வியாழன், 11 ஜனவரி, 2018

நான் கடவுள்

பிரார்த்தனைகள்
ஆவி பறக்க எடுத்து வைக்கப்பட்டன.
சட்னியிலும் சாம்பாரிலும் மிதக்கும்
அதன் மிருதுவைப் பிய்த்து விழுங்குகிறேன்
தொண்டைக்குழியில்
மெதுமெதுவாக இறங்கும்
அதன்
ஸ்தோத்திரத் துதிகளின் கார நெடி.
கறிவேப்பிலைகளை
சுயாதீனமாக ஒதுக்கிக் கொள்ள,
தேங்காய் நார்
பல்லிடுக்கிலேயே தங்கிக் கொள்கிறது.
வழித்து முடித்ததும்,
பிரார்த்தனைகள் இல்லாத வெற்றுத்தட்டில்,
நான் அழுத்தி ஒத்தி எடுத்த கைத்தடம்,
ஒரு சிறிய பிரபஞ்ச உருவாய்ச்
சிதறுண்டிருந்தது.
மிளகாய் வத்தல்கள்
அந்த வெளியின் வளையங்களாய்
பல்லிக் கண்களுடன்
உற்று நோக்கியது.
தட்டைக் கழுவாமலேயே வைத்து விட்டேன்.
எங்கிருந்தோ வந்த
கரப்பான்களும், எறும்புகளும்
மீளுருவாக்க முயற்சி செய்து கொண்டிருந்தன.
நான் பல்லிடுக்கில் உள்ள நாரை
என் முழு வலிமையும் கொண்டு
வெளித்தென்ன முயற்சித்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக