்புகள் இழுபட என் தாடையை இழுத்துக் கொண்டு, முகத்தைத் திருப்பி சத்தியம் செய்தேன்.
மத்தவனுக்க, கோவத்த பாத்தியா. லேய். சரி போட்டும். இனி செய்யாதே.
அவள் என்னுள்ளிலிருந்து நான் மருகும் இன்னொரு ஆகிருதி. என்னை நான் பெண்ணாய் அவளிடம் கண்டு கொண்டிருக்கிறேன். இன்றும் தான்.
லேய்! பாவாடைத் தும்பை கடிக்காதலே. இங்க பாரு லே! என் மூக்கின் நாசிகளை விரல்களால் அழுத்தி சிந்தினாள். சழுவை வடிய பின் அவள் மடியிலேயே அன்று உறங்கிப் போனேன்.
ஞாபகங்களின் அலைகள், நோயுற்ற யானையைப் போன்ற எண்ணவோட்டங்களின் குத்திட்ட இருப்பில் இடித்துப் பின் சென்றது. இரண்டு முறை அதன் பிறகு தற்கொலை முயற்சி செய்தேன். அதற்கு நான் காரணமில்லைதான். ஆனால் நான்…நான்…மிருகத்தைப் போல உணர்கிறேன் இன்று. என்னால்தான் அது நிகழ்ந்திருக்குமோ, இன்று வரை காரணங்களையும், நியாயங்களையும் சொல்லிக் கொண்டு சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
அன்று கரண்ட் இல்லை. நானும் அக்காவும் வீட்டிலிருந்தோம். எனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கலாம். அவள் மெல்ல என் நிக்கருக்குள் கை விட்டாள். எனக்கு புரியாத, இது வரை நான் உணராத கிளர்ச்சி. என் கையைப் பிடித்து அவள் பாவாடைக்குள் அழுத்தினாள். என்ன நிகழ்கிறது. அவள் மெல்ல அழுத்திக் கொண்டிருந்தாள். எனக்கு அவள் என்ன செய்தாளோ அதைப்போலவே நானும் அவளுக்கு செய்து கொண்டிருந்தேன். ஒரு  குறிப்பிட்ட கணம் நான் மேலெழும்புவதைப் போல, என் வலது காலின் பெருவிரல் பக்கவாட்டு நரம்புகள் துடித்தடங்குகிறது. குறி மெல்ல எழும்பி தாங்க இயலாத ஒரு காற்றழுத்தம் அதனுள் இருந்து கிளம்பி என் வயிற்றினுள் உருண்டது. அவள் அதை ஊகித்ததைப் போல நிறுத்திக் கொண்டாள்.

இரண்டு வருடம் முன்பு அவளை நான் ஸ்தூலமாக திரும்பக் கண்டேன். நான் அவளின் தோள்களில் அமர்ந்திருந்தேன். கழுத்தின் ஆரங்களின் நெழிவு அளவெடுத்த சமமான முலைகளுக்குள் அலுங்கியது. இறுகிய வயிற்றில் பிள்ளை பெற்ற தடம் போல இடையில் சிறு நெகிழ்வு. இடுப்புக்கச்சையில் ஒட்டியானங்களும், மணிகளும் கோர்த்திருக்கிறது. கோவிப்பொட்டும், பக்கவாட்டுக் கொண்டையும் வைத்திருந்தாள். நீண்ட கால்களின் பின் சதைகள் ஆணைப் போலவே. அவளது அக்குளில் நிச்சயம் முடி இருந்திருக்க வேண்டும். எண்ணெய் வழியும் அவளின் தேகத்தில், ஆம். இது அவள் தான் வெகு நாட்களாக நான் ஒதுக்கிக் கொண்டிருக்கும் அவளது நறுமணம். வியர்வையின் மதர்த்த நீர் அவளது உடலெங்கும் வழிகிறது. நான் சிறுபிள்ளையாய் நிக்கர் மாட்டிக் கொண்டு அவளது தோள்களில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறேன். எனது இடதுகாலைக் கெட்டியாக தன் சிவந்த விரல்களால் பிடித்து அழுத்தி வைத்திருக்கிறாள். நாங்கள் புறப்பட்டு சென்று விடுவோம். என்னைக் கூட்டிக் கொண்டு போக வந்து விட்டாள். அங்கேயே அமர்ந்து விட்டேன். கோவில் நடை சாத்தும் வரை.
ஒரு பிரமை போல அந்த நாளை இன்று மீட்ட முடிகிறது. அவளுக்கும் எனக்குமான உறவு பிண்ணிப்பிணைந்த இருதலை நாகங்களைப் போல. ஓருடல் தான் இருந்திருக்கும்.
சடங்குக்கு பிறகு அவளை நான் பார்ப்பதே உருமாறிக் கொண்டிருந்தது. ஆனால் இது ஒரு வகை ஊசலாட்டம். சொந்தத் தண்ணுணர்வு என்னை இழுத்துக் கொண்டிருக்கும். ஆனால் உள்ளே காந்தத்தை சுற்றி ஒட்டிக் கொள்ளும் இரும்புத்துகள்களைப் போல அவளை, அவளது அருகாமையை, குரலை, அசைவை, பாவனையை என்னை அறியாமலேயே நானும் நகல் செய்து எனக்குள் நடத்திக் கொண்டிருப்பேன். அவள் என்னை விட்டு விலகிக் கொண்டிருந்தாள். நான் அவளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தேன்.
அன்று யாரும் வீட்டிலில்லாத நாளில், அவளது உள்ளாடைகளையும், நைட்டியையும் நான் அணிந்து கொண்டேன். அவளையே இறுக்குவது போல என் கைகளால் என்னுடம்பை வலிக்கும் மட்டும் இறுக்கினேன். கழற்றிய உள்ளாடைகளை ஆசை தீர முகர்ந்தேன். அவளது குரல் போல அந்த வாடை என் செவிகளுக்குள்ளும் நிரம்பிக் கொண்டிருந்தது. கண்ணாடியில் என் பிம்பத்தை நானே ஆசைதீர முத்திக் கொண்டேன். அதில் ஒட்டி வைத்திருந்த ஸ்டிக்கர் பொட்டுக்களை எடுத்து என் குறியில் ஒட்டி வைத்து தடவினேன். அவளை இணக்கமாக அறிவது போல அவளது உடல் மொழி என்னுள் குடியேறியதைப் போல ஆடியில் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த பிம்பத்தில் நானும் இருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது என்ன உணர்வு. என்னுடல், என் அக்குளை முகரும் போது அதில் அவளை அறிவதாய் சில நேரம் தோன்றும். ஆனால் இது நான். ஒரு ஆணின் உடல் அங்கு எதிரொளிக்கிறது. ஆனால், ஆனால்…அவளைப்போலவே என் குறியை நான் வெகு நேரம் தடவிக் கொள்கிறேன்.
காமம் ஒரு வடு போல இருப்பதில்லை. செம்புண் போல. நமைத்துக் கொண்டே இருக்கும். சில நேரங்களில் தோன்றும் இதனால் என்ன இப்பொழுது. இல்லை. உண்மையில் அங்கு இன்னொரு பெண்ணை என்னால் வைக்க முடியவில்லை. உண்மையில் எந்தப்பெண்ணையும்.
கக்கூசுக்குள் நான் கத்தி அழுது கொண்டிருந்தேன். ப்ளேட் என் விரல்களுக்கிடையில் கூர்மையாக மினுங்குகிறது. தோர்த்தைத் துளைத்து எம்பி நிற்கிறது குறி.
லேய்! லேய்! யாம்லே…என்னாச்சு.
ஒன்னில்லம்மா, கால் சருகிட்டு. ஒன்னில்ல…
ஒன்றுமில்லையா. என் குறியைப் பார்க்க சகிக்கவில்லை. பெண்களிடம் ஒரு சேரக் கவர்ச்சியும், பயமும் தோன்றுகிறது. தினமும் சுயமைதுனம் செய்கிறேன். ஆனால் இந்தக் கை, இந்த விரல்கள் இது என்னுடையதல்ல. கூர் நகங்களால் என் முழங்கை சதையை நுள்ளி விடும் இந்த விரல்கள் என்னுடையதல்ல. ஆனால் சேர்கையில், சேராத ஒரு பாகம் துண்டாக இருக்கும். அந்த உடல் துண்டு, அறுந்த பல்லி வாலைப்போல துடித்துக் கொண்டிருக்கிறது. அது மறுதலித்துக் கொண்டு, விலக முயற்சிக்கிறது. நானல்ல. என்று நிரூபிக்க முயல்கிறது. இருந்தும் பயமா, காமமா என்று எண்ணுகையில் காமம் தான் வெல்கிறது.
மக்கா! ஒடுக்கத்தி வெள்ளிக்கெழம இன்னைக்கு, அக்காவ நெனச்சுக்கோ! மறந்துராத. சாப்டியா. கடைலயா. லேய். நல்லத வாங்கித்தின்ணு, ஜூஸ் குடி. சாயை கும்பிடுகேல்லா. உனக்கு யாராவது சித்தரத்தான் கும்பிடனும் கேட்டியா. லேய். கேக்க மாட்டுக்கு. சத்தமா பேசுலே. சரி, ஒடம்ப பாத்துக்கோ!
சரிம்மா. வைக்கேன்.
நினைக்கிறேன். எங்கிருந்து அவளை அறுத்தெறிய என்று. இல்லை எந்த பாகத்தில் அவளைத் தைத்துக் கொண்டு வாழ.
இரவின் மயான அமைதி. அவிழ முடியாத காற்று அறைக்குள் அடைபட்டு நாய்க்குட்டியைப் போல முணங்கிக் கொண்டிருந்தது. நான் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். மின்விசிறி தூசியைக் கக்கிக் கொண்டு, அமானுடமாய் இரைந்து கொண்டிருந்தது. கட்டில் ஒதுங்கியிருக்கும் முக்கில் இருள், ஜன்னல் வெளிச்சத்தில் அகப்பட்டு அதன் நிழல்களினுள் தன்னிருப்பை ஸ்திரப்படுத்திக் கொண்டிருந்தது. நான் அமைதியற்று போர்வைக்குள் உருண்டு கொண்டிருந்தேன். தோள்கள், தோள்கள். அவள் என்னைக் கூட்டிச் செல்வாள். நான் நம்பும் திசையில் என்னைக கடைத்தேற்றுவாள். ஒரு புலம்பல் உள்ளறைகளில் ரேடியம் பந்தைப் போல நிற்காமல் சாடிக் கொண்டிருக்கிறது. கரண்ட் போனது.
டேய்! நாகு, அக்காட்ட ஒனக்கு புடிச்சது என்ன சொல்லு.
நான் விழிபிதுங்க ஏதோ கண்டுபிடிக்க முயல்பவன் போல அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஒனக்கு தெரியாதே! தெரியாதே…
எங்கிட்ட புடிச்சத சொல்லு பாப்போம்
எனக்கா…எனக்கு உனக்குள்ள குஞ்சாமணிதான் புடிக்கும்
எம்மா……..
மணி நான்கு தாண்டியிருந்தது. திடுக்கிட்டு எழுந்ததில் கட்டில் குமிழ் இடித்து முன் மண்டை புடைத்து விட்டது. மின் விசிறியின் கிரீச் சத்தம் பெருச்சாளி மண் பறண்டுவதைப்போல செவிப்பறைகளில் வெட்டியது.
                டீ குடிக்க வெளியே சென்றேன்.  விடியற்காலை ஒரு வினோதமான உலகம். மக்கள் சயனத்திலிருக்கையில், இன்னும் சில மணி நேரங்களில் மற்றுமொரு நாள்.  ஆனால் நான் இன்னும் என்னுடைய பழைய நாட்களையே ஆமை ஓட்டினைப் போல சுற்றிக் கொண்டு எங்கும் செல்கிறேன். எழனிக்கூடை கால்களால் உதைத்து பின் அழுத்தி சதைக்கத் திமிறினேன்.
இதே மாதிரிதான், இது இங்க! லேடி பேர்டு சைக்கிள், மெல்லிசான டையர், உடைஞ்ச ரிம்…லாரி,லாரி.
                என்னாச்சு தம்பி, ஒன்னில்லன்னே. ஒரு பில்டர் கொடுங்க.
                வழக்கம் போலத்தானே, தம்பி.
                ஆமான்னே!
                சீனி போடாத ப்ளாக் டீ.
                திரும்ப எண்ணங்கள் ஒழுகினசேரி பழைய வீட்டின் ஓட்டு உத்திரத்தில் தொங்கத் தொடங்கியது.
                இதே போல ஒரு விடிகாலையில் தான். சதைந்து கிடந்தாள்.
                எனக்கு புடிச்சது…
                உனக்கு புடிச்சது…
                தோள்கள்…தோள்கள்…


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக